.

புதன், ஜூன் 03, 2015

மச்சி! நீ கேளேன்! - 6 | த(க)ற்காலப் பயணம்!


Stone Age

ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் கடந்த இதழில் (13.4.15) பார்த்தோம். அந்த உணர்வு இல்லாவிட்டால்?... அது பற்றி இந்தப் பகுதியில் கொஞ்சம் பார்ப்போமா மச்சி?

இன்று தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் அனைவரும் குடிப் பழக்கம் பற்றி மிகவும் கவலை தெரிவிக்கிறார்கள். குடிக்காதவர் என யாருமே இல்லை எனச் சொன்னால் நம்பக்கூடிய அளவுக்கு ஆகி விட்டது இன்றைய நிலைமை. இதற்கு ரசனை இல்லாத வாழ்க்கைமுறையும் ஒரு காரணம் எனச் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? ஆனால், அது உண்மை!

குடிக்கிறவர்கள் பெரும்பாலும் அதற்குச் சொல்லும் காரணம், மன அழுத்தம் (stress). ஆடல், பாடல், இசை, இலக்கியம் என அதற்கு எத்தனையோ தீர்வுகள் இருக்க, குடிப் பழக்கத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இப்படிப்பட்ட நல்ல ரசனைகளை வளர்த்துக் கொள்ளாததைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? மாலை ஆறு மணிக்கு மேல் கவியரங்கத்துக்கோ, இலக்கியக் கூட்டத்துக்கோ, சொற்பொழிவுக்கோ போக வேண்டியிருந்தால் ஒருவர் குடிக்கப் போவாரா? அந்த நினைப்புதான் வருமா?

குடிப் பழக்கம் மட்டுமில்லை, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எனப் பல கெட்ட குணங்களுக்கு ஏதோ ஒரு வகையில் ரசனையின்மைதான் காரணமாக இருக்கிறது!

கலைவடிவங்கள் அனைத்துமே மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நற்பண்புகளை நினைவூட்டிக் கொண்டே இருப்பதாலும், அப்படிப்பட்ட ஏதேனும் ஒன்றின் மீது தீவிர ரசனை கொண்டவர்களுக்கு அதற்குச் செலவிடவே நேரம் சரியாக இருப்பதாலும் ரசனை மிகுந்த மனிதர்களுக்கு மற்றவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளவோ, புறம் பேசவோ, தவறாக நினைக்கவோ வாய்ப்புக் குறைவு! அவற்றுக்கெல்லாம் அவர்களுக்கு நேரமும் இருக்காது; ரசனையால் பண்படுத்தப்பட்ட அவர்கள் உள்ளம் அவற்றுக்கு இடமும் கொடுக்காது!

நேற்றைக்கு வேலைக்கு வந்தவன் இன்று பதவி உயர்வால் தன்னைத் தாண்டி எங்கேயோ போய்விட்டானே எனப் பொருமும் நம் சக அலுவலர்கள் முதல், “எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன்” என உறுமும் திரைப்பட வில்லன்கள் வரை அடுத்தவர்களுக்குத் தீங்கு நினைக்கும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையை ஆராய்ந்தால் அவர்களுள் பெரும்பாலோர் பெரிதாக எந்த வித ரசனையும் இல்லாதவர்களாக இருப்பது தெரிய வரும்!

இவர்களுக்கு நேர்மாறாக நாணயங்கள், அஞ்சல்தலைகள், அரிய நூல்கள் போன்றவற்றை அலைந்து திரிந்து சேகரிப்பவர்கள், நல்ல கலைநிகழ்ச்சிகளைத் தேடிப் பிடித்துச் சுவைப்பவர்கள், கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தியில் ஆண்டுக்கு ஒருமுறை படும் கதிரவன் ஒளியைப் பார்ப்பதற்காகக் குறிப்பிட்ட நாளுக்கு எங்கிருந்தோ பறந்து வரும் வெள்ளைக்காரர்கள் எனத் தன் ரசனைக்காக நேரத்தையும் பணத்தையும் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்பவர்களுக்கு அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்படவோ, அவர்களுக்குத் தீங்கு நினைக்கவோ நேரம் இருப்பதில்லை!

இப்படி எதையுமே ரசிக்கத் தெரியாமல் இளமைக் காலத்தைக் கழித்தவர்கள்தாம் முதுமையில் மகனையோ மகளையோ மருமகளையோ குறைசொல்லிக் கொண்டு, அவர்களின் இயல்பான வார்த்தைகளையும் நடவடிக்கைகளையும் கூடத் தவறாகப் புரிந்துகொண்டு அழுது புலம்புகிறார்கள். ஏதாவது ஒன்றில் தீவிர ரசனையும் ஈடுபாடும் கொண்ட பெரியவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதுமில்லை; அப்படி அழுது புலம்பித் தாழ்வு மனப்பான்மை கொள்ள அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. எப்பொழுதுமே குறிப்பிட்ட ஒரு துறை மீதான ஆர்வமும் தேடலும் ஆழ்ந்த சிந்தனையுமாக இருப்பதால் அவர்கள் எப்பொழுதுமே நிகழ்காலத்தை விரல்நுனியில் வைத்திருப்பவர்களாகவும் (updated) இளைஞர்களுக்கு இணையான அறிவுக்கூர்மையும், துடிப்பும் உள்ளவர்களாகவும் கூட விளங்குகிறார்கள். சுஜாதா, வாலி ஆகிய மேதைகள் இறுதி மூச்சு வரை இளைஞர்களுக்கே சவால் விடுக்கும் வகையில் திறமையுடன் வலம் வந்த இரகசியம் இதுதான்!

எல்லாவற்றுக்கும் மேலாக, விலங்கோடு விலங்காகத் திரிந்து கொண்டிருந்த நாம் மனிதனாக மாறக் காரணமே ரசனை உணர்வுதான் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். ஆக, அது இல்லாத வாழ்வு மனித வாழ்வே இல்லை. ஆதிகாலக் காட்டுமிராண்டி வாழ்வுதான்.

Computer Era Barbariansஇன்றைய கல்விமுறையும், உலகமய நாகரிகமும் சேர்ந்து படிப்பதும், சம்பாதிப்பதும், பிள்ளை பெற்றுக்கொள்வதும், இன்னபிற பொருளியல் சார்ந்த (materialistic) வெற்றிகளை ஈட்டுவதும் மட்டும்தான் வாழ்க்கை என நமக்குக் கற்பித்து வைத்துள்ளன. இது முழுக்க முழுக்கக் கற்கால மனிதர்களின் வாழ்க்கைமுறையேதான்!

இன்று நாம் பிழைப்பை மட்டுமே குறியாக வைத்துப் படிக்கிறோம்; அதே போல அவர்கள் அன்று மற்ற விலங்குகளிடமிருந்து பிழைக்கத் தேவையான வேட்டை நுணுக்கங்களை மட்டுமே கற்று வாழ்ந்தார்கள். இன்று நாம் பணமாகச் சேர்த்து வைக்கிறோம். அவர்கள் கிழங்கு, தோல், என உணவு வகைகளாகவும் ஆடை வகைகளாகவும் பொருட்களாகச் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இனப்பெருக்கத்துக்கு முதன்மை கொடுத்தே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தார்கள்; நாமும் அது போல, ஒரு குழந்தை பிறந்தவுடன், அதற்கு மேல் வாழ்க்கைத்துணையோடு ஒத்துப்போக முடியாமல் மணவிலக்குப் பெற்றுக் கொள்கிறோம். நமது வெற்றிகள் பணம், சமூகநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை; அவர்களின் வெற்றிகள் ஈடுபட்ட வேட்டைகள், அவற்றில் கிடைத்த பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையிலானவை. ஆக மொத்தத்தில், இரண்டும் ஒன்றுதான்!

ஆம்! ரசனை இல்லாத வாழ்வு தீய எண்ணங்களையும், கெட்ட பழக்கங்களையும் தூண்டுகிறது. ரசனை இல்லாத உள்ளம்தான் அடுத்தவர்களுக்குக் கெடுதலும் நினைக்கிறது; பிறரைப் பற்றித் தவறாகவும் நினைக்கிறது. ரசனை இல்லாத வாழ்க்கைமுறை மீண்டும் நம்மை ஆதிகாலக் காட்டுமிராண்டியாக மாற்றுகிறது!

எனவே, ரசித்துப் பழகு மச்சி!
கலைகளை, அறிவியலை, தொழில்நுட்பத்தை, சக மனிதர்களை ரசிக்கப் பழகுவோம்!
வாழ்க்கை அழகாகும்!
மனிதநேயம் மிக்க
கண்ணீரே இல்லாத - புது
உலகம் உருவாகும்!
--பகிர்வேன்...

(இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்). 

❀ ❀ ❀ ❀ ❀ 

படங்கள்: நன்றி ௧) சமகளம், ௨) E - Space.

முந்தையவை: 

» மச்சி! நீ கேளேன்! - ௫ | ரசனை தரும் வாழ்க்கைத்தரம்!

» மச்சி! நீ கேளேன்! - 4 | இலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா? - பொறியியல்துறை வேலைவாய்ப்பின்மையும் தீர்வும்!

» மச்சி! நீ கேளேன்! - 3 | பூமி கண்ணைக் குத்தும்! - உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தக் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்தே ஐந்து நெறிகள்!

» மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!

» மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர்!

பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் கருத்திட வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!


 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. ரசித்துப் பழகு மச்சி!
    கலைகளை, அறிவியலை, தொழில்நுட்பத்தை, சக மனிதர்களை ரசிக்கப் பழகுவோம்!
    வாழ்க்கை அழகாகும்!
    மனிதநேயம் மிக்க
    கண்ணீரே இல்லாத - புது
    உலகம் உருவாகும்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிமொழிந்தமைக்கு நன்றி ஐயா! இதைத் தங்கள் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். :-)

      நீக்கு
  2. அருமை... இன்ப துன்பத்தையும் ஒன்றே என்பதையும் சேர்த்து...

    பதிலளிநீக்கு
  3. ஐயா வணக்கம்.

    முன்பே தங்களின் இடுகையைப் படித்துவிட்டேன்.
    அலைபேசியில் என்பதால் அது கொண்டு கருத்திட முடியவில்லை.

    “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணர்வோர்” என இந்த ரசனை உள்ள மக்களைக் குறித்துத்தான் தொல்காப்பியன் கூறியதாக நினைக்கிறேன்.

    ரசனைக்குப் பெரிதும் காரணமாக அமைபவை இவ்விரு புலன்களும் தானே!

    வாழ்வியல் பதிவை உங்களுக்கே உரிய தனித்த நடையில் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.

    வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! ரசனை பற்றித் தொல்காப்பியர் கூற்றையெல்லாம் மேற்கோள் காட்டிக் கருத்திட்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி! இப்படிப்பட்ட தகவலார்ந்த கருத்துரைகளைத் தங்களிடமிருந்துதான் எதிர்பார்க்க முடியும். நன்றி ஐயா!

      //உங்களுக்கே உரிய தனித்த நடையில்...// - அப்படியெல்லாம் ஒன்று எனக்கு இருக்கிறதா!!

      நீக்கு
  4. நண்பரே..

    ஒரு விடுப்புக்கு பிறகு வருகிறேன்...

    இந்த பதிவை படிக்கும் போது நிறைய எழுத தோன்றுகிறது....

    " குடிப் பழக்கம் மட்டுமில்லை, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எனப் பல கெட்ட குணங்களுக்கு ஏதோ ஒரு வகையில் ரசனையின்மைதான் காரணமாக இருக்கிறது!... "

    இதற்கு மேலும் என்ன எழுதி பின்னூட்டமிட்டுவிட முடியும் என்றும் தோன்றுகிறது !

    சில எழுத்தை படித்து வியப்பதுடன் நிறுத்திக்கொள்வதே நல்லது !

    இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்...

    வியந்து வாழ்த்துகிறேன்...

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிதமிஞ்சிப் பாராட்டி விட்டீர்கள் ஐயா! என்ன சொல்வதெனத் தெரியவில்லை. இந்தப் பாராட்டுக்கு ஏற்ப என் தகுதியை வளர்த்துக் கொள்ள முயல்கிறேன். மிகவும் நன்றி!

      நீக்கு
  5. ஏதாவது ஒன்றில் தீவிர ரசனையும் ஈடுபாடும் கொண்ட பெரியவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதுமில்லை; அப்படி அழுது புலம்பித் தாழ்வு மனப்பான்மை கொள்ள அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. எப்பொழுதுமே குறிப்பிட்ட ஒரு துறை மீதான ஆர்வமும் தேடலும் ஆழ்ந்த சிந்தனையுமாக இருப்பதால் அவர்கள் எப்பொழுதுமே நிகழ்காலத்தை விரல்நுனியில் வைத்திருப்பவர்களாகவும் (updated) இளைஞர்களுக்கு இணையான அறிவுக்கூர்மையும், துடிப்பும் உள்ளவர்களாகவும் கூட விளங்குகிறார்கள். சுஜாதா, வாலி ஆகிய மேதைகள் இறுதி மூச்சு வரை இளைஞர்களுக்கே சவால் விடுக்கும் வகையில் திறமையுடன் வலம் வந்த இரகசியம் இதுதான்!//

    மிக மிகச் சரியே! நாம் வாழ்க்கையை ரசித்து வாழத் தொடங்கிவிட்டால் விரக்தி என்பதே வராதே! எல்லோரையும் பாகுபாடற்று அம்பு செய்யத் தொடங்கிவிட்டால் எல்லாமே இனிமையாகிவிடும்...மிக அழகான பதிவு!
    (இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்).
    ஆஹா! அருமை! மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா, அம்மணி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்