.

புதன், மே 31, 2017

தமிழ்நாட்டு அரசியலில் ரஜினியின் தேவை என்ன? அக்கு வேறு ஆணி வேறாக ஓர் அலசல்

Rajini's Political Speech
ஜினிகாந்த்! ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசியல் வானில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரம்! அரசியல் பற்றி நான்கு வார்த்தைகள் இவர் கூடுதலாகப் பேசினாலும் பேசினார், மொத்தத் தமிழ்நாடும் திசைக்கு ஒரு விதமாய் எகிறிக் குதிக்கிறது! “அவர் வந்தால் வரவேற்போம்” என இப்பொழுதே துண்டு போடுகின்றன சில கட்சிகள். “வந்தால் எதிர்ப்போம்” என இதற்குள்ளாகவே முட்டி முறுக்குகின்றன வேறு சில கட்சிகள். “வந்தால் வெல்வாரா தோற்பாரா” என விவாத மேடையே நடத்தத் தொடங்கி விட்டன ஊடகங்கள். சமூக வலைத்தளங்களிலோ அவருக்காகக் காவடி தூக்குவது முதல் கழுவி ஊற்றுவது வரை எல்லாம் நடக்கின்றன.

எப்படியோ, இருபத்து நான்கு ஆண்டுகளாக வருவாரா, மாட்டாரா என்பது மட்டுமே சர்ச்சையாக இருந்தது மாறி, வந்தால் நல்லதா, கெட்டதா என்கிற அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது சிக்கல். அந்த வகையில் ரஜினிக்கும் ரஜினி விசிறிகளுக்கும் மட்டுமில்லாமல் ரஜினியை மையப்படுத்தித் தமிழ்நாட்டு அரசியலில் நிலவும் குழப்பத்துக்கும் இது நல்ல முன்னேற்றம்தான். ஆனால்,


ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதா கெட்டதா?

அவருக்கு அதற்கான தகுதி இருக்கிறதா, இல்லையா?

தமிழ்நாட்டு அரசியலில் ரஜினி போன்ற ஒருவரின் தேவை என்ன?


அக்கு வேறு ஆணி வேறாக அலசலாம் வாருங்கள்!

ரஜினியும் அரசியல் எதிர்ப்பும்... 


Rajini and Anbumani Ramadoss

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நடிகர்களை நாடாள வைத்து அழகு பார்ப்பதில் உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்வது தமிழ்நாடு! அப்படிப்பட்ட மண்ணில் உட்கார்ந்து கொண்டு நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனப் பேசுவது பொருளற்றது!

நடிகர்கள் நாட்டை ஆண்டது போதும். இன்றைய நிலைமையில் நடிகர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள்? நடிகர்கள்தாம் (தமிழ்)நாட்டையே பாழாக்கி விட்டார்கள்” என ‘நடிகர்’ எனும் சொல்லையே வரிக்கு வரிச் சுட்டிக்காட்டி, ஏதோ நடிகராக இருப்பதாலேயே ரஜினி அரசியலுக்கு வரத் தகுதியற்றவர் என்பது போலப் பேசுகிறார் அன்புமணி இராமதாசு. நடிகராக இருப்பது மட்டுமே அரசியலுக்கு வரப் போதுமான தகுதி இல்லை என்பது சரி என்றால், நடிகராக இருப்பதே அதற்கான தகுதிக்குறைவாகவும் ஆகி விடாது, இல்லையா?

நடிகர்கள் நாடாண்டதால் சீரழிவுகள் ஏற்பட்டிருப்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்க முடியுமா? “மருத்துவக் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பது நாங்கள்தாமே? எங்களுக்கு எதற்கு நுழைவுத்தேர்வு?” என இன்று நாம் குரல் உயர்த்திக் கேட்கிறோம் என்றால் அதற்குக் காரணமும் இத்தனை ஆண்டுக் காலம் தமிழ்நாட்டை ஆண்ட இதே நடிகர்கள்தாம்! தேசியக் கட்சிகள் தலைமுறை தலைமுறையாக ஆளும் மற்ற மாநிலங்களை விடக் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், சாதி சமயம் போன்ற சமூக மதிப்பீடுகள், தனிமனித முன்னேற்றம் எனப் பலவற்றிலும் தமிழ்நாடு பல மடங்கு முன்னேறித்தான் இருக்கிறது. இவையெல்லாம் இதே நடிகர்கள் ஆண்ட காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகள்தாம்.

அதே நேரம், ஊழல், கையூட்டு, இனத்தையே விட்டுக்/காட்டிக் கொடுத்தல் போன்றவற்றிலும் தமிழ்நாடு முன்னேறித்தான் இருக்கிறது, மறுக்கவில்லை. ஆனால் அதற்குக் காரணம், நாட்டை ஆண்டவர்கள் நடிகர்கள் என்பதாலா அல்லது தனிப்பட்ட அவர்களின் தன்னலப் போக்கினாலா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

எனவே, நடிகராக இருப்பதாலேயே ஒருவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பது ஒரு சிறிதும் ஏற்க முடியாதது!
 

Rajini and Seeman

ரஜினிகாந்த் தமிழர் இல்லை. அதனால் அவர் முதல்வராக வரக்கூடாது” என்பது அவருக்கு எதிராக முன்னிறுத்தப்படும் இன்னொரு முதன்மையான காரணம். சீமானை மட்டும் சொல்லவில்லை; ரஜினிக்கு எதிராகப் பல காலமாய்ப் பலரும் முன்வைக்கும் காரணம்தான் இது. ஆனால், இது சரியா?

ஒருவர், ஒரு துறைக்கு வரலாமா கூடாதா என்பதை அவருடைய துறை சார்ந்த தகுதிகளையும் தகுதியின்மைகளையும் வைத்துத்தான் முடிவு கட்ட வேண்டுமே தவிர, இப்படிப் பிறப்புச் சார்ந்த காரணங்களையெல்லாம் முன்வைப்பது மிக மிக மிகத் தவறானது!

அப்படிப் பார்த்தால், விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தே ஈனப் பிழைப்பு நடத்தி வரும் டக்ளஸ் தேவானந்தா, சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்த கருணா, நடந்த இனப்படுகொலைக்கு அன்றைய நிதியமைச்சர் என்ற முறையில் இரண்டாயிரம் கோடிக்குக் காசோலை தீட்டிக் கொடுத்த சிதம்பரம், இவர்கள் எல்லாரும் பிறப்பால் தமிழர்கள்தாம். அதற்காக, இவர்களைத் தமிழர்கள் என ஏற்றுக் கொள்ள முடியுமா? எனவே, ஒருவர் தமிழரா இல்லையா என்பதை அவர் வாழ்க்கை முறையை வைத்துத்தான் சொல்ல வேண்டுமே ஒழிய பிறப்பை வைத்து இல்லை.

அவ்வகையில் பார்த்தோமானால், கருநாடகத்திலேயே பிறந்து வளர்ந்து, இளைஞர் பருவம் வரை கன்னடத்தையே தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்த ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்நாட்டில் நிலைபெற்ற பின் வீட்டிலேயே கூடத் தமிழில்தான் பேசுகிறார்; தமிழ்நாட்டில்தான் தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பவை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியவை. எத்தனையோ கோடித் தமிழர்கள் இன்னும் திருக்குறளைக் கூட முழுமையாகப் படிக்காதிருக்க, தமிழரின் மொழி, பண்பாடு, வரலாறு, நாகரிகம் என அனைத்துக்கும் கருவூலமாகத் திகழும் தொல்காப்பியத்தின் உரை வடிவமான ‘தொல்காப்பியப் பூங்கா’வைப் படித்தவர் ரஜினிகாந்த். அதுவும் தொல்காப்பியப் பூங்கா நூலுக்குப் பக்கக்காட்டியாக (Bookmark) மயில்பீலியைப் பயன்படுத்தும் அளவுக்குத் தமிழ் ரசனையுள்ளவர் என்றால் இதற்கு மேல் தமிழர் எனச் சொல்லிக் கொள்ள வேறென்ன தகுதி வேண்டும்?

எனவே, பிறப்பால் கன்னடர் என்பதால் மட்டும் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்பதையும் அவ்வளவாக ஏற்க முடியாது. 


Rajini and Modi

ரஜினி பா.ஜ.க-வின் சார்பாகத்தான் அரசியலில் நுழைகிறார் என்பது அடுத்த குற்றச்சாட்டு. திகைக்க வைக்கும் குற்றச்சாட்டுதான் என்றாலும் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. புலனாய்வு இதழியல் எனும் பெயரில் இப்படிப்பட்ட தகவல்களைத் தரும் அதே ஊடகங்கள்தாம், தங்கள் கட்சியில் சேருமாறு பா.ஜ.க., தரும் தொல்லை தாங்காமல் ரஜினி தனிக் கட்சி தொடங்குகிறார் என்றும் எழுதுகின்றன. முழுக்க முழுக்கத் திரைமறைவில் நடக்கும் அரசியல் நாடகம் இது. இதில் ரஜினி வில்லனா கதாநாயகனா என்பது போகப் போகத்தான் தெரிய முடியுமே தவிர இப்பொழுதே இது பற்றி நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது.

அடுத்ததாக, “ரஜினி வேண்டுமானால் அரசியலுக்கு வந்து தலைவராகச் சேவை செய்யட்டும்; ஆனால், முதல்வராக ஆள அவர் விரும்பக்கூடாது” என்கிறார் சீமான். சேவை அரசியலுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கையே புரிந்து கொள்ளாத பேச்சு இது. தேர்தல் அரசியலை விடச் சேவை அரசியலுக்குத்தான் செல்வாக்கு நிறைய. 


Father of Nation and Father of Tamils

இந்தியாவில் காந்தியடிகளை விட, தமிழ்நாட்டில் பெரியாரை விடப் பெரிய அரசியல் ஆளுமைகள் வேறொருவரும் கிடையாது. இவர்கள் இருவருமே தேர்தல் அரசியலில் ஈடுபடாதவர்கள்தாம்.

வெறும் மக்கள் தொண்டு செய்யும் வாய்ப்பு மட்டுமே போதும் என ஒருவர் அரசியலுக்குள் வந்தால், அப்பொழுதே மக்கள் அவர் மீது எல்லையற்ற அன்பும் நன்மதிப்பும் கொண்டு விடுகிறார்கள். பணம், பதவி, ஆட்சி, அதிகாரம் என அத்தனையையும் வாரி வழங்கும் தேர்தல் அரசியலை விட்டுவிட்டு மக்கள் தொண்டுக்காக மட்டும் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட நல்லவராக இருப்பார் என அப்பொழுதே மக்கள் அவரை நம்பத் தொடங்கி விடுகிறார்கள்.

கோடிக்கணக்கில் தொண்டர்களைக் கொண்ட பெரிய கட்சிகள் கூடச் சாராயமும் சாப்பாட்டுப் பொட்டலமும் தந்து மாநாட்டுக்கு ஆள் சேர்க்கும் இந்நாட்டிலே இனப்படுகொலை நினைவேந்தல், ஏறு தழுவல் என மே பதினேழு போன்ற அரசியல் இயக்கங்கள் வெறுமே சமூக ஊடகங்களில் நிலைத்தகவல் இட்டாலே கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதுகிறார்கள் என்றால் காரணம் என்ன? தேர்தல் அரசியல் சாராத இயக்கங்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் அந்த நம்பிக்கைதான்.

இந்தளவுக்குக் கண்மூடித்தனமான நம்பிக்கை ரஜினி மீது ஏற்படுவதைத்தான் விரும்புகிறாரா சீமான் அவர்கள்?

ஒருவர் பொதுவெளியில் எவ்வளவுதான் பெரும்புள்ளியாக இருந்தாலும் அரசியல் என வரும்பொழுது தேர்தல் அரசியலை அவர் தேர்ந்தெடுத்தால் அவருடைய செல்வாக்கு ஒரே தேர்தலில் தெளிவாகி விடும். மாறாக, அவர் சேவை அரசியலைத் தேர்ந்தெடுத்தால் பொதுவாக அவருக்கு இருக்கிற செல்வாக்கே அவருடைய அரசியல் செல்வாக்காகப் பார்க்கப்படும். கண்டிப்பாக அவர் கைகாட்டுபவர்தான் தேர்தலில் வெல்வார் என்கிற மாயத் தோற்றம் ஊடகங்களாலும் மற்றவர்களாலும் வெகு எளிதாகக் கட்டமைக்கப்படும். இதுவே ஒவ்வொரு தேர்தலின்பொழுதும் மக்கள் மனதில் ஒரு முன்முடிவை ஏற்படுத்தித் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும். அதுவும் ரஜினி போல ஒருவர் சேவை அரசியலுக்கு வந்தால் இது இன்னும் பன்மடங்காகும்.

அரசியல் கொள்கைகள், தமிழர் பிரச்சினைகள், சமூகச் சிக்கல்கள் பற்றியெல்லாம் தெளிவாக எந்த நிலைப்பாட்டையும் இன்னும் அறிவிக்காத ரஜினி, சேவை அரசியலில் நுழைவது மூலம் எடுத்த எடுப்பிலேயே இப்பேர்ப்பட்ட வானளாவிய செல்வாக்கைப் பெறுவது எந்த விதத்திலும் நல்லதில்லை. அரசியலுக்கோ சமூகத்துக்கோ மட்டுமில்லை, சீமானுக்கும் ரஜினிக்குமே கூட அது நல்லது கிடையாது.

எனவே, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களுள் எதுவுமே அவ்வளவு சரியானதாகத் தென்படவில்லை. மாறாக, அரசியலில் நுழைவதற்கென அடிப்படையான தகுதி ஒன்று உண்டு. அரசியல் மட்டுமில்லாமல், எந்த ஒரு துறையில் காலெடுத்து வைக்கவும் இன்றியமையாத தகுதி என இன்னொன்று உண்டு. இவை இரண்டும் இருந்தால் ரஜினி என்ன, யார் வேண்டுமானாலும் தாராளமாக அரசியலுக்குள் வரலாம். அவை என்னவென்றால்...

ரஜினியும் அவருடைய அரசியல் தகுதிகளும் (1)

ருவர் அரசியலுக்கு வருவதன் மூலம் சமூகத்தில் ஓரளவாவது நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அவர் சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் கொஞ்சமாவது அக்கறையுள்ளவராக இருக்க வேண்டும். இதுதான் அரசியலுக்கு வருவதற்கான அடிப்படைத் தகுதி. 


Rajini's Negligence on Tamil Genocide
 ஆனால், ரஜினிக்குத் தமிழ் மக்கள் மீது அப்படியெல்லாம் பெரிதாக அக்கறை ஏதும் இருப்பதாக ஒருநாளும் தெரிந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் தமிழ் இனமே அழித்து ஒழிக்கப்பட்ட அந்நாட்களில் அவர் தானாக முன்வந்து குரல் எழுப்பியிருக்க வேண்டும்! தெருவுக்கு வந்து போராடியிருக்க வேண்டும்! தன் நண்பரான கருணாநிதியோடு அது குறித்துச் சண்டை இட்டிருக்க வேண்டும்! அப்படியெல்லாம் அவர் எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை.

ஈழப் பிரச்சினை மட்டுமில்லை, தமிழ் மீனவர் படுகொலை, அணு உலைப் பிரச்சினை போன்றவை முதற்கொண்டு அண்மைய பிரச்சினைகளான சல்லிக்கட்டு, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வுத் திணிப்பு, இந்தித் திணிப்பு என எதிலுமே அவர் ஒருபொழுதும் தானாக முன்வந்து போராடியதோ கருத்துரைத்ததோ கிடையாது.

தமிழினத்தின் தலை போகிற பிரச்சினைகளுக்குக் கூட இதுவரை ஒருமுறையும் குரல் கொடுக்காத இப்படிப்பட்டவருக்கு இந்த மண்ணின் மீதோ மக்கள் மீதோ என்ன பெரிய அக்கறை இருந்து விட முடியும்? அப்படி அக்கறை இல்லாத ஒருவர் அரசியலுக்கு வருவதால் என்ன பெரிய நன்மை நிகழ்ந்து விட முடியும்? இவை நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்விகள்!

ரஜினியும் அவருடைய அரசியல் தகுதிகளும் (2)

ஒருவர் ஒரு துறையில் நுழைந்து வெல்ல வேண்டுமானால், அந்தத் துறை சார்ந்த அறிவு, பக்குவம், துணிச்சல், செயல்திறம் என எத்தனையோ தகுதிகள் தேவை. ஆனால், இவை எல்லாவற்றையும் விட முதன்மையான அடிப்படைத் தேவை அந்தத் துறையில் ஈடுபட வேண்டும் எனும் ஆர்வம். அரசியலுக்கு மட்டுமில்லை எல்லாத் துறைகளுக்குமே இது பொருந்தும். அப்படி, அரசியலில் ஈடுபட வேண்டும் எனும் ஆர்வம் முதலில் ரஜினிக்கு இருக்கிறதா என்பதே இங்கு வெள்ளிவிழாக் காணும் கேள்வியாக இருக்கிறது!


Rajinikanth awaiting for God's Voice
அரசியலுக்கு வருவீர்களா?” என யார், எப்பொழுது, எப்படிக் கேட்டாலும் ரஜினி தரும் ஒரே விடை, “ஆண்டவன் ஆணையிட்டால் வருவேன்” என்பதுதான். தெரியாமல்தான் கேட்கிறேன், இப்படி ஆண்டவன் ஆணையிடுவது வரை காத்திருப்பது தவிர வேறு எதுவுமே செய்யாமலேதான் திரைத்துறையில் இவ்வளவு பெரிய ஆளானாரா ரஜினிகாந்த் அவர்கள்?

எத்தனையோ திரைப்பட நிறுவனங்களில் ஏறி இறங்கி, எவ்வளவோ தோல்விகளையும் வெறுப்புகளையும் சந்தித்து, அப்படியும் விடாமல் வாய்ப்புத் தேடி அலைந்து, படாதபாடுகளெல்லாம் பட்டு இப்பேர்ப்பட்ட உச்சத்தை எட்டியவர் ரஜினி அவர்கள். ஆனால், திரையுலகுக்கு வருவதற்கு மட்டும் இந்த அளவுக்குப் போராட ஆயத்தமாக இருந்தவர், கோடிக்கணக்கான மக்களை வழிநடத்துகிற மாபெரும் பொறுப்பான அரசியலுக்கு வருவதற்கு மட்டும் “கடவுளாகப் பார்த்துக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம்” என விட்டேற்றியாக இருக்கிறார். எனில், அரசியல் மீது ரஜினிக்கு இருப்பது உண்மையிலேயே ஆர்வமா அல்லது வெறும் ஆர்வக்கோளாறா எனும் கேள்வி எழுகிறது.

இப்படி, அடிப்படை ஆர்வம் கூட இல்லாமல் அரசியலுக்கு வந்து ரஜினி என்ன செய்வார்? என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடுவார்? இவை தவிர்க்க முடியாத கேள்விகள்!

ஆனால், ரஜினி என்கிற ஒருவரின் தகுதி – தகுதிக்குறைவு குறித்த இத்தனை கேள்விகளையும் தாண்டி எழும் இன்னொரு கேள்வி – ‘ரஜினி போன்ற ஒரு மனிதருக்குத் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கும் தேவை என்ன?’ என்பது. மிகவும் இன்றியமையாத அந்தக் கேள்விக்கு விடை காணலாம் வாருங்கள்!

ரஜினியும் தமிழ்நாட்டு அரசியலும் 


Who is the Next?

பொதுவாக, உலகில் தேர்தல் என வந்தாலே மக்கள் இரண்டு காரணங்களின் அடிப்படையில்தாம் வாக்களிக்க முடியும். ஒன்று, தாங்கள் நம்புகிற ஆளுமையின் கட்சிக்கு அல்லது தாங்கள் சார்ந்த கொள்கையின் அடிப்படையிலான கட்சிக்கு. தமிழ்நாட்டு அரசியல் எப்பொழுதுமே நமக்கு இந்த இரு பெரும் தேர்வுகளையுமே வழங்கி வந்திருக்கிறது.

ஒருபுறம் தமிழர் நலன் எனும் கொள்கை சார்ந்த அரசியலை முன்னிறுத்தி வாக்குக் கேட்கிற தி.மு.க., மறுபுறம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனத் தனி மனித ஆளுமைகளை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் அ.தி.மு.க., என இங்கு எப்பொழுதுமே இரண்டு தேர்வுகளும் உண்டு. மற்ற இடங்களில் காணப்படுவது போல் வெறும் தனிமனிதர்களின் ஆளுமைக்கு இடையிலான மோதலாகவோ, வேறுபட்ட கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாக மட்டுமோ தமிழ்நாட்டு அரசியல் இருந்ததில்லை.

இதனால் தமிழ்நாட்டின் அரசியல் களம் மொத்தமாகவே கொள்கை அரசியலுக்கும் ஆளுமை அரசியலுக்கும் இடையிலான இரு முனைப் போட்டியாக மாறிப் போனது. இது தவறான அரசியல் என்று இத்தனை காலமாக நாம் நினைத்திருந்தோம். ஆனால், ஜெ., இறந்த பிறகு நடக்கும் அரசியல் அட்டூழியங்களையெல்லாம் பார்த்த பின்புதான் ஓர் உண்மை புரிகிறது.

திராவிடம் எனும் தமிழர்களுக்கான அரசியல் கொள்கையைச் சார்ந்த தி.மு.க-வுக்கு எதிராக அதே கொள்கை சார்ந்த அ.தி.மு.க-வின் ஆளுமை அரசியல் இங்கு வலுவாக இருந்ததால்தான் மற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளோ கருத்தியல்களோ இங்கே காலூன்ற இயலாமல் இருந்தது என்பதுதான் அந்த உண்மை. கொள்கை அரசியலைப் போலவே ஆளுமை அரசியலும் எந்த அளவுக்கு ஒரு சமூகத்துக்கு இன்றியமையாதது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய புள்ளி இதுதான்.

ஆனால், தற்பொழுது தமிழகத்தின் இந்தத் தற்சார்பு அரசியலுக்கு ஆபத்து வந்திருக்கிறது. கொள்கை அரசியலையே தன் முகமாகக் கொண்டிருந்த தி.மு.க., இன்று அதே முகத்தில் படிந்திருக்கும் ஈழத் தமிழர்களின் குருதிக் கறை, ஊழல் கறை போன்றவற்றைத் துடைக்க முடியாமல் நிற்கிறது. மறுபக்கம் தன் அரசியல் ஆளுமைகள் இருவரையுமே இழந்து நிற்கிறது அ.தி.மு.க. தமிழ்நாட்டின் கொள்கை அரசியல் – ஆளுமை அரசியல் இரண்டுமே வீழ்ந்து கிடக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி எப்படியாவது இங்கே கூடாரம் போடத் துடிக்கின்றன தேசியக் கட்சிகள்.

அது நடக்காமல் தடுக்க வேண்டுமானால், கொள்கை அரசியலில் தி.மு.க-வுக்கு மாற்றாகவும், ஆளுமை அரசியலில் அ.தி.மு.க-வுக்கு மாற்றாகவும் வேறு தேர்வுகள் தமிழ் மண்ணிலிருந்தே புத்தெழுச்சி பெற்றாக வேண்டும். தமிழ் தேசியம் எனும் புதிய கொள்கையோடு புறப்பட்டிருக்கும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் அந்த வகையில் நன்றாகவே செயல்படுகின்றன. தி.மு.க., என்கிற ஒரு கட்சிக்கு மாற்றாக மட்டுமின்றி திராவிடம் எனும் பழங்கொள்கைக்கே மாற்றாகத் தங்களை அவை முன்னிறுத்துகின்றன. ஆக, கொள்கை அரசியலுக்கான மாற்றுத் தேர்வுகள் இம்மண்ணிலேயே உருவாகி வருகின்றன.

ஆனால், எதிர்ப் பக்கம் இன்னும் காலியாகவே இருக்கிறது. அ.தி.மு.க-வின் இடத்தை நிரப்பவும் இங்கு ஆள் தேவை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போல் தங்கள் தனிப்பட்ட ஆளுமையை முன்னிறுத்தும் வலிமையான தமிழ் அரசியலாளர்கள் தேவை. இல்லாவிட்டால், அந்த இடத்தை நிரப்ப தேசியக் கட்சிகள் உள்ளே வரும்.

தமிழ்நாட்டு அரசியலில் ரஜினி போன்றவர்களின் தேவை இதனால்தான் ஏற்படுகிறது. நிற்க! ரஜினிதான் எனச் சொல்லவில்லை; ரஜினி போன்றவர்கள் எனச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் வெற்றிடமாக இருக்கும் அந்த ஆளுமை அரசியல் இடத்தை நிரப்ப ரஜினியோ கமலோ, நடிகரோ கவிஞரோ, எழுத்தாளரோ அறிவியலாளரோ யாராவது ஒருவர் வர வேண்டும். அப்படி வருபவர் உண்மையாகவே தமிழ் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவராக இருத்தல் வேண்டும். ரஜினி அப்படிப்பட்டவராக இருந்தால் நாம் வரவேற்கலாம். இல்லையென்றால் வேறு ஒருவருக்காகக் காத்திருப்போம், அவ்வளவுதான்! ஆக, மொத்தம் அந்த இடம் காலியாக இருக்கக்கூடாது!

அப்பொழுதுதான் தமிழ்நாட்டு அரசியல், தொடர்ந்து கொள்கை அரசியலுக்கும் – ஆளுமை அரசியலுக்கும் இடையிலான போட்டியாக மட்டுமே நீடித்து இருக்கும். அதுதான், தமிழர்களுக்கு எதிரான கொள்கைகள் இம்மண்ணில் வேரூன்றாமல் தடுக்கத் துணை புரியும். அதுதான் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் நிறம் மாறாமல் – குறிப்பாகக் காவி நிறத்துக்கு மாறாமல் – தடுக்க ஏதுவாகும்.


(நான் கீற்று தளத்தில் ௩௦-௫-௨௦௧௭ அன்று எழுதியது) 

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி ௧) கலக்கல் சினிமா, ௨) பத்திரிகை, ௩ & ௪) லைவ்டே, ௫) தமிழ் ஒன் இந்தியா, வினவு, ௬) திசைகாட்டி, ௭) சிவாஜி திரைப்பட நிறுவனம், ௮) முத்துக்கமலம், தமிழ் ஒன் இந்தியா, பிக்சபே.

தொடர்புடைய பதிவுகள்: 
நாடாளலாமா நம் நாயகர்கள்? தமிழ் நடிகர்களின் அரசியல் தகுதி பற்றி விரிவான அலசல்
கொள்கையா தமிழர் நலனா, எது முக்கியம்? - சீமானிடம் சில கேள்விகள்!

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

20 கருத்துகள்:

  1. நண்பருக்கு மேலே இட்டு கருத்துரையை காப்பி எடுத்து வலைத்தளத்தில் இடவும் தவறுதலாக முகநூலில் விழுந்து விட்டது அதுவும் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! முகநூல் கருத்துரையும் இதே பக்கத்தில் தொடர்ந்து காட்சியில் இருக்கவே செய்யும். எனவே, நகலெடுத்து ஒட்ட வேண்டிய தேவை இல்லை எனக் கருதுகிறேன். கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  2. நன்றாகச் சிந்தித்தவர்கள்
    என்றாவது தமிழ்நாடு மேம்பட உழைக்கக்கூடியவரை
    இன்றாவது அடையாளப்படுத்தி
    வென்றாவது வந்திங்கே தமிழகத்தை மேம்படுத்த
    ஒன்றாவது வாக்கை (வோட்டை) பாவிக்கட்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாடு மேம்பட உழைக்கக்கூடியவர்கள் இல்லாமல் இல்லை ஐயா! ஆனால், அப்படிப்பட்டவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. மக்கள் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் நல்லவர்களாக இல்லை. நல்லவர்களாகவும் இருந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாகவும் இருக்கக்கூடியவர்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை.

      கருத்துக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  3. இடம் காலியாக இருக்கக்கூடாது என்ற உங்களின் கருத்து ஏற்கத்தக்கதே. மற்றபடி ரஜினி அரசியல் என்பதற்கு மாறாக, தற்போது வணிக நோக்கத்தில் இவ்வாறு ஈடுபடுகிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணிக நோக்கம் அவருக்கு இருக்க வாய்ப்பில்லையே ஐயா! அவருக்கு இல்லாத சொத்தா பணமா தொழிலா? வரட்டும் பாரக்கலாம்.

      நீக்கு
    2. கருத்தை ஏற்றமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஒற்றைச் சொல்லில் உங்கள் நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தி விட்டீர்கள்! அருமை ஐயா! மிக்க நன்றி!

      நீக்கு
  5. திராவிட அரசியல் தமிழர்களை தூக்கிவிட வந்தது என்று நினைத்த என்னைப் போன்ற பார்ப்பனர் ஏமாந்தோம்.அவர்கள் குடும்பம் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.புதிதாக ஒரு இளைஞர் கூட்டம் வரணும். வரும். நண்பரே...அந்த அரசியலில் ஜாதி மதம் இருக்காது. கிழடுகள் நாங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து குதுகூலிப்போம். ஸ்ரீநாத்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! தங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

      திராவிட அரசியல் எனும் பெயராலும் மொழிப்பற்று, இனப்பற்று ஆகியவற்றின் பெயராலும் ஆட்சிக்கு வந்தவர்கள் உலகப் பெரும் கொள்ளை அடித்தார்கள் என்பதை எந்த விதத்திலும் மறுப்பதற்கே இல்லை.

      ஆனால் அதே நேரம், திராவிட அரசியல் ஆட்சியாளர்களால் தமிழ்நாடு முன்னேறியும் உள்ளது. இதை நான் சொல்லவில்லை உலகின் தலைசிறந்த பொருளியல் மேதை, நோபல் பரிசாளர் அமர்த்தியா சென் கூறியுள்ளார். தமிழ்நாடும் கேரளமும் தனிநாடுகளாக இருந்திருந்தால் எப்பொழுதோ முன்னேறியிருக்கும் என்கிறார் அவர். நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விடுதலையடைந்தபொழுது இருந்ததை விடத் தமிழ்நாடு இப்பொழுது எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்பதை உணரலாம். ஆட்சியாளர்களின் பங்களிப்பின்றி இப்பேர்ப்பட்ட மாறுதல் இயலாது இல்லையா?

      ஆனால், நீங்கள் விரும்புவது போல் சாதி சமயம் அற்ற அரசியலும் இன்றியமையாத் தேவை. அப்படி ஒன்று வந்தால் உங்களுக்கும் எனக்கும் மட்டுமில்லை நாட்டிலுள்ள அனைவருக்குமே மகிழச்சிதான். அதுதான் உண்மையான மகிழச்சி! அந்த நாள்தான் உண்மையான விடுதலை நாள்!

      கருத்துக்கு மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட சமூக ஊடகப் பொத்தான்களைச் சொடுக்கி, உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களுக்கும் போய்ச் சேர உதவுங்கள்! மீண்டும் நன்றி!

      நீக்கு
  6. மிக நல்ல அலசல் இபுஞா சகா! நீங்கள் சொல்லியிருக்கும் தகுதிகள் அனைத்தும் மிகவும் சரியே.

    இதில் இதையும் சேர்த்துக் கொள்ளலாமோ??!! அதாவது ரஜனி அரசியலில் வருவாரா மாட்டாரா என்று ஒரு கேள்விக் குறியையே வீசி வந்தவர். சமீபத்தில் கூடத் தெளிவாகக் கருத்துச் சொல்லாதவர் அதாவது தான் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பதை. ஆண்டவன் என்ன சொல்கிறாரோ அப்படி என்றுதான் சொல்லியிருந்ததாக வாசித்த நினைவு. ஒரு முடிவு எடுப்பதில் இப்படியான தடுமாற்றம் உள்ள ஒருவர் எப்படி அரசியலில் வந்து ஒரு கட்சிக்குத் தலைவராகவும், ஒரு வேளை ஆட்சியில் அமர்ந்தால் மக்களை வழிநடத்தும் தலைவராகவும் ஆக முடியும்? முடிவு எடுப்பது அதாவது டெசிஷன் மேக்கிங்க் என்பது ஒரு ஆளுமை நிறைந்த தலைவருக்கு மிகமிக முக்கியம் அல்லவா? கட்சியை வழிநடத்தவும இந்தத் தகுதி மிக மிகத் தேவை அல்லவா? இத்தனை நாட்கள் தனது ரசிகர்களைச் சந்திக்காதவர் இப்போது திடீரென்று சந்திப்பது என்பது எல்லாம்.... எனது தனிப்பட்டக் கருத்து. இது மிகவும் சிந்திக்க வைக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீங்கள் கூறுவதும் உண்மைதான். அரசியலுக்கு வரலாமா வேண்டாவா என்பதையே இவ்வளவு நாட்கள் இழுத்தடிப்பவர் நாளை அரசியலுக்கு வந்தால், உடனுக்குடன் எப்படி முடிவெடுப்பார் என்பது நல்ல கேள்வி. நடிகை கஸ்தூரி முதற்கொண்டு பலரும் இதைக் கேட்கிறார்கள். ஆனால், எனக்கு இது அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லை.

      அரசியல் வாழ்வில் நுழைவது என்பது ஒரு மனிதரின் வாழ்க்கையை முற்று முழுதாக மாற்றி விடக்கூடியது. மிகப் பெரிய முடிவு அது. ஒருமுறை அரசியலில் இறங்கி விட்டால் பின்னர் அதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதில்லை. அதனால்தான் ரஜினி தயங்குகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. யாராக இருப்பினும் இந்தத் தயக்கம் இருக்கவே செய்யும். எனவே, இந்த ஒரு விதயத்தில் தடுமாறுகிறார் என்பதால் எல்லாவற்றிலும் இப்படித்தான் இருப்பார் என நினைக்கத் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்படி முடிவெடுக்கவே தெரியாதவராக இருந்தால் திரைத்துறையில் இவ்வளவு உயரத்துக்கு அவர் வந்திருக்க முடியாதே!

      இருந்தாலும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  7. ஏன் ஒரு தனி மாமனிதனின் முடிவை இவ்வளவு தூரம் ய்யப்படுத்தி அதை விவாத பொருள் ஆக்கணும் ? அவர் விருப்பப்படும் நேரத்தில் வரட்டும் . மற்ற படி ரஜினியின் தேவை..இடம் காலியாக இருக்கிறது என்று எல்லாம் நாமே அப்படி ஒன்றை ஏட்படுத்தி கொள்ள வேண்டியது இல்லை.

    முதலில் ஆளுமை சார் அரசியல் என்பதே ஜனநாயகத்திற்கு நல்லதில்லை . சொல்ல போனால் இப்போது உள்ள ஆளுமை வெற்றிடம், கருத்து சார்ந்த விவாத அரசியலை உருவாக்க சரியான வாய்ப்பை வழங்கி உள்ளது. எனவேய இந்த வெற்றிடத்தை நிரப்ப இனொரு ஆளுமையை நாம் தேட வேண்டியது இல்லை. புதிய ஜனநாகய கலாசாரத்தை உருவாக்க ஒரு வாய்ப்பாக இதை நாம் காண வேண்டும்.

    ஆளுமை சார் அரசியலில் தனிமனிதரின் துதிபாடல் , பொம்மை மந்திரிகள், ஊழல் , அனைத்து முடிவுகளும் ஓரிடத்தில் குவித்தல், அந்த மையமான மனிதனின் சுற்றி ஒரு கட்டுப்படுத்தும் கூட்டம் என்று மக்கள் விரோத செயல்பாடுகள் நிறைந்த அரசியல் தான் நிலவும்.

    நன்றாக பார்த்தல் தி மு க , ஆ தி மு க இரண்டுமே ஆளுமை சார்ந்த அமைப்புகள் தான். ஒப்பீட்டு அளவில் வேறுபாடுகள் உள்ளன . நீங்கள் அதையே மிகைப்படுத்தி தி முக வை கருத்து சார் அமைப்பு என்றும் அ தி மு க வை ஆளுமைசார் அமைப்பு என்று கூறுகிறீர்கள்.


    நல்ல ஆரோக்கியமான விவாத அரசியலில் பா ஜா க போன்ற நம்பிக்கை வாத கட்சிகளுக்கு சிறிதும் இடம் இருக்காது. அதை விடுத்தது ரஜினி ரஜினி என்று எல்லாம் யாரோ ஒருவரை பற்றி ஏன் மெனக்கெட வேண்டும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்!

      இரசினி வரும்பொழுது வரட்டும் என்கிறீர்கள். ஒரு மனிதர் ஒரு துறையில் நுழைய விருப்பம் இருந்தால், ஒன்று - வர வேண்டும்; அல்லது, வரவில்லை என்று தெளிவாகச் சொல்லி விட வேண்டும்; இல்லையேல், "இப்பொழுது எனக்குத் தயக்கமாக இருக்கிறது. பின்னாளில் பார்க்கலாம்" என்றாவது சொல்ல வேண்டும். எதுவுமே திட்டவட்டமாகச் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தால் அவர் வாயைத் திறக்கும்பொழுதெல்லாம் அது தொடர்பான விவாதங்களும் கிளம்பவே செய்யும். அது விவாதிக்கும் எங்கள் / நம் தவறு இல்லை; அவர் தவறு. அதற்கு நீங்கள் என்னைக் குறை சொல்லக்கூடாது.

      ஆளுமை சார் அரசியல் மக்களாட்சிக்கு நல்லதில்லை என்கிற உங்கள் கருத்துதான் என் கருத்தாகவும் சில மாதங்கள் முன்பு வரை இருந்தது. ஆனால், செயலலிதா மறைவுக்குப் பிறகுதான் அது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தேன். கட்டுரையிலும் இதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். நம் மக்களில் பெரும்பாலோர் இன்னும் ஆளுமை சார் அரசியலைத்தான் விரும்புகிறார்கள். நாட்டில் எவ்வளவோ பேர் இருக்கும்பொழுது, அரசியல் அளவில் பெரிய கொள்கை எதுவும் இல்லாத இரசினி அவர்களை அரசியலுக்கு வரும்படி நம் மக்களில் கணிசமானோர் அழைப்பதிலிருந்தே நாம் இதை உணரலாம். நம் மக்கள் எதிர்பார்ப்பது நம்பிக்கைக்குரிய தலைவரைத்தானே தவிர சரியான கருத்தியல் கொண்ட தலைவரை இல்லை. அதனால்தான் கருத்தியல் சார்ந்து இயங்கும் தி.மு.க-வின் வாக்கு வங்கியை விட ஆளுமை சார்ந்தியங்கும் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி எப்பொழுதும் அசைக்க முடியாததாக இருக்கிறது.

      நீங்கள் தி.மு.க., கருத்தியல் சார்ந்தது இல்லை; அதுவும் ஆளுமை சார்ந்ததுதான் என்கிறீர்கள். பகுதியளவு அது உண்மைதான். கருணாநிதி என்கிற ஒரு தனி ஆளுமையைத்தான் அது முன்னிறுத்துகிறது, நம்பியிருக்கிறது. என்றாலும், கருணாநிதிக்கு வாக்களிப்பவர்களே கூட அவர் திராவிடம் என்கிற கருத்தியல் சார்ந்தவர் எனவும், தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர் எனவும் நம்பித்தான் வாக்களிக்கிறார்களே தவிர, கருணாநிதி என்கிற தனிமனிதரின் ஆளுமை மீதான நம்பிக்கையால் மட்டும் இல்லை. தொடக்கத்தில் நிலைமை இப்படித்தான் இருந்தது. பின்னாளில் குறிப்பிட்ட கருத்தியலுக்காகத் தனக்கு வாக்களித்தவர்களைத் தனக்காக வாக்களிப்பவர்களாகக் கருணாநிதி மாற்றி விட்டார். அது அவருடைய தனிப்பட்ட திறமை. அதற்காக தி.மு.க-வே ஆளுமை அரசியல் சார் கட்சிதான் எனச் சொல்ல முடியாது.

      மற்றபடி, ஏன் இரசினி இரசினி என எல்லாரும் அவரைப் பற்றி வினைகெட (மெனக்கெட) வேண்டும் எனக் கேட்டால், அந்தளவுக்கு இரசினி சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறார். அது நல்ல தாக்கமா கெட்ட தாக்கமா என்று கூட ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையில், அது பற்றிய தொடக்க நிலை விழிப்புணர்வையாவது ஏற்படுத்த / பகிர்ந்து கொள்ள வேண்டியது தேவையாகிறது.

      ஆம்! இரசினி நல்லவரோ கெட்டவரோ, ஆனால், தவிர்க்க முடியாதவர்.

      உங்கள் ஆழமான கருத்துக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! பதிவு பிடித்திருந்தால், மேற்கண்ட சமூக ஊடகப் பொத்தான்களைச் சொடுக்கி, உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களுக்கும் போய்ச் சேர உதவுங்கள்!

      நீக்கு
    2. ரஜினிக்கு முடிவு எடுக்க தெரிய வில்லை. குழப்ப மனநிலையில் இருப்பவர் என்பதெல்லாம் மிக மிக தவறு. முடிவுகளை எடுக்க முடியாதவர் அல்லது தெரியாதவர் எப்படி தனது துறையில் ஒரு உயர் நிலையினை அடைந்து இருக்க முடியும்?

      எத்தனை கதைகள் கேட்டு இருப்பார் ?......எத்தனை இயக்குனர்களை பார்த்து பேசி இருப்பா ர்?....தனது மார்க்கெட்டை எப்படி இன்னமும் அப்படியே வைத்து இருக்கிறார்?....ஒரு வியாபார அடிப்படையில் திரை துறையை அணுகி அதில் சிறப்பாக தன்னை நிலை நிறுத்தியவர் எப்படி முடிவு எடுக்க தெரியாதவராக இருக்க முடியும்?........

      உண்மையில் அரசியல் பிரவேசம் பற்றிய தனது நிலைப்பாட்டை பொதுவில் அறிவிக்க அவருக்கு விருப்பம் இல்லை. அவரே விரும்பாமல் இந்த சமுகம் (மீடியா ?) அவர் மீது எப்போது வருவாய், என்று கேட்கிறது . தேவை அற்ற அழுத்தத்தை அவர் மீதி செலுத்தி பார்க்கிறது. இந்த நிலையில் அவர் 'பிறகு வருகிறேன் ', 'இப்போது தயக்கம் , பின்னர் யோசிக்கிறேன் ', 'இத்தனை ஆண்டுகள் பிறகு வருகிறேன் ' என்று எதை கூறினாலும் அதை வைத்து மேலும் அவர் மீது அழுத்தகங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும். தன்னை மய்யமாக முன்னிறுத்த படுவதை அவர் விரும்ப வில்லை. அதை தவிர்க்கும் பொ ருட்டு தான் அவர் அடிக்கடி ஆண்டவன் நினைத்தால் வருவேன் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.

      வியாபார ரீதியான தனது சினிமா வெற்றிக்கும் அவரது பொது பிம்பத்துக்கு ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. தொடர்ந்து அந்த பிம்பத்தை maintain பண்ணுவதில் தான் தொடர் சினிமா வெற்றியும் அடங்கி உள்ளது. அதாவது தன்னை பற்றிய பிராண்ட் அப்படியே இருக்க வேண்டும். அரசியலில் இருந்தால் சில விஷயங்களில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும். அதனால் ஒரு சாராருக்கு வேண்ட பட்ட்டவராகவும், கர்நாடக மக்களுக்கு வேண்டப்படாதவராகவும் மாற வாய்ப்பு உண்டு. இது அவருடைய பிராண்ட் இமேஜ் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட முறையில் இழப்புக்கான risk அதிகம் உள்ளது. எனவே தான் சிக்கல் மிகுந்த அரசியலில் தன்னை பற்றிய கேள்வியை அவர் ஓபன்- ஆக வைத்துஇருக்கிறார்.

      எனவே அவர் விரும்புவதை போலவே அவரை டிஸ்டர்ப் செய்யாமல் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவோம் .

      பிரபலமாக இருப்பது தான் அரசியல் ஆளுமைக்கான விதி என்று எடுத்துக்கொண்டால் கூட ..எப்படி பிரபலம் ஆனார் என்பதையும் பார்க்க வேண்டும். கருத்தியல் சார்ந்த பிரபலம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். (உ ) K arl marx, பெரியார் , காமராஜர் போன்றோர். ஒருதுறையில் பிரபலமாக இருப்பவர் , இன்னொரு துறையில் அதை முதலீடு செய்வதை பயனாளிகளாகிய நாமே அதை வலி ய கேட்பது மூடத்தனம் இல்லையா?

      நானும் ரஜினி ரசிகன் தான். வசன உச்சரிப்பில் இருந்து , ஸ்டைல், வேகம், என்று வசீகரிக்கும் அவருடைய திரை தோற்றம் எல்லாம் எனக்கு பிடிக்கும். ஆனால் இது எப்படி அரசு , நிர்வாகம் சார்ந்த விஷயங்களுக்கு பொருந்தும் என்பதுதான் என்னுடைய கேள்வி?

      ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றோ அல்லது வரவேண்டாம் என்றோ நான் கூற வில்லை. அவருக்கு தோன்றியபோது வரட்டும் . அவரை கடந்து போகவேண்டும் நாம். அரசியலில் பேச எவ்வளவோ உள்ளது. தனி மனிதனை மய்யப்படுத்தாத நல்ல அரசியல் களத்தை உருவாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

      நீக்கு
    3. ஐயா! உங்கள் மறு வருகைக்கும் நீண்ட விளக்கத்துக்கும் முதலில் நன்றி!

      இரசினி முடிவெடுக்கத் தெரியாதவர் என நான் கட்டுரையில் எந்த இடத்திலும் கூறவில்லை. முடிவெடுக்கத் தெரியாத ஒருவர் எப்படித் தன் துறையில் இப்பேர்ப்பட்ட உச்சத்துக்கு வளர்ந்திருக்க முடியும் என்கிற உங்களுடைய அதே கேள்வியை நானும் மேலே சகோதரி கீதா அவர்களுக்கு அளித்த பதிலில் கேட்டிருக்கிறேன்.

      ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அந்தப் பிரபலத்தையே இன்னொரு துறையில் நுழைவதற்கான முதலீடாகப் பயன்படுத்திக் கொள்வதைப் பயனாளிகளான நாமே வலியக் கேட்பது மூடத்தனம் என்கிறீர்கள். கட்டுரையில் நான் அப்படி எதுவும் எழுதவில்லை. தமிழ் சமூகத்தில் கருத்தியல் சார்ந்தவர்களின் அரசியல் பங்கேற்பு மட்டும் போதாது; மக்கள் செல்வாக்கு/நம்பிக்கை பெற்ற ஆளுமை மிக்கவர்களின் பங்கேற்பும் தேவை என்றுதான் நான் கூறியிருக்கிறேன். இதற்குப் பொருள்,பிரபலமாக இருப்பதால் மட்டுமே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது இல்லை. தமிழ் சமூகத்தின் மீதான உண்மையான அக்கறை, அரசியலில் நுழைந்து நம் மக்களுக்கும் மண்ணுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் எனும் துடிப்பு ஆகிய இரு அடிப்படைத் தகுதிகளாவது தேவை என்பதைக் கட்டுரையில் பத்தி பத்தியாக விளக்கியிருக்கிறேன். இது தவிர, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘நாடாளலாமா நம் நாயகர்கள்?’ எனும் கட்டுரையில், "அரசியலுக்கு வர யார் வேண்டுமானாலும் விரும்பலாம், வரலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. அந்த வகையில் நடிகர்களும் தாராளமாக வரலாம். ஆனால் நேர்மை, துணிச்சல், நுண்மாண் நுழைபுலம், தமிழர் பிரச்சினைகள் பற்றிய தெளிவு, தமிழ் உணர்வு ஆகிய ஐந்து முதன்மைத் தகுதிகளாவது கட்டாயம் வேண்டும்" என்றும் வலியுறுத்தியிருக்கிறேன். அந்தக் கட்டுரைக்கான இணைப்பையும் மேற்கண்ட கட்டுரையின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.

      எனவே, இரசினியின் நடிப்புப் பாணி, வேகம், திரைத் தோற்றம் போன்ற தகுதிகளை மட்டுமே வைத்து அவரைத் தலைமை தாங்க அழைக்கும் மூடத்தனத்தை நான் வலியுறுத்தவில்லை என்பதை அறிக!

      மற்றபடி, தனி மனிதரை மையப்படுத்திய அரசியலை இங்குள்ள பெரும்பான்மை மக்கள் விரும்பும்பொழுது நமக்கு அது தவறாகத் தெரிகிறது எனும் ஒரே காரணத்துக்காக அப்படிப்பட்ட அரசியலைக் குறை கூறுவதும் குறைத்து மதிப்பிடுவதும் தவறு என்பது என் கருத்து.

      மீண்டும் நன்றி! வணக்கம்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்