.

வெள்ளி, ஏப்ரல் 01, 2016

தேர்தல் - 2016 (2) | பா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கும் இராசபக்சவுக்கு வாக்களிப்பதற்கும் என்ன வேறுபாடு?


Sankar with Kousalya as bridegroom and then as body

சாதி வெறியர்களால் துள்ளத் துடிக்க அந்த இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்தில் இன்னும் குருதிக் கறை கூட முழுதாய்ப் போயிருக்காது. அந்தப் பெண் கௌசல்யா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக வெளிவரக் கூட இல்லை. கௌரவத்தின் பெயரால் நடத்தப்பட்ட அந்த இழிசெயலுக்கு எதிரான கண்டனக் குரல்கள் கூட இன்னும் ஓயவில்லை. அதற்குள் வெட்கமே இல்லாமல் விவாதிக்கிறார்கள் பா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கான காரணங்கள் பற்றி! எப்படி முடிகிறது!...

கேட்டால் இவர்கள் படித்தவர்களாம்! அதனால் படித்தவரான, இளைஞர் பார்வையோடும் சீரிய திட்டமிடலோடும் எல்லாவற்றையும் அணுகுகிறவரான அன்புமணிக்கு வாக்களிக்க விரும்புகிறார்களாம். தெரியாமல்தான் கேட்கிறேன், அப்படியானால் நம்மோடு வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்ப் பாதுகாப்புக் குறித்து உங்களுக்கெல்லாம் எந்த அக்கறையுமே கிடையாதா படித்த பெருமக்களே? தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மாற்று வேண்டும்தான்; அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. ஆனால், அந்த மாற்று யார், அன்புமணி இராமதாசா? கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக இராசபக்சவைக் கொண்டு வந்து நிறுத்தினால் வாக்களிக்க முடியுமா என்ன?

அதற்காக, நடந்த அந்தக் கொலையைப் பா.ம.க-வினர்தான் செய்தார்கள் என நான் சொல்லவில்லை. ஆனால், இந்தியாவின் வேறெந்த மாநிலத்தை விடவும் சாதிய மனப்பான்மை குறைந்த தமிழ் மண்ணில் இன்று சாதி ஆணவக் கொலைகளெல்லாம் இப்படிப் போகிற போக்கில் நடத்தப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம், பா.ம.க அப்படிப்பட்ட வழக்கத்துக்கு ஊக்கம் கொடுத்து உரமேற்றி வளர்த்ததுதான் என நான் சொன்னால் உங்களில் யாராவது அதை மறுக்க முடியுமா நண்பர்களே?

Divya ~ Ilavarasan - The love birds!
இப்பொழுது நடந்த சங்கர் கொலை ஒருபுறம் இருக்கட்டும். திவ்யா-இளவரசன் திருமணத்தை எதிர்த்து தருமபுரியில் இவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம் மறந்துவிட்டதா? அதையொட்டி நடந்த இளவரசன் கொலை, மரக்காணக் கலவரம் போன்றவைதாம் மறக்கக்கூடியவையா? அல்லது சித்திரை முழுநிலவுப் பெருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இவர்கள் விடுத்த வெளிப்படையான மிரட்டல்களைத்தாம் மறந்துவிட்டீர்களா?1

நீங்கள் கேட்கலாம், “பா.ம.க மட்டும்தான் சாதிக் கட்சியா? இன்னும் எத்தனையோ சாதிக் கட்சிகள் நாட்டில் இல்லையா? அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்களை மட்டும் ஏன் இந்த அளவுக்கு எதிர்க்கிறீர்கள்?” என. உண்மை! நாட்டில் இன்னும் நிறையவே சாதிக் கட்சிகள் உள்ளன. ஆனால், இதுவரை எந்த சாதிக்கட்சித் தலைவனாவது தன்னை ‘சாதி வெறியன்’ எனப் பெருமையோடு அறிவித்துக் கொண்டு பார்த்திருக்கிறீர்களா? நடத்துவது சாதிக் கட்சியாகவே இருந்தாலும் பொதுவெளியில் யாருமே அப்படி ஒரு வாக்குமூலத்தைக் கொடுக்கத் துணிய மாட்டார்கள். ஆனால், ஊரறிய உலகறிய “ஆம்! நான் மருத்துவனாக இருந்தபோதும் சரி, கட்சி தொடங்கியபோதும் சரி, எப்போதுமே நான் சாதி வெறியன்தான்!!” என வெளிப்படையாக அறிவித்தவர் இராமதாசு.2

அது மட்டுமில்லை, மற்ற சாதிக்கட்சியினர் எல்லாம் அவரவர் சாதியினரைத் திரட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் (அதுவே இழிவானதுதான்). ஆனால், ஆதிக்க சாதியினர் அனைவரையுமே ஓரணியில் திரட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் ஓர் அமைப்பைக் கட்டமைப்பது என ஏதோ திரைப்படங்களில் வருவது போல வானளாவிய அளவுக்கு சாதியத்தைக் கொண்டு செல்லும் பேரபாயகரமான முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டிருப்பது பா.ம.க மட்டும்தான்.1

மேலும், சாதியத் தாக்குதல் ஏதாவது நடந்தால், உள்ளத்தளவில் இல்லாவிட்டாலும் உதட்டளவுக்காவது, நாகரிகத்துக்காகவாவது அதைக் கண்டித்து அறிக்கை விடுவதுதான் இதுவரை மற்ற சாதிக் கட்சித் தலைவர்கள் கடைப்பிடித்து வரும் வழக்கம்; ஆனால், உடுமலையில் நடந்த கௌரவக் கொலை பற்றிச் செய்தியாளர்கள் அவர்களாகவே முன்வந்து கேள்வி எழுப்பியும் “இதுவரை எத்தனையோ முதன்மையான விதயங்கள் சொல்லியிருக்கிறேன். முதலில் அதைப் போடுங்கள்” என்று திமிராகச் சொல்லி விட்டு எழுந்து போனவர் இராமதாசு!

இன்னும் இவரோ, இவர் மகனோ ஒருமுறை கூட முதல்வர் ஆகவில்லை. ஆளுங்கட்சியில் பங்குதான் வகித்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்பொழுதே, அதுவும் தேர்தலை இவ்வளவு நெருக்கத்தில் வைத்துக் கொண்டே இவர்கள் சாதியையும் சாதி வெறியையும் இந்த அளவுக்குப் பச்சையாக ஊக்குவிக்கிறார்கள் என்றால், மேற்கொண்டு அன்புமணி முதல்வராகவும் நாம் வாக்களித்தால்?...

இன்றைய நிலைமையிலேயே இவர்களால் ஆதிக்க சாதிகள் அனைத்தையும் இந்த அளவுக்கு ஒருங்கிணைக்க முடிகிறது என்றால், இவர்களே நாளை ஆட்சிக்கும் வந்து விட்டால்?...

இதுவரை இவர்கள் சாதி வளர்த்ததற்கே ஊர் பார்க்க உலகம் பார்க்க, படப்பிடிப்புக் கருவி பார்க்க ஒருவனை நடுத்தெருவில் போட்டு வெட்டிச் சாய்க்கிறார்கள் என்றால், இன்னும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இவர்கள் சாதி வளர்க்கத் தொடங்கினால்?... கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! காதலை எவனாவது, எவளாவது வாய் திறந்து சொல்ல முடியுமா?... பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஒருவராவது தெருவில் அச்சமின்றி நடக்க முடியுமா?...

இப்படி மண்டைக் கொழுப்பெடுத்துத் திரியும் ஒரு கொலைகாரக் கும்பலுக்கு வாக்களிக்கப் போவதாக வெட்கமில்லாமல் தொலைக்காட்சியில் வந்து சொல்லத்தான் நாம் படித்திருக்கிறோமா? போயும் போயும் சாதிப் பாகுபாடு என்பது என்னய்யா? உடல் ஊனம், ஏழ்மை, நிறம் போன்ற காரணங்களின் அடிப்படையில் ஒருவரை மட்டம் தட்டுவதோ மதிப்பிடுவதோ எந்த அளவுக்கு இழிவான செயலோ அதே போன்றதுதான் சாதி அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவதும், மட்டம் தட்டுவதும். இப்படிப்பட்ட கீழ்த்தரத்திலும் கீழ்த்தரமான நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பது எப்படிப் படித்தவர்களின் செயலாக இருக்க முடியும்?...

தனிமனித அடிப்படை உரிமையான காதலை எதிர்ப்பது, சமூகப் பாகுபாட்டுக்குத் (Discrimination) தலையாய காரணியாக விளங்கும் சாதியத்தை ஆதரிப்பது போன்ற அருவெறுப்பான நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு கட்சி எப்படி நாகரிக இளைஞர்களின் தேர்வாக இருக்க முடியும்?...

தமிழ்ப் பண்பாட்டின் இரு கண்களுள் ஒன்று காதல். அதற்கு எதிராய் ஆயுதம் தாங்குகிற இவர்களுக்கு வாக்களிப்பவர் எப்படி உண்மையான தமிழராய் இருக்க முடியும்?...

வாழ வேண்டிய இளமனங்களை பிரித்து, கொன்று கூறு போடுகிற இரக்கமே இல்லாத செயலை இப்படிக் கூச்சமே இல்லாமல் ஊக்குவிக்கிற, மனிதநேயத்துக்கே எதிரான கட்சியினருக்கு மனிதராய்ப் பிறந்த ஒருவர் எப்படி வாக்களிக்க முடியும்?... அப்படிச் செய்தால், தமிழர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன; நல்லாட்சி கிடைத்தால் போதும் என இராசபக்சவுக்கு வாக்களிக்கும் சிங்களக் காடையர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?

ஏன் பா.ம.க-வுக்கு வாக்களிக்கக் கூடாது? சாதிக்கு அப்பாலும் சில காரணங்கள்

Anbumani Meme

சரி, பா.ம.க மீது சாதி தொடர்பாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் இருக்கட்டும். அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலாவது பா.ம.க உண்மையிலேயே நல்ல கட்சிதானா?

பா.ம.க-வுக்கு வாக்களிக்கலாம் எனப் பரிந்துரைப்பவர்கள் அதற்குக் காட்டும் முதன்மையான காரணம், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்பது. அட அறிவுப் பழங்களே! அரசியலுக்கு வந்த புதிதில், இதே சென்னை, தேனாம்பேட்டை நாட்டுமுத்துத் தெருவில் அலுவலகம் - வீடு இரண்டையும் ஒரே கட்டடத்தில் நடத்திக் கொண்டிருந்த அன்றைய இராமதாசு எங்கே? இன்று தைலாபுரத்தில் பெரிய பண்ணை வீட்டில் அரச வாழ்வு வாழும் இராமதாசு எங்கே? எத்தனை இடங்களில் திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், எப்பேர்ப்பட்ட படாடோப வாழ்க்கை!... இவற்றுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது? சிந்திக்க வேண்டாவா?

பயணச்சீட்டு வாங்கக் கூடக் காசில்லாமல் கள்ளத் தொடர்வண்டி ஏறிச் சென்னைக்கு வந்த கருணாநிதிக்கும், வெறும் திரைப்பட நடிகையாக இருந்த ஜெயலலிதாவுக்கும், பட்டியலிட்டால் படித்து மாளாத அளவுக்கு இவ்வளவு மலை மலையான சொத்துக்கள் எப்படி வந்தனவோ அதே வழியில்தான் இராமதாசுக் குடும்பத்துக்கும் இந்தச் சொத்துக்கள் வந்தன. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! இராமதாசு மீதோ அன்புமணி மீதோ ஊழல் வழக்கு ஏதும் இல்லாமல் இருக்கலாம். அதற்காக?... அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி மீது கூடத்தான் குற்றச்சாட்டு இல்லை. அதற்காக அதை அவர் செய்யவில்லை என ஆகி விடுமா?

அதை விடுங்கள்! மேலாண்மை (நிர்வாகம்) வசதிக்காகத் தமிழ்நாட்டையே இரண்டாகப் பிரிக்க வேண்டும் என வலியுறுத்துபவர் இராமதாசு. இப்படிச் செய்தால், வன்னியர்கள் மிகுதியாக வாழும் பகுதி மட்டும் தனி மாநிலமாகக் கிடைக்கும்; தாங்கள் எளிதில் ஆட்சிக்கு வரலாம்; அந்த மாநிலத்தில் நிரந்தரமாக ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது அவர் கணக்கு. தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஓர் ஆட்சி அமைய வேண்டி இவர்களுக்கு வாக்களித்தால் முதலில் அதுதான் நடக்கும். ஈழப் பிரச்சினை, தமிழ் மீனவர் பிரச்சினை, மீத்தேன் திட்டம், அணு உலைத் திட்டம், நியூட்ரினோ திட்டம், முல்லைப் பெரியாறு பிரச்சினை எனத் தமிழ் இனத்தையே தடம் தெரியாமல் அழிக்கும் அளவுக்குச் சுற்றிலும் பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும் வேளையில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டை இரண்டாகக் கூறு போட்டால் அதை விடப் பெரிய பின்னடைவு வேறு இருக்க முடியுமா என்பதைச் சிந்தியுங்கள்!

Anbumani in Geneva
தவிர, நாளுக்கு நாள் கடுமையாகி வரும் இந்தத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தாங்கள் செய்யப் போவது என்ன, இவை குறித்துத் தங்கள் நிலைப்பாடு என்ன என்பது பற்றிப் பா.ம.க-வின் வரைவுத் தேர்தல் அறிக்கையிலும் இல்லை; வண்டலூரில் நடந்த அவர்கள் கட்சி மாநில மாநாட்டில் புதுமைச் சொற்பொழிவு நடத்திய அன்புமணி இந்தப் பிரச்சினைகள் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவும் இல்லை.3 சொல்லப் போனால், பா.ம.க-வின் சாதியப் போக்குக் குறித்து எனக்குக் கடுமையான கருத்துக்கள் இருந்தாலும், அவர்களுடைய தமிழ் உணர்வு குறித்தோ தமிழினப் பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடு குறித்தோ இதுவரை எனக்கு எந்த ஐயமும் இருந்ததில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் தமிழர் பிரச்சினைகள் எது குறித்தும் அவர்கள் கண்டு கொள்ளாதிருப்பது எனக்கே வியப்பளிக்கிறது!

எல்லாவற்றுக்கும் மேலாக, மாற்று ஆட்சி வேண்டிப் பா.ம.க-வுக்கு வாக்களிக்கப் போய், தேர்தலுக்குப் பின் அவர்கள் தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து விட்டால் என்னாவது என்பதையும் படித்த அறிவாளிகள் சிந்திக்க வேண்டும்! இதுவரை எத்தனையோ முறை அவர்களுடன் கூட்டணி வைத்தவர்கள் இந்த முறை தேர்தலுக்குப் பின் அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் (guarantee) இல்லை. ஒருபுறம் ஏற்கெனவே ஆண்ட இரு பெரும் கட்சிகள்; இன்னொரு புறம் இத்தனை காலமாய் இந்த இருவரின் வெற்றிக்கு இன்றியமையாக் காரணமாய் இருந்த பல கட்சிகளின் ஒட்டுமொத்த உருவமாய் நிற்கும் மூன்றாவது அணி. இந்த மூன்றையும் விட்டுவிட்டு சாதிக் கட்சியாகவே இன்றும் அறியப்படுகிற, காட்டிக் கொள்கிற பா.ம.க-வுக்குப் பொதுமக்கள் எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்பது பெரிய கேள்விக்குறி. அப்படியிருக்க, படித்தவர் - இளையோர் பார்வையில் எல்லாவற்றையும் அணுகுகிறவர் எனவெல்லாம் கணக்குப் போட்டுப் பா.ம.க-வுக்கு வாக்களித்தால் படித்தவர்கள், இளைஞர்கள் வாக்குகளை மொத்தமாகப் பெறுவதன் மூலம் கணிசமான தொகுதிகளை அக்கட்சி வெல்லக்கூடும் என்றாலும், ஆட்சியமைக்கக்கூடிய அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையான இடங்களை எந்தக் கூட்டணி வலிமையும் இல்லாமலே அவர்கள் பிடித்துவிட முடியுமா? அப்படிப் பிடிக்க முடியாத நிலையில் வென்ற அத்தனை தொகுதிகளோடும் அவர்கள் கருணாநிதி அல்லது ஜெயலலிதா பக்கம் போய்விட்டால் ஆட்சி மாற்றம் எப்படி ஏற்படும்? படித்தவர்கள், இளைஞர்கள் அத்தனை பேரையும் இளித்தவாயர்களாகும் நிலைதானே உண்டாகும்? வாக்களிக்கும் முன் இதைப் பற்றி இளைய தலைமுறையினர் கட்டாயம் சிந்திக்க வேண்டும்!

ஆக, பா.ம.க மீதுள்ள சாதி தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் அவர்களுக்கு வாக்களிப்பது எந்த விதத்திலும் நல்ல முடிவாகத் தெரியவில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே!
இவர்களுக்கா உங்கள் வாக்கு?
இவரா உங்கள் அடுத்த முதல்வர்?


பி.கு: பா.ம.க பற்றி அவ்வளவாகத் தெரியாத இன்றைய இளைஞர்கள் - குறிப்பாக, புதிய வாக்காளர்கள் - படித்தவர் என்கிற காரணத்துக்காக அன்புமணிக்கு வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், விழிப்புணர்வு நோக்கில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதே தவிர, வன்னியர்களைக் குறி வைத்து இல்லை. காரணம், வன்னியர்கள் எல்லாருமே பா.ம.க-வுத்தான் வாக்களிப்பார்கள் என நான் நம்பவில்லை. வன்னியர்கள் எல்லோருமே சாதி பார்த்து வாக்களிப்பவர்களாக இருந்தால் ஒவ்வொரு தேர்தலிலும் பெருவெற்றியையும் - படுதோல்வியையும் பா.ம.க மாறி மாறிச் சந்திக்க வாய்ப்பில்லை. ஆம்! வன்னியர்கள் எல்லோருமே சாதி வெறியர்களும் இல்லை; சாதியப் பார்வை உடையவர்களும் இல்லை.

- தொடரும்...

(நான் கீற்று தளத்தில் -- அன்று எழுதியது)

❀ ❀ ❀ ❀ ❀
சான்றுகள்:



நன்றி: 


ிழியம்: நியூசு 7 தமிழ்.

தொடர்புடைய பதிவுகள்:

இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் சில பதில்களும்

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

22 கருத்துகள்:

  1. NANRU INDRE CHONNATHU ADMK:DMK:BJP:OTHERS= 130:70:0:34 TIMES OF INDIA Dated 1/4/16

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! டைம்ஸ் ஆப் இந்தியா இப்படி ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறதா? ஆனால், எனக்கு இதில் உடன்பாடு இல்லை. அ.தி.மு.க அந்த அளவுக்குப் பெரிய வெற்றி பெற வாய்ப்பே இல்லை. மக்கள் ஒன்றும் அந்தளவுக்கு முட்டாள்களும் இல்லை. நான் விஜயகாந்த், அன்புமணி என மாற்றுத்தேர்வாளர்களை வரிசையாக விமரிசித்து வருவதால் நான் அ.தி.மு.க / தி.மு.க ஆதரவாளன் எனத் தாங்கள் நினைத்து விட்டீர்கள் போலும். அப்படி இல்லை ஐயா! இந்த இரு கட்சிகளுமே வேண்டா என்கிற நிலைப்பாடுடையவன்தான் நானும். எது எப்படி இருப்பினும் தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
    2. see dinamalar 2.4.16 times india anaysis tamilnadu admk; kerala marxist; bengal tmc; pondy cong-dmk
      vaiko favours vijaykant on telugu form . vaiko said vijaykant front on his own not concurring with front partners
      dmdk will come to dmk in 5 days. cong will part ways with dmk
      central minister is bold enough to call both dmk and admk as mafia money looters on wine, sand

      நீக்கு
    3. anbumani is having 2500 Cr medical equipments factory at maldives. it supply to india. stalin investing 10,000 cr in singapore, alagiri in indonesia. kani moli south india singapore husband
      read dinamalar for comment on dmk, admk, pmk, dmdk, viko

      நீக்கு
    4. ஐயா! உங்கள் மறுவருகைக்கும் கருத்தளிப்புக்கும் முதலில் நன்றி!

      ஆனால், வைகோ மீது நீங்கள் கூறும் சாதியப் பார்வையிலான குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது. உண்மையிலேயே அவர் விசயகாந்தைத் தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பவராக இருந்தால், அந்த அளவுக்கு சாதிய மனப்பான்மை உடையவராக இருந்தால் இத்தனை ஆண்டுக் கால அரசியல் வாழ்வில் அவர் ஏன் தன் சாதியைக் காட்டி ஒருமுறை கூட வாக்குக் கேட்கவில்லை? அப்படியெல்லாம் அவர் செய்யத் தொடங்கியிருந்தால் இன்று இராமதாசு போன்ற இரண்டாம் மட்டத் தலைவர்களைப் போல அவரும் என்றைக்கோ பல கோடிகளுக்கு உரியவராக இருந்திருப்பார். எனக்கு நினைவு தெரிந்த வரை, வைகோவுக்குப் பின் அரசியலுக்கு வந்த அத்தனை பேருமே சாதி அரசியலைக் கையிலெடுத்துத்தான் இன்று இந்தளவு தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாதவர்களாகி இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவையும் பார்த்துக் கொண்டும், இன்றும் தன் சாதியைச் சொல்லித் தன் சாதி மக்களிடம் அவர் ஒருமுறை கூட வாக்குக் கேட்டுப் போனதில்லை. இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்தும், மறுபடி மறுபடி மறுபடி மக்கள் தனக்குத் தோல்வியை மட்டுமே பரிசாகத் தந்தும் சாதி அரசியலைக் கையிலெடுக்காத ஒரே அரசியல் தலைவர் வைகோ. கொஞ்சம் மனச்சான்றோடு பேசுங்கள்!

      மற்றபடி, நீங்கள் அளித்த புள்ளிவிவரங்களுக்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. விரிவான அலசல். நுணுக்கமான தகவல்கள். மக்கள் விழிப்புடன் இருந்தால் நல்லது. இந்தத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணியும் இப்போது பயமுறுத்துகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மக்கள்நலக் கூட்டணியும் இப்போது பயமுறுத்துகிறது// - ஐயோ! அதை ஏன் கேட்கிறீர்கள்! தெளிவாகத் தொடங்கி சிறப்பாகக் குழப்பி விட்டார்கள்! தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  3. அய்யா வணக்கம்...

    தமிழின் முன்னணி ஊடகங்கள்கூட ( ஏதோ ஒரு காரணத்துக்காக !!! )
    அடக்கி வாசிப்பதை நுணுக்கமான விபரங்கள், ஆதாரங்களுடன் ஆணித்தரமாக பதிந்தமைக்கு என் மரியாதை.

    திரு. செல்வதுறை முத்துக்கனி அவர்களே குறிப்பிட்டத்தைப் போல சாதிக்கட்சி பிம்பத்தை மறைக்கவே செல்வமணி முன்னிறுத்தப்படுகிறார்... மாற்ற அல்ல.. மறைக்க ! ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மறைக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் செல்வாக்கு இன்று எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன் ! ( காரணம் நான் வெளிநாட்டில் வசிப்பவன் )

    தேர்தல் முடிவுகளுக்கு பின்னிருக்கும் நிலவரங்களை அப்புறம் பார்த்துக்கொள்ளலாமா ?!... எப்படி அய்யா பார்த்துக்கொள்வது ? " மாட்டிறைச்சி " சாதனைக்கு என்ன செய்தோம் ? போட்ட ஓட்டினை திரும்ப பெற முடியுமா ?

    கல்வி, அடிப்படை சுகாதரம் தொடங்கி உலக அறிவு அனைத்தும் கணினியில் கிடைக்கும் இன்றைக்கும் மனிதனை மனிதனே ஒதுக்கிவைக்கும் தீண்டாமை என எத்தனையோ சமூக அவலங்கள் இருக்க, காதலின் பெயரில் நடக்கும் திட்டமிட்ட ஏமாற்று வேலைகள்தான் முக்கியமா ?... அதுதான் முக்கியம் என்றால் அதனை சாதிக்க முதலமைச்சர் நாற்காலி தேவையில்லை... நியாயமான காவல்துறை அதிகாரிகளே போதும் !!!

    அய்யா...

    நம் கண் காண, கூப்பிடு தூரத்து தேசத்தில் ஒரே இனத்தவனுக்கு நிகழ்ந்தது அனைத்தையும் உணவு மேசையில் அமர்ந்துக்கொண்டு தொலைக்க்காட்சியில் பார்த்தபோதும் பாசிசத்தின் பயங்கரத்தை புரிந்துக்கொள்ள மறுக்கிறோம்... ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நடந்த இரண்டாம் உலகப்போரின் இன அழிப்பு அவமானங்களின் அடையாளங்களை இன்றும் பாதுகாக்கும் மேலை நாட்டவனுக்கு தெரியும் பாசிச பயங்கரம்.

    இங்கு ஏன் இன அழிப்பு வாதம் என கேட்டுவிடாதீர்கள் அய்யா ! ஒரு கோடி மக்களை கொண்ட பூமியில் வேறு ஜாதி, வேறு இனம் என்ற காரணம் ஏற்படுத்திய வெறுப்பின் விளைவால் ஒருத்தன் கொல்லப்பட்டாலும் அதுவும் இன அழிப்புதான் !

    வெறுப்பு அரசியல் இந்த தேசத்தை பாழ்படுத்தியதைப்போல வேறெந்த தேசத்தையும் பாழ் படுத்தியதாக தெரியவில்லை ! அப்படியிருந்தும் எரியும் கொள்ளியில் நல்ல கொள்ளியை எடுத்து தலை சொரியும் பழக்கத்தை நாம் விடுவதாக இல்லை !!!

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! உண்மையிலேயே உணர்வார்ந்த தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!

      //ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மறைக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் செல்வாக்கு இன்று எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன் ! ( காரணம் நான் வெளிநாட்டில் வசிப்பவன் )// - ஹாஹ்ஹா! நீங்கள் இப்படிச் சொன்னாலும் செய்திகள் மூலம் நாள்தோறும் சந்தி சிரிக்கும் மோடியின் ஆட்சியழகு நீங்கள் அறியாதது இல்லை என அறிவேன்.

      //மாட்டிறைச்சி " சாதனைக்கு என்ன செய்தோம் ? போட்ட ஓட்டினை திரும்ப பெற முடியுமா ?// - சரியான கேள்வி.

      //வேறு ஜாதி, வேறு இனம் என்ற காரணம் ஏற்படுத்திய வெறுப்பின் விளைவால் ஒருத்தன் கொல்லப்பட்டாலும் அதுவும் இன அழிப்புதான் !// - முற்றிலும் உண்மை! இந்த அழகில் இவர்கள் தமிழினப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்!

      உங்கள் விளக்கமான, கருத்தாழமும் உணர்வும் மிக்க கருத்துரைக்காகவும் மனமார்ந்த பாராட்டுக்காகவும் என் உளமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா!

      கட்டாயம் வலைப்பூவுக்கும் வருவேன்.

      நீக்கு
  4. தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மாற்று வேண்டும்தான்; அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. ஆனால், அந்த மாற்று யார், அன்புமணி இராமதாசா? கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக இராசபக்சவைக் கொண்டு வந்து நிறுத்தினால் வாக்களிக்க முடியுமா என்ன ?

    சரியான கேள்வி நண்பரே

    மக்களின் நாடித்துடிப்பை இன்றைய அரசியல்வாதிகள் அனைவருமே மிகவும் அழகாக கணித்து வைத்து இருக்கின்றார்கள் ஆகவேதான் இன்று தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிக்கொண்டு இருக்கின்றான்.
    இந்த தேர்தலிலாவது மக்கள் தெளிவு பெறுவார்களா என்பதில் எனக்கும் இன்னும் ஐயப்பாடு உண்டு நண்பரே

    அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியை அனுபவமே இல்லாத ஒரு சினிமா நடிகன் சுலபமாக வெல்ல முடிகின்றதே தமிழ் நாட்டில் இதன் பிரதிபலிப்புதான்

    நடிகர் செந்தில், கருணாஸ், சிங்கமுத்து, குஷ்பு, சி.ஆர். சரஸ்வதி இன்னும் யார் யார் வரப்போகின்றார்களோ....
    மானங் கெட்டதனமாக இருக்கின்றது இன்றைய தேர்தல் நிலைப்பாடு

    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கு முதலில் என் அன்பார்ந்த நன்றி நண்பரே!

      நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என நான் நினைக்கவில்லை. யார் வேண்டுமானாலும் மக்களுக்குச் சேவை செய்ய வரலாம். ஆனால், அதற்குண்டான தகுதியை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்! திரையுலகப் புகழையே தனக்கான தகுதியாக நினைத்துக் கொண்டுதான் நீங்கள் குறிப்பிடும் பலரும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். (சி.ஆர்.சரசுவதி தவிர).

      சொல்லப் போனால் இது வரையிலான தேர்தல் வரலாற்றில் இந்தத் தேர்தல் களம்தான் ஓரளவு நலமான போக்கில் இருக்கிறது. காரணம், பல கட்சிகள் இந்த முறை தனித்துப் போட்டியிடுகின்றன. அதே நேரம் இதுவரை பெரிய கட்சிகளுக்கு வலிமை சேர்த்துக் கொண்டு மட்டுமே இருந்த கட்சிகள் துணிச்சலோடு தனிக் கூட்டணி அமைத்துள்ளன. அந்த வகையில் இது வரவேற்கத்தக்கதுதான் இல்லையா?

      வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  5. Oru pen pillaya valarthu par.. Kathukku neeyum yethiri avaai. Pathinaru vayasu varaikkum yenka amma, yenga kulathaivamnu valartha ponna konja nal palagi ava manasa mathi alachittu poreenga. Kondu poi nalla valravana pathi yarum kurai sollala. Ana kondu poi yen avala koduma padutharinka.. Intha ponnu kousalya marble company la vela parthutrunku.. Appo avala pethavan kopa pattathula thappe illa. Muthala love panravanga than vaala nilayana varumanatha thedikittu ponna thedunka. Atha vittuttu sothukke vali illama adutha veetu ponnayum kedukkatheenga. Oru ponna pethu ava soothu kaluvi valarkkatha appan mattumthan ava odi pona summa iruppan..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் பிள்ளையைப் பெற்று வளர்த்துத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. பெண் பிள்ளையுடன் பிறந்தவனுக்கும் தெரியும் பெண்ணின் பெருமை. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். பெண்ணைப் பெண்ணாகப் பார்க்காமல் தெய்வமாக உங்களை எவன் பார்க்கச் சொன்னது? தெய்வம் என்பது கல். பெண் என்பவள் உயிர். அவளுக்கென விருப்பங்கள் உரிமைகள் உண்டு. அதுவே தெரியாமல் பெண்ணைத் தெய்வமாகவும் குலப் பெருமையாகவும் நினைத்து வளர்க்கும் உங்களைப் போன்ற உடைமைப்பாட்டு மனப்பான்மை கொண்ட ஆட்களால் வருகிற வேதனைகள்தான் இப்படிப்பட்ட சாதிய வன்முறைகள். அது என்ன சொன்னீர்? பெண்ணைக் கட்டிக் கொண்டு போய் ஒழுங்காக வாழ்கிறவர்களைப் பற்றி நீங்கள் யாரும் குறை சொல்லவில்லையா? அடடா! நடந்த இத்தனை கௌரவக் கொலைகளில் எத்தனை கொலைகள் அப்படிப்பட்டவை என உம்மால் கூற முடியுமா? கண்ணகி - முருகேசனாக இருக்கட்டும், திவ்யா - இளவரசனாக இருக்கட்டும், சங்கர் - கௌசல்யாவாக இருக்கட்டும் எல்லாருமே தங்கள் அளவில் ஒழுங்காக, நல்லபடியாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவர்கள்தாம். இல்லாத மயக்கு மொழிகளையெல்லாம் பேசி அவர்களைக் கூட்டி வந்தோ அல்லது திடீரென அவர்கள் இருக்குமிடம் அறிந்து சென்றோதான் கொன்று போடுகிறீர்கள். என்ன அது?... கௌசல்யா மார்பிள் தொழிற்சாலையில் வேலை பார்க்க வைக்கப்பட்டாரா? அந்தக் கொடுமையிலிருந்து அவரை மீட்க இப்படி ஓர் அருமையான வழியைக் கையாண்டிருக்கிறார் அவர் தகப்பனார், அப்படித்தானே? ஆகா! என்னே அன்பு! பெற்ற மகள் வேலை செய்து உழைத்துச் சாப்பிடுகிற கொடுமையிலிருந்து மீட்பதற்காக அவள் தாலியை அறுத்தாவது, அவள் வாழ்க்கையையே சிதைத்தாவது அவளை மீட்பது என்றால் எப்பேர்ப்பட்ட நல்ல உள்ளம் அது! அதற்கு நீர் ஆதரவு! உங்களைப் போன்றவர்கள்தாம் நாட்டுக்குத் தேவை. உங்களைப் போல் நான்கு பேர் இருந்தால் போதும், தமிழினம் உருப்பட்டு விடும்!

      நீக்கு
  6. பாமக வை மட்டும் சாதி கட்சி என்பது ஒரு தவறான கருத்தாகும். அதிமுக வே 45 சதவீதம் வன்னியர் களை வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது.மேலும் தமிழன் ஒவ்வொருவரும் தன் சாதியை உயர்ந்ததாகவும் குலதெய்வமாகவும் கருதுகின்றனர் அப்படியென்றால் தமிழன் எல்லோரும் சாதி வெறியர்களே.

    பதிலளிநீக்கு
  7. பாமக வை மட்டும் சாதி கட்சி என்பது ஒரு தவறான கருத்தாகும். அதிமுக வே 45 சதவீதம் வன்னியர் களை வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது.மேலும் தமிழன் ஒவ்வொருவரும் தன் சாதியை உயர்ந்ததாகவும் குலதெய்வமாகவும் கருதுகின்றனர் அப்படியென்றால் தமிழன் எல்லோரும் சாதி வெறியர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா.ம.க-வை மட்டும் சாதிக் கட்சி என இங்கு யாரும் சொல்லவில்லை. சாதிய வாக்கு வங்கியை நம்பி நடத்தப்படும் எல்லாக் கட்சிகளும் சாதியக் கட்சிகளே! அது தி.மு.க-வாக இருந்தாலும், அ.தி.மு.க-வாக இருந்தாலும் வி.சி.க-வாக இருந்தாலும் எல்லாம் சாதியக் கட்சிகளே! ஆனால், தமிழர் ஒவ்வொருவரும் தன் சாதியை உயர்ந்ததாகவும் குலதெய்வமாகவும் கருதுகின்றனர் என்பது மிக மிகத் தவறான பேச்சு! சென்னை போன்ற பெருநகரங்களில் எத்தனை பேர் சாதி பார்க்கிறார்கள்? எத்தனை பேர் சாதி பார்த்துப் பழகுகிறார்கள்? உங்கள் வட்டத்தில் இருப்பவர்களை மட்டுமே பார்த்து எல்லாத் தமிழர்களும் அப்படித்தான் என்று புழுதி வாரித் தூற்றாதீர்கள்!

      நீக்கு
  8. தேர்தல் ஒரு ஏமாற்று... நிலவும் இந்த சிஸ்டத்துக்குள் அப்படி எதுவும் மாற்றம் வந்துவிடாது என்பது எனது கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டில் ஊழல் நடக்காத இடமே இல்லை என ஆகி விட்ட இந்நாளிலும், தேர்தல்கள் இன்றும் பெருவாரியான மக்களின் நம்பகத்துக்குரிய வகையில்தானே நடத்தப்படுகின்றன? அதுவே பெரிய வியப்பு இல்லையா நண்பரே? அது போக, எது எப்படி இருந்தாலும் இருக்கிற கட்டமைப்புக்குள் இருந்துதானே நாம் மாற்றங்களுக்கான வாய்ப்புகளைத் தேடியாக முடியும்? தங்கள் வருகைக்கும் கருத்தும் நன்றி!

      நீக்கு
  9. இந்த சாதிய வெறி பெரும்பான்மையினருக்கும் இருக்கிறது அது நம் ரத்தத்தில் கலந்து விட்டது சாதிய எண்ணங்கள் இல்லாமல் இனிவரும் தலை முறைகளாவது இருக்க கல்வி நிலையே காரணம் என்று கூறி மாறுதல் கொண்டுவர பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாகப் படித்துப் பார்க்கிறேன் ஐயா! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  10. நல்ல விவரமான அரசியல்கட்டுரை. சிலபேருக்கு உண்மை சுடத்தான் செய்யும். நேற்று இரண்டாம் முறையாக கட்டுரையோடு அனைத்து பின்னூட்டங்களையும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! மிகவும் ஆறுதலான கருத்து. உங்கள் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து படியுங்கள்! தங்கள் மேலான கருத்துக்களைப் படியுங்கள்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்