.

திங்கள், ஜூன் 15, 2015

கொள்கையா தமிழர் நலனா, எது முக்கியம்? - சீமானிடம் சில கேள்விகள்!


Senthamilar Seemaan

பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய தலைவர் செந்தமிழர்.சீமான் அவர்களுக்கு நேச வணக்கம்!

ஈழ இனப்படுகொலை காலத்திலிருந்து உங்கள் தமிழ்ப் பற்றுத் தெறிக்கும் உரைகளை மிகுந்த ஆர்வத்துடனும் வியப்புடனும் கேட்டு வருபவன் நான். அரசியலில் புதுக் குருதியாக ஊற்றெடுத்திருக்கும் உங்களை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். தமிழர் பிரச்சினைகளில் உங்கள் நிலைப்பாடுகள் பலவும் எனக்கு மிகவும் பிடிக்கும்; ‘திராவிட எதிர்ப்பு’ உட்பட.

அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் உங்கள் நேர்காணல் பார்த்தேன்.
தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிப்பதை ஈழத் தமிழர்கள் எதிர்க்கிறார்களே என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலடி, தமிழில் வழிபாடு செய்யாத எந்தச் சமயத்தையும் ஏற்க முடியாது என்று கூறிய உங்கள் துணிச்சல், தமிழர்கள் ஏன் சமயம் மாறுகிறார்கள் என்பதற்கு நீங்கள் அளித்த விளக்கம் என்று எல்லாமே வழக்கம் போலவே அருமையாகவும் எளிமையாகவும் இருந்தன. நன்றி!

ஆனால், ‘யார் தமிழர்’ என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த விளக்கமும், ம.தி.மு.க தலைவர் வை.கோ முதல்வர் ஆகலாமா என்ற கேள்விக்கான உங்கள் பதிலும்... பொறுத்துக் கொள்ளுங்கள், முகம் சுளிக்க வைத்தன!

இத்தனை நாட்களாக ‘திராவிடக் கொள்கை’ இனி தமிழர்களுக்கு ஏற்றதில்லை என்பதால்தான் நீங்கள் மற்ற திராவிடத் தலைவர்களோடு சேர்த்து வை.கோ அவர்களையும் புறக்கணிக்கிறீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்த நேர்காணலைப் பார்த்த பிறகுதான் புரிகிறது நீங்கள் அவர் பிறப்பை வைத்து அவரை எடை போடுகிறீர்கள் என்பது.

ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன், ஒருவர் தமிழரா இல்லையா என்பது அவர் வாழும் வாழ்க்கையை வைத்துத் தீர்மானிக்கப்பட வேண்டியதா அல்லது அவர் பிறப்பை வைத்துத் தீர்மானிக்கப்பட வேண்டியதா?

தமிழராகப் பிறந்து விடுவதாலேயே ஒருவர் தமிழராகி விட முடியுமா? அப்படியானால் விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தே ஈனப் பிழைப்புப் பிழைத்து வரும் டக்ளஸ் தேவானந்தா தமிழன், மேதகு.பிரபாகரன் அவர்கள் தன்னை நம்பி ஒப்படைத்த பெரும் படையோடு மொத்தமாய்ப் போய் சிங்களன் காலில் விழுந்து இனத்தையே காட்டிக் கொடுத்த கருணா தமிழன், நடந்த இனப்படுகொலைக்கு அன்றைய நிதியமைச்சர் என்ற முறையில் இரண்டாயிரம் கோடிக்குக் காசோலை தீட்டிக் கொடுத்த சிதம்பரம் தமிழன்; இவர்களெல்லாரும் தமிழர்களை ஆளலாம். ஆனால் தமிழர்களுக்கெனத் தனித்தன்மையும் சிறப்பும் இருக்கின்றன என்பதை உணரச் செய்த பெரியார், நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே ஈழத் தமிழர்களுக்காகவும் விடுதலைப்புலிகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் வை.கோ ஆகியோர் தமிழர்கள் இல்லை, வை.கோ முதல்வர் ஆகக்கூடாது; அப்படித்தானே ஐயா? உங்களை நம்பிப் பின்பற்றிய எங்களுக்கு இதுதான் நீங்கள் கற்பிக்கும் அரசியல் நெறியா? இஃது அணுவளவேனும் சரியா?

Vai.Ko with Prabhakaranஐயா! ஒருவர் தமிழரா இல்லையா என்பது அவருடைய உணர்வின் அடிப்படையிலானதாகத்தான் இருக்க முடியுமே தவிர, ஒருபொழுதும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது. தமிழ் உணர்வு உள்ளவரே தமிழர்! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், அதை உயிராக நேசிப்பவர்கள், தமிழ் மொழிக்கு ஓர் ஊறு நேர்ந்தால் தன்னையும் அறியாமல் பதறுபவர்கள், உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் அது தனக்கே ஏற்பட்டதாகத் துடிப்பவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும், எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் அவர்கள் தமிழர்களே! அப்படிப்பட்ட உண்மையான தமிழர்களுக்குத்தான் தமிழர்களை ஆளும் தகுதியும் உண்டு! இதை நீங்கள் மறுப்பதாக இருந்தால் அந்த மறுப்பை நாங்கள் ஒப்புக் கொள்வது இருக்கட்டும், இந்தத் தமிழ்ச் சமூகம் ஒப்புக் கொள்வது இருக்கட்டும், தலைவர் பிரபாகரன் ஒப்புக் கொள்வாரா?... வை.கோ தமிழர் இல்லை என்கிற உங்கள் கூற்றை அவர் ஏற்றுக் கொள்வாரா?... சிந்தியுங்கள்!

ஐயா! இதே சிந்தனையின் அடிப்படையில்தான் நீங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலையும் அணுகுவதாகத் தெரிகிறது.

இதுவரை, தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு என்பதை மட்டுமே தெரிவித்து வந்த ‘நாம் தமிழர் கட்சி’ முதன்முறையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகத் தாங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்திதான்!

இதுவரை, தமிழ்ப் பற்றுள்ள எத்தனையோ கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியையும் பிடித்திருக்கின்றன; தமிழர் வாழ்வில் எத்தனையோ நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், அவர்கள் எல்லோருமே தென்னிந்தியர் அனைவருக்கும் பொது அரசியல் கொள்கையான ‘திராவிடம்’ என்பதை முன்வைத்து அரசியல் வாழ்வு கண்டவர்கள். ஆனால், தமிழர்களுக்கான அரசியல் கொள்கை என்றாலே அது ‘திராவிடம்’தான் என்று கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக இருந்த நிலைமையை மாற்றி, முதன்முதலாகத் தமிழர்களுக்கு என ஒரு தனி அரசியல் கொள்கையை முன்வைத்த கட்சியான ‘நாம் தமிழர்’ தேர்தலில் போட்டியிடுவது தமிழர் அரசியல் உலகில் குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நிகழ்வு என்பதாகவே கருதுகிறேன். இந்த நல்முடிவுக்காக நன்றி!

ஆனால் அதே நேரம், இந்தத் தேர்தலில் ‘நாம் தமிழர்’ தனித்துப் போட்டியிடும் என்கிற அறிவிப்புதான் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது!

தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த தி.மு.க-வுடனோ, ஊழல் கட்சியான அ.தி.மு.க-வுடனோ, பிறப்பாலோ வாழ்க்கைமுறையாலோ தமிழரல்லாத விஜயகாந்தின் தே.மு.தி.க-வுடனோ நீங்கள் கூட்டணி வைக்காதது பற்றி எந்த மறுபேச்சும் இல்லை. காங்கிரஸ், பா.ஜ.க இரண்டையும் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. பொதுவுடைமைக் கட்சிகள் தமிழ் ஈழத்துக்கு எதிரானவை என்பதாலும், பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவை எவ்வளவுதான் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாலும் அவை தமிழர்களுக்கு எதிரான கொள்கையான சாதியத்தைக் கடைப்பிடிப்பவை என்பதாலும் அவற்றைப் புறக்கணித்ததும் சரியே! ஆனால், இவற்றோடு ம.தி.மு.க-வையும் சேர்த்துப் புறக்கணித்து விட்டு நீங்கள் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறீர்கள்!

தமிழர்களுக்காக வாழ்நாளெல்லாம் எவ்வளவுதான் போராடினாலும் வை.கோ தமிழராகி விட முடியாது என்கிற உங்கள் கொள்கை சரியெனவே வைத்துக் கொள்வோம்! ஆனால், கொள்கை, கோட்பாடு, இவற்றிலுள்ள நியாயங்கள் எல்லாம் ஒருபுறமிருக்க, நம் மக்களின் தற்பொழுதைய நிலை என்ன என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்!

தமிழினம் தற்பொழுது எப்பேர்ப்பட்ட அழிவுக் காலக்கட்டத்தில் இருக்கிறது என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஈழத்தில் நம் மக்கள் உயிருடனே நரக வேதனையை அனுபவித்து வருகிறார்கள். இங்கேயும் மீனவர்கள் தாக்கப்படுதல், அணு உலை, தமிழ்நாட்டையே வாழத் தகுதியில்லாததாக மாற்றக்கூடிய மீதேன் திட்டம் என அடுத்தடுத்துத் தமிழினத்தை வேரறுக்க அபாயங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இவற்றுக்கிடையில், நடுவணரசுப் பள்ளிக் கல்வியை (CBSE) உயர்த்திப் பிடித்து சமச்சீர்க் கல்வி, தமிழ் வழிக்கல்வி ஆகியவற்றை மதிப்பிழக்கச் செய்தல், அதன் மூலம் இந்தி, சமசுகிருதம் போன்றவற்றைத் திணித்தல் என அடுத்த தலைமுறைக்குத் தமிழே தெரியாமல் மறக்கடிப்பதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. மொத்தத்தில்,
நேரடியாகத் தாக்கி அழித்தல்
வாழ்வாதாரத்தை அழிப்பதன் மூலம் வாழவிடாமல் அழித்தல்
வாழ்விடத்தை வாழத் தகுதியில்லாத இடமாக மாற்றுவதன் மூலம் அழித்தல்
தாய்மொழியையும் அது சார்ந்த பண்பாட்டையும் மறக்கடிப்பதன் மூலம் இன அடையாளத்தை அழித்தல்
என எல்லா வகைகளிலும் தமிழர்களை அழிப்பதற்குண்டான முயற்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்படி, இனமே அழிந்து வரும் நிலையில் திராவிட அரசியல், தமிழர் அரசியல் எனக் கோட்பாட்டு அடிப்படையிலான நுட்பமான வேறுபாடுகள் குறித்து நீங்கள் கவலைப்படுவதும், அதன் அடிப்படையில் அரசியல் முடிவுகளை எடுப்பதும் நியாயமா எனச் சிந்தித்துப் பாருங்கள்! மக்களுக்கான முதல் அடிப்படைத் தேவை ‘பாதுகாப்பு’! அதை உறுதிப்படுத்தாமலே இனம், அடையாளம், உரிமை போன்ற அடுத்த கட்டப் புரிதல்களை மக்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது முறையா? சாதி, சமயம், திராவிடம், இந்தியம் ஆகிய தேவையற்ற அடையாளங்களையெல்லாம் தூக்கியெறிந்து ‘தமிழர்’ எனும் ஒரே அடையாளத்துக்குள் நாம் அனைவரும் ஒருங்கே கூட வேண்டுமானால், முதலில் தமிழர்கள் அனைவரும் உயிருடன் இருக்க வேண்டும்; அதுவும், தமிழர்களாக இருக்க வேண்டும்! அதற்கு உடனடித் தேவை ‘தமிழர் பிரச்சினைகள் அனைத்திலும் சரியான நிலைப்பாடு கொண்ட ஓர் ஆட்சி!’. ‘நாம் தமிழர்’ தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் அப்படி ஓர் ஆட்சி அமையும் என்றால், நீங்கள் எடுத்த இந்த முடிவு சரியானதுதான். ஆனால், அப்படி நடக்கும் என நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

Seemaan with Vai.koகனிவு கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்! தமிழ் உணர்வு, விடுதலைப்புலிகளை ஆதரித்தல், தமிழர் பிரச்சினைகளுக்காகக் களமிறங்கிப் போராடுதல் ஆகியவைதான் தமிழ் மக்களிடையே உங்களுக்கு இருக்கும் அடையாளங்கள். ஆனால், இதே அடையாளங்கள் ம.தி.முக-வுக்கும் இருக்கின்றன. தி.மு.க-வையும், அ.தி.மு.க-வையும் தவிர தமிழ்நாட்டில் சாதி, சமயப் பிரிவினைகளை எதிர்க்கும் கட்சிகள் எவை என்று பார்த்தால், நாம் தமிழரும், ம.தி.மு.க-வும் மட்டும்தான். கொள்கை, செயல்பாடு, நோக்கம் என இப்படி எல்லா வகைகளிலும் ஒரே மாதிரி இருக்கும் நீங்கள் இருவரும் தேர்தலில் தனித்தனியே பிரிந்து போட்டியிடுவதால் தமிழ் உணர்வாளர்களின் வாக்குகளும் பிரியும், கட்சி - சாதி - சமயச் சார்பு பாராமல் வாக்களிக்கும் பொதுமக்களின் வாக்குகளையும் ஓரணியில் திரட்ட முடியாமல் போகும்.

இப்படி, இருக்கிற வாக்கு வங்கியையும் முழுமையாகப் பெற முடியாமல், பொது வாக்குகளையும் மொத்தமாகக் கவர முடியாமல் நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும் என எனக்குப் புரியவில்லை. இது மீண்டும் தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வரத்தான் வழி வகுக்கும். அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? கருணாநிதியோ ஜெயலலிதாவோ மீண்டும் முதல்வராக வந்தாலும் கவலையில்லை; ஆனால், வை.கோ-வோடு சேர மாட்டேன் என்பதுதான் உங்கள் நிலைப்பாடா? இது உங்களுக்கே நகைமுரணாகத் தோன்றவில்லையா?

அதற்காக நான் உங்களை திராவிட எதிர்ப்பையே கைவிட்டு விடும்படிக் கேட்கவில்லை. ‘திராவிடம்’ என்பது எதிர்க்கப்பட வேண்டிய கொள்கைதான் என்பதில் எனக்கு அணுவளவும் மாற்றுக் கருத்து இல்லை. ‘திராவிடம்’ எனும் வகைப்பாட்டுக்குள் வரும் மற்ற இனத்தவர்கள் நம்மை திராவிடர்களாக இல்லாவிட்டாலும் சக மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை என்பது இங்கு அனைவரும் அறிந்ததுதான். அவர்கள் தங்களைத் தெலுங்கர்களாகவும், கன்னடர்களாகவும், மலையாளிகளாகவும் மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையில் தமிழர்களாகிய நாம் மட்டும் நம்மை ‘திராவிடர்கள்’ எனக் கருதுவது எவ்வளவு பெரிய இளித்தவாய்த்தனம் என நீங்கள் கூறுவது புரியாமல் இல்லை.

ஆனால் அதற்காக, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தமிழர்களின் அரசியல் கொள்கையாக நிலைபெற்றுவிட்ட ‘திராவிட’த்திலிருந்து தமிழ் மக்கள் அனைவரும் இவ்வளவு குறுகிய காலக்கட்டத்துக்குள் வெளிவந்து விட வேண்டும்; வெளிவந்து நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே உங்களிடம் ஆட்சிப் பொறுப்பை அளித்து விட வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி நடக்கும் என்பதுதான் என் கேள்வி.

அப்படி நடக்காத ஓர் எதிர்பார்ப்பை முன்னிட்டு நீங்கள் தமிழ் உணர்வாளர்களின் வாக்கு வங்கியை ஏன் சிதறச் செய்கிறீர்கள் எனத்தான் கேட்கிறேன்.

அப்படி உணர்வாளர்களின் வாக்குகளைச் சிதறச் செய்து மீண்டும் இரு திராவிடக் கட்சிகளே ஆட்சிக்கு வர நீங்கள் ஏன் உதவுகிறீர்கள் எனத்தான் கேள்வி எழுப்புகிறேன்.

இனம் - மொழி - பண்பாடு என எல்லா வகைகளிலும் தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஒத்த கருத்துடைய தலைவர்கள் அனைவரோடும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பதன் மூலம் ஆட்சியைப் பிடித்து உடனடியாக மக்களைக் காப்பாற்ற வேண்டிய நீங்கள், அதற்கு வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் தனித்து நின்று உங்கள் செல்வாக்கைச் சோதித்துப் பார்த்துக் கொள்ள முயல்வது முறையா எனத்தான் வினவுகிறேன்.

தமிழ் இனத்தின் இன்றைய முதல் இன்றியமையாத் தேவை ஒற்றுமை. ஆனால், திராவிடத்துக்கு மாற்றாகத் ‘தமிழ் தேசியம்’ எனும் புதிய அரசியல் கொள்கையை முன்வைக்கும் நீங்கள் உங்களைப் போலவே களத்திலிறங்கிப் போராடும் உண்மையான மற்ற தமிழ்த் தலைவர்களும் அந்தக் கொள்கையை ஏற்று உங்கள் உங்கள் வழிக்கு வரும்படி செய்யாமல், ஏற்கெனவே சாதி, சமயம், கட்சி எனப் பிரிந்து கிடக்கும் தமிழ் மக்கள் புதிதாக ‘திராவிடம் - தமிழ் தேசியம்’ எனக் கோட்பாட்டின் அடிப்படையிலும் பிரிந்து அடித்துக் கொள்ளும்படி செய்வது எந்த வகையில் நியாயம்?

சமூக வலைத்தளங்களில் வார்த்தைச் சண்டையாக நாள்தோறும் அரங்கேறும் இந்தப் பிரச்சினை, ‘கத்தி’, ‘புலிப் பார்வை’ பட விவகாரத்தின்பொழுது தெருவுக்கு வந்து நம் இன ஒற்றுமையின் அழகைச் சந்தி சிரிக்கச் செய்த இந்தப் பிரச்சினை, அடுத்ததாகச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது நம்மைப் பார்த்து உலகமே சிரிக்க ஏதுவாக வேண்டுமா?

ஐயா! சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் ம.தி.மு.க-வோடு கூட்டணி வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொண்டால் பெரியார் திராவிடக் கழகம், மே 17, சேவ் தமிழ்சு எனத் தமிழ் உணர்வு இயக்கங்கள் அனைத்தின் ஆதரவும் மொத்தமாக உங்கள் கூட்டணிக்குக் கிடைக்கும். அந்த ஆதரவே தமிழ் உணர்வாளர்கள் அனைவரின் வாக்குகளையும் ஓரணியில் திரட்டும். தி.மு.க, அ.தி.மு.க தவிர மற்ற எல்லாமே சாதி, சமயக் கட்சிகளாக இருக்கும் நிலையில் சாதி, சமய அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட, ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லாத, தமிழர் பிரச்சினைகளுக்காகக் களமிறங்கிப் போராடுகிற நீங்கள் இருவரும் இப்படிச் சேர்ந்து நிற்பது தி.மு.க, அ.தி.மு.க அல்லாத புதிய ஆட்சியை விரும்பும் அனைவரின் வாக்குகளையும் உங்கள் கூட்டணியை நோக்கி ஈர்க்கும். தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பு தமிழர்களுக்காகப் பாடுபடும் உங்கள் கரங்களிலேயே வந்து சேரும். தமிழர் பிரச்சினைகளும் தீரும்.

மாறாக, இவ்வளவுக்கும் பிறகும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்பதுதான் உங்கள் முடிவு எனில், அப்புறம் உங்கள் விருப்பம். உங்களுக்குத் தமிழர் பிரச்சினைகள் தீர்வது முக்கியமா, வை.கோ எந்தச் சாதியில் பிறந்தவர் என்பது முக்கியமா?... நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!...

கொள்கையா, தமிழர் நலனா? முடிவு உங்கள் கையில்!

பதிவின் பேசுபொருளான அந்த நேர்காணல் 

(நான் கீற்று இதழில் 0௯.0.௨0அன்று எழுதியது, சில மாற்றங்களுடன்). 

❀ ❀ ❀ ❀ ❀ 

விழியம்: நன்றி தந்தி தொலைக்காட்சி

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

12 கருத்துகள்:

  1. சந்தேகமேயில்லை ஐயா... ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பார்ந்த ஐயா!

      நடப்பு அரசியல் பற்றிய காரமான பதிவுளுக்கு நம் பதிவுலகினர் பெரும்பாலும் கருத்திடுவதில்லை. தமிழ்ப் பதிவுலகத் தலைவர்களில் ஒருவரான நீங்கள் இதற்குக் கருத்திட்டது, அதுவும் ஒத்துக் கருத்திட்டது கண்டு மகிழ்கிறேன்!

      சீமான் அவர்கள் என் பெருமதிப்புக்கும் அன்புக்கும் உரியவர். அவரிடம் சாட்டையடிக் கேள்வி கேட்கும் நோக்கம் ஏதும் இல்லை. வெறும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன், அவ்வளவுதான். இருந்தாலும் உங்களுடைய அந்தப் பாராட்டுக்கு நன்றி!

      நீக்கு
  2. அதென்ன புதிதாக கலைப் போராளி? கொஞ்சம் விளக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்பிற்குரிய ஐயா நேச வணக்கம்!

      கலையுலகைச் சார்ந்த போராளி என்பதால் அவரை அப்படி அழைக்கிறார்கள் போலும்.

      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. உங்கள் கருத்தில் தமிளினதுரோக திமுக மற்றும் ஊலல்கார அதிமுக என்கின்றீர்களே திமுகவே ஊழலின் ஊற்றுக்கண் என்பதை நாசுக்காக மறைதவிதம் அருமை ,வாழ்க உங்கள் பாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிறுக்குத்தனமான கருத்து!

      தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் நிறையவே குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளுள் பெரியது அவர்கள் செய்த தமிழின துரோகம். அதே போல், அ.தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளுள் பெரியது செயலலிதாவின் ஊழல். ஆகவேதான் அவை இரண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அப்படிக் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே தி.மு.க ஊழலே செய்யாத கட்சி என்றோ, அ.தி.மு.க தமிழர் பிரச்சினைகள் அனைத்திலும் சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவோ பொருளும் இல்லை; அப்படி யாரும் இதை எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். ஒரு இலட்சத்து எண்பதாயிரம் கோடிக்கு வரலாறு காணாத ஊழலைப் புரிந்த தி.மு.க-வின் ஊழல் பற்றி இங்கு யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதுமில்லை. நீங்கள் இப்படிப் பேசுவதைப் பார்த்தால் வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத கூட்டுப்புழுவாக இருப்பீர்களோ எனத் தோன்றுகிறது. காரணம், இந்த இரண்டு கட்சிகளையும் பொதுவெளியிலும், மேடைகளிலும், கட்டுரைகளிலும், கருத்துரைகளிலும் எல்லோரும் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். எனவே, ஏதோ நான் மட்டும்தான் இப்படிக் குறிப்பிட்டிருப்பது போல் நீங்கள் குற்றஞ்சாட்டுவது எனக்கு நகைப்பைத்தான் வரவழைக்கிறது.

      எல்லாவற்றுக்கும் மேலாக, இது வரும் சட்டமன்றத் தேர்தல் பற்றிய சீமான் அவர்களின் முடிவைக் குறித்து ஆராயும் பதிவுதானே தவிர, தமிழ்நாட்டினுடைய ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க-வா அ.தி.மு.க-வா என்பதைப் பற்றியதில்லை. எதுவாக இருந்தாலும், முழுதாகப் படித்துப் புரிந்து கொண்டு அப்புறம் கருத்திடுங்கள்! தி.மு.க-வுக்கு எதிராக நான் இதுவரை எத்தனை பதிவுகள் எழுதியிருக்கிறேன். அதைப் பார்த்து எத்தனை பேர் என்னிடம் சண்டைக்கே வந்திருக்கிறார்கள் என்பவையெல்லாம் என்னைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களுக்குத் தெரியும். அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ.க, காங்கிரசு, தே.மு.தி.க, ம.தி.மு.க, நாம் தமிழர் என எல்லாக் கட்சிகளையும் நான் இதுவரை பாகுபாடின்றி விமரிசித்திருக்கிறேன் என்பதை இந்தத் தளத்தின் பல்வேறு பதிவுகளைப் படித்துப் பார்த்தால் உணரலாம். எந்தக் கட்சிப் பாகுபாடும் எனக்குக் கிடையாது. யாரையும் அப்படி நாசுக்காகக் காப்பாற்ற வேண்டிய தேவையும் எனக்கில்லை. எனவே, நாக்கை அடக்கிப் பேசுங்கள்!

      நீக்கு
  4. நலமா சகா! இந்த பதிவிற்குபின் இன்னும் அடுத்தபதிவு இடவில்லை என நினைக்கிறேன்! சீமான் ஒரு ஈழப்பெண்ணை திருமணம் செய்துகொள்வேன் என்றுகூறிவிட்டு பல்டி அடித்தது அவர் தனிப்பட்ட வாழ்கை முடிவாக இருக்கலாம், அதையும் தாண்டி இவரும் நம் அரசியல்வாதிகள் மாதிரி பேசத்தொடங்கி வெகுநாட்கள் ஆகறது சகா:( இப்படி உணர்வாளர்கள் சிதறிக்கிடப்பதால் தான் நம் இனமும் சிதறியே கிடக்கிறது. ஒருவரை ஒருவர் திரையிட்டு மூடவும், தன்னைதானே முன்னிறுத்தும் வேகத்திலும் ஒட்டுமொத்தமாக அடையாளம் இழந்து போகிறார்கள். எதை சாதிக்கவேண்டும் என்பது மறந்து, யார் சாதித்தோம் என வரலாற்றில் பேர் பதிக்கும் ஆசையில் போராட்டத்தின் சாரத்தையே மறந்துபோகிறார்கள். புகழ் ஆசையும், பதவி ஆசையும் எத்தனை பெரிய சாபக்கேடுகள் இல்லையா சகா:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தின் ஒவ்வொரு வரியும் நூற்றுக்கு நூறு உண்மை சகா! எதிர்மறையான பதிவாயிற்றே என நான் தவிர்த்த சில உண்மைகளையும் நீங்கள் போட்டு உடைத்து விட்டீர்கள். அதற்காகவே நன்றி!

      நீக்கு
    2. இந்தக் கிழமை கணினியின் மையச் செயலகத்தை (CPU) மாற்றினேன். அது தொடர்பான வேலைகளும், அதில் ஏற்பட்ட சில சிக்கல்களும் காரணமாக உங்களுக்கு உடனே பதிலுரைக்க முடியாமல் போய் விட்டது. அதற்காக வருந்துகிறேன் சகா!

      நீக்கு
  5. அட எப்படி உங்கள் இந்தப் பதிவை தவற விட்டோம்?..

    அருமையான பதிவு நண்பரே! ஏன் அருமை? நடு நிலையான..அதாவது சீமான் அவர்களிடம் தாங்கள் வைத்துள்ள மரியாதையையும் சொல்லி அதே சமயம் அவரது கருத்துகளோடு உங்கள் நிலைப்பாடு முரண் படுவதை, அவர் பெசியது தவறு என்று மிக அழகாக, நாகரீகமான முறையில் சுட்டிக் காட்டியதும், கேள்விகள் எழுப்பியதும்...சமநிலை....யார் மனதையும் புண் படுத்தாத வகையில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள், கேள்விகள். மிக நேர்மையாக இருக்கின்றன.

    மிகச் சரியான கேள்விகள். தமிழர் என்பது பிறப்பால் அல்ல. நாம் அதை உணர்வு பூர்வமாக வாழ்வதே ஆகும். நாம் எந்த தேசத்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். இங்கு தமிழர்கள் என்று பிறப்பாலும், தங்களைத் தமிழர்கள் என்று சொல்லித் திரிபவர்களும் கூட தமிழர்கள் தானா என்று பல சமயங்களில் எண்ண வைக்கின்றார்கள்....இன்னும் பல சொல்லலாம்...

    வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மனம் திறந்த, நுட்பமான, விரிவான பாராட்டுக்கு மிக மிக மிக நன்றி ஐயா, அம்மணி! இந்தப் பதிவு எப்படிப்பட்ட தாக்கத்தைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று நான் பார்த்துப் பார்த்து எழுதினேனோ அப்படித்தான் அது அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் படிப்பவர்களின் கண்களால் பார்த்து உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்! அதற்கே நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவிக்க வேண்டும்! நன்றி! மிக்க நன்றி! தாங்கள் பதிவு செய்திருக்கும் தமிழர் பற்றிய கருத்துக்களுக்கும் நன்றி!

      நீக்கு
    2. இந்தக் கிழமை கணினியின் மையச் செயலகத்தை (CPU) மாற்றினேன். அது தொடர்பான வேலைகளும், அதில் ஏற்பட்ட சில சிக்கல்களும் காரணமாக உங்களுக்கு உடனே பதிலுரைக்க முடியாமல் போய் விட்டது. அதற்காக வருந்துகிறேன்!

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்