.

வெள்ளி, செப்டம்பர் 16, 2016

தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு?



Burnt by Kannadigas and Crushed by Tamils

கன்னடர்கள் எரித்ததும் தமிழர்கள் உடைத்ததும்
ந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது எல்லா மாநில மக்களுமேதான் அதற்காக வெள்ளையரிடம் அடி வாங்கினார்கள். ஆனால், நாடு விடுதலையடைந்த பின்பும் இந்த நாட்டில் அடி வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்கள், தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பினர்தாம்!

அண்டை மாநிலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கமாகிப் போன ஒன்று. காவிரியில் தமிழ்நாடு தண்ணீர் கேட்டால், தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட ஊர்திகளை அடித்து நொறுக்குவது; முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால் கேரளாவில் உள்ள தமிழ்ப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடத்தித் தங்கள் வீரத்தைக் காட்டுவது; தமிழர்கள் கூலிக்குச் செம்மரம் வெட்டினால் அவர்களையே வெட்டிக் கொன்று போடுவது; இவைதாம் தமிழர்களிடம் பக்கத்து மாநில மக்கள் காலங்காலமாக நடந்து கொள்ளும் விதம். ஆனால், இத்தனைக்கும் பதிலடியாக ஒருமுறையாவது தமிழர்கள் இங்குள்ள அண்டை மாநிலத்தவர்கள் மீது ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா?... 
கிடையாது! காரணம், அதுதான் தமிழர் குணம்!

வன்முறையைக் கையிலெடுக்காதது மட்டுமில்லை இதுவரை தமிழ்நாட்டிலிருந்து இந்த மாநிலங்களுக்குச் செல்லும் எந்த ஒரு பொருளையும் சேவையையும் தமிழர்கள் தடுத்ததும் கிடையாது. “காவிரி எங்களுடையது!” என இன்று மூச்சு முட்ட முழங்குகிறார்கள் கன்னடர்கள். கர்நாடகத்தில் உற்பத்தியாகிற ஒரே காரணத்தால் காவிரி கன்னடர்களுடையது என்றால் நெய்வேலி நிலக்கரியிலிருந்து பெறப்படும் மின்சாரம் யாருடையது? கர்நாடகத்தில் இப்பொழுது தண்ணீர்த் தட்டுப்பாடு என்றும், தங்களுக்கே இல்லாதபொழுது தமிழ்நாட்டுக்கு எப்படி நீர் தருவது என்றும் கேட்கிறார்கள் கன்னடர்கள். ஆனால், மின் தட்டுப்பாட்டால் தமிழ்நாடே இருண்டு கிடந்த நிலையிலும் ஒருநாளாவது தமிழர்கள் இப்படிக் கேட்டதுண்டா? “எங்கள் மண்ணிலுள்ள நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எங்களுக்கே போதாதபொழுது நாங்கள் ஏன் அதைக் கர்நாடகத்தோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டும்?” என்று தமிழர்கள் ஒருமுறையாவது கேட்டிருப்பார்களா? இல்லவே இல்லை!

கேட்டால், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நடுவணரசுக் கட்டுப்பாட்டில் வருவது என்பார்கள் மேதைகள் சிலர். ஏன், இன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் “தண்ணீரை அனுப்பாதே! நிறுத்து!” எனக் கன்னடர்கள் போராடுவது போல் “மின்சாரம் அனுப்பாதே! நிறுத்து!” எனத் தமிழர்களுக்குப் போராடத் தெரியாதா?... ஆனால், அப்படிச் செய்தார்களா?... இல்லை. முன்பு ஒரு முறை காவிரித் தண்ணீரை வழக்கம் போலக் கர்நாடகம் மறுத்தபொழுது ஒரு தடவை மட்டும் தமிழ்த் திரையுலகினர் அப்படி ஒரு போராட்டத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முன் நடத்தினார்கள். அது கூடத் தமிழர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் ஒருநாள் முயற்சிதானே தவிர, தண்ணீரை நிறுத்தும் வரை தொடர்ந்து கன்னடர்கள் இன்று அட்டூழியம் புரிவது போலத் தமிழர்கள் நடந்து கொள்ளவில்லை.

கர்நாடகத்துக்கான மின்சாரம் மட்டுமில்லை பால், முட்டை, இறைச்சி எனக் கேரளாவுக்குத் தேவையான பல அடிப்படைப் பொருட்களும் இன்று வரை அவர்களுக்கு இங்கிருந்து தங்கு தடையின்றிச் சென்று கொண்டுதான் இருக்கின்றன.

இப்படி ஆண்டாண்டுக் காலமாக காயங்களையும் கண்ணீரையும் மட்டுமே தங்களுக்குப் பரிசளிக்கும் மக்களிடம் பதிலுக்குப் புன்னகையையும் நேசக்கரத்தையும் மட்டுமே காட்டி வந்த தமிழர்கள் கடைசியாக இதோ தாங்களும் ஆயுதம் ஏந்தி நிற்கிறார்கள்! இராமநாதபுரத்திற்கு வந்த கர்நாடகப் பதிவு எண் கொண்ட தனியார் பேருந்து ஒன்று அடித்து உடைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வங்கி ஒன்றினுள் நுழைந்த தமிழர்கள் சிலர் அங்கிருந்த ஊழியர்களை அடித்து வெளியேற்றி விட்டுத் தாங்கள் வங்கியை இழுத்துப் பூட்டி விட்டதாகப் பெருமிதத்தோடு ஊடகங்களுக்கு நேர்காணல் அளிக்கிறார்கள். சென்னையில் கன்னடர் ஒருவருக்குச் சொந்தமான புகழ் பெற்ற உணவகம் ஒன்று தாக்கப்பட்டிருக்கிறது. ஆம், கடைசியில் தமிழர்களையும் வன்முறையாளர்களாக்கி விட்டார்கள்! தமிழ்நாட்டுடன் தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்ள மறுத்தவர்கள் அதற்குப் பதிலாகத் தங்களிடம் இருந்த வன்மத்தைப் பங்களித்து விட்டார்கள்!

வெறுப்புக்குப் பரிசாக அன்பையும், காழ்ப்புணர்ச்சிக்குப் பதிலாகத் தோழமையையும், வன்முறைக்கு எதிர்வினையாகப் பெருந்தன்மையையும் மட்டுமே தலைமுறை தலைமுறையாகக் காட்டி வந்த ஓர் இனம் இறுதியில் தாங்களும் ஆயுதம் ஏந்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது என்றால் அதை விடப் பெரிய தலைகுனிவு இந்த நாட்டுக்கு வேறு ஏதாவது இருக்க முடியுமா?

‘என்ன இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள்! அதுவும் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் ஆகிய நாம் அனைவரும் திராவிடர் என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்’ என்ற எண்ணத்தால்தான் இத்தனை காலமாகத் தமிழர்கள் அத்தனை கொடுமைகளுக்கும் அமைதி காத்தார்கள். அப்படிப்பட்டவர்கள், இன்று தாங்களும் தேசிய ஒருமைப்பாட்டை மறந்து ஆயுதம் தூக்குகிறார்கள் என்றால் அது இந்திய ஒருமைப்பாட்டின் மாபெரும் தோல்வி! திராவிட இனக்குழுவைச் சேர்ந்த மற்ற மூன்று இனங்களும் அந்தக் கோட்பாட்டைக் கை கழுவிக் காலங்கள் பல கடந்து விட்ட நிலையில் அதை இத்தனை காலமும் தாங்கிப் பிடித்திருந்த தமிழர்களும் எப்பொழுது பிற திராவிடர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கினார்களோ அந்த நொடியே திராவிடம் எனும் கோட்பாடு செத்து விட்டது!

‘இந்திய ஒருமைப்பாடு வாழ்ந்தால் என்ன, திராவிடக் கோட்பாடு செத்தால் என்ன?’ என்று இன்று தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மாநிலங்கள் நினைக்கலாம். ஆனால், தமிழர்கள் உள்ளத்தில் இவர்கள் ஏற்படுத்தியுள்ள இந்த வலுக்கட்டாய மாற்றம் அரசியல் அளவிலும், சமூக அளவிலும் எதிர்காலத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். ஏனெனில், ஓர் இனம், தாங்களும் தங்களைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே இனக்குழுவைச் சார்ந்தவர்கள் என்கிற பார்வையில் அரசியலையும் மற்றவற்றையும் அணுகுவதற்கும் ‘அவர்கள் வேறு, நாம் வேறு’ என்கிற பார்வையில் அணுகுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு முற்றிலும் தலைகீழானது. இதன் விளைவுகளை வருங்காலத்தில் நேரிடையாகப் பார்க்க நேரும்பொழுதுதான் தங்கள் செய்தது எப்பேர்ப்பட்ட வரலாற்றுப் பிழை என்பது மற்ற மாநிலத்தவர்க்குப் புரியும். எத்தனை முறை பகைமை பாராட்டினாலும் அத்தனை முறையும் நட்பு பாராட்டிக் கொண்டு மட்டுமே இருந்த ஓர் இனத்தின் உறவை எட்டி உதைத்தது எப்பேர்ப்பட்ட பேரிழப்பு என்பதும் அப்பொழுது உரைக்கும்!

அது மட்டுமில்லை, நடந்து கொண்டிருப்பது தகவல் யுகம்! நடக்கும் அத்தனையும் இணையவெளியிலும் வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. கர்நாடக - கேரள - ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த வருங்காலத் தலைமுறையினர் இவற்றையெல்லாம் அறிய நேரும்பொழுது “இப்படி மறுபடியும் மறுபடியும் தமிழர்கள் மீது காலங்காலமாக நீங்கள் உமிழ்ந்த அத்தனை வெறுப்புக்கும் பதிலாக அவர்கள் அமைதியைக் கடைப்பிடித்தும் கூட அவர்களே பொறுமையைக் கைவிட்டு ஆயுதம் ஏந்தும் வரைக்கும் நீங்கள் விடவில்லையா? சீச்சீ!” என்று காறித் துப்பத்தான் போகிறார்கள். இன்று தமிழர்களை ஆயுதம் தூக்க வைத்ததற்காக இந்த மாநிலங்களின் மக்கள் அன்று வெட்கித் தலைகுனிவார்கள்! 

அதற்காகத் தமிழ்நாட்டில் நடந்ததெல்லாம் சரி எனவோ, வன்முறைக்குத் தீர்வு வன்முறைதான் எனவோ  நான் சொல்லவில்லை. எங்கோ இருக்கும் யாரோ சிலர் செய்த குற்றத்துக்காக இங்கிருக்கும் வெள்ளந்தி மக்களைத் தாக்குவது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், அப்பேர்ப்பட்ட இழிவேலையில் தமிழர்களை ஈடுபட வைத்து விட்டீர்களே என்கிற பொருமலே இந்தப் பதிவு! 

* * * * * 

இற்றைக் குறிப்பு (Update Note): "நான்கே வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" என்று ஆணியறைந்தாற்போல் ஆணையிட்டுப் பல்லாண்டுக் காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நீதியை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்குத் தமிழ் மக்கள் அனைவர் சார்பிலும் நெஞ்சம் குளிர்ந்த நன்றி!

(நான் அகரமுதல தனித்தமிழ் இதழில் -- அன்று எழுதியது)

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி விகடன், தமிழ் ஒன் இந்தியா.

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 


 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

  1. தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைக்கும்போதுகூட, தமிழன் மனிதாபிமானத்தை இழப்பதில்லை; நடுநிலை பிறழ்வதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு உங்களின் இந்தப் பதிவு.

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே ஐயா! தமிழனும் மனிதநேயத்தை இழந்து விட்டானே, இழக்கச் செய்து விட்டார்களே என்கிற பொருமல்தானே இந்தப் பதிவு? இருந்தாலும் கருத்துரைத்தமைக்கு நன்றி ஐயா! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவைத் தெரிவஇத்துக் கொள்கிறேன்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  2. கர்நாடகத்துக்கான மின்சாரம் மட்டுமில்லை பால், முட்டை, இறைச்சி எனக் கேரளாவுக்குத் தேவையான பல அடிப்படைப் பொருட்களும் இன்று வரை அவர்களுக்கு இங்கிருந்து தங்கு தடையின்றிச் சென்று கொண்டுதான் இருக்கின்றன.// கேரளத்திற்குக் காய்கறிகளும் இங்கிருந்துதானே செல்கிறது அதை விட்டுவீட்டீர்களே!! இல்லை எதற்குச் சொல்கின்றேன் என்றால் எல்லாவற்றையும் இங்கிருந்து அனுபவித்து விட்டு அவர்கள் சொல்லுவது தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லாமே மருந்து தெளிக்கப்பட்டு விஷத்துடன் வருவதாக. மணலை இங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள். அங்கு மணல் தோண்ட முடியுமா? நம்மவர்கள் தானே இதற்குக் காரணம்? வர்த்தக சுயநலம்? நமக்கு நாமே குழி தோண்டி நம் தலையிலேயே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது இல்லையா? மணல் கடத்தல், அரிசி கடத்தல்....

    நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கின்றீர்கள் குறிப்பாக தமிழரின் குணம் மற்றும் திராவிட இனத்தின் ஒற்றுமை சீரழிந்து வருவது குறித்த உங்கள் கருத்துகள் ஏற்கப்படுபவையே.

    //‘என்ன இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள்! அதுவும் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் ஆகிய நாம் அனைவரும் திராவிடர் என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்’ என்ற எண்ணத்தால்தான் இத்தனை காலமாகத் தமிழர்கள் அத்தனை கொடுமைகளுக்கும் அமைதி காத்தார்கள். அப்படிப்பட்டவர்கள், இன்று தாங்களும் தேசிய ஒருமைப்பாட்டை மறந்து ஆயுதம் தூக்குகிறார்கள் என்றால் அது இந்திய ஒருமைப்பாட்டின் மாபெரும் தோல்வி! திராவிட இனக்குழுவைச் சேர்ந்த மற்ற மூன்று இனங்களும் அந்தக் கோட்பாட்டைக் கை கழுவிக் காலங்கள் பல கடந்து விட்ட நிலையில் அதை இத்தனை காலமும் தாங்கிப் பிடித்திருந்த தமிழர்களும் எப்பொழுது பிற திராவிடர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கினார்களோ அந்த நொடியே திராவிடம் எனும் கோட்பாடு செத்து விட்டது!//

    அருமை!

    ஆனால் இதற்கு ஊடகங்கள் மிகப் பெரிய காரணம் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். பரபரப்புச் செய்திகள், டி ஆர் பி ரேட்டிங்க்... இப்போது சமூகவலைத்தளங்களும் சேர்ந்து கொண்டுவிட்டன. ஊடக தர்மம் மடிந்து வருடங்கள் ஆகிவிட்டன...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கேரளத்திற்குக் காய்கறிகளும் இங்கிருந்துதானே செல்கிறது அதை விட்டுவீட்டீர்களே!!// - ஆம், மறந்துவிட்டேன். நினைவூட்டியமைக்கு நன்றி சகோ!

      //எல்லாவற்றையும் இங்கிருந்து அனுபவித்து விட்டு அவர்கள் சொல்லுவது தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லாமே மருந்து தெளிக்கப்பட்டு விஷத்துடன் வருவதாக// - ம்! ஆனால், அதுவும் உண்மைதானே! :-D மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, இல்லையா?

      ஊடகங்களின் செய்தி நாடகம் பற்றிய உங்கள் கருத்தும் உண்மையே! நம் பதிவுலக நண்பர் ’கூட்டாஞ்சோறு’ செந்தில்குமார் அவர்களின் பதிவு படித்தேன். அதைப் படித்த பின், இந்தக் கட்டுரையை வெளியிடலாமா வேண்டாவா என்றே கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. ஊடகச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது என்றாலும், கட்டுரை முழுவதும் தமிழர்களின் இத்தனை ஆண்டுக் காலப் பொறுமை பறி போய் விட்டதே என்பதைப் பற்றி மட்டும்தான் என்பதால் கருநாடகத்தில் நடந்த கலவரங்களின் மிகை - குறை என்பனவற்றுக்கும் இதற்கும் தொடர்பு ஏற்படவில்லை. அதனால்தான் துணிந்து வெளியிட்டேன்.

      ஆனால், திராவிட இனக் குழுவின் ஒற்றுமை சீரழிந்து வருவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி நான் கவலைப்பட்டு எழுதியிருப்பது போல் எங்கேனும் ஒலித்திருந்தால் அஃது என் பிழையே! நான் முயன்றது, நாம் அனைவரும் திராவிடர் என்னும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனும் எண்ணம் தமிழர்களிடத்திலும் குறைந்து வருவது குறித்து இன்னும் திராவிடத்தை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் வைகோ போன்ற தலைவர்கள் சிலர் உணர வேண்டும் என்பதே! (இந்த வரிக்கு, வைகோ போன்ற பெரிய தலைவர்களெல்லாரும் கூட என் எழுத்துக்களைப் படிக்கிறார்கள் என்பதில்லை! :-D ).

      உங்கள் ஊக்கமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  3. ஐயா வணக்கம்.

    தங்களின் ஆதங்கம் புரிகிறது.

    தாம் எவ்வாறு இருந்தோம் எவ்வாறு இருக்கிறோம் இந்நிலைமை எதனால்? என்று அறியாத அறிய விரும்பாத சூழலில்தான் தமிழருள் பெரும்பான்மையோர் இருக்கின்றனர்.

    ரசிகர் மன்றங்களும் சாதி வெறிக்கூச்சல்களும் அடிமை மனோபாவமும் கொண்டு நசிந்து கொண்டிருக்கிறது நம்மினம்!

    தலைவரெனச் சொல்வொர் தன்னலம் மட்டுமே பேணும் தகவிலாராய் இருக்கக் காண்கிறோம்.

    நாம் கேட்பது பிச்சையில்லை. நம் உரிமை என்பதை மற்றவர் காதுகளுக்கு அக்குரல் கேட்குமளவிற்குக் கூட ஒன்றிணைந்து முழங்கமுடியாத நிலைமையில் இருக்கிறது நம்மவர் ஒற்றுமை...!

    இன்னும் நிறைய சொல்லத் தோன்றுகிறது.

    தங்களின் மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டி இருக்கிறது.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! இணைய உலகுக்கு வந்தவுடன் என் தளத்துக்கும் வந்து பதிவு படித்துக் கருத்திட்டது கண்டு மிகவும் மகிழ்ச்சி!

      மாற்றுவோம்! எல்லாவற்றையும் மாற்றுவோம்! முன்னெப்பொழுதையும் விடத் தற்பொழுது இன உணர்வு மேலோங்கி வருகிறது. அதைக் கொண்டே நம் பிழைகள் அனைத்தையும் சரி செய்வோம்!

      மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்