.

சனி, ஆகஸ்ட் 02, 2025

ஜாதி ஆணவப்படுகொலைகள்! தீர்வுதான் என்ன? முதல்வரின் கனிவான பார்வைக்கு | காணொளி

🙏🏽 தமிழ்நாடு முதல்வரின் மேலான பார்வைக்கு! 🙏🏽
⚠️ காதல் செய்வது குற்றமா?! ⚠️
காதல் செய்த ஒரே காரணத்துக்காகப் பெற்ற தாயின் கண் முன்னே துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் திரு. கவின்செல்வகணேசு 😭😭😭
தொடரும் இந்த ஜாதி ஆணவப்படுகொலைகளுக்குத் தீர்வுதான் என்ன❓❗
இதோ எனக்குத் தெரிந்த இரண்டு தீர்வுகள், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கனிவார்ந்த பரிசீலனைக்குப் பணிவன்புடன் இந்தக் காணொளியில்.


முதல்வர் கவனத்துக்காக மட்டுமில்லை, அன்பார்ந்த தமிழ்ப் பொதுமக்களே, இது உங்கள் மனக்கதவைத் தட்டும் முயற்சியும் கூட! 🥺
சிந்தித்துப் பாருங்கள்!
கவினை ஒரே ஒருநொடி உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து இந்தக் காணொளியில் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!🤝🏽
நன்றி! வணக்கம்!


திங்கள், ஜூன் 30, 2025

தங்கிலீஷ் | "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து - காணொளி

தங்கிலீஷ் | நேற்றைய (29.06.2025) "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து காணொளியாக 👇🏽👇🏽👇🏽

பாருங்கள்! தங்கள் கருத்துக்களையும் அறியத் தாருங்கள்!😊
சரியாகத்தான் பேசியிருக்கிறேன் எனத் தோன்றினால் விருப்பக்குறியை அழுத்துங்கள்👍🏽
பயனுள்ள வகையில் பேசியிருக்கிறேன் எனத் தோன்றினால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்🔄

சனி, ஜூன் 14, 2025

கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்!... - TOI கட்டுரைக்கு என் மொழிபெயர்ப்பு

Keeladi excavation area - Aerial view
கீழடி - வான்வழிப் பார்வை

இந்தியாவின் இரண்டாவது நகர்மயமாக்கம்: கீழடியின் தொடக்கக்காலம் கி.மு.580 எனப் பறைசாற்றும் கரிம ஆய்வுகள்! கங்கைச் சமவெளிக்கு இணையான பழமை வாய்ந்தது கீழடி என்பது உறுதியாகி விட்டது!

மூலம்: A.ரகு ராமன் | டைம்ஸ் ஆஃப் இந்தியா (13.06.2025)
இணைப்பு: https://tinyurl.com/fdmdmvf4
மொழிபெயர்ப்பு: இ.பு.ஞானப்பிரகாசன்

மதுரையில் உள்ள கீழடி அகழ்வாய்வுத் தளம் தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றில் இன்னொரு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளது. அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் நடத்திய கதிர்க்கரிமக் காலக்கணக்கீட்டால் (Radiocarbon dating), இத்தளம் கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுடன் ஒத்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.

2017-18 அகழ்வாய்வுப் பருவம் முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை தேர்ந்தெடுத்த 29 கதிர்க்கரிம மாதிரிகளுள் (Radiocarbon samples) மிகப் பழமையானது கி.மு.580-ஐச் சேர்ந்ததாகவும் அண்மையிலானது கி.பி.200-ஐச் சேர்ந்ததாகவும் உள்ளது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் நகரம் மற்றும் தொழில்மயமான குடியிருப்பு தொடர்ச்சியாக இங்கே செழித்திருந்ததைக் காட்டுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சங்கக் காலத்தைச் சேர்ந்த பெரிய செங்கல் கட்டுமானங்கள் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள நகரமயமாக்கலுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

“செங்கல் கட்டுமானங்களுக்கு மேல் கிடைத்த பெரும்பாலான மாதிரிகள் கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தையவை. ஆனால் கீழே கிடைத்த மாதிரிகள் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை” என்கிறார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகரான தொல்லியலாளர் கே.ராஜன் அவர்கள். “இதனால் கீழடி, இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலாகவும் கங்கைச் சமவெளியுடன் இணையாக வைத்துக் கருதத்தக்கதாகவும் அமைந்துள்ளது. கதிர்க்கரிமக் காலக்கணக்கீடு செய்யப்பட்ட 29 மாதிரிகளுள் 12 மாதிரிகள் அசோகன் காலத்துக்கு முந்தையதான கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக உள்ளன.”

மேலும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த இடுகாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு மண்டையோட்டின் மீது முப்பரிமாணத் தொழில்நுட்பத்தையும் (3D technology) உடற்கூற்றளவியல் அளவீடுகளையும் (anthropometric measurements) பயன்படுத்தி ஆராயும் தொல்லியலாளர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் வாழ்ந்த பண்டைத் தமிழர்களின் முக அமைப்பைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் ஒரு படி முன்னேறி இருப்பதாகத் தெரிகிறது.

“அந்த மண்டையோட்டைக் கொண்டு அதற்குரியவரின் வயது, உணவுமுறை, பாலினம், அவருடைய உண்மை முகம் ஆகியவற்றை நாங்கள் மறுகட்டமைப்புச் (reconstruction) செய்வோம்” என்கிறார் ராஜன்.

கி.மு.580-ஐச் சேர்ந்த கீழடி வாழ்க்கை முறையை மறுகட்டமைக்கும் இந்தப் பணிக்காக இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து பணியாற்றி வருகிறது. இவற்றுள் பிரிட்டனின் லிவர்பூல் பல்கலைக்கழகம், இத்தாலியின் பீசா பல்கலைக்கழகம், சிகாகோவிலுள்ள ஃபீல்டு அருங்காட்சியகம், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம், காந்திநகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), டெக்கன் கல்லூரி உள்ளிட்டவை அடங்கும்.

டெக்கன் கல்லூரி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகளைப் பகுப்பாய்வு (analysis) செய்து வருகிறது. காளைகள், எருமைகள், ஆடுகள், மாடுகள், செம்மறி ஆடுகள், நாய்கள், பன்றிகள், மறிமான்கள், புள்ளி மான்கள் ஆகிய விலங்குகளின் எலும்புகள் அகழ்வில் வெளிவந்துள்ளன. மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மனித மரபணுக்கள் (ancient human DNA), விலங்கு மரபணுக்கள் (animal DNA) ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு கீழடியிலும் கீழடி மண்டலத்தைச் சேர்ந்த கொந்தகை எனும் ஊரிலும் வாழ்ந்த பண்டைய குடிமக்களின் குடிபெயர்ச்சி, இனக்கலப்பு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இந்த அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை மூலம் ஒரே தளத்தில் இருந்து 29 காலக் கணிப்புகள் கிடைத்துள்ளன.

கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழி (Tamil-Brahmi) எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், தமிழி எழுத்துமுறையின் தோற்றத்தை கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கு இட்டுச் சென்றுள்ளன. இங்கு கிடைத்துள்ள தங்கத்தாலான, தந்தத்தாலான கலைப்பொருட்கள் (artefacts) பண்டைய தமிழர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.

கீழடி, எழுத்தறிவுடன் கூடிய ஒரு நகரமயமான குடியிருப்பாகவும் கலைஞர்களின் சமுகமாகவும் திகழ்ந்ததை இது காட்டுகிறது” என்கிறார் மாநிலத் தொல்லியல் துறைத் துணை இயக்குனர் ஆர்.சிவானந்தம் அவர்கள். “இது, கிழக்குக் கடற்கரைத் துறைமுகமான அழகன்குளத்தையும் மேற்குக் கடற்கரைத் துறைமுகமான முசிறியையும் மதுரை வழியாக இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் அமைந்திருந்த ஒரு தொழிற்சாலை மையம்.” எனினும் இந்நகரத்தின் மூலப் பெயர் இதுவரை தெரியவில்லை.

சங்க இலக்கியங்கள் வெளிநாட்டு வணிகம், நகைகள், மணிக்கற்கள் (gemstones), மாநகரங்கள், தெருக்கள், அரண்மனை போன்ற கட்டடங்கள் பற்றிப் பேசுகின்றன. “அவையெல்லாம் கற்பனைக் கதைகளல்ல, பண்டைத் தமிழரின் உண்மையான வாழ்க்கை என்பதைக் கீழடி நிலைநாட்டிவிட்டது” என்கிறார் இந்தியவியல் ஆராய்ச்சியாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள்.

கீழடியில் சுடுமண்ணாலான, தந்தத்தாலான தாயக்கட்டைகளைச் செவ்வக வடிவிலும் கனச்சதுர வடிவிலும் தொல்லியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். “இவை சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதான கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளன” என்கிறார் பாலகிருஷ்ணன்.

“கி.மு.6-ஆம் நூற்றாண்டு வரலாற்றைக் காட்டுவது கீழடி மட்டுமில்லை. கொடுமணல், பொருந்தல், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகியவற்றிலும் இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த காலக்கணிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன” என்கிறார் ராஜன். “கொற்கையில் கி.மு.785 எனும் காலக் கணிப்பும் கிடைத்துள்ளது. இதன் மூலம் சங்கக்கால நகரமயமாக்கல் மிகவும் பரந்துபட்டிருந்தது என்பது உறுதியாகியுள்ளது.”

கீழடியில் 10 பருவங்களாக அகழ்வாய்வு நடைபெற்று வந்தாலும், 110 ஏக்கர் அளவில் அமைந்த பண்பாட்டுக் குவியல்களுள் ஆய்வாளர்கள் இதுவரை 4% மட்டுமே அகழ்ந்துள்ளனர். எனவே மாநில அரசு அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவிலேயே முதன்முறையாக நிகழ்கள அருங்காட்சியகம் (onsite museum) ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

“பல காலமாகத் தொல்லியல் சார்ந்த அலட்சியத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கீழடி தமிழர்களிடையே ஆர்வத் தீயைப் பற்ற வைத்துள்ளது” என்கிறார் பாலகிருஷ்ணன். “தமிழ்நாட்டின் தொல்லியல் புரிதலை மாற்றிய முதல் தளமே கீழடிதான்” என்கிறார் ராஜன்.

கீழடி சர்ச்சை

கீழடியில் நடந்த முதல் இரண்டு அகழ்வாய்வுகளுக்குத் (2014-2016) தலைமையேற்றவரான தொல்லியலாளர் கே.அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் கீழடி கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டு வரையில் செயல்பட்டதாக 2023ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துக்கு (ASI) அறிக்கை அளித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ASI இந்தக் காலக்கணிப்பை எதிர்த்தது. இந்த இடத்தைக் கி.மு.300 வரையிலானதாகக் காலக்கணிப்புச் செய்வதுதான் (அதாவது குறைத்து மதிப்பிடுவதுதான்) சரியாக இருக்கும் என்று கூறியதோடு அதற்கேற்ப அறிக்கையைத் திருத்துமாறும் இராமகிருட்டிணனிடம் கோரியது. ஆனால் இராமகிருட்டிணன் தனது கண்டுபிடிப்பில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் (10.06.2025) ஒன்றியப் பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திரன் சிங் செகாவத் அவர்கள் இந்த அறிக்கை துறைசார்ந்த வகையில் போதுமான அளவு துணைபுரிவதாக இல்லை என்றும் அறிவியல் சார்ந்த மதிப்பீடுகள் இன்னும் தேவை என்றும் தெரிவித்தார்.

ஏன் கீழடி முக்கியமானது?

  • சங்கக் காலத்தைச் (வரலாற்றின் தொடக்கக்காலம்) சேர்ந்த செங்கல் கட்டுமானங்களின் மிச்சங்கள் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டின் அரிக்கமேடு, காவிரிப்பட்டினம், கொற்கை போன்ற மற்ற சில அகழ்வாய்வுத் தளங்களைப் போலவே கீழடியிலும்,

  • அடுக்குகளுடன் கூடிய செங்கல் கட்டுமானங்கள்
  • தொட்டி போன்ற வசதிகளுடன் கூடிய வடிகால் அமைப்புகள்
  • இரட்டைச் சுவர்களுடன் கூடிய உலைகள்
  • சுடுமண் உறைகிணறுகள்

எனப் பற்பல வகைகளிலான கட்டுமானங்கள் கிடைத்துள்ளன.

கதிர்க்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating) எப்படிச் செயல்படுகிறது?

உயிரினங்கள் காற்றில் உள்ள கரிமத்தை (Carbon) உறிஞ்சுகின்றன. இவ்வாறு உறிஞ்சப்படும் கரிமத்துள் கதிர்க்கரிம ஓரகத்தனிமமான (radioactive isotope) C-14-உம் அடங்கும். அதே உயிரினங்கள் இறந்த பிறகு, C-14 உறிஞ்சப்படுவது நின்று அந்த உயிரினம் குறிப்பிட்ட விகிதத்தில் சிதையத் தொடங்கும். ஆகவே எஞ்சியுள்ள C-14 அணுக்களைக் கணக்கிட்டு அந்த உயிரினம் இறந்த காலத்தை மதிப்பீடு செய்ய முடியும். இதற்கு முடுக்கப் பொருண்மை அலைமாலையியல் (Accelerator Mass Spectrometry) எனும் முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் C-14 அணுக்கள் நேரடியாக எண்ணிக் கணக்கிடப்படுகின்றன. வெறும் 1 கிராம் மாதிரியைப் பயன்படுத்தி ±30 ஆண்டுகள் அளவுக்குத் துல்லியமான காலக் கணிப்பை இதன் மூலம் பெறலாம்.

கீழடியில் கண்டெடுத்த பொருட்கள்

  • அகழப்பட்ட பரப்பளவு: 90 மீ., நீளம் 60 மீ., அகலம்.
  • பொருட்கள்: கண்ணாடி, சிப்பி, தந்தம், முத்து மற்றும் சுடுமண் மணிகள்
  • முத்திரைகள்
  • தாயக்கட்டைகள்
  • அடையாளம் தெரியாத செம்பு நாணயங்கள்
  • தங்க நகைகள்.

வியாழன், டிசம்பர் 26, 2024

நல்லகண்ணு 100

Comrade Nallakannu

யாருக்காவது பிறந்தநாள் என்றால் நூறாண்டு வாழ்க என்போம். நூறாண்டு எப்படி வாழ வேண்டும் எனக் கேட்டால் "நல்லகண்ணு போல் வாழ்க" எனலாம்.

நேர்மை, நாணயம், உழைப்பு, தொண்டு, உரிமைப் போராட்டம் அனைத்துக்குமான பருவடிவம் தோழர் நல்லகண்ணு!

இவர் மட்டும் ஓர் 5 ஆண்டுகள் இங்கு தலைமையமைச்சராக இருந்திருந்தால் தேர்தல் என்பது இருப்பவர்களுள் குறைந்த கெட்டவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையாக மாறியிருக்காது.

இவர் மட்டும் ஓர் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருந்தால் அரசியல் என்பது தகாத சொல்லாக ஆகியிருக்காது.

இவர் ஏன் அத்தகைய பதவிகளையெல்லாம் அடையவில்லை? ஏனெனில் இவருடைய ஆட்சியில் வாழும் அளவுக்கு நமக்குத் தகுதியில்லை.

அந்தத் தகுதி நமக்கு வரும் வரை ஐயா வாழட்டும்!
செம்மை செழிக்கட்டும்!

செவ்வாய், ஜூன் 25, 2024

தமிழோடு ஓர் இன்மாலைப்பொழுது!

Me with Tamil Scholar MuthuNilavan Aiya

நேற்று (24.06.2024) இதே நேரம் சுவைத்த அந்தத் தித்திப்பு இன்னும் கூட இனித்துக் கொண்டே இருக்கிறது நெஞ்சில். ஆம், தமிழறிஞர் நா.முத்துநிலவன் ஐயாவுடன் கழிந்தது நேற்றைய இன்மாலைப் பொழுது!

தமிழ் வலைப்பூக்கள் திசையெட்டும் மணம் பரப்பிக் கொண்டிருந்த 'தமிழ்மணம்' காலத்திலிருந்தே ஐயாவுடன் பழக்கம் உண்டு. என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அந்தப் பழக்கம் அடிக்கடி தொலைபேசும்  வழக்கமாயிற்று. குறிப்பாக, போன ஆண்டு 'இந்து தமிழ் திசை' நாளேட்டில் அவர் எழுதிய, இன்னும் மிகச் சில நாட்களில் புத்தகமாக வெளியாக இருக்கிற 'தமிழ் இனிது' தொடர் எங்களை இன்னும் நெருக்கமாக்கியது.

புதன், ஏப்ரல் 10, 2024

சிற்றலை மீதமர் தும்பி – நூல் மதிப்புரை

sitralai meethamar thumbi wrapper

சிற்றலை மீதமர் தும்பி! அன்புத் தோழரான கவிஞர் ரேவதி ராம் அவர்கள் அண்மையில் வெளியிட்ட மூன்று மணமிக்க படைப்புகளுள் குட்டிப்பூ!

பொதுவாக, கவிதைகள் அதிகம் படிக்கும் வழக்கமில்லை எனக்கு. ஆனால் கவிஞர்கள் அதிகம் பழக்கமாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் கவிதைகளிலேயே எந்நேரமும் நீச்சல்.

ஆனால் குளம், ஆறு, கடல் என எவ்வளவுதான் நீந்தினாலும் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு காட்டுத் தடாகத்தில் நீந்தக் கிடைக்கும் ஒரு பகல், வாழ்நாளில் எந்நாளும் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கும். அப்படி ஒரு மறக்க முடியாத பகல்தான் சிற்றலை மீதமர் தும்பியைப் படித்தது!

பார்க்கும்பொழுதே கையில் எடுக்கத் தூண்டும் சின்னஞ்சிறு வடிவம்! ஒவ்வொரு பக்கமும் பிறந்த குழந்தை போலக் குட்டிக் குட்டியாய்க் கவிதைகள்.

முதல் பக்கத்தில் “அன்பின் அஞ்சிறைத் தும்பிக்கு” எனும் தலைப்பில் கவிதை சொட்டச் சொட்ட ஓர் அணிந்துரை எழுதியிருக்கிறார் நம் பேரன்புத் தோழரான கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள். அதில் அவர் எடுத்துக்காட்டியுள்ள கவிதைகளும் அவை பற்றிய பாராட்டுக்களும் எப்படிப்பட்ட நூலைப் படிக்க இருக்கிறோம் என்பதை முன்கூட்டியே உணர்த்தி நம் மனத்தை ஆயத்தப்படுத்தி விடுகின்றன! இதையடுத்து நம் அருமைத் தோழர், கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்கள் எழுதியுள்ள அணிந்துரையும் கவர்கிறது.

அடுத்துக் கவிஞர் எழுதியுள்ள என்னுரையில், தான் இந்த இடத்துக்கு வரக் காரணமானவர்களுள் ஒருவர் விடாமல் நன்றி நவின்றிருக்கிறார், தன் மூன்று வயது மகனுக்கு உட்பட!

காணிக்கைப் பக்கத்திலிருந்தே (Dedication page) தும்பி தன் கவிதைச் சிறகைப் படபடக்கத் தொடங்கி விடுகிறது. அப்படி என்ன காணிக்கை எழுதியிருக்கிறார்?... சொல்ல மாட்டேன், படித்து விழி விரியுங்கள்!

இதில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் இயற்கையைப் பாடுகின்றன; சில வாழ்வின் அழகியலைப் பதிவு செய்கின்றன; காதல், காமம், பெண்ணியம், நகைச்சுவை எனப் பல பாடுபொருள்களின் இடையிடையே மெய்யியல் பேசும் கவிதைகளும் நிறையவே உள்ளன! இதோ எடுத்துக்காட்டுகிறேன் ஒன்றை:

சனி, ஜனவரி 27, 2024

கனவின் இசைக்குறிப்பு - வாழ்த்துரை

Kanavin Isaikurippu - Book introductory function


அன்பின் சகா, கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் எழுதி, கடந்த 06.01.2024 அன்று சென்னையில் வெளியிடப் பெற்ற அவரது முதல் நூலான கனவின் இசைக்குறிப்பு புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் என் சார்பாக மைத்துனர் ரசாக் வழங்கிய வாழ்த்துரையினைக் கவிஞர் வாழும் புதுகை மண்ணில் அந்நூல் அறிமுக விழாக் காணும் இந்நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

கைசால் தமிழ்ப் பெருமக்கள் நிறைந்த அவைக்குப் பணிவன்பான வணக்கம்!

நான் உங்கள் இ.பு.ஞானப்பிரகாசன். என் உடன்பிறப்பின் உதவியோடு உங்கள் பொன்னான நேரத்தில் சில மணித்துளிகளைக் களவாட இது ஒரு சிறு முயற்சி!

கனவின் இசைக்குறிப்பு - கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய பல்லாண்டுக் காலக் கனவின் அச்சு வழி அரங்கேற்றம்!

நம் தோழர் கஸ்தூரிரங்கன் அவர்கள் பதிப்புரையில் சொல்லியிருந்தார், இந்த அரங்கேற்றத்தைச் சாத்தியப்படுத்தியவனே நான்தான் என்று. ஆனால் எனக்கும் முன்னதாக இதற்கு அடிக்கல் நாட்டியவர் அவர்கள் மூத்த மகள் நிறைமதிவதனா.

“வெறுமே தாளில் வெளியிடுவதில் என்ன இருக்கிறது? இணைய வழியில் இக்கவிதைகள் உலகெங்கும் போகின்றனவே, போதாதா?” என்று நாங்கள் நினைத்திருந்த நேரத்தில், நிறைமதி வலியுறுத்திய பிறகுதான் இனி மைதிலி அவர்களின் கவிதைகளைத் தொகுப்பாக்குவது காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்தோம். அந்த வகையில் இந்தக் கவிமலர்கள் செண்டானதில் நிறைமதியின் பங்கு இன்றியமையாதது.

அடுத்து, இந்தத் தொகுப்பு வெளியீடு தள்ளிப் போகக் காரணம் தான்தான் என்றும் தோழர் கஸ்தூரிரங்கன் பதிப்புரையில் சொல்கிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும் இது இன்று இவ்வளவு வேகமாகப் புத்தக வடிவம் பெறக் காரணமும் அவர்தான்.

யார் யாரிடம் எந்தெந்த வேலையை ஒப்படைத்தால் விரைந்து முடிவடையும் என்பதைத் துல்லியமாகக் கணித்து ஒரே வாரத்தில் அவ்வளவு நேர்த்தியாக, அழகாக இதை நூலாய்க் கோத்து வாங்கி விட்டார் அவர்.

இக்கட்டான இறுதி மணித்துளிகளில் அவர் எடுத்த உடனடி முடிவுகள்தாம் இவ்வளவு எழில்மிகு புத்தகமாக இதை உருவாக்கியிருக்கின்றன.

இதுவரை அவரை ஒரு நல்ல ஆசிரியராகவும் எழுத்தாளராகவும்தான் நாம் பார்த்திருக்கிறோம். இதோ இன்று தன் இணையருடன் கைகோத்துப் பதிப்பாசிரியராகவும் ஏற்றம் பெறும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு கண்டிப்பாக அவர் தொடர்ந்து நூல்களை வெளியிட வேண்டும்; மலர்த்தரு பதிப்பகத்தில் பூக்கும் புத்தக மலர்களின் மணம் தமிழுலகம் எங்கும் கமழ வேண்டும் என என் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரம் கவிஞர் யாழி கிரிதரன், எழுத்தாளர் லட்சுமி சிவகுமார் ஆகிய இருவர் மட்டும் இல்லாதிருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வெளியீடு சாத்தியமாகியிருக்காது.

பத்தாண்டுக் காலமாக இந்தத் துறையில் இருப்பவன், ஓரிரு பெரிய பதிப்பகங்களுக்குப் பணியாற்றியவன் எனும் சிறு தகுதியில் சொல்கிறேன், லட்சுமி சிவகுமார் அவர்களின் பணித்திறத்தைப் போல் இதுவரை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. உண்மையிலேயே அவ்வளவு அற்புதமான வடிவமைப்பு! இந்தப் புத்தகத்தைப் பிழை திருத்தியவன் எனும் முறையில் இதை இங்கே பதிவு செய்வது என் கடமை.

அவருடைய இணையற்ற திறமையைத் தமிழுலகம் நன்கு பயன்படுத்திக் கொள்ளப் படைப்பாளிகள் நிறைந்த இந்த அவையில் பணிவன்புடன் பரிந்துரைக்கிறேன்.

இன்னும் கூடப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்க வேண்டிய வியத்தகு பங்கேற்பாளர்கள் இந்த நூலாக்கத்தில் உண்டு. இருந்தாலும் அதை விழாநாயகி அவர்கள் செய்வதுதான் முறை என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொண்டு இனி கவிஞர் பற்றியும் நூல் பற்றியும் சில சொற்கள்.

வானில் மேகங்கள்
வரையும் கோலங்கள்
ஒரு சமயம்
பாயும் புலியாகும்
மறுநொடியே
வீழும் துளியாகும்
ஒருமுறை
அசைகிற தேராகும்
மறுமுறை
விசையுறும் பந்தாகும்

இந்தப் படைப்புகளையெல்லாம்
மேகம் யாருக்காகச் செய்கிறது?
யார் பார்க்கவும் அல்ல!
அது மேகத்தின் தன்னியல்பு.

அப்படித்தான் நம் கவிஞரும். கவிதை எழுதுவது என்பது அவருடைய இயல்புகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாலும் கவிதை, சோகமாக இருந்தாலும் கவிதை, கல்வியைப் பற்றியும் கவிதை, தங்கையின் கம்மலைப் பற்றியும் கவிதை, பட்டாம்பூச்சிக்காகவும் கவிதை, பார்ப்பனியத்தை எதிர்த்தும் கவிதை என எதை வேண்டுமானாலும் கவிதை எனும் சிமிழுக்குள் அடைத்து விடுகிற அவருடைய மாயச்சாலம் ஒவ்வொரு தடவையும் வியக்க வைப்பது!

நானும் அவர்தம் பிற நண்பர்களும் அடிக்கடி கேட்போம். உங்களைப் போல் கவிதை எழுத எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று. அவர் எங்களுக்குக் குறியீடு, படிமம் போன்றவை பற்றி விளக்குவார். என்னைப் பொருத்த வரையில் அது அப்பொழுதுக்குப் புரியும். பின்னர் குழம்பி விடும்.

இப்பொழுது கவிஞரின் படைப்புகளையெல்லாம் தொகுத்து, மீண்டும் மொத்தமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தபொழுதுதான் புரிந்தது. கவிதை என்பது வெறும் இலக்கிய வடிவம் இல்லை; அது ஒரு தனி மொழி! தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றோடு சேர்த்துக் கவிதை மொழியையும் அவர் கற்றிருக்கிறார். உண்மையில் அவர் கவிதையை எழுதவில்லை. தான் பார்க்கிற, சுவைக்கிற, தன்னைப் பாதிக்கிற அனைத்தையும் கவிதை எனும் மொழியில் மொழிபெயர்த்து வைக்கிறார், அவ்வளவுதான்.

இதை உணர்ந்த அந்த மணித்துளியில் ஓரிரு கவிதைகள் அவர் போலவே எழுத எனக்கும் கைவந்தது. சில நாட்கள் நானும் மீண்டும் கவிப்பித்துப் பிடித்துத் திரிந்தேன்.

ஆனால் இதுவே, மைதிலி அவர்களின் எளிய படைப்புகள் தொடர்பான என் அனுபவம் மட்டும்தான். மறுபுறம், சராசரி வாசகனுக்குப் புரியாத நுட்பமான கவிதைகளை எழுதுவதிலும் அவர் புலமை மிக்கவர் என்பது நாம் அறிந்ததே! பெரிய கவிஞர்கள் பலர் அவருடைய அந்தக் கவிதைகளைக் குறிக்கலைப்பு (Decode) செய்து அந்தக் கவித்தமிழில் திளைத்து மகிழ்வதையும் நாம் பேசுபுக்கில் பார்த்திருக்கிறோம்.

இப்படி வாசகர்களையே கவிஞர்களாகவும் கவிஞர்களையே வாசகர்களாகவும் மாற்றிவிடும் இந்த ரசவாதத்தில் மூழ்கி முத்தெடுக்கப் படிப்போம், பரப்புவோம் இந்தக் கனவின் இசைக்குறிப்பை!

அனைவருக்கும் நனி நன்றி! நேச வணக்கம்!

Kanavin Isaikurippu

படம்: நன்றி மலர்த்தரு பதிப்பகம். 

ஞாயிறு, ஜனவரி 07, 2024

கனவின் இசைக்குறிப்பு - வாழ்வின் ஒரு முக்கியமான மாலைப்பொழுது

Poet Mythily Kasthurirengan's 'Kanavin Isaikurippu' Book Release

நூலை வெளியிடுபவர் சிந்துவெளி ஆய்வாளர்
முனைவர் பாலகிருட்டிணன் இ.ஆ.ப.,
முதல் நூல் பெற்றுக் கொள்பவர்
கவிஞரின் தமிழாசான் அண்ணா ரவி அவர்கள்
அருகில் கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள்
இடப்புறம் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்
வலப்புறம் ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் அவர்கள்

அன்பிற்கினிய பதிவர், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய கனவின் இசைக்குறிப்பு நூல் வெளியீடு நேற்று (2024, சனவரி 06) மனம் நெகிழ நிறைவேறியது.

இரண்டு இறக்கைகளிலும் கவிதைகளையே சிறகுகளாய்ச் சுமந்து இணைய வானில் உலவிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பறவையின் கனவு நனவான அந்தச் சிறந்த நாள் உலகம் போற்றும் பெருங்கவிஞர் கலீல் கிப்ரானின் பிறந்தநாளாகவும் அமைந்தது காலம் செய்த வாணவேடிக்கை!

மாபெரும் படைப்புலகப் பயணத்தில் சகா மைதிலி அவர்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த முதல் அடிக்கு என்னாலும் உதவ முடிந்ததில் இந்தத் துறைக்குள் மீண்டும் வந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்!

என் அம்மா புவனேசுவரி அவர்களுக்கு சனவரி 1-இலிருந்தே கடுமையான கால்வலி. சகாவைத் தன் மகளாகவும் தோழர் கஸ்தூரிரங்கன் அவர்களைத் தன் மகனாகவும் கருதுபவர் அவர். அவர்களும் அப்படித்தான். அப்படிப்பட்டவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போகுமோ என்று கவலைப்பட்டேன். ஆனால் என்ன மாயமோ! ஐந்து நாள் மருந்துகள் சேர்த்து வைத்துப் பலனளித்தது போல் நேற்றுக் காலையிலிருந்தே அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு தேறத் தொடங்கி விட்டது. மாலை, விழாவுக்குக் கிளம்பியே விட்டார்!

தவிர என் பாசத் தங்கை சிரீதேவி, நேச மைத்துனர் ரசாக், தம்பி மனைவி உமையாள், எங்கள் செல்லக்குட்டி மகிழினி, அப்பா இளங்கோவன், நான் மகனாகவே போற்றும் குட்டித்தம்பி சங்கர மகேசு, அன்புச் சித்தி குணலட்சுமி, சித்தப்பா மோகன்குமார் என எங்கள் குடும்பத்தில் சிலரைத் தவிர மற்ற எல்லாருமே கலந்து கொண்ட குடும்ப விழாவாகவே இது அமைந்தது.

புத்தகம் வெளியிடப்பட்ட அந்தக் கண்ணான காட்சியையும் கவிஞர் நெக்குருகி வழங்கிய ஏற்புரையையும் காணொளி அழைப்பில் காட்டி என்னையும் விழாவில் கலந்து கொள்ளச் செய்த தங்கை சிரீதேவிக்கும் என் வாழ்த்துரையைச் சிறப்பாக வாசித்துக் கைதட்டல்களைப் பெற்றுத் தந்த மைத்துனர் ரசாக் அவர்களுக்கும் என் அன்பு!

இந்தப் பத்தாண்டுக் கால நட்புறவில் ஒருபொழுதும் கவிஞர் என்னை ஒருமையில் பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக நேற்று ஏற்புரையில், "...என் நண்பன், இங்க வரலைன்னாலும் அவன் மனசெல்லாம் இங்கதான் இருக்கும்..." என்று பேசியபொழுது மதிப்பு எனும் கரையையெல்லாம் தகர்த்துக் கொண்டு பாய்ந்த நட்பு வெள்ளம் இருவர் கண்ணிலும் சற்றே எட்டிப் பார்த்தது!

நிகழ்ச்சி முடிந்ததும் இந்தப் புத்தகப் பதிப்புப் பணியைப் பொறுப்பேற்று முடித்துத் தந்த கவிஞர் யாழி கிரிதரன் அவர்கள் அழைத்துப் பேசி விழா இனிது நடந்ததாகத் தெரிவித்ததோடு "ஏன் வரவில்லை?" என்றும் கேட்டார். உடல்நிலை காரணமாக வர இயலவில்லை என்றதும் வருத்தப்பட்டதோடு பிறகு வந்து பார்ப்பதாகவும் சொன்னார். அவர் அன்பு கண்டு மகிழ்ச்சி!

தோழர் கஸ்தூரிரங்கன் அவர்களுடன் பேசியபொழுது பதிவர் மெக்னேசு திருமுருகன் அவர்களோடும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் தற்பொழுது எழுதுவதில்லை என்றது வருத்தமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊக்கம் அவர் தூவலுக்கு மீண்டும் மையூற்றும் என நினைக்கிறேன்.

வீட்டுக்கு வந்த அம்மா நிகழ்ச்சிக்குப் போன உடன் தன்னைக் கட்டியணைத்து வரவேற்ற கவிஞரின் மூத்த மகள் நிறைமதிவதனா, கடைசி வரை கூடவே இருந்து கலகலப்பூட்டிய அவர் இரண்டாவது மகள் மகிமா, தோழர் கஸ்தூரிரங்கன் அவர்கள்தம் தங்கை வசுமதி அண்ணி, அங்குமிங்கும் ஓடிய குட்டித் தேவதையான அவர் மகள் பிரதன்யா, திரீ ரோசசு கவியணியின் இதர ரோசாக்கள் ரேவதி, கீதாஞ்சலி மஞ்சன் என அனைவரைப் பற்றியும் குதூகலமாகக் குறிப்பிட்டார். மேலும் தங்கள் இனிய அன்பை என்னிடம் தெரிவிக்கச் சொல்லி அனுப்பிய எழுத்தாளுமைத் தோழர்கள் யோகானந்தி, சிரீமலையப்பன், மேனகா ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்ந்தார். தேடிப் போய்க் கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களுடன் தான் படமெடுத்துக் கொண்டதையும் தெரிவித்தார். தன் இணையருடன் கைகோத்து இதே மேடையில் பதிப்பாசிரியராகவும் ஏற்றம் பெறும் தோழர் கஸ்தூரிரங்கன் நன்றியுரையில் என்னுடனான நட்பு பற்றிச் சொன்ன விதத்தையும் குறிப்பிட்டார். அது அவ்வளவு அன்பு தோய்ந்திருந்தது!

மறதி காரணமாய்ப் பட்டியலில் யாரேனும் விடுபட்டிருந்தாலும் அனைவருக்கும் சேர்த்து என் நட்பார்ந்த கைக்குலுக்கல்கள்!

இந்த விழா வெறும் முன்னோட்டம்தான் (Trailer), முழுப் படம் புதுகையில் என்றார் தோழர் கஸ்தூரிரங்கன்!

காத்திருப்போம்! அடுத்த கலக்கலுக்கு!! 😊🎆🎇🎉🎊

செவ்வாய், நவம்பர் 07, 2023

நேற்று தமிழீழம்... இன்று பாலத்தீனம்! - தீர்வுதான் என்ன?

Bombing at Israel-Palestine War

ஒரு சிக்கலுக்கான தீர்வு ஒரு முறையாவது நடைமுறைக்குக் கொண்டு வரப்படாத வரை
அதை மீண்டும் மீண்டும் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அப்படி ஒரு நினைவூட்டல்தான் இது!

றுபடியும் இனப்படுகொலை! இந்த முறை தெருவில் ஓடுவது இசுலாமியர் உதிரம்! கொன்று குவித்து ஈன வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது இசுரேல்! கூடச் சேர்ந்து ஆடுகிறது எப்பொழுதும் போல் அமெரிக்கா!

இசுரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் அப்படி என்னதான் சிக்கல்? ஏன் இந்தப் போர்? இப்படிக் கேட்பவர்கள் பேராசிரியர் ராசன் குறை எழுதியுள்ள “ஆரிய மாயையும், இசுரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள்” எனும் கட்டுரையைப் படிக்கலாம். மற்றவர்கள் மேற்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடரலாம்.

சனி, அக்டோபர் 14, 2023

மீண்டும் 2009?...

Status of Gaza on 2023 attack

மீண்டும் 2009-க்கு வந்து
சிக்கிக் கொண்டது போல் இருக்கிறது!

மீண்டும் ஓர் இனப்படுகொலையின் அரங்கேற்றம்...

மீண்டும் ஒரு விடுதலை இயக்கத்தின் மீது
தீவிரவாத இயக்கம் என முத்திரை...

மீண்டும் ஏதுமறியா மக்கள்
கொத்துக் கொத்தாகக் கொலை...

மீண்டும் கதறி அழும் குழந்தைகளின் புகைப்படங்கள்
இணையத்தில் உலா...

மீண்டும் குண்டுவீச்சு ஓசைகள்...

மீண்டும் படைவானூர்திகளின் இரைச்சல்கள்...

மீண்டும் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள்...

மீண்டும் ஒருமுறை உலகம்
தன் கண்களை இறுக மூடிக் கொள்ளப் போகிறதா?

அப்படி மூடிக் கொண்டால்
அந்தக் கண்கள்
மீண்டும் திறந்து பார்க்கையில்
காணாமல் போன பாலத்தீனியர்களுள்
நானும் ஒருவனாக இருக்கட்டும்!

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி தி கார்டியன் இதழ். 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (6) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தமிழ் (32) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (17) தமிழர் (46) தமிழர் பெருமை (18) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (31) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (23) வாழ்க்கைமுறை (19) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்