.

திங்கள், ஆகஸ்ட் 20, 2018

கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?

Treacherous accusation against Karunanidhi on Eelam Genocide! - What are the DMK people to do?
வறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்!

அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான்!

தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போக்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன?

நண்பர்களே, உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்! வெறுமே நியாயப்படுத்துவதாலேயே கலைஞர் மீதான அந்தக் குற்றச்சாட்டை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

முதலில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்! இனப்படுகொலை நடந்து எண்பது ஆண்டுகள் ஒன்றும் ஆகி விடவில்லை; வெறும் ஒன்பது ஆண்டுகள்தாம் ஆகின்றன. அந்த நேரத்தில் கருணாநிதி என்னென்ன செய்தார், என்னவெல்லாம் பேசினார் என்பவற்றையெல்லாம் ஊடகங்கள் வழியே பார்த்தவர்கள், கேட்டவர்கள் அத்தனை பேரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

இனப்படுகொலையை நிறுத்தக் கோரிப் போராடியதற்காக உங்கள் கூட்டணிக் கட்சியினரான காங்கிரசுக் குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்ட இளைஞர்கள் இன்னும் இங்கேதான் இருக்கிறார்கள்!...

அதே கோரிக்கைக்காகத் தங்கள் உடம்பையே தீக்கு இரையாக்கிச் செத்துச் சாம்பலான முத்துக்குமார் முதலான ஈகையர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர் இன்றும் இதே மண்ணில்தான் வாழ்கிறார்கள்!...

ஈழ துரோகத்தால் உடைந்து போன தன் தமிழினத்தலைவன் அரியணைக்குப் பசை தடவுவதற்காகக் கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டை, புறக்கணித்த தமிழ்ப் பெரும் அறிஞர் தொ.பரமசிவன் தற்பொழுதும் நம்மிடையேதான் இருக்கிறார்!...

Statement of the great Tamil scholar Tho.Paramasivan about the betrayal of Karunanidhi in Eelam issue

செம்மொழி மாநாட்டின்பொழுது அந்த ஊரிலேயே இருக்க ஒவ்வாமல் தங்களைத் தாங்களே நாடு கடத்திக் கொண்டு தொ.ப., வீட்டுத் தாழ்வாரத்துக்குப் படை எடுத்த எழுத்தாளர் பாமரன் அவர்களும் அவர்தம் மானமுள்ள நண்பர்களும் இன்றளவும் நமக்கிடையில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்!...

இவர்களைப் போலெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் எதிர்ப்பைப் பதிவு செய்ய இயலாமல், கருணாநிதி செய்த துரோகத்தையும் அதனால் வழிந்தோடிய குருதியையும் கண்டு இரவெல்லாம் தூங்காமல் அழ மட்டுமே முடிந்த என்னைப் போன்ற கையாலாகாதவர்களும் இன்று வரையில் சாகாமல்தான் இருக்கிறோம்!...

இத்தனை பேரையும் வைத்துக் கொண்டே “கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யவில்லை. அஃது அவர் கைமீறி நடந்து விட்டது” என நீங்கள் சொல்வது அருவெறுப்பான பச்சைப் பொய்!!!

இனப்படுகொலையை நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தராததோடு மட்டும் கருணாநிதி நிறுத்திக் கொண்டிருந்தால் கூட உங்களுடைய இந்தச் சொத்தை வாதத்தை ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மக்கள் தரப்பிலிருந்தும் அப்படி ஓர் அழுத்தம் ஏற்படாமல் தடுத்தவர் அவர்.

இனப்படுகொலை நிறுத்தம் கோரிப் போராடிய மாணவர்கள், அன்றாடம் கல்லூரியில்தான் ஒன்று கூடிப் போராட்டங்களைத் திட்டமிட்டார்கள் என்பதால், கல்லூரிகள் அனைத்துக்கும் கால வரையின்றிப் பூட்டுப் போட்டு, எரிமலையாய் வெடிக்க இருந்த மாபெரும் மாணவர் போராட்டத்தைப் பொறி விட்டபொழுதே பொசுக்கி அணைத்தார்.

இன அழிப்பை நிறுத்த வேண்டி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மாநிலம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தபொழுது உச்சநீதிமன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி அதற்குத் தடை போட முயன்றார் (பின்னர் உச்சநீதிமன்றமே, “மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது; இந்த வேலைநிறுத்தத்துக்குத் தடை இட முடியாது” என்று அவர் தலையில் குட்டுவது போல் தீர்ப்பளித்தது).

ஈகி முத்துக்குமாருக்கு அடுத்துப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து உயிர் துறந்தபொழுது அவர் குடும்பத் தகராற்றால் தற்கொலை செய்ததாகக் காவல்துறையை வைத்துப் பொய்யறிக்கை வெளியிடச் செய்தார் (பின்னர் ஈகையர் ரவியின் இறுதி வாக்குமூலம் வெளியாகி அவர் முகத்தில் சாணியடித்தது).

எவ்வளவோ முயன்றும் தன் கைமீறி ஆங்காங்கே சில போராட்டங்கள் இப்படி நடந்து விடுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல், “ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய்ப் போராட வேண்டியதுதானே! நான் கரையில் இருந்து கண்டு களிப்பேன்” என்று திரைப்பட வில்லன் போல் கொக்கரித்தார்.

Cartoonist Bala's caricature which rendering the double game of Kalaignar Karunanidhi in Eelam Tamils issue
கட்சி வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் பகடிச் சித்திரக்காரர் பாலா (Cartoonist Bala) அவர்கள் ஈழப் பிரச்சினையில் கருணாநிதியின் இரட்டை நிலைப்பாடு பற்றி வரைந்த கருத்துப் படம்
இவ்வாறு, நிகழ்ந்த கொடுமையைத் தானும் தடுக்காமல், தடுக்கப் போனவர்களையும் இழுத்துப் கட்டிப் போட்டு, மீறிப் போனவர்களையும் இழிவுபடுத்தி எள்ளி நகையாடிய கருணாநிதியைப் பற்றித்தான் நீங்கள் சொல்கிறீர்கள், அந்தக் கொடுமை அவர் கைமீறி நடந்து விட்டது என்று. இதைச் சொல்ல உங்களுக்குக் கூசாமல் இருக்கலாம்; கேட்க எங்களுக்குக் குமட்டுகிறது!

உச்சக்கட்டமாக, கடந்த வாரம் (12.08.2018) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சுப.வீ., சொன்னார், பார்வதியம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்பியதே கலைஞருக்குத் தெரியாமல் நடந்து போனதாம்!

உளவுத்துறையையே கையில் வைத்திருக்கும் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்கும் அரசியல் சாணக்கியர், தன் மாநில எல்லைக்குள் அண்டை நாட்டிலிருந்து அவ்வளவு முக்கியமான ஒருவர் வந்ததையும் திருப்பி அனுப்பப்பட்டதையும் கூட அறியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார் எனச் சொன்னால் ‘பெரியார் பிஞ்சு’ படிக்கும் சிறு பிள்ளை கூட நம்பாது.

அப்படியே அவரை மீறித்தான் இவ்வளவும் நடந்து விட்டன எனச் சொன்னால் அதன் பொருள் என்ன? என்னதான் இந்திய அரசையே தன் கையில் வைத்திருந்தாலும் தமிழ்நாட்டின் மாநில முதலமைச்சர் ஒருவரால் தமிழினத்தைக் காப்பாற்ற இயலாது என்பதுதானே? தமிழ்நாட்டு முதல்வர் எனும் பதவி தமிழர்களின் உயிரைக் காப்பாற்றக் கூடப் போதுமான அதிகாரம் இல்லாதது என்பதுதானே? எனில், கருணாநிதி அந்த நேரத்தில் செய்திருக்க வேண்டியது என்ன? இந்தியா, தமிழர்களுக்கான உண்மையான பிரதிநிதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கை எனும் பேராயுதத்தை அந்நேரத்தில் மீண்டும் கையிலெடுத்திருக்க வேண்டாவா அவர்? அதையாவது செய்தாரா? இல்லை! மாறாக, தானே கழுத்தைத் திருகிப் போட்ட ‘டெசோ’ எனும் உயிரில்லாப் பிண்டத்துக்குப் பூச்சூட்டி, பொட்டு வைத்து அழகு பார்த்தார்; அதுவும் தமிழினப்படுகொலை முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து!

உடனே, “தலைவர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தாலும், போராட்டங்களையெல்லாம் நடக்க விட்டிருந்தாலும் கூட முடிவு வேறாக இருந்திருக்காது; அப்பொழுதும் இதேதான் நடந்திருக்கும்” என சோதிடம் கூறத் தொடங்கி விடாதீர்கள்!

இப்படியெல்லாம், கருணாநிதி இவ்வளவு வெளிப்படையாகச் செய்த பட்டப்பகல் துரோகங்களை வெறுமே “இல்லை... இல்லை” எனத் திரும்பத் திரும்பச் சொல்லியும், நான்கைந்து பொய்களைக் கூறியும் மறைத்து விட நீங்கள் முயல்வது, வரலாற்றுப் பெருநிகழ்வு ஒன்றை எச்சில் தொட்டு அழிக்கப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம்! அது முடியாது! இதை இப்படிச் செய்ய முடியாது! இதற்கு வழி வேறு உண்டு! அதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.

கருணாநிதி மீதான இன துரோகக் குற்றச்சாட்டைத் துடைக்க உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால், அடுத்த முறை தி.மு.க., - காங்கிரசுக் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்பொழுது, காங்கிரசிடம் வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கச் செய்யுங்கள்! தமிழீழம் மலர இந்தியாவுக்கு எந்தத் தடையும் இல்லை என முறைப்படி ஐ.நா-வில் அறிவிக்கச் செய்யுங்கள்! இலங்கையில் ‘தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு’ நேர்மையான முறையில் நடக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்! கருணாநிதியின் நண்பரான ஈழத் தந்தை செல்வா முதல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை அனைவரும் காணத் துடித்த தமிழீழத்தைப் படைத்துக் காட்டுங்கள்!

இதை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் ஈழத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகத்தில் இருக்கும் அத்தனை கோடித் தமிழர்களும் தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கைகூப்பித் தொழுவோம்! நெகிழ்ச்சிக் கண்ணீர் விட்டு அழுவோம்! அதுதான்... அந்தக் கண்ணீர் ஒன்றுதான்... அது மட்டும்தான் ஒன்றரை இலட்சம் பேரின் செங்குருதியில் தோய்ந்து கிடக்கும் கருணாநிதி மீதான பழிக்கறையை அழிக்கும் வல்லமை வாய்ந்தது!

எனவே நாம் தமிழர் தம்பிகளோடு சண்டை பிடிப்பது, பிரபாகரன் அவர்களையும் விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்துவது, ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவது, இலங்கைப் பிரச்சினைக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு என நெஞ்சில் ஈரமே இல்லாமல் கேட்பது, கருணாநிதி செய்த துரோகத்தை எடுத்துச் சொன்னால் பொதுமக்கள் மீதே பாய்வது போன்றவற்றையெல்லாம் ஏறக்கட்டி விட்டு இதைச் செய்யப் பாருங்கள்! வரலாற்றைத் திரிக்கப் பார்க்காதீர்கள்; மாற்றப் பாருங்கள்! கருணாநிதி மீதான குற்றச்சாட்டை மறைக்க முயலாதீர்கள்; போக்க முயலுங்கள்! அதுதான் கருணாநிதிக்கும் குருதி கொப்பளிக்கக் கொன்று குவிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நீங்கள் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி!
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி நியூசு டி.எம், பகடிச் சித்திரக்காரர் பாலா. 

தொடர்புடைய பதிவுகள்:
தமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்! – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்!
யாருக்கு அளிக்கலாம் வாக்கு? - வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்!
2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!

தொடர்புடைய வெளி இணைப்புகள்:
அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யே சக்தி! – திருமாவேலன், விகடன்
ஈகையர் முத்துக்குமார் அவர்களின் நெஞ்சத்தை நொறுக்கும் இறுதிக் கடிதம் 
ஈழத் தமிழர் படுகொலை! கருணாநிதி துரோகம்! வரலாறு மன்னிக்காது!

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! எதிர்மறையான கருத்துக்கள்தாம் வரும் எதிர்பார்த்திருந்த எனக்கு முதல் கருத்தே இசைவாக வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி! தமிழர் பிரச்சினைகள் அனைத்திலும் நம் இருவர் கருத்துக்கள் ஒத்துப் போவது கண்டு மேலும் மகிழ்கிறேன்!

      நீக்கு
  2. தங்கள் கருத்தோடு 100% உடன்பாடு கிறேன் தோழர் .. தொழில்முறை தமிழ் உணர்வளர்களை நான் திருத்த இயலா து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தொழில்முறைத் தமிழ் உணர்வாளர்கள்" - ஹாஹ்ஹா! நன்றாகச் சொன்னீர்கள்! ஆனால் அப்படிப்பட்டவர்கள் மட்டும் கருணாநிதியின் ஈழ துரோகத்தை நியாயப்படுத்தினால் நான் கவலைப்பட மாட்டேன். உண்மையான தமிழ் உணர்வாளர்கள் பலரும் அப்பட்டியலில் இருப்பதுதான் வேதனை கொள்ளச் செய்கிறது. நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களை அளியுங்கள்!

      நீக்கு
    2. தனி மனித உணர்வுகள் வேறு. ஒரு இயக்கத்தின் தலைவன் என்ற நிலை வேறு. தனிமனிதனாக கருணாநிதி அவர்களும் ஈழம் குறித்த வேதனை இருந்திருக்கலாம். ஆனால் கட்சியா ? ஆட்சியா ? ஈழமா ? என்ற போராட்டத்தில் முதல் இரண்டும் வென்று இருக்கும் என்றே கருதுகின்றேன். ஒரு சாமனியனாக என்னைச் சுற்றி இருந்த பல நூறு மனிதர்களில் ஈழம் குறித்த வேதனை மிகச்சிலரிடமே இருந்தது. அந்தளவிற்கு மக்கள் மனம் சுயநலத்தால் நிரம்பிக்கிடக்கின்றது. ஆனால் தாங்கள் ஸ்டாலின் மூலமாக கேட்டிருக்கின்ற தீர்வு நல்லது. ஆனால் அதை அவரிடம் தெளிவாக விளக்க முறையான தகவல்களுடன் அவரை யாராவது அணுக வேண்டும். நன்றி

      நீக்கு
    3. ஐயா! உங்கள் முதல் வருகைக்கு முதலில் என் வரவேற்பு!

      தனி மனித உணர்வுகளும் இயக்கத்தின் தலைவன் எனும் நிலையும் வெவ்வேறு என்பதே முதலில் தவறு இல்லையா? "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு; கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி" என்றவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர், நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் கட்சிக்காகவும் ஆட்சிக்காகவும் ஈழத்தைக் கைவிட்டார் என்றால் அவரை எப்படி வழிகாட்டித் தலைவராக, எடுத்துக்காட்டுத் தலைவராக, தமிழினத் தலைவராக ஏற்க இயலும்?

      தவிர, ஈழப் பிரச்சினைக்கு இங்கே போதுமான ஆதரவு இல்லை என்கிறீர்கள். கருணாநிதியின் மீதான இந்தக் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் அனைவரும் மீண்டும் மீண்டும் கூறுவது இதைத்தான். இது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. மக்களின் ஆதரவைப் பொறுத்தா இன நலனில் முடிவெடுப்பது? உயிருக்குத் துடித்துக் கொண்டிருப்பவனைக் காப்பாற்ற வாக்கெடுப்பா நடத்துவது? இதுதான் தி.மு.க எனும் மக்கள் நலக் கட்சியின், மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடும் கட்சியின் செயல்பாட்டு முறையா? இது நீதியா? ஆக, இனமே அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அதற்காக ஆட்சியைத் துறந்தால் மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க இயலுமா என்று உளவுத்துறையை விட்டு ஆராய்ந்த கருணாநிதி அவர்களின் போக்கு சரிதான் என்பதுதானே நீங்கள் கூற வருவது? இஃது எப்பேர்ப்பட்ட கொடுமையான ஆட்சி வெறி? இது சரியா? சிந்தித்துப் பாருங்கள்!

      இருந்தாலும், இவ்வளவும் சொன்ன நீங்கள் இறுதியில் நான் பரிந்துரைத்த தீர்வையாவது ஏற்றுக் கொண்டதில் ஆறுதல்! தங்களால் முடிந்தால் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்!

      நீக்கு
  3. கலைஞர் உடல் நிலை மோசமாக இருந்தப்போதும் மறைந்தப்பிறகும் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்ல பலர் தலைபப்ட்டார்கள் . புதிது புதிதான காரணங்களை எல்லாம் கண்டுப்பிடித்து சொன்னார்கள். இதெல்லாம் திட்டமிடப்பட்டு எழுதப்படும் "paid news" ஆக இருக்குமோ என்று கூட என்னைப் போன்றவர்களுக்கு ஐயம் ஏற்பட்டது. வரலாற்றில் கலைஞரின் கறைகளை துடைக்க முடியாது. இதுதான் உண்மை. இதையும் ஜீரணித்துக்கொண்டே தான் பார்ப்பனர்களுக்கு எப்போதுமே அச்சமூட்டியவராக இருந்த ஒரு அரசியல் தலைவரின் எச்சமாக அவர் முடிந்துப்போனார். அவர் இந்துத்துவ அரசியலுடனும் சமரசம் செய்து கொண்டு அரசியல் நடத்தியவர் தா என்பதையும் தாண்டி இதை மட்டுமே அவர் மறைந்த அன்று பார்த்தோம். மற்றபடி அவர் மீதான விமர்சனங்கள் அபப்டியே இன்னும் இருக்கின்றன. இருக்கும். உங்கள் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற எனக்கும் ஆசையுண்டு. ஆனால் வாய்ப்புகள் இல்லவே இல்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரே! தங்கள் உளமார்ந்த கருத்துக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி!

      தாங்கள் கூறுவதுதான் இயல்பான உண்மை. அதைத் தி.மு.க-வினருக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் புரிய வைக்கும் முயற்சியாகத்தான் மேற்படி கட்டுரையை எழுதினேன். ஆனால் இதற்கு சமூக ஊடகங்களில் வந்திருக்கும் எதிர்வினைகளைக் காண்கையில் தாங்கள் கூறியுள்ளது போலவே அது முடியாத ஒன்று என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் நம்மைப் போல் வெறும் கலைஞர் விசிறிகள் இல்லை; அவர் எது செய்தாலும் சரியாக மட்டும்தான் இருக்கும் என நம்பும், ஆகப் பெரியதொரு பகுத்தறிவு இயக்கத்தின் கண்மூடித்தனமான பற்றாளர்கள்!

      கலைஞர் உடல்நிலை சரியில்லாதிருந்தபொழுது தாங்கள் எழுதிய ‘பெரியோரை வியத்தலும் இலமே’ கட்டுரையும் கண்டேன். நான் பார்த்த வரையில், தாங்களும் திருவள்ளுவன் இலக்குவனார் ஐயாவும் மட்டும்தாம் கருணாநிதியின் ஈழ துரோகம் குறித்து மறுக்கவும் செய்யாமல், அதே நேரம் அவருடைய மற்ற தொண்டுகள் குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதையும் கூறி மிகவும் நடுநிலையாக எழுதியிருந்தீர்கள். கருணாநிதி தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை அல்லது கருணாநிதி எந்தத் தவறுமே செய்யவில்லை எனும் இரு மாறான கருத்துக்களை மட்டுமே பார்த்துப் பார்த்து நொந்து போன எனக்கு உங்கள் பதிவுகள் மிக்க ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தன.

      உங்கள் கருத்தின் கடைசி வரிகள் நெஞ்சை வலிக்கச் செய்கின்றன! ஆனால் உண்மை நிலைமையை உரைக்கப் புரிய வைப்பவை அவைதாம். மிக்க நன்றி அம்மணி! மிகவும் நன்றி! தொடர்ந்து நீங்கள் என் எழுத்துக்களைப் படித்து இது போன்ற செம்மையான கருத்துக்கள் மூலம் சிறியேனைச் செழுமைப்படுத்த வேண்டுகிறேன்!

      நீக்கு
    2. நன்றி! தொடர்ந்து வாருங்கள்! தங்கள் கருத்தைக் கொஞ்சம் விரிவாகத் தாருங்கள்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்