தமிழுலகினரே! ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் கண்ணீரைத் துடைக்க நாம் இதுவரை எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் மிக மிக முக்கியமான ஒரு முயற்சி இன்னும் மிச்சமிருக்கிறது என்பதே உண்மை! நடந்த தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருவதோடில்லாது தமிழீழ விடுதலைக்கும் திறவுகோலாக அமையக்கூடிய அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தித் தமிழினத் தலைவர்களுக்கு நான் அனுப்பிய மடல் இங்கே உங்கள் பார்வைக்கு!
☟ ☟ ☟
தனிப்பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய உயர்திரு.திருமுருகன் காந்தி அவர்களுக்கு நேச வணக்கம்!
இனப்படுகொலை நடந்து இந்தாண்டோடு பத்தாண்டுகள் முடிவடைகின்றன. இன்னும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைத்தபாடில்லை. தாங்களும் ஐ.நா-வில் உரையாற்றுவது, உலக நாடுகளிடம் வலியுறுத்துவது போன்ற பல முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். அதற்காகத் தமிழன் எனும் முறையில் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!
இருப்பினும் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய இன்னோர் இன்றியமையாத முயற்சி இன்னும் மிச்சமிருக்கிறது. அதைத் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வரவே இதை எழுதுகிறேன்! எனவே அருள் கூர்ந்து இக்கடிதத்தை முழுமையாகப் படிக்க வேண்டுகிறேன்!
உலகத் தமிழ் உள்ளங்களே, ‘அகச் சிவப்புத் தமிழின்’ ஆறாவது பிறந்தநாள் பதிவுக்கு உங்களை இன்முகத்தோடு வரவேற்கிறேன்!
ஆம், நண்பர்களே! உங்கள் அன்புக்குகந்த இந்த வலைமனை ஏப்ரல் 23, 2019 அன்று ஆறு ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்து ஏழாம் ஆண்டில் நுழைந்து விட்டது. அதையொட்டி ஆறாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டில் சந்தித்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுக்குப் பந்தி வைக்க வந்திருக்கிறேன். முதலாவதாகப் புள்ளிவிவரங்கள்.
பதிவுகள்
கருத்துக்கள்★
பார்வைகள்
அகத்தினர்கள்★★
ஏப்ரல் 2013 – ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 – ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 - ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 - ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 - ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
ஏப்ரல் 2018 - ஏப்ரல் 2019
13
120
38949+
-183
மொத்தம்
125
1525
3,09,565+
▽2009
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட. ** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து. ▽ எண்ணிக்கையில் இறக்கம்.
வழக்கமாக, அதிகம் பார்வையிடப்பட்ட முதல் ஐந்து பதிவுகளைப் பட்டியலிடும்பொழுது அந்தப் பதிவுகள் எழுதப்பட்ட நேரம், அவை கடந்து வந்த வழி, ஈட்டிய வெற்றி குறித்தெல்லாம் எழுதுவேன். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் எழுதவில்லை. காரணம், இவை அனைத்துமே பழைய பதிவுகள். போன ஆண்டு நான் எழுதிய எந்தப் பதிவும் பெரிய அளவில் பார்வைகளைப் பெறவில்லை .
போன ஆண்டு நான் எழுதிய பதிவுகளே மிகவும் குறைவுதான். அதுவும் மிகவும் இடைவெளி விட்டு. இதனால் முந்தைய ஆண்டு (2017-18) ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்ற நம் தளம் போன ஆண்டு (2017-18) அதில் பாதியைக் கூட எட்டவில்லை.
இருப்பினும் வலைப்பூவின் தொடக்க ஆண்டுகளில் 20, 30 எனப் பதிவுகள் எழுதிப் பெற்ற பார்வைகளைக் காட்டிலும் இது கூடுதல்தான். அன்று அத்தனை பதிவுகள் வெளியிட்டு முப்பதாயிரம், முப்பத்தையாயிரம் எனக் கிடைத்த பார்வைகள் இன்று வெறும் 13 பதிவுகளை வெளியிட்டும் சற்றேறக்குறைய அதே அளவிலான பார்வைகளை ஈட்டுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த அளவுக்கு இன்று இந்தத் தளம் மக்களிடையே போய்ச் சேர்ந்திருப்பதுதான் என நினைக்கிறேன். புதிதாக ஏதும் எழுதாவிட்டாலும் முன்பு எழுதிய பதிவுகள் அடைந்த புகழ் தொடர்ந்து இந்தத் தளத்துக்கு மக்களை அழைத்து வந்து கொண்டேயிருக்கிறது என்பதைப் பார்க்கையில் நானும் ஏதோ பயனுள்ள வகையில் எழுதித்தான் இருக்கிறேன் என எண்ணி மகிழ்கிறேன்.
இறங்குமுகப் பயணத்திலும் சில மறக்க முடியா நினைவுகள்
கடந்த ஆண்டுப் பதிவுலகப் பயணம் இப்படி இறங்குமுகமாக இருந்தாலும், சில மறக்க முடியா நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை. வெற்றி என்பது வெறும் பார்வை எண்ணிக்கையில் மட்டும் இல்லை அன்றோ? அதைத் தாண்டி வேறு சில வெற்றிகளை இந்தாண்டு சந்தித்தேன். கூடவே, வழக்கம் போல் சில கசப்பான நிகழ்வுகளும் உண்டு. உண்மையில், இவற்றைப் பதிவு செய்யவே இந்தப் பிறந்தநாள் பதிவு.
கடந்த ஆண்டு நெஞ்சை நொறுங்கச் செய்த முதல் நிகழ்வு ஸ்டெர்லைட் படுகொலை. அந்தப் படுகொலையை விடப் பெருங்கொடுமை, அதைத் தட்டிக் கேட்டவர்களே கூட “மக்கள் வரம்பு மீறவில்லை. எனவே சுட்டது தவறு” என்பதாகவே திரும்பத் திரும்ப வாதாடியதுதான். இது, “மக்கள் வரம்பு மீறியிருந்தால் சுட்டது சரியே” என மறைமுகமாகச் சொல்வது போல் இருந்தது. எனவே இது தவறு; மக்கள் வன்முறையில் இறங்கினால் கூட அதை இரப்பர்க் குண்டு, கண்ணீர்ப் புகை போன்றவற்றின் மூலம் அடக்கத்தான் முயல வேண்டுமே ஒழிய, சுட்டுக் கொல்லக்கூடாது என்று வலியுறுத்தி ‘ஸ்டெர்லைட் படுகொலை! - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி!’ என்ற பதிவை எழுதினேன்.
இதைத் துவிட்டரில் படித்துவிட்டு, நான் பெரிதும் வியக்கும் தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் (KRS) அவர்கள் தன் நண்பர்களுக்கும் பகிர, அதுவரை துவிட்டரில் என்னுடைய வேறெந்த வலைப்பதிவும் பெறாத அளவுக்கு 55 விருப்பக்குறிகளும் 69 மறுகீச்சுகளும் பெற்றுப் பரவலான கவனத்தை ஈர்த்தது இப்பதிவு.
ஆனால் இவற்றையெல்லாம் விட, இனியாவது அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் மக்கள் அதை எதிர்த்துச் சரியான கேள்விகளை எழுப்ப இப்பதிவு ஒரு சிறு தூண்டுதலாக அமைந்தால், அப்படி ஒரு மாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் அதுவே எனக்கு உண்மையான மகிழ்ச்சி.
கடந்த ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவை ஒட்டி சமூக ஊடகங்களில் தமிழ்த் தேசியவாதிகள் – திராவிடவாதிகள் சொற்போர் மீண்டும் உச்சம் அடைந்தது. தமிழினப் படுகொலையின்பொழுது கருணாநிதி நடந்து கொண்ட விதத்தை நினைவூட்டித் தமிழ்த் தேசியவாதிகள் மீண்டும் திட்ட, அதை எதிர்த்துத் திராவிடவாதிகள் பச்சையான புளுகுகளை அவிழ்த்து விட மிகவும் கீழ்த்தரமாகப் போனது.
எனவே கருணாநிதி மீதான இந்தக் குற்றச்சாட்டை முறையாக எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்ன செய்தால் இந்தப் பழி அவரை விட்டு நீங்கும் என்பதைச் சொல்லும் விதமாய்க் ‘கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?’ எனும் கட்டுரையை எழுதினேன். உண்மையிலேயே உளமார்ந்த அக்கறையோடு எழுதிய இந்தப் பதிவைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் துவிட்டரில் பெரும்படையாய் வந்து சண்டை பிடித்தார்கள் திராவிடவாதிகள். எவ்வளவு பேசினாலும் என்னை மடக்க முடியவில்லை என்றானதும் தங்கள் மனதில் இருந்த சாக்கடையையும் என் மேலே வாரி வீசி விட்டுப் போனார்கள்.
பச்சைப் பொய்களையே எதிர்வாதங்களாய் முன்வைத்த இவர்களின் பேச்சை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், யாருக்காக இதை எழுதினோமோ அவர்களே சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே, அந்த அளவுக்குத் தவறான கோணத்தில் எழுதி விட்டோமோ என்று வருந்தினேன். அந்த நேரத்தில்தான் வந்தது அந்த மடல்! தலைசிறந்த பெரியாரியவாதியும் முதிர்ந்த பகுத்தறிவாளருமான ‘கீற்று’ இதழின் ஆசிரியர் நந்தன் அவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு “இதை ஏன் கீற்றிற்கு அனுப்பவில்லை, தோழர்?” என்று உரிமையோடு கேட்டிருந்தார்.
அவருடைய அந்த மடல் இந்தக் கட்டுரையால் எனக்கு ஏற்பட்ட அத்தனை காயங்களையும் ஒரு நொடியில் போக்கியது. திராவிட இயக்கச் சிந்தனைகளில் வெகுவாக ஊறியவர், கருணாநிதி போன்ற திராவிடத் தலைவர்கள் இந்த சமூகத்துக்கு எந்த அளவுக்கு முக்கியமானவர்கள் என்பற்றையெல்லாம் நன்கறிந்தவர் நந்தன் அவர்கள். அவரே இந்தக் கட்டுரை தன் இதழில் வெளிவந்திருக்க வேண்டும் என விரும்பிக் கேட்கிறார் என்றால் அதை விட ஒரு நற்சான்றிதழ் இதற்குத் தேவையில்லை. இது தமிழ்த் தேசியச் சார்புத்தன்மை காரணமாகவோ கருணாநிதி மீதான காழ்ப்புணர்வு காரணமாகவோ எழுதப்பட்டது இல்லை; ஈழ இரண்டகக் (துரோகக்) குற்றச்சாட்டை முறையாகத் தி.மு.க., எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டதுதான் என்பதற்கு நந்தன் அவர்களின் அந்த ஒரு வரி மடலே போதுமானது.
இதற்கு அப்புறம் செப்டம்பர், அக்டோபர் மாதமெல்லாம் அலுவல்கள் மூச்சு முட்ட இருந்ததால் புதிதாக ஏதும் எழுத நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஏற்கெனவே பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து ‘இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்’ என்ற கருப்பொருளில் நடத்திய ‘ஞயம்பட வரை’ என்ற கட்டுரைப் போட்டியில் ௩௦.௦௧.௨௦௧௬ அன்று இடம்பெற்று வலைப்பூவில் அதுவரை வெளியிடாமல் வைத்திருந்த ‘தமிழின் இன்றைய நிலைமையும் தமிழர் நமது கடமையும்’ என்ற கட்டுரையை மேலும் செழுமையூட்டி ‘உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் வெளியிட்டேன்.
இதன் முதல் பாகத்தைப் படித்து விட்டுத் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான இராம.கி., எனும் இராமசாமி கிருஷ்ணன் ஐயா பாராட்டியிருந்தது எனக்குப் புளகாங்கிதத்தை (goose bumps) ஏற்படுத்தியது. தமிழில் அரிதினும் அரிதான வரலாற்று ஆராய்ச்சிகளையும் கற்பனைக்கும் எட்டாத சொல்லாய்வுகளையும் நிகழ்த்திய, நிகழ்த்துகிற ‘வளவு’ இராம.கி., அவர்கள் நான் கொண்டாடும் அறிஞர்களில் ஒருவர். அவரே இந்தக் கட்டுரையைப் பாராட்டி விட்டார் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் அதை விடச் சிலிர்ப்பான ஒரு பாராட்டும் இதற்குக் கிடைத்தது. இதோ நீங்களே அதைப் பாருங்கள் கீழே!
தமிழ்ப் பயன்பாடு குறித்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டுத் தன் தமிழ்ப் பயன்பாட்டுத் திறனை ஒருவர் சோதித்துப் பார்த்துக் கொள்கிறார் என்றால் அதை விட எழுதியவனுக்கு நிறைவு தருவது வேறென்ன இருக்க முடியும்? தங்கள் எழுத்து மக்களின் மனதில், வாழ்வில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எழுதும் ஒவ்வொருவரின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு! அதையே இக்கட்டுரை சாதித்து விட்டது எனும்பொழுது இதை விடப் பெரிய வெற்றி வேறு எதுவுமே இல்லை. இதுவரை நான் எழுதியவற்றிலேயே மாபெரும் வெற்றி பெற்ற படைப்பு இதுதான் என்பேன்.
“2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கு மக்களும் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்” என்று ஸ்டாலின் அறிவித்தார். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே முடிவெடுத்து விட்டேன், நானும் அனுப்புவதாக. ஈழ இனப்படுகொலையில் தி.மு.க., செய்த இரண்டகத்தால் அவர்கள் மீது மாறா வெறுப்புக் கொண்ட கோடிக்கணக்கான தமிழர்களில் ஒருவனான நான் திடீரென இப்படி ஒரு முடிவுக்கு வரக் காரணம் உண்டு. இந்த நேரத்தில் யாரும் தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பைத் தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தாவிட்டால் நாளைக்கே இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் “எங்கள் தேர்தல் அறிக்கையை வடிவமைக்கும் பொறுப்பையே நாங்கள் மக்களிடம் ஒப்படைத்தும் யாருமே தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை” எனக் கூசாமல் சொல்வார்கள் என்பதால்தான்.
அதனால்தான் பரிந்துரைகளை ஸ்டாலின் சொன்னபடி மின்னஞ்சலில் அனுப்பியது மட்டுமின்றித் துவிட்டரிலும் குறிப்பிட்ட சிட்டையின் (tag) கீழ் பொதுப் பார்வைக்கு வைத்தேன். அதுவும் போதாதென்று என்றும் இது நிலையாக மக்கள் பார்வைக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே வலைமனையிலும் பதிந்தேன்.
ஆனால் எதிர்பாராத வகையில், மின்மடலைப் படித்ததோடு மட்டும் நில்லாமல் வலைமனைக்கும் வந்து பார்வையிட்ட தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக் குழுவினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தனிப்பட்ட முறையில் விரிவாக மறுமடல் எழுதியது உண்மையாகவே மிகவும் வியப்பை அளித்தது. யார் எது சொன்னாலும் மதித்துச் செவிமடுக்கும் கட்சி எனத் தி.மு.க., பற்றி மற்றவர்கள் சொல்வது வெற்றுப் புகழ்ச்சியில்லை போலும் என்று தோன்ற வைத்தது.
பொதுவாகப் பெரிய பெரிய எழுத்தாளர்கள்தாம் “இந்த நூல் அந்தப் பதிப்பகத்தார் கேட்டதால் எழுதியது... அந்த நூல் இந்த இதழினர் கேட்டதால் எழுதியது” எனவெல்லாம் குறிப்பிடுவார்கள். ஆனால் என்னை நானே மீண்டும் மீண்டும் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் விதமாக என் வாழ்விலும் அப்படி ஒன்று நடந்தது! அதைத்தான் அடுத்துக் குறிப்பிடப் போகிறேன். அதுவும் ஒரு மின்மடல்தான். இதோ கீழே பாருங்கள்!
இப்படியெல்லாம் என் வாழ்க்கையிலும் நடக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை! ஆனானப்பட்ட ‘கீற்று’ ஆசிரியர் என்னிடம் ஒரு கட்டுரை கேட்கிறார் என்றவுடன் “மவனே, எழுத்தாளனாயிட்டேடா நீ!” என்று யாரோ என் முதுகில் தட்டுவது போல் இருந்தது.
இவற்றுக்கிடையில் போன ஆண்டில் இரண்டு போன்மிகளையும் (memes) வெளியிட்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக இணையவுலகையே ஆட்சி செய்பவை போன்மிகளும் வாரல்களும்தாம் (trolls). நானும் கூட முன்பு சிலமுறை வெளியிட்டிருக்கிறேன். இருந்தாலும் முன் எப்பொழுதையும் விடக் கடந்த ஆண்டு இவை அதிகம் கொடி கட்டிப் பறந்ததால், அந்தத் தாக்கம் காரணமாக நானும் இரண்டு வெளியிட்டேன். சமூக ஊடகங்களில் மட்டுமே நான் பகிர்ந்து கொண்ட அவை இப்பொழுது இங்கே உங்கள் பார்வைக்கு!
ஏப்ரல் 2018-19 எனும் இக்காலக்கட்டத்தில் பதிவுலகம் இரண்டு இழப்புகளைச் சந்தித்தது. முதலாவது ‘எனது எண்ணங்கள்’ தி.தமிழ் இளங்கோ அவர்களின் மறைவு. பலமுறை நம் வலைமனைக்கு வந்து அவர் கருத்திட்டிருக்கிறார். கடந்த ஐந்தாம் ஆண்டுப் பிறந்தநாள் பதிவில் கூட வந்து வாழ்த்தியிருந்தார். ஆனால் இந்த ஓராண்டுக்குள் அவர் நம்மை விட்டுப் பிரிந்து விடுவார் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் வருந்துகிறேன்! அவருக்கு என் அன்பார்ந்த அஞ்சலி!
அடுத்தது ‘வலைச்சரம்’ சீனா ஐயா அவர்களின் இறப்பு.
பொதுவாக யாருடைய வலைமனையையும் தொடர்ந்து படிக்கிற, கருத்துரைக்கிற வழக்கம் எனக்குக் கிடையாது. அதையும் மீறி இன்று தமிழ்ப் பதிவுலகில் என்னை நான்கு பேருக்குத் தெரியும் என்றால் அதற்கு முக்கிய காரணம் வலைச்சரம் இதழும் அதில் என்னைப் பற்றி நம் நண்பர்கள் எழுதியதும்தாம். உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ப் பதிவுலகை ஒரே குடும்பம் போல இறுகப் பிணைத்த அரும்பெருமைக்கு உரியது வலைச்சரம். அதை நிறுவிய ‘அன்பின்’ சீனா ஐயாவோடு எனக்குத் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும் இப்பேர்ப்பட்ட ஒரு சாதனையை நிகழ்த்திய அம்மாமனிதரின் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை என்னால் உணர முடிகிறது. ஐயாவுக்கு எனது உளமார்ந்த அஞ்சலி!
அதே நேரம், உலகத் தமிழ்ப் பதிவர்களுக்கான ஒரு பெரும் வலைப்பின்னலாகச் (network) செயல்பட்ட அவரது வலைச்சரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்பதையும் இங்கே வலியுறுத்திச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். தொழில்நுட்பம் சார்ந்தோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ இதற்கு என்னால் ஆகக் கூடியது ஏதும் இருப்பின் தயங்காமல் கேளுங்கள், கட்டாயம் கை கொடுக்க ஓடோடி வருவேன் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவை தவிர, இன்னோர் இழப்பும் போன ஆண்டு நடந்தது – கூகுள் பிளசின் மூடுவிழா. சக மனிதர்களை நம்பாமல் சமூக ஊடகங்களையே நம்பும் என்னைப் போன்றவர்களுக்கு இது பெரிய அடி! அகச் சிவப்புத் தமிழுக்கு வரும் பார்வைகளில் சரிபாதி கூகுள் பிளசிலிருந்துதான். அது அப்படியே பறிபோய் விட்டது. தவிர, ஏறக்குறைய இருநூறு தொடருநர்களையும் (followers) இழந்து விட்டேன் (அதனால்தான் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் இந்த ஆண்டு திடீர் இறக்கம்). தனிப்பட்ட இந்தப் பாதிப்புகளைத் தாண்டி மெய்யாகவே கூகுள் பிளசின் இந்த மூடுவிழா கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது.
மூடப்படும் செய்தி முந்தைய ஆண்டே தெரியும்; என்றைக்கு மூடப்படப் போகிறது என்பதும் முன்பே தெரியும். அப்பொழுதெல்லாம் ஏதும் தோன்றவில்லை. ஆனால் கடைசி நாளுக்கு முந்தைய நாள் இரவு, படுத்த பின் ஏனோ கொஞ்சம் வேதனையாக இருந்தது, ஒரு நல்ல நண்பனைப் பிரிவது போல. அப்பொழுது உடனே எழுந்து கூகுள் பிளசில் எழுதிய கடைசி வரிகள் இவை.
வருந்தத்தக்க இத்தகைய நிகழ்வுகளுக்கிடையில் நடந்த ஒரே நல்லது, எனக்கு மிகவும் பிடித்தமான பதிவரும் அருமை நண்பருமான சகா ‘மகிழ்நிறை’ மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்தது (மூன்றாம் பிறந்தநாள் பதிவில் கூட இதையேதான் சொல்லியிருந்தேன். நான் சொன்ன நேரமோ என்னவோ மறுபடியும் பதிவுலகை விட்டுப் போய்விட்டார் அவர். இந்த முறை அப்படிச் செய்ய மாட்டார் என நம்புகிறேன்).
கலைக்குடும்பம் எனக் கேள்விப்பட்டிருப்போம். அது போல, எனக்குத் தெரிந்த ‘பதிவர் குடும்பம்’ மைதிலி அவர்களுடையது. அவரும் அவர் கணவர் கஸ்தூரிரங்கன் அவர்களும் மட்டுமில்லை அவர்கள்தம் மூத்த மகள் நிறைமதிவதனா அவர்கள் கூடப் பதிவர்தாம். ‘மைதிலியின் புன்னகை’ எனும் வலைப்பூவை நடத்தி வரும் தமிழ்ப் பதிவுலகின் குட்டிப் பதிவர்களுள் ஒருவர்! ஓரிரு வாரங்களுக்கு முன் அவருடன் பேசியில் உரையாடினேன். பொதுவாகக் குழந்தைகளோடு பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறையோடு நிறையவே பேசினேன். கூடவே மீண்டும் அவர் பதிவு எழுத வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். “நீங்க சொல்லிட்டீங்கள்ல, எழுதிட வேண்டியதுதான்” என்று அவர் தோரணையாகச் சொன்னதை மிகவும் ரசித்தேன். தவிர, “பரவாயில்ல, நீங்க கொஞ்சம் எல்லாத்தைப் பத்தியும் நல்லாப் பேசறீங்க” என்ற அவர் பாராட்டை இப்பொழுது கூட நினைத்து நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன். மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்து விட்டதால் அவரது ‘புன்னகை’யும் மறுபடி பூக்கும் என நம்புவோம்.
நன்றிக்குரியோர்!
வாட்சப், உயூடியூபு என உலகமே வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்ட இக்காலத்திலும் இந்த வலைமனைகளைத் தேடி வந்து பெருமையூட்டும் தமிழ்ப் பறவைகள்...
தொடர்ந்து என் எழுத்துக்களை ஆதரித்து வரும் பழைய, புதிய அகத்தினர்கள்...
தாங்கள் விரும்பிப் படிக்கும் வலைமனைகளின் பட்டியலில் இந்த மனைக்கும் ஒரு மணை அளித்துக் கவனம் ஏற்படுத்தித் தரும் எனதன்புப் பதிவுலக நண்பர்கள்...
தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டு, அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துரைப்பதன் மூலம் என்னைச் செதுக்கி வரும் கீற்று, அகரமுதல இதழ்களின் ஆசிரியர்கள்...
இப்பதிவுகளைப் படைக்கப் பல்வேறு வகைகளிலும் உதவி புரிந்த ஊக்கமளித்த என் நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள்...
என்னை அடக்க முயல்வதாக நினைத்து மீண்டும் மீண்டும் கொம்பு சீவி விடும் என் பகைச் செல்வத்துக்குரிய எதிரிகள்...
தளத்துக்குப் பார்வைகள் கிடைக்க வகை செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...
தளத்தின் உயர்வும் தாழ்வும் அறிந்து சரி செய்ய உதவும் தரவகச் சேவைத் தளங்கள் (Data Analyzing Sites)...
பதிவுகளை அழகூட்டும் படங்களையும் அவற்றை மெருகூட்டும் சேவைகளையும் வழங்கும் பல்வேறு இணையத்தளங்கள்...
பதிவுகளின் தரத்தை உயர்த்த உரிய தகவல்களை அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள்...
எல்லாவற்றுக்கும் மேலாய், தமிழ் வளர்க்க பிளாகர் எனும் இந்த அருஞ்சேவையை நமக்குத் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருவதோடு கடந்த ஆண்டு முதல் பொருளாதார முக்கியத்தையும் நமக்கு அளிக்க முன்வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தினர்...
ஆகிய அனைவருக்கும்...
இன்னும் யாரையாவது இங்கு நான் குறிப்பிடத் தவறியிருந்தால் அவர்களுக்கும்...
காணிக்கை!
தண்டவாளத் தொடரியைப் போல் ஒரு கட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்த என் சிந்தனை ஊர்திக்கு இறக்கை பொருத்திப் பறக்க வைத்தவன்...
ஒரு விதயத்தை இத்தனை கோணங்களில் பார்க்க இயலுமா இவ்வளவு ஆழமாக அலச இயலுமா இப்படியெல்லாம் கூடப் பேச இயலுமா என என்னை வியக்க வைத்தவன்... தன்னோடு சேர்த்து என்னையும் இவ்வழிகளில் நடக்க வைத்தவன்...
என் எழுத்துக்களில் தென்படுவதாக இன்று பிறர் குறிப்பிடும் நுட்பத்துக்கும் செறிவுக்கும் காரணமானவன்... உடன் பிறவாத் தம்பி... உளம் பிரியாத் தோழன்... உணர்வால் குடும்ப உறுப்பினன்... அஷ்வின் சத்யாஅவர்களுக்கு இந்த ஆண்டு பெற்ற வலைப்பதிவு வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்!
‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்!
-
2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை
தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது
என்பதெல்லாம் தனிக்...
பதிவுகளை இமெயிலில் பெற
-
வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய
முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை
எனில் தயவ...
ஆர்டிமிஸ் 2 - விக்டரின் செய்தி
-
நிலவை சுற்றிவந்து, இப்பொழுது பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் ஆர்டிமிஸ் 2
விண்கலன், நாளை காலை (ஏப்ரல் 10, 2026) இந்திய நேரம் 05:37 போல பசுபிக்
பெருங்கட...
அட! இப்படியும் எழுதலாமா?
-
தேர்வினைக் கண்காணித்தல் என்பது சற்றுச் சுமையான அனுபவம்தான். மூன்று மணி
நேரம் போவது மாணவர்க்குத் தெரியாது. ஆனால், கண்காணிப்புப் பணியில்
ஈடுபட்டிருக்கும் ...
யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா?
-
*உலகத்தில் உள்ள,*
*ஏன் தமிழ்நாட்டில் உள்ள*
*தமிழர்கள் யாருக்குமே தெரியாத ஊரில்தானா*
*1972 முதல் 1982 வரை எங்கள் குடும்பம் வாழ்ந்திருந்தது!*
*யாருக்கு...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
Is Hindi India's National language?
-
*Written in Tamil by: C. Saravanakarthikeyan*
*Translated to English by: S. Vijaya Kumar *
Some of my colleagues, especially north Indians in the IT secto...
Solve Gaminator loading problem step by step
-
fjoeze Solve Gaminator loading problem step by step– No Tricks! free
daily (Updated) 🎁[tuvwxy] ✅ Unlock Free Coins with Gaminator Bonus Codes
If you’re a...
2458. சங்கீத சங்கதிகள் - 350
-
*கானமும் காட்சியும் - 4*
*“நீலம்” *
*‘சுதேசமித்திரனில்’ 1944-இல் வந்தது இந்தக் கட்டுரை. சென்னையில் மாம்பலத்தில்
உள்ள தியாகப் பிரும்ம கான சபையின் முதல்...
எம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….
-
ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய
தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம்
உங்களோடு க...
கவிதை மொழி மந்திர உச்சாடனம்
-
தமிழ் கவிதைவெளியின்மாந்திரீக மொழி.தொன்மங்களையும் மாந்திரீகக்
கூறுகளையும் தன் வாழ்வின் தொல்குடி மரபிலிருந்து தமிழ் இலக்கிய பரப்பிற்கு
எடுத்து வந்த கவிதைகள்...
வித்தகரும் பொறுதியும்
-
எளிமையான குறள் அல்ல. ஒரு மணி நேரம் குழுவாகப் படித்தபோதும், தெளிவான பொருள்
கிடைக்கவில்லை. உங்கள் புரிதலை பகிர வேண்டுகிறேன்.நத்தம்போல் கேடும் உளதாகும்
சாக்க...