.

செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

புத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை)

The New Planet

தோ, இதுதான் நாம் கண்டுபிடித்துள்ள புதிய கோள்!” என்று பெருமிதப் புன்னகையோடு தன் இடப்புறம் இருந்த திரையைக் காட்டினார் அந்த விண்வெளிக் கூடத்தின் தலைமை அறிவியலாளர்.

அங்கே நூற்றுக்கு எழுபத்தைந்து அடி நீள அகலம் கொண்ட மாபெரும் திரையில், பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து நேரலையில் தெரிந்தது அந்தப் புதிய பூமி. ஊடகங்களின் ஒளிப்படக் கருவிகள் படபடவென அதைப் பார்த்துக் கண் சிமிட்டின. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பிற அறிவியலாளர்கள், உதவியாளர்கள் புடைசூழ அமர்ந்திருந்த மூத்த அறிவியலாளரின் முன்னால் ஆர்வத்தோடு அமர்ந்த செய்தியாளர்கள் கேள்விகளைத் தொடங்கினர்.

“சார், இந்தப் புது கிரகத்தை பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்!”

“இந்தக் கிரகம் பூமியிலேயிருந்து கிட்டத்தட்ட 3000 ஒளியாண்டுகள் தொலைவில இருக்கு. இதுக்கு ஒரு நிலாவும் இருக்கு. ரொம்பப் பெரிய கிரகம்...” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்,

“சார்! இது வரைக்கும் எத்தனையோ புதிய கிரகங்களைக் கண்டுபிடிச்சிருக்கீங்க. இந்தக் கிரகத்துல என்ன சிறப்புன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

“கண்டிப்பா! இது வரைக்கும் நாம 1317 கிரகங்களை கண்டுபிடிச்சிருக்கோம். ஆனா, அதுல எதிலேயுமே உயிரினங்கள் இல்லை. ஆனா, இந்த கிரகம் அப்படி இல்ல... லொக் லொக்...” என்ற அவர் தண்ணீரை எடுத்துக் குடிக்க, ஆர்வம் தாங்காத ஊடகர்கள் நாற்காலியின் நுனிக்கு வந்து,

“என்ன சார், சொல்றீங்க! அப்படீன்னா இந்த கிரகத்துல உயிரினங்கள் இருக்கா?” என்று கேட்டனர்.

“அப்படி இல்ல, இந்த கிரகத்துலேயும் உயிரினங்கள் எதுவும் கிடையாதுதான். ஆனா, சில நூற்றாண்டுகள் முன்னே வரைக்கும் அங்க உயிரினங்கள் மட்டுமில்ல, அறிவில் மிகவும் மேம்பட்ட ஒரு மனித இனமே வாழ்ந்திருக்கிறது தெரியுது” என்றார் பக்கத்திலிருந்த அறிவிலாளர் ஒருவர்.

“எதை வெச்சு சார் சொல்றீங்க?”

“அந்த கிரகத்துல பெரிய பெரிய கட்டடங்கள் - சும்மா இல்ல, இருநூறு முந்நூறு அடி உயரத்துக்கு கட்டடங்கள் – இருக்கு. அதுவும் கிரகம் முழுக்க, கோடிக்கணக்குல” என்று அவர் சொல்ல வியப்பில் வாய் பிளந்தனர் ஊடகர்கள்.

“அது மட்டும் இல்ல, கலை – அறிவியல் - தொழில்நுட்பம்னு எல்லாத்திலேயுமே அவங்க நிறைய முன்னேறி இருந்திருக்காங்க. அந்த கிரகத்துக்குப் போய் வந்த நம்ம விண்வெளி வீரர்கள் எடுத்த படங்கள், சேகரித்த மாதிரிகள் மூலமா இது உறுதியா தெரியுது. முந்தி மாதிரி இல்லாம, இப்போ ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பார்க்கிற, பயணிக்கிற தொழில்நுட்பத்தை நாம கண்டுபிடிச்சுட்டதால இதெல்லாம் சாத்தியமாச்சு” என்றார் தலைமை அறிவியலாளர்.

“ஆனா சார், இவ்வளவு முன்னேறின அந்த மனித இனம் எப்படி அழிஞ்சுது?” என்று கேட்டார் செய்தியாளர் ஒருவர். அதற்கு,

“அ... அது வந்து இன்னும் சரியாத் தெரியல. ஆராய்ச்சி நடந்திட்டிருக்கு. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்” என்று பெரியவர் சற்றே தடுமாற்றத்துடன் சொல்ல,

“ஏன் சார் பொய் சொல்றீங்க?” என்று அழுத்தமாகக் கேட்டான் பக்கத்திலிருந்த அந்த இளம் அறிவியலாளன்.

“பொய்யா?!... என்ன பொய்?... நீங்க கொஞ்சம் சும்மா இருங்க! நாந்தான் பேசிட்டிருக்கேன்ல?” என்று கோபமானார் தலைமை. செய்தியாளர்கள் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டென எழுந்து நின்ற அந்த இளம் அறிவியலாளன்,

“நண்பர்களே! இவங்க சொல்றது பச்சைப் பொய்! அந்த கிரகத்துல இருந்தவங்க ஏன் அழிஞ்சாங்கங்கிறதையும் கண்டுபிடிச்சாச்சு! அதுக்குக் காரணம், இயற்கைக்கு எதிரான வாழ்க்கை முறை” என்றான்.

“வாய மூடுங்க!” என்று கத்தினார் பெரியவர். அதைக் கண்டு கொள்ளாமல் இளைஞன் தொடர்ந்தான்.

“இன்னிக்கு நாம இங்க என்ன பண்ணிட்டிருக்கோமோ அதையேதான் அவங்களும் அங்கே பண்ணிட்டிருந்திருக்காங்க. வளர்ச்சிங்கிற பேர்ல இயற்கைய சின்னாபின்னமாக்கி இருக்காங்க. அவங்களோட பல கண்டுபிடிப்புகள், அன்றாட வாழ்க்கைல பயன்படுத்தின பொருட்கள் கூட இயற்கைக்கு எதிராத்தான் இருந்திருக்கு. இதனால கண்ணெதிர்ல உலகம் அழிய ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் திருந்தாம பணம், புகழ், அறிவியல், தொழில்நுட்பம்னு பித்துப் பிடிச்சு அலைஞ்சிருக்காங்க...” என்று அவன் பேசப் பேச அனைத்தையும் பரபரவெனப் பதிவு செய்தது ஊடக உலகம்.

“என்ன இது? அவர் சொல்ல சொல்ல நீங்க பாட்டுக்குப் பேசிட்டிருக்கீங்க!” என்று இப்பொழுது இன்னொரு அறிவியலாளரும் அதட்ட. மற்ற அறிவியலாளர்கள் என்ன செய்தெனத் தெரியாமல் திருதிருவென விழித்தனர். முதியவர், ஒரு பொத்தானை அழுத்தினார். லேசர் துப்பாக்கிகளோடு ஓடி வந்த காவலர்கள் இளைஞனைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் செல்லத் தொடங்கினர். ஆனாலும் அவன் அந்த அரங்கமே அதிரக் கத்தினான்.

“நண்பர்களே! நல்லாக் கேட்டுக்கங்க! நாம எத்தனை ஆயிரம் மரம் நட்டாலும் சரி, தண்ணிய எவ்வளவுதான் சேமிச்சாலும் சரி, இயற்கைக்கு எதிரான இந்த மின்னணுப் பொருட்கள், மக்காத குப்பைகள் இதையெல்லாம் உற்பத்தி செய்யறத நிறுத்தாத வரைக்கும் எந்தப் பயனும் கிடையாது. அந்த மக்களோட ஒட்டுமொத்த அழிவு நமக்குச் சொல்றது இதைத்தான். இதைப் பார்த்ததுக்கு அப்புறமும் நாம திருந்தலன்னா அவங்க நிலைமதான் நமக்கும்” என்று கத்திக் கொண்டே போனான் அவன்.

நடந்த கலவரத்தைக் கண்டு உறைந்து போய் நின்றிருந்த ஊடகத்தினரைப் பார்த்து,

“உக்காருங்க!... உக்காருங்க!...” என்றார் பெரிய அறிவியலாளர், மீண்டும் பழைய புன்னகையோடு.

“இந்த கிரகம் பத்தித் தொடர்ந்து ஆராய்ச்சியில இருந்ததால அவருக்கு லேசா மனசு பாதிக்கப்பட்டிருக்கு. வேற ஒண்ணுமில்ல. அவர் சொன்னதுக்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது அது எதையும் வெளியிட வேணாம்! சமூகத்துல தேவையில்லாத குழப்பம் ஏற்படும்” என்றார் அவர். உடன் இருந்த மற்ற அறிவியலாளர்களும் அதை ஆமோதித்தனர்.

“சார்! அடுத்து, புது கிரகத்துல நம்ம விண்வெளி வீரர்கள் எடுத்த படங்களையெல்லாம் இவங்களுக்குக் காட்டணும் இல்லையா?” என்று சமயம் பார்த்து எடுத்துக் கொடுத்தார் உதவியாளர் ஒருவர்.

“ஓ! ஆமா, ஆமா! வாங்க எல்லாரும்” என்றபடி பெரியவர் முன்னே செல்ல, அனைவரும் ஆவலுடன் அடுத்த அறைக்குள் நுழைந்தனர்.

அங்கே அனைவரையும் முதலில் வரவேற்றது, ஓரளவு சிதைந்த நிலையிலும் தன் கம்பீரம் குன்றாத ‘தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தின்’ டிஜிட்டல் படம்! 

(நான் ஏப்ரல் ௨௮-மே ௪, ௨௦௧௭ பாக்யா இதழில் எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி பிக்சபே.

கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

22 கருத்துகள்:

  1. மிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் இபுஞா! அதுவும் இப்போது நாம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதனை மிக அழகாகப் பின்னால் நடப்பது போல் சொல்லியுள்ள விதம் நேர்த்தியாக உள்ளது அதுவும் முடித்த விதம் அந்த வரி அருமை!!!. பாக்யா இதழில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    கீதா: முதலில் பாராட்டுகள், வாழ்த்துகள் சகோ! ஒரு அறிவியல் கதை எழுதியதற்கு. ஏனென்றால் அறிவியல் கதை எழுத வேண்டும் என்றால் அதற்கு நிறைய விவரங்கள் வேண்டும். துளசியின் கருத்துடன், ஆரம்பித்து வந்த போதே ஊகிக்க முடிந்தது...அட நம்ம பூமி அழிந்ததைத்தான் மற்றுமொரு கிரகவாசிகள் ஆராய்கின்றார்கள் என்பதனை. ஒன்று புரிந்தது. மனித இனம் எத்தனை அழிவுகள் வந்தாலும், எந்தக் கிரகத்தில் வாழ்ந்தாலும் எத்தனை வருடங்கள் ஒளியாண்டுகள் கடந்தாலும் திருந்தாத இனம் அதே வசனம்தான் பேசுவார்கள்..அதுவும் உண்மையை மறைப்பது!! உண்மை சொல்லுபவர்களைப் பைத்தியம் என்பது...ஹஹஹஹ. ரசித்தேன்...ஆனால் இப்படியேதான் பேசுவார்களா என்றும் யோசித்தேன்...யோசிக்க வைத்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசி ஐயா, கீதா சகோ நீங்கள் வந்து இருவருமே கருத்துரைத்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி! இருவரின் விரிவான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! கீதா சகோ, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் இப்படியேதான் பேசுவார்களா என்று கேட்டது என்னையும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கோணத்துக்காகத் தனி நன்றி!

      நீக்கு
  2. நம் பூமியைப் பற்றிதான் பேசுகிறார்கள் என்று ஆரம்ப வரிகளிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் சுவாரஸ்யமான, விழிப்புணர்வு ஊட்டும் சிறுகதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே! மர்மத்தைத் தொடக்கத்திலேயே நீங்கள் கண்டுபிடித்து விட்டதாகக் கூறுவது இன்னும் திறமையாக எழுத என்னைத் தூண்டுகிறது. அதற்காகவும் நன்றி!

      நீக்கு
  3. ஆக எந்தக் காலத்திலும் உண்மையை சொன்னால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கு...

    அட...! தஞ்சைப் பெரிய கோயில் கோபுரம் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹ்ஹா! ஆமாம் ஐயா! தவறு செய்பவர்கள் எப்படியாவது தங்களைத் தற்காத்துக் கொள்ளச் சமாளிக்க வேண்டுமே! பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. அருமையான பதிவு.எளிமையான முறையில் தாம் எடுத்துக் கொண்ட கதைக் கருவை உருவேற்றியுள்ளளீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவை மற்றவர்களும் படித்து மகிழ மேற்கண்ட வாக்குப்பட்டைகள் மூலம் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

      நீக்கு
  5. /ஒளியாண்டுகள் என்று சொல்லி பின் அங்கெல்லாம் மனிதர்கள் போய் வந்ததாய்ச் சொல்வது இடறுகிறதே
    /ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பார்க்கிற, பயணிக்கிற தொழில்நுட்பத்தை நாம கண்டுபிடிச்சுட்டதால இதெல்லாம் சாத்தியமாச்சு” என்றார் தலைமை அறிவியலாளர்./இது சாத்தியமா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையைப் படித்ததோடில்லாமல் மதித்துக் கேள்வியும் கேட்டதற்கு முதலில் என் நன்றி ஐயா! ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பயணிப்பது எதிர்காலத்தில் இயலக்கூடும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே, வருங்காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ள இக்கதையில் அத்தகைய கற்பனையைப் படைத்துள்ளேன். காலங்காலமாக அறிவியல் புனைகதைகள் பலவற்றிலும் இந்தக் கற்பனை செய்யப்பட்டுள்ளது இல்லையா? அதையே சிறியேனும் முயன்றுள்ளேன்.

      நீக்கு
  6. கதையை நன்றாக கூறியுள்ளீர்கள்,ஆனால் ,தலைமை விஞ்ஞானி நம் தலைமுறை செய்யும் தவறை ஏன் மறைக்க நினைக்கிறார் என்பதை இன்னும் கொஞ்சம் ஆழமாய் சொல்லியிருக்கலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு முதலில் நன்றி ஐயா!

      தலைமை அறிவியலாளர் நம் தலைமுறையின் தவற்றை மறைக்கக் காரணம் அவர்கள் தலைமுறையும் அந்தத் தவற்றைத்தான் செய்கிறது என்பதால்தானே? அதைத்தான் கதைநாயகன் கண்டிக்கிறார். அதனால்தான் அவர் வெளியேற்றவும் படுகிறார். தற்கால அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கைக்கு எதிரானவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன இல்லையா? எனவே, தங்கள் பணிக்கு மக்களிடம் எதிர்ப்பு எழக்கூடாது என்பதாலும், இது தொடர்பான அரசின் திட்டங்கள் பாதிக்கப்படாமல் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாலும் அரசுத் தரப்பு அறிவியலாளர்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதையே கதையில் காட்டியுள்ளேன். ஆனால், கதையின் மையக் கருத்துக்கு அவ்வளவாகத் தேவைப்படாதது என்பதாலும் பக்கக் கட்டுப்பாடு காரணமாகவும் அவர் நடவடிக்கை குறித்து விரிவாகச் சொல்லவில்லை. இவ்வளவு ஈடுபாட்டுடன் கேட்டமைக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. நமது அழிவை கண்டும் காணாமல் வாழ்கிறோம் என்பதை அழகான கதைபோல் சொன்ன விதம் அருமை நண்பரே... இது நாளை நடக்க கூடும்
    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! இது நாளை நடக்கக்கூடாது என்பதற்காகவே இக்கதையை எழுதினேன். வாக்குக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  8. ஓட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்று அரசியல்வாதி போல பொய் சொல்கிறது நண்பரே
    பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம்.
    தற்கால இளைஞர்கள் / மாணவர்கள் அனைவரும் படித்து , அதன் பின்னணிக் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். தக்க தருணத்தின்
    ( கற்பனை ) சிறு கதை. நான் சிறுவனாக இருந்த போது தாமஸ் மூர் எழுதிய விஞ்ஞான புதினம் ஒன்று , தலைப்பு ” தி உட்டோபியன் வோர்ல்ட் ” என்பது . காலத்தை கடக்கும் மெஷின் - அதாவது கடந்த கால நிகழ்வுகளை அறிய . ஒளியின் வேகத்தைவிட அதி அதி வேகமாகச்செல்லும் எந்திரத்தில் சென்று அறிந்துவருவது பற்றிய கதை. ஐன்ஸ்டீன் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை விஞ்சுவது என்பது நடைமுறையில் கற்பனையே.
    இந்த சிறு கதையின் நீதி போதனை ,
    இயற்கையோடு இப்படியே மோதினால் , யானை தன் கையால் தானே மண்ணை வாரி போட்டதுபோல் தான். அல்லது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொணட மாதிரிதான்.
    <> கோ.மீ. அபுபக்கர் ,
    கல்லிடைக்குறிச்சி -

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கு முதற்கண் எனது அன்பான நல்வரவு நண்பரே!

      நீங்கள் படித்த உடோப்பியன் வேர்ல்டு கதையை என் சிறு முயற்சி நினைவூட்டியிருப்பது கண்டு மிகவும் மகிழ்கிறேன்! தங்கள் விரிவான சுவையான கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி! தொடர்ந்து வாருங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைத் தாருங்கள்! தங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய மேற்காணும் வாக்குப்பொத்தான்களை அழுத்துங்கள்! மீண்டும் நன்றி!

      நீக்கு
  10. Nandraga irunthathu...konjam valithathu...aanaal oru santhegam 3000 oli andugalai nam oru murai sendu naam yhirumbakkofiya thoorama...theroyamal ketkiren...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா அன்பரே! முதலில் உங்கள் பாராட்டுக்கு நன்றி! படிப்பவர்களுக்கு (எழுதுகிற எனக்கும்தான்) வலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதியது. நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி!

      ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர்கள். அப்படி ஓராண்டுக் காலம் ஒளி பயணித்தால் எவ்வளவு தொலைவைக் கடந்திருக்குமோ அதைத்தான் ஓர் ஒளியாண்டு என்கிறோம் இல்லையா? அப்படியானால் 3000 ஒளியாண்டு என்பது எப்பே.......ர்ப்பட்ட தொலைவு என்பதைக் கற்பனை செய்து பாருங்களேன்! அப்பப்பா! அப்படி ஒரு தொலைவைக் கடப்பது என்பது நம் கற்பனையிலும் இயலாதது இன்றைய நிலையில். ஆனால், அறிவியலாளர்கள் ஒரு காலத்தில் ஒளியை விஞ்சும் வேகத்தில் மனிதன் பயணிப்பது இயலக்கூடும் என்கிறார்கள். எடுத்துக்காட்டாக அண்ட வெளியில் பல நுண் நுழைவாயில்கள் (micro portals) இருக்கின்றன என்றும் அவற்றின் ஒரு முனையில் புகுந்து மறு முனையில் வெளியேறினால் நாம் காலத்தைக் குறுக்கு வெட்டாகக் கடக்கலாம் என்றும் என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால், மனிதக் கண்களுக்கே புலப்படாத அவற்றுக்குள் எப்படி நுழைந்து எப்படி வெளியேறுவது என்பது புரியவில்லை. இது தவிர, வேறு பல சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன. ஆக, ஒளியின் வேகத்தை விஞ்சும் மனித அருஞ்செயல் வருங்காலத்தில் நடக்கலாம் என்பது பலரின் நம்பிக்கை. எனக்கும் அது ஓரளவு உண்டு. இது வருங்காலத்தில் நடக்கும் கதை, அதுவும் கதை மாந்தர்கள் நம்மை விடத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய வேற்றுக்கோள் மனிதர்கள் என்பதால் அப்படி ஒரு தொழில்நுட்பம் கைவரப் பெற்று விட்டதாகக் கற்பனை செய்துள்ளேன், அவ்வளவுதான். ஆக, உங்கள் கேள்விக்கான பதில்... இது தற்காலத்தில் இயலாது. வருங்காலத்தில் இயலலாம்.

      என்னையும் மதித்து இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி! அடுத்த முறை பெயரோடு கருத்திட வேண்டுகிறேன்! :-)

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்