.

சனி, ஜூன் 27, 2026

திரைக்கதை மன்னனுக்குப் புகழஞ்சலி!

Screenplay King Bhagyaraj-Tribute
 

கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் என 'நாலும் தெரிந்த' ஒருவரை இன்று இழந்திருக்கிறோம்!😭

பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1️⃣ ஒன்று, நாயகரை (protagonist) மையமாகக் கொண்ட படம்.

2️⃣ அடுத்தது, கதையை மையமாகக் கொண்ட படம்.

தொண்ணூறுகளில் பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற பெரிய இயக்குநர்கள் ஒருபுறம் கதையை மையமாகக் கொண்ட படங்களைப் படைத்து வந்தனர். மறுபுறம் ரஜினி, கமல், விஜயசாந்தி போன்றோரை வைத்து நாயகரை மையமாகக் கொண்ட படங்களும் வந்து கொண்டிருந்தன.

ஆனால் இந்த இரண்டு வகைக்கும் நடுவில், கதை - நாயகர் இரண்டுக்கும் சரிசம முக்கியம் கொடுத்துப் புதுமையான வகையில் படங்களை வழங்கியவர் பாக்யராஜ்.

அவர் படங்களிலும் நாயகன் சண்டை போடுவான், எதிரிகளை அடித்து நொறுக்குவான். ஆனால் படத்தில் அவன் பெறும் இறுதி வெற்றி, உடல்வலிமையால் பெற்றதாக இருக்காது. அவனுடைய அறிவுக்கூர்மையாலோ ஈக (sacrifice) மனப்பான்மையாலோ பெற்றதாகத்தான் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, 'ஆராரோ ஆரிரரோ', 'ராசுக்குட்டி' ஆகிய படங்களைச் சொல்லலாம்.

பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான எனக்கு, "நாயகன் என்பவன் நாலு பேரை அடித்துத் துவைப்பவன் இல்லை. நாலும் தெரிந்த அறிவாளிதான் உண்மையான நாயகன்" எனத் திரும்பத் திரும்பச் சொன்ன இவரது படங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

தமிழ்த் திரைப்பட நாயகன் என்றாலே பக்கம் பக்கமாக உரையாடல் பேச வேண்டும் என்றிருந்த காலத்தில், பேச முடியாத மாற்றுத்திறனாளியை நாயகனாக்கி, 'ஒரு கை ஓசை' என்று படம் கொடுத்தவர் கதையாசிரியர் பாக்யராஜ். 90-களில் வெளியான ஈகமே உருவான காதல் நாயகர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடி ஒரு கை ஓசையின் நாயகன் சின்னப் பண்ணைதான். பாக்யராஜ் என்பவர் எப்பேர்ப்பட்ட உலகத்தரமான கதைசொல்லி என்பதைக் காட்டும் படைப்பு இது. (விரும்புவோர் பாருங்கள் இங்கே - https://youtu.be/0F9ErB74lik?si=caNb7sIpcoMM41uy)

இன்றைய செய்மதி (AI) உலகில் யாரை வைத்து வேண்டுமானாலும் நாம் படமெடுத்துவிட முடியும். ஆனால் போதுமான கணினித் தொழில்நுட்பம் கூடப் பிறக்காத 1990-இலேயே, இறந்து போன எம்ஞ்சியாரை மீண்டும் திரையில் உலவ விட்டவர் திரைக்கதையாசிரியர் பாக்யராஜ்!

1977-இல் ஶ்ரீதர் இயக்கத்தில் எம்ஞ்சியார் நடித்து, திரைக்கு வராமல் போன 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தின் படச்சுருளைப் பயன்படுத்தி, அந்தக் காட்சிகளுக்கு ஏற்றவாறு ஒரு திரைக்கதையை எழுதி அசத்தலான ஒரு முழுப்படத்தையே உருவாக்கிக் காட்டிய சூராதி சூர எழுத்தாளர் இவர்! அதனால்தான் 'திரைக்கதை மன்னன்' என இவரைப் புகழ்கிறோம்.

'தாவணிக் கனவுகள்' படத்தின் ஒரு காட்சியில், ஒரு திரைப்படத்தின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும் எனப் பாடமே எடுத்திருப்பார் உரையாடலாசிரியர் பாக்யராஜ்!

'எங்க சின்ன ராசா' படத்தில், நாயகன் சின்னராசைச் சிறுவனாயிருக்கும் பொழுதிலிருந்தே அவன் சித்தி தவறாக வழிநடத்திக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனக்கு அடிமையாக்கிக் கொள்வதை அந்த ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பானை வனையும் காட்சியோடு ஒப்பிட்டுக் காட்டிக் கொண்டே வருவார் இயக்குநர் பாக்யராஜ். கடைசியில், சித்தி சொல்லாமலே அவள் விருப்பம் அறிந்து, பாம்பைத் தன் கையில் பிடித்து வருவான் சின்னராசு. உடனே, பானை முழுவதுமாய் உருவாக்கப்பட்டு விட்டதாகக் காட்சியமைத்து 'இயக்குநர் முத்திரை' (Directorial touch) என்றால் என்ன என்பதைக் காட்டியிருப்பார்!

இப்படித் திரைத்துறையில் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் என நான்கிலும் முத்திரை பதித்ததோடு மட்டுமின்றி பாக்யராஜ் அவர்கள் 'முந்தானை முடிச்சு' படத்துக்காக 1983-இல் பிலிம்பேர் விருது பெற்ற சிறந்த நடிகரும் கூட.

மேலும், 'பாக்யா' வார இதழை நிறுவி, நடத்தி இதழாளராகவும் திகழ்ந்தார். வாரந்தோறும் 'பாக்யா பதில்கள்' எனும் பகுதியில் நேயர்கள் கேள்விக்கு அவர் அளிக்கும் விடைகள் புகழ் பெற்றவை. இரண்டு வரிக் கேள்விக்கு ஒரு குட்டிக் கதையே சொல்லி விடை தருவார். இந்த விடைகள் பின்னர் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாகவும் வெளியாயின.

அறிவியல் செய்திகள், அயல்நாட்டில் நடக்கும் விந்தை நிகழ்வுகள் ஆகியவை பற்றிய இரண்டு தொடர்கள் பாக்யா இதழில் எப்பொழுதும் இடம்பெறும். என் மாமா மணிவண்ணன் அவர்கள் அந்த இரு தொடர்களுக்காகவே சில காலம் எனக்குத் தொடர்ந்து பாக்யா வாங்கித் தந்து கொண்டிருந்தார். பின்னாளில் அந்தத் தொடர்களைக் கிழித்து, ஒரு சிறு புத்தகமாக்கினேன். இப்பொழுதும் அது என் சேமிப்பில் இருப்பதை ஆற்றாமையோடு இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்😢

தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் அமிதாப்பச்சனை இயக்கித் தமிழன் திறமையை வடக்கன்களுக்கு அன்றே எடுத்துக்காட்டினார்.

இப்படி பாக்யராஜ் தான் தொட்ட அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட எனக்கு அவரிடத்தில் பிடித்தது அவருடைய மனிதநேயமும் சமுகச் சிந்தனையும்தான்.

மறுமணம் என்பது பெரிய அறைகூவலாக இருப்பதை 'நூறு சாமி' போன்ற படங்கள் மூலம் இன்றைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிற சமுகம் இது. ஆனால் 1989-இலேயே 'ஆராரோ ஆரிரரோ' படத்தின் மூலம், பாலியல் கொடுமைக்கு ஆளாகிக் கருவுற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் இளைஞனை நாயகனாக்கியவர் பாக்யராஜ்.

அதிலும் இறுதிக்காட்சியில் குழந்தை இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்கும்படி ஒரு காட்சி வைத்திருப்பார். படம் பார்ப்பவர்கள், "என்ன இருந்தாலும், இப்படிப்பட்ட பெண்ணை வேண்டுமானால் ஒருவன் திருமணம் செய்து கொண்டு வாழலாம். அவளுக்குப் பிறந்த குழந்தையை அவன் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? முடிவு சரிதான்" என ஒரு நிமையம் நினைப்போம். ஆனால் அடுத்த நிமையமே மறைக்கப்பட்ட குழந்தை உயிரோடு நலமாகத் திரும்பக் கிடைக்கும். அந்தப் பெண்ணோடு குழந்தையையும் முழு அன்புடன் நாயகன் ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான முடிவு.

"கொஞ்ச நேரம் உங்க புத்தி எப்படிப் போச்சு பார்த்தீங்கள்ல? ஏன், அந்தக் குழந்தையையும் அவன் வளர்க்க முடியாதா? இன்னொருத்தனுக்குப் பொறந்த குழந்தைய வேறொருத்தர் அப்பாவா இருந்து வளர்க்கறதுல என்ன தப்பு?" எனக் கேட்காமல் கேட்கும் விதமாய் அவர் வைத்த அந்தத் திருப்பமில்லாத திருப்பம் சமுகத்தின் பொதுப்புத்திக்கு பாக்யராஜ் எனும் படைப்பாளி வலிக்காமல் வலித்த சூடு!

தான் எடுத்த படம், நடித்த படம் எனப் பலவற்றில் பார்ப்பனியத்துக்கு ஒத்து ஊதும் காட்சிகளையும் பிற்போக்குக் கருத்துக்களையும் காட்சிப்படுத்தியவர்தாம் பாக்யராஜ் என்றாலும் அவருடைய பல படங்களில் மேலே சொன்னது போல் பல சமுக அக்கறை மிக்க, சாதியத்துக்கு எதிரான, முற்போக்கான பல காட்சிகளையும் பார்க்க முடியும்.

🔥 'இது நம்ம ஆளு' படத்தில் "சிவன் மனைவி பார்வதி ஒரு தாழ்த்தப்பட்ட பெண்" என வெளிப்படையாகவே வைத்த உரையாடல்...

🔥 'ஒரு கை ஓசை' படத்தில் இரட்டைக் குவளை முறையைச் சாடி வைத்த காட்சி...

🔥 'வேட்டிய மடிச்சுக் கட்டு' படத்தில் "ஈழத் தமிழர்களும் வாழப் பிறந்தவர்கள் ஐ.நா., சபையில் இதைக் கூறு" என்று வைத்த பாட்டு...

- போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.

அவருடைய படங்கள், கதைமாந்தர் வடிவமைப்பு, எழுத்தாற்றல் பற்றி எழுதிக் கொண்டே போனால் இந்தப் பதிவு இன்றைக்கு முடியாது. இருந்தாலும் இத்தோடு நிறைவு செய்கிறேன் வருத்தத்துடன்!🙏🏽

புதன், ஜூன் 10, 2026

இயக்குநர் இமயத்துக்குப் புகழஞ்சலி!


சிலைகளை வடிக்கும் சிற்பிகளுக்கிடையில்
சிற்பிகளையே படைத்த
அற்புதனே!

ஏ.வி.எம்., விசயா வாகினி என
படப்பிடிப்புக் கூடங்களுக்குள்
சிறைப்பட்டுக் கிடந்த திரைமொழியை
விடுதலை செய்ய வந்த
தமிழ்மகனே!

உலகத் திரைப்படங்களைப் பார்த்து
தமிழில் சூடுபோட்டுக் கொண்ட
இயக்குநர்களின் மத்தியில்
தமிழ் நிலத்தின் கதைகளை
உலகத் தரத்தில் சொன்ன
மண்வாசனைப் படைப்பாளியே!

உன் இனிய தமிழ் மக்களுக்கு
🙏🏽வணக்கம் கூடச் சொல்லாமல்
எங்கு சென்றாய்?😭

நீ
அடித்து அழ வைத்தவர்களெல்லாம்
இன்று
நடிக்காமலே அழுது கொண்டிருக்கிறார்கள்!
எப்பொழுது கேட்கும்
அந்தக் கரகரத்த குரலில் ஒரு
“கட், டேக் ஓகே”?

கல்லுக்குள் ஈரம் கண்டவனே
பதினாறு வயதினிலே
முதல் மரியாதை
என உன்
காதல் ஓவியங்களை நீ
அயல்நாட்டில் பிறந்து
ஆலிவுட்டில் தீட்டியிருந்தால்
உலகெங்கும்
கொடி பறந்திருக்கும்
உன் புகழ்!
வாசலில்
தவமிருந்திருக்கும்
ஆசுகார்!

மாறாக,
தீந்தமிழ் மண்ணில்
தேனியிலே பிறந்தாய்
தேனினும் இனிய
கலைத்தமிழ் சுரந்தாய்!
அது
நாங்கள் பெற்ற பேறு!
உனகென்றுமில்லை ஈறு!!

காதலும் பாசமும்
வீரமும் ஈகமும்
தமிழ் மண்ணில்
கமழும் வரைக்கும்
சப்பாணியும் மயிலும்
விருமாயியும் மாயாண்டியும்
பாலு தேவரும் சங்கரனும்
குயிலும் மலைச்சாமியும்
வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்
அவர்கள் வாழும் வரைக்கும்
உன் நினைவின்
அலைகள் ஓய்வதில்லை!🌊

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்