.

சனி, மே 01, 2021

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு எட்டாம் பிறந்தநாள்! - வாருங்கள்! வாழ்த்துங்கள்!

Eighth Birthday of Aga Sivappu Thamizh
கம்நிறை தமிழன்பர்களே!
உங்கள் விருப்பத்துக்குரிய ‘அகச் சிவப்புத் தமிழ்’ இந்த 23.04.2021 அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் ஒயில் நடை பயில்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விழைகிறேன்!

பதிவைத் தொடங்கும் முன், மனித இனத்தையே அழித்து வரும் மகுடை (COVID) நோயில் உயிரிழந்த அனைவருக்காகவும் முதலில் என் உளமார்ந்த இரங்கல்!

நிலைகுலைந்து நிற்கும் நேரத்தில் சாயத் தோள் கொடுப்பதுதான் ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் செய்யக்கூடிய ஆகப் பெரும் உதவி. அந்த அடிப்படை மனிதநேயத்தைக் கூட மனிதருக்கு மனிதர் காட்ட முடியாமல் – நோயால் நலிந்து கிடக்கும் நம் அன்புக்குரியவர்களை நாம் அரவணைத்து ஆறுதல் சொல்லக் கூட விடாமல் – தடுத்து நிற்கும் இந்த மகுடையை விடக் கொடியது வேறெதுவும் இருக்க முடியாது.

இந்தத் தீநுண்மி (virus) முற்றிலும் இந்தக் கோளை விட்டே அழிய வேண்டும். இந்த ஆண்டாவது அது கண்டிப்பாக நடக்கும் எனும் நம்பிக்கையோடு இதோ பதிவைத் தொடங்குவோம்.


காலக்கட்டம்

பதிவுகள்

கருத்துகள்*

பார்வைகள்

அகத்தினர்கள்**

ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014

30

171

24,000+

266

ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015

21

357

32,851+

267

ஏப்ரல் 2015 - 
ஏப்ரல் 2016

25

336

36,260+

539

ஏப்ரல் 2016 - 
ஏப்ரல் 2017

18

181

75,281+

930

ஏப்ரல் 2017 - 
ஏப்ரல் 2018

18

360

1,02,224

190

ஏப்ரல் 2018 - 
ஏப்ரல் 2019

13

120

38949+

-183

ஏப்ரல் 2019 - 
ஏப்ரல் 2020

18

103

28298

17

ஏப்ரல் 2020 - 
ஏப்ரல் 2021

14

129

25437+

26

மொத்தம்

157

1757

3,63,300+

2052

* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.

நான் இந்தாண்டு அதிகமாய் எழுதவில்லை. அப்படியும் பார்வைகள், கருத்துக்கள் என நீங்கள் கொடுத்திருக்கும் வரவேற்பில் பெரிய குறைவில்லை. இது நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைத்தான் காட்டுகிறது. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்றும் என் நெஞ்சார்ந்த நன்றி!

கடந்த ஆண்டு அதிக வரவேற்புப் பெற்ற ஐந்து பதிவுகள்
Top 5 posts of 2020-21
இவற்றில் நான்கு பதிவுகள் கடந்த ஆண்டிலேயே எழுதப்பட்டு அதே காலக்கட்டத்தில் உங்களிடம் இந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி! தொடர்ந்து நான் இயங்கி வருகிறேன் என்பதையும் மக்களான நீங்கள் அதை விரும்புகிறீர்கள் என்பதையுமே இது காட்டுகிறது. மிக்க நன்றி!

உள்ளத்தில் உறைந்தவை

கடந்த ஆண்டு எழுதியவை பற்றி நினைக்கையில் முதலில் மனத்தில் இனிப்பது ஆண்டின் முதல் வெளியீடான பிறந்தநாள் பதிவுக்கு நீங்கள் அனைவரும் தெரிவித்திருந்த வாழ்த்து!

வழக்கமாக வருகை புரியும் பதிவுலக அன்பர்கள், பழைய நண்பர்கள் மட்டுமில்லாமல் அதுவரை அறிமுகமாகாத புதியவர்கள் கூட வாழ்த்தியிருந்தார்கள்! மிகவும் குதூகலமாக இருந்தது! தொடர்ந்து பதிவுகள் எழுதப் பெரும் ஊக்கமாகவும் அமைந்தது.

அடுத்து ‘ழகரத்துக்கு ஆபத்து! - ஒருங்குறிக் கூட்டமைப்பின் (Unicode Consortium) தான்தோன்றித்தனமான முடிவு’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

தமிழின் சிறப்பு எழுத்தான ழகரத்தை எழுதத் தெலுங்கு ஒருங்குறியிலும் (Telugu Unicode) ஒரு தனியிடம் ஒதுக்குவது எனும் ஒருங்குறிக் கூட்டமைப்பின் முடிவைக் கண்டித்து எழுதிய இந்தக் கட்டுரையைத் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது. ஆனால் முரண்பாடாகத் துறைசார் தமிழ் வல்லுநரான மணி.மணிவண்ணன் அவர்கள் இதை எதிர்த்து பேசுபுக்கில் என்னைக் கடுமையாகத் தாக்கி எழுதியதும் நடந்தது. மிகவும் அதிர்ச்சி! மிகுந்த வேதனை!

அந்த மனப்புண்ணுக்கு மருந்திடும் வகையில் தமிழறிஞர் தஞ்சை கோ.கண்ணன் ஐயா அவர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆறுதல் கூறினார். தன்னுடைய தமிழ்ப் பணிகள் குறித்த தகவல்களையும் தொடர்ந்து கணித்தமிழில் செய்ய வேண்டியுள்ள பணிகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அதற்கான ஆவணங்களையும் எனக்கு அளித்துக் “காலம் ஒரு நாள் வரும் அன்று உங்களை ஒத்த தமிழர்கள் தமிழைக் காக்க எழுவார்கள் என்ற எண்ணத்தில் உங்களிடம் (இந்த ஆவணங்களை) கையளிக்கிறோம்” என்று அவர் சொன்ன சொற்கள் என்னை மயிர்க்கூச்செறிய வைத்தன!

அவ்வளவு பெரிய தமிழ்த் தொண்டர் ஏதுமறியாச் சிறுவனான என் மீது வைத்த அந்தப் பெரும் நம்பிக்கையை எப்படிக் காப்பாற்றப் போகிறேன் என எனக்குத் தெரியவில்லை. ஐயா சொன்ன அந்தப் பொற்காலத்துக்காக என்றும் காத்திருப்பேன்.
 
Tamil Scholar Thanjai. Ko.Kannan
தமிழாய்வாளர் தஞ்சை கோ.கண்ணன்
பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து ஒருங்குறிக் கூட்டமைப்பு தன்னுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டதாகத் தமிழறிஞர் நாக.இளங்கோவன் பேசுபுக்கில் அறிவித்திருந்தார் (பார்க்க - https://bit.ly/3u8nZ2P). அளவில்லா மகிழ்ச்சியும் மன அமைதியும் அடைந்தேன். பேரா.பொன்னவைக்கோ அவர்கள், முனைவர் இராம.கி., ஐயா முதலான தமிழறிஞர்கள் கொண்ட வல்லுநர் குழுவும் தமிழ் இணையக்கல்விக் கழகமும் தமிழ்நாடு அரசும் கைகோத்து இதைச் சாதித்ததாக அறிய முடிந்தது. அவர்கள் அனைவரையும் இந்தச் சிக்கலை முதன் முதலாக வெளியுலகுக்குக் கொண்டு வந்த தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களையும் இது பற்றி நான் தெரிவித்த உடனே இரவென்றும் தயங்காமல் அப்பொழுதே செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் தங்க.காமராசு அவர்களுக்குத் தெரிவித்த ஆருயிர் நண்பரும் மைத்துனருமான பிரகாஷ் சங்கர் அவர்களையும் இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!

இதற்கு அடுத்து, கடந்த இனப்படுகொலை நினைவு நாளில் எழுதிய ‘பதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்’ எனும் கட்டுரையும் தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமாக அமைந்தது.

தமிழினப் படுகொலைக்கு உதவிய தி.மு.க., பற்றி என்னுடைய நிலைப்பாடு என்ன என்பது இந்த வலைப்பூவைத் தொடக்கத்திலிருந்து படிக்கும் அனைவரும் அறிந்ததே. எனினும் கடந்த ஓரீர் ஆண்டுகளாக ஈழ விவகாரம் தொடர்பான தி.மு.க-வின் நிலைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண முடிந்தது. இதன் உச்சமாகக் கடந்த மே மாதத் தொடக்கத்தில், ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிக்கை விட்டு அறிவுறுத்தியது.

தி.மு.க-வின் இந்த மாற்றம் நெருங்கி வரும் அரசியலை மனதில் கொண்டது என்பதுதான் என் கருத்து என்றாலும் தமிழர் அரசியலின் முக்கிய புள்ளியான அக்கட்சியுடைய இம்மாற்றத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது ஈழ ஆதரவுத் தலைவர்களின் கடமை என்று கட்டுரையில் வலியுறுத்தியிருந்தேன்.

ஈழத் தமிழர் நலனை மனத்தில் கொண்டுதான் அப்படி எழுதினேன் என்றாலும் அது சரிதானா என்கிற ஊசலாட்டமும் உள்ளுக்குள் இருந்தது. எனவே ஈழத் தமிழர்களாலேயே பல ஆண்டுகளாக நடத்தப்படும் ‘யாழ் களம்’ இணைய மடலாடல் குழுவில் கட்டுரையைப் பகிர்ந்தேன்.

நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ஈழத் தமிழ் மக்கள் தங்கள் வரவேற்பை எனக்கு அள்ளித் தந்தனர். “யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதை விட யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஈழ விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் சார்பாக நிலைப்பாடு எடுக்க வைப்பதே சரியான அணுகுமுறை” என்று எனக்கு அவர்கள் அளித்த ஒப்புதல் கண்டு அகம் குளிர்ந்து போனேன்.

தொடர்ந்து ஈழ விவகாரம் பற்றியும் அதில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அணுகுமுறை பற்றியும் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் எந்த அளவுக்கு அவர்கள் முதிர்ச்சி மிக்கவர்கள் என்பதைப் புரிய வைத்தது. கூடவே இவ்வளவுக்கும் பிறகும் தமிழ்நாட்டுத் தமிழர்களான நம் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு கொஞ்சமும் குறையாதது கண்டு நெக்குருகிப் போனேன் (பார்க்க விரும்புவோருக்கு - https://bit.ly/3eFYQWL).

அடுத்து ஆகத்து மாதம் எழுதிய ‘என் யுவர் கோட் (Your Quote) கவிதைகள்’ எனும் பதிவு புதுமையாக வெற்றி பெற்றது.

அதாவது பதிவு பெரிய அளவில் பார்வைகளைப் பெறாவிட்டாலும் இதில் குறிப்பிடப்பட்ட யுவர் கோட் எனும் குறுஞ்செயலியைப் பார்த்துப் பலரும் ஆர்வமாகி விவரம் கேட்டனர். சில நாட்களிலேயே நண்பர்களும் பதிவுலகத் தோழர்களும் அதைப் பயன்படுத்தத் தொடங்கியதைப் பார்க்க முடிந்தது. எனக்கு இந்தக் குறுஞ்செயலியை அறிமுகப்படுத்திய அன்பு மகள் நிறைமதிவதனாவுக்கே எல்லார் நன்றியும்!


உத்திரப்பிரதேச மாநிலம் அத்திராசில் (Hathras) கடந்த ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை மனித நெஞ்சம் படைத்த யாரையுமே தூங்க விடவில்லை. நினைத்தாலே இப்பொழுதும் வயிறு பற்றி எரிகிறது! தன்னைப் போன்ற இன்னொரு மனிதப்பிறவியை இந்த அளவுக்குக் கொடுமைப்படுத்த முடியுமா என்கிற கேள்வி அதையொட்டி எழுந்தபொழுதுதான் தலித்து சாதியைச் சேர்ந்தவர்களை இந்த நாடுதான் மனிதர்களாகவே மதிப்பதில்லையே எனும் உண்மையும் உறைத்தது.

ஆகவே “ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை இனி பாலியல் வன்கொடுமை எனச் சொல்லாதீர்கள்; இனப்படுகொலை என்றே சொல்லுங்கள்” என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு கட்டுரையை எழுதினேன். மொத்த இந்திய ஊடகங்களுக்குமான வேண்டுகோள் என்பதால் அதை ஆங்கிலத்தில் எழுதுவதுதான் சரி என்று தோன்றியது. எனக்கு அந்தளவுக்கு ஆங்கிலப் புலமை போதாதென்பதால் என் தங்கையின் உதவியை நாடினேன்.

அப்படித்தான் உருவானது ‘Hathras Case: Not a Sexual Harassment but Genocide! - A Request to Indian Media’ எனும் கட்டுரை. தமிழ் வடிவத்தின் சூடும் சுருக்கும் துளியும் குறையாமல் வெகு அழகான ஆங்கிலத்தில் எழுதித் தந்தார் அன்புத் தங்கை ஸ்ரீதேவி. என்னுடைய படைப்புகளைத் தொடக்கம் முதல் ஆதரித்து வரும் ‘கீற்று’ இணைய இதழின் ஆசிரியர் நந்தன் அவர்கள் அப்பொழுதுதான் புதிதாக ‘Butitis’ எனும் ஆங்கில இணைய இதழைத் தொடங்கியிருந்தார். கட்டுரையை அனுப்பியதும் உடனே அதை வெளியிட்டு உதவினார். இருவருக்கும் இங்கு என் அன்பார்ந்த நன்றி!

கடந்த ஆண்டு எழுதியவற்றிலேயே மிகப் பெரிய வெற்றி பெற்றது ‘வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்’ எனும் கட்டுரை.

வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைக் கடந்து விட்ட இப்பதிவு துவிட்டரிலும் மாபெரும் வெற்றி அடைந்தது. தமிழைக் கீழ்த்தரமாகப் பேசிய இனவெறியன் ஒருவனுக்கு எதிரடி தருவதற்காக எழுதிய இதைப் படித்து விட்டுத் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் வழங்கிய பாராட்டுக்கள் இப்படிப்பட்ட துறைசார் பதிவுகளை எழுதுவதில் எனக்கிருந்த மனத்தடைகளை அசைத்துப் பார்த்தன.

இக்கட்டுரையை எழுதத் தோன்றாத் துணையாய் நின்ற தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர், மேற்கொண்டு எழுத முடியாமல் ஓரிடத்தில் திக்கி நின்றபொழுது வழிகாட்டி உதவிய தமிழாய்வாளர் சேதுபாலா, இதனைத் துவிட்டரில் எல்லார் பார்வைக்கும் கொண்டு சேர்த்து மிகப் பெரிய வெற்றிக்கு வழிகோலிய தமிழாய்வாளரும் பதிவருமான தமிழ் இனியன், எழில், காலம்பன் முதலான நண்பர்கள் பலர் என அனைவருக்கும் என் களிகூர் நன்றி!

தமிழ்ப் போராளி, எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவரான புகழேந்தி தங்கராசு ஐயா இந்தக் கட்டுரை பற்றி நான் சொல்லாமலே தானாக வந்து படித்துப் பாராட்டியது எதிர்பாராத குதூகலம்! பதிவுலகத் தோழர் ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் இதற்கெனப் போன்மியெல்லாம் (meme) உருவாக்கிப் பாராட்டியது என்றைக்கும் மறக்க முடியாதது.
 
 Appreciation of Mythily Kasthurirengan for ‘Vakkatra Mozhiya Tamil’
2021-சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வழக்கம் போல் தி.மு.க., தலைவர் தாலின் மக்களிடம் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் இடம்பெற வேண்டிய பரிந்துரைகளைக் கேட்டிருந்தார். நான் 19 பரிந்துரைகளையும் ஒரு புதிய திட்டத்தையும் எழுதியனுப்பினேன். அவற்றை மக்கள் பார்வைக்கும் முன்வைக்க விரும்பி ‘தி.மு.க., சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்’ எனும் பெயரில் இங்கேயும் வெளியிட்டிருந்தேன்.

பெரிய அளவில் பார்வைகளைப் பெறாவிட்டாலும் படித்தவர்களின் பாராட்டை இது பெற்றது. குறிப்பாக, அதுவரை நான் அறியாதவரான கல்வி ஆர்வலர் இரத்தின புகழேந்தி அவர்கள் மடலாடல் குழு ஒன்றில் இதைப் படித்து விட்டுப் பாராட்டியது எதிர்பாரா மகிழ்ச்சி! தோழர் மைதிலி கஸ்தூரிரங்கன் இதற்கும் ஒரு போன்மி அனுப்பிப் பாராட்டியிருந்தார். அவர் அன்பே அன்பு!

Appreciation for my suggestions to DMK Manifesto 2021 by Mythily Kasthurirengan
கடந்த முறை போல் தி.மு.க-விடமிருந்து மறுமொழி ஏதும் வராவிட்டாலும் இவற்றுள் ஐந்து பரிந்துரைகள் அவர்களின் தேர்தலறிக்கையில் இடம் பிடித்திருந்ததைப் பார்க்க முடிந்தது. என்னுடைய இந்த மடலைப் பார்த்து விட்டுச் சேர்த்தார்களோ அவர்களாகச் சேர்த்தார்களோ! எப்படியோ நல்லது நடந்தால் சரி.

அடுத்து தில்லி உழவர் போராட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அறவழிப் போராட்டம் எனும் பெயரில் மக்கள் தங்களை வருத்திக் கொள்வதில் எப்பொழுதுமே எனக்கு உடன்பாடில்லை. மனிதக் குல வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒன்றரைக் கோடிப் பேர் திரண்டு போராடிய தில்லி உழவர் போராட்டத்திலும் போராளிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படவே “இனியும் மக்களான நாம் இப்படி அறவழிப் போராட்டம் எனும் பெயரில் நம்மை வருத்திக் கொள்ளாமல் புதிய போராட்ட வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்” என்று அக்கட்டுரையை எழுதினேன்.

ஆனால் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். நடந்த கலவரத்தை ஒட்டிச் சில உழவர் சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததைக் கண்டு போராட்டமே முடிந்து விட்டதாக எழுதி விட்டேன். துவிட்டரில் நண்பர் தமிழறிவன் AJ முதலானோர் சுட்டிக்காட்டியதை அடுத்துத் திருத்திக் கொண்டேன். நாட்டு நடப்பு குறித்து எழுத அக்கறை மட்டும் போதாது மிகுந்த கவனமும் வேண்டும் என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது. இதற்காக என் வருத்தத்தை இங்கு பதிவு செய்கிறேன்!

இதன் பின்னர் உலகத் தாய்மொழித் திருநாளை முன்னிட்டு ‘English ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை! - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம்’ எனும் கட்டுரையை வெளியிட்டிருந்தேன்.

தமிழில் நாம் அனைவரும் செய்யும் மிகப் பெரிய பிழையான கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றியும் அதற்குக் காரணமாக இருக்கும் நம் தவறான மொழியியல் அணுகுமுறை பற்றியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் ‘தினச்செய்தி’ நாளேட்டில் எழுதியது இது. வெளியிடச் சரியான வேளை பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் தாய்மொழி நாளதுவுமாய் வெளியிட்டும் எதிர்பார்த்த அளவுக்கு இது பார்வை பெறாதது வருத்தமே!

எனினும் நான் பெரிதும் மதிக்கும் இராம.கி., ஐயா, நெல்லை சித்திக் ஐயா ஆகிய தமிழறிஞர்களிடம் இஃது ஏற்பிசைவு (recognition) பெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் வெகுவாகப் பாராட்டியதையும் மறக்க முடியாது. அனைவருக்கும் இங்கு மீண்டும் என் நன்றி!

இவற்றுக்கிடையே பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், தமிழாய்வாளர் எனப் பன்முகம் கொண்ட நம் பதிவுலகப் பெருமகனார் நா.முத்துநிலவன் அவர்கள் கடந்த ஆண்டு தன் மகள் திருமண விழாவில் வெளியிட்ட ‘இலக்கணம் இனிது’ நூலை அச்சிடும் முன்பே எனக்கு அனுப்பிக் கருத்துக் கேட்டது இன்ப அதிர்ச்சி!
'Ilakkanam Inithu' wrapper
 
ஐயாவின் நட்பு வட்டம் எப்பேர்ப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். அப்படியிருக்க ஏதுமறியாத என்னிடம் அவர் தன் நூலைப் பற்றிக் கருத்துக் கேட்க முன்வந்தது முழுக்க முழுக்க அவருடைய பெருந்தன்மை மட்டுமே!

நூல் பற்றி நான் எழுதிய விரிவான கருத்துரையை ஐயா தன் வலைப்பூவிலும் வெளியிட்டது எனக்குக் கிடைத்த பெருமை! பார்க்க விரும்புவோர் அழுத்தலாம் இங்கே!

இதே போல் என் பெருமதிப்பிற்குரியவரும் மூத்த பதிவருமான தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் ஐயாவும் கடந்த ஆண்டு தன் நூல்களின் தொகுப்பை அனுப்பி வைத்து, அவை குறித்துத் தன் நூல்கள் பற்றிய திறனாய்வரங்கில் பேச என்னை அழைத்திருந்தார்.

முனைவர்களும் ஆய்வாளர்களும் செயற்பாட்டாளர்களும் நிரம்பிய அவ்வரங்கில் ‘எழுத்தாளர்’ என என்னை அறிமுகப்படுத்தி ஐயா அவர்கள் அளித்த வாய்ப்புக்கு என்றென்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்! அரங்கில் நான் ஆற்றிய உரை கீழே. முழுக் காணொலி இங்கே!


நன்றிக்கினியோர்!

இணையமே சமுக ஊடகங்களுக்குக் குடிபெயர்ந்து விட்ட இந்நாளிலும் வலைப்பூவில் படைப்புகளை வெளியிட்டு வரும் பதிவுலக அன்பர்கள்…

இன்னும் என் வலைப்பூவை நாடி வரும் அகச் சிவப்புத் தமிழர்கள்...

தாங்கள் விரும்பும் வலைமனைகளின் பட்டியலில் இந்தத் தளத்தையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தும் பதிவுலகத் தோழமைகள்...

பதிவுகளின் வெற்றிக்கு இன்றியமையாக் காரணர்களான வலையுலகத் தோழர்கள்...

தங்கள் பாராட்டுகளாலும் திறனாய்வுகளாலும் தொடர்ந்து எனக்கு ஊக்கமூட்டும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், வழிகாட்டிகள், உடன் பணியாற்றுபவர்கள்...

சோம்பல்பட்டு நான் சும்மாயிருந்தாலும் ஏதாவது ஏடாகூடம் பேசி என்னைச் சீறியெழுந்து எழுத வைக்கும் இனிய எதிரிகள்...

பதிவுகளை மக்கள் கண்ணில் காட்ட உதவும் திரட்டிகள், சமுக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...

வலைப்பூவின் ஏறுமுகமும் இறங்குமுகமும் அறிய உதவும் தரவகச் சேவைத் தளங்கள் (Data Analyzing Sites)...

தளத்துக்குப் பதிப்புரிமை வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனம்...

பதிவுகளுக்கான படங்களும் பிறவும் தந்து உதவும் பல்வேறு இணையத்தளங்கள்...

படைப்புகளை எழுதத் துணை செய்யும் இணையத்தளங்கள், இதழ்கள், நூல்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாக, இணையத்தமிழ் வளர்க்க நமக்கு பிளாகர் எனும் இந்த நற்சேவையை இலவசமாக அளித்து வருவதோடு இதற்குப் பொருளாதார மதிப்பும் வழங்கி வரும் கூகுள் நிறுவனம்...

என யாவருக்கும்...

யாரையாவது இங்கு நான் குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...

Thanks

காணிக்கை


வலைப்பூ என்கிற ஒன்றை நான் தொடங்கும் முன்பாகவே என் எழுத்துக்களுக்குக் களம் அமைத்துத் தந்த ஏந்தல்

பரந்து விரிந்த தன் தமிழ்ப் புலமை முன் சின்னஞ் சிறுவனான என்னிடம் தன் ஆய்வு முடிவுகள் குறித்துக் கருத்துக் கேட்கும் தனிப்பெரும் தகைமையாளர்

நல்லதோ கெட்டதோ என் குடும்பத்தில் எது நடந்தாலும் ஓடோடி வந்து நிற்கும் மாண்புமிகு பெருமனிதர்

இதழாளர், ஊடகவியலர், எழுத்தாளர் எனவெல்லாம் என்னை அடுத்தடுத்த உயரங்களில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் அன்புசால் ஆசான்

ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு இந்த ஆண்டுப் பதிவுலகத் துய்ப்பைப் (experience) காணிக்கையாக்குகிறேன்! 

திருவள்ளுவன் இலக்குவனார்
படம்: நன்றி இமேச்சசு.எசார்கேயெச்.

முந்தைய ஆண்டுகளில்:
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்! 

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்குங்களேன்! 
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி நண்பரே! மிக்க நன்றி! உங்களுடையதுதான் முதல் கருத்து.

      நீக்கு
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள். மென்மேலும் சாதனைகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! உங்களைப் போன்றோர் ஆதரவு இருப்பின் கட்டாயம் சாதிப்பேன்.

      நீக்கு
  3. மனமார்ந்த வாழ்த்துகள்! இபுஞா! மேன் மேலும் உயர வேண்டும் உங்கள் பணி சிறக்க வேண்டும்.எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய துளசி ஐயா, கீதா அம்மணி இருவருக்கும் நேசமிகு நன்றி! உங்கள் வாழ்த்துக்களால் என்றும் உயர்வேன் நான்! மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  4. தாமதமாகக் கருத்து இடுவதற்கு முதலில் மன்னியுங்கள். ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வரும் உங்கள் வலைப்பதிவும் அதனால் நற்பயன் பெற்றுவரும் தமிழுலகும் பற்றிய தகவல்கள் அறிந்தேன் என்னைப் புகழ்ந்து இருக்கிறீர்கள் நான் சும்மா இலக்கியம் இலக்கணம் சமூக வரலாற்றுத் தளங்களில் இயங்குகிறவன். உங்கள் அளவுக்கு கணினித் தொழில் நுட்பமும், எழுத்துரு ஞானமும் எனக்கு இல்லை.. அதனைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் உங்கள் உணர்வு மகிழ்வும் நிறைவும் அளிக்கிறது. உங்கள் பணிகளைத் தொடர எனது இனிய வாழ்த்துக்கள் தோழரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஐயா மன்னிப்பு போன்ற கனமான சொற்களையெல்லாம் என்னிடம் பயன்படுத்துகிறீர்களே!

      ஆனால் ஐயா! உங்கள் ஆழமான பாராட்டு உண்மையிலேயே நெஞ்சைத் தொடுகிறது. உங்கள் தன்னடக்கம் கண்டு இப்பொழுதும் வியக்கிறேன். மிக மிக நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்