"அன்புத் தாய்மார்களே! அருமைப் பெரியோர்களே! இனிய குழந்தைகளே!" என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குறள் தமிழ் வளர்த்த கனித் தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைந்தார்!
இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியால், திருக்குறளில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன என்பதைக் கூட எளிதில் சொல்லி விடலாம். ஆனால் இதுவரை எத்தனை பேர் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள் என்பதை எண்ணவே முடியாது. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மணக்குடவரில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் புனைவு எழுத்தாளர் சுஜாதா வரை குறளுக்கு உரை எழுதிய பெருமக்களின் பெயர்ப் பட்டியல் அவ்வளவு நீளம். இருந்தாலும் திருக்குறளை எழுதியவர் யாரென்று கேட்டால் சாலமன் பாப்பையா என்று குழந்தைகள் சொன்னாலும் சொல்லும் என்கிற அளவுக்குக் குறளமுதை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்த்தவர் ஐயா அவர்கள்.
குறளுக்கு உரை எழுதிய அத்தனை பேருமே தன் தமிழ்த் திறமையைக் காட்டவே அந்தக் களத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் பாப்பையா அவர்கள், குறளின் பின்பாதியையும் முன்பாதியையும் மாற்றிப் போட்டுப் படித்தாலே பெரும்பாலான குறள்கள் புரிந்து விடும் என்று குறளைக் குறளாலேயே விளக்கியதைச் சிறு வயதில் கேட்டது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, "தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்" என்ற குறளை ஐயா எப்படி விளக்குவார் தெரியுமா? "வானம் வழங்கா தெனின் தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்" என்பார். "வானம் கொடுக்காவிட்டால் - அதாவது மழை பெய்யாவிட்டால் - தானமும் தவமும் வியன் உலகத்தில் தங்காது" என்பது அவர் அப்படிக் குறளைப் புரட்டிப் போட்டதிலேயே பாதி புரிந்து விடும். அதன் பிறகு வியன் உலகம், தங்கா போன்ற புரியாச் சொற்களுக்கான விளக்கம் அவர் மேற்கொண்டு தொடர்கையில் விளங்கிவிடும்.
இப்படித்தான்... இப்படித்தான் இவர் உரையாசிரியர்களே இல்லாமல் திருக்குறளை நாமே படிக்க முடியும் எனும் நம்பிக்கையை நமக்கு ஊட்டினார். காலங்காலமாக உரையாசிரியர்களெல்லாரும் தங்கள் விழிகளின் வழியாகவே வள்ளுவரைக் காட்டியபொழுது இவர் மட்டும்தான் நம் விழியாலேயே வள்ளுவரைப் பார்க்க வைத்தார். "இவ்வளவுதான்யா... இதுக்காய்யா இவ்வளவு கஷ்டம்? இதுக்காகவாய்யா திருக்குறளைப் படிக்காம இருக்கீக? படிங்கய்யா" என்று சொல்லாமல் சொன்னார்.
உலகெங்கும் பறந்து பறந்து பட்டிமன்றம் நடத்தினார். அதனால் ஊடகங்களெல்லாம் இந்த நேரத்தில், 'பட்டிமன்றப் பேரரசர்', 'பட்டிமன்ற அறிஞர்' என்றே ஐயாவைக் குறிப்பிடுகின்றன. பட்டிமன்ற நடுவர் மட்டுமில்லை புறநானூற்றை வரிசை புதுப்பித்தவர், சங்க இலக்கியங்களுக்கும் திருக்குறளுக்குச் செய்தது போலவே காணொளி உரை வழங்கியவர் என அவருக்குப் பல பெருமைகள் இருந்தாலும் உண்மையில் 'திருக்குறள் அறிஞர்' என்பதுதான் அவர்தம் சரியான அடையாளம்.
ஆனால் அவர் நம்மை விட்டுப் பிரிந்திருக்கும் இன்றைய நிலையிலும் 'சிவாஜி' படத்தின் அங்கவை - சங்கவை நகைச்சுவையைக் குறிப்பிட்டுக் கீழ்த்தரமாக நினைவுகூர்கிறார்கள் சிலர்.
என் வயதின் இருபதுகளில் அந்த நகைச்சுவையைப் பற்றிய இத்தகைய எதிர்வினைகள் என்னிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் இந்த நாற்பது வயதில் நினைத்துப் பார்க்கும்பொழுது அந்த நகைச்சுவை வேறு கோணத்தில் தென்படுகிறது.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் காதலையும் வீரத்தையும் இரு கண்ணெனப் போற்றி வளர்த்த ஒரு சமுகம், இடைக்காலத்தில், வெளியிலிருந்து வந்த தவறான பண்பாட்டின் தாக்குதலால் காதல் எனும் சொல்லைக் கூடத் தவறானதாகப் பார்க்கும் அளவுக்குக் குழம்பிக் கிடக்கிறது இன்று வரையில். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், "அங்கவை சங்கவைன்னு எங்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு. பழகிப் பாருங்க! புடிச்சா கட்டிக்குங்க! இல்லேன்னா ஃபிரெண்ட்சா இருப்போம்" என்று ஐயா பேசியது மறந்து போன தமிழ்ச் சமுகத்தின் உண்மையான காதல் பண்பாட்டை மீண்டும் நினைவூட்டும் நற்பணி என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பழகிப் பார்த்துத் திருமணம் செய்யும் பழந்தமிழர் காதல் மரபை மீட்டெடுக்கும் இந்த வேலையை சாலமன் பாப்பையா போல ஒரு தமிழறிஞர் செய்யாமல் வேறு யார் செய்ய முடியும்? பாரி மகளிரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று குதிக்கும் அரைகுறைகளே, ஆனானப்பட்ட பாப்பையாவுக்குத் தெரியாத பாரி மகளிரையா நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள்? அப்படி ஒரு காட்சியில் நடிக்கும் முன் உங்கள் அளவுக்குக் கூடவா அவர் சிந்தித்திருக்க மாட்டார்?
நீங்கள் எவ்வளவுதான் தூற்றினாலும் நம் தமிழர் திசைகாட்டியாம் திருக்குறள் இருக்கும் வரை பாப்பையாவின் பெயரும் இருக்கும்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் வானுறையும் தெய்வத்துள் கட்டாயம் வைக்கப்படுவார்.
எனவே இரண்டாயிரத்துக் குழந்தைகளிடமும் (2K kids) குறள் வளர்த்த தமிழ்ப் பெருமகனாரைப் போற்றுவோம்!
வாழ்க சாலமன் பாப்பையா புகழ்! 🙏🏽












