.

சனி, டிசம்பர் 14, 2019

13ஆம் உலகில் ஒரு காதல் பற்றி எழுத்தாளர் தேமொழி அவர்களின் மதிப்புரை (Review)!

13aam ulagil oru kaadhal Book Review

ட்புக்கினியவர்களே! 

நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம் பற்றி அண்மையில் எழுத்தாளரும் தமிழ்த் தொண்டருமான தேமொழி அவர்கள் ‘சிறகு’ இதழில் ஒரு மதிப்புரை (review) வழங்கியிருந்தார். படித்த உடனேயே உள்ளக் கிளர்ச்சியால் என் உடம்பையே படபடக்கச் செய்த அந்தக் கட்டுரை, அன்னாருக்கு நெஞ்சம் நெகிழ்ந்துருகும் நன்றியுடன் இதோ உங்கள் பார்வைக்கு! 

ஒரு நிமிடம்! கட்டுரைக்குள் செல்லும் முன் ஒரு முக்கிய தகவல்! புதினத்தைப் படித்துக் கருத்துரைக்க இன்றுதான் (14.12.2019) கடைசி நாள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறு நண்பர்களே! தவறான தகவலுக்காக மீண்டும் என்னைப் பொறுத்தருள வேண்டும்! இந்த மாதக் கடைசி வரை நேரம் இருக்கிறது.

எனவே இதுவரை நூலைப் படிக்காதவர்கள் இனியாவது படித்து டிசம்பர் 31, 2019 அன்றுக்குள் உங்கள் மேலான கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் அமேசானில் வழங்கி இந்தப் போட்டியில் என்னை வெல்லச் செய்ய வேண்டுகிறேன்! நூலை வாங்க - https://amzn.to/2qFuL4z

நூலை எப்படி வாங்கிப் படிப்பது, எப்படிக் கருத்து அளிப்பது என்பது பற்றிய விவரங்கள் 13ஆம் உலகில் ஒரு காதல் - என் முதல் புதினம்! வெற்றி பெறக் கை கொடுப்பீர்! எனும் கட்டுரையில் உள்ளன. 

மிக்க நன்றி! இனி மதிப்புரை உங்கள் பார்வைக்கு!

❤ ❤ ❤ ❤ ❤ 


தமிழில் அறிவியல் படைப்புகள் வெளியிடுபவர் எண்ணிக்கை குறைவு. அறிவியல் அடிப்படையில் கற்பனை செய்து அறிவியல் புதினம் உருவாக்குவோர் எண்ணிக்கை அதனினும் மிக மிகக் குறைவு. ஜூல்ஸ்வெர்ன், எச்.ஜி. வெல்ஸ் போன்ற மேலைநாட்டு அறிவியல் புதின எழுத்தாளர் போன்ற ஒரு படைப்பாளிகள் வரிசை தமிழ் மொழியில் இல்லை. அறிவியல் புதினம் என்றால் எழுத்தாளர் சுஜாதா பெயர் மட்டுமே அனைவருக்கும் சட்டென நினைவு வரும் அளவிற்கு ஒரு வறட்சி நிலை தமிழ் இலக்கியத்தில்.

தனது “13ஆம் உலகில் ஒரு காதல்” என்ற நூலின் மூலம் இக்குறையை நீக்க முயன்றுள்ளார் இ.பு.ஞானப்பிரகாசன். இவர் ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பல இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் நடத்தும் ‘Pen to Publish 2019′ போட்டியில் கலந்துகொண்டு ஆசிரியர் எழுதியுள்ள இந்த நூலை அவர் தமது முதல் புதினம் என்று குறிப்பிட்டாலும் விறுவிறுப்பாகக் கதை சொல்லும் எழுத்தின் நடையும், தொய்வில்லாது கதையை நடத்திச் செல்லும் பாங்கும் ஒரு சிறந்த அறிவியல் புதின எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகில் உருவாகியுள்ளார் என்றே கட்டியம் கூறுகின்றன. 

உலகம் தழுவிய மனிதநேயம் கொண்டாட விரும்பும் ஒரு தமிழ்ப்பற்றாளரின் அறிவியல் கற்பனை அதையன்றி வேறெதைக் கதையின் கருவாகக் கொண்டிருக்கும்? கதையின் தலைவி மகிழினி எடுக்கும் முடிவு உலகம் கடந்த மனிதநேயத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு. ஞானப்பிரகாசனின் தாய்மொழிப் பற்றும் தமிழினக் கனவுகளும் அத்துடன் இணைந்ததில் 13ஆம் உலகமான வேற்றுலகில் வாழும் மனிதர்களின் நலனுக்காக, அவர்களின் அறிவியல் ஆய்வுகளுக்காகத் தன்னையே ஒப்புக்கொடுக்கவும் தயங்காதவளாக மகிழினி உருவாகியுள்ளாள். 

“மகிழினி அவன் கையை உதறி விட்டுப் பறக்கும் தட்டின் உடைந்த சன்னல் வழியாக வெளியே பாய்ந்தாள்!” என்று ஆர்வமூட்டும் துவக்கத்துடன் கதை துவங்கிப் பின்னோக்கிச் சென்று அவள் அந்த முடிவெடுக்க என்ன காரணம் என்று கூறும் கதை அமைப்பு. 

துறுதுறுப்பும், அறிவுக்கூர்மையும், துணிச்சலும் நிரம்பிய இதழியல் மாணவி மகிழினி தனது பயணத்தின் இடையில் பல ஆண்டுகளாகச் சென்றிராத தனது சொந்த கிராமமான கோட்டைப்பட்டினத்தில் உள்ள தாத்தா பாட்டியின் வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு இயற்கை உழவில் ஈடுபாடு கொண்டுள்ள விவசாயக் கல்லூரிப் பட்டதாரியான தனது சிறுவயதுத் தோழன் மதியைச் சந்தித்து, அவனுடன் சென்று ஊரில் உள்ள தனது மற்ற சிறுவயது தோழர்களையும் சந்தித்து அளவளாவி மகிழ்கிறாள். “முதல் கேள்வியே தப்பு. ஏலியன்ஸ் இருக்காங்களான்னு கேக்கக்கூடாது. எங்க இருக்காங்கன்னு கேளு!” என்று கூறும் ஓய்வுபெற்ற அறிவியல் பேராசிரியரான மதியின் தாத்தாவையும் சந்திக்கிறாள். 

மீண்டும் அவள் தொடர்வண்டியில் தனது பயணத்தைத் தொடர்கையில் மகிழினி வேற்றுலகில் வாழும் மனிதர்களால் கடத்தப்பட்டுவிட்டாள் என்பதை மதியின் தாத்தா கண்டுபிடித்து மகிழினியைக் காப்பற்ற முயல்கிறார். அவருடன் சென்ற மதி தனது காதலி மகிழினியைக் காப்பாற்ற தானும் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் திட்டத்திற்கு முன்வருகிறான். வேற்றுலகின் அரசியல் போராட்டத்திலும் சிக்கிக்கொண்டு இருவரும் பகடைக்காய்களாகவும் மாறுகிறார்கள். 

மகிழினியின் நோக்கம் நிறைவேறுகிறதா? மதியின் காதல் வெற்றிபெறுகிறதா? என்பதுதான் கதையின் முடிவு. மகிழினியைக் காதலிக்கும் மதி அவள் நலனுக்காகத் தன்னையும் தனது வாழ்வையும் பணயம் வைக்கத் தயங்காத வீரத் திருமகனாகச் சுடர் விடுகிறான். கதை மாந்தர்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாக மகிழினி, மதி எனவும், அதிலும் வேற்றுலக மனிதர்களின் பெயர்கள் ழகரன், கொற்றவன், இன்முகை, கமழ்நன், செழினி, மின்மதி என தூய தமிழ்ப் பெயர்களாக அமைந்தாலும் அவையாவும் கதையின் கருவினால் சிறப்பாகக் கதையில் பொருந்தி விடுகிறது. 

“மனித இனம் இங்க பாதுகாப்பா வாழறதுக்காக, பல காலத்துக்கு முன்னாடியே யாரோ அணுகுண்டு வீசி அதுங்களை அழிச்சிருக்காங்க” என்று அறிவியல் தாத்தா கூறும் டயனோசார்களின் அழிவு குறித்த ஊகம் பரிணாமவியல் காலக்கோட்டில் நெருடுகிறது. டயனோசார்களின் அழிவுக்குப் பிறகு சுமார் 65 மில்லியன் ஆண்டுகள் கடந்த பின்னரே புவியின் மனித இனம் தோன்றியது என்பதே அறிவியல். 

தமிழி எழுத்து, சீன அதிபரின் மாமல்லை வருகை, ஐயப்பன் கோயிலில் நுழையப் பெண்களுக்குத் தடை, ஈழப்போர் என்ற தற்கால நிகழ்வுகளை ஒட்டிய செய்திகள் இடம் பெறுவது ஆர்வத்தைக் கதையில் ஊன்ற வைக்கிறது. “பேரலல் வேர்ல்டுங்கிறீங்க? அப்புறம் எப்படி இவ்ளோ பெரிய டிஃபரன்ஸ்?” என்று மகிழினி கேட்கையில், தமிழ்பேசும் வேற்றுலகின் மனிதர், “அதற்குக் காரணம் தாய்மொழிப் பண்பாட்டை மறக்காத எங்கள் வாழ்க்கை முறை. சாதி, சமயம் எல்லாம் வேண்டா என்று பெரியார் என்று ஒருவர் வந்து சொல்லும் வரை நீங்கள் கேட்கவில்லை” என்று விளக்கம் கூறுவது கருத்தைக் கவரும் ஒரு குறிப்பு. 

“இரவு வானம், பஞ்சு மெத்தை மேலே மறந்து விட்டுப் போன கைப்பேசி போல் முழு நிலா மேகத்தில் படுத்துக் கிடக்க” என்ற கற்பனையும், “ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் கொத்தாகக் கைது செய்யுங்கள்! குண்டுகள் தீர்ந்து போனால் அப்புறம் துப்பாக்கியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. எளிதாகக் கைப்பற்றலாம்” என்ற உவமையும் ஆசிரியரின் எழுத்துத் திறனுக்குச் சான்றுகள்.
 
மனிதர்கள் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் நோக்கம் குறித்து மகிழினியும் மதியும் வேறு வேறு மனிதர்களால் விளக்கம் பெறும்பொழுது அதைத் திரைப்படப் பாணியில் வெட்டி வெட்டி வெவ்வேறு காட்சிகளாக அமைக்கும் பாணியை ஆசிரியர் பயன்படுத்தியுள்ள முறை, இக்கதை திரைப்படமாக உருவாக்கப்பட்டாலும் சிறப்பாகவே அமையும் என்ற எண்ணத்தை எழுப்பத் தவறவில்லை. கதையும் தமிழ்ப்பட மசாலாக் கூறுகளுடனும் சிறப்பான கதைமாந்தர்கள் உருவாக்கமும் கொண்டுள்ளதாகவே அமைந்துள்ளது. 

கற்பனைக்கு எடுத்தாண்ட கதையின் திருப்பங்களும் நிகழ்வுகளும் ஏரண அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் பொருந்துகின்றன. மேலும் நமக்கு வரக்கூடிய ஐயங்களைக் கதை மாந்தர்களே கேட்டுத் தெளிவு பெறும் வகையில் விளக்கம் தரும் முறையும் ஒரு சிறப்பான முயற்சி. நம்பிக்கை தரும் வகையில், பாராட்டப்படவேண்டிய எழுத்து நடையில், சிறப்பாகக் கதை கூறும் அறிவியல் புதின எழுத்தாளர் ஒருவர் உருவாகியுள்ளார் என நாம் மகிழலாம், இ.பு.ஞானப்பிரகாசனுக்குப் பாராட்டுகள்.


நான் கனவிலும் எதிர்பார்க்காத இப்பேர்ப்பட்ட ஒரு மதிப்புரையை வழங்கிய 
தேமொழி அவர்களுக்கு நெஞ்சம் ததும்பி வழியும் நன்றி!

சனி, டிசம்பர் 07, 2019

13ஆம் உலகில் ஒரு காதல் - அமேசானின் அறிவியல் புனைவு நூல்களில் முதல் இடத்தில்!

13aam ulagil oru Kaadhal is No.1 rank in Amazon

கிலத் தமிழ் அன்பர்களே!

உங்கள் விருப்பத்துக்குரிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம் நேற்று வரையில் தொடர்ந்து மூன்று நாட்களாக அமேசான் அறிவியல் புனைவு நூல்களிலேயே முதல் இடத்தில் வீற்றிருந்தது என்பதை உச்சக்கட்டக் குதூகலத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

நூலை இலவசமாக விற்பனைக்கு வைத்த பின்னர்தான் இப்படி ஓர் இடம் கிடைத்தது; இலவச விற்பனையால் முதலிடம் என்பது பெரிய விதயம் ஒன்றும் இல்லை என்றாலும் அமேசான் கிண்டிலில் விற்கும் எத்தனையோ அறிவியல் புனைவுகளில் இது முதலிடத்தில் இருப்பதைக் காண்கையில் காரணங்களெல்லாம் மறந்து பார்க்கவே அவ்வளவு பூரிப்பாக இருக்கிறது.

வாழ்விலேயே நான் மறக்க முடியாத இந்தத் தறுவாயில், இந்த நூல் குறித்து முதன் முதலில் பாராட்டுரை அளித்துப் பதிவுலகம் முழுவதும் அறியச் செய்தவரான பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய ஐயா கரந்தை ஜெயகுமார் அவர்கள், பேசுபுக்குப் பதிவு எழுதித் தன் நேயர்கள் அனைவருக்கும் இந்நூலை அறிமுகப்படுத்தியவரான வாண்டுமாமா அவர்களுக்குப் பிறகு நான் பெரிதும் ரசிக்கும் குழந்தைகள் எழுத்தாளர் புகழ்மிகு விழியன் (எ) உமாநாத் செல்வன் அவர்கள், இந்த நூலைத் தான் எழுதிய நூல் போல எண்ணி வாய்மொழியாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் முடிந்த அளவுக்கு  அதிகமானோரிடம் கொண்டு சேர்த்த அன்பு நண்பர் ஷியாம் சுந்தர் முதலான பலருக்கும் என் அகம் குளிர்ந்த நன்றியைத் தெரிவித்து நிறைவடைகிறேன்! 

அதே நேரம், நண்பர்களே! இது வெறும் தரநிலைதான் (Ranking). போட்டி இன்னும் முடியவில்லை. முடியும்பொழுது வெறுமே இலவசமாகக் கொடுத்து முதலிடத்தில் வந்து விட்டதால் இந்த நூலை வெற்றி பெற்றதாக அறிவிக்க மாட்டார்கள். எந்த நூல் மக்களால் அதிகம் விரும்பப்பட்டது என்பதை வைத்துத்தான் வெற்றி பெறும் நூலை முடிவு செய்வார்கள். எனவே புதினத்தை நீங்கள் வாங்கினால் மட்டும் போதாது. படித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் அளித்தால் மட்டும்தான் இந்த நூல் போட்டியில் வெல்ல முடியும்.

இப்படி ஒரு நூல் எழுதியிருப்பதாக உங்கள் அனைவரிடமும் நான் முதன் முதலில் தெரிவித்தபொழுது கூடவே ஒரு தவறான தகவலையும் தந்து விட்டேன். அதாவது கடந்த ஓராண்டில் அமேசானில் ரூ.1500/- தொகைக்குப் பொருட்கள் வாங்கியவர்கள் மட்டுமே நூலைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டு விட்டேன். அதனாலோ என்னவோ இதுவரை எனக்குக் கருத்துக்களும் தரக்குறியீடுகளும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை.

ஆனால் நண்பர்களே! மீண்டும் சொல்கிறேன். அது முற்றிலும் தவறான தகவல்! நூலை வாங்கும் யார் வேண்டுமானாலும் உங்கள் கருத்தையும் தரக்குறியீட்டையும் தாராளமாக அளிக்கலாம்.

நூலை வாங்க நீங்கள் சென்ற https://amzn.to/2qFuL4z இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் Write a product review என இரண்டு பொத்தான்கள் இருக்கும். இரண்டில் எதை வேண்டுமானாலும் அழுத்தலாம். அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்தலாம். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.

பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, அதன் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும்.

கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டுமாவது அளித்து உதவலாம்.

போட்டியில் கலந்து கொள்ளும் பல நூல்கள் ஏறக்குறைய நூறு எண்ணிக்கை அளவுக்குத் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் பெற்றுள்ளன. ஆனால் உங்களுக்குப் பிடித்தமான இந்தக் கதை இதுவரை பெற்றிருக்கும் தரக்குறியீடுகள் மூன்றே மூன்றுதான். கருத்துக்களோ இரண்டே இரண்டுதான். இதுவரை 150 எண்ணிக்கைக்கும் மேல் நூல் விற்றிருக்கும் நிலையில் இப்படிக் கருத்துக்கள் குறைவாக இருந்தால் வாங்கியவர்களில் பெரும்பாலானோருக்குக் கதை பிடிக்கவில்லை எனப் பொருளாகி விடும்.

ஆகவே நூலை வாங்கிய அன்பர்கள் அனைவரும் அதை முழுமையாகப் படித்துத் தவறாமல் தங்கள் கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்!

அதே சமயம், நூல் இப்பொழுது இலவசச் சலுகையின் கீழ் இருக்கிறது என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறேன். சலுகை இந்திய நேரப்படி நாளை (08.12.2019) மதியம் 1.29 மணியுடன் நிறைவடைகிறது என்பதை மறந்து விடாதீர்கள்! 

செவ்வாய், டிசம்பர் 03, 2019

13ஆம் உலகில் ஒரு காதல்! - இப்பொழுது முழுக்க முழுக்க இலவசமாய்!

13aam ulagil oru kadhal in Top 100 Best selling Kindle version Sci-fi books list of Amazon
லகத் தமிழ் உள்ளங்களே!

உங்கள் விருப்பத்துக்குரிய ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ புதினம் நேற்று அமேசானின் அதிகம் விற்பனையாகும் அறிவியல் புனைவு கிண்டில் பதிப்பு நூல்கள் (Science fiction Kindle version Books) பட்டியலில் முதல் 100க்குள் இடம் பிடித்தது! மேலே உள்ள படத்தைப் பாருங்கள்!

இதற்கு முழுக் காரணம் உங்கள் பேராதரவுதான்! அதற்கு நன்றியறிதலாகவும் இதைக் கொண்டாடும் வகையிலும் உங்களுக்குப் பிடித்தமான இந்தப் புதினம் இன்று முதல் இலவசம்! ஆம்! இதுவரை கிண்டில் அன்லிமிட்டெட் திட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் இலவசமாக இருந்து வந்த நூல் இப்பொழுது முழுக்கவே இலவசம்!!

ஏற்கெனவே காசு கொடுத்து வாங்கிய நண்பர்கள் இதற்காக என் மீது சினம் கொள்ளாமல் தங்களுக்குப் பிடித்த இந்த நூல் இதன் மூலம் இன்னும் பலருக்கும் சென்று சேர இருப்பது குறித்து மகிழ்ந்து வாழ்த்த வேண்டுகிறேன்!

இந்தச் சலுகையால் நூலை வாங்குவது இப்பொழுது மிக மிக எளிதாகி விட்டது. வெறும் மூன்றே மூன்று சொடுக்குகள் போதும்! வாங்கி விடலாம்.

1) இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் https://amzn.to/2qFuL4z

2) இப்பொழுது வரும் பக்கத்தில் ‘Buy Now’ பொத்தானை அழுத்துங்கள்!

3) உள்நுழையச் (Login) சொல்லும். உங்கள் அமேசான் கணக்கின் மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றையும் அமேசான் கணக்கின் கடவுச்சொல்லையும் இட்டுப் பொத்தானை அழுத்துங்கள்.

இப்பொழுது நூலை வாங்கியதற்காக உங்கள் பெயரைக் குறிப்பிட்டு நன்றி எனக் காட்டும். அவ்வளவுதான்! நீங்கள் புதினத்தை வாங்கி விட்டீர்கள்!

இனி கூகுள் பிளே ஸ்டோருக்குள் சென்று Kindle எனத் தேடியெடுத்து அந்தக் குறுஞ்செயலியை உங்கள் ஆன்டிராய்டு கைப்பேசியில் நிறுவி விட்டால், மேலே சொன்னபடி உங்கள் அமேசான் கணக்கு விவரங்களைக் கொடுத்து அதில் உள்நுழைந்து லைப்ரரி எனும் பிரிவில் கதையைப் படிக்கலாம்.

ஆன்டிராய்டு கைப்பேசி மட்டுமில்லை ஆப்பிள் கைப்பேசி, ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் குளிகைகள் (tablets), விண்டோஸ் மற்றும் மேக் கணினிகள், கிண்டில் மின்-படிப்பான் (Kindle E-Reader) ஆகிய கருவிகளிலும் கிண்டில் குறுஞ்செயலி (Kindle app) வழியே நீங்கள் இந்த நூலைப் படிக்க முடியும்.

விரையுங்கள்! இந்தச் சலுகை (இந்திய நேரப்படி) டிசம்பர் 08, 2019 அன்று மதியம் 1.29 வரை மட்டுமே!

ஏற்கெனவே நூலை வாங்கியவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் மற்றும் வேண்டுகோள்!

நூல் பற்றிக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும் என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். பொறுத்தருள வேண்டும்! அது முற்றிலும் தவறான தகவல்! நூலை வாங்கும் யார் வேண்டுமானாலும் உங்கள் கருத்தையும் தரக்குறியீட்டையும் தாராளமாக அளிக்கலாம்.  

மேலே உள்ள https://amzn.to/2qFuL4z இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட கருத்துக்கள், தரக்குறியீடுகள் இருக்கும். அவற்றின் கீழே Write a product review என இரண்டு பொத்தான்கள் இருக்கும். இரண்டில் எதை வேண்டுமானாலும் அழுத்தலாம். அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்துங்கள். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் எனக்குத் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள். 

பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, அதன் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும்.  

கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டும் அளித்து உதவலாம்.

இதுவரை நூலைப் படித்த அனைவரும் தவறாமல் இதைச் செய்து உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்! 

சனி, நவம்பர் 23, 2019

13ஆம் உலகில் ஒரு காதல் - என் முதல் புதினம்! வெற்றி பெறக் கை கொடுப்பீர்!

13aam ulagil oru Kadhal

ன்பிற்கினிய நண்பர்களே!

அமேசான் கிண்டில் நடத்தும் Pen to Publish 2019 போட்டியில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன் உங்களை நம்பி! வாழ்வில் முதன் முதலாக ஒரு முழு நீளப் புதினம் எழுதி இந்தப் போட்டியில் வெளியிட்டிருக்கிறேன். வெளியிடப்பட்டிருக்கும் நூல்களில் அதிகமாக விற்பனையாகும் முதல் சில நூல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்துதான் வெற்றி பெறும் நூல்களைத் தேர்ந்தெடுப்பார்கள் இந்தப் போட்டியில். எனவே உங்கள் நண்பன் நான் வெற்றி பெற வேண்டுமானால் நீங்கள் மனம் வைத்தால்தான் முடியும்!  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சொல்லும் முன் உலகளாவிய இந்தப் பெரும் போட்டிக்குத் துணிந்து அனுப்பும் அளவுக்கு அப்படி என்ன கதை இது என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.

13ஆம் உலகில் ஒரு காதல்!

‘மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்னும் கவிதையில் உலகம் தழுவிய மனிதநேயத்தை வலியுறுத்தினார் பாவேந்தர். அதையும் தாண்டி ஒரு சிறு அடி எடுத்து வைக்கும் முயற்சியே இந்தக் கதை. ஆம்! இது உலகம் கடந்த மனிதநேயம்! அதே நேரம் நம் தாய்மொழிப் பற்றும் தமிழினக் கனவுகளும் கூடத் தொடக்கம் முதல் நிறைவு வரை இதில் இழையோடுவதை நீங்கள் உணரலாம். 

கதையின் தொடக்கத்திலேயே ஒரு பெண் தன் காதலன் தடுத்தும் கேட்காமல் பறந்து கொண்டிருக்கும் பறக்கும் தட்டிலிருந்து - பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து - கீழே குதித்து விடுகிறாள்.

ஏன்?...

தன் உயிரையும் துச்சமாக நினைத்து அவள் அப்படிச் செய்ய வேண்டிய காரணம் என்ன?...

காதலனைக் கூடப் பிரிந்து செல்லும் அளவுக்கு அவளைக் கீழ் நோக்கி இழுக்கும் அந்தக் கடமை எது?...

முதலில் அவளும் அவனும் பறக்கும் தட்டில் பயணிக்க வேண்டிய சூழல் வந்தது எப்படி?... 

உயரமான கட்டடத்திலிருந்தோ மலையுச்சியிலிருந்தோ கூட அல்ல, நேரடியாக வானத்திலிருந்து குதிக்கும் அந்தப் பெண்ணின் நிலைமை என்னாகும்?...

இந்தக் கேள்விகளுக்கான சுவையான விடைகள்தாம் இந்தக் கதை!

அடிப்படையில் இஃது ஒரு அறிவியல் புனைவு. வேற்றுலகில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிக் கதையில் வரும் விளக்கங்கள் வெறும் சுவைக்காகச் சேர்க்கப்பட்டவை அல்ல என்பதை, அவற்றுக்கான ஆதாரங்களை இன்றும் நீங்கள் இணையத்தில் காணலாம். தவிர, சங்கக் காலம் முதல் நாம் போற்றிப் பாதுகாத்து வரும் நம் தமிழ்ப் பண்பாட்டின் இரு கண்களான காதலும் வீரமும் இக்கதையின் அகமாகவும் புறமாகவும் திகழ்வதையும் பார்க்கலாம்.
 
இதிலுள்ள மனிதநேயமும் தியாகமும் உங்களைத் திகைக்க வைக்கும்... 
தமிழ் உணர்வு உங்களை நெகிழ வைக்கும்... 
காதல் உங்களை உருக வைக்கும்... 
அறிவியல் உங்கள் சிந்தனைக்கு விருந்தாகும்... 

ஒருமுறை படித்துப் பாருங்கள்! இதில் வரும் என் கதை மாந்தர்களை, குறிப்பாக என் மகிழினியையும் மதியையும் ழகரனையும் நீங்கள் காலத்துக்கும் மறக்க முடியாது. தாய்க்குத் தலைப் பிள்ளை போல  என் முதல் புதினமான இந்தத் தமிழ் மணக்கும் படைப்பை என் நண்பர்களான நீங்கள் கட்டாயம் கைவிட மாட்டீர்கள் எனும் நம்பிக்கையுடன் உங்கள் முன் தவழ விட்டிருக்கிறேன்!

நூலைப் படிப்பது எப்படி? 

நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் இந்த நூலை இலவசமாகவே படிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:

1) கைப்பேசியில் உள்ள உங்கள் கிண்டில் குறுஞ்செயலியை (Kindle app) திறவுங்கள்.

2) அதில் Gnaanapragaasan என்றோ 13ஆம் உலகில் ஒரு காதல் என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும்.

3) அந்தப் பக்கத்தில் உள்ள Read for Free பொத்தானை அழுத்தினால் போதும். அந்தக் கைப்பேசியிலிருந்து மட்டுமில்லை கணினி, குளிகை (Tablet) என எந்தக் கருவியிலுள்ள கிண்டில் குறுஞ்செயலி வழியாகவும் அல்லது கிண்டில் மின் படிப்பான் (Kindle E-Reader) வழியாகவும் இந்த நூலை நீங்கள் இலவசமாகப் படிக்கலாம்.

நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைக் காசு கொடுத்து வாங்கிக் கிண்டில் வழியாகப் படிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:

1) உங்கள் கைப்பேசியை எடுங்கள். அதில் உள்ள உலவியில் (browser) https://amzn.to/2qFuL4z என எழுதிச் சொடுக்குங்கள்.

2) இப்பொழுது வரும் பக்கத்தில் உள்ள Buy Now with 1-Click எனும் பொத்தானை அழுத்துங்கள். 

3) உள்நுழைய (Log in செய்ய) கேட்கும். உங்கள் அமேசான் கணக்கில் நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கிறீர்களோ அந்த மின்னஞ்சல் முகவரி அல்லது எந்தக் கைப்பேசி எண்ணைக் கொடுத்திருக்கிறீர்களோ அந்த எண் - இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்து, கடவுச்சொல்லையும் (password) கொடுத்தால் உள்நுழைந்து விடலாம்.

4) அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பற்று அட்டை (Credit Card), பண அட்டை (Debit Card), இணைய வங்கிச் சேவை (Net Banking), அமேசான் இருப்புத் தொகை (Amazon Pay Balance) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நூலை வாங்கிக் கொள்ளலாம். 

5) இப்பொழுது கூகுள் பிளே ஸ்டோருக்குள் சென்று கிண்டில் குறுஞ்செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவி, மேலே சொன்னபடி உங்கள் அமேசான் கணக்கு விவரங்களைக் கொடுத்து உள்நுழைந்து விட்டால் அதில் உள்ள லைப்ரரி எனும் பிரிவுக்குள் சென்று நூலைப் படிக்கலாம்.

இந்த இடத்தில் இன்னொன்றும் நான் சொல்ல வேண்டும். 

நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் உறுப்பினராக இல்லாவிட்டால் கூட இலவசமாக இந்த நூலைப் படிக்க முடியும். அதற்கு நீங்கள் இதுவரை அந்தத் திட்டத்தில் ஒருமுறை கூட இணையாதவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பின்வரும் வழிமுறைகளைப் பாருங்கள்.

1) கிண்டில் அன்லிமிட்டெட் உறுப்பினர்களுக்காக மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளில் 3ஆவது படிநிலைக்கு வந்ததும் Read for Free பொத்தானை அழுத்துங்கள்.

2)  இப்பொழுது கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் இணைவதற்கான பக்கம் வரும். அதில் உள்ள Join Kindle Unlimited எனும் பொத்தானை அழுத்துங்கள்.

3) உள்நுழைய (Log in செய்ய) கேட்கும். மேலே கூறியபடி உங்கள் அமேசான் கணக்கின் விவரங்களைக் கொடுத்து உள்நுழையுங்கள்.

4) இப்பொழுது வரும் பக்கத்தில் உங்கள் பற்று அட்டையையோ (Credit Card) ICICI, சிட்டி பாங்க், கோடக் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றின் பண அட்டையையோ (Debit Card) பயன்படுத்தி ரூ.2/- செலுத்தினால் அடுத்த ஒரு மாதத்துக்கு நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் உள்ள நூல்களை இலவசமாகப் படிக்கலாம். அந்த வகையில் இதையும் படிக்கலாம். 

5) இதைச் செய்து முடித்தவுடன் பணம் செலுத்தப் பயன்படுத்திய அட்டையைக் கணக்கிலிருந்து நீக்கி விடுங்கள். இல்லாவிட்டால் மாதந்தோறும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.169/- தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். அட்டையை நீக்குவது எப்படி என்பதை அறிய இந்தக் காணொலியைப் பாருங்கள் - https://www.youtube.com/watch?v=r-7KIw3tG74.

ஆனால் நண்பர்களே! இந்தப் போட்டியைப் பொறுத்த வரை எந்தெந்த நூல்கள் மிகுதியாக விற்பனையாகி, நிறைய கருத்துரைகளையும் நல்ல தரக்குறியீடுகளையும் (Ratings) பெறுகின்றனவோ அந்தச் சில நூல்கள் மட்டும்தான் நடுவர்களால் பரிசீலிக்கப்படும். அவற்றில் மூன்றுதான் முதல் மூன்று பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்படும். எனவே நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் மூலம் படிப்பதை விடக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பது என் வெற்றி வாய்ப்புக்கு அதிக உதவியாக இருக்கும். விலை வெறும் ரூ.49/- மட்டுமே. இதை விடக் குறைவாக விலை வைக்கப் போட்டியின் நெறிமுறைகள் இடமளிக்காது என்பதால்தான் இந்த விலை வைத்திருக்கிறேன். என்றாலும் கதையைப் படித்துப் பார்த்தால் கண்டிப்பாக விலை குறைவு என்றுதான் நினைப்பீர்கள்.

அதற்காக நீங்கள் எல்லோருமே நூலைக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என நான் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் மூலம் படிப்பதும் என் வெற்றி வாய்ப்புக்கான உதவிதான். இரண்டில் இதைத் தேர்ந்தெடுப்பது என்பது முழுக்க முழுக்க உங்கள் விருப்பமே! படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் மறவாமல் அளிக்க வேண்டுகிறேன்! 

*கருத்தும் தரக்குறியீடும் அளிப்பது எப்படி?

மேலே உள்ள https://amzn.to/2qFuL4z இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் Write a product review என ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்துங்கள். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் எனக்குத் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.

பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, அதன் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும். 

கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டும் அளித்து உதவலாம்.

இதுவரை நூலைப் படித்த அனைவரும் தவறாமல் இதைச் செய்து உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்! 

கடைசி நாள்: டிசம்பர் 14, டிசம்பர் 31, 2019. அதற்கு முன் படித்து விட வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
காதலைச் சொல்லிவிட்டு, ஒப்புதல் தருவாளோ மாட்டாளோ எனும் பரிதவிப்போடு விரல்நுனியில் நிற்கும் இளைஞனின் மனநிலையுடன் உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கும் நண்பன். 

* பி.கு.: கட்டுரையில் முன்பு இருந்த தவறான தகவல் நீக்கப்பட்டு இந்தப் பகுதி புதிதாகச் சேர்க்கப்பட்ட நாள்: 05.12.2019.

வியாழன், அக்டோபர் 31, 2019

இனியாவது சுர்ஜித்துகளைப் பறிகொடுக்காமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை என்ன?

Last kisses to Sujith with tears
போய்விட்டான் சுர்ஜித்!

தனக்காக மேலே எத்தனை இலட்சம் நெஞ்சங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன...

எத்தனை கோடி விழிகள் கண்ணீரை வடித்துக் கொண்டிருக்கின்றன...

எத்தனை நூறு கரங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றன...

எப்படிப்பட்ட ஓர் அன்புலகம் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது...

என எதையுமே பார்க்காமல் போய்விட்டான் சுர்ஜித்!

ஆனால் போனவன் சும்மா போகவில்லை. இக்கட்டான பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கு உருப்படியாக இன்னும் எதையுமே கண்டுபிடிக்காத சமூகம் இது எனும் உண்மையை நம் முகத்தில் அறைவது போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.

அறிவியலாளர்களும் தொழில்நுட்பர்களும் சந்திராயன் போன்ற திட்டங்களின் மூலம் நமக்கு நிலவைக் காட்டி நாட்டுப்பற்றுச் சோறூட்டிக் கொண்டிருக்கும் வேளையில் “கொஞ்சம் குனிஞ்சு உங்க காலுக்குக் கீழே பாருங்கடா” என்று நம் பின்னந்தலையில் அடித்து விட்டுப் போயிருக்கிறான்.

பெருநிறுவனப் பணமுதலைகளுக்கான கண்டுபிடிப்புகளே மக்களுக்கான பெருமிதமாகவும் நம்ப வைக்கப்படும் இத்திருநாட்டில் மக்களுக்கான உண்மையான அறிவியலும் தொழில்நுட்பமும் குறித்த கேள்விகளை எழுப்ப வைத்து விட்டு மறைந்திருக்கிறான்.

அவனுடைய இப்பேர்ப்பட்ட உயிர் ஈகம் (தியாகம்) பயனின்றிப் போகக்கூடாது!

இதுவரை எத்தனையோ குழந்தைகளின் உயிரை ஆழ்துளைக் கிணறுகள் பலி வாங்கியிருக்கின்றன. ஆனால் இந்தக் குழந்தைக்குக் கிடைத்த அளவுக்குப் பரவலான கவனம் இதுவரை வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. இந்த ஒரு மீட்புப் பணியில் கையாளப்பட்ட அளவுக்குத் தொழில்நுட்பங்கள் இதுவரை வேறெங்கும் கையாளப்பட்டதாகவும் தெரியவில்லை. இவை எதுவும் வீணாகக்கூடாது! எனவே நடந்த இந்த மீட்புப் பணி முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்!

சிறுவன் கிணற்றில் விழுந்த அந்த முதல் நொடியிலிருந்து உயிரற்ற நிலையில் அவன் மீட்கப்பட்ட கடைசி நொடி வரையில் என்னென்ன நடவடிக்கைகளெல்லாம் மேற்கொள்ளப்பட்டன என்பது ஒன்று விடாமல் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்!

எத்தனை விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

எத்தனை விதமான கருவிகள் கொண்டு வரப்பட்டன?

என்னென்ன விதமான செயல்நுட்பங்களும் (technique) தொழில்நுட்பங்களும் முயன்று பார்க்கப்பட்டன?

அவையெல்லாம் என்னென்ன காரணங்களால் தோல்வியடைந்தன?

வேறு எந்த விதமான கருவிகள் / தொழில்நுட்பங்கள் இருந்திருந்தால் சிறுவனைக் காப்பாற்றியிருக்க முடியும்?

இவை அத்தனையும் விரிவாக நுட்பமாகப் பதிவாக வேண்டும்!

இத்தோடு மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இதுவரை ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் இன்ன பிற இக்கட்டான பகுதிகளிலிருந்தும் குழந்தைகளை மீட்க மேற்கொள்ளப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் இதே போல் விரிவாகத் திரட்டப்பட்டு மொத்தமாக ஓர் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.

இதன் மூலம் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியோருக்கான மீட்பு நடவடிக்கை பற்றிய மொத்த அறிவும் ஒரே இடத்தில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இனி ஒரு குழந்தைக்கு இப்படி நடந்தால் குழந்தையின் விவரங்கள், சூழலின் விவரங்கள் போன்றவற்றை அந்த இணையத்தளத்தில் உள்ளிட்டு அதே போல் முன்பு மாட்டிய குழந்தையை எப்படி மீட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விரைவாகக் குழந்தையைக் காப்பாற்ற முடியும். ஒருவேளை அதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சூழலிலான முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும் ஏன் தோல்வியடைந்தன என்பதைத் தெரிந்து கொண்டு அத்தகைய முயற்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் நேரத்தைக் குறைக்க முடியும்.

எத்தனையோ புதிய கருவிகளும் தொழில்நுட்பங்களும் சுர்ஜித் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டன என ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இவையெல்லாம் முறையாகப் பயிற்சி பெற்றவர்களால்தாம் முயன்று பார்க்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கென முழுமையான ஒரு மீட்புத் திட்டம் (well-designed plan) வடிவமைக்கப்பட்டால்தான் அதற்கான பயிற்சிகளை மீட்புக் குழுவினருக்கு வழங்கவும் முடியும். அப்படி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட முறையான திட்டம் என இதுவரை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே உடனடியாகத் தமிழ்நாடு அரசு இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். இதில் நம்மிடம் இருக்கும் தலைசிறந்த பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், அறிவியலாளர்கள், குழந்தை மருத்துவர்கள், குழந்தை உளவியலாளர்கள், மண்ணியலாளர்கள், நீரியலாளர்கள், தீயணைப்புத்துறை போன்ற பேரிடர் மேலாண்மை வீரர்கள், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் என அனைத்துத் தரப்பு வல்லுநர்களும் இடம்பெற்றுத் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் எப்படிப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்தும் குழந்தைகளை மீட்பதற்கான முழுமையான ஒரு மீட்புத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். வடிவமைக்கப்பட்டவுடன் தீயணைப்புத்துறையினருக்கும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் அதைச் செயல்படுத்துவதற்கான முழுமையான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

தன்னார்வலர்கள் சிலரும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் சிலரும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தைகளை மீட்கும் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். இரண்டு இயந்திர மனிதர்களே கூட உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை இவை அத்தனையும் வெறும் போல்மப் படைப்புகளாகத்தாம் (prototypes) இருக்கின்றன. இந்தத் துயரத் தோல்விக்குப் பிறகாவது அரசு இனியும் இது போன்ற முயற்சிகளைக் கிடப்பில் போட்டு வைக்காமல் உடனடியாக இவை அனைத்தையும் முறையாக ஆராய்ந்து தகுதியுள்ளவற்றுக்கு ஏற்பிசைவு வழங்கி ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தலா ஒரு கருவி எப்பொழுதும் ஆயத்தமாக இருக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் முன்னால், துணை முதல்வர் உறுதியளித்தது போல் உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ள பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டு சரியான முறையில் மூடப்பட வேண்டும்.

ஆனால் இஃது அவ்வளவு எளிதான வேலை இல்லை. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மாநிலம் முழுக்க இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பதாக நீரியல் வல்லுநர் எஸ்.ஜனகராஜன் கூறுகிறார். எனவே அரசு மட்டுமே முயன்று இவை அனைத்தையும் கண்டறிந்து விட முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால் அதற்கான காலமும் வெகுவாக நீடிக்கும். எனவே பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் தமிழ்நாட்டில் எங்கே இருந்தாலும் உடனடியாக மக்கள் அதை அரசுக்குத் தெரிவிக்க அழைப்பு மையம் ஒன்றையும் அதற்கான இலவச அழைப்பு எண் ஒன்றையும் அரசு ஏற்படுத்த வேண்டும்.

எப்படியாவது தன்னை அம்மா மடியில் சேர்த்து விடுவார்கள் என்று நம்மை நம்பிக் காத்திருந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கடைசி வரை காப்பாற்றாமலே விட்ட நாம் அந்தக் கொடும்பெரும் துரோகத்துக்குக் கழுவாய் தேடவாவது இவற்றையெல்லாம் செய்தாக வேண்டும்! அப்படிச் செய்தால்தான் இனியாவது நம் சுர்ஜித்துகளைப் பறிகொடுக்காமல் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்யுமா அரசு?
❀ ❀ ❀ ❀ ❀
Make Sujith death will be the last
நன்றி: தினச்செய்தி.
படம்: நன்றி www.ripbook.com

தொடர்புடைய வெளியிணைப்புகள்:
ஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்? சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி?
`சுஜித் உடலைக் காட்டாதது ஏன்?' - கும்பகோணம் தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன்

இந்தக் கட்டுரையைக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் பகிர்ந்து இன்னொரு சுஜித்துக்கு இப்படி ஆகாமல் தடுக்க நீங்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாமே! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

புதன், அக்டோபர் 02, 2019

கீழடி! – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா?

Is Keezhadi a Tamil civilization or Dravidian civilization
மிழ் வரலாற்றுத் துறையிலேயே ஒரு நன்னம்பிக்கை முனையாக வெளியாகியிருக்கிறது கீழடி அகழ்வாராய்ச்சியின் நான்காம் கட்ட ஆய்வு அறிக்கை!

இதுவரை கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இலக்கியங்கள், சில பல அகழ்வாராய்ச்சிகள் மூலமாக மட்டுமே தமிழின் பழமையை நிலைநாட்டி வந்தோம். ஆனால் இப்பொழுது இவை அனைத்துக்கும் ஆதாரமாக, இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு நகரமே கிடைத்திருக்கிறது கீழடியில்! தமிழ் மக்கள் துள்ளிக் குதித்துக் கொண்டாட வேண்டிய நேரம் இது! இதுவே இந்துச் சமயத்துக்கு ஆதரவாக இப்படி ஏதாவது ஓர் ஆய்வு முடிவு வெளியாகியிருந்தால் இந்நேரம் அவர்கள் தங்களுக்குள் உள்ள எல்லா வேறுபாடுகளையும் மறந்து கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். ஆனால் நாமோ இப்பொழுதும் திராவிட – தமிழ்த் தேசியச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்; அதுவும் கீழடியை வைத்தே!

திராவிடம் என்றால் என்ன என்பது பற்றி நம் மக்களுக்குப் பாடத்திட்டத்திலேயே கற்பித்திருந்தால் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தறுவாயில் அதைச் சீர்குலைக்கும் அளவுக்கு இப்படி ஓர் அடையாளக் குழப்பமும் தலைக்குனிவும் நமக்கு ஏற்பட்டிருக்காது. எனவே இப்பொழுதாவது திராவிடம் எனும் கோட்பாடு பற்றி, கீழடியை திராவிட நாகரிகம் எனச் சொல்வது சரியா என்பது பற்றித் தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் வாருங்கள்.

திராவிடம் என்பது என்ன?

தமிழ் மொழியின் இன்னொரு பெயரே திராவிடம். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் மக்கள் அயல்நாடுகளோடு வணிகத் தொடர்பு வைத்திருந்தது நாம் அறிந்ததே. அதனால் அந்தக் காலத்திலேயே தமிழ் இனம் உலகெங்கும் அறிமுகமாகி இருந்தது. ஆதலால் அன்றைக்கே வெளிநாடுகளில் தமிழர்களையும் தமிழகத்தையும் குறிக்கச் சொற்கள் உருவாயின. ஆனால் ழகரம் அயல்நாட்டு மொழிகளில் இல்லாததால் அவர்கள் மொழியின் பலுக்கலுக்கேற்பத் (உச்சரிப்புக்கேற்ப) தமிழகம் என்பதை ‘தமிரிகா’ (Damirica), ‘திமிரிகே’ (Dimirike) என்று பலவாறாகவும் தமிழர் என்பதை ‘திரவிடா / திராவிடர்’ (Dravida / Dravidians) என்றும் குறிப்பிட்டனர். இதையொட்டி திராவிடர்கள் பேசும் மொழியான தமிழும் அவர்கள் பலுக்கலில் ‘திரவிடம் / திராவிடம்’ ஆனது!

ஆக திராவிடம் - தமிழ் இரண்டும் ஒன்றே! தமிழின் இன்னொரு பெயர்தான் அது!

இதற்கு ஆதாரம்...?

நிறையவே உண்டு!

முதலில் மொழி அடிப்படையில் பார்ப்போம். மொழியியலில் சொற்பிறப்பியல் (Etymology) என்பதாகவே ஒரு துறை உண்டு. ஒரு சொல் எப்படி, எதிலிருந்து, எவ்வாறு உருவாகிறது என்பதை ஆணி வேர் வரை சென்று அலசும் மொழி அறிவியல் இது.

இதன் அடிப்படையில் தமிழ் எனும் சொல்தான் வெளிநாட்டுப் பலுக்கல்களுக்கேற்ப தமிசு > தமிள் > தமிளா > தமிலா எனக் கொஞ்சம் கொஞ்சமாய் மருவிக் காலப்போக்கில் ரகர ஒலிப்பு இடையில் சேர்ந்து அல்லது சேர்க்கப்பட்டும் மகரம் வகரமாகத் திரியும் திராவிட ஒலிப்பியல்பு காரணமாகவும் ‘திராவிடம்’ ஆனது என்று எழுத்து வேறு ஒலிப்பு வேறாக – அக்கு வேறு ஆணி வேறாக – பிட்டுப் பிட்டு வைக்கிறார் உலகப் புகழ்மிகு இந்திய இலக்கிய மற்றும் மொழியியல் ஆராய்ச்சியாளர் கமில் சுவலபில் அவர்கள்.

இது, இன்ன பிற அறிஞர்களின் இது போன்ற விளக்கங்கள் காரணமாய்த் தமிழ் எனும் சொல்தான் ‘திராவிடம்’ எனும் சொல்லுக்கு மூலம் என்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.¹

அடுத்து வரலாற்று ஆதாரங்கள்!

²பொ.ஊ. 1ஆம் (1st CE / கி.பி. 1) ஆண்டைச் சேர்ந்த ‘செங்கடல் செலவு’ (Periplus of the Erythraean Sea) எனும் கிரேக்கக் கடல் வழிப் பயணக் கையேடு அதன் பழமை காரணமாக உலகளவில் அரிய வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது. செங்கடல் பகுதியில் உள்ள நாடுகளையும் அரசாட்சிகளையும் பற்றிப் பல குறிப்புகள் கொண்ட இந்நூலில் சேர நாட்டைச் சேர்ந்த தொண்டி, முசிறி ஆகிய பண்டைத் தமிழகப் பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள இடத்தில் தமிழகம் எனும் சொல் ‘தமிரிகா’ (Damirica) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த தமிரிகா என்பது தென்னிந்திய திராவிடர்களான தமிழர்களின் நாடு” என்றே ஒரு குறிப்பும் 1912ஆம் ஆண்டு வெளிவந்த அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது.

Names, routes and locations of the Periplus of the Erythraean Sea


இதே போல் பொ.ஊ. 150ஆம் ஆண்டைச் சேர்ந்த கிரேக்கப் புவியியல் கணித மேதை தாலமி (Ptolemy) தனது ‘புவியியல் வழிகாட்டி’ (Geōgraphikḕ Hyphḗgēsis) எனும் நூலில் தமிழ்நாட்டை ‘திமிரிகே’ (Dimirike) என்று குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுக்கெல்லாம் முன்னதாக, ³பொ.ஊ.மு. 425ஆம் (425 BCE / கி.மு. 1) ஆண்டில் – அதாவது 2400 ஆண்டுகளுக்கு முன்னர் – வரலாற்று ஆசிரியர் எரடோடசு (Herodotus) அவர்கள் “திராவிடர்களின் நிறம் எத்தியோப்பியர்களைப் பெரிதும் ஒத்திருக்கிறது” என்று ஓர் ஆவணத்தில் குறிப்பிட்டிருப்பதாக அதன் மொழிபெயர்ப்புகள் காட்டுகின்றன.

அவ்வளவு ஏன், சேர – சோழ – பாண்டியர் ஆகிய தமிழ் மூவேந்தர்களே தங்கள் ஆவணங்களில் நம் தமிழ் நிலத்தை திராவிட தேசம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று ‘செங்கடல் செலவு’ நூலின் குறிப்புகள் பகுதி அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளது. (பார்க்க

செவ்வாய், செப்டம்பர் 17, 2019

பெரியார் மீண்டும் பிறக்காமலிருக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் சிறப்புப் பதிவு

What should you do if you don't want Periyar to born again?
லகத்தைப் பொறுத்த வரை பெரியார் என்பவர் மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர், பகுத்தறிவாளர், பெண்ணியவாதி, சீர்திருத்தவாதி எனப் பல முகங்கள் கொண்டவர். ஆனால் யாருக்காக இறுதி மூச்சு வரை அவர் போராடினாரோ அந்தத் தமிழ் மக்களிடம் பெரியார் யார் எனக் கேட்டால் உடனே வரும் மறுமொழி “அவர் இறைமறுப்பாளர்” என்பதுதான்.

பெரியார் பற்றிய நம் மக்களின் புரிதல் இவ்வளவுதான்! அதனால்தான் அவரது இறை மறுப்பு நிலைப்பாட்டையே ஒரு பெரிய குற்றச்சாட்டாக இன்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் பலர்.

உண்மையில் இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. அப்படிப் பார்த்தால் உலகின் போக்கையே மாற்றிய மாபெரும் அறிஞர்கள், அறிவியலாளர்கள், தலைவர்கள் பலரும் இறை மறுப்பாளர்களே. அதற்காக அவர்கள் எல்லோரையும் நாம் வெறுத்து விட்டோமா?

உலகப் புகழ் பெற்ற போராளியான சே குவேரா இறைமறுப்பாளர்தாம். அதற்காக அவர் படம் பொறித்த கொசுவச்சட்டையை (T-Shirt) நாம் அணிவதில்லையா?

உளவியல் பகுப்பாய்வின் தந்தை (Father of psychoanalysis) எனப் போற்றப்படும் சிகமண்ட்டு பிராய்டு (Sigmund Freud) கடவுள் மறுப்பாளர்தாம். அதற்காக உளவியல் படிக்கும் இறை நம்பிக்கையுள்ள மாணவர்கள் அவருடைய கோட்பாடுகளை, சிந்தனைகளைப் படிக்காமல் புறக்கணித்து விடுகிறார்களா?

கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான பியரி கியூரி கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்தாம். அதற்காக நாம் புற்றுநோய் வந்தால் கதிரியக்கப் பண்டுதம் (radioactivity treatment) வேண்டா என்கிறோமா?

“இரந்துதான் (பிச்சை எடுத்துத்தான்) உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில்தான் கடவுள் சிலரை இவ்வுலகில் படைத்திருக்கிறான் என்றால் அப்படிப் படைத்த கடவுளும் அவர்களைப் போலவே இரந்து திரிந்து அழியட்டும்” என்று கடவுளுக்கே தெறுமொழி (சாபம்) இட்டவர் வள்ளுவர். அதற்காகத் திருக்குறளை நாம் தூக்கி எறிந்து விட்டோமா?

உண்மையில் பெரியார் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்த தொண்டுகளின் பட்டியல் மிகப் பெரியது! தீண்டாமைக்கு எதிராகப் போராடினார், பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார், தேவதாசி முறை ஒழிப்புக்குத் துணை நின்றார், தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தினார், தமிழர்களுக்கென ஒரு தனி அரசியல் பெருவழியை வகுத்தளித்தார், எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுள் நம்பிக்கையை எதிர்த்த பெரியார்தாம் கோடிக்கணக்கான மக்கள் கோயிலுக்குள் சென்று தாங்கள் நம்பும் கடவுளை வழிபடவும் உரிமை பெற்றுத் தந்தார்!

இன்னும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். பொறுப்பான அரசியல் தலைவராக அவர் தன் துறைக்கு அளித்த பங்களிப்புகள் இவ்வளவு இருக்க, எப்பொழுது பார்த்தாலும் அவரை இறைமறுப்பாளர் எனும் ஒற்றைப் புள்ளிக்குள்ளேயே சிறை வைக்கப் பார்க்கிறோமே ஏன்?

சே குவேரா, பிராய்டு, கியூரி, திருவள்ளுவர் போன்றோரையெல்லாம் கடவுள் பற்றிய அவர்களின் நிலைப்பாடு குறித்துப் பொருட்படுத்தாமல் துறை சார்ந்த அவர்களின் பங்களிப்பை மட்டும் கருத்தில் கொண்டு கொண்டாடும் நாம் பெரியாரை மட்டும் மீண்டும் மீண்டும் கடவுள் மறுப்பாளர் என ஒதுக்கி வைப்பது ஏன்?

Periyar's Pilliyar Doll Demolishing Riot

நீங்கள் கேட்கலாம், “மற்ற இறைமறுப்பாளர்களைப் போலப் பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதோடு மட்டுமா நிறுத்தினார்? பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமரைச் செருப்பால் அடிப்பது எனக் கடவுள் உருவங்களை இழிவுபடுத்தினாரே! அப்படிப்பட்டவரை மற்ற கடவுள் மறுப்பாளர்களை ஏற்பது போல் எப்படி எளிதில் ஏற்க முடியும்?” என்று.

ஆம்! பெரியார் அப்படியெல்லாம் செய்தார்தான்; மறுக்கவில்லை. ஆனால் ஏன் செய்தார்? கடவுளை இழிவுபடுத்தவா?

நாம் ஒருவரை இழிவுபடுத்த வேண்டுமானால் முதலில் அப்படி ஒருவர் இருக்க வேண்டும் அல்லது இருப்பதாக நாம் நம்பவாவது வேண்டும். ஆனால் பெரியாரோ கடவுளே இல்லை எனும் கொள்கை கொண்டவர். இல்லாத ஒருவரை (அல்லது இல்லாதவர் என அவரால் நம்பப்பட்டவரை) அவரால் எப்படி இழிவுபடுத்த முடியும்? இது கேட்கவே மடத்தனமாக இல்லையா?

சிலர், இந்துக்களை, அதிலும் பார்ப்பனர்களைப் புண்படுத்தத்தான் பெரியார் அப்படியெல்லாம் செய்தார் எனக் குற்றம் சுமத்துகிறார்கள்.

எந்தத் தமிழ் மக்களுக்காகப் பெரியார் காலமெல்லாம் பேச்சு, எழுத்து, போராட்டம் என எல்லாவற்றையும் நடத்தி வந்தாரோ அவர்கள் அத்தனை பேரும் அன்றும் சரி, இன்றும் சரி தங்களை இந்துக்கள் என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அவர்களைப் புண்படுத்திப் பெரியாருக்கு என்ன பலன்? அப்படிச் செய்தால் அவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தானே வரும்? அப்புறம் அவர் சொல்வதையெல்லாம் அவர்கள் எப்படிக் கேட்பார்கள்?

தவிர, பார்ப்பனர்களைப் புண்படுத்த வேண்டுமானால் அவர்களை மட்டும் நினைவூட்டும் குறியீடுகள் எத்தனையோ இருக்கின்றன; பூணூல், கீதை, மனுநீதி, வேள்விக் குண்டம் எனவெல்லாம். அவற்றில் ஒன்றைத்தான் பெரியார் தேர்ந்தெடுத்திருப்பாரே ஒழிய, தமிழர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள் உருவங்கள் மீதா கை வைப்பார்?

ஆக, இவை அனைத்தும் தவறு! உண்மையான காரணம் என்ன தெரியுமா?

சனி, ஆகஸ்ட் 31, 2019

செவ்வாய்க் கோளுக்குச் சென்றவர்களின் பெயர்ப் பட்டியலில் நீங்களும் இடம்பெற வேண்டுமா? - இதோ நாசா வழங்கும் இலவச வாய்ப்பு!

Are you willing to go to Mars?
ரு படத்தில் வடிவேலுவிடம் “ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் எடுத்து வை! இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ!” என்று போதைப்பொருளுக்குப் பணம் கேட்டு மிரட்டுவார் மயில்சாமி.

வெறும் போதை மயக்கத்தின் மூலம் செவ்வாய்க் கோளுக்குப் போகவே ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்றால், அது கூட இல்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே உங்களை... இல்லை இல்லை... உங்கள் பெயரைச் செவ்வாய்க்கோளுக்கு அழைத்துப் போக இன்று முன்வந்திருக்கிறது நாசா.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய்க் கோள் பற்றிப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. உலாவிகளை (Rovers) அந்தக் கோளில் தரையிறக்கி நேரிடையாகவே பல சோதனைகளையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே. இதன் அடுத்த பகுதியாக வரும் ஆண்டில் ‘மார்சு 2020 (MARS 2020)’ எனும் செயல்திட்டத்தின் கீழ் மீண்டும் இன்னோர் உலாவியைச் செவ்வாயில் இறக்கத் திட்டமிட்டுள்ள நாசா இதில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் நாமும் பெயரளவில் செவ்வாய்க்குப் போக முடியும். எப்படி எனக் கேட்கிறீர்களா?

சனி, ஆகஸ்ட் 24, 2019

இந்தியப் பொருளாதாரமும் மக்கள் மனநிலையும் - பகடிக் காணொலி (Troll Video)


"இடுக்கண் வருங்கால் நகுக" என்றார் வள்ளுவர். ஆனால் அண்மைக்காலமாக நாட்டில் நடப்பவற்றையெல்லாம் பார்த்தால் சிரித்துச் சிரித்தே பித்துப் பிடித்து விடும் போல் இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் கடந்த ஓரிரு நாட்களாகப் பெரிதும் விவாதத்துக்குள்ளாகி இருக்கும் பொருளாதாரச் சரிவு. 

பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, எரிபொருள் விலைத் தீர்மானத்தைத் தனியாரிடம் கையளித்தல் என அடுக்கடுக்காக இவர்கள் கொண்டு வந்த பொருளாதாரச் மாற்றங்களால் மக்களான நாம் ஓட்டாண்டிகளானபொழுது எல்லாம் நாட்டுக்காகத்தானே என்று பொறுத்துக் கொள்ளச் சொன்னார்கள். இப்பொழுது நாட்டுப் பொருளாதாரமும் தள்ளாடுகிறது என்றால் மேலே உள்ள நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. அதையே இன்றைய நாட்டு நிலைமைக்கேற்பப் பகடிக் காணொலியாக (Video Troll) மாற்றியிருக்கிறேன். ஏதோ இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் உங்களைச் சிரிக்க வைக்க என்னாலான முயற்சி.
❀ ❀ ❀ ❀ ❀
காணொலி பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து அவர்களையும் சிரிக்க வையுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

வியாழன், ஜூலை 25, 2019

வானதி சீனிவாசன் சொன்ன பச்சைப் பொய்! | பகடிச்சித்திரப் பதிவு (IMAGE POST)

தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக அண்மையில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் அதனால் ஏற்படக்கூடிய கேடுகள் பற்றிப் புள்ளிவிவரங்களுடனும் அசைக்க முடியாத வாதங்களுடனும் மிகச் சிறப்பாகப் பேசியிருந்தார். சமூக அக்கறையாளர்கள் சிலர் அவர் பேச்சிலிருந்து பத்துக் கேள்விகளை மட்டும் தொகுத்து வெளியிட்டனர்.

பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் அவர்கள் இன்று அந்தப் பத்துக் கேள்விகளுக்கு விடைளிக்கிறேன் பேர்வழி என்று வெளியிட்ட பத்துப் படப் பதிவுகள் வெறுப்பேற்றலின் உச்சம். எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை. அவ்வளவு தாங்குத்தன்மை (சகிப்புத்தன்மை) எனக்கு இல்லை. சிலவற்றுக்கு மறுமொழி அளித்தேன். ஒன்றே ஒன்றை மட்டும் படப்பதிவு செய்து வெளியிட்டுள்ளேன். அந்தப் பதிவைக் கீழே நீங்களே பாருங்கள்!

சனி, ஜூலை 06, 2019

நிர்மலா சீதாராமனின் திடீர்த் தமிழ்ப் பற்று - காரணம் என்ன?

Nirmala Seetharaman with mocking smile and Tamil MPs with meaningful smile

நேற்று நிதிநிலை அறிக்கைத் தாக்கலின்பொழுது நாடாளுமன்றத்தில் சுவையான ஒரு நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.

தங்கள் ஆட்சியின் வரிமுறை பற்றி விளக்க முயலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூற்றிலிருந்து "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே..." எனத் தொடங்கும் பாடலை மேற்கோளாகக் காட்டி அதற்குப் பொருள் என்ன என்று கேட்கிறார். உரையின் தொடக்கத்தில் பாடலை இயற்றியவரின் பெயரை அவர் தவறாகப் படித்தபொழுது திருத்திய தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடலுக்குப் பொருள் கூறத் தெரியாமல் விழிக்க அவை சிரிக்கிறது. எதிர்வினையாகச் சிரித்தபடியே தலையாட்டுகிறார்கள் மாறனும் ராசாவும். இதோ நிகழ்வின் காணொலி கீழே.

வெள்ளி, ஜூன் 07, 2019

தாய்மொழி - சிறுகதை

Thaaimozhi - Short story
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.

“நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.

“உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,

“சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...

ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட! 


ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.

அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?... 

**********

இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.

“லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.

“சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,

“நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”

வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,

“ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,

“ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.

“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்