.

திங்கள், ஜூலை 15, 2013

தமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்! – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்!

Director.Pugazhendhi Thangaraj


காற்றுக்கென்ன வேலி’, ‘உச்சிதனை முகர்ந்தால்என்று ஈழப் பிரச்சினையைப் பற்றி, குறிப்பாக விடுதலைப்புலிகளைப் பற்றித் தமிழில் உண்மையான திரைப்படங்களை வழங்கிய துணிச்சல் மிக்க இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்! தனித் தமிழீழத் திருநாடு கேட்டுத் தமிழ்நாடு முழுக்க மாணவர்கள் போராடிக் கொண்டிருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேளையில் அவரிடம் நான் பணியாற்றும் நிலாச்சாரல்மின் இதழுக்காகக் கைப்பேசி வழியே நேர்காணல் ஒன்று மேற்கொண்டேன். அப்பொழுதைய சூழ்நிலையில் இதழால் அதை முழுமையாக வெளியிட முடியவில்லை. எனவே, இதோ என் வலைப்பூவில் அதன் முழுமையான வடிவம்... 

ஈழப் பிரச்சினையை வைத்துத் தமிழில் தீவிரமான திரைப்படங்களை வழங்கியவர் தாங்கள்தான். இப்பொழுது தமிழீழத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் தமிழ்நாட்டு மாணவர் போராட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

இப்பொழுது ஏற்பட்டிருக்கிற மாணவர் போராட்டங்களை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்துக்குப் பரவலாக நம்பப்படுகிற மாதிரி, தம்பி பாலச்சந்திரனின் முகம், அந்தச் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை - அது ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. தமிழ் மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தமிழ் மாணவர்கள் இந்த (பாதிக்கப்பட்ட) குழந்தைகளின் முகத்தைப் பார்த்து இவ்வளவு எழுச்சியை, எதிர்ப்பை வெளியிட்டிருப்பது சரியான நேரத்தில் காலம் கருதிச் செய்யும் செயல் என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப் போராளிகள் இந்த இனப்படுகொலையில் இறந்ததாக ஒரு கணக்கு இருக்கிறது. அந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப்புலிகளுடைய, போராளிகளுடைய உயிர்த் தியாகத்தால் கூட எழுப்ப முடியாத ஒரு மிகப்பெரிய எழுச்சியை இந்தப் பன்னிரண்டு வயதுக் குழந்தையுடைய உருவம், அந்தக் குழந்தையுடைய பார்வை எழுப்பியிருக்கிறது. (குரல் கம்முகிறது).

தம்பி பாலச்சந்திரன் இறந்து விட்டான் என்பது போன ஆண்டே தெரியும். இருந்தால்கூட, அப்பொழுது அந்தக் குழந்தையுடைய விழிகளை நாம் பார்க்கவில்லை. இப்பொழுது நாம் பார்க்கும் அந்தப் பார்வையில் இருக்கும் ஒளியும், நம்பிக்கையும் இரண்டு நிச்சயங்களை நமக்கு உணர்த்தியிருக்கின்றன. ஒன்று, 19ஆம் தேதி கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் முகத்தில் 17ஆம் தேதி தன் தந்தை கொல்லப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது பெரிதும் குறிப்பிடத்தக்கது. அது நமக்கு ஒரு வரலாற்று உண்மையை, சிங்கள அரசாங்கம் திட்டமிட்டுச் செய்து வருகிற ஒரு பிரச்சாரம் எவ்வளவு பொய் என்பதை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அடுத்ததாக, அந்த விழிகளில் காணப்படக்கூடிய ஒளி நம் மாணவர்களை உசுப்பி எழுப்பியிருக்கிறதென நம்புகிறேன். 

நன்றி ஐயா! புகைப்படத்தில் பாலச்சந்திரனின் கண்களில் இருக்கும் ஒளியை வைத்து, தமிழினத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் இன்னும் இருக்கிறார் என்பதை நாம் அறியக்கூடும் என்ற மிக முக்கியமான ஒரு தகவலை நீங்கள் இந்தப் பதில் மூலம் தமிழ் மக்களுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை யாரும் இந்தக் கோணத்தைச் சொல்லவில்லை. அடுத்ததாக ஐயா, இது தாமதமான போராட்டம் எனத் தனிமனிதர்கள் முதல் ஊடகத்தினர் வரை பலரும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து...? 

இல்லை Better late than never! சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். 2007 வரை, உலகம் முழுக்க இருக்கிற தமிழ் இளைஞர்களில், குறிப்பாகத் தமிழ் மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பற்றித் தவறான புரிதலுடன் இருந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகளே கூடத் தங்கள் தேசிய இனத் தலைவனுடைய உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை நம்பி இருந்தார்கள். இது மறுக்க முடியாத உண்மை! தங்களுடைய தேசியத் தலைவனைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டதே 2008-09க்குப் பிறகுதான்; அதுவும், குறிப்பாக முத்துக்குமாருடைய மரணத்துக்குப் பிறகுதான் அந்த மாணவர்கள் சிலிர்த்து எழுந்து நின்று எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன்என்று பிரகடனப்படுத்தினார்கள். இது 2009 பிப்ரவரியில் நடந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், அதற்கு முன்பு அவர்கள் பிரபாகரனைப் பற்றி ஊடகங்கள் பரப்பியிருந்த பொய்ப் பிரச்சாரத்தைத்தான் நம்பியிருந்தார்கள். குறிப்பாக, ஆங்கில ஊடகங்களை. ஆங்கில ஊடகங்கள் மூலமாகத்தான் அவர்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. அவர்கள் பிரபாகரனைத் தீவிரவாதி என்றுதான் ஆங்கில ஊடகங்கள் மூலமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். 2008க்குப் பிறகுதான், தங்கள் மண்ணில் மிஞ்சியிருக்கிற தங்கள் உறவுகளுக்குப் பாதுகாப்பாகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த போராளிகளுடைய தலைவன்தான் பிரபாகரன் என்பது, 2009க்குப் பிறகுதான் அந்தக் குழந்தைகளுக்கே தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் தங்கள் தலைவரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டிருந்த அந்த மாணவர்கள் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன்என்று சொல்லி, பிரபாகரனின் எழுத்துக்களைத் தங்கள் உணர்வில் தாங்கி, புலிகளுடைய கொடிகளுடன் வலம் வரத் தொடங்கினார்கள். இது 2009இலேதான் நடந்தது. ஆக, புலம் பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களுடைய குழந்தைகளே அப்படி இருக்கையில், இங்கே இருக்கிற தமிழ் மாணவர்களுக்கு அந்த எழுச்சி ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து ஏற்பட்டிருப்பது என்பது தாமதமானது என நினைக்க முடியாது! இப்பொழுது ஏற்பட்டிருக்கிற இந்த மாணவர் எழுச்சி உலகெங்கும் தமிழ் உணர்வை நிமிர்த்தி நம்பிக்கையோடு உட்கார வைத்திருக்கிறது. இன்றைக்குத்தான் முதன்முறையாகத் தமிழ்நாட்டின் வீதிகள் எங்கும் புலிகளுடைய கொடியும், பிரபாகரன் என்கிற பெயரும், “தமிழினத்தின் அடையாளம் பிரபாகரன்! தமிழீழத்தின் அடையாளம் விடுதலைப்புலிகள்என்கிற முழக்கமும் இப்பொழுதுதான் கேட்கத் தொடங்கியிருக்கிறது. எனவே, இது தாமதமானது என நான் நினைக்கவே இல்லை. சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். 

சரி ஐயா! அடுத்து, மாணவர்களில் பலர், தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பையும், இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையையும் கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் எனப் போராடுகிறார்களே, இது சரியா? 

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! மாணவர்கள் போராடத் தொடங்கியது அமெரிக்கத் தீர்மானம் மோசடி என்று சொல்லித்தான். ஊடகங்கள் கண்முன்பாகத்தான் மாணவர்கள் அந்தத் தீர்மானத்தை எரித்தார்கள். எரித்துவிட்டு மாணவர்கள் சொன்னார்கள் அமெரிக்கத் தீர்மானம் மோசடி, இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று. ஆனால், நம் ஊடகங்கள் கடைசி நிமிடம் வரை அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி மாணவர்கள் உண்ணாவிரதம் என்று செய்தி போட்டார்களே, ஏன்? இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா? அவர்கள் படப்பிடிப்புக் கருவிக்கு முன்பாகத்தானே மாணவன் அமெரிக்கத் தீர்மானத்தை எரிக்கிறான்? ஆக, மாணவர்கள் வெளிப்படையாக அறிவித்த பின்பும் ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்க முயன்றார்கள். மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை, இந்திய நாடாளுமன்றத்திலே பதிவு செய்யப்பட்ட கோரிக்கை! அமெரிக்கத் தீர்மானம் மோசடி என்று ஆன பிறகு, இந்தியாவே ஒரு தீர்மானத்தைத் தனியாகக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்திலே சொல்லப்பட்டதும், பின்னர் மாணவர்கள் அதை வலியுறுத்தியதும் இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துவதற்காக, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வராது என்பது மாணவத் தம்பிகளுக்கு நிச்சயமாகத் தெரியும்! இருந்தாலும், இந்தத் துரோக இந்தியாவை மேலும் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அது எப்படிப்பட்ட தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதிலும் மாணவர்கள் தெளிவாக இருந்தார்கள். போர்க்குற்றம் என்பதோடில்லை, நடந்தது இனப்படுகொலை; நடந்த இனப்படுகொலையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்; அந்த இனப்படுகொலையைப் பற்றிச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று இந்தியா தனியாகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதெல்லாம் இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துகிற மாணவர்களின் நடவடிக்கை. அந்த நடவடிக்கையால்தான் இன்று இந்தியா முழுமையாக அம்மணமாகி நிற்கிறது தமிழ்ச் சமூகத்துக்கு எதிரே! 

மிகச் சரியான வார்த்தை ஐயா! ஆனால், ஈழத் தமிழர்களுக்காக இந்தியா இதுவரை ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மாறாக, அவர்களை அழிக்கத்தான் உதவியிருக்கிறது. இப்பொழுதும், அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தின் பல அம்சங்களை இந்தியா தலையிட்டு இலங்கைக்கு ஆதரவாகத் திருத்தி விட்டது. தீர்மானத்தில் தொடக்கத்தில் இருந்த அளவுக்கு வீரியம் கூட வாக்கெடுப்பின்பொழுது இல்லை. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கைப்படி, ஒருவேளை, இந்தியா தானே ஈழத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அது எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? 

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா? இந்தியா என்பது வெட்கங்கெட்ட, மானங்கெட்ட ஒரு நாடு என்பது உறுதியாகிவிட்டது. நான்

வெள்ளி, ஜூன் 21, 2013

மணிவண்ணனும் பாப்லோ நெருடாவும்




மணிவண்ணன்! தமிழ்த் திரையுலகின் ‘நையாண்டி நாயகர்! படைப்பு, நடிப்பு, அரசியல் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்! உண்மையான கலைஞர்! உண்மையான மனிதர்!

தீவிரமான கருத்துக்களைக் கூட நகைச்சுவை கலந்து எடுத்துச் சொல்லும் அங்கதச் சுவையை மணிவண்ணனுக்கு முன்பே தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தி விட்டார் சோ அவர்கள். ஆனால், அவருடைய அந்த அற்புதமான ‘முகமது பின் துக்ளக் திரைப்படம் முழுத் தோல்வியைத்தான் அடைந்தது. அதனாலேயே அதன் பிறகு, அப்படிப்பட்ட படங்களை எடுக்க சோ மட்டுமின்றி, யாருமே முன்வரவில்லை. ஆனால், அதே பாணியைத் தான் கையிலெடுத்துப் பெரும் வெற்றியைச் சாதித்துக் காட்டிய மணிவண்ணன் அவர்கள் தமிழ்த் திரையுலகுக்கு அங்கதச்சுவைக்கான புது வாசலைத் திறந்துவிட்டவர் என்றால் அது மிகையாகாது. ‘அமைதிப்படை அதன் உச்சம்!

அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என்று இவர் கதை, உரையாடல் எழுதிய திரைப்படங்களோ என்றுமே நம் நினைவை விட்டு நீங்காத காவியப் படைப்புகள்!

இப்படி, படைப்பாளியாகச் சாதித்தவை போதாதென்று நடிகராகவும் இவர் பதித்த முத்திரைகள் ஏராளம்! அப்பாவாக நடித்தால் அப்பா, அண்ணனாக நடித்தால் அண்ணன், வில்லனாக நடித்தால் கிலியூட்டும் வில்லன் என்று தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் அந்தந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தார் மணிவண்ணன்! இத்தனைக்கும், பெரும்பாலான படங்களில் இவர் கதாப்பாத்திரத்துக்குப் பெயரே இருக்காது. ஆனாலும், பெயரில்லாத அந்தக் கதாப்பாத்திரங்கள் நம்முள் ஏற்படுத்திய தாக்கம் மறக்க இயலாதது! அதற்குக் காரணம், அவருடைய வெகு இயல்பான உடல்மொழி. அப்பாவாக வந்தால், நம்முடைய அப்பா நம்மிடம் எப்படிப் பேசுவாரோ அதே உடல்மொழியில் பேசினார்; அண்ணன், குடும்ப எதிரி என அனைத்திலும் அப்படியே! நினைத்துப் பாருங்கள், ‘காதலுக்கு மரியாதை படத்தில் வரும் நண்பனின் அப்பாவையோ, ‘முகவரி படக் கடைக்கார அண்ணனையோ என்றைக்காவது நம்மால் மறக்க முடியுமா?

பெரிய கதாநாயகர்களின் படங்களில் கூட, அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என நம்மால் ஓரளவுக்குக் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால், மணிவண்ணன் அவர்களின் கதாபாத்திரங்களில் அவருக்குப் பதிலாக மற்றொருவரை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! அதுதான் மணிவண்ணனின் சிறப்பு! எனக்குத் தெரிந்து, பழம்பெரும் நடிகர் பாலையா அவர்களுக்குப் பிறகு, மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த குணச்சித்திர நடிகர் மணிவண்ணனாகத்தான் இருப்பார்!

“அட இதெல்லாம் எங்களுக்குத் தெரியாததா என்ன? தலைப்பில் ஏதோ பாப்லோ நெருடாவையெல்லாம் வம்புக்கிழுத்திருக்கிறாயே, அது என்ன சங்கதி? என்கிறீர்களா? பொறுங்கள் பொறுங்கள்! அடுத்து அதைத்தான் சொல்ல வருகிறேன்.

மணிவண்ணனை விடத் திறமையான படைப்பாளிகள், சிறப்பான கலைஞர்கள் தமிழ்த் திரையுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால், அவரைப் போல உண்மையான கலைஞர்கள் இருக்கிறார்களா என்றால்... என் கண்களுக்குத் தென்பட்ட வரை அப்படி யாரும் இல்லை. (அண்ணன் சீமான், கவிஞர் தாமரை போன்றோர் விதிவிலக்குகள்).

ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், ஒரு கலைஞருக்குண்டான முதல் தகுதி ‘சமூகப் பொறுப்பு! அது வேறு யாருக்கு இருக்கிறதோ இல்லையோ கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டும்! காரணம், அவர்கள்தாம் சமூகத்துக்குக் கருத்து சொல்லும் இடத்தில் இருப்பவர்கள். உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகளான பாப்லோ நெருடா, பெர்னாட்ஷா முதலான பலரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி இது. இவர்கள் வெறும் படைப்பாளிகளாக மட்டும் தங்கள் வாழ்வைக் கழிக்காமல், தம் சிந்தனைகளையும் புரட்சிக் கருத்துக்களையும் தங்கள் படைப்புகளில் மட்டும் வெளிப்படுத்துபவர்களாக இல்லாமல் வெளியேயும் பேசினார்கள். தங்கள் சமூகமும், மக்களும் பாதிக்கப்பட்டபொழுது அதைக் கண்டித்து வெளிப்படையாகக் குரல் கொடுத்தார்கள். தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திச் சரியான தலைவரை மக்களுக்கு அடையாளம் காட்டினார்கள்.

உண்மையான கலைஞருக்குண்டான இந்தப் பண்புகளை, அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது கொண்டிருந்த ஒரே தமிழ்க் கலைஞர் மணிவண்ணன் அவர்கள்! அண்மையில், தமிழீழம் கோரித் தமிழ்நாடு முழுவதும் இளைஞர் படை கொந்தளித்து எழுந்தபொழுது, காலம் காலமாகத் தமிழ், தமிழ் எனப் பேசிக்கொண்டிருக்கும் கமலோ, உலகத் தரம் மிகுந்த சமூக அக்கறைப் படங்களைத் தொடர்ந்து வழங்கும் ஷங்கரோ, சமூக நலன் சார்ந்த படங்களை எடுப்பதில் முன்னோடியான பாலசந்தரோ, இந்த மண்ணின் இயக்குநர் எனப் புகழப்படும் பாரதிராஜாவோ... யாருமே வாய் திறக்காத அந்தச் சூழ்நிலையில் முதல் ஆளாக முன்வந்து அந்த மாணவப் புலிகளை ஆதரித்தார் மணிவண்ணன்.

தொலைக்காட்சிகள், இன்ன பிற பொதுமேடைகள் என்று அனைத்திலும் மாணவர்களின் இந்தப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்துப் பேசினார்! அவர்களின் போராட்டமுறைகளில் இருந்த சிறு சிறு குறைகளை எடுத்துச் சொல்லி, முன்னோடி என்ற முறையில் அவர்களுக்கு வழிகாட்டினார்! மேலே நாம் பார்த்த மேல்நாட்டுப் படைப்பாளிகளைப் போல் சமூகப் பொறுப்புள்ள உண்மையான கலைஞராகத் தன் கடமையை நிறைவேற்றினார்!

இப்பொழுதுதான் என்றில்லை, எப்பொழுதுமே மணிவண்ணன் இப்படித்தான். இன்றைக்குப் போலில்லாமல், தமிழ்ப் பற்றாளர்கள் என்றாலே கருணாநிதி ஆதரவாளர்கள்தான் என்ற நிலைமை உலகத் தமிழ்ச் சமூகமெங்கும் நிலவிய தொண்ணூறுகளிலேயே கருணாநிதிக்கு மாற்றாக வை.கோ-வை அடையாளம் காட்டியவர் மணிவண்ணன்! அதன் பிறகு, இன்றைய சூழலுக்கான சரியான அரசியல் தேர்வாகச் சீமானை இனங்காட்டவும் அவர் தவறவில்லை!

இப்படி, சிறப்பான படைப்பாளியாக, அருமையான நடிகராக, உண்மையான கலைஞராகத் திகழ்ந்த மணிவண்ணன் இடையில் உடல்நலம் குன்றியிருந்த சிலகாலம் தவிர, கடைசி வரை திரையுலகிலும், அரசியலிலும் இயங்கிக் கொண்டிருந்தார். இளைஞர்களுக்கான அரசியல் வழிகாட்டியாக இன்னும் அவருடைய தேவை தீர்ந்தபாடில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் மறைந்திருப்பது தமிழ்ச் சமூகத்துக்கு உண்மையிலேயே பெரிய இழப்பு!

அவரைப்போலவே உணர்வுள்ள தமிழராக, உண்மையான கலைஞராக, சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியாக வாழ்வதும், ஈழப் பிரச்சினை முதலான தமிழர் பிரச்சினைகளில் அவர் காட்டிய வழியைக் கடைப்பிடிப்பதும்தான் அந்தச் சிறந்த மனிதருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!

ஞாயிறு, ஜூன் 16, 2013

பண்பு முன்னேற்றம்! - மனித இனம் விரும்பாத ஒரே முன்னேற்றம்!


Character Development

முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் உலகில் யாருமே கிடையாது. நாம் எல்லோருமே முன்னேற்றத்தை விரும்புகிறோம். ஆனால், அதை எல்லாவற்றிலும் விரும்புகிறோமா?...

இல்லை! ஒன்றே ஒன்றில் மட்டும் நாம் ஒருபோதும் முன்னேற்றத்தை விரும்புவதில்லை. அதுதான் ‘பண்பு நலன்!

எதையுமே போதும் என நினைக்காத மனித உள்ளம், தன்னிடம் இருக்கும் நல்ல பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் மட்டும் ஒருபோதும் அப்படி நினைப்பதே கிடையாது. இருப்பதே போதும், இந்த அளவுக்கு நல்லவனாக வாழ்வதே பெரிது எனத்தான் எப்பொழுதும் நினைக்கிறான் மனிதன்.

ஒப்பிடும்பொழுது கூட, “ஊர்ல அவனவன் எப்படியெப்படியோ இருக்கான். நாம எவ்வளவோ தேவலாம் என்பதுதான் எப்பொழுதுமே நம்மைப் பற்றிய நமது நினைப்பு. ஏன், நம்மை விட நல்லவர்கள் யாருமே இல்லையா? அவர்களோடு ஏன் நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது? அப்படி ஒப்பிட்டால் நாம் கெட்டவனாகி விடுவோமே! நமக்கு எப்பொழுதும், நம்மை நல்லவனாகக் காட்டிக் கொள்ளத்தான் விருப்பமே தவிர, நல்லவனாக ஆவதில் விருப்பம் இல்லை.

நேர்மை, அடக்கம், உதவும் தன்மை, விட்டுக் கொடுத்தல், சமூகச் சேவை என எத்தனையோ நற்பண்புகள் இருக்கின்றன, வாழ்வில் கடைப்பிடிக்க. ஆனால் நாமோ, நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதை விடக் கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே போதும், நாம் நல்லவர்தான் என நினைத்துக் கொள்கிறோம். போதும் எனும் மனப்பான்மை நமக்கு இது ஒன்றில்தான் வாய்த்திருக்கிறது!

இந்த ஒன்றைத் தவிர, வாழ்வில் வேறு எதையாவது நாம் இப்படி ஒரு கண்ணோட்டத்தில் அணுகுகிறோமா என்றால், இல்லை!

இன்று ஆறு மாடி வீடு கட்டி ஆடி காரில் போனாலும், பத்து மாடி வீடும் பென்சு காருமாக வாழ்பவரோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம். இன்றைக்கு ஒரு மாநிலத்துக்கே முதல்வராக இருந்தாலும், நாளைக்குப் பிரதமர் நாற்காலியை அடைவது எப்படி என்றுதான் சிந்திக்கிறோம். அதுவும் வந்து விட்டால், அடுத்து ஒபாமா போல உலகளவிலான பெரும்புள்ளியாவது எப்பொழுது என்றுதான் ஏங்குகிறோம்.

இப்படிப் படிப்பு, பணம், பதவி, பட்டம், பெயர், புகழ் என எல்லாவற்றிலும், எப்பொழுதும் நம்மை விட மேலே இருப்பவர்களோடு மட்டுமே நம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் நாம் (Superior Comparison), இருப்பது போதாது இன்னும் இன்னும் வேண்டும் என விரும்பும் நாம், ‘பண்பு நலன் (Character) என வரும்பொழுது மட்டும், எப்பொழுதும் நம்மை விடக் கீழே இருப்பவர்களோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம் (Inferior Comparison); இருப்பதே போதும் எனத்தான் நினைக்கிறோம்.

அதனால்தான், கற்காலம் முதல் தற்காலம் வரையான இந்த நீண்ட நெடிய வரலாற்றில், மக்களின் சிந்தனைத் திறன், செயல் திறன், வாழ்க்கை முறை, வசதி வாய்ப்புக்கள் என எல்லாமே வளர்ந்திருந்தும் பண்பு நலனில் மட்டும் பெரிய முன்னேற்றம் இல்லை.Computer Era Barbarians 

அடுத்தவரைத் துன்புறுத்துவது, தனக்குப் பிடித்தது அடுத்தவர் பொருளாக இருந்தாலும் அடையத் துடிப்பது, விருப்பமில்லாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைய முயல்வது, பிறர் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வது என விலங்குத்தனமான (விலங்குகள் மன்னிக்க!) எல்லாப் பண்புகளும் இன்றும் மனிதனிடம் அப்படியே இருக்கத்தான் செய்கின்றன. காரணம், எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை விரும்பும் நமக்கு இதில் மட்டும் முன்னேற விருப்பமே இல்லாதிருப்பதுதான்!

இந்த உளப்போக்குதான் நம் சமூக அவலங்கள் அனைத்துக்குமே காரணம் எனச் சொன்னால் அது மிகையாகாது.

சனி, ஜூன் 08, 2013

சிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும்



Poontalir - Tamil Children Magazine
ஒரு மொழி தொடர்ந்து வாழ வேண்டுமானால் அது தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்ந்துகொண்டே வேண்டும். ஆனால் நாம், அடுத்த தலைமுறையினரான குழந்தைகளுக்கு நம் தமிழ் மொழியைக் கொண்டு சேர்ப்பதில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறோம் எனப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது! அதில் நாம் முழுத் தோல்வி அடைந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்! 

ஒரு மொழியின் அடிப்படை வடிவமே அதன் எழுத்து வடிவம்தான். மொழியை அப்படிப்பட்ட எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்துக்கு அடுத்தபடியாக முதன்மைப் பங்கு வகிப்பது 'சிறுவர் இலக்கியம்'! அப்பேர்ப்பட்ட சிறுவர் இலக்கியத்துறை இன்று தமிழில் மிகப்பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஏறத்தாழப் பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுவர் இதழ்கள் தமிழ்நாட்டில் விற்றுக் கொண்டிருந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழில் சிறுவர் இதழ் நடத்துவது என்பது நல்ல இலாபமீட்டக்கூடிய ஒரு தொழிலாக இருந்தது. ஆனால் இன்று, பெரிய நிறுவனங்களால் நடத்தப்படுகிற ஓரிரு சிறுவர் இதழ்களைத் தவிர மற்ற அனைத்தும் முற்றிலும் அழிந்து விட்டன. இருக்கிற அந்த ஓரிரு இதழ்கள் கூடச் சேவை மனப்பான்மையில், வீழ்ச்சியில்தான் இயங்குகின்றன. சிறுவர்களுக்கான இதழ்த்துறையே இப்படி என்றால் பதிப்புத்துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்ப் பதிப்பகங்கள் குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டு வந்தன. ஆனால், இன்று அப்படி ஒரு முயற்சியே இல்லை. தொண்ணூறுகளின் இறுதியில் வெளியிட்ட சிறார் நூல்களே இன்னும் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன. 

அடுத்த தலைமுறைக்கு மொழியையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமான சிறுவர் இலக்கியத்தின் இந்த மாபெரும் வீழ்ச்சி தமிழ் மொழிக்கே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து! 

எப்படியெனில், தமிழின் முன்னணி இதழ்கள் இன்றும் பல்லாயிரக்கணக்கில் விற்கின்றன என்றால், ஆண்டுதோறும் நூல் கண்காட்சியில் இலட்சக்கணக்கான தமிழ் நூல்கள் விற்பனையாகின்றன என்றால் அதற்குக் காரணமே இன்றும் மக்களிடையே காணப்படும் படிக்கும் பழக்கம்தான். இந்தப் படிக்கும் பழக்கம் என்பது சிறு வயதிலேயே ஏற்பட்டால்தான் உண்டு. ஏனெனில், பொழுதுபோக்குகளிலேயே மிகவும் கடினமான பொழுதுபோக்கு படித்தல்தான். மற்ற எல்லாப் பொழுதுபோக்குகளையும் விடக் கவர்ச்சி குறைவான, ஆனால் பொறுமை கூடுதலாகத் தேவைப்படுகிற பொழுதுபோக்கு இது. அப்படிப்பட்ட பொறுமையையும், எழுத்தின் மீதான ஈர்ப்பையும், இலக்கிய ரசனையையும் சிறு வயதிலேயே மக்கள் உள்ளங்களில் ஊட்டும் அரும் தொண்டைத்தான் சிறுவர் இலக்கிய உலகம் வெற்றிகரமாகச் செய்து வந்தது. இளைஞர் முதல் முதியவர் வரை, இன்றைய மக்கள் அனைவரும் சிறுவர்களாயிருந்தபொழுதே இப்படிச் சிறுவர் இதழ்கள் அவர்களிடம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதால்தான் அவர்கள் பெரியவர்களான பின் இன்றும் படிக்கும் பழக்கம் அவர்களிடம் இருக்கிறது. சுருங்கச் சொன்னால், தமிழ்ச் சமூகத்தில் இன்றும் படிக்கும் பழக்கம் அழியாமலிருக்கக் காரணமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறைதான். ஆனால், இன்றைக்கு அந்தத் துறையே இவ்வளவு பெரிய வீழ்ச்சியை அடைந்திருக்கும் சூழலில், இன்றைய தமிழ்ச் சிறுவர்களிடம் படிக்கும் பழக்கம் இந்த அளவுக்கு அருகியிருக்கும் நிலையில், இன்றைக்குச் சிறுவர்களாக இருக்கும் இவர்கள்தாம் நாளைய தமிழ்ச் சமுதாயம் என்பதால், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் படிக்கும் பழக்கமும் இதே அளவுக்குக் குறைந்து போகும் என்பது தெளிவு. இன்றைக்கு இலட்சக்கணக்கில் விற்கும் முன்னணி இதழ்களெல்லாம் அப்பொழுது இன்றைக்குச் சிறுவர் இதழ்கள் அடைந்திருக்கும் அளவுக்குக் கடும் வீழ்ச்சியை அடையக் கூடும்! தமிழ் இதழ்த்துறையே இப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை அடைந்தால் அதை விட வீச்சுக் குறைந்த தமிழ்ப் பதிப்பகத்துறை என்னாகும் எனச் சொல்ல வேண்டியதில்லை!

மொழியின் அடிப்படை வடிவமான எழுத்து வடிவத்தையும் அதன் பேரிலான ரசனையையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரே ஊடகமான அச்சு ஊடகம் இப்படி அழிவது அந்த மொழியே அழிவதற்கு நிகராகும். அதுவும் தமிழைப் பொறுத்தவரை, தமிழின் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயன்படுவதே ஒரே ஒரு வகையில்தான்; அதாவது படிப்பதற்கு! தமிழ் இதழ்களையும், நூல்களையும், இணையத்தளங்களையும் படிப்பதற்கு மட்டும்தான் தமிழின் எழுத்து வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயனாகிறது. எழுத்தாளர்கள், ஊடகத்தார்கள், எழுத்தார்வமுடைய சில தனியாட்கள் ஆகிய சிலரைத் தவிர, மற்றபடிப் பொதுமக்கள் யாரும் தமிழின் எழுத்து வடிவத்தை இன்று எழுதுவதற்குப் பயன்படுத்துவதில்லை. அதற்கான தேவையும் நம் சமூகத்தில் இல்லை. 

இந்நிலையில் இதழ்த்துறை, பதிப்பகத்துறை எனத் தமிழ் அச்சு ஊடகத்துறை இப்படி ஒட்டுமொத்தமாக அழிந்து போனால், தமிழின் எழுத்து வடிவத்துக்குப் பொதுமக்களிடையே இருக்கும் ஒரேயொரு பயன்பாடான படிக்கும் பயன்பாடும் இல்லாமல் போய்விட்டதாகப் பொருளாகும். இப்படித் தமிழின் எழுத்து வடிவம் பயன்பாடற்றுப் போனால், அஃது எழுத்துத் தமிழே அழிந்து போனதற்கு இணையாகும். எழுத்துத் தமிழ் ஊடகமும், எழுத்துத் தமிழுமே இப்படி அழிந்து போனால், அதன் பின் வெறும் பேச்சுத் தமிழ் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவை மட்டும் எத்தனை நாட்களுக்கு நிலைத்து விட முடியும் என்பதை மக்களும் அந்தந்த ஊடகத்தினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! 

இற்றை நாளில் தமிழ் பயன்படுவதே வெறும் ஊடக நுகர்ச்சிக்குத்தான்! அறிவியல், தொழில், வணிகம் என எல்லாத் துறைகளிலும் இங்கு ஆங்கிலமே கோலோச்சும் நிலையில் தமிழ் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிகளுமே இன்று வெறும் ஊடக மொழிகளாகப் போய்விட்டன! அப்படியிருக்க, அந்த ஊடகத்துறையும் தமிழில் இப்படி அழிந்து போனால் அது தமிழ்மொழியே அழிந்து விட்டதற்கு ஒப்பாகும். எனவே, எல்லாவற்றுக்கும் அடிப்படையாகத் திகழும் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறையைப் புனரமைக்கும் பணியில் உடனடியாகத் தமிழுலகம் இறங்கியாக வேண்டிய நேரம் இது! 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு முதலானவை இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சங்கத்தினர், எழுத்தாளர்கள், இதழ்த்துறையினர், திரைப்படத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தை மீட்டெடுக்கப் பாடுபட வேண்டும்!

என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால்:

வியாழன், மே 30, 2013

வேடம் கலைந்த ஈழத் தாய்!

vaedam kalaindha Eela Thaai!


தமிழ்நாட்டு அரசியலாளர்களுள் தன் பெயரைத் தானே கெடுத்துக் கொள்வதில் தன்னிகரற்றவர் முதல்வர் ஜெயலலிதா!

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை நடுவண் அரசின் பட்டியலில் சேர்த்து அதை நிரந்தரச் சட்டமாக்கித் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்றிக்கு ஆளாவார்; கையோடு, “கோயில்களில் உயிர்ப்பலி கூடாது” என்று அறிவித்துப் போற்றியவர் வாயாலேயே தூற்றவும் படுவார்!

மழைநீர்ச் சேகரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்திச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே நன்மதிப்பு பெறுவார்; சூட்டோடு சூடாக, டாஸ்மாக்கை அறிமுகப்படுத்திச் சமூக ஆர்வலர்களால் கரித்துக் கொட்டவும் படுவார்!

3600 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் வரும் சூன் மாதம் முதல் ஆங்கிலவழி வகுப்புகள் (English Medium classes) தொடங்கப்படவுள்ளன என்ற தமிழக அரசின் அண்மைய அறிவிப்பும் இந்தப் பட்டியலில்தான் சேர்கிறது!

வெள்ளி, மே 17, 2013

பிறக்குமடா தமிழீழம்! பறக்குமடா புலிக்கொடி!


PiRakkumadaa Tamileelam! PaRakkumadaa Pulikkodi!

பிறக்குமடா தமிழீழம் உலகில் விரைவிலே!
பறக்குமடா புலிக்கொடிதான் ஐ.நா அவையிலே!

போர்க் கலையைத் தோற்றுவித்த வீர இனமடா!
தோல்வி தன்னைத் தூக்கியெறிந்து மீண்டு எழுமடா!
நாங்கள் வெல்லும் காலம் ஒன்று விரைவில் வருமடா! - அது
உலகத் தமிழர் வயிற்றில் பாலை வார்க்கும் தினமடா!

Eelam lady Tigersதாய்மண்ணை நாங்களன்று வென்று காட்டுவோம்!
எதிரிகளின் படையணியை விரட்டி ஓட்டுவோம்!
உலகத்தையே எதிர்த்து நின்ற புலிகள் வீரத்தை
தலைமுறைக்கே எடுத்துச் சொல்லி வீரமூட்டுவோம்!

ஓயாத அலையாகத் திருப்பி அடிப்போம்!
குமுறும் நாங்கள் எரிமலையாய் நாளை வெடிப்போம்!
வெற்றிக் கனியை விண்ணிலிருந்தும் எட்டிப் பறிப்போம்!
கடவுள் வந்து தடுத்தாலும் எதிர்த்து முறிப்போம்!

மாணவரின் புலிப்படைதான் கிளம்பிவிட்டது!
வெற்றிச் சங்கு முழங்கும் நேரம் நெருங்கிவிட்டது! - இது
உலகமுழுதும் ஒரு குடைக்கீழ் ஆண்ட தலைமுறை! – அந்த 
வரலாறு திரும்புமடா ஆடு அதுவரை! 

படங்கள்: 
நன்றி - http://asrilanka.com, http://www.yarl.com.

புதன், மே 08, 2013

அடுத்து...?



கோயில் குளமும் தொலைக்காட்சியுமே
வாழ்க்கையாய்க் கொண்ட
மனைவி,


அடுத்த ஆண்டுப் பதவி உயர்வு முதல்
நாளைய சந்திப்பு வரை
எதிர்காலத்திலேயே
வாழும் மகன்,


குழந்தை குட்டி ஆனதும்
இலக்கியம் மறந்த
மருமகள்,


புகுந்த நாட்டுப் பண்பாட்டோடு
ஒன்றி
அடையாளம் தொலைத்த
மகள்,


"தமிழ் கிலோ எவ்வளவு?" எனப்
பேரம் பேசக் கூடத் தெரியாத
நுகர்வோர் கலாச்சாரத்துப்
பேரன் பேத்திகள்,
அனைவரும்
எதிர்வீட்டு எழுத்தாளத் தாத்தாவின்
இறந்த உடலைச்
சூழ்ந்திருக்கும் இவ்வேளையில்...
 

அடுத்து
யாருக்காகக் காத்திருக்கின்றன
தாத்தாவின் தூவலில்
மிச்சமிருக்கும்
மைத்துளிகள்?...


சனி, மே 04, 2013

சாதியம் தமிழ்ப் பண்பாடா? – நடந்து வரும் சாதிக் கலவரங்களையொட்டித் தமிழ் மக்களுக்கு ஒரு கேள்வி!

கோடை வெப்பத்தை விடத் தமிழ்நாட்டை அதிகமாகத் தகித்துக் கொண்டிருக்கிறது மரக்காணத்துக் கலவர நெருப்பு! ஒரு நகரத்தில் பற்றிய இந்தச் சாதியத்தீ எங்கே தமிழ்நாடு முழுக்கப் பரவிவிடுமோ எனும் அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

      வன்முறையைத் தூண்டியவை இராமதாசும், காடுவெட்டிக் குருவும் பேசிய பேச்சுக்கள்தான் என்கிறார்கள் பெரும்பான்மையோர், ஊடகத்தினர், நடுநிலையாளர்கள் எல்லாரும்.
“கலவரத்தில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டதே நாங்கள்தான், எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு என்ன பதில் எனக் கேட்கிறார்கள் வன்னியர்கள். ஆக, இரு தரப்பிலும் தவறு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

      எனவே யார் மீது தவறு, மிகுதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பன போன்றவற்றை விவாதிப்பது இந்தப் பதிவின் நோக்கமன்று! அதை ஏற்கெனவே பலர் இணையத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

      மாறாக இந்நேரத்தில், தமிழ் மக்கள் அனைவரையும் நோக்கிப் பொதுவான ஒரு கேள்வியை முன்வைப்பது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்!

சாதியம் தமிழ்ப் பண்பாடா? - இதுதான் அந்தக் கேள்வி!

சாதி என்பது தமிழர்களால் உருவாக்கப்பட்டது கிடையாது என்பது நம் அனைவருக்கும் தெரியும்! அது மட்டுமில்லை, தமிழர்களைப் பிரித்தாள்வதற்காக ஆரியர்களால் புகுத்தப்பட்டதுதான் அது என்பதும் நமக்குத் தெரியும்!

அப்படியிருக்க, ஒருபுறம் “தமிழன்தமிழன் என மார்தட்டிக் கொண்டு, தமிழ் மருத்துவம், தமிழர் அறிவியல், தமிழர் வரலாறு எனவெல்லாம் பெருமை பேசிக்கொண்டு, தமிழீழத்துக்காகப் போராடிக்கொண்டு, மறுபுறம், தமிழர்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் முற்றிலும் எதிரான ஒன்றாக விளங்கும் சாதியத்தையும் கடைப்பிடித்துக் கொண்டிருப்பது எந்த வகையான அறிவாளித்தனம் என்பது கொஞ்சம் கூடப் புரியவில்லை!

தி.மு.க, அ.தி.மு.க இரண்டிலும் ஒருவர், ஒரே நேரத்தில் உறுப்பினராக இருக்க முடியுமா?...

ஒரே நேரத்தில் பொதுவுடைமையாளராகவும் அமெரிக்க ஆதரவாளராகவும் ஒருவர் இருக்க முடியுமா?...

இருவேறு மதங்களை ஒரே நேரத்தில் ஒருவரால் பின்பற்ற முடியுமா?...

அப்படியிருக்க, இனவாதியாகவும், சாதிக்காரனாகவும் மட்டும் எப்படி நாம் ஒரே சமயத்தில் இருக்க முடியும்? இன அடையாளமும், சாதி அடையாளமும் எதிரெதிர்த் துருவங்கள்! இனரீதியாக நாம் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் சாதி. ஒன்றுகொன்று எதிரான இந்த இரண்டு அடையாளங்களையும் நாம் எப்படி ஒன்றாகச் சுமக்க முடியும்? இது முற்றிலும் முரணானது!! எந்த அளவுக்கு முரணானது என்று கேட்டால், ஈழத் தமிழர்களுக்காகவும் போராடிவிட்டுக் காங்கிரசுக்கும் வாக்களிப்பது போல!!

சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே! மேலைநாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினால் மட்டும் பண்பாட்டுச் சீரழிவு எனக் கூப்பாடு போடுகிறோமே, ஆங்கிலேயனைப் பின்பற்றினால் மட்டும் பண்பாட்டுச் சீரழிவு, ஆரியர்களால் புகுத்தப்பட்ட சாதியத்தைப் பின்பற்றுவது மட்டும் தமிழ்ப் பண்பாடா?

உலகில் எல்லாச் சமூகத்து மக்களுக்குள்ளும் பிரிவினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவையெல்லாம் அவர்களுக்காக அவர்களே உருவாக்கிக் கொண்டவை. ஆனால் உலகிலேயே நாம் மட்டும்தான், நம்மைப் பிரித்தாள்வதற்காக இன்னோர் இனத்தவர் நம்மிடையே புகுத்திய ஒரு பிரிவினை முறையைத் தெரிந்தே நமது வாழ்வியல் முறையாகவும் அடிப்படைச் சமூகக் கட்டமைப்பாகவும் இன்னும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்! இதை விடப் பித்துக்குளித்தனம் வேறேதும் இருக்க முடியுமா என்பது தெரியவில்லை!

அது மட்டுமில்லை, உலகின் மற்ற சமூகத்து மக்களெல்லாரும், தங்களுக்குள் பல பிரிவினைகள் இருந்தாலும் வெளியிலிருந்து தங்களுக்கு ஓர் ஆபத்து என வந்தால் உடனே தங்களுக்குள் உள்ள பிரிவினைகளை மறந்து ஒன்றிணைந்து விடுவார்கள். உலக வரலாற்றின் பல பக்கங்களில் இதைப் பார்க்கலாம். ஆனால் நாம்?...

உலகமே சேர்ந்து நம் இனத்தை ஒழித்துக்கட்டி முழுதாக நான்கு ஆண்டுகள் முடியவில்லை இன்னும். அதற்குள் சாதியின் பெயரால் எத்தனை மோதல்கள், சண்டைகள், கலவரங்கள் நிகழ்த்தி விட்டோம்!!

தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அந்தப் படுகொலை உலகின் முதல் இனப்படுகொலையன்று! மனிதன் எனும் இந்த விந்தை உயிரினம் தோன்றிய காலந்தொட்டு இந்த உலகம் இனப்படுகொலைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இதுவரை நடந்த மற்ற இனப்படுகொலைகளுக்கும் தமிழினப் படுகொலைக்கும் பெரிய ஒரு வேறுபாடு இருக்கிறது!... மற்ற இனப்படுகொலைகள், ஓர் இனத்தின் மீது மற்ற ‘ஓர் இனத்தாலோ, ‘சில இனங்களாலோ தொடுக்கப்பட்ட தாக்குதல்களின் விளைவுகள். ஆனால், தமிழினத்தின் மீதான இனப்படுகொலைத் தாக்குதல் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து நடத்திய அட்டூழியம்! இந்த வேறுபாட்டை நாம் என்றைக்காவது உணர்ந்திருக்கிறோமா?

நினைத்துப் பாருங்கள்! இந்தியாவும் சீனமும் என்றைக்காவது ஒத்துப் போயிருக்கின்றனவா?...

அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளும், ரஷ்யாவும் அதன் நட்பு நாடுகளும் என்றைக்காவது ஒரு பிரச்சினையில் ஒரே முடிவை எடுத்திருக்கின்றனவா?...

இசுரேலும் ஈரானும் என்றைக்காவது ஒரே அணியில் நின்றிருக்கின்றனவா?...

பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்குமான வரலாற்றுப் பகைமை நாம் அறியாததா?...

ஆனால் இப்படி, ஒன்றுக்கொன்று ஒப்புக்காகக் கூட ஒத்துப்  போகாத இந்த நாடுகள் அனைத்தும் தமிழினத்தை அழிப்பதற்காக மட்டும் ஒரே அணியில் திரண்டன! உலகின் எத்தனையோ நாடுகளில் தனிநாடு போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட. அவற்றையெல்லாம் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தாங்களாகவோ தங்கள் நட்பு நாடுகளின் துணையுடனோதான் சமாளிக்கின்றன. ஆனால், தமிழர்கள் தனிநாடு கேட்டால் மட்டும் இப்படி இலங்கை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், வங்கதேசம் என ஒன்பது நாடுகள் சேர்ந்து வந்து தாக்குகின்றன! அதைக் கியூபா, வெனிசுலா, இசுரேல், ஈரான் என ஏராளமான நாடுகள் ஆதரிக்கின்றன! தமிழர்கள் தனிநாடு அடைந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் உலகமே விழிப்பாக இருக்கிறது! எனில், தமிழர்களின் உண்மையான எதிரிகள் யார்? சிங்களர்களா?... அமெரிக்கர்களா?... சீனர்களா?... இல்லை, மொத்த உலகநாடுகளும்தான்! நம்ப முடியாத அளவுக்குப் பிரம்மாண்டமாக இருந்தாலும் இது உண்மை!

ஆனால், இப்படி ஒட்டுமொத்த உலகமும் நமக்கு எதிராக இருக்கும் நிலையிலும், அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நாம் இன்னும் நமக்குள் சாதிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்! இதை விட இழிவான ஒரு செயல் இருக்க முடியுமா? இதை விடக் கீழ்த்தரமான ஒரு நிலைப்பாடு இருக்க முடியுமா? இதைக் காட்டிலும் ஒரு முட்டாள்தனத்தை நாம் நம் அடுத்த தலைமுறைக்குக் கற்பித்துவிட முடியுமா?

இதே ஈழப் பிரச்சினைக்காக, பற்பல ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர்களும், ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர்களும், பாடுபட்டதாகக் காட்டிக் கொண்டவர்களும் செய்ய இயலாத ஒரு மாபெரும் புரட்சியைச் சில நாட்களுக்கு முன்புதான் நம் கண்ணெதிரே நடத்திக் காட்டினார்கள் நம் மாணவச் செல்வங்கள்! இந்தியா, இலங்கை, அமெரிக்கா எனப் பல நாடுகளையும் எதிர்த்து அவர்கள் நடாத்திய அந்த அறப்போர் உண்மையிலேயே எதிர்பாராத அளவில், எதிர்பாராத மட்டங்களில் பல கிடுகிடுப்புகளை ஏற்படுத்தியது. “இதோ தமிழீழம் மலர்ந்து விடும்! அப்பேர்ப்பட்ட விடுதலைப்புலிப் படையால் சாதிக்க முடியாததை இந்த மாணவப்புலிப் படை சாதித்து விடும்! எனும் நம்பிக்கைப் பொறி அப்பொழுது பலர் உள்ளங்களிலும் ஒருமுறையேனும் தெறித்தது உண்மை! “தமிழ்நாட்டில் எழுச்சி ஏற்பட்டுவிட்டது! தமிழர்களுக்கு உண்மை புரிந்துவிட்டது! இனி இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனக் கடந்த பல ஆண்டுகளாக ஈழப் பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வை விதைத்து வந்த பல நல்லுள்ளங்கள் ஆறுதல் பெற்றன!

ஆனால் அந்த நம்பிக்கைகளையும், ஆறுதல்களையும் சிதறடிக்கும் வகையில், ஓர் ஒழுங்குக்கு வந்து கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பார்வையை மழுங்கடிக்கும் விதத்தில், மீண்டும் அனைத்தையும் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது இந்த ‘மரக்காணக் கலவரம்!

நாம் இதே நிலைப்பாட்டில் தொடர்ந்தால், வருங்காலத் தலைமுறை தங்களைத் தமிழர் எனச் சொல்லிக்கொள்ளவே கண்டிப்பாக வெட்கப்படும்! மீறிச் சொல்லிக் கொண்டால், “என்ன!... இத்தனை நாடுகள் ஒன்று சேர்ந்து உங்கள் இனத்தை அழித்தும் உங்கள் முன்னோர்கள் ஒற்றுமைப்படாமல் தங்களுக்குள் சண்டயிட்டுக் கொண்டிருந்தார்களா! எனக் காறித் துப்புவார்கள் மற்றவர்கள்.

எனவே நண்பர்களே! இனியாவது சாதிகளைத் தூக்கி எறிவோம்! தமிழராக ஒருங்கிணைவோம்! நம்மை ஆள்வதற்காக மற்றவர்கள் நமக்குள் கற்பித்த வேறுபாடுகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் மும்முரத்தில் மொத்த இனத்தையும் பலி கொடுக்கும் மூடத்தனத்துக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைப்போம்! இனப் பிரிவினையின் அடையாளத்தையும், இனத்தின் அடையாளத்தையும் ஒருசேர அணிந்து கொண்டு திரியும் பித்துக்குளித்தனத்துக்கு இனிமேலாவது முழுக்கு போடுவோம்!

இல்லாவிட்டால், இப்பொழுது சீனன் இந்தியாவுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறான். ஈழத்தில் குடியிருக்கவே தொடங்கிவிட்டான். இன்னும் சில ஆண்டுகளில் இங்கேயும் வாழ வந்துவிடுவான். அப்பொழுது ‘சிங்யா மிங்யா... யோவா நாவா... என ஏதேனும் ஒரு பெயரில் தன்னையும் ஒரு சாதியாக அவன் இங்கே அறிவித்துக் கொள்வான். பின்னர், தான்தான் உயர்ச்சாதி இங்குள்ள மற்ற மேல் சாதியினர் அனைவரும் தனக்கு அடுத்தபடிதான். மற்ற சாதியினர் அவர்களுக்கும் கீழே என்பான். இப்படி ஒரு சாதி முறையில்தான் இந்த உலகத்தையே சீனக் கடவுள் படைத்ததாகவும் சொல்வான்.

நாம் அதையும் நம்பி, அப்பொழுதும் நமக்குக் கீழ் உள்ள சாதியில் பிறந்த தமிழர்களைக் கீழ்த்தரமாகவும், நமக்கு மேல் உள்ள சாதியில் பிறந்த தமிழர்களை வன்மத்தோடும் அணுகிக் கொண்டிருப்போம்!
*********
(நான் கீற்று இதழில் எழுதிய கட்டுரை).


என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்