இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்பொழுது பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் 'பராசக்தி' படத்தில் காட்டியிருப்பது பொய் என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் இந்தியப் படை அலுவலர் (Ex-Army officer) தேவசகாயம் (இணைப்பு - tinyurl.com/DevasagayamInterview)
தி இந்து நாளிதழில் கடந்த சனவரி 17 அன்று வெளியாகியிருக்கும் மேற்படி செவ்வியில் (interview) அவர் மேலும் கூறுகையில், "இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்வதும் பொய். போல்ட்-ஆக்சன் .303 ரைஃபிள் வகைத் துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இறந்தோர் எண்ணிக்கை 10 மட்டுமே" என்கிறார்.
அப்படியானால் இது என்ன தோழர்களே?👇🏽
இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது 'பொள்ளாச்சிப் படுகொலை' எனக் குறிப்பிடப்படும் மேற்கண்ட கொடூர நிகழ்வு நடந்த மறுநாள் (13.02.1965) வெளியான தி இந்தியன் எக்சுபிரசு நாளேட்டின் முகப்புப் பக்கம். (இணைப்பு: tinyurl.com/Feb13-1965-IE)
இதில் "எளிய-இயந்திரத் துப்பாக்கிச் சூடு [Light machine gun (LMG) fire]" என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பாருங்கள்!
"அப்படியே இருந்தாலும் எண்ணிக்கை தவறுதானே? நீ காட்டும் இந்தியன் எக்சுபிரசு நாளேட்டிலேயே உயிரிழந்தோர் 10 பேர் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவசகாயமும் அதே எண்ணிக்கையைத்தானே கூறுகிறார்? அப்படியானால் அவர் சொல்வது சரிதானே?" என்று நீங்கள் கேட்கலாம்.
இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மக்கள் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டால் வெறும் 10 பேர் மீதுதானா படும்? இதை நான் கேட்கவில்லை, அதே செவ்வியில் தேவசகாயமே சொல்கிறார்.
"நாங்கள் இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தால் சில பல நூறு சுற்றுகள் சுடக்கூடிய அவை நூற்றுக்கணக்கானோரைக் கொன்றிருக்கும்" என்கிறார்.
இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்று மறுநாளே வெளியான செய்தித்தாள் மூலம் இப்பொழுது நமக்கு உறுதியாகிவிட்டதால் இயந்திரத் துப்பாக்கிச் சூட்டின் விளைவு பற்றி இவர் சொல்லும் கருத்தையும் இணைத்துப் பார்க்கும்பொழுது கொல்லப்பட்டோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்திருக்கும் என்ற முடிவுக்குத்தானே நாம் வர வேண்டியிருக்கிறது? என்ன இருந்தாலும், இவ்வளவு பெரிய கலவரம் நடந்த மறுநாளே கொல்லப்பட்டோர் எண்ணிக்கை செய்தித்தாளில் சரியாக வரும் என நாம் எதிர்பார்க்க முடியாது இல்லையா?
சரியாக இதே நாளில் 61 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த நாளிதழ் இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கிறது. உண்மை இப்படி வெட்டவெளியில் இருக்கும்பொழுது, இவை எதையுமே ஆராயாமல் முன்னாள் படைவீரர் என்பதற்காக, ஒருவர் சொன்னதை அப்படியே வெளியிட்டுப் பொய்த்தகவல் பரப்பிய தி இந்து நாளிதழ் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!
இப்படி விரல்நுனியில் அனைத்து விவரங்களும் கிடைக்கும் இந்தத் தகவல் ஊழியிலேயே (information era) இவன்கள் இப்படிப் பச்சைப் பொய்யை வாய்கூசாமல் சொல்கிறான்களே, இப்படி எந்த வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் இவன்கள் என்னென்ன பொய்களைச் சொல்லியிருப்பான்கள்? எப்பேர்ப்பட்ட உண்மைகளையெல்லாம் மூடி மறைத்திருப்பான்கள்?😡
அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தேவை இன்னும் பல 'பராசக்திகள்'! தீ பரவட்டும்!🔥
படம்: நன்றி தி இந்தியன் எக்சுபிரசு, கூகுள் புக்சு.
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!









0 comments:
கருத்துரையிடுக