.

சனி, ஏப்ரல் 28, 2018

ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!

5th Birthday of AgaSivappuThamizh
தோழமைசால் நேயர்களே!

இதோ, உங்கள் அகம் கவர் ‘அகச் சிவப்புத் தமிழ்’ ஐந்தாண்டுகளை நிறைவு செய்து தற்பொழுது (23.04.2018 முதல்) ஆறாமாண்டில் பேரடி வைத்திருக்கிறது. இந்த இன்னேரத்தில் ஐந்தாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மகிழ்ந்து விழைகிறேன்! முதலில், தளத்தின் ஐந்தாண்டு வளர்ச்சி குறித்த அடிப்படைத் தகவல்கள் இதோ உங்கள் நட்பார்ந்த பார்வைக்கு. 


பதிவுகள்
கருத்துக்கள்
பார்வைகள்
அகத்தினர்கள்★★
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
மொத்தம்
112
1405
2,70,616+
2192
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் மறுமொழிகளும் உட்பட.
** சமூக ஊடகங்களிலும் சேர்த்து.

 
நம் நேச(ர்) நாடுகள் 

இந்தியா
118885
அமெரிக்கா
71755
இரசியா
12918
பிரான்சு
7121
ஐக்கிய அரபு நாடுகள்
5362

ஐந்தாமாண்டின் தலையாய ஐந்து பதிவுகள்

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! (10679 பார்வைகள்)

2016-இல் எழுதியது இது. கடந்த ஆண்டு இரண்டாம் இடம், அதற்கு முந்தைய ஆண்டு மூன்றாம் இடம் எனப் படிப்படியாக முன்னேறி வந்தது என்றாலும் நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வந்த ‘சென்னைத் தமிழ்’ பற்றிய பதிவையே பின்னுக்குத் தள்ளி இது முதலிடம் பிடித்து விடும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மூடி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னும் ‘இன்ட்லி’ திரட்டிக்கு மக்களிடையே எவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளது என்பதையே இது காட்டுகிறது. (‘இன்ட்லி’ தளத்தினர் கவனத்துக்கு!)

காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள் (10535 பார்வைகள்)
கடந்த ஆண்டு எழுதிய இந்தப் பதிவுக்கு நினைத்துக் கூடப் பாராத வெற்றி! நடப்பாண்டிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுப் பெருவெற்றியை ஈட்டியுள்ளது. ஆழமான ஆராய்ச்சிப் பதிவுகளை விட மக்களில் ஒருவனாக இருந்து எழுதும் எளிய உண்மைகளே சிகரம் தொடும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்!

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் (10419 பார்வைகள்)
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் அசைக்க முடியாதபடி கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த இப்பதிவு இம்முறை ஒரேயடியாக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சமூகமே கொந்தளித்துக் கிடக்கும் இன்றைய சூழலில், மொழி சார்ந்த பதிவுகளை விட அரசியல் சார்ந்த பதிவுகளைப் படிக்கவே நம் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கான அறிகுறியோ இது என எண்ணத் தோன்றுகிறது!

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? (9588 பார்வைகள்)
இதுவும் புதுப் பதிவுதான். நடப்பாண்டிலேயே ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகள். ஆனால், அதில் மகிழ ஏதும் இல்லை. இல்லுமினாட்டி குறித்து நானும் நிறையவே படித்திருக்கிறேன். அது தொடர்பான பல குற்றச்சாட்டுகளும் தகவல்களும் உண்மை என நானும் நம்பத்தான் செய்கிறேன். ஆனால், இல்லுமினாட்டி எனும் பெயரை வைத்து வாய்க்கு வந்தபடி கட்டி விடப்படும் கதைகள் இங்கு ஏராளம் ஏராளம்! பெரியார் முதல் பக்கத்து வீட்டுப் பெரியம்மா வரை எல்லாரும் இல்லுமினாட்டிகள்தாம் எனக் குற்றம்சாட்டும் பாரிசாலன் போன்றோரின் அண்மைக்காலப் புரட்டுகளால் இல்லுமினாட்டி எனும் சொல் கற்பனைக்கெட்டாத அளவுக்கு விளம்பரம் பெற்றுள்ளது. அதன் விளைவாகத்தான் இந்தக் கட்டுரையும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தேவையில்லாத பதிவு ஒன்றை எழுதி விட்டோமோ என வருந்துகிறேன்!

தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்! (6509 பார்வைகள்)
எழுதி மூன்று ஆண்டுகள் ஆன பதிவு. மிகவும் சிந்தித்து எழுதிய இது உரிய வரவேற்பைப் பெறவில்லை என்கிற மனக்குறை இருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாய்க் கடந்த ஆண்டில் ஒரு நாள் திடீரென இப்பதிவு ஒரே நாளில் 4000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. ஏன், எப்படி என இன்றும் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், காலம் கடந்தாவது இப்பதிவு ஓரளவுக்கு மக்களைச் சென்றடைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி!

மனம் கமழும் நினைவுகள்

The Memories which make the Heart to be fragrance
கடந்த ஆண்டின் குறிப்பிட வேண்டிய முதல் நிகழ்வு, பார்வை எண்ணிக்கையின் திகுதிகு முன்னேற்றம்! வலைப்பூவின் மொத்தப் பார்வை எண்ணிக்கையே 2,70,616-தான். இதில் ஏறக்குறைய பாதியளவு பார்வை – அதாவது, 1,02,224 பார்வைகள் - கடந்த ஒரே ஆண்டில் கிடைத்திருக்கின்றன. கனவிலும் காணாத முன்னேற்றம் இது!

பெரும்பாலான பதிவுகள் நாட்டு நடப்புத் தொடர்பானவையாக இருந்ததும், அதுவும் நிகழ்வு நடந்ததை ஒட்டி ஓரளவுக்கு உடனுக்குடன் எழுதியதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். அப்படி இருந்தால், எழுத்துத்திறமையில் நான் கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன் எனப் பொருள். ஒருவேளை கமல், ரஜினி என நடிகர்களைப் பற்றிய பதிவுகளை அதிகம் எழுதியதால்தான் இவ்வளர்ச்சி என்றால் நம் சமூகம் இன்னும் முன்னேறவில்லை எனப் பொருள்.

அடுத்ததாக, ‘கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்?’ கட்டுரை தொடர்பாகச் சுவையான ஒரு நிகழ்வு. இந்தப் பதிவை நான் வலைப்பூவில் எழுதியதும் ‘பாக்யா’ இதழில் பணியாற்றும் நண்பர் ஸ்ரீராம் அவர்கள் படித்துவிட்டு மிகவும் பிடித்துப் போய், இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம் சிறப்பு ஒப்புதல் பெற்று அடுத்து வந்த பாக்யா இதழில் இதை வெளியாகச் செய்தார். என் வலைப்பூவில் வந்த ஒரு கட்டுரை, அதன் பின் அச்சு இதழ் ஒன்றால், அதுவும் நான் சிறு வயதில் விரும்பிப் படித்த இதழால் ஏற்று வெளியிடப்பெற்றது மிக்க மகிழ்ச்சி அளித்தது!

இதற்கு அடுத்ததும் ‘பாக்யா’ இதழ் தொடர்பானதுதான். கடந்த ஆண்டு, வாட்சப்புக் குழு ஒன்றின் மூலம் அறிமுகமான ஸ்ரீராம் அவர்கள் பாக்யாவுக்காகச் சிறுகதை எழுதி அனுப்புமாறு கேட்டார். உடனே எழுத ஏதும் தோன்றாததால், ஏற்கெனவே எழுதிக் குறிப்பேட்டில் இருந்த புத்தம் புதிய பூமி எனும் ஒரு பக்கக் கதையைச் செதுக்கி, நீட்டித்துச் சிறுகதையாக அனுப்பி வைத்தேன். ஏப்ரல் 28 – மே 4, பாக்யா இதழில் வெளியான இக்கதை, பின்னர் ஆகஸ்டு மாதம் நம் வலைப்பூவிலும் வெளியாகி நண்பர்கள் பலரிடமும் பாராட்டுப் பெற்றது.

அடுத்து, என் பல்லாண்டுக் கால ஆராய்ச்சியைக் கடந்த ஆண்டில் வெற்றிகரமாக உங்கள் பார்வைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது பற்றிச் சொல்ல வேண்டும்.

“தமிழர்கள் இந்துக்களா?” - இந்தக் கேள்விக்கான விடையை நான் மிகச் சிறு வயதிலிருந்தே தேடிக் கொண்டிருந்தேன். எனக்குப் பதினான்கு வயதாக இருந்தபொழுது என் பெரியப்பா மறைந்தார். அப்பொழுது வீட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுச் சடங்குகள் பல இது தொடர்பான விடைகளுக்கு வாசல் திறந்து வைத்தன. அப்பொழுது தொடங்கிய அக ஆராய்ச்சி துளித் துளியாக முன்னேறி, சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முடிவான விடை கிடைத்தது. அதைப் பற்றி எழுத நினைத்து, சரியாக இருக்குமோ இல்லையோ என்று தயங்கிக் கொண்டே இருந்தேன். அப்பொழுதுதான் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ எனும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கில் 2015ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதையடுத்து, ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்கள் தான் நடத்தி வரும் ‘தமிழ்க் காப்புக் கழகம்’ மூலம் தனது ‘அகரமுதல’ தனித்தமிழ் இணைய இதழில் ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்தார்.

என் ஆராய்ச்சி முடிவை அமிலச் சோதனை செய்வதற்கான வாய்ப்பாக அந்தப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டேன். இதற்காக நான் எழுதி அனுப்பிய கட்டுரை இரண்டாம் பரிசை வென்றது. ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் பரிசிலாக ரூ.3000/- தொகையை வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்கள் வழங்கினார்; திருவள்ளுவர் ஐயாவும் பாராட்டினார். இந்தக் கட்டுரையைத்தான் கடந்த ஆண்டு ‘எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு எனும் தலைப்பில் வெளியிட்டேன். எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு வரவேற்பைப் பெற்ற இப்பதிவு, எனக்கு மிகவும் பிடித்த தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் பாராட்டையும் பெற்றது.

இதுவரையான வாழ்வில் நான் எழுதியவற்றிலேயே மிக மிக முக்கியமானது என்றால் அஃது இதுதான்! தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பதற்கான சான்றாக, இதுவரை யாருமே சொல்லாத ஒன்றை இதில் சொல்லியிருக்கிறேன். தமிழர்களின் அன்றாட வாழ்விலிருந்தே இதற்கான அசைக்க முடியாத அத்தாட்சியை எடுத்துக் காட்டியிருக்கிறேன். தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒருமுறை இதைப் படித்துப் பார்க்க வேண்டுமாய்க் கோருகிறேன்!

அடுத்து நான் சொல்ல விழைவது, ‘காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள்’ எனும் பதிவு பற்றி. கடந்த ஆண்டு, சென்னை இராதாகிருட்டிணன் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நடந்த முறைகேடான பணப்புழக்கமும் அதையே அடித்தளமாகக் கொண்டு தினகரன் பெற்ற மாபெரும் வெற்றியும் மக்களாட்சியின் மீது நம்பிக்கையுள்ள அனைவரையுமே முகம் சுளிக்கச் செய்தன. எனக்கும் அதில் மாற்றுக் கருத்து அறவே இல்லை. அதே நேரம், நடந்த குற்றத்துக்கு அந்தப் பகுதி மக்கள் மீதே முழுப் பழியையும் சுமத்தியது பொறுப்பற்றதனமாகவும் தப்பித்துக் கொள்ளும் போக்காகவும் எனக்குத் தோன்றியது. அதற்காகவே நான் எழுதிய இந்தப் பதிவு இதுவரை வேறெந்தப் பதிவும் அடையாத அளவுக்கு ஆகப் பெரும் வெற்றியைக் கொய்தது! எழுதிய ஓரிரு மாதங்களிலேயே 9000க்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்தது! மூளையிலிருந்து வரும் சொற்களை விட நெஞ்சத்திலிருந்து வரும் சொற்களே அடுத்த நெஞ்சத்தை எளிதில் கவரும் என்பதை உணர வைத்த வெற்றி இது.

இதற்கு அடுத்து, கடந்த ஆண்டு வந்த முக்கியமான ஒரு கருத்தைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். பெண்ணியம் - இது திருக்குறளில் இல்லாத புதிய அதிகாரம்! எனும் தலைப்பில் ஒரு பதிவை இக்காலக்கட்டத்தில் வெளியிட்டிருந்தேன். குறட்பா வடிவிலான (அப்படி நானாக நினைத்து எழுதிய) இந்தப் பதிவு குறித்துக் கருத்துரைத்த புகழ் பெற்ற பேச்சாளரும் எழுத்தாளருமான நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் அது குறள் வெண்பாவே இல்லை என்றும் அப்படி இலக்கணம் பிறழ எழுதுவது தவறு என்றும் உரிய காரணங்களோடு விளக்கினார். ஐயாவின் அன்பான வழிகாட்டுதலுக்குத் தலைவணங்கி உடனே அப்பதிவில் உரிய விளக்கத்தைச் சேர்த்தேன். அவர் மட்டும் அதை அத்தனை தீவிரமாக எடுத்துரைத்திராவிட்டால் தொடர்ந்து அத்தவற்றை நான் கண்டிப்பாய்ச் செய்து கொண்டிருந்திருப்பேன்; என்னைப் பார்த்துப் பலரும் அதையே செய்திருக்கவும் வாய்ப்புண்டு. பெரிய கெட்ட பெயருக்கும் தலைக்குனிவுக்கும் ஆளாகாதபடி என்னைக் காப்பாற்றிய ஐயா அவர்களின் அந்த அறிவுரையை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

பதிவுலகில் கடந்த ஆண்டு நடந்ததிலேயே நான் பெரிதும் வருந்தும் நிகழ்வு, ‘தமிழ்மணம்’ திரட்டி தன் வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தியதுதான். தமிழ்த் திரட்டிகளின் துருவ விண்மீனாக என்றென்றும் திகழ்ந்த ‘தமிழ்மணம்’ கூடத் தன் சேவையை நிறுத்தும் என இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் கேட்பவர்கள் சிரித்திருப்பார்கள். ஆனால், தமிழ்ப் பதிவுலகின் திரட்டிச் சேவையைப் பீடித்த தோல்வி கடைசியில் தமிழ்மணத்தையும் கொஞ்சம் பதம் பார்த்துத்தான் விட்டது எனத் தோன்றுகிறது. அதே நேரம், வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தினாலும், தமிழ்மணம் தளத்தில் அவரவர் கணக்குக்குள் நுழைந்து இடுகைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வசதி மட்டும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாக்குப்பட்டை மூலம் அவரவர் தளத்திலிருந்தே இடுகைகளைப் பகிர்ந்து விட்டுத் தமிழ்மணம் தளத்துக்கே நாம் செல்லாமல் இருக்கும் சூழலை மாற்றுவதற்கான நடவடிக்கை மட்டுமே இது; மற்றபடி, தமிழ்மணம் தொடர்ந்து இயங்கும் என நம்புவோமாக!

முத்தாய்ப்பாக நான் கூற விரும்புவது என்னவென்றால், இந்தாண்டு நம் வலைப்பூவுக்கு கூகுள் ஆட்சென்சு கிடைத்தது. அதுவும் விண்ணப்பித்த மூன்றே நாட்களில் கிடைத்து விட்டது எனக்கு அளவிலா மகிழ்ச்சி! இந்த மகிழ்ச்சி, இனி பணம் கிடைக்கும் என்பதால் இல்லை. அப்படிப் பணத்துக்காக நான் இந்த வலைப்பூவை எழுதுவதாக இருந்தால் தமிழுக்கு ஆட்சென்சு ஏற்பிசைவு கிடைக்கும் வரை நான் காத்திருந்திருக்க வேண்டியதில்லை; வேறு வழிமுறைகள் உண்டு. மகிழ்ச்சிக்குக் காரணம் தமிழுக்கு ஆட்சென்சு சேவை கிடைத்த புதிதிலேயே, எத்தனையோ பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்த நிலையில் எனக்கு மூன்றே நாளில் ஏற்பு கிடைத்து விட்டதே என்பதால்தான். மேலும், இதுவரையில் என் படைப்புகள் என் மீதான அன்பின் அடிப்படையிலும் படைப்பின் திறம், தரம் சார்ந்தும் பலமுறை பல மதிப்பீடுகளைப் பெற்றிருக்கின்றன. இப்பொழுது கூகுள் ஆட்சென்சு கிடைத்ததன் மூலம் பொருளாதார அடிப்படையிலும் என் படைப்புகளுக்கு மதிப்பு உண்டு என உறுதியானதில் மிகுந்த மகிழ்ச்சி!

இதே மகிழ்ச்சி மற்ற தமிழ்ப்பதிவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம்! தமிழின் பிற வடிவங்களான இயல், இசை, நாடகம், ஊடகம் போன்றவற்றுக்கெல்லாம் பெரிய பொருளாதார மதிப்புகள் உள்ளன. ஆனால், நான்காம் தமிழான இணையத்தமிழுக்கு அப்படி ஒன்று இதுவரை இல்லாமல் இருந்த குறையைப் போக்கும் விதமாக கூகுள் ஆட்சென்சு சேவை தற்பொழுது தமிழுக்குக் கிடைத்துள்ளது. எனவே தாங்கள் வளம் பெறுவதற்காக இல்லாவிட்டாலும் நான்காம் தமிழ் நலம் பெறுவதற்காகவாவது நம் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கூகுள் ஆட்சென்சுக்கு விண்ணப்பிக்க வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்!

இவை தவிர, இதுதான் ரஜினி அரசியலா? கட்டுரையில் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் அதைச் ‘சிறந்த அலசல் பதிவு’ என்று பாராட்டியது, இதற்கு முன் நம் வலைப்பூவில் வேறெந்தப் பதிவும் பெற்றிராத அளவுக்குத் ‘தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்!’ பதிவு கடந்த ஆண்டில் ஒரே நாளில் 4000+ பார்வைகளை அள்ளியது, இப்பதிவுகள் வெளியானபொழுது வலைப்பூவிலும் கீற்று இதழிலும் நேயர்களோடு நடந்த உரையாடல்கள் - கருத்து மோதல்கள் ஆகியவையும் என் மனம் கமழும் நினைவுகள்!

நவில்கிறேன் நனி நன்றி!

இணையத்தில் எத்தனையோ வலைமலர்கள் இருக்க இந்த மலரையும் நாடி வந்து சுவை பார்த்து மகரந்தம் பரப்பும் தமிழ்த் தேன்சிட்டுக்களே!

இந்த மலரைத் தொடர்ந்து முகர்ந்து வரும் புதிய, பழைய அகத்தினர்களே!

தங்கள் வலைப்பூப் பட்டியலில் இந்தப் பூவையும் சரம் கோத்து மணம் பரப்பித் தரும் எனதருமை வலையுலகத் தோழர்களே!

தொடர்ந்து என் படைப்புக்களை வெளியிட்டும், அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துரைத்து என்னைச் செம்மைப்படுத்தியும் வருகிற கீற்று, அகரமுதல இதழ்களின் ஆசிரியர்களே!

பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என் பெயரை அச்சு இதழொன்றில் கண்டு மகிழ வாய்ப்பளித்த ‘பாக்யா’ ஸ்ரீராம் அவர்களே!

சரியான நேரத்தில் என் தவற்றைச் சுட்டிக்காட்டி என்னை நல்வழிப்படுத்திய முத்துநிலவன் ஐயா அவர்களே!

இப்பதிவுகளைப் படைக்கப் பல்வேறு வகைகளிலும் உதவியும் ஊக்கமும் அளித்த நண்பர்களே, உறவினர்களே, குடும்ப உறுப்பினர்களே!

எதிர்ப்பு எனும் பெயரில் என்னை மேன்மேலும் உசுப்பி விடும் இனிய எதிரிகளே!

இப்படி மக்கள் பார்வை கொட்டிக் கிடைக்க வழி செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றை நடத்துபவர்களே!

தளத்தின் ஆக்கமும் தேக்கமும் அறிந்து சீர்தூக்க உதவும் தரவகச் சேவைத் தளங்களை (Data Analyzing Sites) நடத்துபவர்களே!

பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனத்தினரே!

பதிவுகளை மெருகூட்டப் படங்களையும் செறிவூட்டத் தகவல்களையும் அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள் ஆகியவற்றின் ஆக்குநர்களே!

எல்லாவற்றுக்கும் மேலாய், அருந்தமிழ்த் தாய் வளர்க்க பிளாகர் எனும் இந்த அருமையான சேவையை, தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி, போதாததற்குக் கடந்த ஆண்டு முதல் இதற்குப் பொருளாதாரம் சார்ந்த முக்கியத்துவத்தையும் அளிக்க முன்வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தினரே!

உங்கள் அனைவருக்கும்...

இன்னும் இங்கு நான் யாரையாவது குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...

Hearty and Sweety Thanks!

காணிக்கை!

படைப்பாற்றல் வளர்க்க இதழ்களும்

அறிவாற்றல் வளர்க்க நூல்களும்

வாங்கி வாங்கிக் கொடுத்து

என் திறமையை உலகுக்குக் காட்ட

கணினி, இணையம் என

எல்லா ஏற்பாடுகளும் செய்தளித்து

இவ்வளவும் போதாதென

என் படைப்புகளுக்கான

ஆகச் சிறந்த திறனாய்வாளனாகவும் விளங்கும் 

எனதருமை இளவல்...

என்னைக் காட்டிலும்

என் மீது

அதிக அக்கறை கொண்ட

பிறவித் தோழன்...

நான் எழுதும்

ஒவ்வோர் எழுத்துக்கு முன்னாலும்

தலைப்பெழுத்தாய்த் திகழும்

என் உயிரினும் இனிய உடன்பிறப்பு...

ஜெயபாலாஜிக்கு

இவ்வாண்டின் பதிவுலகப் பெருவெற்றியைக்

காணிக்கை ஆக்குகிறேன்! 

My Brother E.Jayabalaji

படங்கள்: நன்றி ஷபிகுல் வீடியோ ஸ்டுடியோ, வால்பேப்பர் ஸ்டாக், யாழ் மடலாடற்குழு.

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (87) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (35) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (21) இனம் (44) ஈழம் (43) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கவிஞர் தாமரை (1) கவிதை (17) காங்கிரஸ் (6) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (10) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (29) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (2) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (1) திரையுலகம் (8) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (10) நிகழ்வுகள் (2) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (5) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (21) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (1) போட்டி (1) போர் (1) போராட்டம் (9) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மணிவண்ணன் (1) மதிப்புரை (3) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (5) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (1) Hindu (1) Karnataka (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்