.

திங்கள், செப்டம்பர் 22, 2014

என் மேல் விழுந்த விருதுத் துளியே!


The Versatile Blogger Award!
பன்முகப் பதிவர் விருது! நன்றி: கில்லர்ஜி
திவுலகில் தற்பொழுது விருது மழை! ‘பன்முகப் பதிவர்’ என்னும் ஒரு விருதைப் பதிவுலக அன்பர்கள் ஒருவருக்கு ஐவர் எனச் சுழற்சி முறையில் பகிர்ந்து கொண்டு பதிவுலகில் குதூகலம் கிளப்பி வருகிறார்கள்.

அந்த நேச மழையில் ஒரு துளியை இந்தச் சிறியவனும் பருகப் பகிர்ந்திருக்கிறார் அன்பு நண்பர் கில்லர்ஜி அவர்கள்! பற்பல வலைப்பூக்களைப் படிக்கும் அவர் எத்தனையோ ஆயிரம் பேரை விட்டுவிட்டு நேற்று வந்த எனக்கு இந்த விருதை அளித்திருப்பதற்கு என் தகுதியைக் காட்டிலும் அவருடைய அன்பே கூடுதலான காரணமாய் இருப்பதாக உணர்கிறேன்!

இந்த விருது மழையில் நனைய நான்கு நெறிமுறைகளை இட்டிருக்கிறார்கள். அவை தலைப்புகளாக இனி கீழே:

பெற்ற விருதைத் தளத்தில் காட்சிப்படுத்த வேண்டும்! – (நெறி: ௧)

செய்து விட்டேன். இடப்பக்கப் பட்டியில் பார்க்க!


விருதளித்த வலைப்பூவுக்கு இணைப்பளிக்க வேண்டும்! (நெறி: ௨)

நண்பர் கில்லர்ஜியின் வலைப்பூ இதோ -> http://killergee.blogspot.in/2014/09/blog-post_14.html


பெற்ற விருதை ஐந்து பேருக்காவது பகிர வேண்டும்! (நெறி: ௩)

இங்குதான் சிக்கலே! நான் பெரிதும் மதிக்கிற, விருதுக்குரியவர்களாக என் கண்களுக்குத் தென்படுகிற அனைவருமே தகுதியில் என்னை விட எங்கோ இருக்கிறார்கள்! அவர்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியதே இன்னும் மலைபோல் குவிந்திருக்க, அவர்களுக்கு விருதளிக்க எனக்கு என்ன தகுதி? இருந்தாலும், என் தகுதியைப் பாராமல், என் அன்பையும், நட்பையும், தமிழ் மீதும், தமிழ்ப் பெருவுலகின் மீதும் முறையே எனக்குள்ள ஆர்வத்தையும் அக்கறையையும் மட்டுமே பார்த்து இந்த விருதுகளை ஏற்றுக் கொள்ளுமாறு பின்வரும் பெருந்தகைகளைக் கேட்டுக் கொள்கிறேன்!

» கண்ணபிரான் ரவிசங்கர் (எ) கே.ஆர்.எஸ்

kannabiran, RAVI SHANKAR (KRS)

தமிழ்ப் பதிவர்களுள் தலைசிறந்த ஒருவர்! தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு முதலியற்றைக் கரைத்துக் குடித்திருக்கும் இவர் இவற்றைப் பற்றிப் பல அரும்பெரும் பதிவுகளை யாத்திருப்பவர்! கூடவே சமயம், திறனாய்வு, அரசியல், மருத்துவம் ஆகியவை பற்றியும் எழுதுகிறார். குறிப்பாக, மாதவிப் பந்தல் எனும் வலைப்பூவில் இவர் எழுதியிருக்கும் பதிவு ஒவ்வொன்றும் ஒரு கருவூலம்! அது தவிர, கந்தர் அலங்காரம், தினம் ஒரு சங்கத்தமிழ் என (எனக்குத் தெரிந்து) மொத்தம் மூன்று வலைப்பூக்களை நடத்தி வருகிறார். அட, இடுகைகளை விடுங்கள்; தன் இடுகைகளுக்கு வரும் கருத்துரைகளுக்கு இவர் அளிக்கும் பதில்களிலேயே எத்தனையோ வரலாற்று, இலக்கியத் தகவல்கள் கொட்டிக் கிடக்கும்! இவருக்கு அளிக்கப்படுவதன் மூலம் இந்தப் ‘பன்முகப் பதிவர்’ விருது சிறப்புப் பெறுகிறது!

» வழிப்போக்கன்

வழிப்போக்கனது உலகம் எனும் வலைப்பூவை நடத்தி வரும் இவர் எழுதும் பதிவுகள் அருமையானவை! அரசியல், அறிவியல், வரலாறு, சமயம், இலக்கியம், திறனாய்வு, மருத்துவம், சிறுவர் இலக்கியம், நம்பிக்கைகள் (beliefs) என உலக விதயங்கள் பலவற்றைப் பற்றியும் எழுதி வரும் இவர், இத்தனை விதயங்களைப் பற்றி அதுவும் இவ்வளவு ஆழமாக ஒருவர் எழுத முடியுமா என வியக்க வைப்பவர்! வலைப்பூவில் தன்னைப் பற்றிய இணைப்பைக் கூடத் தராத எளிமையின் இருப்பிடம்! அதனால்தான் அவர் படமோ, அவருடைய தற்குறிப்புப் (profile) படமோ கூடக் கிடைக்கவில்லை. இப்பேர்ப்பட்டவருக்கு இந்த விருதைப் பகிர்வது எனக்குத்தான் பெருமை!

» காவிரிமைந்தன்


KaviriMaindhan

விமரிசனம் எனும் கலக்கலான வலைப்பூ ஒன்றை நடத்தி வரும் அருமையான பதிவர்! இவர்தம் ஒவ்வொரு பதிவிலும் சமூக அக்கறையும், தமிழ்ப் பற்றும், அறச் சீற்றமும் தெறிக்கும்! என் உள்ளத்துக்கு மிகவும் நெருக்கமான பதிவர். மேலோட்டமாகப் பார்த்தால், இவர் எழுதும் எல்லாப் பதிவுகளுமே விமர்சனம் எனும் ஒற்றைத் துறைக்குள் அடங்கி விடுவது போல் தோன்றினாலும் அரசியல், ஆன்மிகம், ஊடகம், திரைத்துறை என எல்லாத் துறைகள் பற்றியும் இப்படித் தோலுரிக்க வேண்டுமானால் எவ்வளவு பன்முகத்திறன் இவருக்கு இருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் உணரலாம்! தவிர, இந்த ஒவ்வொரு துறை பற்றிய பதிவுகளிலும் தற்பொழுதைய நிலைமையைப் பற்றி மட்டுமில்லாமல் கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றியும் இவர் பிட்டுப் பிட்டு வைப்பது இவருடைய வரலாற்றுத் திறனுக்குச் சான்று. இப்பேர்ப்பட்ட பன்முகத் திறமையாளருடன் இந்த விருதைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்!

» போகன்

Bogan

பேசாப் பொருள்கள் பற்றித் துணிந்து எழுதும் அரிய பதிவர்! பாலியல் பற்றித்தான் பெரும்பாலும் எழுதுவார் என்றாலும் இவர் எழுதுபவை கண்டிப்பாக அருவெறுப்புப் (porno) பதிவுகளல்லவே அல்ல! மாந்த உள்ளத்தின் திரிபு (வக்கிர) நிலையைப் படம் பிடிக்கும் இவர் எழுத்துக்கள் மிகவும் ஆழமானவை, சிந்தனைக்குரியவை! பாலுணர்வில் தொடங்கி இறையியலில் முடிபவை இவர் எழுத்துக்கள்!!! ஆம்! இவர் சிறந்த இறையியல் எழுத்தாளரும் கூட! எப்பேர்ப்பட்ட கொடுமையாளனுக்குள்ளிருந்தும் அவனுடைய மாந்தநேயத்தை வெளிக்கொண்டு வந்துவிடக்கூடிய ஆற்றல்மிக்க எழுத்தாளர்! வரலாறு, இறையியல், பாலியல் ஆகியவை பற்றிக் கவிதை, கதை, கட்டுரை மூன்றும் இயற்றக்கூடிய இந்தப் பன்முகத் திறனாளர் எழுத்துப் பிழை, அரிவை அரன், மென்பொருள், Maya Times என (எனக்குத் தெரிந்து) மொத்தம் நான்கு வலைப்பூக்களை நடத்தி வருகிறார். இவர் எழுத்துக்களைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளவே கொஞ்சம் திறமை வேண்டும் என்பதால் இவருடன் இந்த விருதைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் பெருமை!

» விஜய் ஆம்ஸ்ட்ராங்

Vijay Armstrong

ஒளியுலகம் என்னும் அசத்தலான வலைப்பூ ஒன்றை நடத்தி வரும் திரைப்பட ஒளிப்பதிவாளர். எல்லாரும் மொழி, இனம், அரசியல், தொழில்நுட்பம் என வழமையான பதிவுகளையே எழுதி வரும் நிலையில் ஓவியம், புகைப்படக்கலை என இதுவரை தமிழ்ப் பதிவுலகில் யாருமே தொடாத விதயங்களைப் பற்றி எழுதி வருவது இவருடைய தனிச் சிறப்பு! நுட்பமும், அழகியலும் ததும்பும் இந்தப் பதிவுகள் தவிர, தான் படித்த நூல்கள், பார்த்த திரைப்படங்கள், சுவைத்த சித்திரக்கதைகள், திரையுலகம் ஆகியவை பற்றியும் அருமையான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வரும் இந்தப் பன்முகப் படைப்பாளியுடன் இந்த விருதினைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்!


விருது பெற்றவர் தன்னைப் பற்றி ௭ (7) தகவல்களைப் பதிய வேண்டும்! (நெறி: ௪)

பெயர்:
இ.பு.ஞானப்பிரகாசன்.

அகவை:
முப்பது.

தொழில்:
பிழை திருத்தம்.

ஆர்வம்:
படித்தல், எழுதுதல், திரைப்படம் – தொலைக்காட்சி பார்த்தல், வலைப்பூ வடிவமைத்தல்.

பெருமை:
நடுநிலைமை, நேர்மை, சிந்தனைத் திறன்.

அருஞ்செயல் (சாதனை):
மிக நன்றாகப் பிழை திருத்துவதாகத் துறை சார்ந்த தகைமையாளர்களிடமிருந்து பெற்ற பாராட்டுக்கள், படைத்த சில பதிவுகளும் மக்களிடம் அவை ஏற்படுத்திய தாக்கங்களும், உறவிலும் நட்பிலும் அன்பும் அக்கறையும் நிறைந்த மனிதர்களைப் பெற்றிருப்பதும், அவர்களின் உறவை நீண்ட காலமாக இன்னும் தக்க வைத்திருப்பதும்.

குறிக்கோள்:
தனித் தமிழீழமும், தனித் தமிழ்நாடும் மலரத் தீட்டியிருக்கும் அதிரடித் திட்டங்களைப் பதிவிடுதல், திரைப்படப் பாடலாசிரியனாதல்.

இந்த விருது பற்றிச் சில வார்த்தைகள்

பதிவர்கள் எவ்வளவுதான் ஆவலுடனும் பெருமையுடனும் இந்த விருதைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டாலும், இதற்கு எதிரான கருத்துக்களும் பதிவர்களிடையில் இல்லாமல் இல்லை.

விருது என்பது நடுநிலைப் பண்பும், திறனாய்வுத் திறமும், துறைசார் மேதைமையும் உடைய ஒருவரோ சிலரோ, விருதளிக்கப்படும் துறையின் பங்களிப்புகள் அனைத்தையும் முழுமையாக அலசி, அதிலிருந்து ஒருவரையோ சிலரையோ தேர்ந்தெடுத்து வழங்க வேண்டியது. மாறாக, யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் காக்காய்க் கடி கடிப்பது போல் இப்படிச் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது விருது என்கிற சொல்லின் பொருளையே மதிப்பிழக்கச் செய்கிறது என்பதுதான் என் கருத்தும்! ஆனால்...

அதே நேரம், இந்த விருது பதிவுலகின் நட்பு வட்டத்தை விரிவாக்குகிறது. நல்ல பதிவர்கள் பலரை வெளிக்கொண்டு வர இது கண்டிப்பாக உதவுகிறது. பின் இணைப்புகள் (backlinks) உருவாக்குதல் போன்ற தொழில்நுட்பங்கள் அறியாததாலேயே பல நல்ல பதிவுகளை எழுதியும் வெளியில் தெரியாமல் போகக்கூடிய பதிவர்களின் நிலைமையை மாற்றி, அவர்களுக்கும் பின் இணைப்புகள் கிடைக்க இது வழி வகுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த விருது பதிவுலகில் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. ஆம்! இணையத்தின் குழு உளப்பான்மையை உடைத்து, ஏதோ ஒரு வகையில் பதிவர்கள் அனைவரும் ஓரணியில் திரள இது வகை செய்கிறது! எனவே, குறைத்து மதிப்பிடாமல், இந்த விருதைப் பெருமையுடனே பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்!

இந்த விருதுப் பம்பரத்துக்குச் சாட்டை சுழற்றியவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளக் கொஞ்சம் முயன்றேன்; முடியவில்லை. ஆனால், ஆங்கிலப் பதிவர்கள்தாம் இதைத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும், ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் எழுதும் பதிவர் Amaruvi இதைத் தமிழ்ப் பதிவர்களுக்குப் பகிரவே, அவர்கள் மூலம் இது தமிழுக்கு வந்திருக்கிறது என்பதும் மட்டும் தெரிகிறது. தமிழ்ப் பதிவர்களுக்கான இந்த விருது ஏன் ஆங்கிலத்தில் இருக்கிறது என்பதற்கான காரணம் அப்பொழுதுதான் புரிந்தது. இந்த விருது மட்டுமில்லை, தமிழ்மண விருதுகளைத் தவிர இதுவரை நான் இணையத்தில் பார்த்த எல்லா விருதுகளும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. எனவே, அடுத்த முறையாவது இப்படி ஒரு விருதை முழுக்க முழுக்கத் தமிழில் வடிவமைத்து யாராவது தமிழ்ப் பதிவுலகில் சுழல விடுமாறு தமிழ்ப் பதிவுலக அன்பர்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் தாய்த் தமிழின் பெயரால்!

விருதளித்த நண்பருக்கும், விருதை ஏற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கும் நன்றிகள் பற்பல!

❀ ❀ ❀ ❀ ❀

விருதுப் படம்: நன்றி கில்லர்ஜி வலைப்பூ.
பதிவர்களின் தற்குறிப்புப் படங்கள்: நன்றி அவரவர் வலைப்பூக்கள், சமூகவலைத்தளப் பக்கங்கள்.

கீழ்க்காணும் சமூக வலைத்தள, திரட்டிப் பொத்தான்கள் மூலம் உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூவின் வெற்றி பற்றி உங்கள் விருப்பத்துக்குரியவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

19 கருத்துகள்:

  1. விருது பெற்றமைக்கு எமது வாழ்த்துக்கள் நண்பரே...
    தங்களின் குறிக்கோள் நிறைவேறவும் எமது வாழ்த்துக்கள் நண்பா....
    தங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    கில்லர்ஜி
    அபுதாபி.

    பதிலளிநீக்கு
  2. மொழி பற்று மற்றும் தமிழகப் பற்று மட்டும்தானா தங்கள் குறி நண்பரே! என்னைப் போன்ற ஏழைகள்(சொந்த வலைப்பக்கம் மற்றும் நல்ல நிலையில் இல்லாத கோடிகளில் அடங்கும் நானும் நன்றியுள்ள நாயும் ஒன்று தான் இவ்வுலகினில்) என் இந்திய தேசம் முழுதும் வாழ்வை ஓட்டிக் கொண்டு இருப்பது இன்றில்லா விடினும் நாளையாவது மாறுமன்றோ... தமிழுக்கு நானடிமை ஆனால் பசிக்கு என் தேசம் ________ வருந்துகிறேன் மனிதனாக பிறந்து ______________________ மனக்குமுறலுக்கு மன்னிக்கவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! கருத்துரைத்தமைக்கு முதலில் என் நன்றி! தமிழ்நாட்டுப் பற்று என்கிற சொல்லிலேயே என் தமிழ் மக்கள் மீதான என் அக்கறையும் அடங்கி விடுவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால், இப்பொழுது நீங்கள் இப்படியொரு கருத்திட்டிருப்பதிலிருந்து படிப்பவர்களுக்கு அஃது அந்தப் பொருளில் தென்படுவதில்லை என்பது புரிகிறது.

      மக்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பதும், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாகப் பதிவிடுவதுமே ஏழ்மை முதற்கொண்டு எல்லாச் சிக்கல்களும் தீர வழி வகுக்கும் என்பது என் நம்பிக்கை. அப்படியின்றி, பதிவர் எனும் முறையில் நான் ஏழ்மையை ஒழிக்க வேறு எந்த வகையில் உதவ முடியும் எனத் தெரியவில்லையே! என்ன செய்யலாம் என நீங்கள் எடுத்துரைத்தால், என்னால் அஃது இயலுமானால் கண்டிப்பாக நான் அதைச் செய்ய ஆயத்தமாகவே உள்ளேன்.

      மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் வேண்டா! உங்களுக்கு இருக்கும் அதே உள்ளக் குமுறல்கள் எனக்கும் உள்ளன. வேதனைகளை எண்ணி வருந்தாமல், வீறு கொண்டு எழுவதற்கான உந்து ஆற்றலாக அவற்றை மாற்றிக் கொள்வோம்! இணைந்து செயலாற்றுவோம்! சமூகத்தை மாற்றுவோம்! கை கொடுங்கள்!

      நீக்கு
  3. you know what is the meaning of Versatile u are not deserved. Are you belive you will get independent Tamil nadu are you guys really will thick before what you are try to achieve. No one now care about Tamil Ellam That is no where possible in this world same as independent sate os Tamil nadu. Don't spoil the Tamilnadu

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. If really you know the meaning of 'Versatile', you don't feedback like this. I've written under totally 12 various subjects in this blog like politics, children literature, blogger tips, feminism, sex, religion, etc. I think this is the versatility. And of course, I believe we can get independent Tamilnadu and I've perfect plans for that. Tamilnadu's history is more than 3000 years old. In this long period Tamilnadu is being as a state for just these 67 years only. Before 1000s of years it was an independent country only. So, if anybody says Tamilnadu's independent is not possible, it means he don't know the history! After all these, everybody know that how much I care about Tamil Eelam and the people. Even in the particular line, I mentioned about independent Tamil Eelam also and not only independent Tamilnadu. So, you don't try to teach me about how to be care for Tamil Eelam. I know how to take care about both the countries and the people. You don't worry, ok? First of all, try to give your feedbacks with your name, just if you have guts!

      நீக்கு
  4. அய்யா,
    வணக்கம்.
    மற்ற விருது பெற்றவர்களிடத்துக் காணாத வித்தியாசமான சிந்தனை.
    “ சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது விருது என்கிற சொல்லின் பொருளையே மதிப்பிழக்கச் செய்கிறது என்பதுதான் என் கருத்தும்!“
    இது போன்ற விருதொன்றை எனக்குப் பரிந்துரைத்த பலர்க்கும் என்மீது அன்புண்டு.
    ஆனால் அத்தகைய ஒரு விருதைப் பெறுவதற்குத் தகுதி உண்டா என்பது எனக்குத் தானே தெரியும்.
    தங்களின் நட்பை ஏற்று பகிர்ந்த விதமும் ,
    சுழற்சி முறை அபத்தத்தைச்
    சுட்டிக்காட்டிய விதமும் படித்து ரசித்தேன்.
    நன்றி



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! உங்கள் தமிழ் மேதைமையை வெகுவாக அறிவேன். நீங்கள் என் வலைப்பூவுக்கு வருகை புரிந்திருப்பதும், என் பதிவை ரசித்ததாகக் குறிப்பிட்ட ஒரு வரியை எடுத்துக்காட்டிப் பாராட்டியிருப்பதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன! தொடர்ந்து நீங்கள் என் பதிவுகளைப் படிக்க வேண்டும்! உங்கள் செம்மையான கருத்துக்களைக் கூறி வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

      நீக்கு
  5. விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களது பதிவுகளை படித்திருக்கிறேன். நேர்த்தியான வடிவம் மற்றும் எழுத்துக்கு சொந்தகாரர். தளங்களை தேர்ந்து விருதளித்திருக்கிறீர்கள் !! உங்களுக்கு இது சரியான விருது தான். வாழ்த்துகள்! (பணி :பிழைத்திருத்தம் ! be careful நான் என்னைய சொல்லிக்கிட்டேன்) உங்கள் இரண்டு கனவும் நிறைவேற வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜய் ஆம்ஸ்ட்ராங் எனக்கு அறிமுகமானதே உங்களால்தான். நீங்கள் வலைச்சரத்தில் அவரைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்துவிட்டுத்தான் நான் அவர் தளத்துக்குச் சென்றேன். நீங்கள் குறிப்பிட்டிருந்தபடியே என்னவோர் அசத்தலான வடிவமைப்பு! எவ்வளவு நுணுக்கமான எழுத்து!

      என் விருதுத் தேர்வு பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி! நான் இந்த விருதுக்குப் பொருத்தமானவன் என்கிற உங்கள் கருத்துக்கும், என் கனவு நிறைவேறத் தெரிவித்த வாழ்த்துக்கும் நன்றி! (நான்கே வரி எழுதினால் கூட அதனுள் ஒரு நகைச்சுவையை இழையோட விட்டுச் சுவைக்க வைத்து விடுகிறீர்கள்! அடைப்புக்குறிக்குள் இருப்பதைச் சொன்னேன்!). நன்றி!

      நீக்கு
  6. (நான்கே வரி எழுதினால் கூட அதனுள் ஒரு நகைச்சுவையை இழையோட விட்டுச் சுவைக்க வைத்து விடுகிறீர்கள்! அடைப்புக்குறிக்குள் இருப்பதைச் சொன்னேன்!).*****ஸ் ஸ்sssssssssssssssss கிள்ளிப்பார்தேன் , வலிக்குது:))) மைதிலி காலை தரையில ஊன்று ம்மா!!/// ரொம்ப நன்றி சகோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி! இபுஞா எங்களுக்கு எப்படி அறிமுகமானார் தெரியுமா? எங்கள் பதிவு ஒன்றில் எழுத்துப் பிழை சுட்டியதால்!!!!!!! மனிதரை நாங்கள் ஐயா என்றோம்! அவரோ தன்னைச் சிறியவன் என்றார். அறிவுக்கு வயது உண்டோ? அறிவு பெரியதானால் நம்மை விட பெரியவர் என்றுதானே அர்த்தம்!!!! (ஆனால் இப்போது கீழே எங்கள் பின்னூட்டத்தில் அடைப்பிற்குள் இருப்பதை பாருங்கள்!)

      இப்போது இடுகை இடும் போது இபுஞா வை நினைவு கொண்டு கூடியவரை எழுத்துப் பிழை இல்லாமல் பதிவிட விழைகின்றோம்....என்றாலும் அரைக் கிழங்களாகிய எங்களுக்கு பல சமயங்களில் இந்தக் கணினியின் தட்டச்சு பிசகிவிடுகின்றது....அதுவும் அந்த கீஸ் ஒழுங்காக வேலை செய்யாமல் போனால்.... (இப்ப பாருங்க இபுஞா வந்து கீஸ் தமிழ் வார்த்தை சொல்லுவார் அப்படியாவது கற்றுக் கொள்வோமே! ஹாஹஹஹ)

      அதனால் இவருக்குப் பின்னூட்டம் இடும்போது நாங்கள் மிகவும் கருத்துடன் கூர்ந்து நோக்கித்தான் இடுவோம்! உங்க மாணவர்கள் எப்படி சகோதரி? அப்படின்னு வைத்துக் கொள்ளுங்கள்!!!

      நீக்கு
    2. உண்மைதான் துளசி அய்யா! அய்யாவின் அறிமுகம் குறித்துத் தாங்கள் கூறும் செய்தி எனக்குப் புதியது. ஆனாலும் அய்யாவின் இத்தன்மையை அவரின் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் கண்டிருக்கிறேன். நானும் பெரும்பாலும் அய்யாவின் வயதினனாகத்தான் இருப்பேன். எனினும் இவர் பெயர் பள்ளிப் பருவத்தில்எனக்குத் தமிழைத் தமிழாய்க் கற்றுத்தந்த தமிழாசிரியரின் பெயர். இப்பெயரைக் காணும் போதெல்லாம் என் மனதில் ஏதேதோ நினைவுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
      தங்களைப் போன்றே நானும் தமிழில் பிழை மலிய எழுதுகின்றவன் தான்.
      அய்யா அவர்களை எனது பதிவுகளிலும் பிழைகளைச் சுட்டிக்காட்ட அன்புடன் வேண்டுகிறேன்.
      நானோ என் தவறுகளிலிருந்தே பெரிதும் பாடம் கற்றவன். கற்கிறவன்.
      நமது துறை தமிழ்த்துறையாக இல்லாமல் இருப்பதாலும் அய்யாவைப் போன்றோர் நாம் செய்யும் தவறுகளைப் பொறுக்கும் மனம் கொண்டு திருத்துவார்கள் என்று நம்புவோம்.
      ( அய்யா! ஓய்வில் தங்களின் முந்தைய பதிவுகளைப் படித்து வருகிறேன்.
      இரு நாட்களாக தங்கள் வலைத்தளத்தினைப் பார்க்க முடியவில்லையே ?
      ஏதேனும் சிக்கலா? )
      நன்றி.

      நீக்கு
    3. உண்மையிலேயே எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது. நீங்களெல்லாரும் இந்தளவுக்குப் புகழ, மதிக்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. என் தமிழிலும் பிழைகள் இருக்கும் என்பதே என் கருத்து. அவை எனக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான்.

      //இப்பெயரைக் காணும் போதெல்லாம் என் மனதில் ஏதேதோ நினைவுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை// - அப்படியோர் உணர்வு உங்களுக்குத் தோன்ற என் பெயர் ஒரு காரணமாக இருப்பதற்காக மகிழ்கிறேன்!

      //அய்யா அவர்களை எனது பதிவுகளிலும் பிழைகளைச் சுட்டிக்காட்ட அன்புடன் வேண்டுகிறேன்// - தெரிந்தால் கண்டிப்பாகச் சொல்கிறேன் ஐயா!

      //நானோ என் தவறுகளிலிருந்தே பெரிதும் பாடம் கற்றவன். கற்கிறவன்// - சிறியேனும் அப்படியே!

      //அய்யாவைப் போன்றோர் நாம் செய்யும் தவறுகளைப் பொறுக்கும் மனம் கொண்டு திருத்துவார்கள் என்று நம்புவோம்// - ஐயையோ! கண்டிப்பாக இவையெல்லாம் மிக மிகப் பெரிய வார்த்தைகள் ஐயா! ஆனானப்பட்ட தமிழ்த் தாத்தாவே களவனா, கள்வனா என்று தெரியாமல் விட்டதை இந்தக் கணினிக்காலத்தில் கண்டுபிடித்துக் கூறிய தங்கள் முன் நான் சிறு துரும்பு! தங்களைப் போன்றவர்களைத் திருத்தச் சிறியேனுக்குத் தகுதி போதாது. வெறுமே சுட்டிக் காட்டுவேன், தெரிந்தால். மிக்க நன்றி!

      //அய்யா! ஓய்வில் தங்களின் முந்தைய பதிவுகளைப் படித்து வருகிறேன்// - மிக்க மகிழ்ச்சி ஐயா!

      //இரு நாட்களாக தங்கள் வலைத்தளத்தினைப் பார்க்க முடியவில்லையே? ஏதேனும் சிக்கலா?// - ஆம் ஐயா! இப்பொழுது சரியாகி விட்டது. ஆனால், இந்தச் சிக்கல் இரண்டு நாட்களாக இருப்பது தாங்கள் இப்பொழுது கூறித்தான் தெரியும். நன்றி ஐயா!

      நீக்கு
  7. நல்ல கருத்து சகோதரரே! (குறித்துக் கொள்ளுங்கள்! ஐயா என்பதிலிருந்து சகோதரரே! அப்படிச் சொல்லலாம் இல்லையா? இல்லை நண்பரே?!) தங்களுக்கு விருது தகுந்ததே! தாங்கள் பகிர்ந்துக் கொண்டிருப்பவர்களில் கேஆரெஸ் மட்டும் தெரியும். மற்றவர்களையும் வாசிக்க வேண்டும். புதிய அறிமுகங்கள் கிடைத்தன. கடந்த வாரம் முழுவதும் வலைச்சர பணி இருந்ததால் வர இயலாமல் போனது! தங்களையும் அறிமுகப் படுத்தினோம்...விழிப்புணர்வு பகுதியில், கடந்த செவ்வாய் அன்று! தங்களையும் காணவில்லையே!

    தொடர்வோம்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஐயா என்பதிலிருந்து சகோதரரே! அப்படிச் சொல்லலாம் இல்லையா? இல்லை நண்பரே?!// - தாராளமாக ஐயா! தங்கள் விருப்பம்!

      //புதிய அறிமுகங்கள் கிடைத்தன// - மகிழ்ச்சி!

      //கடந்த வாரம் முழுவதும் வலைச்சர பணி இருந்ததால் வர இயலாமல் போனது!// - ஓ! இந்த வாரம் நீங்களா? அப்படியானால், கண்டிப்பாக வருகிறேன்.

      //தங்களையும் அறிமுகப் படுத்தினோம்...விழிப்புணர்வு பகுதியில், கடந்த செவ்வாய் அன்று!// - அப்படியா?! மிக மிக மகிழ்ச்சி ஐயா! மிகவும் நன்றி!

      //தங்களையும் காணவில்லையே!// - தடையற்ற மின்வழங்கியில் (UPS) கோளாறு காரணமாகக் கணினியை இயக்க முடியவில்லை ஐயா! இப்பொழுது கூட நடுக்கத்துடன்தான் இயக்கிக் கொண்டிருக்கிறேன். எந்த நொடி கணினி அணைந்துவிடுமோ தெரியாது. சரியானவுடன் வருகிறேன். நன்றி!

      நீக்கு
  8. வாழ்த்துக்கள் தோழர்...
    எனக்கும் தோழர். ஞாபி, எழுத்துபிழை சுட்டியதிலிருந்துதான் பழக்கம்... அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
    உங்களின் குறிக்கோள்கள் மிகமிக சிறப்பு... கிட்டத்தட்ட, அதே குறிக்கோள்கள்தான் எனக்கும் என்பதை சொல்லிக்கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழா!

      குறிக்கோள்களில் நீங்கள், நாம் வெற்றி பெற வேண்டும்! பெற்றே ஆக வேண்டும்! வாழ்த்துக்கள்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்