.

சனி, ஜனவரி 25, 2020

Pen to Publish போட்டியில் தி.மு.க-வினர் மட்டும் தேர்வானது எப்படி? - தி.மு.க-காரரே வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

Amazon Pen to Publish 2019 controversy

மேசான் நடத்திய ‘பென் டூ பப்ளிஷ் 2019’ போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான கதைகளை ஊருக்கே தெரியும். ஆனால் அவை எப்படித் தேர்வாயின என்ற கதை தெரியுமா? இதோ தி.மு.க., எனும் மாபெரும் கட்சியின் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி இவர்கள் வென்ற கதையைத் தி.மு.க-காரர் ஒருவரே நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் விவரித்திருக்கிறார். 

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு நூலை வெளியிட்ட உடனேயே இலக்கிய உலக அரசியல் தெரிந்த என் தோழியார் ஒருவர் என்னை எச்சரித்தார், "இந்தப் போட்டியில் தி.மு.க-வினரின் உள்ளடியரசியல் (lobby) அதிகம். எச்சரிக்கையாக இருங்கள்" என்று. அப்பொழுது எனக்கு அதன் தீவிரம் உரைக்கவில்லை. 

எனக்குத் தெரிந்த, என் எழுத்துக்களைப் பெரிதும் விரும்பும் நண்பர் ஒருவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவர் நான் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதை அறிந்து இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களின் முகநூல் குழு ஒன்றில் என்னைச் சேர்த்து விட்டார். உள்ளே போன பிறகுதான் அது முழுக்க முழுக்க தி.மு.க எழுத்தாளர்களின் குழு என்பது தெரிந்தது. என் நூலை அந்தக் குழு உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்ட நான், கைம்மாறாக அவர்களின் நூல்களையும் படித்துப் பார்த்தேன். தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன். நூற்றுக்கணக்கில் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் பெற்ற அந்தக் குழுவினரின் பல கதைகள் உண்மையில் நன்றாகவே இல்லை. சொல்லப் போனால், கதை என்று சொல்ல அடிப்படைத் தகுதி கூட இல்லாத ஒரு கதை கூட ஏராளமான தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ளியிருந்தது. அதுவும் ஆகா ஓகோ, கட்டாயம் படிக்க வேண்டிய கதை, வாழ்க்கையில் தவற விடவே கூடாத கதை எனவெல்லாம் பாராட்டுக்களுடன்.

போகப் போக, போட்டியில் முன்னணியிலிருந்த எல்லாப் படைப்புகளையும் - புகழ் பெற்ற எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அவர்களின் நூல் உட்பட - அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிக் குறிப்பிட்ட முகநூல் குழு உறுப்பினர்களின் நூல்கள் முன்னணிக்கு வந்தன. 

அப்பொழுது கூட நான் அதை ஓரளவுக்கு மேல் தவறாக நினைக்கவில்லை. "என்ன இருந்தாலும் அவர்கள் கட்சிக்காரர்கள். அவர்கள் நட்பு வட்டம் பெரிது. ஆகவே அவர்கள் நூற்றுக்கணக்கில் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ள முடிகிறது. நம்மைப் போன்ற தனி ஆட்களால் அஃது எப்படி முடியும்?" என்றுதான் நினைத்தேன். என் நண்பர்களிடம் கூட அப்படித்தான் புலம்பினேன். அதனால்தான் இறுதிச்சுற்றுப் பட்டியல் வெளியானபொழுது கூட என் முகநூல் பதிவு, இவர்கள் செய்த வேலையால் தரக்குறைவான படைப்புகளிடம் தோற்க வேண்டியதாகி விட்டதே என்பதாக அமைந்திருந்ததே தவிர, இவர்கள் செய்தது தவறு என வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. காரணம் இவர்கள் எப்படி இயங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என விவரமாகத் தெரியாததால் அது தவறுதான் என என்னால் உறுதியாக எண்ண முடியவில்லை. 

ஆனால் இப்பொழுது இணையத்தில் வரும் குறிப்பிட்ட பதிவைப் படிக்கும் பொழுதுதான் தெரிகிறது, இவர்கள் எப்பேர்ப்பட்ட கீழ்த்தர வேலையில் ஈடுபட்டு இந்த வெற்றியைக் களவாடியிருக்கிறார்கள் என்று. 

தி.மு.க., தலைவருக்கு முகவரியிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடித வடிவிலான பதிவில், தி.மு.க., எனும் பெரிய கட்சியின் மாநிலம் தழுவிய வலையமைப்பைப் (network) பயன்படுத்தி அதில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் பென் டூ பப்ளிஷ் 2019 போட்டியையே அப்படியே கபளிகரம் செய்தது பற்றிச் சுளிரிடும் சொற்களால் குமுறித் தள்ளியிருக்கிறார் முகம் தெரியாத அந்த மனிதர். 

"தலைவர் அவர்களுக்கு, ஒரு பாமர தி.மு.க தொண்டன் எழுதிக் கொள்வது" என்று தொடங்கும் அவர், "அமேசான் நிறுவனம் உலக அளவில் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டியில், இந்தியப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் போட்டி நடக்கிறது. முதல் பரிசு ஐந்து லட்சம், தேர்வாகும் கதைகள் அமேசான் பிரைமில் தொடராக வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது என்பது தாங்கள் அறிந்ததே. ஆனால் மற்ற நாடுகளிலோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலோ, ஓர் அரசியல் கட்சி போட்டியைக் கையகப்படுத்தியுள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. தமிழகத்தில் இரண்டாவது முறையாக நமது திராவிட முன்னேற்றக் கழகம் இதைச் செய்கிறது" என்று வெளிப்படையாகப் போட்டு உடைத்து விட்டார். 

"...படைப்பாளிகளாக இவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கான புரிதல் இருக்கிறது. ஆனால் கட்சிப் பதவிகளையோ, உறுப்பினர்களையோ வைத்துக் கூட்டம் நிகழ்த்தி, குழு சேர்ந்து, விதிகளை வளைத்து, வெற்றியை அடித்துப் பறிப்பது அறமல்ல. இவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். ஒரு பரிசுத் தொகைக்காகத் தமிழின் பிற எழுத்தாளர்களை ஒதுக்கி, இலக்கியவாதிகளை அவமானப்படுத்தி, மூர்க்கத்தனமான கும்பலாய் நகர்வது அழகல்ல" என்று நடுநிலை தவறாமல் குறிப்பிடும் அவர், "...தி.மு.க மட்டுமே பென் டூ பப்ளிஷ் போட்டியின் அனைத்து இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இதை எழுத்தால் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. கட்சியின் உதவியின்றி, நாம் தந்த பதவிகளின் செல்வாக்கின்றி இவர்களால் நிச்சயம் இந்த இடத்தை நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது" என்று தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். 

மேலும் "...போட்டிக்கான இளைஞரணிப் புத்தகங்களைப் பரிந்துரைத்து, திரு.உதயநிதி அவர்களே இணையப் பிரச்சாரம் செய்கிறார். இதுதான் வேதனையின் உச்சம். ஒரு நல்ல புத்தகத்தைப் பாராட்டுவது தவறா என்றால், போட்டியில் இருக்கும் புத்தகத்தைத் தலைமை பரிந்துரைப்பது அறமன்று. இது பாரபட்சம்!" என்றும் சாடுகிறார். 

அதைத் தொடர்ந்து, "மக்கள் போட்டியின் அடிப்படைப் புரிதலே சிதைக்கப்பட்டு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்டச் செயலாளர், இளைஞரணி என மொத்தமாக இறங்கியதால், ஓர் எழுத்துப் போட்டியை இப்போது தேர்தலாக மாற்றியிருக்கிறோம். இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு மிகப் பெரிய வெளியை, வாய்ப்பை இவர்கள் அரக்கத்தனமாய்த் தட்டிப் பறித்திருக்கிறார்கள். இதனால் வரும் ஆபத்து என்னவெனில் வரும் வருடங்களில் பிற அரசியல் கட்சிகளும், ஆள் பலமும், அதிகாரமும் கொண்டவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்வார்கள். ஒரு சாமான்ய எழுத்தாளன் போட்டியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்தத் துயர வரலாற்றைத் துவங்கி வைத்தவர்கள் நிச்சயம் நாமாகத்தான் இருப்போம்" என்றும் வேதனைப்படுகிறார். 

"...நல்ல படைப்புகளுக்கான வியாபாரமும் வெளியும் என்றும் இருக்கிறது. பிறகு ஏன் மக்கள் போட்டியை ஒரு பெரும் அரசியல் கட்சி கைப்பற்ற வேண்டும்? உங்களை உயரத்தில் அமர்த்த வேண்டும் எனக் காத்திருக்கும் கைகளைத்தான் இவர்கள் உடைக்கிறார்கள். போட்டி தர்மங்களையும் அறத்தையும், கட்சிச் செல்வாக்கைப் பயன்படுத்தி நசுக்கி மிதித்து முன்னேறுகிறார்கள்" என்று மிகக் கடுமையான சொற்களால் விளாசியிருக்கிறார். 

இவ்வளவு எழுதிய அவர் இடையில் முன்னாள் தி.மு.க., தலைவர் கருணாநிதி பற்றிக் குறிப்பிடுகையில் "தலைவர் கலைஞர் இருந்திருந்தால் நிச்சயமாக இதை அனுமதித்திருக்க மாட்டார். மாற்றானுக்குப் போட்டியாக நாம் இருக்க வேண்டுமே அன்றி, நம் மக்களிடத்தில் போட்டியிடக்கூடாது என்றிருப்பார். மேலும் கட்சி எழுத்தாளர்கள் பரிசு பெறுவதற்குக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்த அவர் அனுமதித்திருக்கவே மாட்டார்" என்றும் கூறியுள்ளார். 

இவ்வளவு தீவிரமான கருணாநிதி விரும்பியாக இருந்து கொண்டு, அந்தக் கட்சியின் உள்ளேயே அமர்ந்தபடி அவர்களின் முறைகேட்டை நடுநிலை தவறாமல் இவ்வளவு வெளிப்படையாகவும் கடுமையாகவும் சாடிப் பொது வெளிக்குக் கொண்டு வந்திருக்கும் முகம் தெரியாத அந்த நண்பரின் பண்புநலன் போற்றுதலுக்குரியது. அவருக்கு என் நெஞ்சம் நெகிழும் நன்றி! 

அவரது பதிவை முழுமையாகப் படிக்க: 

 

ஆனால் இவ்வளவு அம்பலப்படுத்திய பிறகும் தி.மு.க-வினர் கொஞ்சமும் வெட்கமின்றி இதைச் சரி என வாதாடுகிறார்கள். இதோ கீழே உள்ள பதிவு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

அதாவது பார்ப்பனர்கள் சொல்வார்கள் இல்லையா? "நாட்டின் எல்லா உயர் பதவிகளையும் நாங்களே வகிக்கிறோம், எல்லா உயர்கல்விகளிலும் நாங்களே முதலிடத்தில் இருக்கிறோம், எல்லாக் கோயில்களிலும் நாங்களே வழிபாடு நடத்துகிறோம் என்றால் அவையெல்லாம் காலம் காலமாக எங்களுக்கு இருந்து வரும் உரிமை, தகுதி. அவை உங்களுக்கு வாய்க்காவிட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று? அதையேதான் இவர்களும் சொல்கிறார்கள்.

இதற்கு எதற்கடா கருப்புச் சட்டையுடன் திரிகிறீர்கள்? காவி கட்டிக் கொண்டே பா.ச.க-காரன் போல் திரிவதுதானே? ஏனடா, இப்படி எல்லாரும் அவரவர் செல்வாக்கை, ஆற்றலை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றால் அப்படிச் செய்ய எங்களுக்கு மட்டும் தெரியாதா? இது என்ன பெரிய ஊரில் இல்லாத அதிசய ஆற்றலா? உன்னிடம் கட்சி என ஓர் ஆயுதம் இருக்கிறது என்றால் உடனே அதைப் பயன்படுத்திப் போட்டியில் வென்று விட்டு அதுவே சரி என வாதாடுகிறாயே! இதே போல் நான் செய்யட்டுமா? அதற்கு இந்தக் கட்சிக் கழிசடையெல்லாம் தேவையேயில்லை. ஒற்றை வரி விளம்பரம் போதும்!

"வீட்டிலிருந்தபடியே வேலை! அரை மணி நேரம் பணியாற்றினால் ரூ.1500/- ஒரு முறை மட்டுமே வாய்ப்பு" என்று சொன்னால் அவனவன் விழுந்தடித்துக் கொண்டு தொடர்பு கொள்வான். அனைவரையும் என் நூலைத் தரவிறக்கச் சொல்லி, கருத்துரையும் தரக்குறியீடும் அளித்துத் திரைச்சொட்டை (screenshot) எனக்கு அனுப்பினால் 1500 ரூபாய் தருவதாகக் கூறினால் முடிந்தது வேலை.

ஒற்றை ஆள் நான்! வீட்டு வாசற்படியைக் கூடத் தாண்டாமல் உட்கார்ந்த இடத்திலிருந்து இதைச் செய்து காட்டவா? ஒரு மாபெரும் கட்சியின் செல்வாக்கை இத்தனை பேர் சேர்ந்து பயன்படுத்தி நீங்கள் வென்றீர்களே! உங்கள் அத்தனை பேரையும் அரை நூற்றாண்டு தாண்டிய உங்கள் மாபெரும் கட்சியையும் நான் ஒற்றை மனிதன் அடுத்த ஆண்டுப் போட்டியில் வீழ்த்திக் காட்டவா? 

மிரளாதீர்கள்! அப்படிச் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் உங்களைப் போல் மானங்கெட்டவன் இல்லை.

இவ்வளவுக்கும் பிறகும் இந்தப் பதிவைப் படிக்கும் உங்களில் யாருக்காவது நான் சொல்வது உண்மைதானா என ஐயம் ஏற்பட்டால் அவர்களுக்காகக் கடைசியாக ஒரு தகவல்! 

இப்பதிவின் தொடக்கத்தில், "கதை என்று சொல்ல அடிப்படைத் தகுதி கூட இல்லாத ஒரு கதை கூட ஏராளமான தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ளியிருந்தது. அதுவும் ஆகா ஓகோ, கட்டாயம் படிக்க வேண்டிய கதை, வாழ்க்கையில் தவற விடவே கூடாத கதை எனவெல்லாம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது" என்று கூறியிருந்தேன் இல்லையா? அதுவும் இப்பொழுது போட்டியின் இறுதிச்சுற்றில் இருக்கிறது. 

இந்த ஒன்றை வைத்தே, இந்தப் போட்டி எந்த அழகில் நடந்திருக்கும் என்பதையும் அந்தத் தி.மு.க., தொண்டர் சொன்னது உண்மையா இல்லையா என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி அமேசான்

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் இதைப் பகிர்ந்து என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கு உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

செவ்வாய், ஜனவரி 14, 2020

இப்படியும் கொண்டாடலாம் காணும் பொங்கல்! – சமயவாதம் தகர்க்கும் ஒரு புது முயற்சி

Pongal Wishes gif

காணும் பொங்கல் - தமிழ் மக்களின் உறவுச் சங்கிலிக்கு உயவு (lubrication) கூட்டும் திருநாள்!

நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில், இந்நாளில் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா போன்றோர் குடும்பத்துடன் நம் வீட்டுக்கு வருவார்கள். பொங்கல் பரிசாக அன்பளிப்புகள், தின்பண்டங்கள் போன்றவை தருவார்கள். பொங்கல் இனாம் எனும் பெயரில் செலவுக்குக் காசும் கொடுப்பார்கள். மாமா பிள்ளைகளுடனும் சித்திக் குழந்தைகளுடனும் கரும்பு கடித்தபடி குதூகலமாய் ஊர் சுற்றுவோம்.

சொந்தக்காரர்களுக்கு மட்டுமில்லாமல், வேளாண் கூலித் தொழிலாளிகள், அடிமட்டத் தொழில்கள் செய்யும் தோழர்கள் போன்றோருக்கும் இனாம் கொடுத்து மகிழ்விப்போம். தமிழ் இனத்தின் மூத்த முதுகுடிகளான மலைக் குறவர்கள் கூட இந்த நாளன்று மலையிலிருந்து இறங்கி வந்து விடுவார்கள். மலையில் தாங்கள் பிடித்துப் பழக்கிய கரடி போன்ற விலங்குகளை வைத்து வித்தை காட்டிக் காசு கேட்பார்கள். நாம் காசு கொடுத்தால் அதைக் கூடச் சும்மா வாங்காமல் மறுகையாக மலைத்தேன், மூங்கிலரிசி என நாம் கொடுத்த காசை விடப் பன்மடங்கு மதிப்பு மிக்க பொருட்களை வழங்கிச் செல்வார்கள்.

இப்படிக் காணாதவற்றையெல்லாம் காணும் திருவிழாவாக இருந்ததால்தான் காணும் பொங்கல் எனப் பெற்றது இத்திருநாள். ஆனால் இவையெல்லாம் எண்பதுகள் வரையான கதை.

இன்றோ காணும் பொங்கல் என்றாலே கடற்கரைக்கும் திரைப்படத்துக்கும் பல்லடுக்கு வணிக வளாகங்களுக்கும் செல்வதுதான் என்றாகி விட்டது. காலத்துக்கேற்ப வழக்கங்களும் மரபுகளும் மாறுவது இயல்பே. அதுவும் பொங்கல் பண்டிகையே பழையன கழிதலும் புதியன புகுதலும்தாம் வளர்ச்சி எனும் பேருண்மையை உணர்த்துவதுதான்!

ஆனால் மாற்றம் என்பது தான், தன் குடும்பம் என்பதாகச் சுருங்காமல் பொதுநலன் சார்ந்ததாக விரிவடைந்தால் அது அந்தச் சமுகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அமையும். அப்படித் தமிழர் விழாவான காணும் பொங்கலிலும் இன்றைய வாழ்க்கை முறைக்கேற்ப ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே இக்கட்டுரை.

வேளாண் பொருளாதாரத்தையே மையமாகக் கொண்டிருந்தது நம் பழைய தமிழ்நாடு. உழவர்கள் மட்டுமில்லாமல் எல்லாத் தொழிலாளர்களுமே பொழுதோடு வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பி மாலை முழுதும் குடும்பத்துடன் கழித்த நாட்கள் அவை. அதனால் பொங்கல் விடுமுறைகளையும் மொத்தமாகக் குடும்பத்துடனே கழிக்காமல் அதில் ஒரு நாளைச் சொந்தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்காக ஒதுக்கும் வழக்கம் தோன்றியது.

ஆனால் அன்றாடம் பணி முடிந்து வீடு திரும்பவே முன்னிரவாகி விடும் இன்றைய வாழ்க்கைமுறையில் கணவனும் மனைவியும் குழந்தைகளும் தங்களுக்குள் முகம் பார்த்துப் பழகுவதே இப்படிப்பட்ட விடுமுறை நாட்களில்தான். எனவே அந்தக் காலத்து அதே கொண்டாட்ட முறைகளை இன்று எதிர்பார்க்க முடியாதுதான்.

மேலும் ஊரகப் பொருளாதாரத்தின் ஆணி வேரான உழவுத்தொழிலும் அதைச் சார்ந்த பிற தொழில்களும் பெரிதும் நசிவடைந்து பிழைப்புக்காகப் பெரும்பாலானோர் நகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் குடிபெயர்ந்து விட்டனர். ஆகவே காணும் பொங்கலுக்காக வெகு தொலைவில் இருக்கும் சொந்த ஊரில் வாழும் உறவுகளைத் தேடிச் சென்று கொண்டாடித் திரும்புவது இன்று அவ்வளவு எளிதில்லை.

ஆனால் உறவு என்றால் நம் குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள் மட்டும்தானா?

நம் அக்கம் பக்கத்தில் இசுலாமியம், கிறித்தவம், சமணம் எனப் பிற சமயங்களைச் சேர்ந்த உடன்பிறப்புகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு இந்நாளில் சென்று அவர்களுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தால் என்ன? காணும் பொங்கலை அவர்களோடு செலவிட்டால் என்ன? “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வழி வந்த நாம் அதை வெறும் வாய்ச்சொல்லாக இல்லாமல் வாழ்வியலாகவும் கடைப்பிடித்தால் என்ன?

சொல்லப் போனால், தமிழர்களுக்கு இது புதிது ஒன்றும் இல்லை!

காலம் காலமாகவே பொங்கலை நாம் சமய எல்லைகள் கடந்து அனைவரோடும் சேர்ந்துதான் கொண்டாடி வருகிறோம். காரணம் பலரும் நினைப்பது போல் இஃது இந்துச் சமயத்தைச் சார்ந்த விழா இல்லை. எந்தச் சமயமும் தமிழ் / இந்திய மண்ணுக்குள் காலடி வைக்கும் முன்பிருந்தே தமிழ் மக்கள் வெறும் இனக் குழுவாக வாழ்ந்த காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வரும் அறுவடைத் திருவிழா.

உலகம் முழுவதும் இப்படி மொத்தம் 77 அறுவடைத் திருவிழாக்கள் இருப்பதாகக் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பட்டியலிடுகிறது. அவற்றுள் இந்தியாவில் மட்டுமே 25 விழாக்கள்! அவற்றில் பொங்கல் விழா பற்றி “இந்தியாவின் தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழா” என்றுதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர சமயத்தின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் தென் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இசுலாமியர் வீடுகளில் பெரும்பொங்கல் அன்றைக்குச் சருக்கரைப் பொங்கலுடன் பதினாறு வகைக் காய்கறிகள் சமைத்துச் சிறப்பு விருந்தாகக் குடும்பத்தோடு உண்டு மகிழும் பழக்கம் உண்டு.

கிறித்தவர்களோ ‘சமத்துவப் பொங்கல்’ எனும் பெயரில் தேவாலயங்களிலேயே கரும்புடன் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்!

கல்லூரிகளில் பொங்கல் விடுமுறை துவங்குவதற்கு முன் நாள் மாணவர்-மாணவியர் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் சமய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒற்றுமையாகச் சேர்ந்து கல்லூரி வளாகத்திலேயே பொங்கல் வைத்துக் குலவையிட்டு ஒன்றாகக் கூடி உண்டு களிப்பதையும் நாம் ஆண்டுதோறும் பார்த்து வருகிறோம். 

Equity Pongal in educational institutions

எல்லாவற்றுக்கும் மேலாக, தென் தமிழகத்தில் இசுலாமியத் தமிழர்களுக்கும் இந்து போன்ற பிற சமுகத் தமிழர்களுக்கும் இடையே மாமன் – மைத்துனன், சித்தப்பா – சித்தி, தாத்தா, அப்பு, சீயான் எனக் குடும்ப உறவுமுறைகளே கூட இன்றும் உள்ளன! உலகில் வேறெங்குமே காண முடியாத, தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு இஃது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கோம்பை எஸ்.அன்வர்.

ஆக, தமிழர் திருநாளான பொங்கல் மட்டுமில்லை, தமிழர்களின் உறவுமுறைகளே கூடக் காலம் காலமாகச் சமய எல்லைகள் கடந்து கொண்டாடப்பட்டு வருபவைதாம்!

தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே காணப்படும் இந்த உறவுமுறையைத் தமிழ்நாடு முழுவதுமே பரவலாக்க, உலகில் தமிழ் மக்கள் வாழும் எல்லா இடங்களிலும் தழைக்கச் செய்யக் காணும் பொங்கல் ஒரு சிறப்பான தேர்வு.

சொந்த ஊரில் வாழ்கிற உறவுகளைத் தேடிச் சென்று பார்க்க முடியவில்லை என்பதற்காகக் காணும் பொங்கலை வெறும் கேளிக்கைப் பூங்காக்களில் கழிக்காமல் அக்கம் பக்கத்திலுள்ள மற்ற சமயத்து மக்களோடு செலவிட்டால் தமிழ் மண்ணுக்கே உரிய இந்தச் சமயம் கடந்த உறவுமுறைப் பெருமை காலத்துக்கும் தொடரும்; தமிழர் தனிப்பெரும் விழாவான பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஊறி என்றென்றும் நீடிக்கும்.

அதற்காக மட்டுமில்லை, எல்லாச் சமயத்தினரும் உதிரம் சிந்திப் பெற்றுத் தந்த விடுதலையை அடித்தளமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது இந்நாடு; ஆனால் இந்து எனும் ஒற்றைச் சமயத்துக்கான நாடாக இதை மாற்ற இப்பொழுது முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நேரத்தில் சமயம் கடந்த இத்தகைய உறவுமுறைகளை நம் அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டுவதும் கட்டிக் காப்பதும் காலத்தின் கட்டாயம்!

எனவே இனியும் காணும் பொங்கலை வெறும் சொந்தங்களுக்கு இடையிலான உறவைப் புதுப்பிக்கும் விழாவாக இல்லாமல் வழிவழியாக இங்கே சாதி – சமய எல்லைகள் கடந்து நிலவி வரும் உறவுமுறைகளை மீட்டெடுக்கும் விழாவாகக் கொண்டாடுவோம்! நாடெங்கும் பரப்பப்படும் சமயவாதப் பெருந்தீயை அன்பெனும் மாமழையால் அணைத்துக் காட்டுவோம்! 

அனைவர்க்கும் அன்பு கமழும் போகி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு,
திருவள்ளுவர் நாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Kaanum Pongal - The celebration that lubricating the relationship chain of Tamils
(காணும் பொங்கலுக்காக நான் தினச்செய்தி நாளிதழில் எழுதியது).

படங்கள்: நன்றி Giphy.com, நியூசு 7.

தொடர்புடைய பதிவுகள்:

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்