.

வெள்ளி, அக்டோபர் 12, 2018

உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி

What is the place of Tamil in Tamils life? - A cross sectional study of the Tamil lifestyle of today
ண்மைக்காலமாகத் தமிழுணர்வு நம்மிடையே முன் எப்பொழுதையும் விடப் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. தமிழ், தமிழ்ப்பற்று என்றெல்லாம் முன்பு அரசியலாளர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். இன்று எளிய தமிழ் மக்களும் இப்படிப் பேசுவதை, எழுதுவதை நிறையவே பார்க்க முடிகிறது. ஆனால் வாய்மொழியில் இருக்கும் இந்த உணர்ச்சி நமது வாழ்க்கைமுறையில் இருக்கிறதா?... இன்றைய தமிழர் வாழ்வில் தாய்மொழிக்கு அவர்கள் அளித்துள்ள இடம் எது?...

இதோ, தமிழர் வாழ்வியலில் தாய்மொழியின் இடம் குறித்து ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி!

அன்றாட வாழ்வில் தமிழ்!

தமிழ் வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இக்காலத்தில் தமிழ்ச் சேவைகள், தமிழ்ப் பயன்பாட்டுத் தளங்கள் பெருகியிருக்கின்றன. பி.பி.சி., முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒன் வரை, ஆட்சென்சு முதல் ஆண்டிராய்டு பை வரை, விக்கிப்பீடியா முதல் வாட்சப் வரை எல்லாம்... எல்லாம்... எல்லாச் சேவைகளும் இன்று தமிழில் கிடைக்கின்றன. ஆனால் ‘தமிழன்டா’ எனப் பெருமையாகக் கொசுவச் சட்டையில் (T-shirt) எழுதிக் கொண்டு சுற்றும் நாம் எத்தனை பேர் இவற்றையெல்லாம் பயன்படுத்துகிறோம் எனக் கணக்குப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

எடுத்துக்காட்டாக, முதலில் இணையத் தமிழுலகை எடுத்துக் கொள்வோம்! துவிட்டர் (twitter), முகநூல், கூகுள்+ என ஏறத்தாழ சமூக வலைத்தளங்கள் அனைத்துமே தங்கள் சேவைகளைத் தமிழில் வழங்கித்தான் வருகின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் இவற்றைத் தமிழில் பயன்படுத்துகிறோம்? ஆயிரத்தில் பத்துப் பேர் என்றால் அதுவே பெரிது!

“சமூக வலைத்தளங்களில் எனக்குத் தமிழ் தெரியாத நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்னை அடையாளம் தெரிய வேண்டாவா?” என இதற்காவது ஒரு காரணம் சொல்லலாம். ஆனால், மின்னஞ்சல் சேவை...? அது தனிப்பட்ட முறையில் நாம் மட்டும் பயன்படுத்துவதுதானே? அந்தக் கணக்கை எத்தனை பேர் தமிழில் வைத்திருக்கிறோம்?...

இணையத்தை விடுங்கள்! நம் கைப்பட மட்டுமே பயன்படுத்துபவை கணினியும் கைப்பேசியும். அவற்றைத் தமிழில் கையாள்பவர்கள் எத்தனை பேர்? நம்மில் எத்தனை பேருடைய கணினி அல்லது கைப்பேசி தமிழில் இயங்குகிறது? குறைந்தது, எத்தனை பேர் கணினியில் தமிழ் மென்பொருள் உள்ளது? அப்படியே இருந்தாலும், அதை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? எத்தனை பேர் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்புகிறோம்? வாட்சு ஆப், ஹைக் போன்ற குறுஞ்செய்திச் சேவைகளில் எவ்வளவு பேர் தமிழில் தொடர்பு கொள்கிறோம்? நம் கைப்பேசியில் தொடர்பாளர்களின் (contacts) பெயர்களை எவ்வளவு பேர் தமிழில் பதிந்து வைத்திருக்கிறோம்?

சரி, இவற்றுக்குக் கூடப் பயன்பாட்டு வசதி முதலான காரணங்களைச் சொல்லலாம். ஆனால், மற்றவை?...

திருவல்லிக்கேணி போகப் பேருந்தில் ஏறுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்! நடத்துநரிடம் பயணச்சீட்டை எப்படிக் கேட்போம்? “ஒரு டிரிப்ளிகேன் கொடுங்க” என்றுதானே? ஏன், அதைத் ‘திருவல்லிக்கேணி’ என்றே சொன்னால் என்ன குடி முழுகிப் போய்விடும்? நம் ஊர்களின் பெயர்களை ஆங்கிலேயர்கள் தங்கள் வாயில் நுழையாததால் அவர்கள் பலுக்கலுக்கு (உச்சரிப்புக்கு) ஏற்ப மாற்றிப் பேசினார்கள். அதையே நாமும் பின்பற்றுவது எப்பேர்ப்பட்ட கிளிப்பிள்ளைத்தனம்?!

திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகிறோம். பரிசுப்பொருள் தரும்பொழுது பரிசுப் பொட்டலத்தின் மேலட்டையில் வாழ்த்தை, பெயரைத் தமிழில் குறிப்பிடுவோர் எத்தனை பேர்? அட, “பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” எனவோ, “மணவிழா வாழ்த்துக்கள்” எனவோ வாயாரத் தமிழில் சொல்பவர்கள் எண்ணிக்கைதான் என்ன? தமிழர் திருநாளாம் பொங்கலுக்கே “ஹேப்பி பொங்கல்” எனவும், “ஹேப்பி டமில் நியூ இயர்” எனவும் வாழ்த்துபவர்கள்தாமே நாம்!...

“சரி, இவற்றையெல்லாம் மாற்றிக் கொண்டால் மட்டும் என்ன நடந்து விடும்? இந்த இடங்களிலெல்லாம் தமிழ் பயன்படுத்தத் தொடங்கி விட்டால் உடனே தமிழ் வளர்ந்து விடுமா?” என்று நீங்கள் கேட்கலாம்.

அப்படியில்லை நண்பர்களே, ஒரு மொழி வாழ்வதும் அழிவதும் முழுக்க முழுக்க அதன் பயன்பாட்டைத்தான் பொறுத்திருக்கிறது. நினைத்துப் பாருங்கள், எப்பொழுது ஒரு மொழி அழிந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறது? அதைப் பயன்படுத்த யாரும் இல்லாத நிலையில்தான். எனவே நம் தாய்மொழியாம் தமிழை நாம் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருப்பது ஒன்றுதான் அதன் வாழ்வையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் ஒரே வழிமுறை! எனவேதான் அன்றாட வாழ்விலிருந்து தமிழ் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப்பட்டு வருவது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.

இன்னும் நுட்பமாக ஒன்று சொல்லவா?...

தமிழின் ‘ட’வும் ஆங்கிலத்தின் ‘எல்’லும் ஒரே வடிவம்தானே? ஆனால், இப்பொழுதெல்லாம் ‘ட’ வடிவத்திலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் நாம் ‘எல்’ வடிவத்தில்தான் புரிந்து கொள்கிறோம், கவனித்திருக்கிறீர்களா? “செஸ்ல குதிரை ‘எல்’ ஷேப்ல போகும்” என்கிறோம்; “தெரு ‘எல்’ மாதிரி வளைஞ்சிருக்கு” என்கிறோம்; இப்படி நிறைய!

ஒரு பொருளின் வடிவத்தைப் பார்க்கும்பொழுது கூட அதே வடிவில் இருக்கும் நம் தாய்மொழியின் எழுத்து நமக்கு நினைவுக்கு வரவில்லை; மாறாக, வேற்று மொழியின் எழுத்துதான் நினைவுக்கு வருகிறது என்றால் அதிலிருந்தே தாய்மொழிக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை நாம் வேற்று மொழிக்கு அளித்துவிட்டோம் என்பது புலனாகிறது, இல்லையா? பள்ளிகளில் தமிழை ‘இரண்டாம் மொழி’ என்றே தொடக்கத்திலிருந்து வகைப்படுத்திப் படுத்தி, நம் மனதிலும் அஃது இரண்டாம் இடத்திற்கே போய்விட்டது.

இவற்றுக்கெல்லாம் உச்சம் என்ன தெரியுமா? நம் உடல்மொழியிலேயே ஏற்பட்டுள்ள மாற்றம்! முன்பெல்லாம் ‘ஆம்’ என்பதற்கும் ‘சரி’ என்பதற்கும் இருவேறு விதமான தலையசைவுகளை நாம் செய்து வந்தோம், நினைவிருக்கிறதா? ‘ஆம் என்பதற்கு மேல் - கீழாகவும், ‘சரி’ என்பதற்கு இடவலமாகவும் தலையாட்டி வந்தோம். ஆனால் இப்பொழுது இரண்டுக்கும் ஒன்றே போல - மேலும் கீழுமாக - மட்டுமே தலையாட்டுகிறோம். அச்சு அசல் ஆங்கில உடல்மொழி இது! ஆங்கிலம் எந்த அளவுக்கு நம் நாடி நரம்பு வரை ஊறிப் போயிருக்கிறது என்பதற்குத் திகைப்பூட்டும் எடுத்துக்காட்டு இது!

ஆக இணையமொழி, கருவிமொழி, எழுதுமொழி, பேச்சுமொழி, உடல்மொழி என மொழிக்குண்டான ஐந்து தளங்களில் எங்கும் எதிலும் நாம் தமிழுக்கு முதன்மை தருவதில்லை. நம் மனதிலும் அது தாய்மொழிக்கு உரிய இடத்தில் இல்லை. இதுதான் கசப்பான உண்மை! 

இந்த இழிநிலையை மாற்றியே ஆக வேண்டும்! என்ன செய்யலாம்?...

பார்ப்போம் இதன் அடுத்த பகுதியில்!... 


(பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து ‘இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்’ என்ற கருப்பொருளில் நடத்திய ‘ஞயம்பட வரை’ என்ற கட்டுரைப் போட்டியில் தமிழின் இன்றைய நிலைமையும் தமிழர் நமது கடமையும்’ என்ற தலைப்பில் நான் ௩௦.௦௧.௨௦௧௬ அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி கிஸ் பி.என்.ஜி

தொடர்புடைய பதிவுகள்:
இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி!
 சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும்!
சிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும்
சிறுவர் இலக்கியமும் சிறுவர்களின் எதிர்காலமும் - பெற்றோர்களின் கனிவான பார்வைக்கு! 
இழிவானதா இனப்பற்று? 

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

11 கருத்துகள்:

  1. தமிழின் நிலை குறித்தான உங்கள் எண்ணங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

    மகிழ்ச்சி.

    நல்லதே நடக்கும் என்று நம்புவோம்; காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா! உங்கள் பாராட்டுக்கு நன்றி! நாம் எதிர்பார்க்கும் அந்த நல்லது நடக்க நாம் செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றியும் இதன் அடுத்த பாகத்தில் எழுத உள்ளேன். வருகை புரிக!

      நீக்கு
  2. சிந்திக்கத் தூண்டும் கட்டுரை. அன்றாடப் பேச்சுவழக்கில் ஆங்கிலம் மிகச்சாதரணமாக வருகிறது என்பது வருந்தவைக்கும் உண்மை ஐயா. இதை உணரவே இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது இயன்றவரை தமிழ் வார்த்தைகளே பயன்படுத்த முயற்சிக்கிறோம். தொடரும் பதிவினைப் படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! கிரேஸ் அவர்களே! வெகு காலம் கழித்துத் தங்கள் வரவு கண்டு மிக மிக மிக மகிழ்ச்சி!!!

      பேச்சிலும் இயன்ற வரை தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தத் தாங்கள் முயன்று வருவது கண்டு என் சிரம் தாழ்ந்த வணக்கம்! ஆனால் கட்டுரையில் நான் கூறியிருப்பது, தமிழ்ச் சொற்களை ஆங்கிலப் பலுக்கலில் (உச்சரிப்பில்) நாம் பயன்படுத்துவது பற்றி மட்டும்தான். இருப்பினும் தங்கள் தமிழ்ப்பற்றுக்கு மீண்டும் தலை வணக்கம்! பதிவின் மறுபாதி இன்னும் சில நாட்களில்! தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  3. அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! நன்றி ஐயா! இன்னும் சில நாட்களில் அடுத்த பதிவை வெளியிட்டு விடுவேன்! மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  4. தமிழைப் பொறுத்தவரை அது வீட்டில் பேச்சு மொழியாகவும்கருத்துப் பரிமாற்றத்துக்கு இணையத்தில் தமிழும் உபயோகிக்கிறேன் மொழி என்பது கருத்துப் பரிமாற்றம்தொடர்புகொள்ளவும் தானே நம்மைப் போல் பிறருக்கும் புரிதல் வேண்டுமல்லவாதமிழ்ப் பற்று என்பது நம் உடலில் ஊறி இருக்க வேண்டும் கட்டாயப்படுத்தி திணிப்பது தவறு என்பதே என் நிலைப்பாடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! இங்கு யாரும் யாருக்கும் மொழிப்பற்றைத் திணிக்க முயலவில்லை; இவையெல்லாம் வெறும் நினைவூட்டல்களே! இந்தியா போன்ற, தாய்மொழிக்கு வேலையில்லாத ஒரு தேசிய அமைப்பில் இத்தகைய நினைவூட்டல்கள் நம் மக்களுக்குத் தேவையாயிருக்கின்றன. மேலும், மொழி என்பது நீங்கள் கூறுவது போல் வெறும் கருத்துப் பரிமாற்றத்துக்கானது இல்லை. சில இனங்கள் சமய அடிப்படையிலான பண்பாட்டைக் கொண்டிருப்பது போல் தமிழினத்தைப் போன்ற சில இனங்கள் மொழியை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டைப் பெற்றிருக்கின்றன. எனவே தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும் தனித்தன்மையையும் இழக்காமல் இருக்க வேண்டுமானால் அதற்கு அவர்கள் தங்கள் தாய்மொழியை மறக்காமல் இருப்பது இன்றியமையாதது. இதைத்தான் கட்டுரையிலும் கூறியிருக்கிறேன். அதைப் படித்துவிட்டும் நீங்கள் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பது வருத்தத்துக்குரியது!

      நீக்கு
  5. அழைப்புக்கு நன்றி! ஆனால் நான் ஏற்கெனவே என் பதிவுகளைத் தொடர்ந்து உங்கள் திரட்டியில் பகிர்ந்தே வருகிறேன். பார்க்க - https://tamilblogs.in/index.php?page=all&user=Gnaanapragaasan

    பதிலளிநீக்கு
  6. This great article in tamil and I research in internet but can't find tamil blog and article and this best website and blog.
    Regards
    http://www.hdwallpaperon.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மிகப் பெரிய பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்