.

வியாழன், ஏப்ரல் 23, 2015

உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!

 
Aga Sivappu Thamizh - The Blog must read by every Tamil!

நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!
அனைவருக்கும் நேச வணக்கம்!

உங்கள் மனதிற்குகந்த ‘அகச் சிவப்புத் தமிழ்’ இப்பொழுது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

இந்த இனிமையான தறுவாயில் இந்த இரண்டாண்டுப் பயணம் பற்றிய விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல்! முதலில், கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் தளத்தின் வளர்ச்சி பற்றிய சில புள்ளி விவரங்கள்...


ஏப்ரல் 2013 – ஏப்ரல் 2014
ஏப்ரல் 2014 – ஏப்ரல் 2015
மொத்தம்
பதிவுகள்
30
21
51
கருத்துக்கள்*
171
357
528
பார்வைகள்
24,000+
32,851+
56,851+
அகத்தினர்கள்**
266
267
533

* பிளாக்கர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.

இந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவு வருகையாளர்களை அழைத்து வந்த முதல் பத்துத் தளங்கள்:

தளங்கள்
பார்வைகள்
6700
1875
1821
1293
1079
873
762
603
250
216


இந்த இரண்டு ஆண்டுகளில் உங்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட பதிவுகள்:

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் – 4769 பார்வைகள்.
» கடந்த ஆண்டு முதலிடத்தை வகித்த இந்தப் பதிவு இந்த ஆண்டும் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது!

பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்? – 1879 பார்வைகள்.
» இந்த ஆண்டு புதிதாக எழுதப்பட்ட இந்தப் பதிவு அதற்கு முந்தைய ஆண்டில் முன்னிலை வகித்த பதிவுகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

நண்டு ஊருது... நரி ஊருது...! - மழலையர் விளையாட்டா, மருத்துவ அறிவியலா? – 1762 பார்வைகள்.
» தளத்தின் முதல் பதிவான இது கடந்த ஆண்டை விட ஒரு படி முன்னேறி மூன்றாம் இடத்தில் உள்ளது.

எங்கே ஓடுகிறாய்? (இனப்படுகொலையாளியை நோக்கிச் சில கேள்விகள்!) - 1623 பார்வைகள்.
» இலங்கை அதிபர் தேர்தலில் இராசபக்சவின் தோல்வியை ஒட்டி, உள்ளக் கொதிப்பையெல்லாம் கொட்டி இந்த ஆண்டு எழுதப்பட்ட இப்பதிவு, கவிதையாக இருந்தும் வியப்புக்குரிய வகையில் நான்காம் இடம் பிடித்துள்ளது.

வை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா? – ஓர் அலசல்! – 1534 பார்வைகள்.
» கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்தப் பதிவு இந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில்.

‘அகச் சிவப்புத் தமிழ்’ நேயர்கள் மிகுதியாக வாழும் நாடுகள்:

நாடுகள்
பார்வைகள்
இந்தியா
26,196
அமெரிக்கா
9296
இரசியா
5110
ஐக்கிய அரபு நாடுகள்
1675
இலங்கை
1167
இங்கிலாந்து
1087
சிங்கப்பூர்
1062
ஜெர்மனி
878
கனடா
877
பிரான்சு
718


மனதில் மணக்கும் நிகழ்வுகள்... சில நினைவுகள்

Looking Back... with Thanks!

‘அகச் சிவப்புத் தமிழ்’ தொடங்கிய முதல் ஆண்டில் வெற்றிக் களிப்பில் மிதந்தேன் என்றால், இந்த ஆண்டில் முழுக்கவும் நட்பின் பெருமழைத் தேனில் நனைந்தேன்!

பொதுவாக, என் தளத்துக்கு மக்களை வரவழைப்பதற்காகப் பிற வலைப்பூக்களுக்குப் போய்க் கருத்திடும் வழக்கம் எனக்கு இல்லை. பதிவுகளைத் திரட்டியில் சேர்க்கச் செல்லும்பொழுது, ஏதாவது நல்ல பதிவு தென்பட்டால், அதுவும் படித்தாக வேண்டும் எனத் தோன்றினால் மட்டுமே படிப்பேன். அவற்றுள் மனதிற்கு மிகவும் பிடித்துப் போன வலைப்பூக்களை மட்டுமே பின்தொடர்வேன். அதனால், பதிவுலகில் எந்த ஒரு நட்பு வட்டத்திலும் நான் இருந்ததில்லை, முதலாம் ஆண்டு வரை. பதிவர்களுக்கு எனத் தனிச்சிறப்பாக நடத்துகிறார்களே என ‘வலைச்சரம்’ இதழை அவ்வப்பொழுது படிப்பதுண்டு. அப்படி, இந்த ஆண்டு, ‘வலைச்சரம்’ இதழில் ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் பதிவுகளைப் படித்தபொழுது ‘ஊமைக்கனவுகள்’ தளத்தில் அவர் பரிந்துரைத்த உள்ளங்கவர் களவன் பதிவைப் படித்தேன்; மிரண்டு போனேன்! ‘இந்த அளவுக்குத் தமிழறிவா! அதுவும் இப்பேர்ப்பட்டவர் வலைப்பூ நடத்துகிறாரா!!’ என்று மலைத்து அவரைப் பின்பற்றத் தொடங்கிய நான், மைதிலி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்ற பதிவர்களின் தளங்களையும் படித்துப் பார்த்தேன். அடடா! அத்தனையும் மணிகள்!! தமிழ் மணிகள்!!!

அந்தத் தளங்களையெல்லாம் நான் தொடர்ந்து படிக்கத் தலைப்பட, புதிதாய்ப் பதிவுலகப் பெருமக்கள் பலரின் நட்புக் கிடைத்தது. தமிழ்ப் பதிவுலகப் பெருவெளியின் நட்பு வட்டங்களில் நானும் இணைந்தேன். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நான் குறைவாகவே பதிவு எழுதியும் பார்வைகள், கருத்துக்கள் எல்லாம் முந்தைய ஆண்டை விடக் கூடுதலாகப் பெருகியிருக்கின்றன என்றால், அதற்கு ஒரே காரணம், இந்த நட்பு. ஆம்! நான் எது எழுதினாலும் ஓடோடி வந்து படித்துப் பாராட்டி நிறைகுறைகளைத் தெரிவிக்கும் என் தோழமைக்குரிய பதிவுலக நண்பர்களே! நீங்கள்தான் இதற்கு முழுக் காரணம்! அதற்காக என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதான்... பதிவுலகின் நட்புச் சங்கிலியில் நானும் ஒரு கண்ணியாய் இணைந்ததுதான் இந்த ஆண்டில் நான் முதலாவதாகவும் முதன்மையாகவும் குறிப்பிட விரும்பும் மனதில் மணக்கும் நிகழ்வு.

அடுத்ததாக, இந்த வலைப்பூவை நான் எதற்காகத் தொடங்கினேனோ, அதற்கான ஏற்பிசைவை (recognition) ஒரு துளியேனும் நான் அடைந்ததாகக் கூறிக்கொள்ளத்தக்க ஒரு நிகழ்வு இந்த ஆண்டு நடந்தது.

இசுலாமியர் மீதான சிங்கள-பௌத்த வெறித் தீ! வெறியர்களுக்கு எதிராகவே திருப்புவது எப்படி?’ என்ற ஒரு பதிவை இந்த ஆண்டு எழுதினேன். தமிழ்த் தலைவர்களின் பார்வைக்காக எழுதப்பட்ட அந்தப் பதிவை, முடிந்த வரை எனக்குத் தெரிந்த சில பெரும்புள்ளிகளுக்கு அனுப்பியும் வைத்தேன். அவர்களுள் ஒருவரான இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் என்னைப் பேசியில் தொடர்பு கொண்டு “அந்தக் கட்டுரையை நான் படித்தேன். அடிப்படையில் அதில் ஓர் உண்மையான அக்கறை இருந்தது. அதனால்தான் உங்களைத் தொடர்பு கொண்டேன்” என்று கூறியது என்னைப் பெரிதும் பெருமிதம் கொள்ள வைத்த நிகழ்வு.

அடுத்தது, தமிழ்ப் பதிவுலகின் இணையற்ற அரசியல் பதிவரான ‘விமரிசனம்’ காவிரிமைந்தன் ஐயா அவர்களால் பாராட்டப்பட்டது!

கருணாநிதி, ஜெயலலிதா, மோடி, மன்மோகன், சுப்பிரமணிய சுவாமி என யாராக இருந்தாலும், யாருக்கும் அஞ்சாமல் பாரதியாரின் முறுக்கு மீசைப் படத்துடன் அவரைப் போலவே யார் தவறு செய்தாலும் தயங்காமல் வெளுத்து வாங்கும் ஐயா அவர்கள், அரசியல் மட்டுமின்றி இலக்கியம், வாழ்வியல், பெண்ணியம், திரையுலகம் எனப் பலவற்றையும் பற்றி எழுதுவார். எழுதுவது மட்டுமின்றிச் சமூக மாற்றத்துக்காகத் தனிப்பட்ட முறையில் சில முயற்சிகளையும் மேற்கொள்பவர். இந்த 75 அகவையிலும் அயர்வின்றி நாட்டுக்காக உழைப்பவர். தமிழர் பிரச்சினைகளுக்காகத் தீப்பறக்கும் பதிவுகளைப் படைப்பவர். “கருநாடகாக்காரன் மேக்கேதாட்டூ அணையைக் கட்டினால் நாம் போய் இடித்துத் தள்ளுவோம் வாருங்கள்” என்று வீரமுழக்கம் எழுப்பியவர். அப்பேர்ப்பட்டவர் “உங்கள் வலைத்தளம் பார்த்தேன்… உங்கள் தமிழ்ப்பற்றுக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் தமிழ்ப்பணி இனிதே வளர வாழ்த்துக்கள்” எனக் கூறியது இந்த ஆண்டின் பெருமைக்குரிய இன்னொரு நிகழ்வு!

இந்த 2014-15 ஆண்டுக்காலத்தின் பதிவுலகப் பயணம் பற்றி நினைத்தாலே முதலில் மனக்கண்ணில் நிழலாடுவது பன்முகப் பதிவர் விருது!

பதிவுலகில், என்னைத் தேடி வந்து நட்புப் பூண்டவர் ஐயா கில்லர்ஜி அவர்கள். முன்னணிப் பதிவரான அவருக்கு இங்கே நண்பர்கள் ஏராளம்! அவர்களுள் என்னை விட எண்ணிலா மடங்கு அருமையாய்ப் படைக்கக்கூடியவர்களும் தாராளம்! ஆனால், அவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் பன்முகப் பதிவர் விருதுதனை அவர் எனக்கு அளித்தது அவர்தம் அளவில்லா அன்பையே காட்டும். வலைப்பூத் தொடங்கி இரண்டாம் ஆண்டிலேயே இப்பேர்ப்பட்ட ஏற்பிசைவைப் பெற்றது இந்த ஆண்டு மட்டுமில்லை, என்றென்றும் மறக்க இயலாப் பெருமகிழ்ச்சி! அதற்காக இன்று மீண்டும் ஒருமுறை இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

அடுத்ததாக, குறிப்பிட வேண்டிய இன்னொன்று, வலைச்சரம் பதிவர் இதழில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ் வலைப்பூக்களுக்காகவே ஓர் இதழ்; அதுவும், பதிவர்களில் யாரேனும் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு ‘வாரம் ஓர் ஆசிரியர்’ எனும் முறையில் நடத்தப்படும் புதுமை இதழ் ‘வலைச்சரம்’. இப்பேர்ப்பட்ட இதழில் நம் வலைப்பூ ஒருமுறையாவது பரிந்துரைக்கப்பட்டு விடாதா என்பதே புதிதாகப் பதிவுலகிற்குள் எழுத்தடி வைக்கும் ஒவ்வொருவரின் ஏக்கமும். என்னுடைய அந்த ஏக்கமும் இந்த ஆண்டுதான் நிறைவேறியது. பதிவர் ‘என் ராஜபாட்டை’ ராஜா அவர்கள் செப்டம்பர் 3, 2014 அன்று முதன்முறையாக வலைச்சரத்தில் ‘அகச் சிவப்புத் தமிழ்’தனை அறிமுகப்படுத்தி இணையப் பேருலகின் ஒரு மூலையில் இருந்த என் எழுத்துக்களையும் நான்கு பேர் பார்வைக்குக் கொண்டு சேர்த்தார். அவருக்கு இந்த இனிய தறுவாயில் மீண்டும் நன்றி! [பார்க்க: தெரியுமா உங்களுக்கு ?]

ஆனால், இஃது இந்த ஒருமுறையோடு நில்லாமல் தொடர்ந்து மூன்று முறை... ஆம், இந்த ஆண்டு மட்டும் நம் ‘அகச் சிவப்புத் தமிழ்’ மொத்தம் நான்கு முறை ‘வலைச்சர’த்தில் பரிந்துரைக்கப்பட்டது.

ராஜபாட்டை ராஜா அவர்களுக்குப் பிறகு, அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நண்பர்களும் நான் மதிக்கும் பெரியவர்களுமான தில்லையகத்து கிரானிக்கிள்ஸ் தளப் பதிவர்களான துளசிதரன் ஐயாவும், கீதா அம்மணியும் மீண்டும் அதே செப்டம்பர்த் திங்களில் 26ஆம் நாள் நம் வலைப்பூவை வலைச்சர இதழில் பரிந்துரைத்தனர். [பார்க்க: வெள்ளி: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கிள்சின் 5 ஆம் நாள்: பட்டறிவுதான் சிறந்த ஆசிரியன்! தமிழ்ச் சோலையின் ஒரு பகுதி!].

அவர்களையடுத்து, நண்பர் கில்லர்ஜி அவர்களும் திசம்பர் 20, 2014 அன்று மறுபடியும் ஒருமுறை ‘வலைச்சர’த்தில் இந்தத் தளத்தினைப் பரிந்துரைத்தார். [பார்க்க: சனி, சங்கீதாவுக்கு விரதம் – ஏழாம் அறிவு (A.R. முருகதாஸ் 2011)].

அவருக்குப் பின், கடந்த மார்ச்சு 6, 2015-இல் ‘தேன் மதுரத் தமிழ்’ கிரேஸ் அவர்களும் ஒருமுறை நம்மைப் பரிந்துரை புரிந்தார். [பார்க்க: நடத்திக்காட்டு].

என்னுடைய வலைச்சரக் கனவை ஒன்றுக்குப் பலமுறை மீண்டும் மீண்டும் நிறைவேற்றி வைத்த இந்த நண்பர்கள் அனைவருக்கும் இந்த இடத்தில் மீண்டும் ஒருமுறை உளமார்ந்த நன்றி!

இணைய நட்பைப் பொறுத்த வரை, எவ்வளவுதான் அன்பாகப் பழகினாலும், ஏதாவது சண்டை என வந்தால் நண்பர்களுக்கு ஆதரவாகக் களமிறங்குபவர்களைக் காண்பது அரிது. கல்லூரியில் தனக்கென வலுவானதொரு நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு தாதா மாதிரி திரிவது போல அப்படியொரு நட்பு வட்டம் இங்கு ஒருவருக்கு இருந்தால்தான் அஃது இயலும். என்னைப் பொறுத்த வரை, எங்காவது நல்லதொரு கருத்தையோ பதிவையோ யாராவது இகழ்ந்துரைத்தால், நல்ல மனிதர்கள் வம்புக்கிழுக்கப்பட்டால் உடனே வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போவது என் வழக்கம். பாதிக்கப்படுபவர்கள் எனக்கு நண்பர்களாகவோ, முன் பின் தெரிந்தவர்களாகவோ கூட இருக்க வேண்டிய தேவை இல்லை. அவர்கள் பக்கம் அறம் இருந்தாலே போதும், யார் அவரை வம்புக்கிழுத்தாலும் நான் அழையா விருந்தாளியாய் ‘இறங்கிச்’ செய்வேன். ஆனால், நான் அப்படி யாராலாவது பாதிக்கப்பட்டால் எனக்கு ஆதரவாகக் களமிறங்குபவர்கள் அரிது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இணைய வாழ்வில் முதன்முறையாக அப்படியொரு நண்பரை இந்த ஆண்டு இங்கு சந்தித்தது குறிப்பிட வேண்டிய நிகழ்வு.

இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு சரியா தவறா? - சில விளக்கங்கள்!’ பதிவில் “உனக்கெல்லாம் வேற வேலை இல்லையா” என்று பெயர் குறிப்பிடக் கூட நேரமில்லாத அளவுக்கு மும்முரமான ஒருவர் கருத்திட்டிருந்தார். எப்பொழுதும் போல் எனக்கே உரிய பாணியில் நான் அதற்கு பதிலடி கொடுத்துவிட்டேன். ஆனாலும், நண்பரும் பதிவருமான ஜெ பாண்டியன் அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, “அடேய் பெயரில்லாத புழுவே, பெயர் வைத்துக்கொண்டு வா பின் பேசலாம்..” என்று அந்த ஆளுக்குச் சுடச் சுடப் பதிலடி கொடுத்தது என்னை உருக வைத்தது. அதுவும், ஒரு நாட்டின் அதிபர் பற்றிய, வாழும் நாட்டின் வெளியுறவு தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தைக் கொண்ட அந்தப் பதிவில் அப்படி அவர் துணிந்து எனக்காகக் கருத்திட்டது எளிய செயல் இல்லை! இணையத்தில் இப்படியும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், என்னை யாராவது தவறாகப் பேசினால் அதைக் கண்டிக்க எனக்கும் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று பெருமகிழ்ச்சி எய்திய நேரம் அது! நண்பர் ஜெ.பாண்டியன் அவர்களை நன்றியோடு இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்நாள் முழுதும் நான் மறக்க முடியாத பேரன்புத் தறுவாய், வலைப்பூவை நான் அழித்த அந்த வேளைதான்!

இந்த ஆண்டு நடந்த சில கொந்தத் (hack) தாக்குதல்களும், அதையொட்டி நடந்த சில சொந்த வாழ்க்கை நிகழ்வுகளும், வேறு சில தவறான புரிதல்களுமாய்ச் சேர்ந்து வலைப்பூவை அழித்தே ஆக வேண்டும் என்று என்னை நம்ப வைத்து விட்டன. தளத்தை அழிக்கும் முன் அனைவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘அடர் சிவப்புக் கண்ணீருடன் விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்!’ என்று ஒரு பதிவை வெளியிட்டேன். அடடடடா! அப்பொழுது பதிவுலக நண்பர்கள் காட்டிய அன்புதான் என்னே!!!

“அப்படியெல்லாம் போக விட முடியாது... திரும்பி வாருங்கள்... என் ஆசிரியரின் மறுவடிவமாக உங்களைக் காண்கிறேன்...” என்றெல்லாம் ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களும் ‘ஊமைக்கனவுகள்’ ஜோசப் விஜு ஐயா அவர்களும் இன்ன பிற நண்பர்களும் எழுதிய கருத்துக்கள் என்னை நெகிழ்ந்துருகி நெக்குருகச் செய்தன என்றால் அது மிகையில்லை. இப்பொழுது நினைத்தாலும் அவர்களுடைய அந்த அன்பு என்னைத் திகைக்கச் செய்கிறது! பதிவை வெளியிட்ட 24 மணி நேரத்தில் 126க்கும் மேற்பட்ட வருகைகளும் பிரிவின் வேதனை தரும் மேற்படி கருத்துக்களுமாய்ச் சேர்ந்து எத்தனை எத்தனை பேர் என்னை இங்கு விரும்புகிறார்கள் என்பதை அறியச் செய்தது.

பின்னர், நடந்த கொந்தத் தாக்குதலுக்கும் அதையொட்டி என் வாழ்வில் இது தொடர்பாக நடந்த வேறு சில நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; நான்தான் இரண்டையும் தவறாக முடிச்சிட்டுப் புரிந்து கொண்டேன் என்பது தெரிய வந்தது. மனம் நிறைந்த ஆறுதலுடன் மீண்டும் வலைப்பூவை நான் உயிர்ப்பிக்க, நண்பர்கள் அத்தனை பேரும் ஓடி வந்து அரவணைத்தனர். நல்வரவுச் செய்திகளால் என் நெஞ்சம் நிறைத்தனர். ஜோசப் விஜு ஐயா எனக்காகத் தனியே வெண்பாவெல்லாம் எழுதி வரவேற்றார். பதிவுலகத் தோழர்களின் பேரன்பு மழையில் திக்குமுக்காடிய அந்த நாட்களைத்தான் இந்த ஆண்டின் வலைப்பூப் பயணத்தில் தலைசிறந்த நினைவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

இவை தவிர, ‘தமிழ்10 திரட்டியில் உங்கள் வலைப்பூவை இணைக்க முடியவில்லையா? – இதோ தீர்வு!’ என்ற பதிவு தினமணி வலைப்பூப் பகுதியின் நாளிதழ் முகப்பில் பல நாட்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததும் இந்த ஆண்டின் நினைவில் மணக்கும் நிகழ்வே!

நன்றி!!!

இணையப் பெருந்தோட்டத்தின் பல்லாயிரக்கணக்கான பூக்களுள் இதையும் ஒரு பொருட்டாய் மதித்துப் படித்த, வாக்களித்த, பகிர்ந்த நேயர்களுக்கும்...

பல்வேறு வழிகளில் தளத்தைப் பின்பற்றுகிற, புதிய, பழைய அகத்தினர்களுக்கும்...

தளத்தைப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு சென்று பலரும் படிக்கவும் பாராட்டவும் முதன்மைக் காரணிகளாய் விளங்கும் சமூக வலைத்தளங்கள், அவற்றின் குழுக்கள், திரட்டிகள், செருகுநிரல் (plugin) சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கும்...

தளத்தின் வளர்ச்சியை அறிய உதவும் தரவகச் சேவையகங்கள் (Data Analyzing Sites), பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் ஆகியவற்றுக்கும்...

இந்த ஆண்டு இடுகைகளுக்கான படங்களை வழங்கிய பல்வேறு இணையத்தளங்களுக்கும்...

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அருமையான இலவசச் சேவையை வழங்கும் பிளாகருக்கும்...


Thank You! Thank You! Heartily Thank You!
நன்றி! நன்றி! உளமார்ந்த நன்றி!



காணிக்கை

என் அம்மாவுக்கு அடுத்தபடியாக

எனக்கு நிறைய நிறையக் கதைகள் சொல்லி

கேட்டபொழுதெல்லாம் கதைநூல்கள் வாங்கித் தந்து

ராணி காமிக்சு, கோகுலம் போன்ற சிறுவர் ஏடுகளை

இதழ்தோறும் வாங்கி வந்து

என் படிப்பார்வத்துக்கு

பிள்ளைப் பருவத்திலேயே

செழுநீர் பாய்ச்சி

இன்று எழுத்திலும் தமிழிலும்

எனக்கு இவ்வளவு ஆர்வம் ஏற்பட

முதன்மைக் காரணமாகத் திகழ்ந்த

காலஞ்சென்ற என் பெரியப்பா

திரு.என்.இலட்சுமணன் அவர்களுக்கு

வலைப்பூவின் இந்த ஆண்டுச்

சிறு வெற்றியைக் காணிக்கையாக்குகிறேன்!

My uncle Mr.N.Lakshmanan

பி.கு: வலைப்பூவின் குறை நிறைகள் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி . நியுவ் முல்லைத்தீவு, ௩. எழுத்து.காம்.

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கி, உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூ இந்த ஓராண்டில் அடைந்திருக்கும் வளர்ச்சி அடுத்த ஆண்டில் மேலும் பன்மடங்காகப் பெருக உதவலாமே!

திங்கள், ஏப்ரல் 13, 2015

மச்சி! நீ கேளேன்! - ௫ | ரசனை தரும் வாழ்க்கைத்தரம்!


Taste! - An Essential ingrediant of lifestyle

சனை! – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்!

நினைத்துப் பார் மச்சி! ஆதி காலத்தில் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு இருந்தது? பிற உயிரினங்களைப் போலத்தான் மனிதனும் உண்டான், உறங்கினான், இனத்தைப் பெருக்கினான், பின்னர் இறந்து போனான். மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டு மனிதன் மேற்கொண்ட முதல் செயல் ஓவியப் பதிவு!

கற்கால மனிதர்கள் குகைளிலும், பாறைகளிலும் வரைந்து வைத்திருக்கும் கீறல் ஓவியங்கள்தான் மனித இனத்தின் ஆகப்பெரும் ஆவணங்களாக, வரலாற்றுக் கருவூலங்களாக (treasure) இன்றும் போற்றப்படுகின்றன. மற்ற விலங்குகளைப் போல் ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்றில்லாமல் தான் பார்த்ததை வரைந்து வைக்கும் அளவுக்கு மனித உள்ளத்தில் எப்பொழுது ரசனை உணர்வு ஊற்றெடுத்ததோ அப்பொழுதுதான் முதன்முறையாக மனிதர்கள் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டார்கள்; முன்னேறத் தொடங்கினார்கள்.

ஆக, நாகரிகத்தை நோக்கி மனித இனம் எடுத்து வைத்த முதல் காலடியே ரசனை எனும் புள்ளியில்தான் தொடங்கியது என்றால் அது மிகையாகாது!

கற்காலத்தில் மட்டுமில்லை, தற்காலத்திலும் மனித வாழ்வை வடிவமைப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது! எப்படி?... கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்!

செவ்வாய், மார்ச் 31, 2015

உச்சநீதிமன்றத்துக்கும் அச்சமில்லாப் பெண்ணுக்கும் நன்றி! {50ஆவது பதிவு!}


Supreme Court of India

வற்றைத் தட்டிக் கேட்க உரிமை கோரும்பொழுதே, நல்லதைப் பாராட்ட வேண்டிய கடமையும் நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது!

அவ்வகையில், தமிழர்களின், இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரின் நெஞ்சார்ந்த நன்றிக்குரிய விதத்தில் அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்! தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவு செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதுதான் அது!

புதன், மார்ச் 18, 2015

உங்கள் இ.பு.ஞானப்பிரகாசனின் கீச்சுக்கள்!



@Gnaanapragaasan Twitter Profile

நான் ஒன்றும் பெரிய கீச்சர் (Tweeter) இல்லை. என் கீச்சுக்களில் (tweets) பெரும்பாலானவை இணையப் பக்கங்களின் பகிர்வுகள்தாம். இருந்தாலும், தப்பித் தவறி நானும் சில நல்ல (!) கீச்சுக்களை அவ்வப்பொழுது கீச்சி விடுவதால், அவற்றைத் தொகுத்துத் தர வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். என் வலைப்பூவைப் படிக்கிற குற்றத்துக்கு உங்களையெல்லாம் நான் இதுவும் செய்வேன், இதற்கு மேலும் செய்வேன் என்கிற உறுதிமொழியோடு இதோ என் கீச்சுக்களில், தேர்ந்தெடுத்த முதல் ௨௫ (இருபத்தைந்து) காலவரிசைப்படி உங்கள் பார்வைக்கு... மறுகீச்சுக்கு... உடுக்குறிக்கு!

வியாழன், மார்ச் 05, 2015

போராளியைத் தெருவில் நிறுத்திய போராளி! தலைவர்கள் அமைதி! ஏன்? - சில கேள்விகள், சில கோரிக்கைகள்

Poet Thamarai with her son in agitation!
கவிஞர்.தாமரை மகனுடன் போராட்டத்தில்

ண்ணாநிலைப் போராட்டங்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், புகழ் பெற்ற போராளி ஒருவரை நோக்கியே அப்படி ஒரு போராட்டம் எழுந்திருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதன் முறையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தோழர் தியாகு! – தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்! பெருந்தலைவர் காமராசர் காலத்திலிருந்து அரசியலில் இருப்பவர். தீவிரப் பொதுவுடைமையாளர்! நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியதற்காகப் பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்தவர். அதே நேரம், ஈழ ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியை விட்டே வெளியேற்றப்படவர்! ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ எனும் பெயரில் பல தமிழ்வழிப் பள்ளிகளை நடத்தி, தமிழருக்காகப் போராடுவதோடு மட்டுமின்றித் தமிழைக் காக்கவும் பெருமுயற்சியெடுத்து வரும் பெருந்தகையாளர்! மாவீரர்.திலீபன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி உயிர் ஈந்தபொழுது ஈழத்துக்காகக் குரல் கொடுத்தது முதல் முல்லைப் பெரியாறு போன்ற அண்மைக்காலத் தமிழர் பிரச்சினைகளுக்காகக் களமாடுவது வரை இவர் ஈடுபடாத போராட்டங்களே இல்லை! எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இலங்கையில் பொதுநலவாய (commonwealth) மாநாடு’ நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தி ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற பெயரில் இவர் நடத்திய ‘சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்’ பன்னாட்டளவில் அறியப்பெற்ற ஒன்று!

இப்பேர்ப்பட்ட போராளியை நோக்கியே ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார் பெண்மணி ஒருவர். அதுவும், யாரோ தெருவில் போகிற பெண்மணியில்லை; இவர்தம் சொந்த மனைவி! அதுவும், பெற்ற பிள்ளையுடன் இவர் இருக்குமிடமெல்லாம் தேடித் தேடித் தொடர்ந்து சென்று ஏழு நாட்களாகத் தன் போராட்டத்தைக் கடைப்பிடித்து வருகிறார் அந்தப் பெண்மணி. அவர் வேறு யாருமில்லை; உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கறிந்த திரைப் பாடலாசிரியரும், தமிழ்ப் போராளியுமான கவிஞர்.தாமரை அவர்கள்தாம்!

ஈழ இனப்படுகொலையின்பொழுதும் அதன் பின்புமான போராட்டங்களில் கவிஞர்.தாமரை அவர்களின் பங்கு நாம் அறியாததில்லை. தமிழனென்று மீசை முறுக்கிய ஆண் கவிஞர்கள் பலர் வீட்டிலிருந்தபடி ஈழத் தமிழர்களுக்காகத் தங்கள் கண்ணீரால் கவிதை வடித்துக் கொண்டிருந்த அந்த வேளையில், பெண்ணென்று தயங்காமல் போராட்ட மண்ணில் நேரடியாகக் கால் பதித்த வீராங்கனை! “இலங்கைத் திரைப்பட விழாவுக்குப் போக வேண்டா” என்று கமல்காசனையே வலியுறுத்திய துணிச்சல்காரர்! அசைக்க முடியாத மக்கள் செல்வாக்குப் பெற்ற நடிகர்களும் தலைவர்களுமே ஈழத்துக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் மட்டுமே குரல் கொடுப்பதோடு வாயைப் பூட்டிக் கொண்ட அந்த நாளிலே, தமிழினத்தை அழிக்கத் துணை நின்ற இந்திய அரசை நேரடியாகவே சாடிய மறத் தமிழச்சி! ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய அந்தக் கவிதை இந்த உலகப் பந்து உருளும் வரை தமிழினப் பேரழிப்புக்கான சான்றாவணமாய் நிலைத்து நிற்கும்!

அப்பேர்ப்பட்ட பெண்மணி பெற்ற பிள்ளையுடன் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்! ஆனால்,

திங்கள், பிப்ரவரி 09, 2015

மச்சி! நீ கேளேன்! - 4 | இலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா? - பொறியியல்துறை வேலைவாய்ப்பின்மையும் தீர்வும்!



Hence earning in lakhs will only a dream? - Unemployment problem of Engineering field and solution


‘வேலையில்லாப் பட்டதாரி’ போன்ற சொற்கள் மீண்டும் புழக்கத்துக்கு வரக் காரணமாகி விட்டது ‘பொறியியல்துறை’!

ஒரு துறையில் எவ்வளவு பணியிடங்கள் இருக்கின்றன, துறையின் எதிர்காலம் எப்படி, உலகநாடுகளின் பொருளாதார வீழ்ச்சி எப்படிப்பட்ட பாதிப்புகளை அதில் ஏற்படுத்தும் என எந்தக் கணக்கும் பார்க்காமல், திருவிழாவில் தண்ணீர்ப் பந்தல் திறப்பது போல் நாடெங்கும் எவன் வேண்டுமானாலும் பொறியியல் கல்லூரி திறக்க ஒப்புதலளிக்கும் அரசுகள்...

வேலைவாய்ப்புக் கிடைக்காத பொறியாளர்கள் ஏற்கெனவே 1.8 கோடி பேர் இருக்க, அது பற்றித் துளியும் கவலைப்படாமல், ஏதோ ஊறுகாய்ப் பொட்டலம் தயாரிப்பது போல் ஆண்டுக்கு 10 இலட்சம் பொறியாளர்களை உருவாக்கித் தள்ளிக்கொண்டே இருக்கும் நம் கல்விக் கோயில்கள்...

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், மக்களுக்காக உயிரையும் கொடுக்க ஆயத்தமாய் இருப்பதாக மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லித் திரியும் தலைவர்கள் என அனைவருமே இதில் குற்றவாளிகள்தாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்களான நம் பக்கமும் சில தவறுகள் இருக்கின்றன என்பதை மக்கள் நாம் உணர வேண்டிய நேரம் இது!...

வெள்ளி, ஜனவரி 23, 2015

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மேற்கத்திய பண்பாடா?



Uniformity between Indus civilization bull and today's Tamilnadu bull! - A proof for the ancientry of bull taming!
ரலாறு, பண்பாடு போன்றவை பற்றியெல்லாம் நாட்டில் யார்தான் பேசுவது என வர வர வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. அதுவும் தமிழர்களுடையவை என வந்துவிட்டால் யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். காரணம், போயும் போயும் தமிழர்கள்தானே! என்ன செய்துவிட முடியும்? அட, ஒன்றரை லட்சம் பேர் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று குவிக்கப்பட்டபொழுதே ஒன்றும் கிழிக்க முடியாதவர்கள்தானே?

அந்த வகையில், தமிழர் பண்பாட்டு அடையாளம் ஒன்றைப் பற்றி அண்மையில் திருவாய் மலர்ந்திருப்பவர், தமிழினத்தை ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் குடும்பத்தைச் சேர்ந்தவரான மேனகா காந்தி அவர்கள்!

“ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய பண்பாடு. அதில் மாடுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள். பா.ஜ.க ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ளாது” என்று இவர் பேசியிருப்பது தங்கள் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்துவிட்டார்களே என ஏற்கெனவே வெந்து போயிருக்கும் தமிழ் நெஞ்சங்களில் வேண்டுமென்றே வேல் பாய்ச்சும் வேலை!

நேற்று வரை விலங்கு நல ஆர்வலராக மட்டுமே அறியப்பட்ட மேனகா காந்தி எப்பொழுது முதல் வரலாற்று ஆசிரியரானார்? இவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை? இதோ, சில வரிகளில்...

செவ்வாய், ஜனவரி 13, 2015

எங்கே ஓடுகிறாய்? (இனப்படுகொலையாளியை நோக்கிச் சில கேள்விகள்!)



Rajapaksha

எங்கே ஓடுகிறாய்?...
ஈனர்களின் தானைத் தலைவனே!
ஏன் இப்படி ஓடுகிறாய்?

இழிகுலத்துப் பெருமகனே!
எங்கே இப்படி ஓடுகிறாய்?

தமிழர் வாக்குகளால்
எதிராளி பெற்ற வெற்றியை
ஏற்க முடியாது என்றாயே,
அப்புறம் ஏன் ஓடுகிறாய்?...

அட!
அடடே!
அடேய்!
என்ன இவ்வளவு அவசரம்?
மீசையைக் கூடத் துடைக்க நேரமில்லாமல்
ஏன் இந்த அவசரம்?

தமிழர் நண்பனாய்க் காட்டிக் கொள்ள
ஆண்டு தவறாமல் பொங்கல் வைப்பாயே
அதற்காகக் கூட இரண்டு நாள் பொறுக்காமல்
எதற்கு இந்த அவசரம்?...

வெள்ளி, டிசம்பர் 05, 2014

மச்சி! நீ கேளேன்! - 3 | பூமி கண்ணைக் குத்தும்! - உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தக் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்தே ஐந்து நெறிகள்!



Nature Dispose Us! - Just 5 Rules to Stop Global Warming!

சாபூமி கண்ணைக் குத்தும்! (Nature Disposes Us!)

‘டைட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பிழைப்போமோ மாட்டோமோ என்று எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கூட நாயகனையும் நாயகியையும் துப்பாக்கியால் சுட்டபடி துரத்திக் கொண்டு ஓடுவான் அந்த வில்லன்!

அதைப் பார்க்கும்பொழுது, ‘நாம இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்போம்னே தெரியாத நேரத்துல கூட அடுத்தவங்களை வாழ விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டுத் திரியறான் பாரு’ என்று அவன் மேல் நமக்கு அப்படி ஒரு வெறுப்பு வரும். ஆனால், இன்றைய உலகில் நாம் எல்லோருமே ஏறத்தாழ அப்படித்தான் நடந்து கொள்கிறோம் எனச் சொன்னால்...

வியக்க வேண்டாம்! இப்படி நான் சொல்லக் காரணம் நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மை!...

புவி வெப்ப உயர்வால் உலகம் வெகு வேகமாக வெந்து கொண்டிருக்கிறது! இமயமலை உருகுகிறது! துருவப் பகுதிகள் உருகி ஓடுகின்றன! பல்லாயிரம் ஆண்டுகளாகப் பனிப் போர்வைக்குள்ளேயே மறைந்திருந்த பல பனிமலைகள் இன்று வெளியே எட்டிப் பார்த்து நம்மை எச்சரிக்கின்றன! “ஐயா! என் கெணத்தைக் காணோம்” என வடிவேல் சொல்வது போல, “அண்மையில்தானே பார்த்தோம் இங்கே பெரிய பெரிய பனிப் பாளங்களை! எங்கே அவை?” என அலறுகிறார்கள் சூழலியலாளர்கள் (ecologists)! எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இமயக் குளிர்நீர்க்கோள்’ (Himalayan Tsunami) எனும் பெயரில், உலகம் எப்படி அழியப் போகிறது என்பதற்கு ஒரு குட்டி முன்னோட்டமே (Trailer) காட்டி விட்டது இயற்கை!

ஆனால் நாம் இன்னும் சாதி, மொழி, மதம், இனம், மாநிலம், நாடு என ஏதாவது ஒன்றின் பெயரால் அடுத்தவரிடம் சண்டை போட்டுக் கொண்டேதான் இருக்கிறோம்! மக்களுக்குள் எவ்வளவுதான் பிரிவினைகள் இருந்தாலும், எல்லாரின் உரிமைக்கும், வாழ்வுக்கும் பிரச்சினை என வரும்பொழுது அனைவரும் ஒற்றுமையாகி விடுவார்கள் என்பதுதான் வரலாறு. ஆனால், உயிருக்கே ஆபத்து, உலகமே அழியப் போகிறது என்கிற நிலைமை வந்தும் நாம் இன்னும் ஒன்றுபடாவிட்டால் இனியும் எப்பொழுதுதான் திருந்தப் போகிறோம்?

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்