.

செவ்வாய், ஜனவரி 17, 2017

ஜல்லிக்கட்டு - ஓர் அரசியல் விளையாட்டு! | மச்சி! நீ கேளேன்! - 7

Jallikkattu - A Political Game

மு.கு: என்னதான், தமிழ்நாடே திரண்டு சல்லிக்கட்டுக்காகப் போராடுவது போல் தோன்றினாலும், உணர்வுள்ள ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்தைத் தவிர, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பெரும்பான்மை மக்கள் இன்னும் இதன் தீவிரத்தை உணரவில்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட நண்பர்களுக்காகவே இந்தப் பதிவு!...

நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்துக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அரசியல் விளையாட்டு இருக்கிறதே... மிகக் கண்ணறாவி!

"சாதாரண ஒரு விளையாட்டுதானே! அதற்குப் போய் எதற்கு இவ்வளவு பிரச்சினை? நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே?" என்கிறார்கள் நம் நண்பர்கள் சிலர். ஏன், அதையே இப்படி நினையுங்களேன், "சாதாரண ஒரு விளையாட்டுதானே? அதற்குப் போய் இவ்வளவு பிரச்சினை எதற்காக? எப்போதும் போல நடத்த விட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் விடாப்பிடியாக முடக்க முயல்கிறார்கள்?" இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், இந்த விளையாட்டைத் 
தொடர்ந்து நடத்த வேண்டும் என்பவர்கள் மட்டுமில்லை, இதை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்களும் கூட இதை சாதாரண ஒரு விளையாட்டாகப் பார்க்கவில்லை என்பதை. ஆம்! இது ஒன்றும் விளையாட்டான விதயம் இல்லை மச்சி!

நாம் என்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஜல்லிக்கட்டு மீதான தடை என்பது உழவர்களின் பிரச்சினை; மாடு வளர்ப்பவர்களின் பிரச்சினை; நாட்டுப்புற மக்களின் பிரச்சினை என்பதாக. தவறு! என்னதான் இருந்த இடத்திலிருந்தே செவ்வாய்க் கோளுக்குச் செயற்கைக்கோள் அனுப்பும் அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்தாலும் மதியம் ஒரு மணியானால் கொட்டிக் கொள்ளச் சோற்றுத் தட்டின் முன்னால் உட்கார்ந்துதான் ஆக வேண்டும்! வேளாண்மை என்பது அழிவின் விளிம்பில் இருக்கும் தொழில்தானே தவிர ஒருபொழுதும் யாராலும் அதை அழித்து விட முடியாது! மனித இனம் இருக்கும் வரை உழவுத்தொழிலும் இருந்தே தீரும்! அப்பேர்ப்பட்ட வேளாண் பெருமக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது கண்டிப்பாக ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்தே தீரும். எனவே, இது உழவர்கள் எனும் குறிப்பிட்ட சிலரின் பிரச்சினை என நினைத்தால் நமக்குப் பொருளாதாரம் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லை என்பதுதான் பொருள். ஆம்! இது எங்கோ நாட்டுப்புறங்களில் வாழும் மக்களின் பிரச்சினை இல்லை; மாடு வளர்ப்பவர்களின் பிரச்சினை இல்லை. நம் பிரச்சினை!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான குரல்கள் ஒன்றும் புதியவை அல்ல. ஆனால், முன்பெல்லாம் இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப்பட்டால், போட்டியின்பொழுது மாடுகளை எப்படி நடத்த வேண்டும், எப்படிப் பாதுகாப்பாக விளையாட்டை அரங்கேற்ற வேண்டும் என்றுதான் நீதிமன்றங்கள் வழிகாட்டுமே தவிர ஒருபொழுதும் இப்படி நிரந்தமாகத் தடை செய்தது கிடையாது. இப்பொழுது மட்டும் இப்படி நடக்கக் காரணம், கடந்த முறை காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்தபொழுது ‘காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்ட உயிரினங்களின் பட்டியலில்’ காளைகளைச் சேர்த்ததுதான்.

பொதுவாக, உயிரினங்களைக் காட்சிப்படுத்தக்கூடாது என்பதற்கு இரண்டே காரணங்கள்தாம் இருக்க முடியும். ஒன்று, அழிந்து வருகிற உயிரினங்களைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்தினால் அதன் இனப்பெருக்கம் மேலும் பாதிக்கப்படும் என்பதற்காக. அல்லது, காட்சிப்படுத்தப்படுவதால் அந்த உயிரினத்தின் சுதந்திரம், தன்மானம் (ஆம், உயிரினங்களுக்கும் இது உண்டு) போன்றவை பாதிக்கப்படுகின்றன என்பதற்காக.



Horse Race Cruelties
காளைகள் அழிந்து வருகிற உயிரினம் அல்ல. ஒருவேளை, காட்சிப்படுத்தப்படுவதன் மூலம் அதன் தன்மானம் பாதிக்கப்படுகிறது என்றால் அது காளைகளுக்கு மட்டும்தான் பொருந்துமா? இதே நாட்டில் நாய்க் கண்காட்சி, குதிரைப் பந்தயம் போன்றவையெல்லாம் நடத்தப்படவில்லையா? கிளிகள், மைனாக்கள், ஒட்டகங்கள் என எத்தனையோ உயிரினங்கள் வீட்டில் வளர்ப்பதற்காக வெறும் பொம்மைகளைப் போலக் காட்சிப்படுத்தப்பட்டுப் பேரம் பேசி விற்கப்படவில்லையா? இந்த உயிரினங்களுக்கெல்லாம் தன்மானம் கிடையாதா? ஆக, மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் காளைகளை மட்டும் காட்சிப்படுத்தக்கூடாதவற்றின் பட்டியலில் சேர்க்கும் அளவுக்குக் காங்கிரசாருக்குக் காளைகளின் மீது அப்படி என்ன அக்கறை என்கிற கேள்வி இயல்பாகவே நமக்கு எழுகிறது.

இதில் வியப்பு என்னவென்றால், அண்மைக்காலமாக இந்த விழிப்புணர்வு காங்கிரசாருக்கும் வந்திருப்பதுதான். அந்தப் பட்டியலில் காளைகளைச் சேர்த்தபொழுதோ, ஜல்லிக்கட்டை ஏன் நடத்த விட வேண்டும் என்பதற்குத் தமிழ்நாட்டிலிருந்து நியாயமான காரணங்களையெல்லாம் எடுத்துச் சொன்னபொழுதோவெல்லாம் அவர்களுக்கு ஏற்படாத இந்த விழிப்புணர்ச்சி, கடைசியில், நடுவணரசில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அந்த நொடியில் பளீரெனப் புலப்பட்டு விட்டது! 😝

பா.ஜ.க-வினர் இதற்கும் மேலே. அவர்கள் நினைத்தால், காட்சிப்படுத்தக்கூடாத உயிரினங்களின் பட்டியலிலிருந்து காளைகளை நீக்கி ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வருவதன் மூலம் ஒரே நாளில் ஜல்லிக்கட்டுக்குப் புத்துயிர் கொடுத்து விடலாம். ஆனால், மற்ற எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சட்டையை மாற்றுவது போல் சட்டத்தை மாற்ற முடிகிற அவர்களால் இந்தப் பிரச்சினையில் மட்டும் அது ஏனோ இயலவில்லை. தமிழர்கள் பிரச்சினையாயிற்றே! எனவே, எந்த ஊடகத்தின் ஒலிவாங்கி (mic) தங்கள் முன் நீட்டப்பட்டாலும் "ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்" என இன்னும் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்! அதுவும் பொன்.ராதாகிருஷ்ணனாவது தேவலாம். இனி ஜல்லிக்கட்டு நடக்க இந்தாண்டு வாய்ப்பு இல்லை எனத் தெரிந்தவுடன் மன்னிப்புக் கேட்டு விட்டார். ஆனால், தமிழிசை சௌந்தர்ராஜன் இன்னும் சளைக்கவில்லை. பொங்கல் முடிந்து ஆறு மாதமானாலும் இந்தாண்டு நடத்தியே தீருவோம் என்பதில் அவர் பின்வாங்கப் போவதாகத் தெரியவில்லை.

ஆனால், பீட்டா முதலான விலங்குநல அமைப்புகளும் மேனகா காந்தி போன்ற தனிமனித ஆர்வலர்களும் இவர்களைப் போல் இல்லை. ஜல்லிக்கட்டு எனும் காட்டுமிராண்டித்தனமான (😮) விளையாட்டால் காளைகளும் மனிதர்களும் எப்படியெல்லாம் காயப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்பதை எண்ணி அளவில்லாக் கவலை கொண்டுள்ள இவர்கள் எப்படியாவது தமிழ்நாட்டுக் காளைகளையும் காளையர்களையும் காப்பாற்றியே தீருவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

"தமிழ்நாட்டில் காளை மாடுகள் வளர்க்கப்படுவதே ஏறு தழுவலுக்காகத்தான். எனவே, இந்த விளையாட்டை ஒழித்து விட்டால், காளை வளர்க்கவும் ஆள் இல்லாமல், இருக்கிற காளைகளும் விற்கப்பட்டு, தமிழ்நாட்டுக் காளைகளின் இனமே அழிந்து விடும்" எனப் பதறுகிறார்கள் தமிழர்கள். ஆனால், உயிரினங்களின் உரிமைகளைக் காக்கவே கடவுளால் அனுப்பப்பட்ட தேவதூதர்களாக இறக்கை கட்டிப் பறக்கும் பீட்டா அமைப்பினரும் இன்ன பிற ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களும், இது போன்ற சின்னஞ் சிறிய பிரச்சினைகளுக்காகவெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. ஜல்லிக்கட்டில் காளைகள் வெறுமே மிரள்வதும், கட்டித் தழுவப்படுவதும், காட்சிப்படுத்தப்படுவதும்தாம் இவர்கள் கண்ணுக்குக் கொடுமைகளாகத் தெரிகின்றன; ஒரேயடியாக அவை அழிந்து போனால் இவர்களுக்குக் கவலையில்லை. எப்பேர்ப்பட்ட விலங்குநேயம் பார்த்தீர்களா?

காளைகள் மீது மட்டுமில்லை, இன்னும் நாய், பூனை ஆகியவற்றின் மீது பீட்டா அமைப்பினர் கொண்டிருக்கும் பேரன்பைப் பற்றி அறிந்தால் நீங்கள் வியப்பின் எல்லைக்கோட்டையே எகிறிக் குதித்துத் தாண்டி விடுவீர்கள்.

பீட்டா அமைப்பினருக்குப் பொதுவாகவே நாய்கள், பூனைகள் போன்றவை ஆதரவில்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தால் மனம் தாங்காது. போகிற வருகிற மனிதர்களிடமும் அக்கம் பக்கத்து வீடுகளிலும் வேளாவேளைக்குச் சாப்பிட்டு விடுதலையாகச் சுற்றித் திரிவது பெரிய கொடுமை இல்லையா? ஆகவே, உடனடியாகப் பிடித்துக் கொண்டு வந்து வைத்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றைக் கேட்டு யாரும் வராவிட்டால் அவற்றை ‘இரக்கக் கொலை’ செய்து விடுவார்கள்! எவ்வளவு ஈரம் நிரம்பிய நெஞ்சம் பார்த்தீர்களா? இப்படி இரக்கம் வழிய வழிய இவர்கள் கொன்று குவித்த பூனைகள், நாய்கள் எவ்வளவு தெரியுமா? கீழே பாருங்கள்!

Dogs and Cats killed by PETA

பார்த்தீர்களா? இப்பேர்ப்பட்ட விலங்கு நல ஆர்வலர்கள்தாம் "புலால் உண்ணக்கூடாது" என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் எழுதிய இனத்துக்கும், "உயிர்கள் மீதான அன்பே கடவுளை அடைவதற்கான திறவுகோல்" என்று கூறிய வள்ளலார் பிறந்த மண்ணுக்கும் காளை மாடுகளை எப்படி நடத்த வேண்டும் எனப் பாடம் கற்பிக்க வந்திருக்கிறார்கள்!

அது மட்டுமா? உயிரினங்களைக் காட்சிப் பொருளாக நடத்துவது எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதையும் நாம் இவர்களிடம்தாம் கற்றுக் கொள்ள வேண்டும். ‘Peta’ என இணையத்தில் தேடிப் பாருங்கள்! பெண்களைப் பல்வேறு கோணங்களில் ஆடையே இல்லாமல் படம் எடுத்துத் தங்கள் கொள்கைகளை எவ்வளவு ‘அழகாக’ இவர்கள் பரப்புகிறார்கள் என்பதை அறியலாம். விலங்குகளைக் காட்சிப் பொருளாக்குவது எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை எடுத்துரைப்பதற்குப் பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாகப் பயன்படுத்தும் இவர்களை விடத் தகுதியானவர்கள் வேறு யார் இருக்க முடியும்?

கேட்டால், குறிப்பிட்ட அந்தப் பெண்களின் ஒப்புதலோடுதான் அப்படிப்பட்ட விளம்பரங்கள் படம் பிடிக்கப்படுகின்றன என்பார்கள். அதற்காக உடனே, ஏறு தழுவலில் காயம் படுபவர்களும் அவர்களாக விரும்பித்தானே அதில் ஈடுபடுகிறார்கள் என நாம் கிறுக்குத்தனமாகக் கேட்கக்கூடாது!

சரி, விலங்குகள் மீதான இவர்களுடைய அக்கறைதான் இந்த அழகில் இருக்கிறது; மனிதர்கள் மீதான இவர்கள் அக்கறையாவது உண்மையா என்று பார்த்தால், கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் அப்படியும் ஏதும் தென்படவில்லை.

Milk Drinking Baby
"நாட்டுக் காளைகள் மூலம் பிறக்கும் பசு மாட்டுப் பால்தான் நம் உடலுக்கு ஏற்றது. கலப்பினப் பசுக்களின் பால் நீரிழிவு, வளரூக்கிக் (ஹார்மோன்) குறைபாடு, பாலினச் சமநிலைப் பாதிப்பு முதலான பல நோய்களை உண்டாக்குகிறது. ஜல்லிக்கட்டு தடை செய்யப்படால் நாட்டுக் காளை இனங்கள் அழிந்து நாட்டுப் பசு இனமும் அழிந்து போய்விடும்" எனத் தலையில் அடித்துக் கொள்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பெரியவர்கள் முதல் பச்சைக் குழந்தைகள் வரை, இன்றைய சமுதாயம் தொடங்கி இனி வரும் தலைமுறை வரை பாதிக்கும் மாபெரும் பிரச்சினை இது. ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஈடுபடும் வீரர்கள் பற்றி அவர்கள் பெற்றோரை விட ஆழ்ந்த அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஏறு தழுவல் எதிர்ப்பாளர்கள் இன்று வரை இது பற்றித் துளியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆக, எப்படிப் பார்த்தாலும், மனிதநேயமோ விலங்குகள் மீதான அக்கறையோ கடுகளவும் இல்லாத இவர்களுக்கு ஏறு தழுவல் விளையாட்டில் கலந்து கொள்ளும் மனிதர்கள் மீதும் காளைகள் மீதும் மட்டும் இந்த அளவுக்கு அக்கறையும் இரக்கமும் நிரம்பித் ததும்புகின்றன என்றால் அதை நாம் நம்பப் போகிறோமா நண்பர்களே?

Car Race Crueltiesமட்டைப் பந்தாட்டம் (கிரிக்கெட்டு) முதல் மகிழுந்துப் (Car) போட்டி வரை எத்தனையோ விளையாட்டுகளில் வீரர்கள் காயம் படுகிறார்கள், உயிரிழக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீதெல்லாம் அக்கறை கொண்டு அந்த விளையாட்டுகளையெல்லாம் தடை செய்யச் சொல்லாத இவர்கள் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய மட்டும் உச்சநீதிமன்றம் வரை மல்லுக்கட்டுவது ஏன் என்பதை நாம் ஒரு நிமிடமாவது சிந்திக்க வேண்டாவா?

மகாராட்டிரத்தில் நடத்தப்பெறும் எருமைப் பந்தயத்தில் எருமைகளைக் கட்டுப்படுத்த நீண்ட கம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டுப் போலப் பார்வையாளர்கள் தனியாகவும் விளையாட்டு வீரர்கள் தனியாகவும் வேலி கட்டியெல்லாம் அந்த விளையாட்டு நடத்தப்படுவதில்லை; தெருவிலேயே நடத்துகிறார்கள். ஆனால், காளைகளுக்காகக் குரல் எழுப்பும் நம் ஏறு தழுவல் எதிர்ப்பாளர்கள் இந்த எருமைகளுக்காகவோ அந்த விளையாட்டால் பாதிக்கப்படும் மனிதர்களுக்காகவோ வழக்காடுவதில்லை.

அவ்வளவு ஏன், இதே காட்சிப்படுத்தக்கூடாத உயிரினங்களின் பட்டியலில் இருப்பவைதாம் யானைகளும். ஆனால், அவைதாம் எல்லாக் கோயில்களிலும் இன்றும் இரந்து (பிச்சை) கொண்டு திரிகின்றன. இத்தனைக்கும் காளைகளைப் போல அவை வீட்டு விலங்குகள் கூடக் கிடையாது. காட்டிலிருந்து பிடித்து வந்து பட்டினி போட்டும், கடும் சித்திரவதைக்கு ஆளாக்கியும்தான் அவற்றை மனித ஆணைகளுக்குப் பணியும்படி பழக்குகிறார்கள். ஆனால், இரக்கத்தின் இருப்பிடமான இவர்கள் இதைப் பற்றியும் தட்டிக் கேட்பதில்லை. எனில், இவர்கள் நோக்கம்தான் என்ன?

இப்படிப்பட்டவர்களுக்கு ‘ஏறு தழுவல்’ என்றால் என்னவெனத் தெரியுமா?... அதிலுள்ள ‘தழுவல்’ எனும் சொல்லின் பொருள்தான் புரியுமா?... காளையை அடக்குவதோ கொல்வதோ கொடுமைப்படுத்துவதோ இல்லை, அதைக் கட்டி ‘அணைப்பது’தான் இந்த விளையாட்டே என்பதை இவர்கள் அறிவார்களா?... பெற்ற பிள்ளைக்குக் கஞ்சி வார்த்துவிட்டு, கடன் பெற்றாவது காளைக்கு வாதுமை (பாதாம்) வாங்கிப் போடுபவர்களை இவர்கள் சந்தித்திருப்பார்களா?... விளையாட்டுத் திடலை விட்டு ஓடிப் போன காளையை, பெற்ற பிள்ளையைத் தொலைத்தது போல் தேடி அலைபவர்களின் கதைகளைத்தாம் இவர்கள் கேட்டிருப்பார்களா?...

2015 திசம்பரில், ஏறு தழுவலுக்கான தடையை நீட்டிக்கச் செய்வதற்காகத் திரைப்பட நடிகர்களிடமும், மட்டைப் பந்தாட்ட வீரர்களிடமும் கையொப்பம் திரட்டியது பீட்டா. அதில், "ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் கொடூரமான முறையில் உணர்விழக்கச் செய்யப்பட்டு, உதை, குத்து, தரையில் தரதரவென இழுத்துச் செல்லுதல், கத்தியால் குத்தப்படுதல் போன்ற பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளாகின்றன" என்று புளுகு மூட்டைகளை அடுக்கியிருந்தது. நான்காயிரம் ஆண்டுக் கால ஏறு தழுவல் வரலாற்றில் ‘கத்தி’ என்கிற ஒரு பொருள் இதுவரை ஒருமுறை கூட உள்ளே கொண்டு வரப்பட்டதே கிடையாது என்பது அந்த விளையாட்டைத் தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்தவர்களுக்குக் கூடத் தெரியும். தவிர, தரதரவெனத் தரையில் இழுத்துச் செல்வதற்கு அது என்ன காளையா கரப்பான் பூச்சியா? ஏறு தழுவலைப் பற்றித் தெரியாவிட்டாலும் அடிப்படை மனித அறிவு சிறிதளவாவது இருப்பவர்களுக்கு இது புரியும்.

இப்படி, உண்மையின் சாயல் கூட இல்லாத உலகளவுப் பொய்களைச் சொல்லித் தடை கேட்பதிலிருந்தே ஜல்லிக்கட்டைத் தடை செய்யச் சொல்லிக் கேட்பதற்குப் போதுமான காரணங்கள் ஏதும் இல்லை என்பதை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களே உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு மேலும், ஜல்லிக்கட்டு நடத்துவது சரியா தவறா என்பது பற்றிப் பேச ஏதாவது இருக்கிறதா தோழர்களே?
🌸 🌸 🌸 🌸 🌸

படங்கள்: நன்றி ௨) எம்.வி.ஜி பகடிச்சித்திரம், ௩) பீட்டா விலங்குகளைக் கொல்கிறது, ௪) yuer.qpx.com, ௫) பிக்சபே

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

15 கருத்துகள்:

  1. ஏறு தழுவல் எதிர்ப்பாளர்களுக்கு கலப்பினப் பசுக்களின் பால் மட்டும் கொடுக்க வேண்டும் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக நாடியைப் பிடித்து விட்டீர்கள் ஐயா! இவ்வளவு எழுதினாலும், எனக்கு இந்த விதயம் மட்டும் புரியவில்லை. நாட்டில் இனி கலப்பினப் பசும்பால்தான் கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டால் பாதிக்கப்படப் போவது ஏறு தழுவல் ஆதரவாளர்கள் மட்டுமல்லர், எதிர்பாளர்களும்தாம். இன்னும் சொல்லப் போனால், ஆதரவாளர்களை விட இந்த எதிர்ப்பாளர்களுக்குத்தான் இதனால் பாதிப்பு மிகுதியாக ஏற்படும். காரணம், ஏறு தழுவல் எதிர்ப்பில் முன்னணியில் இருக்கும் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் - அதாவது, மரக்கறியாளர்கள். ஏறு தழுவல் ஆதரவாளர்களோ பார்ப்பனர் அல்லாத - இறைச்சி உண்ணும் பழக்கமுள்ள மற்றவர்கள். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், மரக்கறி தவிர மற்றவற்றைச் சாப்பிட முடியாதவர்களான பார்ப்பனர்களுக்குப் பெரிதும் ஊட்டம் அளிப்பதே பால்தான். அதில் ஒரு பாதிப்பு என்றால், இறைச்சி உண்பவர்கள் பாலைத் தவிர்த்து விட்டு மீன், கறி போன்றவற்றிலிருந்து தங்கள் உடலுக்கு வேண்டிய ஊட்டங்களைப் பெற முடியும்; ஆனால், பார்ப்பனர்களால் அது முடியாது. எனவே, இந்த ஏறு தழுவல் எதிர்ப்பால் பெரிதும் பாதிக்கப்படப் போகிறவர்களே பார்ப்பனர்கள்தாம். அப்புறம் எப்படி அவர்கள் பீட்டாவுக்குத் துணை போகிறார்கள் என்பது ஏறு தழுவலில் அவிழ்த்து விடப்பட்ட காளை போல் பிடிபடாத மர்மமாகவே இருக்கிறது!

      நீண்ட காலம் கழித்து மீண்டும் என தளத்தில் உங்கள் கருத்தைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி! மிக்க நன்றி!

      நீக்கு
  2. மிக அருமையான பதிவு. புள்ளிவிவரங்கள் மனதை நெருடுகின்றன. எப்படி பீட்டா போன்ற அமைப்புகளின் அடாவடியை தடுக்க முடியும் என்று தெரியவில்லை. இது தொடர்பாக நானும் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். விரைவில் தளத்தில் வெளியிடுகிறேன்.

    தொடர் பணியின் காரணமாக தங்களின் முந்தைய பதிவுகளை வாசிக்க இயலவில்லை. விரைவில் வாசித்து கருத்திடுகிறேன். பகிர்வுக்கு நன்றி!
    தொடரட்டும்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொது அறிவுப் பதிவுகள் வழங்குவதில் இணையற்றவரான நீங்களே இந்தப் பதிவின் புள்ளி விவரங்களையும் தகவல்களையும் பாராட்டுகிறீர்கள் என்றால் எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சி நண்பரே! இது தொடர்பான உங்கள் பதிவையும் படிக்க ஆவல்.

      வெகு நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் கருத்தைத் தளத்தில் பார்க்க முடிந்தது கண்டு மகிழ்கிறேன்! நன்றி!

      நீக்கு
  3. நன்கு அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். குறிப்பாக peta அமைப்பினரால் கொள்ளப்படும் நாய், பூனைகளை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! பீட்டா பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய அதிர்ச்சித் தகவல்கள் நிறையவே இருக்கின்றன. நான் பதிவின் இறுதியில் கொடுத்துள்ள ‘பீட்டா விலங்குகளைக் கொல்கிறது’ எனும் சுட்டியில் சென்று பார்த்தீர்களானால் பல திகைப்பூட்டும் தகவல்களை அறியலாம். நன்றி!

      நீக்கு
  4. நான் சொல்ல நினைத்த கருத்துக்களைச் சொல்லிவிட்டீர்கள் சகோ! அதுவும் மிகவும் அழகான தமிழில், தமிழ் நடையில்! நான் எழுதியிருந்தாலும் இந்த அளவிற்குத் தெளிவாக என் மொழி ஜல்லிக்கட்டு நடத்தியிருக்காது! முதலில் அதற்கு ஒரு ஷொட்டு.

    நான் சொல்ல நினைத்த கருத்துக்கள், யானையைக் கோவிலில் வைத்து சில பல சித்திரவதைகள் செய்வது, ஒட்டகங்களுக்கு இழைக்கப்படும் அநீதி, மாடுகளை வண்டியில் ஏற்றி வேறு இடத்திற்கு, அது வெட்டுவதற்கோ அல்லது விற்பதற்கோ எதுவாக இருந்தாலும், அனுப்புவதற்கு என சில வரம்புகள் விதிகள் உண்டு அதைப் பின்பற்றாமல், கால்களைக் கூட ஒடித்து , நெருக்கி ஒன்றின் கொம்பு மற்றொன்றின் மீது பட்டு கண் பார்வை இழப்பதும், காயம் ஏற்படுவதும் இவை எல்லாம் பீட்டாவின் கண்களில் படவில்லை. மயில் இறகுகள் உருவி உருவி விற்கப்படுவது, தோலாடைகள் அதான் பூனை நடைக்கு அழகு செய்ய, தோல் பைகள் இவற்றிற்காக முதலைகள், ஆடுகள், மாடுகள்ம் பாம்புகள் கொல்லப்படுவது பீட்டாவின் கண்களில் படவில்லை. இவை எல்லாம் விலங்குகள் அல்ல! ஸ்பெயினில் விளையாடும் காளைச் சண்டை, அதன் பெயர் டாரோமாக்கியா என்று நினைவு...அதைப் போன்ற ஒரு குரூரமான சண்டையை யாரும் இவ்வுலகில் பார்த்திருக்க முடியாது அப்படியான சண்டைகள் அவர்கள் கண்களில் படாதது ஏனோ? நட்சத்திர ஆமைகள் இந்தியாவிலிருந்து தாய்லந்து போன்ர கிழக்காசிய நாடுகளுக்கு உணவிற்காக கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப்பட்டுக் கோடிக்கோடியாகப் பண வர்த்தகம் நடைபெறுவது அவர்கள் கண்களில் படாதது ஏனோ? ஆமைகள் விலங்குகள் இல்லையோ?! தெரியவில்லை. அகராதியில் பார்க்க வேண்டும். பீட்டாவின் அகராதியிலா, பொதுவான அகராதியிலா? ஏனென்றால் இப்போது பீட்டாவிற்கு என்று ஒரு தனி அகராதி இருக்கிறது என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை போலும்!

    கீதா
    ஓர் அளவிற்கு மேல் பின்னூட்டத்தை கூகுளார் ஏற்கவில்லை எனவே அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில், உங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி சகா! உங்களை முந்திக் கொண்டதற்காக வருந்துகிறேன். ஆனால், இந்தக் கட்டுரையை நான் இந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களெல்லாம் தொடங்குவதற்கு முன்பே எழுதி விட்டேன். என் நண்பர் பிரகாஷ் கேட்டதன் பேரில் எழுதியது இது. இதற்குக் காரணமான அவருக்குத்தான் உங்கள் பாராட்டு போய்ச் சேர வேண்டும்.

      விலங்குகள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு அனுப்பப்படும்பொழுது நடத்தப்படும் விதம் குறித்து நீங்கள் எழுதியுள்ள தகவல்கள் திகைப்பளிக்கின்றன! இவையெல்லாம் உச்சக்கட்டக் கொடுமைகள்!

      ஆனால் அதே நேரம், தோல் பொருட்கள் போன்ற இன்ன பிற பயன்பாடுகளுக்காக விலங்குகள் கொல்லப்படுவதைப் பீட்டா தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்பதையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இப்பொழுதும் இணையத்தில் பீட்டா என்று தேடினால் தோல் பொருட்கள் முதலான விலங்குகள் உடலிலிருந்து எடுக்கப்படும் பொருட்களுக்கு எதிரான அவர்களின் விளம்பரங்களை நிறையவே பார்க்கலாம். ஆனால் என்ன, நான் முன்பே கூறியபடி, மிகவும் விரசமான விளம்பரங்கள்!

      நட்சத்திர ஆமைகளைப் பொறுத்த வரை, அவற்றை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சட்டமே இருக்கிறது. கடத்தப்பட இருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல் எனப் பலமுறை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். எனவே, அதற்குப் பீட்டா போன்ற நிறுவனங்கள் தனியாக முயற்சி மேற்கொள்ள ஏதும் இல்லை.

      மற்றபடி, பீட்டா அகராதி எனும் உங்கள் நக்கலை ரசித்தேன்!

      நீக்கு
    2. நட்சத்திர ஆமைகளைப் பொறுத்த வரை, அவற்றை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சட்டமே இருக்கிறது. கடத்தப்பட இருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல் எனப் பலமுறை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். எனவே, அதற்குப் பீட்டா போன்ற நிறுவனங்கள் தனியாக முயற்சி மேற்கொள்ள ஏதும் இல்லை.//

      இல்லை சகா பிடிபட்ட செய்திகளை வாசித்ததுண்டு. ஆனால் அதிலும் கள்ளக்கடத்தல்கள் நடை பெறுகிறது. பீட்டா நல்ல அமைப்பாக இருந்தால், விலங்கு வதைக்கு எதிராக இருந்தால் கண்டிப்பாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆக வேண்டும். ஏனென்றால் கள்ளத்தனமாக நடப்பவற்றையும் எதிர்க்கத்தானே வேண்டும். எப்போது நாய் பூனைகளை அது கொல்லத் தொடங்கியதாக நான் செய்திகள் அறிந்தேனோ அப்போதே எனக்கு பீட்டாவை நம்ப முடியவில்லை. நல்ல அமைப்பு இல்லை என்று தோன்றியது. எதிக்கல் என்றால் இதற்கும் எதிர்க்க வேண்டும். தோல் பொருட்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு என்றால் என்ன செய்தது இதுவரை??????? தடுத்து நிறுத்தியதா? அதைத் தடுத்து நிறுத்த முடியாத பீட்டா இப்போது ஜல்லிக்கட்டை மட்டும் எப்படித் தடுக்கிறதாம்??? இதற்கு என்ன பதில் சொல்லுங்கள் சகா...இதுவும் பீட்டாவும் அரசியல் சார்ந்தது என்று தெரியவில்லையா?

      கீதா

      நீக்கு
  5. இவை எல்லாம் விலங்குகள் இல்லை, விலங்கியல் பூங்கா என்று மக்களுக்குக் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருக்கும் விலங்குகள் விலங்குகள் இல்லை போலும். அவற்றிற்குத் தன்மானம் என்பது இல்லை போலும்! அவற்றிற்கு நடக்கும் அநீதிகள் எல்லாம் அநீதிகள் இல்லை போலும். பேசும் கிளிகள்!!! ஏன் கிளிகள் மனிதர்களைப் போல் ஜோசியமே சொல்லும்!!இதெல்லாம் விலங்கு வதை இல்லை. குதியப்பந்தையத்தில் ஓட வைப்பதற்காக வளரூட்டிகள் கொடுப்பது எனப்து சித்திரவதை இல்லை போலும்.

    எப்படி குழந்தைகளுக்கு உளவியல் இருக்கிறதோ, அதன் படி அவர்களை வளர்க்க வேண்டும் என்று சொல்லுகின்றோமோ அதைப் போன்றுதான் விலங்குகளுக்கும் உளவியல் உண்டு. அதன் படி விலங்குகளுக்குச் சில திறன்கள் உண்டு. வீட்டில் வளர்த்தாலும் அந்தத் திறன்படி வளர்த்தால்தான் அவற்றிற்கு நல்லது. எப்படி ஒரு குழந்தையை அதன் திறமையை முடக்கி வளர்த்தால் அதன் குணம் மாறுமோ, சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய குழந்தையை முடக்கி வளர்த்தால் அதன் குணநலன் மாறி மன நலம் பாதிக்கபடுமோ அப்படித்தான் விலங்குகளும். லேப்ரடார் எனும் வகை நாய்களை பல தூரம் நடக்க வைக்க வேண்டும் இல்லை என்றால் அதற்குச் சில பிணிகள் வரும். குதிரைக்கும் யானைக்கும் முதுகெலும்பு நல்ல உறுதியாக இருப்பதால்தான் அதன் மீது மனிதர்களை ஏற்றி உலா வரச் செய்வது. அவர்களுக்கு நாம் அமர்ந்தால் புத்தகப்பையின் சுமை போலத்தான் இருக்கும். அவற்றிற்கு என்று சில பணிகள் உண்டு. அவற்றைச் செய்ய வைத்தால்தான் அவற்றிற்கு அவற்றின் மன நலம் பாதிக்கப்படாது. சிங்கம் புலிகளைக் கூட்டில் அடைப்பதால் எப்படி அவற்றின் இயல்பான வீரம் முடக்கப்படுகிறதோ அப்படித்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளும்.

    //ஆனால், பீட்டா முதலான விலங்குநல அமைப்புகளும் மேனகா காந்தி போன்ற தனிமனித ஆர்வலர்களும் இவர்களைப் போல் இல்லை. ஜல்லிக்கட்டு எனும் காட்டுமிராண்டித்தனமான (��) விளையாட்டால் காளைகளும் மனிதர்களும் எப்படியெல்லாம் காயப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்பதை எண்ணி அளவில்லாக் கவலை கொண்டுள்ள இவர்கள் எப்படியாவது தமிழ்நாட்டுக் காளைகளையும் காளையர்களையும் காப்பாற்றியே தீருவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்// ஆம்! காளையர்கள், மனிதப் பசுக்களை மேய்ந்த போது அந்தக் காளையர்களைக் காப்பாற்றத்தானே அரசியல் போர்த்திப் பலரும் முனைகின்றார்கள்! அப்படி நினைத்துவிட்டார்கள் போலும்!!! அதான் இதில் இத்தனை அரசியல் விளையாடுகிறது.

    ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு, இடையில் எப்போதோ சாராயம் கொடுக்கப்பட்டது என்று செய்திகள் வந்த போது அரசு பல சட்டதிட்டங்களைக்கொண்டுவந்து அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளித்தது. சரி சிலருக்கு அதீதமாகக் காயங்கள் ஏற்படலாம். இப்போது வீர விளையாட்டுக்கள் எனப்படும் கூமுட்டை விளையாட்டான குத்துச்சண்டையில் உயிர் போகும் ஆபத்துஇல்லையா? கராத்தே சண்டை போட்டியில் விதிமுறைகள் இருந்தாலும் படக்கூடாத இடத்தில் அடிபட்டு பல பிரச்சனைகள் ஏற்படுவதில்லையா? அதற்கு எப்படி முறையான பயிற்சி பெற்றவர்கள் அனுமதிக்கப்படுகிறார்களோ அப்படி இதற்கும் முறையான பயிற்சி பெற்றவர்கள் விளையாடலாம் என்று சட்டம் கொண்டு வரவேண்டுமே அல்லாமல் இதனைத் தடை செய்வது என்பது நியாயமற்றது அப்படிப்பார்த்தால் பல விளையாட்டுக்களை ரத்து செய்ய வேண்டும்.

    பைக் ரேஸ் கார் ரேஸ் எல்லாமே மனிதர்களுக்கு இதைவிட ஆபத்தானது. அதை எல்லாம் ஏன் தடை செய்யவில்லை?

    இன்னும் நிறைய பேசலாம்....இதை எல்லாம் தான் பதிவில் எழுதுவதற்குக் குறித்து வைத்திருந்தேன். இங்கு சொல்லிவிட்டேன். முடிந்தால் பதிவு வெளியிடுவேன் இல்லை என்றால் இங்கு பதிவு செய்தாகிவிட்டதே!!!

    பதிவு அருமை சகோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை தெரியாத மிக அருமையான தகவல்கள் சகோ! மிக்க நன்றி! உங்கள் கேள்விகள் அனைத்தும் சரியானவை. இதையேதான் போராடும் இளைஞர்களும் கேட்கிறார்கள். ஆனால், எவன் காதில் வாங்கிக் கொள்கிறான்?

      மற்றபடி, நான் நேற்றே உங்களிடம் கூறியது போல், இங்கு நீங்கள் தெரிவித்திருந்தாலும் இந்தக் கருத்துக்களைத் தனிப் பதிவாக எழுதாமல் விட வேண்டியதில்லை. காரணம், இப்படிப் பதிவின் கருத்துரைப் பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் அவ்வளவாக மக்கள் பார்வைக்குப் போய்ச் சேர வாய்ப்பில்லை. எனவே, பதிவிலும் நீங்கள் இவற்றைக் குறிப்பிடுவது நலம்.

      அருமையான தகவல்களுக்கும் உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கும் மீண்டும் மிக்க நன்றி!

      நீக்கு
  6. PETA அமைப்பை ஆதரிப்பதன்மூலம் நீண்ட காலமாகவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பொருளாதார ரீதியாக பலன் கிடைப்பதாகத் தெரிகிறது. எனவே ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் அதே நேரத்தில், அந்த இயக்கத்தை சற்றே பெரிதுபடுத்தி "Ban PETA" என்ற நாடு தழுவிய இயக்கமாக மாற்றிட வேண்டும். முதல் காரியமாக PETA அமைப்பிற்கு நனகொடைகள் வழங்குவதை தடை செய்யவேண்டும். – இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து http://ChellappaTamilDiary.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியான பரிந்துரை ஐயா! போராட்டம் போகிற போக்கைப் பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் கூறுவது நடக்கும் எனத் தோன்றுகிறது.

      உங்கள் வருகைக்கும் இசைவான கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! இன்னும் நுட்பமாக இன்னொரு பதிவு எழுதியிருக்கிறேன். நேரமிருக்கும்பொழுது பாருங்களேன்! - http://agasivapputhamizh.blogspot.com/2017/01/revolution-against-food-politics.html

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்