இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய அன்று ஒருநாள் மட்டும் உயிரிழந்த உழவர்களின் எண்ணிக்கை எட்டு!
விவசாயிகள் உயிரிழப்பு என்பது பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், தங்க விலை நிலவரம் போல அன்றாடச் செய்தியாகி விட்டது. வாரத்துக்கு ஒருவர், ஓரிரு நாட்களுக்கு இருவர் என்று தொடங்கியது இன்று ஒரு நாளுக்கு எட்டுப் பேர், பத்துப் பேர் என்பதில் வந்து நிற்கிறது!
ஒரே நாளில் பத்துப் பேர் சாவது என்பது சாதாரண விதயமில்லை. “இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியில்லாதது. இந்த நாட்டை ஆள்பவர்கள் அடிப்படை மனிதநேயம் கூட இல்லாதவர்கள். எனவே வேறு வழியின்றிச் செத்துத் தொலைகிறோம்” என்பதுதான் தங்கள் உயிரைக் கொடுத்து இந்த நாட்டுக்கு அவர்கள் சொல்லிச் செல்லும் செய்தி. ஒரு நாட்டின் குடிமகன் தொடர்ந்து அந்நாட்டில் உயிர் வாழ முடியாமல், நாட்டை விட்டு வெளியேறவும் வழியில்லாமல் ஒரேயடியாக உயிரையே விட்டு விடுவது என்பதுதான் அந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்படுகிற உச்சக்கட்ட அறைகூவல். அதை விடத் தலைக்குனிவு ஒரு நாட்டுக்கு வேறு எதுவும் கிடையாது. ஆனால், நடுவண், மாநில அரசுகள் இந்தப் பெருங் கொடுமையை ஏதோ மட்டைப் பந்தாட்டம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதற்கு ஒரு நாடு, அரசு, மக்களாட்சி எல்லாம்?
நடுவணரசைப் பொறுத்த வரை, கொள்ளிவளித் (மீதேன் வாயு) திட்டம், பாறைவளித் (Shell gas) திட்டம், கெயில் திட்டம் என அவர்களின் மலைவிழுங்கிக் கனவுகள் பலவற்றுக்கும் பெரும் தடையாய் இருப்பவர்கள் தஞ்சை வேளாண் பெருமக்கள்தாம். எனவே, ஏற்கெனவே அண்ணன் எப்பொழுது சாவான், திண்ணை எப்பொழுது காலியாகும் எனக் காத்திருக்கும் அவர்களுக்கு நம் உழவர்கள் சாவது பற்றி எந்த வருத்தமும் இருக்க முடியாதுதான். ஆனால், தமிழ்நாடு அரசு கூட இதில் பாராமுகமாக இருப்பதுதான் தாள இயலாத கொடுமை! இதோ ஏறக்குறைய நூறு உழவர்கள் செத்து விழுந்த பிறகுதான் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவே குழு அனுப்பியிருக்கிறது மாநில அரசு. நாட்டு மக்களின் உயிர் விதயத்தில் இதை விட மெத்தனப் போக்கு இருக்க முடியுமா?
தெரியாமல்தான் கேட்கிறேன், நடுவணரசாவது காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்துத் தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் நாளை விழிக்க இயலும். ஆனால், அ.தி.மு.க-வினரே நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாளைக்குத் தஞ்சாவூர்ப் பக்கம் வாக்குக் கேட்டுப் போவீர்கள்? முழுப் பழியையும் கருநாடகத்தின் மீதே சுமத்தி விடலாம் என நினைக்காதீர்கள்! அது நடக்கவே நடக்காது.
தமிழ்நாடு அரசே!...
டெல்டா விவசாயிகளின் இன்றைய நிலைமைக்குக் கர்நாடகம் காவிரித் தண்ணீர் தராததுதான் முதன்மைக் காரணம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தமிழ்நாட்டு அரசு ஏதும் செய்யவில்லை என்பதும் உண்மை. பருவ மழை தமிழ்நாட்டை மட்டுமில்லை கருநாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மற்ற தென் மாநிலங்களையும் சேர்த்துத்தான் வஞ்சித்திருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் உழவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாகச் செத்துச் சாம்பலாகவில்லை. எனில், அந்த மாநிலங்கள் அந்தளவுக்கு முன்கூட்டி நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன எனப் பொருள். ஆனால் இங்கு, மொத்தப் பயிரும் கருகி, உழவர்களெல்லாரும் தற்கொலை செய்து கொண்டு சாகும் வரை கைகட்டிக் கொண்டிருந்து விட்டு, காவிரி நீர் இல்லாததால்தான் இப்படி நடந்தது என்றால் யார் நம்புவார்கள்? தஞ்சையிலிருந்து கண்காணாத் தொலைவிலிருக்கும் எனக்கே இது தெரியும்பொழுது களத்திலிருக்கும் அந்த வேளாண் பெருமக்கள் எப்படி நம்புவார்கள்?
எனவே, முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அவர்கள் இனி புதிதாக உழவர்கள் யாரும் உயிரிழக்காமலாவது தடுக்க முன்வர வேண்டும்! நடுவணரசும் மாநில அரசும் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலம் உழவர் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்! ஆம், இப்பொழுது தேவைப்படுவது ஒரே ஓர் அறிக்கைதான்!