.

வியாழன், ஏப்ரல் 23, 2015

உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!

 
Aga Sivappu Thamizh - The Blog must read by every Tamil!

நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!
அனைவருக்கும் நேச வணக்கம்!

உங்கள் மனதிற்குகந்த ‘அகச் சிவப்புத் தமிழ்’ இப்பொழுது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

இந்த இனிமையான தறுவாயில் இந்த இரண்டாண்டுப் பயணம் பற்றிய விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல்! முதலில், கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் தளத்தின் வளர்ச்சி பற்றிய சில புள்ளி விவரங்கள்...


ஏப்ரல் 2013 – ஏப்ரல் 2014
ஏப்ரல் 2014 – ஏப்ரல் 2015
மொத்தம்
பதிவுகள்
30
21
51
கருத்துக்கள்*
171
357
528
பார்வைகள்
24,000+
32,851+
56,851+
அகத்தினர்கள்**
266
267
533

* பிளாக்கர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.

இந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவு வருகையாளர்களை அழைத்து வந்த முதல் பத்துத் தளங்கள்:

தளங்கள்
பார்வைகள்
6700
1875
1821
1293
1079
873
762
603
250
216


இந்த இரண்டு ஆண்டுகளில் உங்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட பதிவுகள்:

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் – 4769 பார்வைகள்.
» கடந்த ஆண்டு முதலிடத்தை வகித்த இந்தப் பதிவு இந்த ஆண்டும் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது!

பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்? – 1879 பார்வைகள்.
» இந்த ஆண்டு புதிதாக எழுதப்பட்ட இந்தப் பதிவு அதற்கு முந்தைய ஆண்டில் முன்னிலை வகித்த பதிவுகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

நண்டு ஊருது... நரி ஊருது...! - மழலையர் விளையாட்டா, மருத்துவ அறிவியலா? – 1762 பார்வைகள்.
» தளத்தின் முதல் பதிவான இது கடந்த ஆண்டை விட ஒரு படி முன்னேறி மூன்றாம் இடத்தில் உள்ளது.

எங்கே ஓடுகிறாய்? (இனப்படுகொலையாளியை நோக்கிச் சில கேள்விகள்!) - 1623 பார்வைகள்.
» இலங்கை அதிபர் தேர்தலில் இராசபக்சவின் தோல்வியை ஒட்டி, உள்ளக் கொதிப்பையெல்லாம் கொட்டி இந்த ஆண்டு எழுதப்பட்ட இப்பதிவு, கவிதையாக இருந்தும் வியப்புக்குரிய வகையில் நான்காம் இடம் பிடித்துள்ளது.

வை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா? – ஓர் அலசல்! – 1534 பார்வைகள்.
» கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்தப் பதிவு இந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில்.

‘அகச் சிவப்புத் தமிழ்’ நேயர்கள் மிகுதியாக வாழும் நாடுகள்:

நாடுகள்
பார்வைகள்
இந்தியா
26,196
அமெரிக்கா
9296
இரசியா
5110
ஐக்கிய அரபு நாடுகள்
1675
இலங்கை
1167
இங்கிலாந்து
1087
சிங்கப்பூர்
1062
ஜெர்மனி
878
கனடா
877
பிரான்சு
718


மனதில் மணக்கும் நிகழ்வுகள்... சில நினைவுகள்

Looking Back... with Thanks!

‘அகச் சிவப்புத் தமிழ்’ தொடங்கிய முதல் ஆண்டில் வெற்றிக் களிப்பில் மிதந்தேன் என்றால், இந்த ஆண்டில் முழுக்கவும் நட்பின் பெருமழைத் தேனில் நனைந்தேன்!

பொதுவாக, என் தளத்துக்கு மக்களை வரவழைப்பதற்காகப் பிற வலைப்பூக்களுக்குப் போய்க் கருத்திடும் வழக்கம் எனக்கு இல்லை. பதிவுகளைத் திரட்டியில் சேர்க்கச் செல்லும்பொழுது, ஏதாவது நல்ல பதிவு தென்பட்டால், அதுவும் படித்தாக வேண்டும் எனத் தோன்றினால் மட்டுமே படிப்பேன். அவற்றுள் மனதிற்கு மிகவும் பிடித்துப் போன வலைப்பூக்களை மட்டுமே பின்தொடர்வேன். அதனால், பதிவுலகில் எந்த ஒரு நட்பு வட்டத்திலும் நான் இருந்ததில்லை, முதலாம் ஆண்டு வரை. பதிவர்களுக்கு எனத் தனிச்சிறப்பாக நடத்துகிறார்களே என ‘வலைச்சரம்’ இதழை அவ்வப்பொழுது படிப்பதுண்டு. அப்படி, இந்த ஆண்டு, ‘வலைச்சரம்’ இதழில் ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் பதிவுகளைப் படித்தபொழுது ‘ஊமைக்கனவுகள்’ தளத்தில் அவர் பரிந்துரைத்த உள்ளங்கவர் களவன் பதிவைப் படித்தேன்; மிரண்டு போனேன்! ‘இந்த அளவுக்குத் தமிழறிவா! அதுவும் இப்பேர்ப்பட்டவர் வலைப்பூ நடத்துகிறாரா!!’ என்று மலைத்து அவரைப் பின்பற்றத் தொடங்கிய நான், மைதிலி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்ற பதிவர்களின் தளங்களையும் படித்துப் பார்த்தேன். அடடா! அத்தனையும் மணிகள்!! தமிழ் மணிகள்!!!

அந்தத் தளங்களையெல்லாம் நான் தொடர்ந்து படிக்கத் தலைப்பட, புதிதாய்ப் பதிவுலகப் பெருமக்கள் பலரின் நட்புக் கிடைத்தது. தமிழ்ப் பதிவுலகப் பெருவெளியின் நட்பு வட்டங்களில் நானும் இணைந்தேன். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நான் குறைவாகவே பதிவு எழுதியும் பார்வைகள், கருத்துக்கள் எல்லாம் முந்தைய ஆண்டை விடக் கூடுதலாகப் பெருகியிருக்கின்றன என்றால், அதற்கு ஒரே காரணம், இந்த நட்பு. ஆம்! நான் எது எழுதினாலும் ஓடோடி வந்து படித்துப் பாராட்டி நிறைகுறைகளைத் தெரிவிக்கும் என் தோழமைக்குரிய பதிவுலக நண்பர்களே! நீங்கள்தான் இதற்கு முழுக் காரணம்! அதற்காக என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதான்... பதிவுலகின் நட்புச் சங்கிலியில் நானும் ஒரு கண்ணியாய் இணைந்ததுதான் இந்த ஆண்டில் நான் முதலாவதாகவும் முதன்மையாகவும் குறிப்பிட விரும்பும் மனதில் மணக்கும் நிகழ்வு.

அடுத்ததாக, இந்த வலைப்பூவை நான் எதற்காகத் தொடங்கினேனோ, அதற்கான ஏற்பிசைவை (recognition) ஒரு துளியேனும் நான் அடைந்ததாகக் கூறிக்கொள்ளத்தக்க ஒரு நிகழ்வு இந்த ஆண்டு நடந்தது.

இசுலாமியர் மீதான சிங்கள-பௌத்த வெறித் தீ! வெறியர்களுக்கு எதிராகவே திருப்புவது எப்படி?’ என்ற ஒரு பதிவை இந்த ஆண்டு எழுதினேன். தமிழ்த் தலைவர்களின் பார்வைக்காக எழுதப்பட்ட அந்தப் பதிவை, முடிந்த வரை எனக்குத் தெரிந்த சில பெரும்புள்ளிகளுக்கு அனுப்பியும் வைத்தேன். அவர்களுள் ஒருவரான இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் என்னைப் பேசியில் தொடர்பு கொண்டு “அந்தக் கட்டுரையை நான் படித்தேன். அடிப்படையில் அதில் ஓர் உண்மையான அக்கறை இருந்தது. அதனால்தான் உங்களைத் தொடர்பு கொண்டேன்” என்று கூறியது என்னைப் பெரிதும் பெருமிதம் கொள்ள வைத்த நிகழ்வு.

அடுத்தது, தமிழ்ப் பதிவுலகின் இணையற்ற அரசியல் பதிவரான ‘விமரிசனம்’ காவிரிமைந்தன் ஐயா அவர்களால் பாராட்டப்பட்டது!

கருணாநிதி, ஜெயலலிதா, மோடி, மன்மோகன், சுப்பிரமணிய சுவாமி என யாராக இருந்தாலும், யாருக்கும் அஞ்சாமல் பாரதியாரின் முறுக்கு மீசைப் படத்துடன் அவரைப் போலவே யார் தவறு செய்தாலும் தயங்காமல் வெளுத்து வாங்கும் ஐயா அவர்கள், அரசியல் மட்டுமின்றி இலக்கியம், வாழ்வியல், பெண்ணியம், திரையுலகம் எனப் பலவற்றையும் பற்றி எழுதுவார். எழுதுவது மட்டுமின்றிச் சமூக மாற்றத்துக்காகத் தனிப்பட்ட முறையில் சில முயற்சிகளையும் மேற்கொள்பவர். இந்த 75 அகவையிலும் அயர்வின்றி நாட்டுக்காக உழைப்பவர். தமிழர் பிரச்சினைகளுக்காகத் தீப்பறக்கும் பதிவுகளைப் படைப்பவர். “கருநாடகாக்காரன் மேக்கேதாட்டூ அணையைக் கட்டினால் நாம் போய் இடித்துத் தள்ளுவோம் வாருங்கள்” என்று வீரமுழக்கம் எழுப்பியவர். அப்பேர்ப்பட்டவர் “உங்கள் வலைத்தளம் பார்த்தேன்… உங்கள் தமிழ்ப்பற்றுக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் தமிழ்ப்பணி இனிதே வளர வாழ்த்துக்கள்” எனக் கூறியது இந்த ஆண்டின் பெருமைக்குரிய இன்னொரு நிகழ்வு!

இந்த 2014-15 ஆண்டுக்காலத்தின் பதிவுலகப் பயணம் பற்றி நினைத்தாலே முதலில் மனக்கண்ணில் நிழலாடுவது பன்முகப் பதிவர் விருது!

பதிவுலகில், என்னைத் தேடி வந்து நட்புப் பூண்டவர் ஐயா கில்லர்ஜி அவர்கள். முன்னணிப் பதிவரான அவருக்கு இங்கே நண்பர்கள் ஏராளம்! அவர்களுள் என்னை விட எண்ணிலா மடங்கு அருமையாய்ப் படைக்கக்கூடியவர்களும் தாராளம்! ஆனால், அவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் பன்முகப் பதிவர் விருதுதனை அவர் எனக்கு அளித்தது அவர்தம் அளவில்லா அன்பையே காட்டும். வலைப்பூத் தொடங்கி இரண்டாம் ஆண்டிலேயே இப்பேர்ப்பட்ட ஏற்பிசைவைப் பெற்றது இந்த ஆண்டு மட்டுமில்லை, என்றென்றும் மறக்க இயலாப் பெருமகிழ்ச்சி! அதற்காக இன்று மீண்டும் ஒருமுறை இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

அடுத்ததாக, குறிப்பிட வேண்டிய இன்னொன்று, வலைச்சரம் பதிவர் இதழில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ் வலைப்பூக்களுக்காகவே ஓர் இதழ்; அதுவும், பதிவர்களில் யாரேனும் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு ‘வாரம் ஓர் ஆசிரியர்’ எனும் முறையில் நடத்தப்படும் புதுமை இதழ் ‘வலைச்சரம்’. இப்பேர்ப்பட்ட இதழில் நம் வலைப்பூ ஒருமுறையாவது பரிந்துரைக்கப்பட்டு விடாதா என்பதே புதிதாகப் பதிவுலகிற்குள் எழுத்தடி வைக்கும் ஒவ்வொருவரின் ஏக்கமும். என்னுடைய அந்த ஏக்கமும் இந்த ஆண்டுதான் நிறைவேறியது. பதிவர் ‘என் ராஜபாட்டை’ ராஜா அவர்கள் செப்டம்பர் 3, 2014 அன்று முதன்முறையாக வலைச்சரத்தில் ‘அகச் சிவப்புத் தமிழ்’தனை அறிமுகப்படுத்தி இணையப் பேருலகின் ஒரு மூலையில் இருந்த என் எழுத்துக்களையும் நான்கு பேர் பார்வைக்குக் கொண்டு சேர்த்தார். அவருக்கு இந்த இனிய தறுவாயில் மீண்டும் நன்றி! [பார்க்க: தெரியுமா உங்களுக்கு ?]

ஆனால், இஃது இந்த ஒருமுறையோடு நில்லாமல் தொடர்ந்து மூன்று முறை... ஆம், இந்த ஆண்டு மட்டும் நம் ‘அகச் சிவப்புத் தமிழ்’ மொத்தம் நான்கு முறை ‘வலைச்சர’த்தில் பரிந்துரைக்கப்பட்டது.

ராஜபாட்டை ராஜா அவர்களுக்குப் பிறகு, அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நண்பர்களும் நான் மதிக்கும் பெரியவர்களுமான தில்லையகத்து கிரானிக்கிள்ஸ் தளப் பதிவர்களான துளசிதரன் ஐயாவும், கீதா அம்மணியும் மீண்டும் அதே செப்டம்பர்த் திங்களில் 26ஆம் நாள் நம் வலைப்பூவை வலைச்சர இதழில் பரிந்துரைத்தனர். [பார்க்க: வெள்ளி: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கிள்சின் 5 ஆம் நாள்: பட்டறிவுதான் சிறந்த ஆசிரியன்! தமிழ்ச் சோலையின் ஒரு பகுதி!].

அவர்களையடுத்து, நண்பர் கில்லர்ஜி அவர்களும் திசம்பர் 20, 2014 அன்று மறுபடியும் ஒருமுறை ‘வலைச்சர’த்தில் இந்தத் தளத்தினைப் பரிந்துரைத்தார். [பார்க்க: சனி, சங்கீதாவுக்கு விரதம் – ஏழாம் அறிவு (A.R. முருகதாஸ் 2011)].

அவருக்குப் பின், கடந்த மார்ச்சு 6, 2015-இல் ‘தேன் மதுரத் தமிழ்’ கிரேஸ் அவர்களும் ஒருமுறை நம்மைப் பரிந்துரை புரிந்தார். [பார்க்க: நடத்திக்காட்டு].

என்னுடைய வலைச்சரக் கனவை ஒன்றுக்குப் பலமுறை மீண்டும் மீண்டும் நிறைவேற்றி வைத்த இந்த நண்பர்கள் அனைவருக்கும் இந்த இடத்தில் மீண்டும் ஒருமுறை உளமார்ந்த நன்றி!

இணைய நட்பைப் பொறுத்த வரை, எவ்வளவுதான் அன்பாகப் பழகினாலும், ஏதாவது சண்டை என வந்தால் நண்பர்களுக்கு ஆதரவாகக் களமிறங்குபவர்களைக் காண்பது அரிது. கல்லூரியில் தனக்கென வலுவானதொரு நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு தாதா மாதிரி திரிவது போல அப்படியொரு நட்பு வட்டம் இங்கு ஒருவருக்கு இருந்தால்தான் அஃது இயலும். என்னைப் பொறுத்த வரை, எங்காவது நல்லதொரு கருத்தையோ பதிவையோ யாராவது இகழ்ந்துரைத்தால், நல்ல மனிதர்கள் வம்புக்கிழுக்கப்பட்டால் உடனே வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போவது என் வழக்கம். பாதிக்கப்படுபவர்கள் எனக்கு நண்பர்களாகவோ, முன் பின் தெரிந்தவர்களாகவோ கூட இருக்க வேண்டிய தேவை இல்லை. அவர்கள் பக்கம் அறம் இருந்தாலே போதும், யார் அவரை வம்புக்கிழுத்தாலும் நான் அழையா விருந்தாளியாய் ‘இறங்கிச்’ செய்வேன். ஆனால், நான் அப்படி யாராலாவது பாதிக்கப்பட்டால் எனக்கு ஆதரவாகக் களமிறங்குபவர்கள் அரிது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இணைய வாழ்வில் முதன்முறையாக அப்படியொரு நண்பரை இந்த ஆண்டு இங்கு சந்தித்தது குறிப்பிட வேண்டிய நிகழ்வு.

இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு சரியா தவறா? - சில விளக்கங்கள்!’ பதிவில் “உனக்கெல்லாம் வேற வேலை இல்லையா” என்று பெயர் குறிப்பிடக் கூட நேரமில்லாத அளவுக்கு மும்முரமான ஒருவர் கருத்திட்டிருந்தார். எப்பொழுதும் போல் எனக்கே உரிய பாணியில் நான் அதற்கு பதிலடி கொடுத்துவிட்டேன். ஆனாலும், நண்பரும் பதிவருமான ஜெ பாண்டியன் அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, “அடேய் பெயரில்லாத புழுவே, பெயர் வைத்துக்கொண்டு வா பின் பேசலாம்..” என்று அந்த ஆளுக்குச் சுடச் சுடப் பதிலடி கொடுத்தது என்னை உருக வைத்தது. அதுவும், ஒரு நாட்டின் அதிபர் பற்றிய, வாழும் நாட்டின் வெளியுறவு தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தைக் கொண்ட அந்தப் பதிவில் அப்படி அவர் துணிந்து எனக்காகக் கருத்திட்டது எளிய செயல் இல்லை! இணையத்தில் இப்படியும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், என்னை யாராவது தவறாகப் பேசினால் அதைக் கண்டிக்க எனக்கும் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று பெருமகிழ்ச்சி எய்திய நேரம் அது! நண்பர் ஜெ.பாண்டியன் அவர்களை நன்றியோடு இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்நாள் முழுதும் நான் மறக்க முடியாத பேரன்புத் தறுவாய், வலைப்பூவை நான் அழித்த அந்த வேளைதான்!

இந்த ஆண்டு நடந்த சில கொந்தத் (hack) தாக்குதல்களும், அதையொட்டி நடந்த சில சொந்த வாழ்க்கை நிகழ்வுகளும், வேறு சில தவறான புரிதல்களுமாய்ச் சேர்ந்து வலைப்பூவை அழித்தே ஆக வேண்டும் என்று என்னை நம்ப வைத்து விட்டன. தளத்தை அழிக்கும் முன் அனைவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘அடர் சிவப்புக் கண்ணீருடன் விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்!’ என்று ஒரு பதிவை வெளியிட்டேன். அடடடடா! அப்பொழுது பதிவுலக நண்பர்கள் காட்டிய அன்புதான் என்னே!!!

“அப்படியெல்லாம் போக விட முடியாது... திரும்பி வாருங்கள்... என் ஆசிரியரின் மறுவடிவமாக உங்களைக் காண்கிறேன்...” என்றெல்லாம் ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களும் ‘ஊமைக்கனவுகள்’ ஜோசப் விஜு ஐயா அவர்களும் இன்ன பிற நண்பர்களும் எழுதிய கருத்துக்கள் என்னை நெகிழ்ந்துருகி நெக்குருகச் செய்தன என்றால் அது மிகையில்லை. இப்பொழுது நினைத்தாலும் அவர்களுடைய அந்த அன்பு என்னைத் திகைக்கச் செய்கிறது! பதிவை வெளியிட்ட 24 மணி நேரத்தில் 126க்கும் மேற்பட்ட வருகைகளும் பிரிவின் வேதனை தரும் மேற்படி கருத்துக்களுமாய்ச் சேர்ந்து எத்தனை எத்தனை பேர் என்னை இங்கு விரும்புகிறார்கள் என்பதை அறியச் செய்தது.

பின்னர், நடந்த கொந்தத் தாக்குதலுக்கும் அதையொட்டி என் வாழ்வில் இது தொடர்பாக நடந்த வேறு சில நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; நான்தான் இரண்டையும் தவறாக முடிச்சிட்டுப் புரிந்து கொண்டேன் என்பது தெரிய வந்தது. மனம் நிறைந்த ஆறுதலுடன் மீண்டும் வலைப்பூவை நான் உயிர்ப்பிக்க, நண்பர்கள் அத்தனை பேரும் ஓடி வந்து அரவணைத்தனர். நல்வரவுச் செய்திகளால் என் நெஞ்சம் நிறைத்தனர். ஜோசப் விஜு ஐயா எனக்காகத் தனியே வெண்பாவெல்லாம் எழுதி வரவேற்றார். பதிவுலகத் தோழர்களின் பேரன்பு மழையில் திக்குமுக்காடிய அந்த நாட்களைத்தான் இந்த ஆண்டின் வலைப்பூப் பயணத்தில் தலைசிறந்த நினைவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

இவை தவிர, ‘தமிழ்10 திரட்டியில் உங்கள் வலைப்பூவை இணைக்க முடியவில்லையா? – இதோ தீர்வு!’ என்ற பதிவு தினமணி வலைப்பூப் பகுதியின் நாளிதழ் முகப்பில் பல நாட்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததும் இந்த ஆண்டின் நினைவில் மணக்கும் நிகழ்வே!

நன்றி!!!

இணையப் பெருந்தோட்டத்தின் பல்லாயிரக்கணக்கான பூக்களுள் இதையும் ஒரு பொருட்டாய் மதித்துப் படித்த, வாக்களித்த, பகிர்ந்த நேயர்களுக்கும்...

பல்வேறு வழிகளில் தளத்தைப் பின்பற்றுகிற, புதிய, பழைய அகத்தினர்களுக்கும்...

தளத்தைப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு சென்று பலரும் படிக்கவும் பாராட்டவும் முதன்மைக் காரணிகளாய் விளங்கும் சமூக வலைத்தளங்கள், அவற்றின் குழுக்கள், திரட்டிகள், செருகுநிரல் (plugin) சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கும்...

தளத்தின் வளர்ச்சியை அறிய உதவும் தரவகச் சேவையகங்கள் (Data Analyzing Sites), பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் ஆகியவற்றுக்கும்...

இந்த ஆண்டு இடுகைகளுக்கான படங்களை வழங்கிய பல்வேறு இணையத்தளங்களுக்கும்...

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அருமையான இலவசச் சேவையை வழங்கும் பிளாகருக்கும்...


Thank You! Thank You! Heartily Thank You!
நன்றி! நன்றி! உளமார்ந்த நன்றி!



காணிக்கை

என் அம்மாவுக்கு அடுத்தபடியாக

எனக்கு நிறைய நிறையக் கதைகள் சொல்லி

கேட்டபொழுதெல்லாம் கதைநூல்கள் வாங்கித் தந்து

ராணி காமிக்சு, கோகுலம் போன்ற சிறுவர் ஏடுகளை

இதழ்தோறும் வாங்கி வந்து

என் படிப்பார்வத்துக்கு

பிள்ளைப் பருவத்திலேயே

செழுநீர் பாய்ச்சி

இன்று எழுத்திலும் தமிழிலும்

எனக்கு இவ்வளவு ஆர்வம் ஏற்பட

முதன்மைக் காரணமாகத் திகழ்ந்த

காலஞ்சென்ற என் பெரியப்பா

திரு.என்.இலட்சுமணன் அவர்களுக்கு

வலைப்பூவின் இந்த ஆண்டுச்

சிறு வெற்றியைக் காணிக்கையாக்குகிறேன்!

My uncle Mr.N.Lakshmanan

பி.கு: வலைப்பூவின் குறை நிறைகள் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி . நியுவ் முல்லைத்தீவு, ௩. எழுத்து.காம்.

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கி, உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூ இந்த ஓராண்டில் அடைந்திருக்கும் வளர்ச்சி அடுத்த ஆண்டில் மேலும் பன்மடங்காகப் பெருக உதவலாமே!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

23 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்.

    உங்கள் பெயர் எனக்குத் தமிழின்பால் ஆர்வத்தைத் திருப்புவித்த ஆசிரியரின் பெயர். அதனால்தான் நான் உங்களை முதலில் கவனித்து வந்தது.
    தமிழில் பெரிதும் பிழையற்றுக் காணப்படும் தளம் என்பதும் என் கவனம் ஈர்க்கப்படப் பெரிதும் காரணமாயிற்று.

    இணையத்தில் இருக்கும் அறிவுத் திமிங்கலங்களுக்கு முன் நானெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை வலையுலகிற்கு வந்து இன்னும் ஓராண்டு நிறைவுறாத போதும் புரிந்து கொண்டிருக்கிறேன்.

    உங்கள் பாராட்டு என் மேல் உள்ள அன்பினால் என்று உணர்கிறேன். அது மிகை என்றபோதும்.
    என் தளத்திற்கு நீங்கள் செய்த உதவி பெரிது.
    என்றும் நன்றியுண்டு அதற்கு.

    இந்த இடுகை ஒரு ஆண்டின் தணிக்கை அறிக்கையை நினைவு படுத்துகிறது.

    இவ்வளவு தகவல்களை எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள் என்றெண்ணும் போது மலைப்பாக இருக்கிறது.

    வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் அன்பராக வந்து கருத்திட்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி ஐயா!

      தமிழில் பெரிதும் பிழையற்றுக் காணப்படும் தளம் என்றும், இடுகை ஓர் ஆண்டின் தணிக்கை அறிக்கையை நினைவுபடுத்துவதாகவும் பாராட்டியதற்கு நன்றி ஐயா!

      இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும்பொழுது திடீரென முன்பு மறந்து போன ஒரு வேலை நினைவுக்கு வந்து, அதைச் செய்வதற்காகப் புதுத் தத்தலைத் திறந்து, சட்டென எதற்காக அந்தத் தத்தலைத் திறந்தேன் என்பதையே மறந்து போய் விழித்துக் கொண்டிருப்பவன் நான். அந்த அளவுக்கு அருமையான நினைவாற்றல் கொண்டவன்! எனவே, மேற்படி பதிவில் உள்ள விதயங்களெல்லாம், பிளாகர் கணக்கில் பதிவாகியிருக்கும் தகவல்களைக் கொண்டும், உண்மையிலேயே மறக்க முடியாதபடி அந்த நினைவுகள் மனதில் பதிந்து போயிருப்பதாலும் எழுதப்பட்டவையே, வேறொன்றுமில்லை. பாராட்டுக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி!

      நீக்கு
    2. உங்களைப் பற்றிய என் பாராட்டை நீங்கள் மிகை என்று கூறினாலும், உங்கள் பதிவுகளைப் படிக்கிற, இதோ இங்கும் இப்பொழுது வருகை புரிந்திருக்கிற நம் நண்பர்கள் அறிவார்கள் அப்படியில்லை என. உங்கள் அளவுக்குத் தமிழ்ச் சேவையைச் செய்ய எனக்குத் தமிழறிவு போதாது. எனவேதான், உங்கள் தளத்தை வடிவமைத்துக் கொடுத்தாவது அதன் மூலம் ஒரு சிறு மனநிறைவைப் பெற்றுக் கொண்டேன். ஆக, அஃது உதவியில்லை; தன்னலம்தான். அதற்கு நீங்கள் நன்றி பாராட்ட வேண்டியதேயில்லை ஐயா! :-)

      நீக்கு
  2. நான் கடந்த ஒரு வருடத்தில் ஆச்சரியப்பட்ட தளங்களில் இதுவும் ஒன்று. மிகவும் சிறப்பான பங்களிப்பு. உங்கள் விமர்சனங்களை பல தளங்களில் கண்டு மிகவும் வியந்துள்ளேன். தெளிவும் நேர்மையும் உங்களின் இரண்டு கண்கள். தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! தங்கள் ஒவ்வொரு வரியும் என்னை மிகவும் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன. சமூக நலன் பேசும் பதிவரான தங்களிடமிருந்து இப்படியொரு பாராட்டுக் கிடைத்திருப்பதை எனக்குக் கிடைத்த நல்லதொரு ஏற்பிசைவாகவே உணர்கிறேன்! "தெளிவும் நேர்மையும் உங்களின் இரண்டு கண்கள்" என்கிற தங்கள் பாராட்டை எனக்குக் கிடைத்த சிறந்ததொரு சான்றிதழாக மதிக்கிறேன். மிகவும் நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  3. அருமை நண்பரே பதிவை அழகாக அமைத்து இருக்கிறீர்கள் மென்மேலும் நல்ல பதிவுகள் தந்து சிறந்த பதிவர்களில் ஒருவராக திகழ எமது வாழ்த்துகள்.
    என்னையும் மதித்து குறிப்பிட்டமைக்கு நன்றி
    நண்பரே இது மூன்றாவது ஆண்டுதானே....
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஃதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்? உங்களைக் குறிப்பிடாமல் கடந்த ஆண்டு பற்றிய பதிவை எழுதவே முடியாதே! கடந்த ஆண்டு நீங்கள் விருது வழங்கியதும், மைதிலி அவர்களின் வலைச்சரப் பரிந்துரைகளை நான் பின்தொடரத் தொடங்கியதும்தான் பெரும்பாலானோரின் வருகைக்கே காரணம். அவைதாம் கடந்த ஆண்டின் வெற்றிக்கே காரணம். உஙளைக் குறிப்பிடாமல் எப்படி?

      ஆம் ஐயா! இது மூன்றாவது ஆண்டுதான். அதாவது, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

      பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  4. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நடக்கப் போகும் பதிவர் மாநாட்டிற்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்... உங்கள் சந்திக்க ஆவலாய் உள்ளேன்...

    தொடர்ந்து மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அடுத்த பதிவர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டனவா? மகிழ்ச்சி! உங்கள் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஆம் ஐயா! அதைப் பற்றிக் கூட ஒரு பதிவு எழுதி நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்க நினைத்தேன். ஆனால், நேரமே கிடைக்கவில்லை. எதற்கும் இங்கே ஒருமுறை கூறிவிடுகிறேன்.

      "நண்பர்களே! தமிழ் 10 திரட்டித் தளம் அழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது அது சேவையில் இல்லை. அதனால், அதன் வாக்குப்பட்டையும் வேலை செய்யாது. நீங்கள் ஒருவேளை இன்னும் உங்கள் தளத்தில் அந்த வாக்குப்பட்டையை நிறுவி வைத்திருந்தால் உடனே நீக்கி விடுங்கள். இல்லாவிட்டால், தளம் திறக்க நேரமாகும்!".

      ஆனால், ஐயா! நான் 'தமிழ்10' பற்றிய பதிவை எழுதியது கடந்த ஜூனில். நீங்கள் கூட அந்தப் பதிவைப் பாராட்டியிருந்தீர்கள்!

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் ஐயா! உங்கள் பதிவுகளை ரசித்து படிப்பவர்களில் நானும் ஒருவன்! தொடருங்கள்! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா! வெகுநாட்கள் கழித்து மீண்டும் தங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி! நன்றி!

      நீக்கு
  7. அன்புள்ள அய்யா,

    தங்களின் ‘அகச் சிவப்புத் தமிழ்’ இப்பொழுது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். வாழ்த்துகள். வலைத்தளம் பற்றி விரிவாக மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டீர்கள். நண்பர் விஜு அய்யா தங்களைப் பற்றி கூறியிருக்கிறார்.

    தொடருங்கள்... தொடர்கிறேன் இனிமேல்...!
    நன்றி.
    த.ம. 5.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா! விஜு ஐயா வாயால் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பெருமைப்படுகிறேன்! தாங்கள் தொடர்ந்து வருவதாகக் கூறியிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி! நன்றி ஐயா!

      நீக்கு
  8. அகத்தமிழுக்கு இரண்டாவது பிறந்த நாள் வாழ்த்து! தொடர்ந்து பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மணி! தமிழறிவு மிகுந்த பதிவர்ளுள் ஒருவரான தாங்கள் என் தளத்துக்கு முதன்முறையாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! நன்றி! தொடர்ந்து படியுங்கள்! தங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

      நீக்கு
  9. எனக்குத் தமிழில் ஆர்வம் அதிகம் ஆனால் அறிவு மிகவும் குறைவு. இப்போது தான் இலக்கியச்சாரல், ஊமைக்கனவுகள் போன்ற வலைத்தளங்களுக்குத் தொடர்ந்துச் சென்று வாசித்துகொண்டிருக்கிறேன். புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கட்டுரை வாசித்தேன். மிகவும் நன்று. மற்ற கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு நன்றி! உங்கள் கருத்துக்கள் என்றும் வரவேற்கப்படுகின்றன மகிழ்ச்சியுடன். ஆனால், உங்களுக்குத் தமிழறிவு குறைவு என்பதை ஏற்க முடியாது. 'ஊமைக்கனவுகள்' தளத்தில் நீங்கள் இடும் பின்னூட்டங்களை அவ்வப்பொழுது படித்திருக்கிறேன். :-)

      மறுவருகைக்கு நன்றி!

      நீக்கு
  10. வாழ்த்துக்கள்!!! தொடரட்டும் .தங்களின் ‘அகச் சிவப்புத் தமிழ்.........

    பதிலளிநீக்கு
  11. omg! நிச்சயமாய் இந்த பதிவு என் கண்களுக்கு தப்பி போய் விட்டது!!!!:(((

    இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது சகா! உங்களின் முதல் கருத்து வலைச்சரத்தில் என் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டி கொஞ்சம் காட்டமாகவே இருந்தது. profile படம் வேறு கொஞ்சம் சீரியசான மனிதரின் படம். சரியான சிடுமூஞ்சி போல என நினைத்துக்கொண்டேன்.:)))) இப்போ நட்பின் புரிதலால் தான் இதை வெளிப்படையாக சொல்கிறேன்.
    அப்புறம் தில்லையகம் சகாஸ் உங்களை பற்றி தாறுமாறாக புகழ்ந்து, எனக்கு hang out செய்தி அனுப்பி படிக்கச்சொன்னார்கள். சரி படித்துப்பார்கலாம் என வந்தால் உங்கள் பார்ப்பனர்களின் பாட்டன் சொத்தா பதிவு:) இனம் இனத்தை சேரும் இல்லையா:) என்ன நகைமுரண் சகாஸ் இந்த பதிவில் எதிர்கருத்து கொண்டிருந்தனர்:)
    வியந்து, வியந்து ரசிக்கும் வெகு சில பதிவுகளில் உங்கள் பதிவுகளும் அடக்கம். ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது சகா இந்த தருணம்.
    இந்த பயணத்தின் திசை இன்னும் நீளமானது. உங்கள் இலக்குகள் இன்னும் உயரியவை. அவற்றை அடையும் போது உங்களது உயரமும் இன்னுமின்னும் கூடும். இன்னும் சொல்லபோனால் உங்கள் தகுதிக்கு இன்றைய நிலை கம்மிதான். இன்னும் இன்னும் வெற்றிபெறவேண்டும் சகா. தமிழ் வளர்ப்போம். தமிழால் வளர்வோம் சகா:) வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது சகா! உங்களின் முதல் கருத்து வலைச்சரத்தில் என் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டி கொஞ்சம் காட்டமாகவே இருந்தது. profile படம் வேறு கொஞ்சம் சீரியசான மனிதரின் படம். சரியான சிடுமூஞ்சி போல என நினைத்துக்கொண்டேன்.:)))) இப்போ நட்பின் புரிதலால் தான் இதை வெளிப்படையாக சொல்கிறேன்// - ஹாஹ்ஹாஹா! அப்படியா! எனக்கு அது நினைவில்லை. அப்புறமாய்ப் போய்ப் பார்க்கிறேன். :-)

      //தில்லையகம் சகாஸ் உங்களை பற்றி தாறுமாறாக புகழ்ந்து, எனக்கு hang out செய்தி அனுப்பி படிக்கச்சொன்னார்கள்// - ஓ! அவர்கள் இருவருக்கும் என் நன்றி!

      உங்கள் வாழ்த்து வரிகள் என்னை நெக்குருகச் செய்கின்றன. நன்றி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல! நன்றி! மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்