ஞாயிறு, ஜனவரி 11, 2026
எப்படிப் பெரும்பான்மை மொழியானது இந்தி? - ஒரு வெட்கங்கெட்ட வரலாறு! | காணொளி
வெள்ளி, ஜனவரி 02, 2026
திருத்தணி சிராஜ் தாக்குதல்! - திரைப்படங்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா?
திருத்தணியில் வடமாநிலத் தொழிலாளர் சிராஜ் தாக்கப்பட்ட வேதனையில் வெளியிடும் காணொளி! 😟😢
திரைப்படங்களைக் குற்றம் சாட்டுவது என் நோக்கமில்லை. உண்மையில் திரைப்படங்கள் மீதான நம்பிக்கைதான் இப்படி ஒரு காணொளியை வெளியிட என்னைத் தூண்டியது.
நான் சொல்லியிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்!
வெள்ளி, டிசம்பர் 19, 2025
மம்மது – நூல் மதிப்புரை
“உன்னை நீ மேம்படுத்திக் கொள்வதே ஆகச் சிறந்த பழிவாங்கும் முறை” – என்பது இன்றைய புத்துலக வாழ்க்கைமுறையில் பெரிதும் போற்றப்படும் பொன்மொழிகளுள் ஒன்று. இதையே ஒரு கதையாகச் சொன்னால்...? அதுதான் மன்சூரா பீவி அம்மையார் எழுதியுள்ள ‘மம்மது’ புதினம்.
மன்சூரா பீவி அவர்கள் இந்திய அஞ்சல் தொலைவரித் (Postal and Telegraph) துறையில் பணியாற்றியவர். இவர் கணவர் துவிட்டர் புகழ் தமிழறிஞர் நெல்லை க.சித்திக் அவர்கள். அவர் மகுடைத் (Corona) தொற்றால் காலமான பின்னர் அன்னார் பல ஆண்டுகள் உழைத்துத் தொகுத்திருந்த ‘அயற்சொல் அகரமுதலி’ எனும் நூலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தார் பீவி அவர்கள். அப்பொழுது அவரைக் கணவரின் கனவை நிறைவேற்றி வைத்த அன்பான மனைவி என்று மட்டுமே நினைத்தேன். ஆனால் அடுத்து அவர் எழுதிய சிறுகதைகளைப் படித்த பிறகுதான் அவர் எப்பேர்ப்பட்ட எழுத்துத்திறம் படைத்தவர் என்பதை அறிய முடிந்தது.
தற்பொழுது பணியோய்வுக்காலத்தில் இருக்கும் பீவி அவர்கள் அடுத்தடுத்துத் தன் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அவற்றுள் ஒன்றுதான் மம்மது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களம். வலியகுளத்துவிளை எனும் சிற்றூரில் வாழும் இளைஞன் மம்மதும் காசிமும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இல்லை இல்லை, நண்பர்கள் ஆவதற்கு முயல்பவர்கள். ஆனால் அவர்கள் பழகக்கூடாது என்று தொடக்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புகிறது இருவர் வீட்டிலிருந்தும்.
ஓரிரு கசப்பான நிகழ்வுகளுக்குப் பின் ஒரேயடியாகப் பிரியும் இந்த நண்பர்கள், தங்கள் 18 வயதில் மீண்டும் சந்திக்கும்பொழுது காசிம் தங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையிலான மருமத்தைத் தெரிவிக்கிறான். நண்பன் மகிழ்வான் என்றெண்ணி அவன் சொல்லும் அந்தச் செய்தி மம்மதின் மொத்த வாழ்வையும் ஒரே நிமையத்தில் புரட்டிப் போட்டு விடுகிறது.
❔ காசிம் சொன்ன அந்த மருமம் என்ன?
❔ மம்மதின் குடும்பத்துக்கும் காசிம் குடும்பத்துக்கும் அப்படி என்ன பகை
❔ மொத்தமாகத் தன்னை நிலைகுலைய வைத்த அந்த உண்மையை மம்மது எப்படி எதிர்கொண்டான்?
சனி, அக்டோபர் 11, 2025
வானத்தின் சொத்து | சிறுகதை
உறவு தந்த கண்ணீரோடு காலம் வகுத்த பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன். இருங்கள்! சாலையோரத்தில் ஏதோ மின்னுகிறதே? நெருங்கி, குனிந்து கையில் எடுத்துப் பார்த்தால்... ஓ! இது... இது... ஒரு விண்மீன்!!!
எப்படிக் கீழே விழுந்தது?! அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். முட்டாள் நான்! உதிர்ந்த தடம் தெரியுமா என்ன?
கையிலிருந்த விண்மீனை மறுபடியும் பார்த்தேன். ஆறு கரங்களோடு ஒளிப்பிழம்பாய்த் தகதகத்தது! அதன் மேலே ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்து ஊதினேன். பளிச்சென இரு விழிகள் திறந்தன. மிரண்டு போனேன்!
எப்படிக் கீழே விழுந்தாய்? அதனிடமே கேட்டேன். சோகமாக என்னையே பார்த்தது. வாய் ஏதும் இல்லை. எப்படி மறுமொழி சொல்ல முடியும்!
அக்கம் பக்கம் பார்த்தேன். யாருமில்லை. சட்டைப்பையில் போட்டுக் கொண்டு, திரும்பி வீடு நோக்கி நடந்தேன்; ஒரு முடிவோடு.
நுழைவாயில் இரும்புக்கதவை ஓசைப்படாமல் திறந்தேன். வீட்டுக்குள்ளே போன பின் தலையை மட்டும் வெளியே நீட்டிச் சுற்றுமுற்றும் பார்த்தேன். ஈ காக்கை இல்லை. கதவைச் சாத்தி இரண்டு தாழ்ப்பாள்களையும் போட்டேன்.
வலப்பக்கம் பார்த்தேன். மகள் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவர்க்கடிகாரத்தில் மணி ஒன்று. இன்னும் தூங்காமல் என்ன செய்கிறாள்? கேட்க வந்ததைக் கட்டுப்படுத்திக் கொண்டு என் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டேன்.
சட்டைப்பையிலிருந்து அதை வெளியே எடுத்தேன். அறை முழுவதும் விளக்கே இல்லாமல் ஒளிர்ந்தது. சட்டைப்பையில் இருந்தபொழுது வெளிச்சம் தெரியவில்லையே? நாம் ஒளித்து வைப்பதை உணர்ந்து தன்னைத் தானே அணைத்துக் கொள்கிறதோ!
எங்கே வைப்பது இதை? சுவரில் மாட்டலாம் என்றால் துளையிட வேண்டும். மேசையில் வைக்கலாம் என்றால்... சேச்சே! சரி வராது. சிந்தித்தபடி நாற்காலியில் அமர்ந்தேன். கூரைச் சுவர் முழுக்கப் பரவிக் கிடந்த செயற்கை வானம் தென்பட்டது. இணையத்தில் வாங்கிய மாபெரும் சுவரொட்டி (wallpaper).
நாற்காலியை அறையின் நடுப்பகுதிக்கு எடுத்துப் போட்டு, முட்டியில் கையூன்றியபடி கடினப்பட்டு மேலேறி, நுனி விரல்களில் நின்றபடி படாதபாடுபட்டு உடலைச் சமன் செய்து, எப்படியோ எட்டி உயர்ந்து ஒட்டி விட்டேன் அதைக் கூரையில். இரவில் மட்டும் மினுங்கும் செயற்கை விண்மீன்களுக்கு இடையே இப்பொழுது இதுவும். ஆனால் பெரிதாக, மிகப் பெரிதாகத் தனித்துத் தெரிந்தது. யாராவது கேட்டால்? அ... சொல்லிக் கொள்ளலாம்.
போர்த்திக் கொண்டு படுத்தேன். அறை முழுக்க ஒளியை உமிழ்ந்தபடி அது என்னையே பார்த்தது. நான் அதையே பார்த்திருந்தேன். எப்பொழுது உறங்கிப் போனேன்? தெரியவில்லை.
திடீரெனத் தூக்கம் கலைந்து விழித்துப் பார்த்தபொழுது கூரைச் சுவரில் அது இல்லை. பதறி எழுந்தேன். நேர் கீழே இருந்த நாற்காலியின் சாய்மான விளிம்பில் நின்றபடி சாளரம் வழியே கொட்டக் கொட்டப் பார்த்துக் கொண்டிருந்தது.
எங்கே பார்க்கிறது? நானும் பார்த்தேன். நீல வானம் பரந்து விரிந்து தெரிந்தது. கடிகாரம் பார்த்தேன். நாலரை. இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலரத் தொடங்கி விடும். விண்மீனைப் பார்த்தேன். அதன் கண்களில் சோகம் கூடியிருந்தது. ஒளி மிகவும் குறைந்திருந்தது. சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு எழுந்து அதனை நெருங்கினேன்.
மொட்டைமாடி வந்து விட்டேன். கையைத் திறந்தேன். விண்மீனும் கண்ணைத் திறந்தது. வானத்தைப் பார்த்ததும் இன்னும் விழிகளை அகலத் திறந்தது. அதன் ஒளி கூடியது. என் உதடுகளில் கீற்றாக ஒரு புன்னகை.
ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து விண்மீனின் மையப்பகுதியைப் பிடித்துக் கொண்டேன். மூச்சை இழுத்துப் பிடித்து முடிந்த அளவுக்குக் கையை வேகமாகக் கரகரவெனச் சுழற்றி வானை நோக்கி வீசி எறிந்தேன்.
விண்மீன் வானோக்கி எகிறியது!! கீழே விழுந்து விடுமோ? அஞ்சியபடி பார்த்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை. அது போனது... போனது... போய்க் கொண்டே இருந்தது. ஒரு புள்ளியில் என் கண்ணை விட்டு மறைந்தது.
சிறிது நேரம் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மாடியிலிருந்து இறங்கினேன். வீட்டுக்குள் போனதும் இப்பொழுதும் வலப்பக்கம் பார்த்தேன். அவள் அறையில் விளக்கு எரியவில்லை.
மெல்லமாக மிக மிக மெல்லமாகக் கதவைத் திறந்து பார்த்தேன். அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். கதவை விரியத் திறந்து அருகில் நெருங்கி குனிந்து பார்த்தேன். வாயருகே என்னவோ போலிருந்தது. தொட்டுப் பார்த்தால் எச்சில். தற்செயலாய் என் இடக்கை என் மார்புமுடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. சை! குழந்தையில் என் மார் மீது படுத்துத் தூங்கியபொழுது எச்சில் விட்டால் அவள் வாயைத் துடைத்து விட்ட கையோடு என் மார்பு நனைந்திருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொள்வேனே? அதே நினைவு.
அவள் மேசை நோக்கி நடந்தேன். என் சட்டைப்பைக்குள் கைவிட்டேன். ஒளித்து வைத்திருந்த அவளுடைய கடவுச்சீட்டை (Passport) மேசை மீது வைத்தேன். திரும்பி நடந்து அவள் அருகில் வந்து பார்த்தேன். குண்டுக்கட்டாக உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்திருந்தாள். பக்கத்திலிருந்த தொலை இயக்கியை (Remote control) எடுத்து அறைப்பதனியின் (Air conditioner) குளிர்ச்சியை மட்டுப்படுத்தினேன். விறுவிறுவெனத் திரும்பி நடந்து என் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டேன்.
விரல்நுனியில் ஒட்டியிருந்தன விண்மீனின் துகள்களும் மகளின் எச்சில் மணமும். இவை போதும்!
- பன்னாட்டுப் பெண்குழந்தை நாள் சிறப்புச் சிறுகதை
படம்: செய்யறிவில் (AI) சித்தரிக்கப்பட்டது.
வெள்ளி, செப்டம்பர் 19, 2025
ஆசிரியர் சாந்தா அவர்களுக்குப் புகழஞ்சலி!
நேற்று காலை சாந்தா மிஸ் இறந்துவிட்டார்! 😢
யார் சாந்தா மிஸ் எனக் கேட்கிறீர்களா?
என் கோப்பையைக் காலி செய்த ஆசிரியர்!
மூன்றாம் வகுப்பு முடிக்கும் தறுவாயில் எனக்குக் காலில் வழக்கம் போல் எலும்புமுறிவு. அதன் பின் பள்ளிக்கு அனுப்ப அஞ்சிய அம்மா, நான்காம் வகுப்பு கற்பிப்பதற்காகப் பின் தெருவில் இருந்த ஆசிரியர் சாந்தா அவர்களை நாடினார். யாருக்கும் தனி வகுப்பு நடத்தாத அவர், அம்மாவின் வேண்டுகோளுக்காக எனக்கு மட்டும் நடத்த முன்வந்தார்.
முதல் நாள் வகுப்பில், சாந்தா மிஸ் என் திறனைச் சோதிக்க விரும்பிக் குட்டியாக ஒரு தேர்வு நடத்தினார். சிற்சில கேள்விகள்தாம். ஆனால் சரியாக விடையளிக்காத நான், அதெல்லாம் தெரியாவிட்டாலும் தமிழில் எனக்கு எல்லாம் தெரியும் என்று திமிராகப் பேசினேன்.
மாற்றுத்திறனாளி என்பதால் என்னைச் சிறுவயதிலிருந்தே எல்லாரும் கொஞ்சம் மிகையாகவே பாராட்டுவார்கள். “பிரகாசுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை”, “அவன் சொன்னால் சரியாக இருக்கும்” என்றெல்லாம் பாராட்டு மழையில் நனைந்து நனைந்து அந்த வயதிலேயே தலையில் முளைத்திருந்த கொம்பு அப்படிப் பேச வைத்தது.
உடனே சாந்தா மிஸ் என் குறிப்பேட்டை (Notebook) வாங்கினார்; ஐந்தாறு தமிழ்ச்சொற்களை எழுதிக் கொடுத்து “இதுக்கெல்லாம் விடை எழுதி வை. இதோ வரேன்” என்றுவிட்டு உள்ளே போனார். பார்த்தால், எல்லாம் அருஞ்சொற்பொருள் கேள்விகள். தமிழில் எல்லாம் தெரியும் என்று நினைத்தவனுக்கு அந்தச் சொற்கள் சில புதிதாக இருந்தன. இருந்தாலும் தெரிந்த வரையில் எல்லாவற்றுக்கும் விடை எழுதினேன். ‘மரை’ என்று அவர் கேட்டிருக்க, அது மான் என்பது கூடத் தெரியாமல் திருகாணி (screw) என்று நினைத்துக்கொண்டு விடை எழுதியதை இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
வந்து பார்த்தார். திருத்தித் திருப்பித் தந்தார். ஒன்றோ இரண்டோதான் சரியாக எழுதியிருந்தேன், மற்ற அனைத்தும் தவறு! எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தை அன்றோடு அழிந்தது.
ஒரு அடி இல்லாமல், ஒற்றைக் கடுஞ்சொல் சிந்தாமல், வெகு நயமான முறையில், நான் யார் என்பதை எனக்கே ஒரு கண்ணாடி போல எதிரொளித்துக் காட்டிய ஆசிரியர் சாந்தா அவர்களின் திறமை என்னை அண்ணாந்து பார்க்க வைத்தது.
கோப்பை காலியாக இருந்தால்தான் தேநீரை நிரப்ப முடியும் என்பார்கள். கல்வி கற்பதற்கான அடிப்படைத் தகுதியை எடுத்துரைக்கும் சென் (Zen) கதை அது. அப்படி, சேர்ந்த முதல் நாளே என் கோப்பையைக் காலி செய்துவிட்டு எனக்குப் பாடம் நடத்தத் தொடங்கியவர் சாந்தா மிஸ்.
அதுவரை படித்துக் கொண்டிருந்த நான் அன்றிலிருந்துதான் கற்கத் தொடங்கினேன்.
முதல் நாள்தான் என்றில்லை, ஒருநாளும் என்னிடம் அவர் ஒரு சுடுசொல் கூடப் பயன்படுத்தியதாக நினைவில்லை. எப்படிச் சொன்னால் எனக்குப் புரியும் என்பது அவருக்குத் தெரியும். அதற்கேற்பக் கற்பிப்பார். கண்டிப்பும் கிடையாது, ஒரேயடியாகக் கனிவாகப் பேசிக் கொஞ்சுகிற பழக்கமும் கிடையாது. இரண்டும் கலந்த ஒரு சமநிலையில் எப்பொழுதும் இருப்பார்.
எப்பொழுதும் பாடம்தான் என்றில்லை. சனிக்கிழமையானால் தொலைக்காட்சியில் இந்திப் படம் ஓடும். கொஞ்ச நேரம் படம் பார்க்கச் சொல்வார். மிகச் சிறிது நேரம் கதைப்புத்தகங்களும் படிக்கத் தருவார்.
சாந்தா மிஸ்ஸுக்கு இராமதுரை, சிறீராம் என இரண்டு பிள்ளைகள். இருவருமே என்னை விட மிகவும் மூத்தவர்கள். அங்குதான் எனக்குச் சிறார் இதழான ‘கோகுலம்’ அறிமுகமானது. பூந்தளிர், ராணி காமிக்சு எனப் பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதிய படைப்புகளை மட்டுமே படித்துக் கனவுலகிலேயே மிதந்து கொண்டிருந்த எனக்கு, சிறுவர்களாலும் எழுத முடியும் என்கிற எண்ணத்தை விதைத்தது அந்த இதழ்தான். அந்த வகையில் சாந்தா மிஸ் வீட்டில் அறிமுகமான கோகுலம்தான் என் வாழ்க்கையையே தீர்மானித்தது என்றால் அது துளியும் மிகையில்லை.
ஓரீர் ஆண்டுகள்தாம் அவரிடம் படிக்க வாய்த்தது. அதன் பின், ஏதோ காரணங்களால் மீண்டும் படிப்பு நின்று போனது.
அம்மாவின் இடைவிடாத முயற்சியால், சில ஆண்டுகள் கழித்து, தனித்தேர்வராக 8ஆம் வகுப்பு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் குறைந்தது 5ஆம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்பது நெறிமுறை. அப்பொழுது சாந்தா மிஸ்தான், “இந்த மாணவன் என்னிடம் 5ஆம் வகுப்பு வரை படித்தவன். இவனுக்கு 8ஆம் வகுப்புத் தேர்வு எழுதத் தகுதி உண்டு. அரசுப்பள்ளி ஆசிரியர் எனும் முறையில் நான் சான்றளிக்கிறேன்” என்று கைப்பட எழுதித் தந்தார். அதை இன்னும் என் தகுதிச்சான்றிதழ்களுள் ஒன்றாகப் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்.
பின்னர் ஓரிரு முறை வீட்டுக்கு வருகை தந்தார். அதன் பின், பல ஆண்டுகள் தொடர்பு விட்டுப் போனாலும் தன் மகன் திருமணத்துக்காக மறவாமல் வந்து அவர் அழைப்பிதழ் வைத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.
அதன் பின் நான் அவரைப் பார்க்கவில்லை. இனி பார்க்கவும் இயலாது! ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் என் வாழ்வில் மிக முக்கியமானது என்பது மட்டும் மறக்காது!
நன்றி
சாந்தா மிஸ்!🙏
படம்: செய்யறிவில் (AI) சித்தரிக்கப்பட்டது.
சனி, ஆகஸ்ட் 02, 2025
ஜாதி ஆணவப்படுகொலைகள்! தீர்வுதான் என்ன? முதல்வரின் கனிவான பார்வைக்கு | காணொளி
திங்கள், ஜூன் 30, 2025
தங்கிலீஷ் | "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து - காணொளி
தங்கிலீஷ் | நேற்றைய (29.06.2025) "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து காணொளியாக 👇🏽👇🏽👇🏽
சனி, ஜூன் 14, 2025
கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்!... - TOI கட்டுரைக்கு என் மொழிபெயர்ப்பு
![]() |
| கீழடி - வான்வழிப் பார்வை |
இந்தியாவின் இரண்டாவது நகர்மயமாக்கம்: கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்! கங்கைச் சமவெளிக்கு இணையான பழமை வாய்ந்தது கீழடி என்பது உறுதியாகி விட்டது!
மதுரையில் உள்ள கீழடி அகழ்வாய்வுத் தளம் தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றில் இன்னொரு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளது. அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் நடத்திய கதிர்க்கரிமக் காலக்கணக்கீட்டால் (Radiocarbon dating), இத்தளம் கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுடன் ஒத்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.
2017-18 அகழ்வாய்வுப் பருவம் முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை தேர்ந்தெடுத்த 29 கதிர்க்கரிம மாதிரிகளுள் (Radiocarbon samples) மிகப் பழமையானது கி.மு.580-ஐச் சேர்ந்ததாகவும் அண்மையிலானது கி.பி.200-ஐச் சேர்ந்ததாகவும் உள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் நகரம் மற்றும் தொழில்மயமான குடியிருப்பு தொடர்ச்சியாக இங்கே செழித்திருந்ததைக் காட்டுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சங்கக் காலத்தைச் சேர்ந்த பெரிய செங்கல் கட்டுமானங்கள் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள நகரமயமாக்கலுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
“செங்கல் கட்டுமானங்களுக்கு மேல் கிடைத்த பெரும்பாலான மாதிரிகள் கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தையவை. ஆனால் கீழே கிடைத்த மாதிரிகள் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை” என்கிறார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகரான தொல்லியலாளர் கே.ராஜன் அவர்கள். “இதனால் கீழடி, இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலாகவும் கங்கைச் சமவெளியுடன் இணையாக வைத்துக் கருதத்தக்கதாகவும் அமைந்துள்ளது. கதிர்க்கரிமக் காலக்கணக்கீடு செய்யப்பட்ட 29 மாதிரிகளுள் 12 மாதிரிகள் அசோகன் காலத்துக்கு முந்தையதான கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக உள்ளன.”
மேலும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த இடுகாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு மண்டையோட்டின் மீது முப்பரிமாணத் தொழில்நுட்பத்தையும் (3D technology) உடற்கூற்றளவியல் அளவீடுகளையும் (anthropometric measurements) பயன்படுத்தி ஆராயும் தொல்லியலாளர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் வாழ்ந்த பண்டைத் தமிழர்களின் முக அமைப்பைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் ஒரு படி முன்னேறி இருப்பதாகத் தெரிகிறது.
“அந்த மண்டையோட்டைக் கொண்டு அதற்குரியவரின் வயது, உணவுமுறை, பாலினம், அவருடைய உண்மை முகம் ஆகியவற்றை நாங்கள் மறுகட்டமைப்புச் (reconstruction) செய்வோம்” என்கிறார் ராஜன்.
கி.மு.580-ஐச் சேர்ந்த கீழடி வாழ்க்கை முறையை மறுகட்டமைக்கும் இந்தப் பணிக்காக இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து பணியாற்றி வருகிறது. இவற்றுள் பிரிட்டனின் லிவர்பூல் பல்கலைக்கழகம், இத்தாலியின் பீசா பல்கலைக்கழகம், சிகாகோவிலுள்ள ஃபீல்டு அருங்காட்சியகம், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம், காந்திநகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), டெக்கன் கல்லூரி உள்ளிட்டவை அடங்கும்.
டெக்கன் கல்லூரி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகளைப் பகுப்பாய்வு (analysis) செய்து வருகிறது. காளைகள், எருமைகள், ஆடுகள், மாடுகள், செம்மறி ஆடுகள், நாய்கள், பன்றிகள், மறிமான்கள், புள்ளி மான்கள் ஆகிய விலங்குகளின் எலும்புகள் அகழ்வில் வெளிவந்துள்ளன. மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மனித மரபணுக்கள் (ancient human DNA), விலங்கு மரபணுக்கள் (animal DNA) ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு கீழடியிலும் கீழடி மண்டலத்தைச் சேர்ந்த கொந்தகை எனும் ஊரிலும் வாழ்ந்த பண்டைய குடிமக்களின் குடிபெயர்ச்சி, இனக்கலப்பு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
இந்த அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை மூலம் ஒரே தளத்தில் இருந்து 29 காலக் கணிப்புகள் கிடைத்துள்ளன.
கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழி (Tamil-Brahmi) எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், தமிழி எழுத்துமுறையின் தோற்றத்தை கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கு இட்டுச் சென்றுள்ளன. இங்கு கிடைத்துள்ள தங்கத்தாலான, தந்தத்தாலான கலைப்பொருட்கள் (artefacts) பண்டைய தமிழர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.
“கீழடி, எழுத்தறிவுடன் கூடிய ஒரு நகரமயமான குடியிருப்பாகவும் கலைஞர்களின் சமுகமாகவும் திகழ்ந்ததை இது காட்டுகிறது” என்கிறார் மாநிலத் தொல்லியல் துறைத் துணை இயக்குனர் ஆர்.சிவானந்தம் அவர்கள். “இது, கிழக்குக் கடற்கரைத் துறைமுகமான அழகன்குளத்தையும் மேற்குக் கடற்கரைத் துறைமுகமான முசிறியையும் மதுரை வழியாக இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் அமைந்திருந்த ஒரு தொழிற்சாலை மையம்.” எனினும் இந்நகரத்தின் மூலப் பெயர் இதுவரை தெரியவில்லை.
சங்க இலக்கியங்கள் வெளிநாட்டு வணிகம், நகைகள், மணிக்கற்கள் (gemstones), மாநகரங்கள், தெருக்கள், அரண்மனை போன்ற கட்டடங்கள் பற்றிப் பேசுகின்றன. “அவையெல்லாம் கற்பனைக் கதைகளல்ல, பண்டைத் தமிழரின் உண்மையான வாழ்க்கை என்பதைக் கீழடி நிலைநாட்டிவிட்டது” என்கிறார் இந்தியவியல் ஆராய்ச்சியாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள்.
கீழடியில் சுடுமண்ணாலான, தந்தத்தாலான தாயக்கட்டைகளைச் செவ்வக வடிவிலும் கனச்சதுர வடிவிலும் தொல்லியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். “இவை சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதான கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளன” என்கிறார் பாலகிருஷ்ணன்.
“கி.மு.6-ஆம் நூற்றாண்டு வரலாற்றைக் காட்டுவது கீழடி மட்டுமில்லை. கொடுமணல், பொருந்தல், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகியவற்றிலும் இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த காலக்கணிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன” என்கிறார் ராஜன். “கொற்கையில் கி.மு.785 எனும் காலக் கணிப்பும் கிடைத்துள்ளது. இதன் மூலம் சங்கக்கால நகரமயமாக்கல் மிகவும் பரந்துபட்டிருந்தது என்பது உறுதியாகியுள்ளது.”
கீழடியில் 10 பருவங்களாக அகழ்வாய்வு நடைபெற்று வந்தாலும், 110 ஏக்கர் அளவில் அமைந்த பண்பாட்டுக் குவியல்களுள் ஆய்வாளர்கள் இதுவரை 4% மட்டுமே அகழ்ந்துள்ளனர். எனவே மாநில அரசு அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவிலேயே முதன்முறையாக நிகழ்கள அருங்காட்சியகம் (onsite museum) ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
“பல காலமாகத் தொல்லியல் சார்ந்த அலட்சியத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கீழடி தமிழர்களிடையே ஆர்வத் தீயைப் பற்ற வைத்துள்ளது” என்கிறார் பாலகிருஷ்ணன். “தமிழ்நாட்டின் தொல்லியல் புரிதலை மாற்றிய முதல் தளமே கீழடிதான்” என்கிறார் ராஜன்.
கீழடி சர்ச்சை
கீழடியில் நடந்த முதல் இரண்டு அகழ்வாய்வுகளுக்குத் (2014-2016) தலைமையேற்றவரான தொல்லியலாளர் கே.அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் கீழடி கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டு வரையில் செயல்பட்டதாக 2023ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துக்கு (ASI) அறிக்கை அளித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ASI இந்தக் காலக்கணிப்பை எதிர்த்தது. இந்த இடத்தைக் கி.மு.300 வரையிலானதாகக் காலக்கணிப்புச் செய்வதுதான் (அதாவது குறைத்து மதிப்பிடுவதுதான்) சரியாக இருக்கும் என்று கூறியதோடு அதற்கேற்ப அறிக்கையைத் திருத்துமாறும் இராமகிருட்டிணனிடம் கோரியது. ஆனால் இராமகிருட்டிணன் தனது கண்டுபிடிப்பில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் (10.06.2025) ஒன்றியப் பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திரன் சிங் செகாவத் அவர்கள் இந்த அறிக்கை துறைசார்ந்த வகையில் போதுமான அளவு துணைபுரிவதாக இல்லை என்றும் அறிவியல் சார்ந்த மதிப்பீடுகள் இன்னும் தேவை என்றும் தெரிவித்தார்.
ஏன் கீழடி முக்கியமானது?
- சங்கக் காலத்தைச் (வரலாற்றின் தொடக்கக்காலம்) சேர்ந்த செங்கல் கட்டுமானங்களின் மிச்சங்கள் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டின் அரிக்கமேடு, காவிரிப்பட்டினம், கொற்கை போன்ற மற்ற சில அகழ்வாய்வுத் தளங்களைப் போலவே கீழடியிலும்,
- அடுக்குகளுடன் கூடிய செங்கல் கட்டுமானங்கள்
- தொட்டி போன்ற வசதிகளுடன் கூடிய வடிகால் அமைப்புகள்
- இரட்டைச் சுவர்களுடன் கூடிய உலைகள்
- சுடுமண் உறைகிணறுகள்
எனப் பற்பல வகைகளிலான கட்டுமானங்கள் கிடைத்துள்ளன.
கதிர்க்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating) எப்படிச் செயல்படுகிறது?
உயிரினங்கள் காற்றில் உள்ள கரிமத்தை (Carbon) உறிஞ்சுகின்றன. இவ்வாறு உறிஞ்சப்படும் கரிமத்துள் கதிர்க்கரிம ஓரகத்தனிமமான (radioactive isotope) C-14-உம் அடங்கும். அதே உயிரினங்கள் இறந்த பிறகு, C-14 உறிஞ்சப்படுவது நின்று அந்த உயிரினம் குறிப்பிட்ட விகிதத்தில் சிதையத் தொடங்கும். ஆகவே எஞ்சியுள்ள C-14 அணுக்களைக் கணக்கிட்டு அந்த உயிரினம் இறந்த காலத்தை மதிப்பீடு செய்ய முடியும். இதற்கு முடுக்கப் பொருண்மை அலைமாலையியல் (Accelerator Mass Spectrometry) எனும் முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் C-14 அணுக்கள் நேரடியாக எண்ணிக் கணக்கிடப்படுகின்றன. வெறும் 1 கிராம் மாதிரியைப் பயன்படுத்தி ±30 ஆண்டுகள் அளவுக்குத் துல்லியமான காலக் கணிப்பை இதன் மூலம் பெறலாம்.
கீழடியில் கண்டெடுத்த பொருட்கள்
- அகழப்பட்ட பரப்பளவு: 90 மீ., நீளம் 60 மீ., அகலம்.
- பொருட்கள்: கண்ணாடி, சிப்பி, தந்தம், முத்து மற்றும் சுடுமண் மணிகள்
- முத்திரைகள்
- தாயக்கட்டைகள்
- அடையாளம் தெரியாத செம்பு நாணயங்கள்
- தங்க நகைகள்.
வியாழன், டிசம்பர் 26, 2024
நல்லகண்ணு 100
யாருக்காவது பிறந்தநாள் என்றால் நூறாண்டு வாழ்க என்போம். நூறாண்டு எப்படி வாழ வேண்டும் எனக் கேட்டால் "நல்லகண்ணு போல் வாழ்க" எனலாம்.
செவ்வாய், ஜூன் 25, 2024
தமிழோடு ஓர் இன்மாலைப்பொழுது!
நேற்று (24.06.2024) இதே நேரம் சுவைத்த அந்தத் தித்திப்பு இன்னும் கூட இனித்துக் கொண்டே இருக்கிறது நெஞ்சில். ஆம், தமிழறிஞர் நா.முத்துநிலவன் ஐயாவுடன் கழிந்தது நேற்றைய இன்மாலைப் பொழுது!
தமிழ் வலைப்பூக்கள் திசையெட்டும் மணம் பரப்பிக் கொண்டிருந்த 'தமிழ்மணம்' காலத்திலிருந்தே ஐயாவுடன் பழக்கம் உண்டு. என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அந்தப் பழக்கம் அடிக்கடி தொலைபேசும் வழக்கமாயிற்று. குறிப்பாக, போன ஆண்டு 'இந்து தமிழ் திசை' நாளேட்டில் அவர் எழுதிய, இன்னும் மிகச் சில நாட்களில் புத்தகமாக வெளியாக இருக்கிற 'தமிழ் இனிது' தொடர் எங்களை இன்னும் நெருக்கமாக்கியது.

















