.
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 13, 2026

பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பொய்யா? இதோ ஆதாரம் - 'தி இந்து' நாளிதழே, மன்னிப்புக் கேள்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்பொழுது பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் 'பராசக்தி' படத்தில் காட்டியிருப்பது பொய் என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் இந்தியப் படை அலுவலர் (Ex-Army officer) தேவசகாயம் (இணைப்பு - tinyurl.com/DevasagayamInterview)

தி இந்து நாளிதழில் கடந்த சனவரி 17 அன்று வெளியாகியிருக்கும் மேற்படி செவ்வியில் (interview) அவர்  மேலும் கூறுகையில், "இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்வதும் பொய். போல்ட்-ஆக்சன் .303 ரைஃபிள் வகைத் துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இறந்தோர் எண்ணிக்கை 10 மட்டுமே" என்கிறார்.

அப்படியானால் இது என்ன தோழர்களே?👇🏽

13.02.1965 dated 'The Indian Express' says light machine guns used in Pollachi Massacre

இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது 'பொள்ளாச்சிப் படுகொலை' எனக் குறிப்பிடப்படும் மேற்கண்ட கொடூர நிகழ்வு நடந்த மறுநாள் (13.02.1965) வெளியான தி இந்தியன் எக்சுபிரசு நாளேட்டின் முகப்புப் பக்கம். (இணைப்பு: tinyurl.com/Feb13-1965-IE)

இதில் "எளிய-இயந்திரத் துப்பாக்கிச் சூடு [Light machine gun (LMG) fire]" என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பாருங்கள்!

"அப்படியே இருந்தாலும் எண்ணிக்கை தவறுதானே? நீ காட்டும் இந்தியன் எக்சுபிரசு நாளேட்டிலேயே உயிரிழந்தோர் 10 பேர் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவசகாயமும் அதே எண்ணிக்கையைத்தானே கூறுகிறார்? அப்படியானால் அவர் சொல்வது சரிதானே?" என்று நீங்கள் கேட்கலாம்.

இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மக்கள் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டால் வெறும் 10 பேர் மீதுதானா படும்? இதை நான் கேட்கவில்லை, அதே செவ்வியில் தேவசகாயமே சொல்கிறார்.

"நாங்கள் இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தால் சில பல நூறு சுற்றுகள் சுடக்கூடிய அவை நூற்றுக்கணக்கானோரைக் கொன்றிருக்கும்" என்கிறார்.

இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்று மறுநாளே வெளியான செய்தித்தாள் மூலம் இப்பொழுது நமக்கு உறுதியாகிவிட்டதால் இயந்திரத் துப்பாக்கிச் சூட்டின் விளைவு பற்றி இவர் சொல்லும் கருத்தையும் இணைத்துப் பார்க்கும்பொழுது கொல்லப்பட்டோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்திருக்கும் என்ற முடிவுக்குத்தானே நாம் வர வேண்டியிருக்கிறது? என்ன இருந்தாலும், இவ்வளவு பெரிய கலவரம் நடந்த மறுநாளே கொல்லப்பட்டோர் எண்ணிக்கை செய்தித்தாளில் சரியாக வரும் என நாம் எதிர்பார்க்க முடியாது இல்லையா?

சரியாக இதே நாளில் 61 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த நாளிதழ் இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கிறது. உண்மை இப்படி வெட்டவெளியில் இருக்கும்பொழுது, இவை எதையுமே ஆராயாமல் முன்னாள் படைவீரர் என்பதற்காக, ஒருவர் சொன்னதை அப்படியே வெளியிட்டுப் பொய்த்தகவல் பரப்பிய தி இந்து நாளிதழ் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!

இப்படி விரல்நுனியில் அனைத்து விவரங்களும் கிடைக்கும் இந்தத் தகவல் ஊழியிலேயே (information era) இவன்கள் இப்படிப் பச்சைப் பொய்யை வாய்கூசாமல் சொல்கிறான்களே, இப்படி எந்த வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் இவன்கள் என்னென்ன பொய்களைச் சொல்லியிருப்பான்கள்? எப்பேர்ப்பட்ட உண்மைகளையெல்லாம் மூடி மறைத்திருப்பான்கள்?😡

அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தேவை இன்னும் பல 'பராசக்திகள்'! தீ பரவட்டும்!🔥

படம்: நன்றி தி இந்தியன் எக்சுபிரசு, கூகுள் புக்சு

வெள்ளி, ஜனவரி 02, 2026

திருத்தணி சிராஜ் தாக்குதல்! - திரைப்படங்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா?


திருத்தணியில் வடமாநிலத் தொழிலாளர் சிராஜ் தாக்கப்பட்ட வேதனையில் வெளியிடும் காணொளி! 😟😢

திரைப்படங்களைக் குற்றம் சாட்டுவது என் நோக்கமில்லை. உண்மையில் திரைப்படங்கள் மீதான நம்பிக்கைதான் இப்படி ஒரு காணொளியை வெளியிட என்னைத் தூண்டியது.

நான் சொல்லியிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்!

சனி, ஜூன் 14, 2025

கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்!... - TOI கட்டுரைக்கு என் மொழிபெயர்ப்பு

Keeladi excavation area - Aerial view
கீழடி - வான்வழிப் பார்வை

இந்தியாவின் இரண்டாவது நகர்மயமாக்கம்: கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்! கங்கைச் சமவெளிக்கு இணையான பழமை வாய்ந்தது கீழடி என்பது உறுதியாகி விட்டது!

மூலம்: A.ரகு ராமன் | டைம்ஸ் ஆஃப் இந்தியா (13.06.2025)
இணைப்பு: https://tinyurl.com/fdmdmvf4
மொழிபெயர்ப்பு: இ.பு.ஞானப்பிரகாசன்

மதுரையில் உள்ள கீழடி அகழ்வாய்வுத் தளம் தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றில் இன்னொரு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளது. அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் நடத்திய கதிர்க்கரிமக் காலக்கணக்கீட்டால் (Radiocarbon dating), இத்தளம் கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுடன் ஒத்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.

2017-18 அகழ்வாய்வுப் பருவம் முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை தேர்ந்தெடுத்த 29 கதிர்க்கரிம மாதிரிகளுள் (Radiocarbon samples) மிகப் பழமையானது கி.மு.580-ஐச் சேர்ந்ததாகவும் அண்மையிலானது கி.பி.200-ஐச் சேர்ந்ததாகவும் உள்ளது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் நகரம் மற்றும் தொழில்மயமான குடியிருப்பு தொடர்ச்சியாக இங்கே செழித்திருந்ததைக் காட்டுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சங்கக் காலத்தைச் சேர்ந்த பெரிய செங்கல் கட்டுமானங்கள் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள நகரமயமாக்கலுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

“செங்கல் கட்டுமானங்களுக்கு மேல் கிடைத்த பெரும்பாலான மாதிரிகள் கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தையவை. ஆனால் கீழே கிடைத்த மாதிரிகள் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை” என்கிறார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகரான தொல்லியலாளர் கே.ராஜன் அவர்கள். “இதனால் கீழடி, இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலாகவும் கங்கைச் சமவெளியுடன் இணையாக வைத்துக் கருதத்தக்கதாகவும் அமைந்துள்ளது. கதிர்க்கரிமக் காலக்கணக்கீடு செய்யப்பட்ட 29 மாதிரிகளுள் 12 மாதிரிகள் அசோகன் காலத்துக்கு முந்தையதான கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக உள்ளன.”

மேலும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த இடுகாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு மண்டையோட்டின் மீது முப்பரிமாணத் தொழில்நுட்பத்தையும் (3D technology) உடற்கூற்றளவியல் அளவீடுகளையும் (anthropometric measurements) பயன்படுத்தி ஆராயும் தொல்லியலாளர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் வாழ்ந்த பண்டைத் தமிழர்களின் முக அமைப்பைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் ஒரு படி முன்னேறி இருப்பதாகத் தெரிகிறது.

“அந்த மண்டையோட்டைக் கொண்டு அதற்குரியவரின் வயது, உணவுமுறை, பாலினம், அவருடைய உண்மை முகம் ஆகியவற்றை நாங்கள் மறுகட்டமைப்புச் (reconstruction) செய்வோம்” என்கிறார் ராஜன்.

கி.மு.580-ஐச் சேர்ந்த கீழடி வாழ்க்கை முறையை மறுகட்டமைக்கும் இந்தப் பணிக்காக இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து பணியாற்றி வருகிறது. இவற்றுள் பிரிட்டனின் லிவர்பூல் பல்கலைக்கழகம், இத்தாலியின் பீசா பல்கலைக்கழகம், சிகாகோவிலுள்ள ஃபீல்டு அருங்காட்சியகம், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம், காந்திநகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), டெக்கன் கல்லூரி உள்ளிட்டவை அடங்கும்.

டெக்கன் கல்லூரி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகளைப் பகுப்பாய்வு (analysis) செய்து வருகிறது. காளைகள், எருமைகள், ஆடுகள், மாடுகள், செம்மறி ஆடுகள், நாய்கள், பன்றிகள், மறிமான்கள், புள்ளி மான்கள் ஆகிய விலங்குகளின் எலும்புகள் அகழ்வில் வெளிவந்துள்ளன. மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மனித மரபணுக்கள் (ancient human DNA), விலங்கு மரபணுக்கள் (animal DNA) ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு கீழடியிலும் கீழடி மண்டலத்தைச் சேர்ந்த கொந்தகை எனும் ஊரிலும் வாழ்ந்த பண்டைய குடிமக்களின் குடிபெயர்ச்சி, இனக்கலப்பு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இந்த அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை மூலம் ஒரே தளத்தில் இருந்து 29 காலக் கணிப்புகள் கிடைத்துள்ளன.

கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழி (Tamil-Brahmi) எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், தமிழி எழுத்துமுறையின் தோற்றத்தை கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கு இட்டுச் சென்றுள்ளன. இங்கு கிடைத்துள்ள தங்கத்தாலான, தந்தத்தாலான கலைப்பொருட்கள் (artefacts) பண்டைய தமிழர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.

கீழடி, எழுத்தறிவுடன் கூடிய ஒரு நகரமயமான குடியிருப்பாகவும் கலைஞர்களின் சமுகமாகவும் திகழ்ந்ததை இது காட்டுகிறது” என்கிறார் மாநிலத் தொல்லியல் துறைத் துணை இயக்குனர் ஆர்.சிவானந்தம் அவர்கள். “இது, கிழக்குக் கடற்கரைத் துறைமுகமான அழகன்குளத்தையும் மேற்குக் கடற்கரைத் துறைமுகமான முசிறியையும் மதுரை வழியாக இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் அமைந்திருந்த ஒரு தொழிற்சாலை மையம்.” எனினும் இந்நகரத்தின் மூலப் பெயர் இதுவரை தெரியவில்லை.

சங்க இலக்கியங்கள் வெளிநாட்டு வணிகம், நகைகள், மணிக்கற்கள் (gemstones), மாநகரங்கள், தெருக்கள், அரண்மனை போன்ற கட்டடங்கள் பற்றிப் பேசுகின்றன. “அவையெல்லாம் கற்பனைக் கதைகளல்ல, பண்டைத் தமிழரின் உண்மையான வாழ்க்கை என்பதைக் கீழடி நிலைநாட்டிவிட்டது” என்கிறார் இந்தியவியல் ஆராய்ச்சியாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள்.

கீழடியில் சுடுமண்ணாலான, தந்தத்தாலான தாயக்கட்டைகளைச் செவ்வக வடிவிலும் கனச்சதுர வடிவிலும் தொல்லியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். “இவை சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதான கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளன” என்கிறார் பாலகிருஷ்ணன்.

“கி.மு.6-ஆம் நூற்றாண்டு வரலாற்றைக் காட்டுவது கீழடி மட்டுமில்லை. கொடுமணல், பொருந்தல், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகியவற்றிலும் இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த காலக்கணிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன” என்கிறார் ராஜன். “கொற்கையில் கி.மு.785 எனும் காலக் கணிப்பும் கிடைத்துள்ளது. இதன் மூலம் சங்கக்கால நகரமயமாக்கல் மிகவும் பரந்துபட்டிருந்தது என்பது உறுதியாகியுள்ளது.”

கீழடியில் 10 பருவங்களாக அகழ்வாய்வு நடைபெற்று வந்தாலும், 110 ஏக்கர் அளவில் அமைந்த பண்பாட்டுக் குவியல்களுள் ஆய்வாளர்கள் இதுவரை 4% மட்டுமே அகழ்ந்துள்ளனர். எனவே மாநில அரசு அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவிலேயே முதன்முறையாக நிகழ்கள அருங்காட்சியகம் (onsite museum) ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

“பல காலமாகத் தொல்லியல் சார்ந்த அலட்சியத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கீழடி தமிழர்களிடையே ஆர்வத் தீயைப் பற்ற வைத்துள்ளது” என்கிறார் பாலகிருஷ்ணன். “தமிழ்நாட்டின் தொல்லியல் புரிதலை மாற்றிய முதல் தளமே கீழடிதான்” என்கிறார் ராஜன்.

கீழடி சர்ச்சை

கீழடியில் நடந்த முதல் இரண்டு அகழ்வாய்வுகளுக்குத் (2014-2016) தலைமையேற்றவரான தொல்லியலாளர் கே.அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் கீழடி கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டு வரையில் செயல்பட்டதாக 2023ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துக்கு (ASI) அறிக்கை அளித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ASI இந்தக் காலக்கணிப்பை எதிர்த்தது. இந்த இடத்தைக் கி.மு.300 வரையிலானதாகக் காலக்கணிப்புச் செய்வதுதான் (அதாவது குறைத்து மதிப்பிடுவதுதான்) சரியாக இருக்கும் என்று கூறியதோடு அதற்கேற்ப அறிக்கையைத் திருத்துமாறும் இராமகிருட்டிணனிடம் கோரியது. ஆனால் இராமகிருட்டிணன் தனது கண்டுபிடிப்பில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் (10.06.2025) ஒன்றியப் பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திரன் சிங் செகாவத் அவர்கள் இந்த அறிக்கை துறைசார்ந்த வகையில் போதுமான அளவு துணைபுரிவதாக இல்லை என்றும் அறிவியல் சார்ந்த மதிப்பீடுகள் இன்னும் தேவை என்றும் தெரிவித்தார்.

ஏன் கீழடி முக்கியமானது?

  • சங்கக் காலத்தைச் (வரலாற்றின் தொடக்கக்காலம்) சேர்ந்த செங்கல் கட்டுமானங்களின் மிச்சங்கள் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டின் அரிக்கமேடு, காவிரிப்பட்டினம், கொற்கை போன்ற மற்ற சில அகழ்வாய்வுத் தளங்களைப் போலவே கீழடியிலும்,

  • அடுக்குகளுடன் கூடிய செங்கல் கட்டுமானங்கள்
  • தொட்டி போன்ற வசதிகளுடன் கூடிய வடிகால் அமைப்புகள்
  • இரட்டைச் சுவர்களுடன் கூடிய உலைகள்
  • சுடுமண் உறைகிணறுகள்

எனப் பற்பல வகைகளிலான கட்டுமானங்கள் கிடைத்துள்ளன.

கதிர்க்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating) எப்படிச் செயல்படுகிறது?

உயிரினங்கள் காற்றில் உள்ள கரிமத்தை (Carbon) உறிஞ்சுகின்றன. இவ்வாறு உறிஞ்சப்படும் கரிமத்துள் கதிர்க்கரிம ஓரகத்தனிமமான (radioactive isotope) C-14-உம் அடங்கும். அதே உயிரினங்கள் இறந்த பிறகு, C-14 உறிஞ்சப்படுவது நின்று அந்த உயிரினம் குறிப்பிட்ட விகிதத்தில் சிதையத் தொடங்கும். ஆகவே எஞ்சியுள்ள C-14 அணுக்களைக் கணக்கிட்டு அந்த உயிரினம் இறந்த காலத்தை மதிப்பீடு செய்ய முடியும். இதற்கு முடுக்கப் பொருண்மை அலைமாலையியல் (Accelerator Mass Spectrometry) எனும் முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் C-14 அணுக்கள் நேரடியாக எண்ணிக் கணக்கிடப்படுகின்றன. வெறும் 1 கிராம் மாதிரியைப் பயன்படுத்தி ±30 ஆண்டுகள் அளவுக்குத் துல்லியமான காலக் கணிப்பை இதன் மூலம் பெறலாம்.

கீழடியில் கண்டெடுத்த பொருட்கள்

  • அகழப்பட்ட பரப்பளவு: 90 மீ., நீளம் 60 மீ., அகலம்.
  • பொருட்கள்: கண்ணாடி, சிப்பி, தந்தம், முத்து மற்றும் சுடுமண் மணிகள்
  • முத்திரைகள்
  • தாயக்கட்டைகள்
  • அடையாளம் தெரியாத செம்பு நாணயங்கள்
  • தங்க நகைகள்.

சனி, ஜனவரி 14, 2023

பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு 2054 நல்வாழ்த்துக்கள்

Pongal and Tamil New Year 2054 wishes


கச் சிவப்புத் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் நேச வணக்கம்!

இன்று பிறந்திருக்கிறது தி.பி.2054!

தொற்றுநோய்கள் ஒழிய
போர்களெல்லாம் முடிய
உலகெங்கும்
நலமும் வளமும்
மட்டுமே நிறைய
வழியட்டும் பொங்கல்!

அனைவர்க்கும் அன்பு கமழ் போகி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

படம்: நன்றி Image by Creative_hat - பிரீபிக்.

திங்கள், அக்டோபர் 10, 2022

தாய்மொழி வழிக் கல்வி - மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவுக்கு எனது கோரிக்கை

Education in Mother Tongue medium

அன்புத் தமிழர்களே! மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழுவுக்கு நான் அனுப்பியுள்ள கருத்துரு இங்கே உங்கள் பார்வைக்கு!

நீங்களும் இது போல் உங்கள் கருத்துருவை அனுப்பி வைக்கத் தேவையான விவரங்கள் கட்டுரையின் முடிவில்.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2022

மகான் - திரைப்பட மதிப்புரை | Mahaan - Cinema Review

Mahaan - Cine Review

"என்னடா இது! அவனவன் படத்தின் முதல் நாள், முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்பொழுதே இடைவேளையில் மதிப்புரை (review) எழுதிக் கொண்டிருக்கிறான். இவன் என்னடாவென்றால் வெளிவந்து 6 மாதமான படத்துக்கு இப்பொழுது எழுதுகிறானே?" என நீங்கள் நினைக்கலாம். இந்தப் படம் வந்து ஒரு மாதம் கழித்துத்தான் நான் பார்த்தேன். அப்பொழுதே துவிட்டரில் (twitter) இதை எழுதி விட்டேன். வரும் ஆகத்து 31 அன்று பிள்ளையார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக மகான் படம் சின்னத்திரையில் முதன் முறையாக (‘கலைஞர்’ தொலைக்காட்சியில்) ஒளிபரப்பாவதை முன்னிட்டு துவிட்டரில் நான் எழுதியது இங்கே உங்களின் மேலான பார்வைக்கு!  

புதன், மார்ச் 24, 2021

அதோ, அவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்! - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை

Modi with Edappadi Palanisamy and O.Panneerselvam
ன்புத் தமிழ் நெஞ்சங்களே!
அதோ அவர்கள் வருகிறார்கள்!
நம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
யார் அவர்கள்?...
கொஞ்சம் நன்றாகப் பாருங்கள்!

திருவள்ளுவர் மீது காவிக்கறை பூசியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
பெரியார் சிலையின் தலையை உடைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நம் உயர்நீதி மன்றத்தையே மயிரென்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

சல்லிக்கட்டுப் போராட்டத்தில்
நம் பிள்ளைகளை அடித்து நொறுக்கியவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தங்கை அனிதாவின்
தற்கொலையைக் கொச்சைப்படுத்தியவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்குத்
தமிழகத்திலேயே தடை கேட்டவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“கேந்திரிய வித்தியாலயப் பள்ளிகளில்
தமிழுக்கு இடமில்லை” என்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

குழந்தை ஆசிபாவைத் துடிக்கத் துடிக்கக் கொன்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தங்கை சுனோலினை வாயில் சுட்டுக் கொன்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
செய் சிரீராம் என்று சொல்ல மறுத்தவனை
உயிரோடு கொளுத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக
மனிதனை அடித்துக் கொன்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

“தமிழ்நாட்டை இருவேறு மாநிலங்களாகப் பிரித்துக் காட்டுவோம்” என்று
சூளுரைத்திருப்பவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“தமிழை விட சமற்கிருதமே மூத்தது” என்று
நாடாளுமன்றத்திலேயே நாக்கூசாமல் புளுகியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“தமிழுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்” என்று
தமிழ் மண்ணிலேயே கொக்கரித்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நம் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி வளாகத்துக்குள்
குண்டு வீசுவோம் என்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

இருமொழிக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு
இந்தித் திணிப்புக்குப் பட்டுக் கம்பளம் விரித்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வந்து
நம் அரசுக் கல்லூரிகளில் நமக்கே இடமின்றிச் செய்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
உச்சநீதி மன்றமே சொன்ன பின்னும்
ஏழு தமிழர் விடுதலையை வேண்டுமெனவே இழுத்தடிப்பவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
முகிலன், பியூஷ் மானுஷ் என்று
சூழல் காக்கப் போராடியவர்களையெல்லாம்
சித்திரவதை செய்து முடக்கியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

தேசியக் கல்விக் கொள்கை என்று சொல்லி
நம் குழந்தைகளின் கல்வியில்
மண்ணள்ளிப் போட்டவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
ஒரே நாடு - ஒரே வரி என்று
ஒரேயடியாக நம் சிறு-குறு தொழில்களுக்கெல்லாம்
மூடுவிழா நடத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நமது மாநில அரசுப் பணியிடங்களையெல்லாம்
வடமாநிலத்தவர்களுக்கு வாரி இறைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
இசுலாமிய உடன்பிறப்புகளையெல்லாம்
குழந்தை குட்டியோடு சிறையில் தள்ளக்
கட்டடம் எழுப்பிக் கொண்டிருப்பவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

ஊருக்கே சோறிட்ட உழவன் வீட்டுச் சோற்றுப் பானையை
எட்டு வழிச் சாலைக்காக எட்டி உதைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நாடாளுமன்றத்தின் முன் நம் வேளாண் பெருமக்களை
ஆடையின்றி ஓட விட்டவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மொத்த நாட்டு விலைவாசியையும் தீர்மானிக்கும் உரிமையை
எண்ணெய் நிறுவனங்களுக்கே எழுதிக் கொடுத்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மூன்று வேளை உணவு கூட இனி
பணம் படைத்தவனுக்கே என்று
வேளாண் சட்டத்தைத் திருத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

இவர்களுக்கு வாக்களிப்பதா?!
இன்னும் ஒரு வாய்ப்பளிப்பதா?!
தமிழ்நாட்டுப் பெருமக்களே!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!
நாம் வாழ வேண்டுமானால்
இவர்களைத் தோற்கடிக்க வேண்டும்! – அதற்கு
யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
நான் சொல்லத் தேவையில்லை – ஏனெனில்
அஃது உங்களுக்குத் தெரியாததில்லை!

ஏப்ரல் 6, 2021-தான்
நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!...
வாக்குரிமையே வாழ்வுரிமை!
சிந்தித்துச் செயல்படுவோம்!
நம் பிள்ளைகள் எதிர்காலம்
இன்னும் நம் விரல்நுனியில்! 

 (நான் ‘கீற்று’ இதழில் 24.03.2021 அன்று எழுதியது)

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி ஏ.என்.ஐ.

கவிதையின் கருத்து சரியானது எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளை அழுத்தி மற்றவர்களுக்கும் பகிர்வதன் மூலம் வரலாற்று முக்கியம் மிக்க இந்தத் தேர்தலில் நல்லாட்சி மலர உதவுங்கள்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

திங்கள், செப்டம்பர் 14, 2020

உயிரை மாய்த்துக் கொண்ட என் இனிய இளவல்களே! – இரு கரம் கூப்பி ஒரு வேண்டுகோள்!

Three students committed suicide due to NEET Examination
யிரை மாய்த்துக் கொண்ட என் இனிய தம்பிகளே, தங்கையே!

என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்?
என்ன முடிவு இது?
இதனால் நீங்கள் சாதித்தது என்ன?

இதோ உங்களைப் படாத பாடுபட்டுப் பெற்று வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோரைத் துடித்துத் துடித்துக் காலமெல்லாம் கண்ணீர் விடும்படி செய்திருக்கிறீர்கள். இதைத் தவிர நீங்கள் இந்தத் தற்கொலையால் வென்றது என்ன?

நீங்கள் மூன்று பேர் உயிர் விட்டு விட்டதால் இந்திய அரசு இனி மருத்துவப் பொதுநுழைவுத்தேர்வே (NEET) வேண்டா என நிறுத்தி விடப் போகிறதா?...

மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு போர்க்கொடி உயர்த்தி நம் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றப் புது வழி கண்டு விடப் போகிறதா?...

உச்சநீதிமன்றம் தானாக வழக்கெடுத்து இப்படி மாணவர்களின் உயிரையே காவு வாங்கும் அளவுக்குக் கொடுமையான ஒரு தேர்வை ஏன் நடத்துகிறீர்கள் என ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பி விடப் போகிறதா?...

இப்படி எந்த ஒரு நன்மையும் நடக்கப் போவதில்லை. மாறாக, நடக்கப் போவதெல்லாம் என்னென்ன தெரியுமா?

உயிரின் மதிப்பு தெரியாத கோழைகள் என உங்களை உலகம் தூற்றப் போகிறது. பிள்ளைகளை வளர்க்கத் தெரியாதவர்கள் என உங்கள் பெற்றோரைப் பழிக்கப் போகிறது. ஆம்! எந்தப் பெற்றோர் உங்கள் தேர்வுத் தோல்வியால் தலைகுனிந்து விடக்கூடாது என்பதற்காக நீங்கள் தற்கொலை செய்து கொண்டீர்களோ அதே பெற்றோர் காலமெல்லாம் தலைகுனிந்து நிற்கத்தான் உங்களுடைய இந்த முடிவு வழி வகுத்திருக்கிறது.

அது மட்டுமா?

“மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வில் வெல்லத் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தகுதி இல்லை. அதனால்தான் அங்கு தொடர்ச்சியாக இத்தனை மாணவத் தற்கொலைகள்” என நாட்டின் மற்ற மாநிலங்கள் நம் மாணவர்களைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றன. நாட்டுக்கே மருத்துவத் தலைநகரமாய் விளங்கும் இம்மண்ணைப் பார்த்து அடிப்படை அளவில் கூட மருத்துவத்துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் இப்படி ஏளனமாகச் சிரிக்கத்தான் உங்கள் தற்கொலை உதவியிருக்கிறது.

இது மட்டுமில்லை, “பிடித்த படிப்பு கிடைக்காவிட்டால் சாவதே மேல்” என்கிற ஒரு தவறான எடுத்துக்காட்டை நீங்கள் இதன் மூலம் முன்வைத்திருக்கிறீர்கள். மருத்துவம் மட்டுமின்றி இனி கலை, அறிவியல் என எல்லாப் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு எனச் சட்டம் வந்துவிட்ட நிலையில் உங்களுடைய இந்த முடிவு எத்தனை பேரைத் தற்கொலைக்குத் தூண்டி விடுவதாக இருக்கும் என்பதைக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீர்களா?

இப்படி நீங்களும் செத்து, பிறரையும் சாகத் தூண்டி, பெற்றோரையும் நடைபிணமாக்கி, பிறந்த மண்ணுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்திய உங்கள் தற்கொலை முடிவு சரியா? இதனால் யாருக்கு என்ன பயன்?

மருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்பதால் உயிரையே அழித்துக் கொள்ளத் துணிந்த நீங்கள் அதே துணிச்சலுடன் இந்தக் கேடு கெட்ட தேர்வுமுறைக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருந்தால் அது பயனுள்ளதாய் இருந்திருக்கும்.

“ஒரு பாடத்திட்டத்தில் படித்த நான் வேறு பாடத்திட்டத்தில் அமைந்த தேர்வில் ஏனடா என் திறமையை உறுதிப்படுத்த வேண்டும்?” என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தால் அஃது உங்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.

ஒருவேளை இப்படிப் போராடவெல்லாம் உங்களுக்கு மனமில்லாவிட்டாலும் மருத்துவக் கனவைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு துறையில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாகப் பெரிய அளவில் சாதித்து மற்றவர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக நீங்கள் வாழ்ந்து காட்டியிருக்க முடியும்.

அப்படிப் பெரிதாக எதுவும் சாதிக்காவிட்டாலும் சராசரியாக எளிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் கூட மருத்துவக் கனவில் தோல்யுற்றும் துவண்டு போகாமல் வாழ்க்கையை எதிர்கொண்ட தன்னம்பிக்கைச் சின்னமாக மற்றவர்களுக்கு நீங்கள் திகழ்ந்திருக்க இயலும்.

இப்படி எதையுமே செய்யாமல் வெறுமே உயிரைப் போக்கிக் கொண்டதன் மூலம் நீங்கள் நம் எதிரிகளுக்குத்தான் உதவி செய்திருக்கிறீர்கள், தெரியுமா?

நாட்டிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகள் நிறைந்தது நம் தமிழ்நாடு. நம் அம்மாவும் அப்பாவும் வியர்வை சிந்திச் செலுத்திய வரிப் பணத்தில் உருவான இந்த வளத்தை மற்ற மாநிலத்தவர்களுக்கு அலுங்காமல் அள்ளிக் கொடுப்பதற்குத்தான் மருத்துவ நுழைவுத்தேர்வு எனும் கபட நாடகத்தை அரங்கேற்றுகிறது இந்திய அரசு. இப்பேர்ப்பட்ட பகல் கொள்ளைக்கு எதிராகத் திமிறி எழ வேண்டிய நீங்கள், அதற்கு மாறாக இப்படிச் செத்து மடிந்தால், மாணவர்களே அது யாருக்கு ஆதாயம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

ஆகவே அன்பிற்கினிய என் தமிழ் உடன்பிறப்புகளே! உங்களை நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

எதற்காகவும் உயிரை மட்டும் விட்டுவிடாதீர்கள்!🙏 காரணம் நம் எதிரிகள் விரும்புவதே அதுதான். தமிழர்கள் வாழவே கூடாது என நினைப்பவர்கள்தாம் காலங்காலமாக இந்த மண்ணை ஆண்டு வருகிறார்கள். எனவே நீங்கள் எதிலும் வெல்ல முடியாவிட்டாலும் கவலையில்லை. வெறுமே இவர்கள் கண் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்! அதுவே வெற்றிதான்! மாறாக, உங்கள் உயிரை உரமாக்கித் தமிழ்ப் பகைவர்களை வெற்றி அடையச் செய்யாதீர்கள்!

சனி, ஜூலை 06, 2019

நிர்மலா சீதாராமனின் திடீர்த் தமிழ்ப் பற்று - காரணம் என்ன?

Nirmala Seetharaman with mocking smile and Tamil MPs with meaningful smile

நேற்று நிதிநிலை அறிக்கைத் தாக்கலின்பொழுது நாடாளுமன்றத்தில் சுவையான ஒரு நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.

தங்கள் ஆட்சியின் வரிமுறை பற்றி விளக்க முயலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூற்றிலிருந்து "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே..." எனத் தொடங்கும் பாடலை மேற்கோளாகக் காட்டி அதற்குப் பொருள் என்ன என்று கேட்கிறார். உரையின் தொடக்கத்தில் பாடலை இயற்றியவரின் பெயரை அவர் தவறாகப் படித்தபொழுது திருத்திய தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடலுக்குப் பொருள் கூறத் தெரியாமல் விழிக்க அவை சிரிக்கிறது. எதிர்வினையாகச் சிரித்தபடியே தலையாட்டுகிறார்கள் மாறனும் ராசாவும். இதோ நிகழ்வின் காணொலி கீழே.

வியாழன், மே 02, 2019

ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!

6th Birthday of your AgaSivappuThamizh
லகத் தமிழ் உள்ளங்களே, ‘அகச் சிவப்புத் தமிழின்’ ஆறாவது பிறந்தநாள் பதிவுக்கு உங்களை இன்முகத்தோடு வரவேற்கிறேன்!

ஆம், நண்பர்களே! உங்கள் அன்புக்குகந்த இந்த வலைமனை ஏப்ரல் 23, 2019 அன்று ஆறு ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்து ஏழாம் ஆண்டில் நுழைந்து விட்டது. அதையொட்டி ஆறாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டில் சந்தித்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுக்குப் பந்தி வைக்க வந்திருக்கிறேன். முதலாவதாகப் புள்ளிவிவரங்கள். 



பதிவுகள்
கருத்துக்கள்
பார்வைகள்
அகத்தினர்கள்★★
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
ஏப்ரல் 2018 -
ஏப்ரல் 2019
13
120
38949+
-183
மொத்தம்
125
1525
3,09,565+
2009
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.
▽ எண்ணிக்கையில் இறக்கம்.


நம் நேச(ர்) நாடுகள் :-P 

 
உள்ளீடு
பக்கக்காட்சிகள்
இந்தியா
132003
அமெரிக்கா
81228
இரசியா
14411
பிரான்சு
8641
ஐக்கிய அரபு நாடுகள்
5734
ஆறாமாண்டில் அதிகம் படிக்கப்பட்ட ஐந்து பதிவுகள்

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! (12016 பார்வைகள்)

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் (11361 பார்வைகள்)

காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள் (10856 பார்வைகள்)

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? (9739 பார்வைகள்)

தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்! (7460 பார்வைகள்)

வழக்கமாக, அதிகம் பார்வையிடப்பட்ட முதல் ஐந்து பதிவுகளைப் பட்டியலிடும்பொழுது அந்தப் பதிவுகள் எழுதப்பட்ட நேரம், அவை கடந்து வந்த வழி, ஈட்டிய வெற்றி குறித்தெல்லாம் எழுதுவேன். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் எழுதவில்லை. காரணம், இவை அனைத்துமே பழைய பதிவுகள். போன ஆண்டு நான் எழுதிய எந்தப் பதிவும் பெரிய அளவில் பார்வைகளைப் பெறவில்லை sad

போன ஆண்டு நான் எழுதிய பதிவுகளே மிகவும் குறைவுதான். அதுவும் மிகவும் இடைவெளி விட்டு. இதனால் முந்தைய ஆண்டு (2017-18) ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்ற நம் தளம் போன ஆண்டு (2017-18) அதில் பாதியைக் கூட எட்டவில்லை.

இருப்பினும் வலைப்பூவின் தொடக்க ஆண்டுகளில் 20, 30 எனப் பதிவுகள் எழுதிப் பெற்ற பார்வைகளைக் காட்டிலும் இது கூடுதல்தான். அன்று அத்தனை பதிவுகள் வெளியிட்டு முப்பதாயிரம், முப்பத்தையாயிரம் எனக் கிடைத்த பார்வைகள் இன்று வெறும் 13 பதிவுகளை வெளியிட்டும் சற்றேறக்குறைய அதே அளவிலான பார்வைகளை ஈட்டுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த அளவுக்கு இன்று இந்தத் தளம் மக்களிடையே போய்ச் சேர்ந்திருப்பதுதான் என நினைக்கிறேன். புதிதாக ஏதும் எழுதாவிட்டாலும் முன்பு எழுதிய பதிவுகள் அடைந்த புகழ் தொடர்ந்து இந்தத் தளத்துக்கு மக்களை அழைத்து வந்து கொண்டேயிருக்கிறது என்பதைப் பார்க்கையில் நானும் ஏதோ பயனுள்ள வகையில் எழுதித்தான் இருக்கிறேன் என எண்ணி மகிழ்கிறேன்.

இறங்குமுகப் பயணத்திலும் சில மறக்க முடியா நினைவுகள்

கடந்த ஆண்டுப் பதிவுலகப் பயணம் இப்படி இறங்குமுகமாக இருந்தாலும், சில மறக்க முடியா நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை. வெற்றி என்பது வெறும் பார்வை எண்ணிக்கையில் மட்டும் இல்லை அன்றோ? அதைத் தாண்டி வேறு சில வெற்றிகளை இந்தாண்டு சந்தித்தேன். கூடவே, வழக்கம் போல் சில கசப்பான நிகழ்வுகளும் உண்டு. உண்மையில், இவற்றைப் பதிவு செய்யவே இந்தப் பிறந்தநாள் பதிவு.

கடந்த ஆண்டு நெஞ்சை நொறுங்கச் செய்த முதல் நிகழ்வு ஸ்டெர்லைட் படுகொலை. அந்தப் படுகொலையை விடப் பெருங்கொடுமை, அதைத் தட்டிக் கேட்டவர்களே கூட “மக்கள் வரம்பு மீறவில்லை. எனவே சுட்டது தவறு” என்பதாகவே திரும்பத் திரும்ப வாதாடியதுதான். இது, “மக்கள் வரம்பு மீறியிருந்தால் சுட்டது சரியே” என மறைமுகமாகச் சொல்வது போல் இருந்தது. எனவே இது தவறு; மக்கள் வன்முறையில் இறங்கினால் கூட அதை இரப்பர்க் குண்டு, கண்ணீர்ப் புகை போன்றவற்றின் மூலம் அடக்கத்தான் முயல வேண்டுமே ஒழிய, சுட்டுக் கொல்லக்கூடாது என்று வலியுறுத்தி ‘ஸ்டெர்லைட் படுகொலை! - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி!’ என்ற பதிவை எழுதினேன்.

இதைத் துவிட்டரில் படித்துவிட்டு, நான் பெரிதும் வியக்கும் தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் (KRS) அவர்கள் தன் நண்பர்களுக்கும் பகிர, அதுவரை துவிட்டரில் என்னுடைய வேறெந்த வலைப்பதிவும் பெறாத அளவுக்கு 55 விருப்பக்குறிகளும் 69 மறுகீச்சுகளும் பெற்றுப் பரவலான கவனத்தை ஈர்த்தது இப்பதிவு.

இத்தோடன்றி, பதிவுலகத் தோழர் ‘கூட்டாஞ்சோறு’ செந்தில்குமார் அவர்கள் ‘மக்களைக் கொலை செய்ய அரசுக்கு உரிமை இருக்கிறதா?’ எனும் தலைப்பில் இதைக் காணொலியாக வெளியிட அஃது ஏறக்குறைய 2000 பார்வைகளைப் பெற்றது. 

 
ஆனால் இவற்றையெல்லாம் விட, இனியாவது அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் மக்கள் அதை எதிர்த்துச் சரியான கேள்விகளை எழுப்ப இப்பதிவு ஒரு சிறு தூண்டுதலாக அமைந்தால், அப்படி ஒரு மாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் அதுவே எனக்கு உண்மையான மகிழ்ச்சி.

கடந்த ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவை ஒட்டி சமூக ஊடகங்களில் தமிழ்த் தேசியவாதிகள் – திராவிடவாதிகள் சொற்போர் மீண்டும் உச்சம் அடைந்தது. தமிழினப் படுகொலையின்பொழுது கருணாநிதி நடந்து கொண்ட விதத்தை நினைவூட்டித் தமிழ்த் தேசியவாதிகள் மீண்டும் திட்ட, அதை எதிர்த்துத் திராவிடவாதிகள் பச்சையான புளுகுகளை அவிழ்த்து விட மிகவும் கீழ்த்தரமாகப் போனது.

எனவே கருணாநிதி மீதான இந்தக் குற்றச்சாட்டை முறையாக எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்ன செய்தால் இந்தப் பழி அவரை விட்டு நீங்கும் என்பதைச் சொல்லும் விதமாய்க் ‘கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?’ எனும் கட்டுரையை எழுதினேன். உண்மையிலேயே உளமார்ந்த அக்கறையோடு எழுதிய இந்தப் பதிவைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் துவிட்டரில் பெரும்படையாய் வந்து சண்டை பிடித்தார்கள் திராவிடவாதிகள். எவ்வளவு பேசினாலும் என்னை மடக்க முடியவில்லை என்றானதும் தங்கள் மனதில் இருந்த சாக்கடையையும் என் மேலே வாரி வீசி விட்டுப் போனார்கள்.

பச்சைப் பொய்களையே எதிர்வாதங்களாய் முன்வைத்த இவர்களின் பேச்சை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், யாருக்காக இதை எழுதினோமோ அவர்களே சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே, அந்த அளவுக்குத் தவறான கோணத்தில் எழுதி விட்டோமோ என்று வருந்தினேன். அந்த நேரத்தில்தான் வந்தது அந்த மடல்! தலைசிறந்த பெரியாரியவாதியும் முதிர்ந்த பகுத்தறிவாளருமான ‘கீற்று’ இதழின் ஆசிரியர் நந்தன் அவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு “இதை ஏன் கீற்றிற்கு அனுப்பவில்லை, தோழர்?” என்று உரிமையோடு கேட்டிருந்தார்.

Keetru Nandhan mail for ask that why I did not send the "Solution for the treacherous accusation against Karunanidhi" article to Keetru

அவருடைய அந்த மடல் இந்தக் கட்டுரையால் எனக்கு ஏற்பட்ட அத்தனை காயங்களையும் ஒரு நொடியில் போக்கியது. திராவிட இயக்கச் சிந்தனைகளில் வெகுவாக ஊறியவர், கருணாநிதி போன்ற திராவிடத் தலைவர்கள் இந்த சமூகத்துக்கு எந்த அளவுக்கு முக்கியமானவர்கள் என்பற்றையெல்லாம் நன்கறிந்தவர் நந்தன் அவர்கள். அவரே இந்தக் கட்டுரை தன் இதழில் வெளிவந்திருக்க வேண்டும் என விரும்பிக் கேட்கிறார் என்றால் அதை விட ஒரு நற்சான்றிதழ் இதற்குத் தேவையில்லை. இது தமிழ்த் தேசியச் சார்புத்தன்மை காரணமாகவோ கருணாநிதி மீதான காழ்ப்புணர்வு காரணமாகவோ எழுதப்பட்டது இல்லை; ஈழ இரண்டகக் (துரோகக்) குற்றச்சாட்டை முறையாகத் தி.மு.க., எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டதுதான் என்பதற்கு நந்தன் அவர்களின் அந்த ஒரு வரி மடலே போதுமானது.

இதற்கு அப்புறம் செப்டம்பர், அக்டோபர் மாதமெல்லாம் அலுவல்கள் மூச்சு முட்ட இருந்ததால் புதிதாக ஏதும் எழுத நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஏற்கெனவே பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து ‘இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்’ என்ற கருப்பொருளில் நடத்திய ‘ஞயம்பட வரை’ என்ற கட்டுரைப் போட்டியில் ௩௦.௦௧.௨௦௧௬ அன்று இடம்பெற்று வலைப்பூவில் அதுவரை வெளியிடாமல் வைத்திருந்த ‘தமிழின் இன்றைய நிலைமையும் தமிழர் நமது கடமையும்’ என்ற கட்டுரையை மேலும் செழுமையூட்டி ‘உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் வெளியிட்டேன்.

இதன் முதல் பாகத்தைப் படித்து விட்டுத் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான இராம.கி., எனும் இராமசாமி கிருஷ்ணன் ஐயா பாராட்டியிருந்தது எனக்குப் புளகாங்கிதத்தை (goose bumps) ஏற்படுத்தியது. தமிழில் அரிதினும் அரிதான வரலாற்று ஆராய்ச்சிகளையும் கற்பனைக்கும் எட்டாத சொல்லாய்வுகளையும் நிகழ்த்திய, நிகழ்த்துகிற ‘வளவு’ இராம.கி., அவர்கள் நான் கொண்டாடும் அறிஞர்களில் ஒருவர். அவரே இந்தக் கட்டுரையைப் பாராட்டி விட்டார் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் அதை விடச் சிலிர்ப்பான ஒரு பாராட்டும் இதற்குக் கிடைத்தது. இதோ நீங்களே அதைப் பாருங்கள் கீழே! 

Unforgettable feedback received for "Place of the mother tongue in Tamil lifestyle (1/2)" article

தமிழ்ப் பயன்பாடு குறித்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டுத் தன் தமிழ்ப் பயன்பாட்டுத் திறனை ஒருவர் சோதித்துப் பார்த்துக் கொள்கிறார் என்றால் அதை விட எழுதியவனுக்கு நிறைவு தருவது வேறென்ன இருக்க முடியும்? தங்கள் எழுத்து மக்களின் மனதில், வாழ்வில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எழுதும் ஒவ்வொருவரின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு! அதையே இக்கட்டுரை சாதித்து விட்டது எனும்பொழுது இதை விடப் பெரிய வெற்றி வேறு எதுவுமே இல்லை. இதுவரை நான் எழுதியவற்றிலேயே மாபெரும் வெற்றி பெற்ற படைப்பு இதுதான் என்பேன்.

இதன் பின், கடந்த பிப்ரவரி மாதம் எழுதிய ‘தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள்! - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்!’ பதிவை ‘2019 தி.மு.க., தேர்தல் அறிக்கைக் குழுவினர்’ படித்து விட்டுத் தனிப்பட மின்மடல் அனுப்பியிருந்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

“2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கு மக்களும் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்” என்று ஸ்டாலின் அறிவித்தார். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே முடிவெடுத்து விட்டேன், நானும் அனுப்புவதாக. ஈழ இனப்படுகொலையில் தி.மு.க., செய்த இரண்டகத்தால் அவர்கள் மீது மாறா வெறுப்புக் கொண்ட கோடிக்கணக்கான தமிழர்களில் ஒருவனான நான் திடீரென இப்படி ஒரு முடிவுக்கு வரக் காரணம் உண்டு. இந்த நேரத்தில் யாரும் தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பைத் தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தாவிட்டால் நாளைக்கே இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் “எங்கள் தேர்தல் அறிக்கையை வடிவமைக்கும் பொறுப்பையே நாங்கள் மக்களிடம் ஒப்படைத்தும் யாருமே தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை” எனக் கூசாமல் சொல்வார்கள் என்பதால்தான்.

அதனால்தான் பரிந்துரைகளை ஸ்டாலின் சொன்னபடி மின்னஞ்சலில் அனுப்பியது மட்டுமின்றித் துவிட்டரிலும் குறிப்பிட்ட சிட்டையின் (tag) கீழ் பொதுப் பார்வைக்கு வைத்தேன். அதுவும் போதாதென்று என்றும் இது நிலையாக மக்கள் பார்வைக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே வலைமனையிலும் பதிந்தேன்.

ஆனால் எதிர்பாராத வகையில், மின்மடலைப் படித்ததோடு மட்டும் நில்லாமல் வலைமனைக்கும் வந்து பார்வையிட்ட தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக் குழுவினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தனிப்பட்ட முறையில் விரிவாக மறுமடல் எழுதியது உண்மையாகவே மிகவும் வியப்பை அளித்தது. யார் எது சொன்னாலும் மதித்துச் செவிமடுக்கும் கட்சி எனத் தி.மு.க., பற்றி மற்றவர்கள் சொல்வது வெற்றுப் புகழ்ச்சியில்லை போலும் என்று தோன்ற வைத்தது.

பொதுவாகப் பெரிய பெரிய எழுத்தாளர்கள்தாம் “இந்த நூல் அந்தப் பதிப்பகத்தார் கேட்டதால் எழுதியது... அந்த நூல் இந்த இதழினர் கேட்டதால் எழுதியது” எனவெல்லாம் குறிப்பிடுவார்கள். ஆனால் என்னை நானே மீண்டும் மீண்டும் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் விதமாக என் வாழ்விலும் அப்படி ஒன்று நடந்தது! அதைத்தான் அடுத்துக் குறிப்பிடப் போகிறேன். அதுவும் ஒரு மின்மடல்தான். இதோ கீழே பாருங்கள்! 

Keetru Nandhan asked me to write an article for Keetru - One of the Best Moment in my life

இப்படியெல்லாம் என் வாழ்க்கையிலும் நடக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை! ஆனானப்பட்ட ‘கீற்று’ ஆசிரியர் என்னிடம் ஒரு கட்டுரை கேட்கிறார் என்றவுடன் “மவனே, எழுத்தாளனாயிட்டேடா நீ!” என்று யாரோ என் முதுகில் தட்டுவது போல் இருந்தது.

கோரிக்கை என அவர் குறிப்பிட்டாலும் அதை மாபெரும் பெருமிதமாகச் (கௌரவம்) சிரமேற்கொண்டு நான் எழுதியதுதான் ‘ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க? - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்’ எனும் பதிவு. படித்துவிட்டு நந்தன் அவர்கள் மிகவும் பாராட்டியிருந்தார்.

இவற்றுக்கிடையில் போன ஆண்டில் இரண்டு போன்மிகளையும் (memes) வெளியிட்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக இணையவுலகையே ஆட்சி செய்பவை போன்மிகளும் வாரல்களும்தாம் (trolls). நானும் கூட முன்பு சிலமுறை வெளியிட்டிருக்கிறேன். இருந்தாலும் முன் எப்பொழுதையும் விடக் கடந்த ஆண்டு இவை அதிகம் கொடி கட்டிப் பறந்ததால், அந்தத் தாக்கம் காரணமாக நானும் இரண்டு வெளியிட்டேன். சமூக ஊடகங்களில் மட்டுமே நான் பகிர்ந்து கொண்ட அவை இப்பொழுது இங்கே உங்கள் பார்வைக்கு! 




ஏப்ரல் 2018-19 எனும் இக்காலக்கட்டத்தில் பதிவுலகம் இரண்டு இழப்புகளைச் சந்தித்தது. முதலாவது ‘எனது எண்ணங்கள்’ தி.தமிழ் இளங்கோ அவர்களின் மறைவு. பலமுறை நம் வலைமனைக்கு வந்து அவர் கருத்திட்டிருக்கிறார். கடந்த ஐந்தாம் ஆண்டுப் பிறந்தநாள் பதிவில் கூட வந்து வாழ்த்தியிருந்தார். ஆனால் இந்த ஓராண்டுக்குள் அவர் நம்மை விட்டுப் பிரிந்து விடுவார் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் வருந்துகிறேன்! அவருக்கு என் அன்பார்ந்த அஞ்சலி!

அடுத்தது ‘வலைச்சரம்’ சீனா ஐயா அவர்களின் இறப்பு.

பொதுவாக யாருடைய வலைமனையையும் தொடர்ந்து படிக்கிற, கருத்துரைக்கிற வழக்கம் எனக்குக் கிடையாது. அதையும் மீறி இன்று தமிழ்ப் பதிவுலகில் என்னை நான்கு பேருக்குத் தெரியும் என்றால் அதற்கு முக்கிய காரணம் வலைச்சரம் இதழும் அதில் என்னைப் பற்றி நம் நண்பர்கள் எழுதியதும்தாம். உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ப் பதிவுலகை ஒரே குடும்பம் போல இறுகப் பிணைத்த அரும்பெருமைக்கு உரியது வலைச்சரம். அதை நிறுவிய ‘அன்பின்’ சீனா ஐயாவோடு எனக்குத் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும் இப்பேர்ப்பட்ட ஒரு சாதனையை நிகழ்த்திய அம்மாமனிதரின் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை என்னால் உணர முடிகிறது. ஐயாவுக்கு எனது உளமார்ந்த அஞ்சலி!

அதே நேரம், உலகத் தமிழ்ப் பதிவர்களுக்கான ஒரு பெரும் வலைப்பின்னலாகச் (network) செயல்பட்ட அவரது வலைச்சரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்பதையும் இங்கே வலியுறுத்திச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். தொழில்நுட்பம் சார்ந்தோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ இதற்கு என்னால் ஆகக் கூடியது ஏதும் இருப்பின் தயங்காமல் கேளுங்கள், கட்டாயம் கை கொடுக்க ஓடோடி வருவேன் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவை தவிர, இன்னோர் இழப்பும் போன ஆண்டு நடந்தது – கூகுள் பிளசின் மூடுவிழா. சக மனிதர்களை நம்பாமல் சமூக ஊடகங்களையே நம்பும் என்னைப் போன்றவர்களுக்கு இது பெரிய அடி! அகச் சிவப்புத் தமிழுக்கு வரும் பார்வைகளில் சரிபாதி கூகுள் பிளசிலிருந்துதான். அது அப்படியே பறிபோய் விட்டது. தவிர, ஏறக்குறைய இருநூறு தொடருநர்களையும் (followers) இழந்து விட்டேன் (அதனால்தான் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் இந்த ஆண்டு திடீர் இறக்கம்). தனிப்பட்ட இந்தப் பாதிப்புகளைத் தாண்டி மெய்யாகவே கூகுள் பிளசின் இந்த மூடுவிழா கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது.

மூடப்படும் செய்தி முந்தைய ஆண்டே தெரியும்; என்றைக்கு மூடப்படப் போகிறது என்பதும் முன்பே தெரியும். அப்பொழுதெல்லாம் ஏதும் தோன்றவில்லை. ஆனால் கடைசி நாளுக்கு முந்தைய நாள் இரவு, படுத்த பின் ஏனோ கொஞ்சம் வேதனையாக இருந்தது, ஒரு நல்ல நண்பனைப் பிரிவது போல. அப்பொழுது உடனே எழுந்து கூகுள் பிளசில் எழுதிய கடைசி வரிகள் இவை.

My last post in G+

வருந்தத்தக்க இத்தகைய நிகழ்வுகளுக்கிடையில் நடந்த ஒரே நல்லது, எனக்கு மிகவும் பிடித்தமான பதிவரும் அருமை நண்பருமான சகா ‘மகிழ்நிறை’ மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்தது (மூன்றாம் பிறந்தநாள் பதிவில் கூட இதையேதான் சொல்லியிருந்தேன். நான் சொன்ன நேரமோ என்னவோ மறுபடியும் பதிவுலகை விட்டுப் போய்விட்டார் அவர். இந்த முறை அப்படிச் செய்ய மாட்டார் என நம்புகிறேன்).

கலைக்குடும்பம் எனக் கேள்விப்பட்டிருப்போம். அது போல, எனக்குத் தெரிந்த ‘பதிவர் குடும்பம்’ மைதிலி அவர்களுடையது. அவரும் அவர் கணவர் கஸ்தூரிரங்கன் அவர்களும் மட்டுமில்லை அவர்கள்தம் மூத்த மகள் நிறைமதிவதனா அவர்கள் கூடப் பதிவர்தாம். ‘மைதிலியின் புன்னகை’ எனும் வலைப்பூவை நடத்தி வரும் தமிழ்ப் பதிவுலகின் குட்டிப் பதிவர்களுள் ஒருவர்! ஓரிரு வாரங்களுக்கு முன் அவருடன் பேசியில் உரையாடினேன். பொதுவாகக் குழந்தைகளோடு பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறையோடு நிறையவே பேசினேன். கூடவே மீண்டும் அவர் பதிவு எழுத வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். “நீங்க சொல்லிட்டீங்கள்ல, எழுதிட வேண்டியதுதான்” என்று அவர் தோரணையாகச் சொன்னதை மிகவும் ரசித்தேன். தவிர, “பரவாயில்ல, நீங்க கொஞ்சம் எல்லாத்தைப் பத்தியும் நல்லாப் பேசறீங்க” என்ற அவர் பாராட்டை இப்பொழுது கூட நினைத்து நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன். மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்து விட்டதால் அவரது ‘புன்னகை’யும் மறுபடி பூக்கும் என நம்புவோம்.

நன்றிக்குரியோர்!

வாட்சப், உயூடியூபு என உலகமே வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்ட இக்காலத்திலும் இந்த வலைமனைகளைத் தேடி வந்து பெருமையூட்டும் தமிழ்ப் பறவைகள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை ஆதரித்து வரும் பழைய, புதிய அகத்தினர்கள்...

தாங்கள் விரும்பிப் படிக்கும் வலைமனைகளின் பட்டியலில் இந்த மனைக்கும் ஒரு மணை அளித்துக் கவனம் ஏற்படுத்தித் தரும் எனதன்புப் பதிவுலக நண்பர்கள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டு, அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துரைப்பதன் மூலம் என்னைச் செதுக்கி வரும் கீற்று, அகரமுதல இதழ்களின் ஆசிரியர்கள்...

இப்பதிவுகளைப் படைக்கப் பல்வேறு வகைகளிலும் உதவி புரிந்த ஊக்கமளித்த என் நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள்...

என்னை அடக்க முயல்வதாக நினைத்து மீண்டும் மீண்டும் கொம்பு சீவி விடும் என் பகைச் செல்வத்துக்குரிய எதிரிகள்...

தளத்துக்குப் பார்வைகள் கிடைக்க வகை செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...

தளத்தின் உயர்வும் தாழ்வும் அறிந்து சரி செய்ய உதவும் தரவகச் சேவைத் தளங்கள் (Data Analyzing Sites)...

பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம்...

பதிவுகளை அழகூட்டும் படங்களையும் அவற்றை மெருகூட்டும் சேவைகளையும் வழங்கும் பல்வேறு இணையத்தளங்கள்...

பதிவுகளின் தரத்தை உயர்த்த உரிய தகவல்களை அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாய், தமிழ் வளர்க்க பிளாகர் எனும் இந்த அருஞ்சேவையை நமக்குத் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருவதோடு கடந்த ஆண்டு முதல் பொருளாதார முக்கியத்தையும் நமக்கு அளிக்க முன்வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தினர்...

ஆகிய அனைவருக்கும்...

இன்னும் யாரையாவது இங்கு நான் குறிப்பிடத் தவறியிருந்தால் அவர்களுக்கும்...

Thanks

காணிக்கை!

தண்டவாளத் தொடரியைப் போல்
ஒரு கட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்த
என் சிந்தனை ஊர்திக்கு
இறக்கை பொருத்திப் பறக்க வைத்தவன்...

ஒரு விதயத்தை
இத்தனை கோணங்களில் பார்க்க இயலுமா
இவ்வளவு ஆழமாக அலச இயலுமா
இப்படியெல்லாம் கூடப் பேச இயலுமா
என என்னை வியக்க வைத்தவன்...
தன்னோடு சேர்த்து என்னையும் இவ்வழிகளில்
நடக்க வைத்தவன்...

என் எழுத்துக்களில் தென்படுவதாக
இன்று பிறர் குறிப்பிடும்
நுட்பத்துக்கும் செறிவுக்கும் காரணமானவன்...
உடன் பிறவாத் தம்பி...
உளம் பிரியாத் தோழன்...
உணர்வால் குடும்ப உறுப்பினன்...
அஷ்வின் சத்யா அவர்களுக்கு
இந்த ஆண்டு பெற்ற
வலைப்பதிவு வெற்றிகளை
காணிக்கையாக்குகிறேன்!


படங்கள்: நன்றி அலேசியோடெவேச்சி, எழுத்து.காம்.
காணொலி: நன்றி எஸ்.பி.எஸ் மீடியா

முந்தைய ஆண்டுகளில்:
ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!  
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்! 

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே! 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்