.

சனி, நவம்பர் 24, 2018

உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? (2/2) - தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்

What is the place of your Mother tongue in your lifestyle?

தன் முன் பாதியில் தமிழர் வாழ்வில் தமிழின் பயன்பாடு எந்த அளவுக்குப் பின்தள்ளப்பட்டிருக்கிறது என்பதை உரிய காரண ஏரணங்களோடு (reasons & logic) பார்த்தோம். இப்பகுதியில், அதைச் சரி செய்ய - தமிழர் வாழ்வில் தமிழை முதன்மை பெறச் செய்ய - தமிழின் எதிர்காலத்தை உறுதி செய்ய, தமிழர் தமிழராக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு முழுமையான செயல்திட்டமாகவே பார்க்கலாம்.

நான்கு காரணங்கள், நாலாவிதமான வழிமுறைகள்

தமிழர் வாழ்வில் தாய்மொழிக்கான இடம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், தாய்மொழியைப் பயன்படுத்துவதில் நமக்கு இருக்கும் அக்கறையின்மைக்குக் காரணம் என்ன என்பதை முதலில் ஆராய வேண்டும்! அவற்றைக் களைந்தாலே தமிழ்ப் பயன்பாடு தானாகப் பெருகும்.

இதற்கு மொத்தம் நான்கு காரணங்கள் இருக்கலாம்.

வெள்ளி, அக்டோபர் 12, 2018

உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி

What is the place of Tamil in Tamils life? - A cross sectional study of the Tamil lifestyle of today
ண்மைக்காலமாகத் தமிழுணர்வு நம்மிடையே முன் எப்பொழுதையும் விடப் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. தமிழ், தமிழ்ப்பற்று என்றெல்லாம் முன்பு அரசியலாளர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். இன்று எளிய தமிழ் மக்களும் இப்படிப் பேசுவதை, எழுதுவதை நிறையவே பார்க்க முடிகிறது. ஆனால் வாய்மொழியில் இருக்கும் இந்த உணர்ச்சி நமது வாழ்க்கைமுறையில் இருக்கிறதா?... இன்றைய தமிழர் வாழ்வில் தாய்மொழிக்கு அவர்கள் அளித்துள்ள இடம் எது?...

இதோ, தமிழர் வாழ்வியலில் தாய்மொழியின் இடம் குறித்து ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி!

திங்கள், ஆகஸ்ட் 20, 2018

கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?

Treacherous accusation against Karunanidhi on Eelam Genocide! - What are the DMK people to do?
வறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்!

அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான்!

தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போக்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன?

வியாழன், ஆகஸ்ட் 09, 2018

மரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்!

Traditional lifestyle and Healer Baskar, the charlatan
ரபுசார் வாழ்வியல் (Traditional Lifestyle) எனும் சொல்லாட்சியைத் தவறாகப் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் வீட்டிலேயே உயூடியூபைப் பார்த்து மகப்பேற்றுக்கு (பிரசவத்துக்கு) முயல, கிருத்திகா எனும் அந்தப் பெண் துடிதுடித்துப் பலியான கொடுமை அண்மையில் திருப்பூரில் நடந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது பேசுபொருள் அஃது இல்லை. இது நடந்த சில நாட்களிலேயே ‘வீட்டிலேயே மகப்பேறு பார்ப்பது எப்படி?’ என ஒரே நாள் பயிற்சி வகுப்பில் கற்றுத் தந்து விடுவதாக விளம்பரம் செய்திருக்கிறார் இணையப் பெரும் புகழ் ஈலர் பாசுகர் (Healer Bhaskar)! இப்பொழுது அவரைப் பிடித்து உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை.

இயற்கை சார் மருத்துவம், இயற்கை சார் அறிவியல், இயற்கை சார் தொழில்நுட்பம் என இயற்கையை ஒட்டி ஒரு மாபெரும் நாகரிகத்தையே கட்டமைத்தவர்கள் தமிழர்கள். ஆகவே பழந்தமிழர்களின் இயற்கை சார் வாழ்வியலுக்கு, மரபார்ந்த வாழ்க்கை முறைக்கு மாறுவது என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் நமக்குத் தேவையில்லை. ஆனால் இன்று நாம் கடைப்பிடிக்க முயலும் வீட்டு மகப்பேறு (home birth) உண்மையிலேயே நம் மரபைச் சார்ந்த இயற்கை வழிமுறைதானா? ஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவ முறைதானா? இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை காண்பதே திருப்பூர் கிருத்திகா போல் மேற்கொண்டு யாரும் உயிரிழக்காமல் தடுக்கும். அதற்கான சிறு முயற்சியே இப்பதிவு.

இதற்குப் பெயர் மரபு வழி மருத்துவமா?

இன்று ஈலர் பாசுகரைக் கைது செய்தவுடன் “மரபு வழி மருத்துவத்தை வலியுறுத்தியதற்காகக் கைது நடவடிக்கையா?” எனப் பலரும் எகிறிக் குதிக்கிறார்கள். எது மரபு வழி மருத்துவம்? ஈலர் பாசுகர் வலியுறுத்துவது மரபு வழி மருத்துவமா? அப்படிச் சொன்னால், ஒன்று – நீங்கள் தமிழர் மரபு வழி மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது, ஈலர் பாசுகரின் நூல் எதையுமே படிக்காதவராக இருக்க வேண்டும்.

ஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவமோ, இயற்கை மருத்துவமோ இல்லை; ‘மருந்தில்லா மருத்துவம்’! “மருந்து என்பதே உடம்புக்குத் தேவையில்லை. எப்பேர்ப்பட்ட நோய் வந்தாலும் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மை உடம்புக்கு உண்டு” என்பதுதான் ஈலர் பாசுகரின் அடிப்படையான மருத்துவக் கொள்கை! (பார்க்க ஈலர் பாசுகர் எழுதிய ‘அனாடமிக் தெரபி’ எனப்படும் ‘செவிவழித் தொடு சிகிச்சை’).

இது சரியா? உடம்புக்கு அப்படித் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உண்டு என்றால் எதற்காக அந்தக் காலத்திலேயே சித்தர்கள் வகை வகையாக இத்தனை மருந்துகளைக் கண்டுபிடித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்? ஆங்கில மருத்துவர்கள்தாம் நம்மிடம் பணம் பிடுங்குவதற்காகத் தேவையில்லாமல் ஏராளமான மருந்துகளை நம் தலையில் கட்டுகிறார்கள் என ஈலர் பாசுகர் சொல்கிறார். அது சரியென்றே வைத்துக் கொள்ளலாம். நான் கேட்பது ஆங்கில மருத்துவர்களைப் பற்றியோ, பிற மருத்துவ இயல்களைச் சார்ந்த இந்தக் கால மருத்துவர்களைப் பற்றியோ இல்லை; தமிழ் மருத்துவ முன்னோடிகளான சித்தர்களைப் பற்றி.

Lots of Siddha medicines

நோயே வராமல் வாழ யோகாசனம்; நோய் வந்தாலும் மருந்தே இல்லாமல் தீர்த்துக் கொள்ள வருமப் பண்டுதம் (வரும சிகிச்சை); அதிலும் சரியாகா விட்டால் ஒவ்வொரு நோய்க்கும் விதவிதமான மருந்துகள், மாத்திரைகள், சூரணங்கள், இலேகியங்கள், பற்பங்கள்; இப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அத்தனை நோய்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடித்து வைத்து, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களுக்கும் நாமே மருந்து கண்டுபிடித்துக் கொள்ள ஏற்றவாறு முறையான மருத்துவ இயலையும் வகுத்து வைத்து விட்டுச் சென்ற நம் சித்தர்கள் பித்தர்களா? அல்லது எந்தப் பெருநிறுவனங்களுக்குச் (corporates) செம்பு தூக்க, எந்த இல்லுமினாட்டிகளுக்கு விசிறி வீசச் சித்தர்கள் இவற்றை நம் தலையில் கட்டினார்கள்?

‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று முழங்கிய சித்தர்களின் மரபில் வந்த நாம், ‘மருந்து என்பதே உடம்புக்குத் தேவை இல்லை’ என்பவரை மரபு வழி மருத்துவர் எனச் சொன்னால், அதை விட நம் மரபுக்கும் நம் முன்னோடிகளுக்கும் நாம் இழைக்கக்கூடிய இரண்டகம் (துரோகம்) வேறு ஏதாவது இருக்க முடியுமா? இதை மரபு வழி மருத்துவம் எனச் சொன்னால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே கடைப்பிடிக்கப்பட்டு வரும் சித்த மருத்துவத்தை என்ன பெயர் சொல்லி நாம் அழைப்பது?

ஈலர் பாசுகருடைய மருத்துவ முறையின் அழகு!

அதற்காக, மருந்தில்லா மருத்துவம் போன்ற புதிய முறைகளுக்கு நாம் மாறவே கூடாது என்பதில்லை. தாராளமாக மாறலாம். முன்பே கூறியது போல் யோகாசனம், வருமப் பண்டுதம், அக்குப்பஞ்சர் என எத்தனையோ பேர் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய மருந்தில்லா மருத்துவ முறைகள் பல உள்ளன. அவற்றுக்கு மாறுவதில் தவறில்லை. ஆனால் ஈலர் பாசுகரின் மருந்தில்லா மருத்துவம் இப்படிப்பட்டதா?

ஈலர் பாசுகர் என்ன சொல்கிறார்? “நாக்குதான் மருத்துவர்; சுவைதான் மருந்து. உங்கள் நாக்கு எப்பொழுது எந்தச் சுவையை அதிகம் கேட்கிறதோ அப்பொழுது, அந்தச் சுவை கொண்ட உணவு வகைகளைப் போதுமான அளவுக்குச் சாப்பிடுங்கள். நோய் குணமாகி விடும்” என்கிறார். எப்படி எனக் கேட்டால், உடம்புக்கு என அறிவு உள்ளதாம்! நம் உடம்புக்கு எப்பொழுது எது தேவை என்பது அதற்கே தெரியுமாம்!

நீரிழிவு வந்தால் இனிப்புச் சாப்பிடக்கூடாது என்பது அலோபதி, சித்தம், ஆயுர்வேதம் என எல்லா மருத்துவர்களும் சொல்லும் அடிப்படைக் கட்டுப்பாடு. காரணம், கணையம் சரியாக வேலை செய்யாமல் இன்சுலின் சுரக்காத காரணத்தால் ஏற்படும் நோய் அது. எனவே மீண்டும் கணையம் சரியாக வேலை செய்யும் வரை இனிப்பைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

ஆனால் இவரோ, “கணையம் செயல்படாமல் போவது என்பது எங்கோ ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே நிகழும். மற்றபடி, இன்று நீரிழிவு நோயாளிகள் எனச் சொல்லப்படும் யாருக்கும் கணையத்தில் கோளாறே கிடையாது. சாப்பிடும் உணவு முறையில்தான் கோளாறு. சாப்பிடும்பொழுது தொலைக்காட்சி பார்ப்பது, படிப்பது, வேக வேகமாகச் சாப்பிடுவது போன்ற காரணங்களால் உணவில் இருக்கும் பெரும்பாலான சர்க்கரை கெட்ட சர்க்கரையாக மாறுகிறது. கணையம் நல்ல சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் கொடுக்கும்; கெட்ட சர்க்கரைக்குக் கொடுக்காது. இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் இன்சுலின் சுரக்கவில்லை என்றவுடன் கணையம் கெட்டுப் போய்விட்டது என்கிறோம். இது தவறு! கவனச் சிதறல்கள் ஏதும் ஏற்படாமல் முழுக் கவனத்தையும் உணவின் மீது வைத்து, நன்றாக மென்று, நிறுத்தி, சுவைத்துச் சாப்பிட்டால் போதும். உணவில் இருக்கும் எல்லாச் சர்க்கரையும் நல்ல சர்க்கரையாக மாறி விடும்; கணையமும் இன்சுலினைச் சரியாகச் சுரக்கும்; எல்லாச் சர்க்கரையும் சரியாகச் செரிமானமாகிக் குருதியில் கலக்கும்; நீரிழிவு நோய் போய் விடும்” என்கிறார்.

என்ன தலை கிறுகிறுக்கிறதா? இப்படி ஒவ்வொரு நோய் பற்றியும் பக்கம் பக்கமாய் உளறித் தள்ளியிருக்கிறார் மனிதர். மொத்தம் 320 பக்கங்கள்! முழுவதும் படித்துப் பாருங்கள்! கிறுகிறுப்பென்ன, கிறுக்கே பிடிக்கும்! சளி, இருமல், தும்மல், தலைவலி தொடங்கி ஆத்துமா, காசம், புற்று நோய், எயிட்சு என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதாக நூலின் தொடக்கத்தில் பட்டியலிடுபவர், கடைசியில் அத்தனை நோய்களுக்குமான தீர்வாகச் சொல்வது இதைத்தான் – அதாவது, “உங்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ அதைக் கவனச்சிதறல் இல்லாமல், போதும் எனத் தோன்றுகிற வரைக்கும் சாப்பிடுங்கள்! இருமல் முதல் எயிட்சு வரை அத்தனையும் பறந்து விடும்” என்கிறார்.

அறிவு என்பது எலிப் புழுக்கை அளவு இருப்பவனாவது இதை நம்புவானா? காய்ச்சல் கண்டிருக்கும் குழந்தை குளிர்பானம் கேட்டால் என்ன செய்வீர்கள்? ‘குழந்தையின் உடம்புக்கு இப்பொழுது அது தேவைப்படுகிறது. அதனால்தான் கேட்கிறது’ என வாங்கிக் கொடுத்து விடுவீர்களா? நடுக்குச் சுரம்தான் (ஜன்னி) வரும்! வயிற்றுப்புண் (ulcer) வந்த எத்தனையோ பேர் நாக்கு விரும்புகிறதே என்பதற்காக ஒரே ஒரு நாள் கார வகைகளைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.

எந்த நோய்க்கு எதைச் சாப்பிடக்கூடாதோ அதைத் தவறிச் சாப்பிட்டு விட்டாலே நோய் தீவிரமாகும்; உடம்பு பாடாய்ப் படுத்தும் என்பது நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பட்டுத் தெளிந்த, கண்கூடான உண்மை. அதையே ஒருவர் தலைகீழாக மாற்றிச் சொல்கிறார் என்றால், அவர் கடைப்பிடிக்கச் சொல்வது மரபு வழி மருத்துவமா, இயற்கை சார் மருத்துவமா என்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்; முதலில் அது மருத்துவமா? அட, அதைக் கூட விடுங்கள்! நல்ல மனநிலையில் இருக்கிற ஒருவர் பேசக்கூடிய பேச்சா இது?

இப்படிச் சுற்றி வளைத்து இவர் சொல்ல வருவது என்ன? கவனச் சிதறல்கள் நிறைந்த, துரித வேகத்திலான இயந்திரமய வாழ்க்கை முறைதான் எல்லா நோய்களுக்கும் காரணம் என்பதுதானே? அப்படிப்பட்ட வாழ்க்கை முறை இப்பொழுதுதானே நிலவுகிறது? நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிடையாதே! அன்றைக்குத் தொலைக்காட்சி போன்ற கவனச் சிதறல்கள் இல்லையே! காலையில் வேக வேகமாக அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் ஓடும் வாழ்க்கை முறை இல்லையே! அப்பொழுது இந்த நோய்களெல்லாம் எப்படி வந்தன?

அட, நீரிழிவு, உதிரக் கொதிப்பு போன்றவையெல்லாம் அந்தக் காலத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை கொண்ட பணக்காரர்களுக்குத்தான் வந்தன என்றே வைத்துக் கொள்வோம். மற்ற நோய்கள்...? எத்தனையோ ஏழைகள் ஆத்துமா, வயிற்றுப் புண், எலும்புருக்கி, புற்று நோய் போன்றவற்றால் அன்றும் பாதிக்கப்பட்டுத்தானே இருந்தார்கள்? அவர்களுக்கு அவை எப்படி வந்தன? சிந்திக்க வேண்டாவா?

ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. அதற்கேற்ப அவர்களுக்கான நோய்க் காரணங்களும் மாறுபடும். ஒருவருக்குப் போதுமான உணவு கிடைக்காததால் வயிற்று வலி வரும்; இன்னொருவருக்கு அளவுக்கு மீறி உணவு உண்பதால் வரும். சிலருக்குக் கொழுப்புக் காரணமாக இதயக் கோளாறு ஏற்படும்; சிலருக்கு மன அழுத்தத்தினாலேயே கூட அஃது உண்டாகும். எத்தனையோ பேர், தலைமுறை வழி நோய்களால் (hereditary diseases) தாக்கப்பட்டிருக்கிறார்கள். பலர், உறவுக்குள்ளே மணம் புரிந்த பெற்றோருக்குப் பிறந்ததால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி அவரவர் வாழ்க்கைமுறை, நிலைமைக்கேற்ப அவர்களுக்கான நோய்க் காரணிகளும் எவ்வளவோ மாறுபடும். அப்படியிருக்க, வாய்க்குப் பிடித்ததை, கவன ஒருமைப்பாட்டோடு, போதும் போதும் என்கிற அளவுக்கு வளைத்துக் கட்டித் தின்றால் உலகில் உள்ள அத்தனை பேருக்கும் அத்தனை நோய்களும் குணமாகி விடும் என்பது எப்பேர்ப்பட்ட பித்துக்குளித்தனம்! எந்தளவுக்கு உச்சக்கட்ட முட்டாளாக இருந்தால் ஒருவர் இப்படி ஒரு கூற்றைத் துணிந்து வெளியில் வந்து சொல்வார் என்றுதான் இந்த நூலை முதன் முதலில் படிக்கும்பொழுது எனக்குத் தோன்றியது. ஆனால் இன்று இவர் அடைந்திருக்கும் புகழையும் செல்வாக்கையும் பார்க்கையில் எனக்கு உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது.

“பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்” என்கிறார் வள்ளுவப் பெருமான். ஆனால் இந்த அளவுக்குப் பயனே இல்லாத ஒரு கூற்றைச் சொல்லி ஒருவர் இந்த அளவுக்குப் புகழும் பொருளும் ஈட்ட முடிகிறது என்றால், அந்த அளவுக்கு அறிவில் சீர்கெட்டுப் போயிருக்கிறதா நம் இனம் என மெய்யாகவே எனக்கு மிகவும் அச்சமாயிருக்கிறது. சீமான், பி.ஆர்.பாண்டியன் என நான் பெரிதும் மதிக்கும் பலர் கூட ஈலர் பாசுகரை ஆதரிப்பது தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.

ஆக, ஈலர் பாசுகர் மரபு வழி மருத்துவரும் இல்லை; அவர் சொல்லும் மருத்துவம் நம் மரபைச் சேர்ந்ததும் இல்லை; அப்படியே, மரபுக்கு ஒவ்வாதது என்றாலும் முயன்றாவது பார்க்கலாமே என நினைத்தால் கூட அவர் சொல்லும் எதுவுமே ஏற்கக்கூடியதாகவும் இல்லை.

அடுத்தது, வீட்டிலேயே மகப்பேறு என்பது.

வெள்ளி, ஜூலை 27, 2018

வீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா? (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு!

Doorstep Aadhaar Enrollment Service

டிப்படையில் நான் ஆதார் அடையாளத் திட்டத்துக்கு எதிரி. எனக்கு மட்டுமில்லை, அனைவரும் ஆதார் அட்டை பெற்றுக் கொண்டாக வேண்டும் எனும் அரசின் இந்தக் கட்டாயப் போக்கு பெரும்பாலும் யாருக்குமே பிடிக்கவில்லை. வெறுமே பெயர், ஊர், படம் ஆகியவை மட்டும் என்றால் கவலையில்லை; மாறாகக் கைக்கோடுகள் (finger impression), கருவிழிக் கோடுகள் (Iris impression) போன்ற உயிரியளவியல் தகவல்கள் (biometric informations) வரை நம்மைப் பற்றிய அடிப்படை விவரங்களையே ஒட்டுமொத்தமாக ஒப்படைப்பது என்பது நம்மையே நாம் இன்னொருவருக்கு எழுதித் தருவதற்குச் சமம்.

அதுவும் அரசிடம் இந்தத் தகவல்களைத் தருவது என்றால் கூடப் போனால் போகிறது என அரை மனதாக ஒப்புக் கொள்ளலாம். ஆனால், ஆதார் அட்டைக்காக நம்மைப் பற்றிய இத்தகவல்களையெல்லாம் திரட்டுவது ஒரு தனியார் நிறுவனம்! ஒரு தனியார் நிறுவனத்தை நம்பி நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களைப் பற்றிய அத்தனை விவரங்களையும் அளித்து விட வேண்டும் என அரசு வற்புறுத்துவது வெட்ட வெளிப்படையான தனிமனித அத்துமீறல்! இது உலகின் மிகப் பெரிய உயிரியளவியல் அடையாளத் திட்டம் (World’s Largest Biometric ID program) என்கிறது மத்திய அரசு. ஆனால் இது உலகின் மிகப் பெரும் பட்டப்பகல் தகவல் கொள்ளை (World’s Largest Daylight Data Robbery) என்பதுதான் சரி. “உன்னைக் கொள்ளையடிக்க ஒரு நிறுவனத்தைப் பணியமர்த்தியிருக்கிறேன். அதற்கு ஒத்துழைப்புக் கொடு” என அரசே மக்களை வெளிப்படையாக மிரட்டும் செயல் இது.

ஆனால் இப்படி ஆயிரம்தான் சொன்னாலும், இந்தத் திட்டத்தை எதிர்த்து நாடெங்கும் எவ்வளவுதான் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றமே திரும்பத் திரும்பச் சொன்னாலும் அன்றாட வாழ்க்கையை நடத்தவே இன்றியமையாத ஒன்றாக ஆதார் அட்டை இன்று மாற்றப்பட்டிருக்கிறது என்பதே கண்கூடான உண்மை!

வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டுமா – ஆதார் அட்டை கொடு! எரிவளி மானியம் (LPG subsidy) வேண்டுமா - ஆதார் அட்டை கொடு! வாடிக்கையாளர் அடையாள நிரலக அட்டை (SIM) வேண்டுமா - ஆதார் அட்டை கொடு! அவ்வளவு ஏன், சாக வேண்டுமா – அதற்கும் ஆதார் அட்டை கொடு என்கிறது இந்நாடு. எனவே எதிர்காலத்தில் பாதிப்பு வருகிறதோ இல்லையோ, நிகழ்காலத்தில் சிக்கலின்றி வாழ வேண்டுமே என்பதற்காகவாவது மக்கள் ஆதார் அட்டையைப் பெற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஆனால், இப்படி ஏற்றுக் கொண்டு போவதில் பெரும்பான்மை மனிதர்களுக்கு இடைஞ்சல் ஏதும் இல்லை. முதியவர்களும் மாற்றுத் திறனாளிகளும் அவர்கள் குடும்பத்தினரும் இதற்காகப் படும் பாடுகள்தாம் கொடுமை! நாட்டில் முதியவர்கள் எத்தனையோ கோடிப் பேர் இருக்கிறார்கள். முதுமை காரணமாகக் கண் சரியாகத் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள், எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியாதவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், தமது கை – கால் – பார்வை போன்றவற்றைத் தமது விருப்பப்படி கட்டுப்படுத்த இயலாதவர்கள், படுக்கையை விட்டே எழ இயலாதவர்கள் என எத்தனையோ வித விதமான மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள்.

ஆனால், “நீ எப்படி வேண்டுமானால் இருக்கலாம். உனக்கு எப்பேர்ப்பட்ட பாதிப்பு வேண்டுமானாலும் இருக்கலாம். அதெல்லாம் உன் தனிப்பட்ட சிக்கல். ஆதார் அட்டை பெற்றாக வேண்டும் என்றால் பெற்றாகத்தான் வேண்டும். இல்லாவிட்டால், நீ செத்தால் உனக்கு இறப்புச் சான்றிதழ் கூடக் கிடையாது” என்கிறது மத்திய அரசு. எனவே, உடற்கழிவு வெளியேறுவதைக் கூட உணர முடியாத முதியவர்கள், சிறு அதிர்வு ஏற்பட்டால் கூடப் பெரும் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் போன்றோரைக் கூட ஆதார் மையங்களுக்கு எப்பாடு பட்டாவது இட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

நானும் வீட்டை விட்டு வெளியேற இயலாத அளவுக்கு மாற்றுத் திறனாளி என்பதால் எனக்கும் இதே சிக்கல். சொல்லப் போனால், ஆதார் திட்டம் அமல்படுத்தப்படும் முன்பே அது பற்றி ஆனந்த விகடனில் படித்து விட்டு, “இது மிகவும் ஆபத்தான திட்டம். இதில் யாரும் பதிவு செய்து கொள்ளாதீர்கள்!” என்று அனைவரையும் எச்சரித்துக் கொண்டிருந்தவன் நான்; (வழக்கம் போல், என் பேச்சை யாரும் கேட்கவில்லை என்பது தனிக்கதை :-)). ஆனால் குடிமகனுக்கான அடிப்படை உரிமைகளைப் பெறக்கூட இனி ஆதார் இன்றியமையாதது என்றவுடன் ஆதார் அட்டை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கும் ஏற்பட்டது.

எனக்காக ஆதார் சேவையை வீட்டுக்கே வரவழைக்க என் அப்பாவும் தம்பியும் பல வகைகளிலும் முயன்றார்கள். ஆனால் அரசுப் பொறி அணுவளவும் அசையவில்லை. அட்டவணையிடப்பட்ட தனியார் வங்கி (Scheduled Bank) ஒன்று எனக்காக இச்சேவையை அளிக்க முன்வந்தது. ஆனால் 1500 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்ற அவர்களை அதன் பிறகு பிடிக்கவும் முடியவில்லை; ஆதாரும் கிடைக்கவில்லை!

என்னைப் போல் இப்படி எத்தனை பேர் எவ்வளவு தொகைகளை ஏமாந்தார்களோ தெரியாது. ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தி இரும்புச் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசு என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளையோ,
முதியவர்களையோ நினைத்துப் பார்த்துச் சிறப்பு ஏற்பாடு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஆதார் சேவை இணையத்தளத்தில் (uidai.gov.in) ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து கொள்வதற்காக (Aadhaar Enrollment) விண்ணப்பிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளதுதான். ஆனால் அதன் மூலம் விண்ணப்பித்தால் ‘உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது’ என்று காட்ட மட்டும்தான் செய்கிறதே தவிர, அதன் பிறகு யாரும் தொடர்பு கொள்வதோ வீட்டுக்கு வருவதோ இல்லை.

மாநில அரசும் இதற்காக மாநிலம் தழுவிய அளவில் ஏற்பாடு ஏதும் செய்யாவிட்டாலும், போனால் போகிறது எனச் சென்னையில் மட்டும் இதற்காக ஒரு சிறப்புச் சேவையை வழங்கி வருகிறது. ஆம்! தமிழ்நாடு அரசு தனது அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் (Arasu Cable TV Corporation) மூலம் நடமாடும் ஆதார் சேவை (Mobile Aadhaar Service) வசதியை வழங்கி வருகிறது.

ஞாயிறு, மே 27, 2018

ஸ்டெர்லைட் படுகொலை! - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி!

Sterlite Shoot out
ந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது! இம்முறை குருதி தோய இந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டியிருப்பது மனித உரிமைக்குப் பெயர் பெற்ற தமிழ்நாடு! 99 நாட்களாக அறவழியில் நடந்த போராட்டத்துக்கு நூறாவது நாளில் துப்பாக்கிக் குண்டுகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

“வன்முறையில் ஈடுபட்டார்கள் அதனால்தான் சுட்டோம்” என்கிறது காவல்துறை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் சமூக அக்கறையாளர்களோ, “மக்கள் அமைதிப் பேரணிதான் நடத்தினார்கள். காவல்துறைதான் எடுத்த எடுப்பிலேயே சுடத் தொடங்கி விட்டது” என்கிறார்கள். காவல்துறை சொல்லும் சாக்கை விட அக்கறையாளர்களின் இந்த வாதம்தான் அதிக ஆபத்தானது!

வெள்ளி, மே 18, 2018

தமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும்

The land which is made up of blood is seems by the light of sacrifice
ம்! இது தமிழினப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாள் மட்டுமில்லை, இழந்த உறவுகளுக்காக இரு விழிக் கண்ணீர் வடிக்கக் கூட உரிமையில்லாத இனமாய் நாம் ஒடுக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் கூட!

சனி, ஏப்ரல் 28, 2018

ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!

5th Birthday of AgaSivappuThamizh
தோழமைசால் நேயர்களே!

இதோ, உங்கள் அகம் கவர் ‘அகச் சிவப்புத் தமிழ்’ ஐந்தாண்டுகளை நிறைவு செய்து தற்பொழுது (23.04.2018 முதல்) ஆறாமாண்டில் பேரடி வைத்திருக்கிறது. இந்த இன்னேரத்தில் ஐந்தாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மகிழ்ந்து விழைகிறேன்! முதலில், தளத்தின் ஐந்தாண்டு வளர்ச்சி குறித்த அடிப்படைத் தகவல்கள் இதோ உங்கள் நட்பார்ந்த பார்வைக்கு. 


பதிவுகள்
கருத்துக்கள்
பார்வைகள்
அகத்தினர்கள்★★
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
மொத்தம்
112
1405
2,70,616+
2192
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் மறுமொழிகளும் உட்பட.
** சமூக ஊடகங்களிலும் சேர்த்து.

 
நம் நேச(ர்) நாடுகள் 

இந்தியா
118885
அமெரிக்கா
71755
இரசியா
12918
பிரான்சு
7121
ஐக்கிய அரபு நாடுகள்
5362

ஐந்தாமாண்டின் தலையாய ஐந்து பதிவுகள்

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! (10679 பார்வைகள்)

2016-இல் எழுதியது இது. கடந்த ஆண்டு இரண்டாம் இடம், அதற்கு முந்தைய ஆண்டு மூன்றாம் இடம் எனப் படிப்படியாக முன்னேறி வந்தது என்றாலும் நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வந்த ‘சென்னைத் தமிழ்’ பற்றிய பதிவையே பின்னுக்குத் தள்ளி இது முதலிடம் பிடித்து விடும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மூடி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னும் ‘இன்ட்லி’ திரட்டிக்கு மக்களிடையே எவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளது என்பதையே இது காட்டுகிறது. (‘இன்ட்லி’ தளத்தினர் கவனத்துக்கு!)

காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள் (10535 பார்வைகள்)
கடந்த ஆண்டு எழுதிய இந்தப் பதிவுக்கு நினைத்துக் கூடப் பாராத வெற்றி! நடப்பாண்டிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுப் பெருவெற்றியை ஈட்டியுள்ளது. ஆழமான ஆராய்ச்சிப் பதிவுகளை விட மக்களில் ஒருவனாக இருந்து எழுதும் எளிய உண்மைகளே சிகரம் தொடும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்!

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் (10419 பார்வைகள்)
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் அசைக்க முடியாதபடி கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த இப்பதிவு இம்முறை ஒரேயடியாக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சமூகமே கொந்தளித்துக் கிடக்கும் இன்றைய சூழலில், மொழி சார்ந்த பதிவுகளை விட அரசியல் சார்ந்த பதிவுகளைப் படிக்கவே நம் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கான அறிகுறியோ இது என எண்ணத் தோன்றுகிறது!

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? (9588 பார்வைகள்)
இதுவும் புதுப் பதிவுதான். நடப்பாண்டிலேயே ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகள். ஆனால், அதில் மகிழ ஏதும் இல்லை. இல்லுமினாட்டி குறித்து நானும் நிறையவே படித்திருக்கிறேன். அது தொடர்பான பல குற்றச்சாட்டுகளும் தகவல்களும் உண்மை என நானும் நம்பத்தான் செய்கிறேன். ஆனால், இல்லுமினாட்டி எனும் பெயரை வைத்து வாய்க்கு வந்தபடி கட்டி விடப்படும் கதைகள் இங்கு ஏராளம் ஏராளம்! பெரியார் முதல் பக்கத்து வீட்டுப் பெரியம்மா வரை எல்லாரும் இல்லுமினாட்டிகள்தாம் எனக் குற்றம்சாட்டும் பாரிசாலன் போன்றோரின் அண்மைக்காலப் புரட்டுகளால் இல்லுமினாட்டி எனும் சொல் கற்பனைக்கெட்டாத அளவுக்கு விளம்பரம் பெற்றுள்ளது. அதன் விளைவாகத்தான் இந்தக் கட்டுரையும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தேவையில்லாத பதிவு ஒன்றை எழுதி விட்டோமோ என வருந்துகிறேன்!

தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்! (6509 பார்வைகள்)
எழுதி மூன்று ஆண்டுகள் ஆன பதிவு. மிகவும் சிந்தித்து எழுதிய இது உரிய வரவேற்பைப் பெறவில்லை என்கிற மனக்குறை இருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாய்க் கடந்த ஆண்டில் ஒரு நாள் திடீரென இப்பதிவு ஒரே நாளில் 4000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. ஏன், எப்படி என இன்றும் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், காலம் கடந்தாவது இப்பதிவு ஓரளவுக்கு மக்களைச் சென்றடைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி!

மனம் கமழும் நினைவுகள்

The Memories which make the Heart to be fragrance
கடந்த ஆண்டின் குறிப்பிட வேண்டிய முதல் நிகழ்வு, பார்வை எண்ணிக்கையின் திகுதிகு முன்னேற்றம்! வலைப்பூவின் மொத்தப் பார்வை எண்ணிக்கையே 2,70,616-தான். இதில் ஏறக்குறைய பாதியளவு பார்வை – அதாவது, 1,02,224 பார்வைகள் - கடந்த ஒரே ஆண்டில் கிடைத்திருக்கின்றன. கனவிலும் காணாத முன்னேற்றம் இது!

பெரும்பாலான பதிவுகள் நாட்டு நடப்புத் தொடர்பானவையாக இருந்ததும், அதுவும் நிகழ்வு நடந்ததை ஒட்டி ஓரளவுக்கு உடனுக்குடன் எழுதியதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். அப்படி இருந்தால், எழுத்துத்திறமையில் நான் கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன் எனப் பொருள். ஒருவேளை கமல், ரஜினி என நடிகர்களைப் பற்றிய பதிவுகளை அதிகம் எழுதியதால்தான் இவ்வளர்ச்சி என்றால் நம் சமூகம் இன்னும் முன்னேறவில்லை எனப் பொருள்.

அடுத்ததாக, ‘கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்?’ கட்டுரை தொடர்பாகச் சுவையான ஒரு நிகழ்வு. இந்தப் பதிவை நான் வலைப்பூவில் எழுதியதும் ‘பாக்யா’ இதழில் பணியாற்றும் நண்பர் ஸ்ரீராம் அவர்கள் படித்துவிட்டு மிகவும் பிடித்துப் போய், இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம் சிறப்பு ஒப்புதல் பெற்று அடுத்து வந்த பாக்யா இதழில் இதை வெளியாகச் செய்தார். என் வலைப்பூவில் வந்த ஒரு கட்டுரை, அதன் பின் அச்சு இதழ் ஒன்றால், அதுவும் நான் சிறு வயதில் விரும்பிப் படித்த இதழால் ஏற்று வெளியிடப்பெற்றது மிக்க மகிழ்ச்சி அளித்தது!

இதற்கு அடுத்ததும் ‘பாக்யா’ இதழ் தொடர்பானதுதான். கடந்த ஆண்டு, வாட்சப்புக் குழு ஒன்றின் மூலம் அறிமுகமான ஸ்ரீராம் அவர்கள் பாக்யாவுக்காகச் சிறுகதை எழுதி அனுப்புமாறு கேட்டார். உடனே எழுத ஏதும் தோன்றாததால், ஏற்கெனவே எழுதிக் குறிப்பேட்டில் இருந்த புத்தம் புதிய பூமி எனும் ஒரு பக்கக் கதையைச் செதுக்கி, நீட்டித்துச் சிறுகதையாக அனுப்பி வைத்தேன். ஏப்ரல் 28 – மே 4, பாக்யா இதழில் வெளியான இக்கதை, பின்னர் ஆகஸ்டு மாதம் நம் வலைப்பூவிலும் வெளியாகி நண்பர்கள் பலரிடமும் பாராட்டுப் பெற்றது.

அடுத்து, என் பல்லாண்டுக் கால ஆராய்ச்சியைக் கடந்த ஆண்டில் வெற்றிகரமாக உங்கள் பார்வைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது பற்றிச் சொல்ல வேண்டும்.

“தமிழர்கள் இந்துக்களா?” - இந்தக் கேள்விக்கான விடையை நான் மிகச் சிறு வயதிலிருந்தே தேடிக் கொண்டிருந்தேன். எனக்குப் பதினான்கு வயதாக இருந்தபொழுது என் பெரியப்பா மறைந்தார். அப்பொழுது வீட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுச் சடங்குகள் பல இது தொடர்பான விடைகளுக்கு வாசல் திறந்து வைத்தன. அப்பொழுது தொடங்கிய அக ஆராய்ச்சி துளித் துளியாக முன்னேறி, சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முடிவான விடை கிடைத்தது. அதைப் பற்றி எழுத நினைத்து, சரியாக இருக்குமோ இல்லையோ என்று தயங்கிக் கொண்டே இருந்தேன். அப்பொழுதுதான் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ எனும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கில் 2015ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதையடுத்து, ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்கள் தான் நடத்தி வரும் ‘தமிழ்க் காப்புக் கழகம்’ மூலம் தனது ‘அகரமுதல’ தனித்தமிழ் இணைய இதழில் ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்தார்.

என் ஆராய்ச்சி முடிவை அமிலச் சோதனை செய்வதற்கான வாய்ப்பாக அந்தப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டேன். இதற்காக நான் எழுதி அனுப்பிய கட்டுரை இரண்டாம் பரிசை வென்றது. ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் பரிசிலாக ரூ.3000/- தொகையை வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்கள் வழங்கினார்; திருவள்ளுவர் ஐயாவும் பாராட்டினார். இந்தக் கட்டுரையைத்தான் கடந்த ஆண்டு ‘எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு எனும் தலைப்பில் வெளியிட்டேன். எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு வரவேற்பைப் பெற்ற இப்பதிவு, எனக்கு மிகவும் பிடித்த தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் பாராட்டையும் பெற்றது.

இதுவரையான வாழ்வில் நான் எழுதியவற்றிலேயே மிக மிக முக்கியமானது என்றால் அஃது இதுதான்! தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பதற்கான சான்றாக, இதுவரை யாருமே சொல்லாத ஒன்றை இதில் சொல்லியிருக்கிறேன். தமிழர்களின் அன்றாட வாழ்விலிருந்தே இதற்கான அசைக்க முடியாத அத்தாட்சியை எடுத்துக் காட்டியிருக்கிறேன். தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒருமுறை இதைப் படித்துப் பார்க்க வேண்டுமாய்க் கோருகிறேன்!

அடுத்து நான் சொல்ல விழைவது, ‘காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள்’ எனும் பதிவு பற்றி. கடந்த ஆண்டு, சென்னை இராதாகிருட்டிணன் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நடந்த முறைகேடான பணப்புழக்கமும் அதையே அடித்தளமாகக் கொண்டு தினகரன் பெற்ற மாபெரும் வெற்றியும் மக்களாட்சியின் மீது நம்பிக்கையுள்ள அனைவரையுமே முகம் சுளிக்கச் செய்தன. எனக்கும் அதில் மாற்றுக் கருத்து அறவே இல்லை. அதே நேரம், நடந்த குற்றத்துக்கு அந்தப் பகுதி மக்கள் மீதே முழுப் பழியையும் சுமத்தியது பொறுப்பற்றதனமாகவும் தப்பித்துக் கொள்ளும் போக்காகவும் எனக்குத் தோன்றியது. அதற்காகவே நான் எழுதிய இந்தப் பதிவு இதுவரை வேறெந்தப் பதிவும் அடையாத அளவுக்கு ஆகப் பெரும் வெற்றியைக் கொய்தது! எழுதிய ஓரிரு மாதங்களிலேயே 9000க்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்தது! மூளையிலிருந்து வரும் சொற்களை விட நெஞ்சத்திலிருந்து வரும் சொற்களே அடுத்த நெஞ்சத்தை எளிதில் கவரும் என்பதை உணர வைத்த வெற்றி இது.

இதற்கு அடுத்து, கடந்த ஆண்டு வந்த முக்கியமான ஒரு கருத்தைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். பெண்ணியம் - இது திருக்குறளில் இல்லாத புதிய அதிகாரம்! எனும் தலைப்பில் ஒரு பதிவை இக்காலக்கட்டத்தில் வெளியிட்டிருந்தேன். குறட்பா வடிவிலான (அப்படி நானாக நினைத்து எழுதிய) இந்தப் பதிவு குறித்துக் கருத்துரைத்த புகழ் பெற்ற பேச்சாளரும் எழுத்தாளருமான நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் அது குறள் வெண்பாவே இல்லை என்றும் அப்படி இலக்கணம் பிறழ எழுதுவது தவறு என்றும் உரிய காரணங்களோடு விளக்கினார். ஐயாவின் அன்பான வழிகாட்டுதலுக்குத் தலைவணங்கி உடனே அப்பதிவில் உரிய விளக்கத்தைச் சேர்த்தேன். அவர் மட்டும் அதை அத்தனை தீவிரமாக எடுத்துரைத்திராவிட்டால் தொடர்ந்து அத்தவற்றை நான் கண்டிப்பாய்ச் செய்து கொண்டிருந்திருப்பேன்; என்னைப் பார்த்துப் பலரும் அதையே செய்திருக்கவும் வாய்ப்புண்டு. பெரிய கெட்ட பெயருக்கும் தலைக்குனிவுக்கும் ஆளாகாதபடி என்னைக் காப்பாற்றிய ஐயா அவர்களின் அந்த அறிவுரையை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

பதிவுலகில் கடந்த ஆண்டு நடந்ததிலேயே நான் பெரிதும் வருந்தும் நிகழ்வு, ‘தமிழ்மணம்’ திரட்டி தன் வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தியதுதான். தமிழ்த் திரட்டிகளின் துருவ விண்மீனாக என்றென்றும் திகழ்ந்த ‘தமிழ்மணம்’ கூடத் தன் சேவையை நிறுத்தும் என இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் கேட்பவர்கள் சிரித்திருப்பார்கள். ஆனால், தமிழ்ப் பதிவுலகின் திரட்டிச் சேவையைப் பீடித்த தோல்வி கடைசியில் தமிழ்மணத்தையும் கொஞ்சம் பதம் பார்த்துத்தான் விட்டது எனத் தோன்றுகிறது. அதே நேரம், வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தினாலும், தமிழ்மணம் தளத்தில் அவரவர் கணக்குக்குள் நுழைந்து இடுகைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வசதி மட்டும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாக்குப்பட்டை மூலம் அவரவர் தளத்திலிருந்தே இடுகைகளைப் பகிர்ந்து விட்டுத் தமிழ்மணம் தளத்துக்கே நாம் செல்லாமல் இருக்கும் சூழலை மாற்றுவதற்கான நடவடிக்கை மட்டுமே இது; மற்றபடி, தமிழ்மணம் தொடர்ந்து இயங்கும் என நம்புவோமாக!

முத்தாய்ப்பாக நான் கூற விரும்புவது என்னவென்றால், இந்தாண்டு நம் வலைப்பூவுக்கு கூகுள் ஆட்சென்சு கிடைத்தது. அதுவும் விண்ணப்பித்த மூன்றே நாட்களில் கிடைத்து விட்டது எனக்கு அளவிலா மகிழ்ச்சி! இந்த மகிழ்ச்சி, இனி பணம் கிடைக்கும் என்பதால் இல்லை. அப்படிப் பணத்துக்காக நான் இந்த வலைப்பூவை எழுதுவதாக இருந்தால் தமிழுக்கு ஆட்சென்சு ஏற்பிசைவு கிடைக்கும் வரை நான் காத்திருந்திருக்க வேண்டியதில்லை; வேறு வழிமுறைகள் உண்டு. மகிழ்ச்சிக்குக் காரணம் தமிழுக்கு ஆட்சென்சு சேவை கிடைத்த புதிதிலேயே, எத்தனையோ பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்த நிலையில் எனக்கு மூன்றே நாளில் ஏற்பு கிடைத்து விட்டதே என்பதால்தான். மேலும், இதுவரையில் என் படைப்புகள் என் மீதான அன்பின் அடிப்படையிலும் படைப்பின் திறம், தரம் சார்ந்தும் பலமுறை பல மதிப்பீடுகளைப் பெற்றிருக்கின்றன. இப்பொழுது கூகுள் ஆட்சென்சு கிடைத்ததன் மூலம் பொருளாதார அடிப்படையிலும் என் படைப்புகளுக்கு மதிப்பு உண்டு என உறுதியானதில் மிகுந்த மகிழ்ச்சி!

இதே மகிழ்ச்சி மற்ற தமிழ்ப்பதிவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம்! தமிழின் பிற வடிவங்களான இயல், இசை, நாடகம், ஊடகம் போன்றவற்றுக்கெல்லாம் பெரிய பொருளாதார மதிப்புகள் உள்ளன. ஆனால், நான்காம் தமிழான இணையத்தமிழுக்கு அப்படி ஒன்று இதுவரை இல்லாமல் இருந்த குறையைப் போக்கும் விதமாக கூகுள் ஆட்சென்சு சேவை தற்பொழுது தமிழுக்குக் கிடைத்துள்ளது. எனவே தாங்கள் வளம் பெறுவதற்காக இல்லாவிட்டாலும் நான்காம் தமிழ் நலம் பெறுவதற்காகவாவது நம் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கூகுள் ஆட்சென்சுக்கு விண்ணப்பிக்க வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்!

இவை தவிர, இதுதான் ரஜினி அரசியலா? கட்டுரையில் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் அதைச் ‘சிறந்த அலசல் பதிவு’ என்று பாராட்டியது, இதற்கு முன் நம் வலைப்பூவில் வேறெந்தப் பதிவும் பெற்றிராத அளவுக்குத் ‘தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்!’ பதிவு கடந்த ஆண்டில் ஒரே நாளில் 4000+ பார்வைகளை அள்ளியது, இப்பதிவுகள் வெளியானபொழுது வலைப்பூவிலும் கீற்று இதழிலும் நேயர்களோடு நடந்த உரையாடல்கள் - கருத்து மோதல்கள் ஆகியவையும் என் மனம் கமழும் நினைவுகள்!

நவில்கிறேன் நனி நன்றி!

இணையத்தில் எத்தனையோ வலைமலர்கள் இருக்க இந்த மலரையும் நாடி வந்து சுவை பார்த்து மகரந்தம் பரப்பும் தமிழ்த் தேன்சிட்டுக்களே!

இந்த மலரைத் தொடர்ந்து முகர்ந்து வரும் புதிய, பழைய அகத்தினர்களே!

தங்கள் வலைப்பூப் பட்டியலில் இந்தப் பூவையும் சரம் கோத்து மணம் பரப்பித் தரும் எனதருமை வலையுலகத் தோழர்களே!

தொடர்ந்து என் படைப்புக்களை வெளியிட்டும், அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துரைத்து என்னைச் செம்மைப்படுத்தியும் வருகிற கீற்று, அகரமுதல இதழ்களின் ஆசிரியர்களே!

பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என் பெயரை அச்சு இதழொன்றில் கண்டு மகிழ வாய்ப்பளித்த ‘பாக்யா’ ஸ்ரீராம் அவர்களே!

சரியான நேரத்தில் என் தவற்றைச் சுட்டிக்காட்டி என்னை நல்வழிப்படுத்திய முத்துநிலவன் ஐயா அவர்களே!

இப்பதிவுகளைப் படைக்கப் பல்வேறு வகைகளிலும் உதவியும் ஊக்கமும் அளித்த நண்பர்களே, உறவினர்களே, குடும்ப உறுப்பினர்களே!

எதிர்ப்பு எனும் பெயரில் என்னை மேன்மேலும் உசுப்பி விடும் இனிய எதிரிகளே!

இப்படி மக்கள் பார்வை கொட்டிக் கிடைக்க வழி செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றை நடத்துபவர்களே!

தளத்தின் ஆக்கமும் தேக்கமும் அறிந்து சீர்தூக்க உதவும் தரவகச் சேவைத் தளங்களை (Data Analyzing Sites) நடத்துபவர்களே!

பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனத்தினரே!

பதிவுகளை மெருகூட்டப் படங்களையும் செறிவூட்டத் தகவல்களையும் அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள் ஆகியவற்றின் ஆக்குநர்களே!

எல்லாவற்றுக்கும் மேலாய், அருந்தமிழ்த் தாய் வளர்க்க பிளாகர் எனும் இந்த அருமையான சேவையை, தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி, போதாததற்குக் கடந்த ஆண்டு முதல் இதற்குப் பொருளாதாரம் சார்ந்த முக்கியத்துவத்தையும் அளிக்க முன்வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தினரே!

உங்கள் அனைவருக்கும்...

இன்னும் இங்கு நான் யாரையாவது குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...

Hearty and Sweety Thanks!

காணிக்கை!

படைப்பாற்றல் வளர்க்க இதழ்களும்

அறிவாற்றல் வளர்க்க நூல்களும்

வாங்கி வாங்கிக் கொடுத்து

என் திறமையை உலகுக்குக் காட்ட

கணினி, இணையம் என

எல்லா ஏற்பாடுகளும் செய்தளித்து

இவ்வளவும் போதாதென

என் படைப்புகளுக்கான

ஆகச் சிறந்த திறனாய்வாளனாகவும் விளங்கும் 

எனதருமை இளவல்...

என்னைக் காட்டிலும்

என் மீது

அதிக அக்கறை கொண்ட

பிறவித் தோழன்...

நான் எழுதும்

ஒவ்வோர் எழுத்துக்கு முன்னாலும்

தலைப்பெழுத்தாய்த் திகழும்

என் உயிரினும் இனிய உடன்பிறப்பு...

ஜெயபாலாஜிக்கு

இவ்வாண்டின் பதிவுலகப் பெருவெற்றியைக்

காணிக்கை ஆக்குகிறேன்! 

My Brother E.Jayabalaji

படங்கள்: நன்றி ஷபிகுல் வீடியோ ஸ்டுடியோ, வால்பேப்பர் ஸ்டாக், யாழ் மடலாடற்குழு.

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்