.

புதன், ஏப்ரல் 01, 2026

வீட்டிலிருந்தே வாக்களிக்க வேண்டுமா? - மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு முக்கிய அறிவிப்பு

E.Bhu.Gnaanapragaasan with Postal Ballot form

 📢 அன்புக்குரிய மாற்றுத்திறனாளித் தோழர்களே!


உங்களுக்கான அஞ்சல் வாக்குப் படிவத்தைத் தாக்கல் செய்து விட்டீர்களா? இதோ நான் செய்துவிட்டேன், பாருங்கள்! 😎

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் போன்றோர் வீட்டிலிருந்தே அஞ்சல் வழியில் வாக்களிப்பதற்கான வசதி 2019ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வசதியைப் பெற நாம் நமது பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலரைத் (BLO) தொடர்பு கொள்ள வேண்டும். 🤙🏽

அவரை எப்படித் தொடர்பு கொள்வது? 📞

அண்மையில் நாம் அனைவரும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்காக (SIR) நம் விவரங்களைப் படிவத்தில் நிரப்பிக் கொடுத்தோம் இல்லையா? அப்பொழுது நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு படிவங்கள் வழங்கப்பட்டன என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். அவற்றுள் ஒரு படிவத்தை நிரப்பி அரசிடம் தாக்கல் செய்தோம். இன்னொரு படிவத்தை ஆதாரத்துக்காக நாமே வைத்துக் கொண்டோம். அந்தப் படிவத்தில் தொடக்கத்திலேயே - தாளின் உச்சியில் - அவரவர் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, நீங்கள் 40%க்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருந்தால் அல்லது 85 வயதுக்கு மேற்பட்ட முதியவராக இருந்தால் அஞ்சல் வாக்களிக்க விரும்புவதாகச் சொல்லி அதற்கான 12D படிவத்தைக் கேளுங்கள்!

நான் கேட்டேன். எங்கள் பகுதி அலுவலர் வீட்டுக்கே வந்து படிவத்தைக் கொடுத்து, நிரப்பிய பின்னர் வீட்டுக்கே வந்து வாங்கிக் கொண்டும் சென்று, படிவத்தை உயரலுவலரிடம் தாக்கல் செய்த பின்னர் என்னைக் கைப்பேசியில் அழைத்து அதைத் தெரிவிக்கவும் செய்தார். அவருக்கு என் அன்பு நன்றி! 🥰

நீங்களும் படிவம் கேட்டு வாங்குங்கள்!
உங்கள் வாக்கைத் தவறாமல் பதிவு செய்யுங்கள்! 👆🏽

வாக்களிப்பது நம் உரிமை மட்டுமில்லை
கடமையும் கூட! 🙏🏽

மேலும் விவரங்களுக்கு இந்தக் காணொளியைப் பாருங்கள் - https://youtu.be/38aDwWHD4Vs?si=sP0lg1LTOS5rR-uU

⚠️ முக்கியக் குறிப்பு: தோழர்களே! இதற்கான கடைசி நாள் ஏப்ரல்3️⃣. அதற்குப் பின் செய்ய முடியாது. ஏப்ரல் 23 அன்றுதானே தேர்தல் என நினைத்துப் பொறுமையாக இருந்து விடாதீர்கள்!

இந்தப் பதிவைப் பகிர்ந்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு நீங்களும் உதவலாமே! 

வெள்ளி, பிப்ரவரி 13, 2026

பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பொய்யா? இதோ ஆதாரம் - 'தி இந்து' நாளிதழே, மன்னிப்புக் கேள்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்பொழுது பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் 'பராசக்தி' படத்தில் காட்டியிருப்பது பொய் என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் இந்தியப் படை அலுவலர் (Ex-Army officer) தேவசகாயம் (இணைப்பு - tinyurl.com/DevasagayamInterview)

தி இந்து நாளிதழில் கடந்த சனவரி 17 அன்று வெளியாகியிருக்கும் மேற்படி செவ்வியில் (interview) அவர்  மேலும் கூறுகையில், "இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்வதும் பொய். போல்ட்-ஆக்சன் .303 ரைஃபிள் வகைத் துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இறந்தோர் எண்ணிக்கை 10 மட்டுமே" என்கிறார்.

அப்படியானால் இது என்ன தோழர்களே?👇🏽

13.02.1965 dated 'The Indian Express' says light machine guns used in Pollachi Massacre

இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது 'பொள்ளாச்சிப் படுகொலை' எனக் குறிப்பிடப்படும் மேற்கண்ட கொடூர நிகழ்வு நடந்த மறுநாள் (13.02.1965) வெளியான தி இந்தியன் எக்சுபிரசு நாளேட்டின் முகப்புப் பக்கம். (இணைப்பு: tinyurl.com/Feb13-1965-IE)

இதில் "எளிய-இயந்திரத் துப்பாக்கிச் சூடு [Light machine gun (LMG) fire]" என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பாருங்கள்!

"அப்படியே இருந்தாலும் எண்ணிக்கை தவறுதானே? நீ காட்டும் இந்தியன் எக்சுபிரசு நாளேட்டிலேயே உயிரிழந்தோர் 10 பேர் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவசகாயமும் அதே எண்ணிக்கையைத்தானே கூறுகிறார்? அப்படியானால் அவர் சொல்வது சரிதானே?" என்று நீங்கள் கேட்கலாம்.

இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மக்கள் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டால் வெறும் 10 பேர் மீதுதானா படும்? இதை நான் கேட்கவில்லை, அதே செவ்வியில் தேவசகாயமே சொல்கிறார்.

"நாங்கள் இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தால் சில பல நூறு சுற்றுகள் சுடக்கூடிய அவை நூற்றுக்கணக்கானோரைக் கொன்றிருக்கும்" என்கிறார்.

இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்று மறுநாளே வெளியான செய்தித்தாள் மூலம் இப்பொழுது நமக்கு உறுதியாகிவிட்டதால் இயந்திரத் துப்பாக்கிச் சூட்டின் விளைவு பற்றி இவர் சொல்லும் கருத்தையும் இணைத்துப் பார்க்கும்பொழுது கொல்லப்பட்டோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்திருக்கும் என்ற முடிவுக்குத்தானே நாம் வர வேண்டியிருக்கிறது? என்ன இருந்தாலும், இவ்வளவு பெரிய கலவரம் நடந்த மறுநாளே கொல்லப்பட்டோர் எண்ணிக்கை செய்தித்தாளில் சரியாக வரும் என நாம் எதிர்பார்க்க முடியாது இல்லையா?

சரியாக இதே நாளில் 61 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த நாளிதழ் இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கிறது. உண்மை இப்படி வெட்டவெளியில் இருக்கும்பொழுது, இவை எதையுமே ஆராயாமல் முன்னாள் படைவீரர் என்பதற்காக, ஒருவர் சொன்னதை அப்படியே வெளியிட்டுப் பொய்த்தகவல் பரப்பிய தி இந்து நாளிதழ் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!

இப்படி விரல்நுனியில் அனைத்து விவரங்களும் கிடைக்கும் இந்தத் தகவல் ஊழியிலேயே (information era) இவன்கள் இப்படிப் பச்சைப் பொய்யை வாய்கூசாமல் சொல்கிறான்களே, இப்படி எந்த வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் இவன்கள் என்னென்ன பொய்களைச் சொல்லியிருப்பான்கள்? எப்பேர்ப்பட்ட உண்மைகளையெல்லாம் மூடி மறைத்திருப்பான்கள்?😡

அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தேவை இன்னும் பல 'பராசக்திகள்'! தீ பரவட்டும்!🔥

படம்: நன்றி தி இந்தியன் எக்சுபிரசு, கூகுள் புக்சு

ஞாயிறு, ஜனவரி 11, 2026

எப்படிப் பெரும்பான்மை மொழியானது இந்தி? - ஒரு வெட்கங்கெட்ட வரலாறு! | காணொளி

என்ன இருந்தாலும் இந்தி இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி, அதை நாம் கற்றுக் கொள்வது நல்லதுதானே என நினைக்கிறார்கள் சிலர். இந்தியைப் பெரும்பான்மை மொழி என நாம் சொல்வதே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காட்டும் புள்ளிவிவரங்களை வைத்துதான். ஆனால் இந்தித் திணிப்பு முதன் முதலில் புகுந்து விளையாடியதே அந்தப் புள்ளிவிவரங்களில்தான் என நான் சொன்னால் நம்புவீர்களா? காணொளியைப் பாருங்கள்! இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்! 🙏🏽 நன்றி! வணக்கம்!! 🙏🏽

வெள்ளி, ஜனவரி 02, 2026

திருத்தணி சிராஜ் தாக்குதல்! - திரைப்படங்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா?


திருத்தணியில் வடமாநிலத் தொழிலாளர் சிராஜ் தாக்கப்பட்ட வேதனையில் வெளியிடும் காணொளி! 😟😢

திரைப்படங்களைக் குற்றம் சாட்டுவது என் நோக்கமில்லை. உண்மையில் திரைப்படங்கள் மீதான நம்பிக்கைதான் இப்படி ஒரு காணொளியை வெளியிட என்னைத் தூண்டியது.

நான் சொல்லியிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்!

வெள்ளி, டிசம்பர் 19, 2025

மம்மது – நூல் மதிப்புரை

Mammadhu

“உன்னை நீ மேம்படுத்திக் கொள்வதே ஆகச் சிறந்த பழிவாங்கும் முறை” – என்பது இன்றைய புத்துலக வாழ்க்கைமுறையில் பெரிதும் போற்றப்படும் பொன்மொழிகளுள் ஒன்று. இதையே ஒரு கதையாகச் சொன்னால்...? அதுதான் மன்சூரா பீவி அம்மையார் எழுதியுள்ள ‘மம்மது’ புதினம்.

மன்சூரா பீவி அவர்கள் இந்திய அஞ்சல் தொலைவரித் (Postal and Telegraph) துறையில் பணியாற்றியவர். இவர் கணவர் துவிட்டர் புகழ் தமிழறிஞர் நெல்லை க.சித்திக் அவர்கள். அவர் மகுடைத் (Corona) தொற்றால் காலமான பின்னர் அன்னார் பல ஆண்டுகள் உழைத்துத் தொகுத்திருந்த ‘அயற்சொல் அகரமுதலி’ எனும் நூலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தார் பீவி அவர்கள். அப்பொழுது அவரைக் கணவரின் கனவை நிறைவேற்றி வைத்த அன்பான மனைவி என்று மட்டுமே நினைத்தேன். ஆனால் அடுத்து அவர் எழுதிய சிறுகதைகளைப் படித்த பிறகுதான் அவர் எப்பேர்ப்பட்ட எழுத்துத்திறம் படைத்தவர் என்பதை அறிய முடிந்தது.

தற்பொழுது பணியோய்வுக்காலத்தில் இருக்கும் பீவி அவர்கள் அடுத்தடுத்துத் தன் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அவற்றுள் ஒன்றுதான் மம்மது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களம். வலியகுளத்துவிளை எனும் சிற்றூரில் வாழும் இளைஞன் மம்மதும் காசிமும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இல்லை இல்லை, நண்பர்கள் ஆவதற்கு முயல்பவர்கள். ஆனால் அவர்கள் பழகக்கூடாது என்று தொடக்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புகிறது இருவர் வீட்டிலிருந்தும்.

ஓரிரு கசப்பான நிகழ்வுகளுக்குப் பின் ஒரேயடியாகப் பிரியும் இந்த நண்பர்கள், தங்கள் 18 வயதில் மீண்டும் சந்திக்கும்பொழுது காசிம் தங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையிலான மருமத்தைத் தெரிவிக்கிறான். நண்பன் மகிழ்வான் என்றெண்ணி அவன் சொல்லும் அந்தச் செய்தி மம்மதின் மொத்த வாழ்வையும் ஒரே நிமையத்தில் புரட்டிப் போட்டு விடுகிறது.

❔ காசிம் சொன்ன அந்த மருமம் என்ன?

❔ மம்மதின் குடும்பத்துக்கும் காசிம் குடும்பத்துக்கும் அப்படி என்ன பகை

❔ மொத்தமாகத் தன்னை நிலைகுலைய வைத்த அந்த உண்மையை மம்மது எப்படி எதிர்கொண்டான்?

சனி, அக்டோபர் 11, 2025

வானத்தின் சொத்து | சிறுகதை

Vaanathin Sothu

உறவு தந்த கண்ணீரோடு காலம் வகுத்த பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன். இருங்கள்! சாலையோரத்தில் ஏதோ மின்னுகிறதே? நெருங்கி, குனிந்து கையில் எடுத்துப் பார்த்தால்... ஓ! இது... இது... ஒரு விண்மீன்!!!

எப்படிக் கீழே விழுந்தது?! அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். முட்டாள் நான்! உதிர்ந்த தடம் தெரியுமா என்ன?

கையிலிருந்த விண்மீனை மறுபடியும் பார்த்தேன். ஆறு கரங்களோடு ஒளிப்பிழம்பாய்த் தகதகத்தது! அதன் மேலே ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்து ஊதினேன். பளிச்சென இரு விழிகள் திறந்தன. மிரண்டு போனேன்!

எப்படிக் கீழே விழுந்தாய்? அதனிடமே கேட்டேன். சோகமாக என்னையே பார்த்தது. வாய் ஏதும் இல்லை. எப்படி மறுமொழி சொல்ல முடியும்!

அக்கம் பக்கம் பார்த்தேன். யாருமில்லை. சட்டைப்பையில் போட்டுக் கொண்டு, திரும்பி வீடு நோக்கி நடந்தேன்; ஒரு முடிவோடு.

நுழைவாயில் இரும்புக்கதவை ஓசைப்படாமல் திறந்தேன். வீட்டுக்குள்ளே போன பின் தலையை மட்டும் வெளியே நீட்டிச் சுற்றுமுற்றும் பார்த்தேன். ஈ காக்கை இல்லை. கதவைச் சாத்தி இரண்டு தாழ்ப்பாள்களையும் போட்டேன்.

வலப்பக்கம் பார்த்தேன். மகள் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவர்க்கடிகாரத்தில் மணி ஒன்று. இன்னும் தூங்காமல் என்ன செய்கிறாள்? கேட்க வந்ததைக் கட்டுப்படுத்திக் கொண்டு என் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டேன்.

சட்டைப்பையிலிருந்து அதை வெளியே எடுத்தேன். அறை முழுவதும் விளக்கே இல்லாமல் ஒளிர்ந்தது. சட்டைப்பையில் இருந்தபொழுது வெளிச்சம் தெரியவில்லையே? நாம் ஒளித்து வைப்பதை உணர்ந்து தன்னைத் தானே அணைத்துக் கொள்கிறதோ!

எங்கே வைப்பது இதை? சுவரில் மாட்டலாம் என்றால் துளையிட வேண்டும். மேசையில் வைக்கலாம் என்றால்... சேச்சே! சரி வராது. சிந்தித்தபடி நாற்காலியில் அமர்ந்தேன். கூரைச் சுவர் முழுக்கப் பரவிக் கிடந்த செயற்கை வானம் தென்பட்டது. இணையத்தில் வாங்கிய மாபெரும் சுவரொட்டி (wallpaper).

நாற்காலியை அறையின் நடுப்பகுதிக்கு எடுத்துப் போட்டு, முட்டியில் கையூன்றியபடி கடினப்பட்டு மேலேறி, நுனி விரல்களில் நின்றபடி படாதபாடுபட்டு உடலைச் சமன் செய்து, எப்படியோ எட்டி உயர்ந்து ஒட்டி விட்டேன் அதைக் கூரையில். இரவில் மட்டும் மினுங்கும் செயற்கை விண்மீன்களுக்கு இடையே இப்பொழுது இதுவும். ஆனால் பெரிதாக, மிகப் பெரிதாகத் தனித்துத் தெரிந்தது. யாராவது கேட்டால்? அ... சொல்லிக் கொள்ளலாம்.

போர்த்திக் கொண்டு படுத்தேன். அறை முழுக்க ஒளியை உமிழ்ந்தபடி அது என்னையே பார்த்தது. நான் அதையே பார்த்திருந்தேன். எப்பொழுது உறங்கிப் போனேன்? தெரியவில்லை.

திடீரெனத் தூக்கம் கலைந்து விழித்துப் பார்த்தபொழுது கூரைச் சுவரில் அது இல்லை. பதறி எழுந்தேன். நேர் கீழே இருந்த நாற்காலியின் சாய்மான விளிம்பில் நின்றபடி சாளரம் வழியே கொட்டக் கொட்டப் பார்த்துக் கொண்டிருந்தது.

எங்கே பார்க்கிறது? நானும் பார்த்தேன். நீல வானம் பரந்து விரிந்து தெரிந்தது. கடிகாரம் பார்த்தேன். நாலரை. இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலரத் தொடங்கி விடும். விண்மீனைப் பார்த்தேன். அதன் கண்களில் சோகம் கூடியிருந்தது. ஒளி மிகவும் குறைந்திருந்தது. சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு எழுந்து அதனை நெருங்கினேன்.

மொட்டைமாடி வந்து விட்டேன். கையைத் திறந்தேன். விண்மீனும் கண்ணைத் திறந்தது. வானத்தைப் பார்த்ததும் இன்னும் விழிகளை அகலத் திறந்தது. அதன் ஒளி கூடியது. என் உதடுகளில் கீற்றாக ஒரு புன்னகை.

ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து விண்மீனின் மையப்பகுதியைப் பிடித்துக் கொண்டேன். மூச்சை இழுத்துப் பிடித்து முடிந்த அளவுக்குக் கையை வேகமாகக் கரகரவெனச் சுழற்றி வானை நோக்கி வீசி எறிந்தேன்.

விண்மீன் வானோக்கி எகிறியது!! கீழே விழுந்து விடுமோ? அஞ்சியபடி பார்த்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை. அது போனது... போனது... போய்க் கொண்டே இருந்தது. ஒரு புள்ளியில் என் கண்ணை விட்டு மறைந்தது.

சிறிது நேரம் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மாடியிலிருந்து இறங்கினேன். வீட்டுக்குள் போனதும் இப்பொழுதும் வலப்பக்கம் பார்த்தேன். அவள் அறையில் விளக்கு எரியவில்லை.

மெல்லமாக மிக மிக மெல்லமாகக் கதவைத் திறந்து பார்த்தேன். அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். கதவை விரியத் திறந்து அருகில் நெருங்கி குனிந்து பார்த்தேன். வாயருகே என்னவோ போலிருந்தது. தொட்டுப் பார்த்தால் எச்சில். தற்செயலாய் என் இடக்கை என் மார்புமுடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. சை! குழந்தையில் என் மார் மீது படுத்துத் தூங்கியபொழுது எச்சில் விட்டால் அவள் வாயைத் துடைத்து விட்ட கையோடு என் மார்பு நனைந்திருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொள்வேனே? அதே நினைவு.

அவள் மேசை நோக்கி நடந்தேன். என் சட்டைப்பைக்குள் கைவிட்டேன். ஒளித்து வைத்திருந்த அவளுடைய கடவுச்சீட்டை (Passport) மேசை மீது வைத்தேன். திரும்பி நடந்து அவள் அருகில் வந்து பார்த்தேன். குண்டுக்கட்டாக உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்திருந்தாள். பக்கத்திலிருந்த தொலை இயக்கியை (Remote control) எடுத்து அறைப்பதனியின் (Air conditioner) குளிர்ச்சியை மட்டுப்படுத்தினேன். விறுவிறுவெனத் திரும்பி நடந்து என் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டேன்.

விரல்நுனியில் ஒட்டியிருந்தன விண்மீனின் துகள்களும் மகளின் எச்சில் மணமும். இவை போதும்!

- பன்னாட்டுப் பெண்குழந்தை நாள் சிறப்புச் சிறுகதை

படம்: செய்யறிவில் (AI) சித்தரிக்கப்பட்டது.

வெள்ளி, செப்டம்பர் 19, 2025

ஆசிரியர் சாந்தா அவர்களுக்குப் புகழஞ்சலி!

நேற்று காலை சாந்தா மிஸ் இறந்துவிட்டார்! 😢

யார் சாந்தா மிஸ் எனக் கேட்கிறீர்களா?

என் கோப்பையைக் காலி செய்த ஆசிரியர்!

மூன்றாம் வகுப்பு முடிக்கும் தறுவாயில் எனக்குக் காலில் வழக்கம் போல் எலும்புமுறிவு. அதன் பின் பள்ளிக்கு அனுப்ப அஞ்சிய அம்மா, நான்காம் வகுப்பு கற்பிப்பதற்காகப் பின் தெருவில் இருந்த ஆசிரியர் சாந்தா அவர்களை நாடினார். யாருக்கும் தனி வகுப்பு நடத்தாத அவர், அம்மாவின் வேண்டுகோளுக்காக எனக்கு மட்டும் நடத்த முன்வந்தார்.

முதல் நாள் வகுப்பில், சாந்தா மிஸ் என் திறனைச் சோதிக்க விரும்பிக் குட்டியாக ஒரு தேர்வு நடத்தினார். சிற்சில கேள்விகள்தாம். ஆனால் சரியாக விடையளிக்காத நான், அதெல்லாம் தெரியாவிட்டாலும் தமிழில் எனக்கு எல்லாம் தெரியும் என்று திமிராகப் பேசினேன்.

மாற்றுத்திறனாளி என்பதால் என்னைச் சிறுவயதிலிருந்தே எல்லாரும் கொஞ்சம் மிகையாகவே பாராட்டுவார்கள். “பிரகாசுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை”, “அவன் சொன்னால் சரியாக இருக்கும்” என்றெல்லாம் பாராட்டு மழையில் நனைந்து நனைந்து அந்த வயதிலேயே தலையில் முளைத்திருந்த கொம்பு அப்படிப் பேச வைத்தது.

உடனே சாந்தா மிஸ் என் குறிப்பேட்டை (Notebook) வாங்கினார்; ஐந்தாறு தமிழ்ச்சொற்களை எழுதிக் கொடுத்து “இதுக்கெல்லாம் விடை எழுதி வை. இதோ வரேன்” என்றுவிட்டு உள்ளே போனார். பார்த்தால், எல்லாம் அருஞ்சொற்பொருள் கேள்விகள். தமிழில் எல்லாம் தெரியும் என்று நினைத்தவனுக்கு அந்தச் சொற்கள் சில புதிதாக இருந்தன. இருந்தாலும் தெரிந்த வரையில் எல்லாவற்றுக்கும் விடை எழுதினேன். ‘மரை’ என்று அவர் கேட்டிருக்க, அது மான் என்பது கூடத் தெரியாமல் திருகாணி (screw) என்று நினைத்துக்கொண்டு விடை எழுதியதை இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

வந்து பார்த்தார். திருத்தித் திருப்பித் தந்தார். ஒன்றோ இரண்டோதான் சரியாக எழுதியிருந்தேன், மற்ற அனைத்தும் தவறு! எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தை அன்றோடு அழிந்தது.

ஒரு அடி இல்லாமல், ஒற்றைக் கடுஞ்சொல் சிந்தாமல், வெகு நயமான முறையில், நான் யார் என்பதை எனக்கே ஒரு கண்ணாடி போல எதிரொளித்துக் காட்டிய ஆசிரியர் சாந்தா அவர்களின் திறமை என்னை அண்ணாந்து பார்க்க வைத்தது.

கோப்பை காலியாக இருந்தால்தான் தேநீரை நிரப்ப முடியும் என்பார்கள். கல்வி கற்பதற்கான அடிப்படைத் தகுதியை எடுத்துரைக்கும் சென் (Zen) கதை அது. அப்படி, சேர்ந்த முதல் நாளே என் கோப்பையைக் காலி செய்துவிட்டு எனக்குப் பாடம் நடத்தத் தொடங்கியவர் சாந்தா மிஸ்.

அதுவரை படித்துக் கொண்டிருந்த நான் அன்றிலிருந்துதான் கற்கத் தொடங்கினேன்.

முதல் நாள்தான் என்றில்லை, ஒருநாளும் என்னிடம் அவர் ஒரு சுடுசொல் கூடப் பயன்படுத்தியதாக நினைவில்லை. எப்படிச் சொன்னால் எனக்குப் புரியும் என்பது அவருக்குத் தெரியும். அதற்கேற்பக் கற்பிப்பார். கண்டிப்பும் கிடையாது, ஒரேயடியாகக் கனிவாகப் பேசிக் கொஞ்சுகிற பழக்கமும் கிடையாது. இரண்டும் கலந்த ஒரு சமநிலையில் எப்பொழுதும் இருப்பார்.

எப்பொழுதும் பாடம்தான் என்றில்லை. சனிக்கிழமையானால் தொலைக்காட்சியில் இந்திப் படம் ஓடும். கொஞ்ச நேரம் படம் பார்க்கச் சொல்வார். மிகச் சிறிது நேரம் கதைப்புத்தகங்களும் படிக்கத் தருவார்.

சாந்தா மிஸ்ஸுக்கு இராமதுரை, சிறீராம் என இரண்டு பிள்ளைகள். இருவருமே என்னை விட மிகவும் மூத்தவர்கள். அங்குதான் எனக்குச் சிறார் இதழான ‘கோகுலம்’ அறிமுகமானது. பூந்தளிர், ராணி காமிக்சு எனப் பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதிய படைப்புகளை மட்டுமே படித்துக் கனவுலகிலேயே மிதந்து கொண்டிருந்த எனக்கு, சிறுவர்களாலும் எழுத முடியும் என்கிற எண்ணத்தை விதைத்தது அந்த இதழ்தான். அந்த வகையில் சாந்தா மிஸ் வீட்டில் அறிமுகமான கோகுலம்தான் என் வாழ்க்கையையே தீர்மானித்தது என்றால் அது துளியும் மிகையில்லை.

ஓரீர் ஆண்டுகள்தாம் அவரிடம் படிக்க வாய்த்தது. அதன் பின், ஏதோ காரணங்களால் மீண்டும் படிப்பு நின்று போனது.

அம்மாவின் இடைவிடாத முயற்சியால், சில ஆண்டுகள் கழித்து, தனித்தேர்வராக 8ஆம் வகுப்பு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் குறைந்தது 5ஆம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்பது நெறிமுறை. அப்பொழுது சாந்தா மிஸ்தான், “இந்த மாணவன் என்னிடம் 5ஆம் வகுப்பு வரை படித்தவன். இவனுக்கு 8ஆம் வகுப்புத் தேர்வு எழுதத் தகுதி உண்டு. அரசுப்பள்ளி ஆசிரியர் எனும் முறையில் நான் சான்றளிக்கிறேன்” என்று கைப்பட எழுதித் தந்தார். அதை இன்னும் என் தகுதிச்சான்றிதழ்களுள் ஒன்றாகப் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்.

பின்னர் ஓரிரு முறை வீட்டுக்கு வருகை தந்தார். அதன் பின், பல ஆண்டுகள் தொடர்பு விட்டுப் போனாலும் தன் மகன் திருமணத்துக்காக மறவாமல் வந்து அவர் அழைப்பிதழ் வைத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.

அதன் பின் நான் அவரைப் பார்க்கவில்லை. இனி பார்க்கவும் இயலாது! ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் என் வாழ்வில் மிக முக்கியமானது என்பது மட்டும் மறக்காது!

நன்றி சாந்தா மிஸ்!🙏

படம்: செய்யறிவில் (AI) சித்தரிக்கப்பட்டது.

சனி, ஆகஸ்ட் 02, 2025

ஜாதி ஆணவப்படுகொலைகள்! தீர்வுதான் என்ன? முதல்வரின் கனிவான பார்வைக்கு | காணொளி

🙏🏽 தமிழ்நாடு முதல்வரின் மேலான பார்வைக்கு! 🙏🏽
⚠️ காதல் செய்வது குற்றமா?! ⚠️
காதல் செய்த ஒரே காரணத்துக்காகப் பெற்ற தாயின் கண் முன்னே துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் திரு. கவின்செல்வகணேசு 😭😭😭
தொடரும் இந்த ஜாதி ஆணவப்படுகொலைகளுக்குத் தீர்வுதான் என்ன❓❗
இதோ எனக்குத் தெரிந்த இரண்டு தீர்வுகள், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கனிவார்ந்த பரிசீலனைக்குப் பணிவன்புடன் இந்தக் காணொளியில்.


முதல்வர் கவனத்துக்காக மட்டுமில்லை, அன்பார்ந்த தமிழ்ப் பொதுமக்களே, இது உங்கள் மனக்கதவைத் தட்டும் முயற்சியும் கூட! 🥺
சிந்தித்துப் பாருங்கள்!
கவினை ஒரே ஒருநொடி உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து இந்தக் காணொளியில் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!🤝🏽
நன்றி! வணக்கம்!


திங்கள், ஜூன் 30, 2025

தங்கிலீஷ் | "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து - காணொளி

தங்கிலீஷ் | நேற்றைய (29.06.2025) "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து காணொளியாக 👇🏽👇🏽👇🏽

பாருங்கள்! தங்கள் கருத்துக்களையும் அறியத் தாருங்கள்!😊
சரியாகத்தான் பேசியிருக்கிறேன் எனத் தோன்றினால் விருப்பக்குறியை அழுத்துங்கள்👍🏽
பயனுள்ள வகையில் பேசியிருக்கிறேன் எனத் தோன்றினால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்🔄

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (22) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (43) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (37) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (10) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (11) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்