.

திங்கள், பிப்ரவரி 21, 2022

நட்சத்திர எழுத்தில் பெயர் சூட்டுவது தமிழர் வழக்கமா? - ஒரு நறுக்குச் சுருக்கான ஆய்வு

Naming a child with the letter of birth star is really a Tamil culture?
ப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்ல பெயர் பரிந்துரைக்குமாறு பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே நேரம், இப்படிக் கேட்பவர்களில் பலர் குழந்தை பிறந்த நாள்மீனைத் (நட்சத்திரம்) தெரிவித்து, அதற்குரிய எழுத்தில் தொடங்கும் பெயராகக் கேட்பதையும் பார்க்கிறோம்.

அதாவது இந்தியச் சோதிட முறையில் குறிப்பிடப்படும் 27 நாள்மீன்களில் (நட்சத்திரங்களில்) ஒவ்வோர் நாள்மீனுக்கும் உரியவையாகச் சில எழுத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன; அந்த எழுத்துக்களில் தொடங்குமாறு பெயர் வைப்பது சிறப்பானது என நம்பும் நம் மக்கள் அப்படிப்பட்ட பெயர்களை இணையத்தில் தேடித் துழாவுகிறார்கள். குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் கிடைக்காவிட்டால் அவற்றுக்கு மாற்றாகச் சோதிடம் பரிந்துரைக்கும் தொடர் எழுத்துக்களிலாவது கிடைக்குமா எனத் தவிக்கிறார்கள்.

இப்படி நாள்மீன் எழுத்தில் பெயர் வைப்பது தமிழ் மரபா?...

இதுதான் தமிழர்களின் பெயர் சூட்டும் முறையா?...

இதோ, பார்க்கலாம்!...


தமிழரசர் முதல் கவியசர் வரை – ஒரு பெயரியல் அலசல்

இது தமிழர் வழக்கமா என்பதை நாம் அறிய வேண்டுமானால் பண்டைக் காலம் முதல் அண்மைக்காலம் வரையான பலரின் பெயர்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஆனால் அதில் உள்ள பெரிய சிக்கல் என்னவெனில், நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான வரலாற்றுக் குறிப்புகள் மன்னர்களைப் பற்றியவைதாம்; வரலாற்றிலோ மன்னர்களின் பட்டப்பெயர், பட்டமேற்புப் (பட்டாபிசேகம்) பெயர் போன்றவைதாம் காணப்படுகின்றனவே தவிர இயற்பெயர்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இயற்பெயர் தெரிந்த மன்னர்கள் - அல்லது மன்னரல்லாத பிறர் - பற்றிய விவரங்களிலோ அவர்களின் பிறந்த நாள்மீன் பற்றிய குறிப்பு இல்லை. இரண்டு விவரங்களும் ஒன்றாய்க் கிடைப்பது மிக மிகச் சிலரைப் பற்றித்தாம். அப்படிச் சிலரின் பெயர்களைப் பற்றி மட்டும் இங்கு காண்போம்.

❖ முதலாம் இராசராச சோழன்:

தமிழ் இனத்தின் வீரம், பெருமை, பெருந்தன்மை போன்ற பலவற்றையும் உலகெங்கும் கொண்டு சேர்த்த மாபெரும் தமிழரசர். அதே நேரம், தமிழர் வீழ்ச்சிகள் அனைத்துக்கும் மூலக் காரணமான பார்ப்பனியப் பண்பாட்டுத் திணிப்பைத் தொடக்கி வைத்தவரும் கூட. இவரது இயற்பெயர் அருள்மொழி வர்மன். பிறந்த நாள்மீன் சதயம்; இதற்குச் சான்றாகத் தஞ்சைப் பெரிய கோயிலில் இன்றளவும் இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சதய நாள்மீனுக்கான எழுத்துக்கள் கோ, ஸ, ஸி, ஸு. தொடர் எழுத்துக்கள் தோ, தௌ. ஆனால் இவர் பெயரோ இவற்றுள் எதிலுமே இல்லாமல் ‘அ’வில் துவங்குகிறது. ஆக, ஆனானப்பட்ட மாமன்னன் இராசராச சோழனின் பெயரே நாள்மீன் முறைப்படி வைக்கப்பட்டது கிடையாது.

❖ விக்கிரமச் சோழன்:

புகழ் பெற்ற இன்னொரு சோழ மன்னர். பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் இயற்றிய ‘மூவருலா’ எனும் தொகுப்பில், இவருக்காகப் பாடப்பெற்ற ‘விக்கிரமச் சோழன் உலா’தான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

பொதுவாக வரலாறுகளில், அரசரின் இயற்பெயர் தெரிந்தால் அதைக் குறிப்பிடுவார்கள்; தெரியாவிட்டால் தெரியவில்லை என்றாவது குறிப்பிடுவார்கள். ஆனால் நான் தேடிய வரை இவரைப் பற்றிய எந்த வரலாற்றுப் பதிவிலும் இந்த இரண்டுமே இல்லை; விக்கிரமச் சோழன் எனும் பெயரேதான் இயல்பாக முழுவதும் ஆளப்படுகிறது. எனவே இவருடைய சொந்தப் பெயரே இதுதான் என உணரலாம். இவரது பிறந்த நாள்மீன் உத்திராடம்.

உத்திராடத்துக்கான எழுத்துக்கள் பே, போ, ஜ, ஜி. தொடர் எழுத்துக்கள் ஒ, ஓ, ஔ. ஆனால் இவர் பெயர் தொடங்குவதோ வி எனும் எழுத்தில். ஆக இவர் பெயரும் நாள்மீன்படி அமைந்தது இல்லை.

❖ திருமங்கையாழ்வார்:

பன்னிரண்டு ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. சோழ மன்னனின் படைத்தலைவராக விளங்கிய இவர் வீரத்தை மெச்சி அரசன் இவரைத் திருமங்கை எனும் குறுநிலப் பகுதிக்கு அரசனாக்கி அழகு பார்த்தான். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நீலன் எனவும், கலியன் எனவும் இருவேறாகக் கூறப்படுகிறது. இரண்டில் எது சரி என்பது குறித்து நமக்குக் கவலையில்லை; இரண்டுமே நாள்மீன் எழுத்துப்படி அமையவில்லை என்பதே இங்கு கவனத்துக்குரியது. இவர் பிறந்த நாள்மீன் கார்த்திகை. இதன் எழுத்துக்கள் அ, இ, உ, எ; தொடர் எழுத்துக்கள் ஆ, ஈ. ஆக இவரும் பிறந்த நாள்மீன் எழுத்துக்குரிய முறையில் பெயரிடப்படவில்லை.

❖ ஆண்டாள்:

அறிமுகமே தேவைப்படாதவர்! திருப்பாவை பற்றிக் கேள்விப்படாதவர்கள் தமிழுலகில் யாரும் இருக்க முடியாது. அப்படி யாராவது இருப்பினும், அண்மையில் ஏற்பட்ட பரபரப்பின் காரணமாக அவர்களுக்கும் இவர் அறிமுகமாகியே இருப்பார்.

தமிழின் தனிப்பெரும் பெண் புலவர்களில் ஒருவர். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றித் தொழப்படுபவர். இவர் பெரியாழ்வாரால் துழாய்ப் (துளசி) புதரில் கண்டெடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைதான் என்றாலும் இவர் பிறந்த நாள்மீன் பூரம் என்றுதான் கூறப்படுகிறது. கோயில்களில் ஆண்டாள் திருப்பிறப்பு (அவதாரம்) விழாக்களும் சிறப்புப் பூசைகளும் பூர நாளில்தான் காலங்காலமாக நடைபெறுகின்றன. இவருக்குப் பெரியாழ்வார் சூட்டிய பெயர் கோதை. ஆனால் பூரத்துக்கான எழுத்துக்களோ மோ, ட, டி, டூ; தொடர் எழுத்துக்கள் மொ, மௌ.

ஆக, பார்ப்பனரான பெரியாழ்வாரே தம் மகளுக்கு நாள்மீன் எழுத்துப்படி பெயரிடவில்லை என்பது பெயர் வைக்கும் வழக்கத்தை முழுக்க முழுக்கப் பார்ப்பனர் வழிகாட்டல்படியே இன்று கடைப்பிடிக்கும் நாம் வெகுவாகக் கவனிக்க வேண்டியது!

❖ கண்ணதாசன்:

வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றியே ஆராய்ந்து கொண்டிருக்காமல் கொஞ்சம் அண்மைக்காலத்தையும் பார்க்கலாமே என்பதற்காகக் கவியரசரைத் தேர்ந்தெடுத்தேன்.

இலக்கிய நயமிகு கவிதைகளைத் திரையிசையிலும் கொடுக்க முடியும் எனக் காட்டிய பெருங்கவிஞர். அசுவினி நாளில் பிறந்த இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. ஆனால் அந்த நாள்மீனின் எழுத்துக்களோ சு, சே, சோ, ல; தொடர் எழுத்துக்கள் செ, சை.

ஆக அரசர் காலம் முதல் அண்மைக்காலம் வரை புகழ் பெற்ற பெருமக்கள் யாருமே பிறந்த நாள்மீனுக்குரிய எழுத்தில் தொடங்கும்படி பெயர் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. பொதுமக்களில் கூட எல்லாரும் குப்பன், சுப்பன், மாயாண்டி, முனியாண்டி, செல்லம்மாள், பொன்னம்மாள் எனத் தெய்வப் பெயர்களையும் அழகியல் பெயர்களையுமே அதிகம் சூடியிருந்தனர் கடந்த தலைமுறை வரை. சொல்லப் போனால், இவற்றில் சில பெயர்களின் தொடக்க எழுத்துக்கள் நாள்மீன் எழுத்துக்களின் பட்டியலிலேயே இல்லை! எடுத்துக்காட்டாக ஐயனார், சூரியா, நெல்லையப்பன், பெரியநாயகி – இவையெல்லாம் அதிகம் காணக்கூடிய பெயர்கள்தாம். ஆனால் இவற்றின் துவக்க எழுத்துக்கள் நாள்மீன் எழுத்துக்களின் வரிசையிலேயே கிடையாது.

ஆகவே நாள்மீன் எழுத்தின்படி பெயரிடுவது என்பது மிக மிக மிகப் பிற்காலத்தில் தோன்றிய வழக்கமே! தவிர, கிரந்த எழுத்துக்களிலும் டகர வரிசை, ரகர வரிசை எனச் சொல்லின் துவக்கத்தில் வர முடியாத எழுத்துக்களிலும் பெயர் சூட்டப் பரிந்துரைப்பதிலிருந்தே இந்த நாள்மீன் எழுத்துப் பெயரிடல் முறை கண்டிப்பாகத் தமிழருடையதில்லை என்பதை நாம் உணரலாம்.

அப்படியானால், தமிழர் பெயரிடல் முறைதான் என்ன? பார்க்கலாம் வாருங்கள்!

தமிழர்களின் பெயரிடல் மரபு

தமிழர்களின் பெயர் சூட்டும் முறை மிகவும் எளிமையானது. தாத்தா – பாட்டியின் பெயரையே குழந்தைக்கும் வைத்து விடுவதுதான் அது. தன் அம்மா - அப்பாவின் நினைவாக அவர்கள் பெயரையே தன் பிள்ளைக்கும் சூட்டி மகிழ்வது ஆதி காலம் தொட்டே தமிழர் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் அந்த உறவுமுறையின் பெயரையே காட்டலாம்! ஆம், தாத்தாவின் பெயருக்கு உரியவன் என்பதால்தான் அவன் ‘பெயரன்’; பாட்டியின் பெயருக்கு உரிமையுடையவள் என்பதால்தான் அவள் ‘பெயர்த்தி’! இந்தச் சொற்கள்தாம் காலப்போக்கில் மருவிப் பேரன், பேத்தி என்று ஆயின என்பது பலரும் அறிந்ததே.

தவிர, அவரவர் குலத்தெய்வங்களின் பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டு. கருப்பசாமி, செல்லத்தாயி, சாத்தப்பன், மாரியம்மாள் என 90கள் வரை கூட நாம் பெயர் வைத்துக் கொண்டுதான் இருந்தோம் (‘மாரி’ என ஒரு திரைப்படம் கூட அண்மையில் ஒன்றுக்கு இரண்டு பாகங்களாக வெளிவந்தது!). இந்தக் குலத்தெய்வங்கள் யார் என ஆராய்ந்து பார்த்தால் எல்லாருமே அந்தந்தப் பகுதியையோ குடும்பத்தையோ சேர்ந்த முற்கால உறுப்பினர்களாகத்தாம் இருக்கிறார்கள்.

ஆக, முன்னோரின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டுவதே தமிழர் மரபு! இப்படி முன்னோரைப் போற்றுதல் என்பது தமிழர் வாழ்வியலின் பல இடங்களில் பண்பாட்டின் முக்கிய கூறாக இருந்திருக்கிறது; இருந்து வருகிறது. தமிழர் சமயமே கூட முன்னோரைப் போற்றுவதாகத்தான் இருந்திருக்கிறது. கடவுள் என்பவர் எங்கோ வானுலகில் இருந்தபடி நம் எல்லோரையும் ஆட்டி வைப்பவர் என்றே உலக மக்கள் அனைவரும் நம்பி, அதன் அடிப்படையிலேயே தங்கள் சமயத்தை வகுத்து வைத்திருக்க, நம்மிடையே நமக்காக வாழ்ந்தவர்களும் உயிர் விட்டவர்களுமே கடவுள் என்று ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பே பகுத்தறிவுக்கு உகந்த சமயக் கோட்பாட்டைக் கடைப்பிடித்து வந்தவர்கள் தமிழர்கள்! முன்னோரைப் போற்றும் அந்த வழக்கத்தின் ஒரு பகுதியாகவே தமிழர்களின் இந்தப் பெயரிடல் முறையையும் கருத வேண்டியுள்ளது (மேலும் விவரங்களுக்குப் பார்க்க: ‘எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு).

இதுதான் தமிழர் பெயரிடல் மரபு என்பதற்கு ஆதாரமாகத் துணை வருகிறது தமிழின் தலைசிறந்த வரலாற்று நூலான சிலப்பதிகாரம்! கோவலன் தன் மகளுக்கு வைத்த ‘மணிமேகலை’ எனும் பெயரே அவரது குலத்தெய்வத்தின் பெயர்தான் என்கிறார் சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்பி, அதனால் சிலம்புச் செல்வர் என்றே பட்டம் பெற்ற ம.பொ.சிவஞானம் அவர்கள் (பார்க்க: மணிமேகலையின் பிறப்பு – ம.பொ.சி.).

ஆனால் தொன்று தொட்டு வந்த இந்தப் பெயரிடல் முறை பின்னாளில் சற்றே மாறியது. குழந்தை பிறக்க அல்லது மகப்பேறு (பிரசவம்) நல்லபடியாக நடக்கக் குலத்தெய்வமல்லாத வேறு ஏதேனும் ஒரு கடவுளைக் கூட வேண்டிக் கொண்டு, வேண்டுதல் நிறைவேறிவிட்டால் அந்தக் கடவுளின் பெயரையே வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. பாலாஜி, சபரி, சாய், வெங்கட், வேளாங்கண்ணி போன்றவை இதன் எடுத்துக்காட்டுகள்.

இவை தவிர பழனி, தில்லி, சிதம்பரம் என ஊரின் பெயரைப் பிள்ளைக்கு வைக்கும் விந்தையான வழக்கமும் இருந்திருக்கிறது. பழந்தமிழ்க் கதைகள் எதிலும் இப்படிப்பட்ட பெயர் கொண்ட கதை மாந்தர்களை நாம் காண முடியவில்லை. எனவே இதுவும் மிகப் பிற்காலத்தில் தோன்றிய வழக்கம்தான்.

இப்படி முன்னோர் பெயர், கடவுள் பெயர், ஊர்ப் பெயர் போன்றவற்றையெல்லாம் அப்படிக்கப்படியே பிள்ளைகளுக்குச் சூட்டும் இந்த முறைகள், குழந்தை பிறந்த நாள்மீனின்படி பெயர் வைக்கும் வழக்கமே தமிழர்களுக்கு இருந்ததில்லை என்பதைத் தெளிவாக்குகின்றன.

சரி, அந்தக் காலத்தில் அப்படிப் பெயர் வைத்தார்கள் என்பதற்காக இன்றும் அதையே தொடர வேண்டுமா என்று கேட்டால், இல்லைதான். வழக்கங்கள் மாறுதலும் மரபுகள் மீறுதலும் வரவேற்புக்குரியவைதாம். ஆனால் அவை இயல்பானவையாக, மக்களுடைய ஆர்வத்தின் அடிப்படையிலானவையாக இருக்க வேண்டும். நாள்மீன் எழுத்தின்படி பெயர் வைத்தால்தான் நல்லது என மூடநம்பிக்கையின் பெயரால் ஏற்படுவது நல்ல மாறுதல் இல்லை. தாய்மொழியில் எழில் கொஞ்சும் பெயர்கள் எத்தனையோ இருக்க, பெற்றவர்கள் தங்கள் விருப்பம் போல் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியாமல் யாரோ ஒரு சோதிடன் கொடுக்கும் ஓரிரு எழுத்துக்களுக்குள் பெயர் தேடித் தவிப்பது பண்பாட்டு மாற்றம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, நாள்மீன் எழுத்துப்படி பெயர் வைப்பதுதான் தலைமுறை தலைமுறையாக நம் வழக்கம் என அண்டப் புளுகு சொல்லி இதை மக்கள் தலையில் சுமத்துவது பச்சையான பண்பாட்டுத் திணிப்பு!

இப்படி எத்தனையோ திணிப்புகளையும் திரிப்புகளையும் ஏற்று ஏற்றுத்தான் நம் சொந்த அடையாளங்கள் பலவற்றையும் இழந்து விட்டு நிற்கிறோம். எனவே மிக அண்மையில் முளைத்திருக்கும் இந்தத் திணிப்பையாவது தமிழர்கள் நாம் இப்பொழுதே கிள்ளி எறிவோம்!

உலக மக்கள் எல்லோரும் எத்தனையோ மொழிகளைக் கற்கிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் தங்கள் பெயரை யாரும் வேற்றுமொழியில் வைத்துக் கொள்வதாய்த் தெரியவில்லை. நாள்மீன் எழுத்தில் பெயர் வைக்கிறேன் பேர்வழி என்று நாம்தாம் கூச்சமே இல்லாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

அதற்காக, எல்லோரும் அவரவர் பெற்றோர் பெயரையோ குலத்தெய்வப் பெயரையோதான் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும் எனச் சொல்லவில்லை. வடமொழியிலிருந்து இன்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒயிலான (stylish) பெயர்களுக்கெல்லாம் அறைகூவல் விடுக்கும் வகையில் புதுமையான பெயர்கள் இன்று தமிழிலும் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்றைச் சூட்டுங்கள்! வாடாத் தமிழில் குழந்தையை வாயார அழைத்து மகிழுங்கள்!

சார்ச்சு ஆர்ட் (George Hart), அசுக்கோ பார்ப்போலா போன்ற எத்தனையோ வெளிநாட்டினர் தமிழுக்காக எவ்வளவோ செய்கிறார்கள். தமிழர்கள் நாம் குறைந்தது நம் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயராவது வைக்கலாமே? 
 
(நான் 31.07.2019 நாளிட்ட ‘தினச்செய்தி’ நாளிதழில்  எழுதியது, சில மாற்றங்களுடன்) 
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி ஓப்பன் கிளிப்-ஆர்ட் வெக்டார்சு - பிக்சபே 
 
தொடர்புடைய பதிவுகள்: 
 
பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து தமிழ் மக்களின் பெயர்கள் தமிழில் திகழ உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

      நீக்கு
  2. இக்காலத்திற்கு மிகத் தேவையான, அருமையான ஆய்வுக் கட்டுரை தோழரே. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்👏🏼👏🏼

    ஒரே ஒரு ஐயம் - //எடுத்துக்காட்டாக ஐயனார், சூரியா, நெல்லையப்பன், பெரியநாயகி//

    இதில் சூரியா வடமொழியன்றோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தாழ்ச்சியைப் பொறுத்தருள வேண்டுகிறேன் நண்பரே!
      உங்கள் அன்பார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி!

      சூரியா தமிழ்ப் பெயர்தான் தோழரே! ‘சுள்’ எனும் அடியொற்றிச் ‘சுர்’, ‘சூர்’ ஆகிய சொற்கள் பிறந்தன என்றும் இவற்றில் ‘சூர்’ என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டதே ‘சூரியன்’ என்றும் சொல்வார் தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள்.

      சுள் எனும் சொல்லை அடியாகக் கொண்டு பிறக்கும் சொற்கள் சூட்டைக் குறிப்பவையாக இருப்பதை நாம் பார்க்கலாம். சுளுந்து (தீவட்டி), சுள்ளி (எரிக்கப் பயன்படும் குச்சி) இப்படி. அதே போல் "சுள்ளுனு வெயில் அடிக்குது", "சுர்ருனு சூடாயிருச்சு" என்றும் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம் இல்லையா? சினமும் எப்பொழுதும் நெருப்போடுதான் தொடர்புபடுத்தப்படுகிறது. ஏன், இன்று நாம் பயன்படுத்தும் உணர்படங்களில் (emojis) கூடச் சினத்தைக் குறிக்கும் உணர்படங்கள் சிவந்த முகம், நெருப்பு வெடிக்கும் தலை என வரையப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அவ்வகையில் சினத்தின் காரணமாக எழும் வீரம் கூடச் சூரம் எனப்படுவது அதன் சூட்டுத்தன்மையைக் குறிப்பதாக நாம் கொள்ள முடியும். அவ்வளவு ஏன், சூடு என்பதே கூடச் சுள் எனும் சொல்லின் அடியொற்றிப் பிறப்பதாகத்தானே தெரிகிறது. சுள் > சுடு > சூடு. ளகரத்தோடு மேலும் எழுத்துக்கள் சேரும்பொழுது அது டகரமாகும் இல்லையா? ஆக சூரியன் தமிழ்ச் சொல்லே!

      என் முயற்சிகளுக்கு நீங்கள் தரும் தொடர் ஆதரவு என்றும் எனக்கு ஊக்கமளிக்கிறது. மிக்க நன்றி தோழரே!

      நீக்கு
  3. இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு.
    (1) இப்போதெல்லாம் நான் நண்பர்களின் மகன்/மகள்களை இன்னாரின் மூத்த மகன்/மகள், இளைய மகன்/மகள் என்றுதான் கூறி அழைக்கிறேன். எந்தப்பெயரும் மனதில் நிற்கவில்லை. தவிர பல கலப்புச்சொற்களை, எழுத்துக்களைக் கொண்டு உச்சரிக்கமுடியாத அளவில் பெயர் சூட்டுகின்றனர். இவ்வாறு பெயரை வைத்து பெற்றோர் பெருமைப்பட்டுக்கொள்வது இன்னும் வேதனை.
    (2) என் பேரன்களுக்கு (மூத்த மகனின் மகன்களுக்கு) தமிழழகன், தமிழமுதன் என்று பெயர் சூட்டிய பின்னர் என்னைக் கிண்டலடித்துப் பேசியவர் பலர். இவ்வாறாக பெயர் சூட்ட என் பெரிய மகனும், மருமகளும் ஒத்துக்கொண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தாழ்ச்சியைப் பொறுத்தருள வேண்டுகிறேன் ஐயா!
      உங்கள் அன்பார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி!

      நீங்கள் கூறுவது உண்மைதான்! தமிழில் பெயர் வைக்க மக்கள் முன்வருவது பெருமையே! நமக்கு மட்டுமில்லை அவர்களுக்கும் அது பெருமையே! எங்கள் வீட்டில் தம்பிக்குக் குழந்தை பிறந்ததும் நான் நிறைய பெயர்களை எழுதிக் கொடுத்தேன். அவற்றுள் ‘மகிழினி’ எனும் பெயரைத் தம்பியும் தம்பி மனைவியாரும் தேர்ந்தெடுத்தார்கள். தம்பி அதற்கு ஒப்புக் கொண்டார் என நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் அவரே தமிழ்ப் பற்றாளர்தாம். ஆனால் அவர் மனைவியாரும் அதற்கு ஒப்புக் கொண்டது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி! இந்தத் தலைமுறையில் அழகழகான தமிழ்ப் பெயர்களை நம் குழந்தைகள் சூடியிருப்பதைக் கண்டு வருங்காலத்தில் இன்னும் இது போல் அழகுத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டப் பெற்றோர்கள் முன்வருவார்கள் என நம்புகிறேன் ஐயா!

      உங்கள் தொடர் ஆதரவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்