.

செவ்வாய், மார்ச் 31, 2015

உச்சநீதிமன்றத்துக்கும் அச்சமில்லாப் பெண்ணுக்கும் நன்றி! {50ஆவது பதிவு!}


Supreme Court of India

வற்றைத் தட்டிக் கேட்க உரிமை கோரும்பொழுதே, நல்லதைப் பாராட்ட வேண்டிய கடமையும் நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது!

அவ்வகையில், தமிழர்களின், இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரின் நெஞ்சார்ந்த நன்றிக்குரிய விதத்தில் அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்! தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவு செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதுதான் அது!

அதிகாரத்தில் இருப்பவர்களும் செல்வாக்குப் பெற்றவர்களும் என்ன வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம்; ஆனால், மக்கள் அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசி விடக்கூடாது என்று சொல்லாமல் சொல்லும் வகையில் இயற்றப்பட்ட இந்தப் பிரிவை வைத்து அரசியலாளர்கள் அடித்த கூத்துக்கள் நாம் அறியாதவையல்ல.

கருத்துப்படம் வரைந்தாலே கழுத்தைப் பிடித்துச் சிறையில் தள்ளினார்கள், முகநூலில் நிலைத் தகவல் போட்டாலே கைகளுக்குக் காப்புப் போட்டார்கள், அதற்கு விருப்பம் தெரிவித்தால் கூட அவரையும் சேர்த்து உள்ளே தள்ளினார்கள்!

சுதந்திர நாடு, உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டு ‘கருத்து வெளியிட்டால் கைவிலங்கு, விருப்பம் தெரிவித்தால் சிறையரங்கு’ என்று இப்படி அரசர் கால அடக்குமுறைச் சட்டங்களைப் போன்ற ஒரு சட்டத்தை வைத்து நாடு நடத்துகிறோமே என்கிற வெட்கம் நாட்டை ஆள்பவர்களுக்குத் துளியும் இல்லாவிட்டாலும், நாட்டுக் குடிமகள் ஒருவருக்கு இது பற்றிய கவலையும், சட்டப்பூர்வமாக இதற்கு என்ன செய்யலாம் என்கிற தெளிவான பார்வையும் முயற்சியும் இருந்ததன் விளைவு இதோ, இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு!

“தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவு மக்களின் கருத்துரிமையை நேரடியாகப் பாதிக்கிறது. இந்தச் சட்டப் பிரிவின் மூலம் பேச்சு, கருத்து சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பது தெளிவு. ‘எரிச்சலூட்டுவது’, ‘தர்மசங்கடம் ஏற்படுத்துவது’, ‘ஆட்சேபகரமானது’, ‘பாதிப்பை ஏற்படுத்துவது’ போன்ற வார்த்தைகள் தெளிவில்லாதவை. இதைக் காவல்துறையினர் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். குற்றம் சாட்டப்படுபவர் நல்லெண்ணத்தில் பதிவேற்றம் செய்த கருத்துக்குத் தவறான அர்த்தம் கற்பித்து அவரைக் காவல்துறையினர் கைது செய்ய முடியும். இது அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் தனிமனிதக் கருத்து சுதந்திர உரிமைக்கு எதிரானது. அதனால், இந்தச் சட்டப் பிரிவை நீக்கி ஆணையிடுகிறோம்” என்று இந்திய நீதித்துறைக்கு என்றென்றும் பாடமாக வைக்கக்கூடிய அளவுக்கு ஓர் அரும்பெரும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிபதிகள் செலமேசுவரர், நாரிமன் அமர்வு.

இதற்கான பொதுநல வழக்கைத் தொடுத்து, இப்படி ஒரு தீர்ப்புக் கிடைக்கக் காரணமாக விளங்கிய இளம்பெண் சிரேயா சிங்கால் அவர்கள்தாம் இதில் நம் முதல் நன்றிக்கு உரியவர்.

Shireya Singalவழக்குரைஞர் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குறிப்பிட்ட இந்தச் சட்டப் பிரிவு மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்படுவது கண்டு கொதித்தெழுந்து கடந்த 2012ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்திருக்கிறார். அதன் மூலம் இந்தியாவில் மீண்டும் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டியிருக்கும் இந்தப் பெண், இந்த இளம் வயதிலேயே ஒட்டுமொத்த இந்தியாவின் போற்றுதலுக்கு உரியவராக ஆகியிருக்கிறார். (இவர் பற்றி விரிவாக அறிய: சமூக ஊடக சுதந்திரத்திற்காக வழக்கு தொடுத்து வென்ற ஷ்ரேயா சிங்கால்!)

ஈழப் பிரச்சினையிலும் இன்ன பிற தமிழர் இனப் பிரச்சினைகளிலும் இந்திய அரசுகள் மறுபடியும் மறுபடியும் மேற்கொண்டு வரும் தவறான நடவடிக்கைகளால் இனத்தையே காவு கொடுத்து விட்டு நிற்கும் தமிழர்கள், மிச்சமிருக்கிற இனமும் எப்பொழுது அழியுமோ, இன்னும் எத்தனை நாட்களுக்குத் தங்கள் மொழியும் பண்பாடும் எஞ்சியிருக்குமோ என்கிற மன உளைச்சலால் அல்லும் பகலும் தவிக்கிற நம் மக்கள், இந்தத் தவறான நடவடிக்கைகள் தங்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை ஆள்பவர்கள் உணரும்படி எடுத்துரைக்கக் கூட முடியாமல் இந்தச் சட்டப் பிரிவு தடையாக இருந்தது. குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூட முடியாத அளவுக்கு இது நம் கழுத்தை நெரித்தது.

இப்படி மொத்த இனமும் அழிவின் விளிம்பிலிருக்கும் நிலையிலும் ஒற்றுமைப்படாமல் இன்றும் சாதி, சமயம் எனத் தம் மக்கள் பிரிந்து கிடப்பதைப் பார்த்து அளவில்லா வேதனையில் இருக்கும் தமிழ்ச் சமூக ஆர்வலர்கள் தங்கள் மக்களுக்குச் சில விதயங்களை உறைக்கும்படி உரைக்கக் கூடத் தயங்க வேண்டியிருந்தது. படுகிற வேதனை ஒருபுறம் என்றால், வாய்விட்டுக் கத்தவும் கூடாது என்பது அதைவிடக் கொடுமை!

அப்பேர்ப்பட்ட இந்தக் கடுமையான சட்டப் பிரிவை நீக்கியதற்காக மேன்மை தங்கிய நீதியரசர்களுக்கும் இளைஞர் சிரேயா சிங்கால் அவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!

பதிவர்கள் (bloggers), கீச்சர்கள் (tweeters), வாட்சு ஆப்பினர், இணைய இதழ் நேயர்கள் முதலான இணையப் பயனாளிகள் மட்டுமல்லாமல் போராளிகள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், பொதுமக்கள் என அத்தனை பேரும் கொண்டாட வேண்டிய தீர்ப்பு இது!

அதிகாரத்தில் இருப்போர் தவறு செய்தால் கடும் சொற்களால் விமரிசிக்கும் நாம், அதே அதிகார மட்டத்தைச் சேர்ந்த நீதித்துறையினர் நமக்குச் செய்துள்ள இந்த நன்மையைத் தவறாமல் போற்றவும் செய்வோம்! 

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி ௧. Legaleagle86 at en.wikipedia, ௨. விகடன் 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

14 கருத்துகள்:

  1. முதலில் ஐம்பதாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்... இந்த எண்ணிக்கை ஆயிரங்களில் தொடரட்டும் !

    எழுத்துரிமையின் குரல்வலையை நெரித்த சட்டம் நசுக்கப்பட்டது கொண்டாடப்படவேண்டிய ஒன்று ! அதே நேரத்தில் சட்டம் நீக்கப்பட்டதின் மூலம் ஊடக துறையினருக்கு பொறுப்பும் கடமையும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் !

    " எத்தை தின்றால் பித்து தெளியும் " என்ற நிலையில் வியாபாரத்துக்கான பரபரப்புகளை களைந்து சமூகத்தின் ஒற்றுமைக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் தேவையானவற்றை வெளியிடும் பொறுப்பு உலகின் வேறு எந்த நாட்டின் ஊடகங்களையும் விட இந்திய ஊடகங்களுக்கு அதிகம் தேவை...

    காரணம் பல்வேறு ஜாதி, மத கூறூகளையும், பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும் கொண்ட தேசத்தில் வெளியாகும் செய்தியின் தாக்கம் உலகின் வேறு எந்த தேசத்தையும்விட அதிகம் !

    எனது புதிய பதிவு : " த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/03/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! நான் பதிவில் குறிப்பிட மறந்த விதயத்தைத் தாங்கள் இங்கு கூறிவிட்டீர்கள் ஐயா! ஆம்! தாங்கள் கூறுவது சரிதான். சுதந்திரம் கிடைக்கும்பொழுது, உரிமைகள் வழங்கப்படும்பொழுது பொறுப்பும் கூடுகிறது. நினைவுபடுத்தியதற்கு நன்றி ஐயா!

      தங்கள் இன்சொற்களுடன் கூடிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி! முதல் ஆளாக வந்து வாழ்த்தியதற்கு மகிழ்ச்சி!

      நீக்கு
  2. ஷ்ரேயா வாழ்த்தப்படக்கூடியவர் பாராட்டுகள்.
    வரவேற்கப்படவேண்டிய விடயங்கள்.
    1/2 செஞ்சுரி அடித்தமைக்கு வாழ்த்துகள் நண்பரே...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

      நீக்கு
  3. தவற்றைத் தட்டிக் கேட்க உரிமை கோரும்பொழுதே, நல்லதைப் பாராட்ட வேண்டிய கடமையும் நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது!---இயல்பாக வந்துதான் அக வேண்டும் நண்பரே....


    © http://agasivapputhamizh.blogspot.com/2015/03/50-thanks-to-supreme-court-and-shreya.html#ixzz3VxyG2Rt5

    பதிலளிநீக்கு
  4. நன்றி நண்பரே! ஆனால், எனக்கு அந்த நல்ல குணம் இல்லை. அதனால்தான் என்னை நானே திருத்திக் கொள்ளும் ஒரு முயற்சியாக முதன்முறையாய் இப்படி ஒரு பதிவு!

    பதிலளிநீக்கு
  5. தங்களின் ஐம்பதாவது இடுகை கருத்துத்சுதந்திரத்திற்காகப் போராடிய பெண்மணி பற்றி அமைந்திருந்தது சிறப்பு அய்யா!
    வாழ்த்துகள்.

    இது போன்ற அரிய தருணங்களின்தான் நீதித்துறையின் இருப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழாயும் திருக்கைகளாலான தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா!

      எப்பொழுதும் எதையாவது, யாரையாவது குற்றம் கூறும் வகையிலான எதிர்மறைப் பதிவுகளையே எழுதுபவன் நான் என மற்றவர்கள் யாரும் கூறாவிட்டாலும் எனக்கே அஃது ஒரு மனத்தாங்கலாக இருந்தது. ஆகவே, ௫0 (50) ஆவது பதிவு நேர்மறையாக இருக்க வேண்டும்; அதே நேரம், இந்தத் தளத்தின் வழக்கான தன்மையிலிருந்தும் வழுவாமல் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே எழுதிய பதிவுதான் ஐயா இது. குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு நன்றி! :-)

      நீக்கு
  6. முதலில் வாழ்த்துக்கள் நண்பரே! 50 வது பதிவிற்கு!

    அடுத்து இந்தச் சட்டம் வருவதற்கு காரணமாக இருந்த ஸ்ரேயா சிங்கால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள் நம் இந்திய மக்கள் அனைவரின் சார்பிலும்!

    1947 ல் நாம் சுதந்திரத்தை வெள்ளையரிடம் இருந்து மிகவும் பாடுபட்டுத்தான் வாங்கினோம். அப்படிப் பாடுபட்டு வாங்கப்பட்ட சுதந்திரம் என்பது கைகளில் வரும் போது அதை அத்து மீறாமல் உபயோகிக்கும் பொறுப்பும் நம் கைகளில் வருகின்றது/வந்தது ஆனால் நாம் அந்தச் சுதந்திரத்தை மிகவும் தவறாகத்தான் பயன்படுத்துகின்றோம் என்பதில் உங்களுக்கு ஐயம் இருக்கின்றதா? அதே போலத்தான் இந்தச் சட்டமும். இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று! அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே சமயம், நமது பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், சுதந்திரமாகக் கருத்து வெளியிடலாம், பதியலாம் என்று பரபரப்பிற்கும், வணிக ரீதியாக பத்திரிகைகள் விற்கப்பட வேண்டும் என்ற ரீதியிலும், பல தரக் குறைவான பச்சை நிறச் செய்திகளையும், தவறான செய்திகளையும் வெளியிட்டு எஹ்டை வேண்டுமானாலும் எழுதலாம் என்று வரையறையையும் வரம்பையும் மீறாமல் செயல்பட்டால் இந்தச் சட்டம் அருமையான சட்டம். உரிமை. இதை எல்லோரும் மனதில் வைத்துச் செயல்பட்டால் நல்லவை நடக்கும். நல்லதொரு ஊடக பரிமாற்றம் நிகழும்.

    அருமையான பதிவு நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கும் செம்மையான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா, அம்மணி!

      கண்டிப்பாக நம் மக்கள் இந்த உரிமையை நல்லவிதத்தில்தான் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். காரணம், இங்கு மக்களுக்குப் பிரச்சினைகள் நிறைய. சொகுசாக வாழ்பவர்கள்தாம் பொழுதுபோகாமல் தங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் வைத்து ஆட்டம் போட வாய்ப்புக் கூடுதல். மாறாக, ஏற்கெனவே பிரச்சினைகளில் துவளும் மக்களுக்கு இருக்கிற இந்த உரிமைகளைத் தங்கள் பிரச்சினைகள் மீது கவனம் திருப்புவதற்குப் பயன்படுத்தவே நேரம் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ;-)

      நீக்கு
  7. வரவேற்கத்தக்க தீர்ப்பு...

    ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வலைச்சித்தர் அவர்களே!

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்