.
மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 19, 2025

மம்மது – நூல் மதிப்புரை

Mammadhu

“உன்னை நீ மேம்படுத்திக் கொள்வதே ஆகச் சிறந்த பழிவாங்கும் முறை” – என்பது இன்றைய புத்துலக வாழ்க்கைமுறையில் பெரிதும் போற்றப்படும் பொன்மொழிகளுள் ஒன்று. இதையே ஒரு கதையாகச் சொன்னால்...? அதுதான் மன்சூரா பீவி அம்மையார் எழுதியுள்ள ‘மம்மது’ புதினம்.

மன்சூரா பீவி அவர்கள் இந்திய அஞ்சல் தொலைவரித் (Postal and Telegraph) துறையில் பணியாற்றியவர். இவர் கணவர் துவிட்டர் புகழ் தமிழறிஞர் நெல்லை க.சித்திக் அவர்கள். அவர் மகுடைத் (Corona) தொற்றால் காலமான பின்னர் அன்னார் பல ஆண்டுகள் உழைத்துத் தொகுத்திருந்த ‘அயற்சொல் அகரமுதலி’ எனும் நூலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தார் பீவி அவர்கள். அப்பொழுது அவரைக் கணவரின் கனவை நிறைவேற்றி வைத்த அன்பான மனைவி என்று மட்டுமே நினைத்தேன். ஆனால் அடுத்து அவர் எழுதிய சிறுகதைகளைப் படித்த பிறகுதான் அவர் எப்பேர்ப்பட்ட எழுத்துத்திறம் படைத்தவர் என்பதை அறிய முடிந்தது.

தற்பொழுது பணியோய்வுக்காலத்தில் இருக்கும் பீவி அவர்கள் அடுத்தடுத்துத் தன் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அவற்றுள் ஒன்றுதான் மம்மது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களம். வலியகுளத்துவிளை எனும் சிற்றூரில் வாழும் இளைஞன் மம்மதும் காசிமும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இல்லை இல்லை, நண்பர்கள் ஆவதற்கு முயல்பவர்கள். ஆனால் அவர்கள் பழகக்கூடாது என்று தொடக்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புகிறது இருவர் வீட்டிலிருந்தும்.

ஓரிரு கசப்பான நிகழ்வுகளுக்குப் பின் ஒரேயடியாகப் பிரியும் இந்த நண்பர்கள், தங்கள் 18 வயதில் மீண்டும் சந்திக்கும்பொழுது காசிம் தங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையிலான மருமத்தைத் தெரிவிக்கிறான். நண்பன் மகிழ்வான் என்றெண்ணி அவன் சொல்லும் அந்தச் செய்தி மம்மதின் மொத்த வாழ்வையும் ஒரே நிமையத்தில் புரட்டிப் போட்டு விடுகிறது.

❔ காசிம் சொன்ன அந்த மருமம் என்ன?

❔ மம்மதின் குடும்பத்துக்கும் காசிம் குடும்பத்துக்கும் அப்படி என்ன பகை

❔ மொத்தமாகத் தன்னை நிலைகுலைய வைத்த அந்த உண்மையை மம்மது எப்படி எதிர்கொண்டான்?

புதன், ஏப்ரல் 10, 2024

சிற்றலை மீதமர் தும்பி – நூல் மதிப்புரை

sitralai meethamar thumbi wrapper

சிற்றலை மீதமர் தும்பி! அன்புத் தோழரான கவிஞர் ரேவதி ராம் அவர்கள் அண்மையில் வெளியிட்ட மூன்று மணமிக்க படைப்புகளுள் குட்டிப்பூ!

பொதுவாக, கவிதைகள் அதிகம் படிக்கும் வழக்கமில்லை எனக்கு. ஆனால் கவிஞர்கள் அதிகம் பழக்கமாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் கவிதைகளிலேயே எந்நேரமும் நீச்சல்.

ஆனால் குளம், ஆறு, கடல் என எவ்வளவுதான் நீந்தினாலும் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு காட்டுத் தடாகத்தில் நீந்தக் கிடைக்கும் ஒரு பகல், வாழ்நாளில் எந்நாளும் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கும். அப்படி ஒரு மறக்க முடியாத பகல்தான் சிற்றலை மீதமர் தும்பியைப் படித்தது!

பார்க்கும்பொழுதே கையில் எடுக்கத் தூண்டும் சின்னஞ்சிறு வடிவம்! ஒவ்வொரு பக்கமும் பிறந்த குழந்தை போலக் குட்டிக் குட்டியாய்க் கவிதைகள்.

முதல் பக்கத்தில் “அன்பின் அஞ்சிறைத் தும்பிக்கு” எனும் தலைப்பில் கவிதை சொட்டச் சொட்ட ஓர் அணிந்துரை எழுதியிருக்கிறார் நம் பேரன்புத் தோழரான கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள். அதில் அவர் எடுத்துக்காட்டியுள்ள கவிதைகளும் அவை பற்றிய பாராட்டுக்களும் எப்படிப்பட்ட நூலைப் படிக்க இருக்கிறோம் என்பதை முன்கூட்டியே உணர்த்தி நம் மனத்தை ஆயத்தப்படுத்தி விடுகின்றன! இதையடுத்து நம் அருமைத் தோழர், கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்கள் எழுதியுள்ள அணிந்துரையும் கவர்கிறது.

அடுத்துக் கவிஞர் எழுதியுள்ள என்னுரையில், தான் இந்த இடத்துக்கு வரக் காரணமானவர்களுள் ஒருவர் விடாமல் நன்றி நவின்றிருக்கிறார், தன் மூன்று வயது மகனுக்கு உட்பட!

காணிக்கைப் பக்கத்திலிருந்தே (Dedication page) தும்பி தன் கவிதைச் சிறகைப் படபடக்கத் தொடங்கி விடுகிறது. அப்படி என்ன காணிக்கை எழுதியிருக்கிறார்?... சொல்ல மாட்டேன், படித்து விழி விரியுங்கள்!

இதில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் இயற்கையைப் பாடுகின்றன; சில வாழ்வின் அழகியலைப் பதிவு செய்கின்றன; காதல், காமம், பெண்ணியம், நகைச்சுவை எனப் பல பாடுபொருள்களின் இடையிடையே மெய்யியல் பேசும் கவிதைகளும் நிறையவே உள்ளன! இதோ எடுத்துக்காட்டுகிறேன் ஒன்றை:

புதன், ஆகஸ்ட் 30, 2023

மாவீரன் - திரைப்பட மதிப்புரை

Maaveeran motion poster

கடந்த ஞாயிறு அன்று (27.08.2023) இந்தப் படம் பார்த்தேன்.

மிகப் புதுமையான திரைப்படம்!

‘சமுகச் சிக்கல்களைத் தட்டிக் கேட்கும் நாயகன்’ எனும் கதை தலைமுறை தலைமுறையாகப் பார்த்ததுதான். ஆனால் அதைச் சொன்ன விதத்தில் படம் தனித்து நிற்கிறது!

‘மண்டேலா’ எனும் உலகத்தரமான தூய இயல்பியப் (surrealism) படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அசுவின், அடுத்து அதற்கு முற்றிலும் எதிரான மாய இயல்பியத்தை (magical realism) இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பது தன் திறமை மீது அவருக்குள்ள அலாதியான நம்பிக்கையைக் காட்டுகிறது. மாய இயல்பியத்தை அறிவுலக மேட்டிமைத்தனம் (intellectual arrogance) இல்லாமல் மக்கள் மொழியிலேயே சொல்ல முடியும் எனக் காட்டியதற்கே இவரைப் பாராட்டலாம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2022

மகான் - திரைப்பட மதிப்புரை | Mahaan - Cinema Review

Mahaan - Cine Review

"என்னடா இது! அவனவன் படத்தின் முதல் நாள், முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்பொழுதே இடைவேளையில் மதிப்புரை (review) எழுதிக் கொண்டிருக்கிறான். இவன் என்னடாவென்றால் வெளிவந்து 6 மாதமான படத்துக்கு இப்பொழுது எழுதுகிறானே?" என நீங்கள் நினைக்கலாம். இந்தப் படம் வந்து ஒரு மாதம் கழித்துத்தான் நான் பார்த்தேன். அப்பொழுதே துவிட்டரில் (twitter) இதை எழுதி விட்டேன். வரும் ஆகத்து 31 அன்று பிள்ளையார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக மகான் படம் சின்னத்திரையில் முதன் முறையாக (‘கலைஞர்’ தொலைக்காட்சியில்) ஒளிபரப்பாவதை முன்னிட்டு துவிட்டரில் நான் எழுதியது இங்கே உங்களின் மேலான பார்வைக்கு!  

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2022

நம் பரதேசி அவர்களின் நூல்கள் - ஓர் அறிமுகம்

'Paradesi' Alfred Rajasekaran Thiyagarajan's Book releasing function notice

ரதேசி என்றதும் எல்லாருக்கும் ஏழ்மையான ஒருவரின் தோற்றம் நினைவுக்கு வரும்; சிலருக்கு இயக்குநர் பாலா அவர்களின் திரைப்படம் நினைவுக்கு வரலாம்; ஆனால் பதிவர்களான நம் நினைவுக்கு வருபவர் பரதேசி @ நியூயார்க் என்கிற வலைப்பூவை நடத்தும் ஆல்ஃபிரட் தியாகராசன் அவர்கள்.

அமெரிக்க வாழ் தமிழரான ஆல்ஃபி அவர்கள் ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக நகைச்சுவை, வாழ்வியல், சுற்றுலா, கவிதை எனப் பலதரப்பட்ட பதிவுகளை எழுதி வருகிறார். பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட இவர் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுத் தலைவராகவும் திகழ்வதில் வியப்பில்லை.

வலைப்பூவில் மட்டுமே மணம் வீசிக் கொண்டிருந்த தன் எழுத்துக்களை நூலாய் வெளியிட ஆர்வம் கொண்டு ஆல்ஃபி அவர்கள் நம் பதிவுலகப் பெருமகனார் நா.முத்துநிலவன் அவர்களை நாட, முத்துநிலவன் ஐயா என்னைக் கை காட்ட, அப்படித்தான் முகிழ்த்தது எங்கள் இருவருக்குமான நட்பு.

திருத்தப் (proof reading) பொறுப்பை நானும், தொகுக்கும் பணியைத் தோழர் கோமதி அவர்களும் அட்டை வடிவமைப்பை நண்பர்கள் சந்தோஷ், ஜெகதீஷ் ஆகியோரும் ஏற்றுக் கொள்ள வண்ணமயமான வானவில் போல இதோ ஆல்ஃபி அவர்களின் ஏழு நூல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் பரதேசி, இலங்கையில் பரதேசி, மெக்சிகோவில் பரதேசி, இஸ்தான்புல்லில் பரதேசி, போர்ட்டோ ரிக்கோவில் பரதேசி, டெக்சாசில் பரதேசி எனத் தான் சுற்றிப் பார்த்த துய்ப்புகளைப் (experience) பற்றி ஆறு சுற்றுலா நூல்களையும் 22 ஆண்டுக் கால அமெரிக்க வாழ்க்கை பற்றி நியூயார்க் பக்கங்கள் (பாகம்-1) எனும் ஒரு வாழ்வியல் நூலையும் இத்தொகுப்பில் வெளியிட்டுள்ளார் ஆல்ஃபி அவர்கள்.

கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 35ஆவது ஆண்டு விழாவில் ஓர் இணை அமர்வாக ஆல்ஃபி அவர்களின் இந்நூல்களைப் புகழ் பெற்ற எழுத்தாளரும் தென்சென்னைத் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மாண்புமிகு தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் வெளியிட சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் பெற்றுக் கொண்டது என்றென்றும் இனிக்கும் நிகழ்வு!

Famous writer Dr.Thamizhachi Thangapandian MP releasing the books written by 'Paradesi' Alfred R.Thiyagarajan and the celebrity writer Su.Venkatesan MP receiving the first copies

உங்கள் பதிவுலக நண்பர் எழுதிய இந்நூல்களை, பதிவுலகில் உங்கள் இன்னொரு நண்பனான எனக்கும் தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமான இந்நூல்களைப் படித்து மகிழுமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்!

இதில் ஒவ்வொரு சுற்றுலா நூலிலும் அந்தந்த நாடுகளையே நாம் மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. வெறும் இடங்களைச் சுற்றிக் காட்டுவதாக மட்டுமின்றி அந்த இடங்களின், நாடுகளின் வரலாற்றையே மிகச் சில பக்கங்களில் மணிச் சுருக்கமாகத் தரும் ஆல்ஃபியின் எழுத்துக்களில் இதுவரை அறியாத பல புதிய, அரிய தகவல்களை நாம் சுவைக்க முடிகிறது. மேலும் மொழி தெரியாமல், பழக்க வழக்கம் புரியாமல் ஒவ்வொரு நாட்டிலும் சிக்கிக் கொண்டு ஆல்ஃபி படும் அவதிகளை அவர் விவரித்துள்ள விதம் நம்மை விலாநோகச் சிரிக்க வைக்கிறது.

சீனாவில் பரதேசி’ நூல் இவற்றில் உச்சம்! இது வெறும் சீனா பற்றிய சுற்றுலா நூல் மட்டுமில்லை அந்நாட்டைச் சுற்றிப் பார்க்க விழையும் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் ஒருமுறை படிக்க வேண்டிய வழிகாட்டியும் கூட!

அதே போல் ‘நியூயார்க் பக்கங்கள் (பாகம்-1)’ நூல் அமெரிக்கா செல்லத் துடிக்கும் தமிழர்களுக்கான கையேடு! அங்கு நிலவும் தட்பவெப்பச் சூழல், விந்தையான பழக்க வழக்கங்கள், மேலைநாட்டு வாழ்க்கைப் பாணி, மண் மணத்தை நினைத்துப் பார்க்கும் தமிழர் ஏக்கங்கள், கடல் தாண்டியும் தாய்மொழி வளர்க்கும் தமிழர் நிகழ்ச்சிகள் என அயல்நாட்டு வாழ்வியலையும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் பாதிப்புகள் ஆகியவற்றையும் ஒரு தமிழர் பார்வையில் நகைச்சுவை கொப்பளிக்க விவரிக்கும் இந்நூல் அமெரிக்கத் தூதரகத்தின் வாசலில் தவம் கிடக்கும் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

அமேசானில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்களை நீங்கள் மின்னூல் (E-Book), அச்சுநூல் என உங்கள் வசதிக்கேற்ப எந்த வடிவில் வேண்டுமானாலும் வாங்கலாம். இதோ அதற்கான இணைப்பு - https://amzn.to/3Jvafb2.

படித்துப் பாருங்கள்! கூடவே உங்கள் மேலான கருத்துக்களை அந்தந்த நூலுக்கான அமேசான் பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள்!

சனி, டிசம்பர் 14, 2019

13ஆம் உலகில் ஒரு காதல் பற்றி எழுத்தாளர் தேமொழி அவர்களின் மதிப்புரை (Review)!

13aam ulagil oru kaadhal Book Review

ட்புக்கினியவர்களே! 

நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம் பற்றி அண்மையில் எழுத்தாளரும் தமிழ்த் தொண்டருமான தேமொழி அவர்கள் ‘சிறகு’ இதழில் ஒரு மதிப்புரை (review) வழங்கியிருந்தார். படித்த உடனேயே உள்ளக் கிளர்ச்சியால் என் உடம்பையே படபடக்கச் செய்த அந்தக் கட்டுரை, அன்னாருக்கு நெஞ்சம் நெகிழ்ந்துருகும் நன்றியுடன் இதோ உங்கள் பார்வைக்கு! 

ஒரு நிமிடம்! கட்டுரைக்குள் செல்லும் முன் ஒரு முக்கிய தகவல்! புதினத்தைப் படித்துக் கருத்துரைக்க இன்றுதான் (14.12.2019) கடைசி நாள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறு நண்பர்களே! தவறான தகவலுக்காக மீண்டும் என்னைப் பொறுத்தருள வேண்டும்! இந்த மாதக் கடைசி வரை நேரம் இருக்கிறது.

எனவே இதுவரை நூலைப் படிக்காதவர்கள் இனியாவது படித்து டிசம்பர் 31, 2019 அன்றுக்குள் உங்கள் மேலான கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் அமேசானில் வழங்கி இந்தப் போட்டியில் என்னை வெல்லச் செய்ய வேண்டுகிறேன்! நூலை வாங்க - https://amzn.to/2qFuL4z

நூலை எப்படி வாங்கிப் படிப்பது, எப்படிக் கருத்து அளிப்பது என்பது பற்றிய விவரங்கள் 13ஆம் உலகில் ஒரு காதல் - என் முதல் புதினம்! வெற்றி பெறக் கை கொடுப்பீர்! எனும் கட்டுரையில் உள்ளன. 

மிக்க நன்றி! இனி மதிப்புரை உங்கள் பார்வைக்கு!

❤ ❤ ❤ ❤ ❤ 


தமிழில் அறிவியல் படைப்புகள் வெளியிடுபவர் எண்ணிக்கை குறைவு. அறிவியல் அடிப்படையில் கற்பனை செய்து அறிவியல் புதினம் உருவாக்குவோர் எண்ணிக்கை அதனினும் மிக மிகக் குறைவு. ஜூல்ஸ்வெர்ன், எச்.ஜி. வெல்ஸ் போன்ற மேலைநாட்டு அறிவியல் புதின எழுத்தாளர் போன்ற ஒரு படைப்பாளிகள் வரிசை தமிழ் மொழியில் இல்லை. அறிவியல் புதினம் என்றால் எழுத்தாளர் சுஜாதா பெயர் மட்டுமே அனைவருக்கும் சட்டென நினைவு வரும் அளவிற்கு ஒரு வறட்சி நிலை தமிழ் இலக்கியத்தில்.

தனது “13ஆம் உலகில் ஒரு காதல்” என்ற நூலின் மூலம் இக்குறையை நீக்க முயன்றுள்ளார் இ.பு.ஞானப்பிரகாசன். இவர் ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பல இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் நடத்தும் ‘Pen to Publish 2019′ போட்டியில் கலந்துகொண்டு ஆசிரியர் எழுதியுள்ள இந்த நூலை அவர் தமது முதல் புதினம் என்று குறிப்பிட்டாலும் விறுவிறுப்பாகக் கதை சொல்லும் எழுத்தின் நடையும், தொய்வில்லாது கதையை நடத்திச் செல்லும் பாங்கும் ஒரு சிறந்த அறிவியல் புதின எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகில் உருவாகியுள்ளார் என்றே கட்டியம் கூறுகின்றன. 

உலகம் தழுவிய மனிதநேயம் கொண்டாட விரும்பும் ஒரு தமிழ்ப்பற்றாளரின் அறிவியல் கற்பனை அதையன்றி வேறெதைக் கதையின் கருவாகக் கொண்டிருக்கும்? கதையின் தலைவி மகிழினி எடுக்கும் முடிவு உலகம் கடந்த மனிதநேயத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு. ஞானப்பிரகாசனின் தாய்மொழிப் பற்றும் தமிழினக் கனவுகளும் அத்துடன் இணைந்ததில் 13ஆம் உலகமான வேற்றுலகில் வாழும் மனிதர்களின் நலனுக்காக, அவர்களின் அறிவியல் ஆய்வுகளுக்காகத் தன்னையே ஒப்புக்கொடுக்கவும் தயங்காதவளாக மகிழினி உருவாகியுள்ளாள். 

“மகிழினி அவன் கையை உதறி விட்டுப் பறக்கும் தட்டின் உடைந்த சன்னல் வழியாக வெளியே பாய்ந்தாள்!” என்று ஆர்வமூட்டும் துவக்கத்துடன் கதை துவங்கிப் பின்னோக்கிச் சென்று அவள் அந்த முடிவெடுக்க என்ன காரணம் என்று கூறும் கதை அமைப்பு. 

துறுதுறுப்பும், அறிவுக்கூர்மையும், துணிச்சலும் நிரம்பிய இதழியல் மாணவி மகிழினி தனது பயணத்தின் இடையில் பல ஆண்டுகளாகச் சென்றிராத தனது சொந்த கிராமமான கோட்டைப்பட்டினத்தில் உள்ள தாத்தா பாட்டியின் வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு இயற்கை உழவில் ஈடுபாடு கொண்டுள்ள விவசாயக் கல்லூரிப் பட்டதாரியான தனது சிறுவயதுத் தோழன் மதியைச் சந்தித்து, அவனுடன் சென்று ஊரில் உள்ள தனது மற்ற சிறுவயது தோழர்களையும் சந்தித்து அளவளாவி மகிழ்கிறாள். “முதல் கேள்வியே தப்பு. ஏலியன்ஸ் இருக்காங்களான்னு கேக்கக்கூடாது. எங்க இருக்காங்கன்னு கேளு!” என்று கூறும் ஓய்வுபெற்ற அறிவியல் பேராசிரியரான மதியின் தாத்தாவையும் சந்திக்கிறாள். 

மீண்டும் அவள் தொடர்வண்டியில் தனது பயணத்தைத் தொடர்கையில் மகிழினி வேற்றுலகில் வாழும் மனிதர்களால் கடத்தப்பட்டுவிட்டாள் என்பதை மதியின் தாத்தா கண்டுபிடித்து மகிழினியைக் காப்பற்ற முயல்கிறார். அவருடன் சென்ற மதி தனது காதலி மகிழினியைக் காப்பாற்ற தானும் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் திட்டத்திற்கு முன்வருகிறான். வேற்றுலகின் அரசியல் போராட்டத்திலும் சிக்கிக்கொண்டு இருவரும் பகடைக்காய்களாகவும் மாறுகிறார்கள். 

மகிழினியின் நோக்கம் நிறைவேறுகிறதா? மதியின் காதல் வெற்றிபெறுகிறதா? என்பதுதான் கதையின் முடிவு. மகிழினியைக் காதலிக்கும் மதி அவள் நலனுக்காகத் தன்னையும் தனது வாழ்வையும் பணயம் வைக்கத் தயங்காத வீரத் திருமகனாகச் சுடர் விடுகிறான். கதை மாந்தர்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாக மகிழினி, மதி எனவும், அதிலும் வேற்றுலக மனிதர்களின் பெயர்கள் ழகரன், கொற்றவன், இன்முகை, கமழ்நன், செழினி, மின்மதி என தூய தமிழ்ப் பெயர்களாக அமைந்தாலும் அவையாவும் கதையின் கருவினால் சிறப்பாகக் கதையில் பொருந்தி விடுகிறது. 

“மனித இனம் இங்க பாதுகாப்பா வாழறதுக்காக, பல காலத்துக்கு முன்னாடியே யாரோ அணுகுண்டு வீசி அதுங்களை அழிச்சிருக்காங்க” என்று அறிவியல் தாத்தா கூறும் டயனோசார்களின் அழிவு குறித்த ஊகம் பரிணாமவியல் காலக்கோட்டில் நெருடுகிறது. டயனோசார்களின் அழிவுக்குப் பிறகு சுமார் 65 மில்லியன் ஆண்டுகள் கடந்த பின்னரே புவியின் மனித இனம் தோன்றியது என்பதே அறிவியல். 

தமிழி எழுத்து, சீன அதிபரின் மாமல்லை வருகை, ஐயப்பன் கோயிலில் நுழையப் பெண்களுக்குத் தடை, ஈழப்போர் என்ற தற்கால நிகழ்வுகளை ஒட்டிய செய்திகள் இடம் பெறுவது ஆர்வத்தைக் கதையில் ஊன்ற வைக்கிறது. “பேரலல் வேர்ல்டுங்கிறீங்க? அப்புறம் எப்படி இவ்ளோ பெரிய டிஃபரன்ஸ்?” என்று மகிழினி கேட்கையில், தமிழ்பேசும் வேற்றுலகின் மனிதர், “அதற்குக் காரணம் தாய்மொழிப் பண்பாட்டை மறக்காத எங்கள் வாழ்க்கை முறை. சாதி, சமயம் எல்லாம் வேண்டா என்று பெரியார் என்று ஒருவர் வந்து சொல்லும் வரை நீங்கள் கேட்கவில்லை” என்று விளக்கம் கூறுவது கருத்தைக் கவரும் ஒரு குறிப்பு. 

“இரவு வானம், பஞ்சு மெத்தை மேலே மறந்து விட்டுப் போன கைப்பேசி போல் முழு நிலா மேகத்தில் படுத்துக் கிடக்க” என்ற கற்பனையும், “ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் கொத்தாகக் கைது செய்யுங்கள்! குண்டுகள் தீர்ந்து போனால் அப்புறம் துப்பாக்கியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. எளிதாகக் கைப்பற்றலாம்” என்ற உவமையும் ஆசிரியரின் எழுத்துத் திறனுக்குச் சான்றுகள்.
 
மனிதர்கள் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் நோக்கம் குறித்து மகிழினியும் மதியும் வேறு வேறு மனிதர்களால் விளக்கம் பெறும்பொழுது அதைத் திரைப்படப் பாணியில் வெட்டி வெட்டி வெவ்வேறு காட்சிகளாக அமைக்கும் பாணியை ஆசிரியர் பயன்படுத்தியுள்ள முறை, இக்கதை திரைப்படமாக உருவாக்கப்பட்டாலும் சிறப்பாகவே அமையும் என்ற எண்ணத்தை எழுப்பத் தவறவில்லை. கதையும் தமிழ்ப்பட மசாலாக் கூறுகளுடனும் சிறப்பான கதைமாந்தர்கள் உருவாக்கமும் கொண்டுள்ளதாகவே அமைந்துள்ளது. 

கற்பனைக்கு எடுத்தாண்ட கதையின் திருப்பங்களும் நிகழ்வுகளும் ஏரண அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் பொருந்துகின்றன. மேலும் நமக்கு வரக்கூடிய ஐயங்களைக் கதை மாந்தர்களே கேட்டுத் தெளிவு பெறும் வகையில் விளக்கம் தரும் முறையும் ஒரு சிறப்பான முயற்சி. நம்பிக்கை தரும் வகையில், பாராட்டப்படவேண்டிய எழுத்து நடையில், சிறப்பாகக் கதை கூறும் அறிவியல் புதின எழுத்தாளர் ஒருவர் உருவாகியுள்ளார் என நாம் மகிழலாம், இ.பு.ஞானப்பிரகாசனுக்குப் பாராட்டுகள்.


நான் கனவிலும் எதிர்பார்க்காத இப்பேர்ப்பட்ட ஒரு மதிப்புரையை வழங்கிய 
தேமொழி அவர்களுக்கு நெஞ்சம் ததும்பி வழியும் நன்றி!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (25) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (45) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சாலமன் பாப்பையா (1) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (39) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (21) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்