.

செவ்வாய், மே 10, 2016

தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா? - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு! | A Practical Solution for TN Election 2016


Atrocities of DMK and ADMK

தேர்தல் - 2016 (பகுதி - 4) 

தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனச் சொல்லி நான் தனிப்பதிவு ஏதும் எழுத வேண்டியதில்லை. தலைப்பை மட்டும் கொடுத்துக் கீழே வெறுமையாக விட்டுவிட்டால் போதும்; மக்களே வந்து எழுதிக் குவித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுக்கத் திறப்பு விழா நடத்தியது தி.மு.க என்றால், மாநிலமே அந்தப் பேரலையில் மூழ்க டாஸ்மாக் கொண்டு வந்தது அ.தி.மு.க! தமிழினப் படுகொலை நேரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்றால், அந்தப் படுகொலைக்கு மூலக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் மீதான தடையைக் கொண்டு வந்தவர் -இன்றும் அதற்காகப் பெருமையடித்துக் கொள்ளும்- ஜெயலலிதா! ஏழு தமிழர் விடுதலை விவகாரம் தன் கையில் இருந்தபொழுது அதை சாமர்த்தியமாகக் கை கழுவியது தமிழினத்தலைவரின் அரசு என்றால், ஒருபுறம் அவர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டே மறுபுறம் சாகக் கிடந்த தகப்பனாரைப் பார்ப்பதற்குக் கூட நளினிக்குச் சிறைவிடுப்பு (parole) தரக்கூடாதென்று உயர்நீதிமன்றத்தில் வாதாடியது ஈழத்தாயின் அரசு!

இவை மட்டுமா? மின் தட்டுப்பாடு, வேளாண்துறைச் (agriculture) சீரழிவு, தமிழ் மீனவர் மீதான தாக்குதல்கள், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் நசுக்கப்படுதல், அணு உலைத் திட்டம் - நுண்நொதுமித் (நியூட்ரினோ) திட்டம் எனப் பேரழிவுத் திட்டங்கள் திணிக்கப்படுதல், அண்டை மாநிலங்கள் - நடுவணரசு முதல் உலக நாடுகள் வரை யாருமே தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத நிலைமை, இயற்கைச் சமநிலையின் சீர்குலைவு என இவ்வளவுக்கும் காரணம், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத தி.மு.க, அ.தி.மு.க அரசுகளே இங்கு திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வருவது. எனவே, இத்தனை பிரச்சினைகளும் தீர வேண்டுமானால் அதற்கு உடனடித் தேவை ஆட்சி மாற்றம்! யாருக்கு வாக்களித்தால் அந்த ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஒரே கேள்வி! பதில்?...
 
இதற்கான பதில் மிக மிக எளிமையானது! தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுக்கு அடுத்த வலிமை வாய்ந்த கட்சியாக அல்லது கூட்டணியாக எது அனைவராலும் பார்க்கப்படுகிறதோ அதற்கு வாக்களிப்பதுதான் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர ஒரே வழி!

இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாமல் நமக்கு இருக்கும் தேர்வுகள் நான்கு: மக்கள்நலக் கூட்டணி, நாம் தமிழர், பா.ம.க, பா.ஜ.க. இவற்றுள் ம.ந.கூ ஒன்றைத் தவிர மற்ற மூன்றும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. அவர்களின் அந்தத் துணிச்சல் கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும், ஏறத்தாழ ஒரு கோடி வாக்காளர்களைக் கொண்ட அ.தி.மு.க-வும் தி.மு.க-வுமே இன்றளவும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடத் துணியாதபொழுது அவர்களை விட மிகவும் சிறிய கட்சிகளான இவர்கள் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியையே கைப்பற்றி விடுவது என்பது நடக்க இயலாத ஒன்று என்பதுதான் நடைமுறை உண்மை (practical truth)! மிச்சம் இருப்பது மக்கள் நலக் கூட்டணி!...

பொதுவாக, சட்டமன்றத் தேர்தல் வந்தாலே “இந்த முறை தி.மு.க வருமா, அ.தி.மு.க வருமா?” என்பதாகத்தான் மக்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால், இந்த முறை தனிமனித அரட்டைகள் முதல் ஊடக விவாதங்கள் வரை மூன்றாவது அணியின் வெற்றி வாய்ப்புப் பற்றியும் பேச்சு அடிபடுகிறது. பரப்புரைகளின்பொழுது ஆளுங்கட்சி எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியையும் போட்டுக் கிழிப்பதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால், முதன்முறையாக இந்த இரு கட்சிகளும் மூன்றாவது அணியையும் தீவிரமாகத் தாக்கிப் பேசுவதைக் காண முடிகிறது. அதே சமயம், இதர கட்சிகளான நாம் தமிழர், பா.ம.க, பா.ஜ.க ஆகியவற்றைப் பற்றியெல்லாம் மேற்படி இடங்களில் யாரும் அந்தளவுக்குப் பேசுவதாகத் தெரியவில்லை. இப்படி வாக்காளர்கள் முதல் வேட்பாளர்கள் வரை, கட்சிகள் முதல் ஊடகங்கள் வரை எல்லா இடங்களிலும் தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ம.ந.கூ மீதே எல்லார் கவனமும் குவிந்திருப்பதே இந்த இரு கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது அதுதான் என்பதைத் தெள்ளத் தெளிவாக்குகிறது. அவ்வளவு ஏன், மூன்றாவது அணி என்கிற பெயரே அதைத்தான் காட்டுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் நமக்கு இருக்கிற ஒரே தேர்வு - மக்கள் நலக் கூட்டணிதான்!...

இப்படிச் சொல்வதற்காக அன்பர்கள், நண்பர்கள், தமிழ் மக்கள் அனைவரிடமும் முதலில் உளமார வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்தத் தொடரின் முதல் கட்டுரையே ‘விஜயகாந்த் முதல்வராக வரத் தகுதியற்றவர்’ என்பதுதான். இப்பொழுதும் என்னுடைய அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அது என் கோட்பாட்டு அடிப்படையிலான (theoritical) பார்வை. நடைமுறை சார்ந்து (practical-ஆக) சிந்திக்கும்பொழுது ஆட்சி மாற்றத்துக்கு இதை விட்டால் வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால்தான், இப்படி ஒரு தீர்வை முன்வைக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இறுதி வரை படித்துப் பாருங்கள்! 

MNK Logo

விஜயகாந்தை அரியணையில் அமர்த்தி அழகு பார்க்கும் விருப்பம் ஏதும் எனக்கில்லை. ஆனால், தமிழ்நாட்டையே குட்டிச் சுவராக்கி வைத்திருக்கும் தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுக்கு எதிராக இன்று அரசியல் களமே மொத்தமாகத் திசை திரும்பி நிற்கும் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதே என் கவலை!

இந்த இரு கட்சிகளும் அல்லாத ஓர் ஆட்சி வேண்டும் என்று இதுவரை சில தலைவர்கள்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று காங்கிரசு என்கிற ஒரே ஒரு பெரிய கட்சியைத் தவிர்த்து மற்ற அத்தனை பெரிய கட்சிகளும் தேர்தலில் இவர்களுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன. இப்படிப்பட்ட அரியதொரு சூழலிலும் மக்களாகிய நாம் இத்தனை கட்சிகளையும் தாண்டிப் போய்த் தி.மு.க/அ.தி.மு.க ஆகிய இரண்டில் ஒன்றையே மீண்டும் ஆட்சிக்கு வரவழைத்தால், அல்லது மீண்டும் அவர்களே ஆட்சிக்கு வரும்படியாக இதர கட்சிகளுக்கு வாக்களித்து வாக்குச் சிதறலை ஏற்படுத்தினால், ‘நாம் எவ்வளவுதான் தவறு செய்தாலும் இந்த மக்கள் நம்மைத் தவிர வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள்’ என்கிற வானளாவிய துணிச்சல் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்படும். அதன் பின், இதுவரை செய்த தவறுகளெல்லாம் ஒன்றுமேயில்லை எனச் சொல்லக்கூடிய அளவுக்கு மாபெரும் தவறுகளைச் செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். அது மட்டுமில்லை; இனி ஆட்சி மாற்றம், மூன்றாவது அணி எனவெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட எந்தக் கட்சியும் துணியாது. எனவே, இந்த முறை கட்டாயமாக ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது.

விஜயகாந்த் திறமையற்றவர்தான், முரடர்தான். ஆனால், கருணாநிதி - ஜெயலலிதா அளவுக்கு அவர் மீது பெரிய குற்றச்சாட்டு ஏதும் கிடையாது. எந்த ஒரு பெரிய மாற்றமும் ஓரிரவில் ஏற்பட்டு விட முடியாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி - ஜெயலலிதா போன்றோரிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமானால் அவர்களை விடத் தேவலாம் எனச் சொல்லக்கூடிய ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைப்பதுதான் முதல் படியாக இருக்க முடியும். மாறாக, எல்லாத் தகுதிகளும் பண்புகளும் பொருந்திய தேவதூதர் ஒருவரிடம்தான் ஆட்சியை ஒப்படைப்பேன் எனக் காத்திருந்து அதுவரை மீண்டும் மீண்டும் இவர்களிடமே தமிழ்நாட்டைத் தாரை வார்த்துக் கொண்டிருந்தால், அப்படி ஒருவர் வரும் வரை இங்கே எதுவும் மிச்சம் இருக்காது. திறமையுள்ள தீயவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதை விடத் திறமையில்லாத - அதே நேரம், தீய குணங்கள் ஏதும் பெரிதாக இல்லாத ஒருவரிடம் ஆட்சியைத் தருவதால் எந்தக் கெடுதலும் ஏற்பட்டு விடாது என்பதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். மேலும், அப்படிச் செய்தால்தான் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மக்கள் மீது ஓர் அச்சம் ஏற்படும்.

அதே வேளையில், முதன்மைக் கட்சிகள் இரண்டுக்கும் அடுத்த இடத்தில் இருக்கிற ஒரே காரணத்துக்காக இவர்களுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. வேறு நல்ல காரணங்களும் இருக்கின்றன. முதலாவதாக நான் கூற விரும்புவது இவர்கள் முன்வைக்கும் கூட்டணி ஆட்சி முறை.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் திரும்பத் திரும்பப் பெரிய பெரிய குற்றங்களை அச்சமின்றிச் செய்ய முதன்மையான ஒரு காரணம் அவர்கள் ஆட்சி அமைக்கும் முறை. கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் அவர்களால் ஒருமுறை கூட ஆட்சிக்கு வர முடிந்ததில்லை என்றாலும், அந்தக் கூட்டணிக் கட்சிகளை நம்பி ஒருநாளும் அவர்கள் ஆட்சி அமைந்திருந்ததில்லை. இதனால் அவர்கள் எவ்வளவுதான் தவறு செய்தாலும் தவறான ஆட்சியிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் ஆற்றல் கூட்டணிக் கட்சிகளுக்கோ மற்றவர்களுக்கோ இல்லாமல் இருந்தது.

ஆனால், ம.ந.கூ-வைப் பொறுத்த வரை, அது கூட்டணி அமைப்பு. என்னதான் விஜயகாந்துக்கு இவர்கள் 124 தொகுதிகளை வாரிக் கொடுத்திருந்தாலும், கூட்டணியாக இவர்கள் வென்று ஆட்சிக்கு வருவதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வரும் வேளையில், அத்தனை தொகுதிகளிலும் தே.மு.தி.க வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைப்பது என்பதெல்லாம் கனவிலும் நடக்காத கதை. ஆகவே, இவர்களுக்கு நாம் வாக்களித்தால் கூட்டணி முறையிலான ஓர் ஆட்சிதான் அமையும். எனவே, விஜயகாந்த் ஏதேனும் தவறு செய்ய முயன்றால் தடுக்கவும், மீறிச் செய்தாலும் ஆட்சியைக் கலைத்து மக்களைக் காப்பாற்றவும் கூட்டணிக் கட்சிகளால் முடியும். அப்படிக் கூட்டணிக் கட்சிகள் செய்யத் தவறினால் அதற்குப் பின் கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ குறை சொல்லி அரசியல் செய்ய அவர்களால் இயலாது போகும். இந்த இருவரையும் குறை சொல்லிச் சொல்லித்தான் அரசியலில் தங்களுக்கென ஓர் இடத்தை இவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, பொறுப்பே தங்கள் கையில் இருக்கும்பொழுது கடமை தவறினால் இவர்களுடைய அரசியல் அடித்தளமே காணாமல் போய்விடும் என்கிற அச்சம் அவர்களுக்கு இருந்தே தீரும். ஆக, முதல்வரும் தவறு செய்ய முடியாத, கூட்டணிக் கட்சிகளும் அவரைத் தவறு செய்யும்படி விட முடியாத இப்படி ஒரு பாதுகாப்பான ஆட்சி முறையைத் தேர்ந்தெடுப்பதுதான் இன்றைய காலக்கட்டத்தில் சிறந்த முடிவாக இருக்கும்.

இதை நான் மட்டும் சொல்லவில்லை; சிந்தனையாளர் ஞாநி, எழுத்தாளர் பாலகுமாரன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, பேச்சாளர் நெல்லை கண்ணன் எனத் தமிழ்நாட்டின் அறிவுலகினர் (think tanks) அத்தனை பேரும் ஏறத்தாழ இதே கருத்தைத்தான் கொண்டுள்ளனர்; ம.ந.கூ-வைத்தான் ஆதரிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, சிறந்த சமூக ஆர்வலரும் சீரிய சிந்தனையாளருமான எழுத்தாளர் ஞாநி அவர்கள் ம.ந.கூ குறித்து எழுதியுள்ளதைப் படித்துப் பாருங்கள்! - ‘யாருக்கு ஓட்டுப் போடக் கூடாது; யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்?

அடுத்ததாக, விஜயகாந்த் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவரை வழிநடத்தும் ம.ந.கூ என்பது காலங்காலமாகத் தமிழர் பிரச்சினைகள் அனைத்துக்காகவும் இடைவிடாமல் போராடி வரும் கட்சிகளின் மொத்த உருவம் என்பதை மனச்சான்றுள்ள மனிதர்கள் யாரும் மறுக்க முடியாது. மக்களுக்காகக் களத்தில் நிற்பவர்களின் கையிலேயே ஆட்சிப் பொறுப்பை வழங்கும் இந்த அருமையான வாய்ப்பை விஜயகாந்த் எனும் ஒற்றை மனிதருக்காக இழக்க வேண்டுமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்!

ஆக, எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்பொழுது மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களிப்பதே இந்தத் தேர்தலைப் பொறுத்த வரை நடைமுறையளவில் அறிவுடைய முடிவாக (practically wise choice-ஆக) இருக்க முடியும்.

இருந்தாலும், மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க-வின் ‘பி’ டீம் என்றும், ஜெயலலிதாவிடம் அவர்கள் ‘பெட்டி’ வாங்கி விட்டதாகவும் இன்னும் பல்வேறு விதமாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை அனைத்துக்குமான விடைகளை இனி அலசலாம்!

மக்கள் நலக் கூட்டணி பற்றிய கேள்விகளும் பதில்களும்
FAQ about MNK

மூன்றாவது அணிக்கு வாக்களித்தால் அ.தி.மு.க-தான் வெற்றி பெறும்; அதற்காக வைகோவிடம் 1500 கோடி ரூபாய் கொடுத்து இந்தக் கூட்டணியைத் தொடங்கச் செய்ததே ஜெயலலிதாதான்; எனவே, மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க-வின் ‘பி’ டீம் எனச் சொல்லப்படுகிறதே?

தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சிக்கு முயற்சி மேற்கொள்ளப்படும்பொழுதெல்லாம் இதே ஒப்பாரியைப் பாடுகிறார்கள் சிலர். அதாவது, மூன்றாவது அணி என ஒன்றைத் தொடங்கினால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக எதிர்க்கட்சிக்குப் போய்ச் சேராமல் சிதறி, மீண்டும் ஆளுங்கட்சியே ஆட்சிக்கு வர வழி வகுத்து விடும் என்கிறார்கள். தெரியாமல்தான் கேட்கிறேன், இதுவரை எத்தனை முறை அப்படி ஆகியிருக்கிறது? கடந்த 1996ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் இதே போல் வைகோ மூன்றாம் அணி அமைத்தார். அப்பொழுதும் அ.தி.மு.க-தான் ஆட்சியில் இருந்தது. ஆனால், நடந்தது என்ன? அ.தி.மு.க-வால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்ததா? இல்லையே! தி.மு.க-தான் ஆட்சிக்கு வந்தது. ஆக, மூன்றாவது அணி தோல்வி அடைந்தால் அந்தத் தோல்வி ஆளுங்கட்சிக்கு நன்மையாகவும் அமையலாம், எதிர்க்கட்சிக்கு நன்மையாகவும் அமையலாம். அந்தந்தத் தேர்தல் சூழ்நிலைகளைப் பொறுத்தது அது. அப்படியிருக்க, மூன்றாவது அணி என ஒன்று அமைந்தாலே அது ஆளுங்கட்சிக்குத்தான் ஆதாயமாகும் எனச் சொல்வது அரை வேக்காட்டுத்தனம்.

அதுவும், ஏற்கெனவே ஒருமுறை மூன்றாவது அணி அமைந்தபொழுது ஆட்சியைப் பறிகொடுத்த ஜெயலலிதா, அதற்குப் பிறகும், இந்த முட்டாள்தனமான கணக்கை நம்பி ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்திருப்பதாகச் சொல்வது கற்பனையின் உச்சம் இல்லையா? பின்தொடரப் பத்துப் பித்துக்குளிகள் இருந்தால் மூன்றாவது அணிக்குத் தலைவர் முக்தா சீனிவாசன் என்பதா?

மக்கள் நலக் கூட்டணியினர் எல்லோரும் ஏற்கெனவே தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்திருந்தவர்கள்தானே?

மறுக்கவில்லை. ஆனால், தி.மு.க மீதும் அ.தி.மு.க மீதும் வண்டி வண்டியாக எத்தனையோ குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே? அவற்றில் ஒன்றாவது இந்தக் கட்சிகள் மீது இருக்கிறதா? அந்த இரு கட்சிகள் போலவே இவர்களும் இருந்திருந்தால் ஒன்றில் இல்லாவிட்டாலும் ஒன்றில் இவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டாவது எழும்பியிருக்காதா? எழும்பவில்லையே! அதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாவா? இரு கட்சிகளோடும் இத்தனை ஆண்டுகள் மாறி மாறிக் கூட்டணி வைத்திருந்ததை மட்டும் குற்றச்சாட்டாகச் சொல்கிறோமே? இத்தனை ஆண்டுகள் அவர்களோடு இருந்தும் அவர்களைப் போல் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்களே, அதைப் பாராட்ட வேண்டாவா? அது மட்டுமில்லாமல், தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுடன் சேர்ந்திருந்ததாலேயே இவர்கள் மோசமானவர்கள் என்றால், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இவர்களை விட மோசமானவர்கள் என்றுதானே பொருளாகிறது? அப்படியிருக்க, ம.ந.கூ-வைத் தவிர்ப்பதன் மூலம் அவர்களை விட மோசமான தி.மு.க-வையோ அ.தி.மு.க-வையோ ஆட்சியில் அமர்த்துவதில் என்ன அறிவாளித்தனம் இருக்கிறது? ம.ந.கூ-வுக்கு வாய்ப்பளிக்கா விட்டாலோ, அவர்களை விட வெற்றி வாய்ப்புக் குறைந்த மற்றவர்களுக்கு வாக்களித்தாலோ நடக்கப் போவது அதுதான். அதுதான் நம் விருப்பமா?

மூன்றாவது அணி மட்டும் வெற்றி பெறும் என எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?

முதன்மைக் கட்சிகளான தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இப்பொழுது நிலைமை சரியில்லை. ஒருபுறம், தி.மு.க-வோடு கூட்டணி வைக்கக் கூட இங்கு எந்தக் கட்சிக்கும் துணிவில்லை. அதன் பெயரைக் கேட்டாலே ஓடுகிறார்கள். அந்த அளவுக்குத் தி.மு.க பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளது. மறுபுறம் அ.தி.மு.க-வோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதை மனதில் வைத்துக் கொண்டு பெரிய கட்சி எதையுமே சேர்த்துக் கொள்ளாமல் தேர்தலைச் சந்திக்கிறது. இரு கட்சிகளுக்கும் சொந்தமாக ஏறத்தாழ ஒரு கோடி வாக்காளர்கள் இருந்தாலும், இதர வாக்காளர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 4 கோடி! ஆக, கட்சிச் சார்பில்லாத வாக்காளர்களில் குறைந்தது 30% பேர் மூன்றாம் அணிக்கு வாக்களித்தாலே போதும்; இந்த அணி ஆட்சியைக் கைப்பற்றி விடும். அப்படி நடக்கக் கண்டிப்பாக வாய்ப்பும் இருக்கிறது! ஏனெனில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழ்நாட்டில் இளைய வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்கள்தான் இந்தத் தேர்தல் முடிவையே தீர்மானிக்க இருக்கிறார்கள். இவர்களில் யாருக்குமே தி.மு.க, அ.தி.மு.க என்றால் பிடிக்காது. அதாவது, இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போகும் பெரும்பான்மையானவர்கள் தி.மு.க-அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சியை விரும்புபவர்கள்தான். இந்த இரு கட்சிகளுக்கும் அடுத்த நிலையில் இருப்பது ம.ந.கூ-தான் என அனைத்துத் தரப்பினராலும் ஊடகங்களாலும் முன்னிலைப்படுத்தப்படுவதால் இவர்களில் பலரும் மூன்றாம் அணிக்கு வாக்களிக்க நிறையவே வாய்ப்பு உள்ளது.

அரசியல் நோக்கர்களின் கணிப்பு, மக்களிடையேயான கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் மீண்டும் அ.தி.மு.க / தி.மு.க ஆட்சிக்கு வரும் என்பதாகத்தானே அமைந்துள்ளன!

நம் அரசியல் நோக்கர்களின் கணிப்பும் ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளும் என்றைக்குப் பலித்தன? எத்தனையோ முறை, “மீண்டும் கருணாநிதி வெல்வார்” என்று இவர்கள் சொன்னபொழுதெல்லாம் ஜெயலலிதாவும், “ஜெயலலிதா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார்” என்று சொன்னபொழுதெல்லாம் கருணாநிதியும் ஆட்சிக்கு வந்தது நாம் பார்க்காததா? கருத்துக்கணிப்புகள், அரசியல் கணக்கீடுகள் எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் தவிடுபொடியாக்குவதுதானே நம் மக்களின் வழக்கமே!

தனி ஈழம், அணு உலை போன்ற தமிழர் பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணிக்குத் தமிழர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?

இதே ஈழப் பிரச்சினையிலும் அணு உலைப் பிரச்சினையிலும் பா.ஜ.க-வும் காங்கிரசும் எந்த அளவுக்கு இரும்புப்பிடியாக இருக்கின்றன என்பது நாம் அறியாததில்லை. அதற்குக் காரணம் அவர்களின் தனிப்பட்ட நலன் கருதி. ஆனால், இடதுசாரிகள் இந்தப் பிரச்சினைகளில் இப்படியொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் காரணம் கொள்கை அடிப்படையிலானது. கொள்கை காரணமாக எதிர்க் கருத்துக் கொண்டிருப்பவர்களைப் பேச்சுவார்த்தையின் மூலம் நம் வழிக்குக் கொண்டு வந்து விட முடியும். ஆனால், தங்கள் சொந்தக் காரணங்களை முன்னிட்டு எதிர்ப்புக் காட்டுபவர்களை எக்காலத்திலும் மனம் மாற்ற முடியாது. அதிலும் ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை, தனி ஈழம் என்பதை மட்டும்தான் இடதுசாரிகள் எதிர்க்கிறார்களே தவிர, ஈழத் தமிழர் உரிமைக்காகத் தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வருபவர்கள்தான் அவர்களும். அது மட்டுமின்றி, ஈழப் பிரச்சினை - அணு உலைப் பிரச்சினை இரண்டுமே நடுவணரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. எனவே, மற்ற இரு தேசியக் கட்சிகளோடு ஒப்பிடும்பொழுது இந்தப் பிரச்சினைகளில் ஓரளவாவது தேவலாம் எனச் சொல்லக்கூடிய தேசியக் கட்சிகளான இடதுசாரிகளை எப்படியாவது நம் பக்கத்தில் வைத்துக் கொள்வதுதான் எதிர்காலத்தில் இப்பிரச்சினைகளில் தமிழினத்துக்கு சாதகமாகக் காய் நகர்த்த உதவும். ஆம்! இது விட்டுக் கொடுப்பு இல்லை; இராஜதந்திரம்!

தேர்தலுக்குப் பின் மக்கள் நலக் கூட்டணி தி.மு.க அல்லது அ.தி.மு.க பக்கம் சாய்ந்து விட்டால்...?

அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதுதான் இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்ல இன்னொரு முதன்மைக் காரணம்! இன்றைய சூழலில் வைகோவால் கோபாலபுரம் இருக்கும் திசையில் தலைவைத்துக் கூடப் படுக்க முடியாது. ஜெ-வுக்கோ விஜயகாந்த், திருமாவளவன் இருவரையும் கண்டாலே ஒவ்வாது (allergy). ஆக, எப்படிப் பார்த்தாலும், இரண்டு பக்கங்களில் எந்தப் பக்கத்துக்கும் இவர்கள் போக முடியாது. நம்பி வாக்களிக்கலாம்.

கூட்டணியின் முதன்மைத் தலைவர்களில் ஒருவரான வைகோவே தேர்தலில் போட்டியிடவில்லையே?!

சாதிக் கலவரத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்கிறார் வைகோ. ஆனால், அது பொய்யெனக் கூறிப் பல்வேறு விதமான காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், வைகோ சொல்வதுதான் உண்மை என அவர் ஆதரவாளர்களோ கூட்டணித் தலைவர்களோ மட்டுமில்லை; விகடனே சொல்கிறது! (பார்க்க: இங்கே) எந்த விகடன்?... தி.மு.க-வுக்கு விலை போய்விட்டதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படும் விகடன்! அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், தி.மு.க சார்பான ஓர் ஊடகமே தி.மு.க-வுக்கு எதிராக இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது எனும்பொழுது அதை நம்பாமல் இருக்க முடியாது. ஒருவேளை, அந்தக் குற்றச்சாட்டு தவறாக இருந்தால், நடுநிலையான ஓர் இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி எனும் வகையிலும் இது உண்மை என்றே ஆகிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் வைகோ சொல்வது உண்மை! எத்தனை பேர் சாவது பற்றியும் கவலைப்படாமல் சாதி-சமய உணர்வுகளைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றுவோருக்கு இடையில் தன் காரணமாக சாதிக் கலவரம் ஏற்படக்கூடாது யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒருவர் தேர்தலையே புறக்கணிக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். மற்றபடி, தேர்தலில் அவர் மட்டும்தான் போட்டியிடவில்லை, அவர் கட்சி போட்டியிடுகிறது. அணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தோ வேறெந்தப் பொறுப்பிலுமிருந்தோ அவர் விலகவும் இல்லை. எனவே, ஆட்சியை வழிநடத்துவதில் அவர் பங்கு கட்டாயம் இருக்கும்.

கருணாநிதி மட்டும்தான் தமிழின துரோகியா? பா.ம.க மட்டும்தான் சாதிக் கட்சியா? திருமாவளவனுக்கும் அவருடைய கட்சிக்கும் இவை பொருந்தாதா?

யார் சொன்னது? தமிழினப்படுகொலை நடந்து கொண்டிருந்தபொழுது கடைசி வரை காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகாத திருமாவளவன் கண்டிப்பாகத் தமிழின துரோகிதான். குறிப்பிட்ட ஒரு கட்சியினரின் சார்பாக நடத்தப்படும் விடுதலைச் சிறுத்தைகளும் சாதிக் கட்சிதான். ஆனால், ம.ந.கூ-வுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழின துரோகியான திருமாவளவனை நாம் முதல்வராக்கப் போவதில்லை; சாதிக் கட்சியான வி.சி.க-வை ஆட்சியில் அமர்த்தப் போவதும் இல்லை. மாறாக, ம.ந.கூ-வுக்கு வாக்களிக்காமல் விட்டுத் தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வந்தாலோ, பா.ம.க-வுக்கு வாக்களித்தாலோ முறையே (respectively) இவைதான் நடக்கும்.

ஆயிரம்தான் சொன்னாலும், ம.ந.கூ தெலுங்கர் கூட்டணிதானே?

ஒருவர் தமிழரா இல்லையா என்பதை அவருடைய நடத்தையை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய, பிறப்பை வைத்து இல்லை. அவ்வகையில், காலங்காலமாகத் தமிழர் பிரச்சினைகள் அனைத்துக்காகவும் தொடர்ச்சியாகப் போராடி வரும் வைகோவைத் தமிழர் இல்லை எனச் சொன்னால், அதைத் தமிழினத்தின் பெருந்தலைவரான பிரபாகரன் முதலில் ஏற்றுக் கொள்வாரா என்பதைச் சிந்தியுங்கள்! இன்று பிரபாகரன் இல்லை என்கிற துணிச்சலில் ஆளாளுக்கு இப்படிப் பேசித் திரிகிறீர்களே? நாளைக்கே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அவர் திரும்பி வந்துவிட்டால், அவர் நண்பரான வைகோவைத் தமிழர் இல்லை என அவர் எதிரில் நின்று சொல்ல உங்களில் ஒருவருக்காவது நெஞ்சில் உரம் இருக்கிறதா? மற்றபடி, விஜயகாந்த் தெலுங்கர்தான். நான் மறுக்கவில்லை. வீட்டில் கூட அவர் தெலுங்குதான் பேசுகிறார் என்பது உலகறிந்த ஒன்று. ஆனால், உண்மையான தமிழர் ஒருவர், (அட, சீமான் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்) ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலிமையைத் திரட்டிக் கொண்டு வரும் வரை தமிழ் நாடும் இனமும் கொஞ்சமாவது மிச்சம் இருக்க வேண்டாவா? அதற்கு ஒரே வழி, உடனடியாக ஓர் ஆட்சி மாற்றம். அதற்காகத்தான் மூன்றாவது அணிக்கு வாக்களிக்கச் சொல்வதே தவிர, வேறொன்றுமில்லை.

எந்தக் கட்சி/கூட்டணி மீதும் நம்பிக்கையில்லாதவர்களாகத்தான் இன்றைய பெரும்பான்மை இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கக் கூடாது?

தி.மு.க போனால் அ.தி.மு.க; அ.தி.மு.க போனால் தி.மு.க என்கிற சுழற்சியைத் தகர்க்க அரிய ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனப் பொத்தானை அழுத்தினால், இந்த இரு கட்சிகளையும் பிடிக்காதவர்களின் வாக்குகள் ஒரே இடமாகச் சேராமல் சிதறி, மீண்டும் இந்த இரு கட்சிகளில் ஒன்றே ஆட்சிக்கு வரத்தான் அது வழி வகுக்கும். அது நல்லதா?
 

மக்கள் நலக் கூட்டணி மீது வைக்கப்படும் முதன்மைக் குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்குமான பதில்களை இதுவரை பார்த்தோம். இவை தவிர வேறு குற்றச்சாட்டுகளும் இருக்கலாம். இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கெனத் தனிப்பட்ட குற்றச்சாட்டுக் கூட ஏதேனும் இருக்கலாம். அப்படி எது இருந்தாலும், எத்தனை இருந்தாலும் அத்தனையையும் உங்கள் மனதிற்குள்ளேயே வரிசையாக ஓட்டிப் பாருங்கள்! அவை அனைத்தையுமே சேர்த்து வைத்துப் பார்த்தாலும் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பக்கத்தில் கூட அவை நெருங்க முடியாது என்பதை நீங்களே உணர்வீர்கள்! மூன்றாவது அணிதான் சிறந்த தேர்வு என நான் சொல்லவில்லை. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுக்கு எதிரானவர்களில் இவர்கள் அளவுக்கு யாருக்கும் வெற்றி வாய்ப்பும் இல்லை; அதே நேரம், தி.மு.க, அ.தி.மு.க அளவுக்கு இவர்கள் மோசமான தேர்வும் இல்லை.

ஆக, தி.மு.க, அ.தி.முக இரண்டையும் வீழ்த்தக்கூடிய வலிமை கொண்ட, தவறுக்கு இடமளிக்காத கூட்டணி ஆட்சி முறையை முன்வைக்கிற, தமிழ்ப் போராளிகளின் கையிலேயே ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் அரிய வாய்ப்பை வழங்குகிற, தமிழ் சமூகத்தின் அறிவார்ந்த பெருமக்களால் பரிந்துரைக்கப்படுகிற இவர்களுக்கு வாக்களிப்பதுதான் நடைமுறை சார்ந்து (practical-ஆக) பார்க்கும்பொழுது இன்றைய சூழ்நிலையில் அறிவார்ந்த முடிவாக இருக்க முடியும். அதற்கு மேல் உங்கள் விருப்பம்!
 
வெல்க மக்களாட்சி!
வாழ்க குடியரசு!! 

(நான் கீற்று தளத்தில் -- அன்று எழுதியது) 

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி ௧) மக்கள் நலக் கூட்டணி ஆதரவாளர்கள் ௨) மக்கள் நலக் கூட்டணி முகநூல் பக்கம் ௩) Stuart Miles images at FreeDigitalPhotos.net. 

தொடரின் முந்தைய பகுதிகள்:


தேர்தல் - 2016 (1) | விஜயகாந்த் எனும் படச்சுருள்! ஓட்டுபவர்கள் யார்? ஏன்? - ஊடகங்கள் சொல்லாத உண்மைகள்!

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து இனியாவது தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

16 கருத்துகள்:

  1. மக்கள் நலக் கூட்டணியின் சாதக பாதகங்களை சரியாக அலசி ஆராய்ந்து உள்ளீர்கள். எனினும் அதன் முதல்வர் வேட்பாளர் தான் உறுத்துகிறது. மாற்றத்தை உருவாக்க ஓர் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள சொல்கிறீர்கள் என்று தோன்றுகிறது பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அது மிகவும் உறுத்தத்தான் செய்கிறது நண்பரே! ஆனால், இன்றைய அரசியல் சூழலில் மக்கள் நலக் கூட்டணிக்கும் சரி, மக்களான நமக்கும் சரி, வேறு வழியில்லை. மேலும், கருணாநிதி - ஜெயலலிதா இருவரை விட விஜயகாந்தால் பெரிய ஏமாற்றத்தைத் தந்து விட முடியாது என நம்புகிறேன். தங்கள் பாராட்டுக்கும் முதலாவதாக வந்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. பிராக்டிகல் அணுகுமுறையுடன் பரிசீலிக்கவும். பா.ம.க வின் நிறுவனர் ஆதியில் ஒரு சாதித்தலைவராக முன்னிலைப்படுத்தப்பட்டாலும் இப்போது ஒரு அரசியல் கட்சியாக அவரின் கட்சி பரிணமிக்கிறது. களத்தில் இருக்கும முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களைத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை.
    சாதி உணர்வு என்பது காலம்காலமாக நமது சமுதாயத்தில் இருந்துகொண்டுதான் வருகிறது. அவனவன் தன் சாதி உயர்ந்தது என்று நினைப்பதில் தவறில்லை. ஆனாலும் அடுத்தவன் சாதி தாழ்ந்தது என்கின்ற உணர்வுதான் தவறு. சமூக, பொருளாதார வளர்ச்சியினால் இன்று இத்தகைய உணர்வு குறைந்துகொண்டுதான் இருக்கிறது. சாதி மறுப்பு திருமணங்கள் கூட அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன. காலப்போக்கில் சமுதாய வளர்ச்சியில் இது சரியாகப் போகும். இதற்கும் ஆட்சி அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? இதை சட்டம் போட்டா மாற்றமுடியும்? மேலும் கே.வி.கூ. அணியின் ஒருங்கிணைப்பாளர் கலைஞரை எப்படி விளித்தார் என்று நாம் அனைவரும் அறிவோம். இதை அவர் கலைஞரிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டாலும் அந்த சமுதாயத்தினரின் மனம் எவ்வளவு கொதிப்படைந்து இருக்கும் என்று நினைத்துப்பார்த்தீர்களா? அவரின் உள்ளுணர்வுதான் இந்த வெளிப்பாடு. மன்னிப்புக்கேட்டுவிட்டாலும் அந்த உணர்வே மாறி இருக்குமா என்பது சந்தேகமே. நான் அவரைக் குற்றப்படுத்தவில்லை. அவர் ஒரு சராசரி மனிதனாகத்தான் நடந்துகொண்டார். இவரின் வழிநடத்துதலில் உள்ள ஒரு அணிக்கு எப்படி ஆதரவு அளிக்கிறீர்கள் என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்வதுரை ஐயா! முதலில் உங்கள் விரிவான கருத்துக்கு என் நன்றி!

      பா.ம.க பற்றி எனக்கு நல்லவிதமான கருத்து எதுவும் ஏற்படும்படியாக அவர்கள் இதுவரை நடந்து கொள்ளவில்லை என்றாலும், அன்புமணி மீது எனக்கு மதிப்பு உண்டு. நடுவண் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அவர் இருந்தபொழுது புரிந்த நற்செயல்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவை, நினைத்துப் பார்க்கத் தக்கவை. ஆனால், நீங்கள் கருத்துரையின் தொடக்கத்திலேயே கூறியிருப்பது போல, அதே நடைமுறைசார் (practical) பார்வை காரணமாகத்தான் நான் அன்புமணிக்கு வாக்களிப்பதைத் தவிர்க்கச் சொல்கிறேன். அதற்கு இரண்டு காரணங்கள்.

      ஒன்று சிறுபான்மையர் பாதுகாப்பு! பா.ம.க ஆட்சிக்கு வந்தால் அன்புமணி சிறந்த முதல்வராகச் செயல்படலாமே தவிர, தன் தந்தையை மீறிக் கட்சியினரைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க அவரால் முடியாது. மேலும், இதுவரை பா.ம.க-வினர் நடத்திய அட்டூழியங்கள் தான் ஆட்சிக்கு வந்தால் தொடராது என அவர் எந்த உறுதிமொழியும் அளிக்கவுமில்லை. அந்தக் கட்சியிலிருக்கும் காடுவெட்டி குரு போன்றோர் பா.ம.க ஆளுங்கட்சி ஆகிவிட்டால் தாழ்த்தப்பட்ட இனத்தவர் மீது வெளிப்படையான ஒரு சிறு போரையே தொடுப்பார்கள்! இதை நான் சொல்லவில்லை; ஏற்கெனவே அவர்களே சொல்லியிருக்கிறார்கள்; அதையும் நான் சான்றோடு முன்பே இதே தளத்தில் எழுதியிருக்கிறேன்; நீங்களும் பார்த்திருக்கிறீர்கள். எனவே, சக மனிதர்களை அப்படிப் பெரிய ஓர் ஆபத்தில் சிக்க வைத்துவிட்டு அப்படியோர் ஆட்சி மாற்றத்தை நாம் விரும்பினால் அதை விடப் பெரிய அரக்கத்தனம் இருக்க முடியாது.

      இரண்டாவது காரணம், ஏற்கெனவே மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்பட்டதுதான். ஒருபுறம் இதற்கு முன்பு பலமுறை ஆண்ட, தங்களுக்கெனத் தனிப்பெரும் வாக்குவங்கி கொண்ட கட்சிகளும், இன்னொரு புறம் இத்தனை நாட்களாக அவர்கள் வெற்றிக்குத் துணை நின்ற கட்சிகள் அனைத்தின் ஒருங்கிணைந்த கூட்டணியும் போட்டியிடும்பொழுது இவர்களுக்கு நடுவில் பா.ம.க தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து விடுவது என்பது நடக்காத கதை. ஊடகங்கள், பொதுமக்கள் என எல்லாத் தரப்பினராலும் எல்லா இடங்களிலும் தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பேசப்படுவது மக்கள் நலக் கூட்டணிதான். எனவே, அதுதானே நடைமுறை சார்ந்த அணுகுமுறையாக இருக்க முடியும்?

      சாதி உணர்வு குறைந்து கொண்டு வருவதாக நீங்கள் கூறியிருப்பது சரியான தகவல் இல்லை. முன்னெப்பொழுதையும் விடத் தற்பொழுது சாதி உணர்வு கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பான வார ஏடுகளின் கட்டுரைகளைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்! மற்றபடி, ஆட்சி அரசியலுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்டிருப்பதைப் பார்த்தால் எனக்கு என்ன சொல்வதெனவே தெரியவில்லை. ஐயா! சாதி அடிப்படையில்தான் இன்றும் எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. பெரும்பாலான இடங்களில் அந்த அடிப்படையில்தான் மக்கள் வாக்கும் அளிக்கிறார்கள். அந்தக் கணக்கை வைத்துத்தான் கட்சிகள் ஆட்சியையும் பிடிக்கின்றன. அப்படியிருக்க ஆட்சி அரசியலுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு எனக் கேட்பது சீதைக்கும் இராமனுக்கும் என்ன உறவு எனக் கேட்பதைப் போன்றதுதான்.

      மற்றபடி, வைகோ பற்றிய உங்கள் கேள்வி உங்களுக்கே நியாயமாக இருக்குமா என எனக்குத் தெரியவில்லை. சாதி தொடர்பாக எத்தனையோ குற்றங்களைச் செய்திருக்கும் பா.ம.க-வை அன்புமணி என்கிற ஒற்றை மனிதரை முன்னிட்டுப் பொறுத்துக் கொள்ள ஆயத்தமாயிருக்கும் நீங்கள் தமிழருக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் எவ்வளவோ போராட்டங்களை நடத்தி, ஈழத் தமிழர்களுக்காகத் தன் சொத்துக்களைக் கூட இழந்து, ஐம்பதாண்டுக் கால அரசியல் வாழ்வில் யாராலும் இதுவரை ஊழல் குற்றச்சாட்டு ஏதும் சுமத்தப்படாமல் இத்தனை ஆண்டுக் காலத் தூய்மையான பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராயிருக்கும் வைகோவை அவர் சொன்ன ஒற்றை வார்த்தைக்காகத் தூக்கியெறியச் சித்தமாயிருக்கிறீர்கள் என்றால், இதற்கு நான் என்ன விளக்கம் சொல்ல முடியும்!

      நீக்கு
  3. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டிற்கும் மாற்று வேண்டும் என்பது சரிதான். அதற்கான மாற்று மக்கள் நலக் கூட்டணி என்பதில்தான் சிக்கல். இவர்கள் எல்லோருமே மேலே சொன்ன இரண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க கடைவரை முயற்சி செய்தவர்கள்..

    இந்திய ஆட்சிமுறையில் மாற்றம் (ஓருவர் ஒரு முறைதான் பதவி வகிக்க வேண்டும்) என்பதே என் போன்றவர்களது விருப்பம். அதைச் செய்ய எந்த அரசியல் கட்சியுமே விரும்பாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! நீங்கள் கூட இதை இப்படிக் கருத்தியல் சார்ந்தே அணுகுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது!

      இரு கட்சிகளோடும் கூட்டணி வைக்க முயன்றவர்களாக இருக்கட்டும் அல்லது ஏற்கெனவே கூட்டணி வைத்திருந்தவர்களாக இருக்கட்டும், எப்படி இருந்தாலும் அந்த இரு கட்சிகள் மீதும் இருக்கிற ஒரு குற்றச்சாட்டுக் கூட இவர்கள் மீது இல்லையே! அதை நாம் பார்க்க வேண்டாவா? இரு கட்சிகளோடும் இத்தனை ஆண்டுகள் மாறி மாறிக் கூட்டணி வைத்திருந்ததை மட்டும் குற்றச்சாட்டாகச் சொல்கிறோமே? இத்தனை ஆண்டுகள் அவர்களோடு இருந்தும் அவர்களைப் போல் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்களே, அதுவன்றோ பெரிது? அதற்கு நாம் தெரிவிக்கப் போகும் பாராட்டு என்ன ஐயா? இது மட்டுமில்லை, இது போன்ற இன்னும் பல குற்றச்சாட்டுகளுக்கும் மேற்படி கட்டுரையில் பதில் அளித்திருக்கிறேன்.

      மற்றபடி, ஒருவர் ஒருமுறைதான் பதவிக்கு வர வேண்டும் என்கிற சட்டம் இந்தியாவில் தேவையே இல்லையே ஐயா! அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒருவர் இத்தனை முறைக்கு மேல் ஆட்சித்தலைமை வகிக்கக்கூடாது எனச் சட்டம் இருப்பதாகக் கேள்வி. அதற்குக் காரணம், அவர்களது இரு கட்சி ஆட்சி முறை. இது அல்லது அது என இரண்டு கட்சிகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற நிலைமை அங்கிருப்பதால் ஒருவரே மீண்டும் மீண்டும் பதவிக்கு வருவதைத் தடுக்க அவர்கள் நாட்டில் அப்படிச் சட்டம் இருப்பது தேவைதான். ஆனால், யார் வேண்டுமானாலும், எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; ஆட்சிக்கு வரலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ள நாட்டில் அப்படி ஒரு சட்டம் எதற்கு ஐயா? மேலும், அப்படி ஒரு சட்டம் வந்தால் ஒவ்வொரு முறையும் முதல்வர் வேட்பாளரை மட்டும் மாற்றிவிட்டு, தங்கள் கட்சியே முற்றிலும் மாறிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இவர்களே மறுபடியும் மறுபடியும் ஆட்சிக்கு வரத்தான் ஐயா அது உதவும்.

      எது எப்படியோ உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. திரும்பவும் வடுகன் ஆட்சியா? ஒரு தமிழன் கூட கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கான பதில் கட்டுரையிலேயே இருக்கிறது. உண்மையான தமிழர் ஒருவர், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலிமையைத் திரட்டிக் கொண்டு வரும் வரை தமிழ் நாடும் இனமும் கொஞ்சமாவது மிச்சம் இருக்க வேண்டாவா? அதற்கு ஒரே வழி, உடனடியாக ஓர் ஆட்சி மாற்றம். அதற்காகத்தான் மூன்றாவது அணிக்கு வாக்களிக்கச் சொல்வதே தவிர, வேறொன்றுமில்லை. எந்த ஒரு பெரிய மாற்றமும் ஓரிரவில் ஏற்பட்டு விட முடியாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி - ஜெயலலிதா போன்றோரிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமானால் அவர்களை விடத் தேவலாம் எனச் சொல்லக்கூடிய ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைப்பதுதான் முதல் படியாக இருக்க முடியும். மாறாக, எல்லாத் தகுதிகளும் பண்புகளும் பொருந்திய தேவதூதர் ஒருவரிடம்தான் ஆட்சியை ஒப்படைப்பேன் எனக் காத்திருந்து அதுவரை மீண்டும் மீண்டும் இவர்களிடமே தமிழ்நாட்டைத் தாரை வார்த்துக் கொண்டிருந்தால், அப்படி ஒருவர் வரும் வரை இங்கே எதுவும் மிச்சம் இருக்காது.

      உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

      நீக்கு
  5. அருமையான விரிவான அலசல் அதற்காக முதலில் எமது வாழ்த்துகள்.
    அ.தி.மு.க – தி.மு.க இவைகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை இதில் பலருக்கும் உடன்பாடு உண்டாகலாம்.

    விஜயகாந்துக்கு தலைவன் என்ற தகுதி நிச்சயமாக இல்லை இதெல்லாம் திரைப்படத்தில் மக்கள் நம்பிய மோகம் முதலில் பேசவே தெரியவில்லையே இவர் நல்ல மனிதர் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு தி.மு.க - வில் இருக்கும் பொழுது தனது பிறந்த நாளை ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டாடுவார் 1989-1990 களில் நான் கண்ட உண்மை

    முதலில் தனது நிலை என்ன என்பதை உணர்ந்தவனே தலைவனாக முடியும் விஜயகாந்தை மனைவியும், மைத்துனரும் இயக்கி கொண்டு இருக்கின்றார்கள் இதை பல ஊடகங்கள் காணொளி மூலம் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன...

    வைகோ சிறந்த பேச்சாளர் இவரை இரும்பு மனிதர் என்றும் சொல்லலாம் இன்றல்ல சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரும் இப்பொழுது வடிவேல் மாதிரி ஆகி விட்டது வேதனையான விடயமே...

    //ஒருவர் தமிழரா இல்லையா என்பதை அவருடைய நடத்தையை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய, பிறப்பை வைத்து இல்லை//

    அப்படியானால் ஜெயலலிதாவை தமிழச்சி என்றும், கருணாநிதியை, எம்ஜிஆரை தமிழர் என்றும் சொல்லலாமா ?

    விஜயகாந்தை முதல்வராக்குவோம் என்று சொல்லும் கூட்டணியில் மூப்பனார் மகனைத்தவிற மற்றவர்கள் அனைவரும் தெலு(ங்)கர்தானே... எல்லாம் மொழி உணர்வின் வெளிப்பாடே தவிற வேறில்லையே.....

    மொத்த சதவீத மக்களும் தேர்தலை புறக்கணித்து மாறுதலைக் கொண்டு வந்தால் என்ன ? இன்னும் கொஞ்ச காலத்துக்கு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நிலவட்டும் அதிகாரிகளின் ஆட்சி இருக்கட்டும் கழிசடை அரசியல்வாதிகள் வேறு தொழில் தேடிப்போகட்டும் இதுதான் எனது விருப்பம்.
    ஆனால் நடக்கப்போவது இரண்டில் ஒன்றுதான் ஆட்சியைப் பிடிக்கும்
    அ.தி.மு.க வென்றால் விரைவில் சசிகலாவிடம் தமிழகம்
    தி.மு.க வென்றால் ஸ்டாலினிடம் தமிழகம் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினிடம்

    இது தமிழகத்தின் சாபக்கேடு மக்கள் வாக்குரிமையின் வலிமையை இதுவரை உணரவில்லை உணராதவரை ஒட்டு மொத்த நல்ல மனிதர்களும் பல வலிகளை சந்தித்தே தீரவேண்டும் வேறு வழியில்லை.

    தமிழ் மணம் – 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத் துளியும் ஒப்புதல் இல்லாத அடிப்படையிலான கட்டுரை என்றபொழுதும் வாழ்த்திக் கருத்திட்டது மட்டுமின்றி வாக்கும் அளித்திருக்கும் உங்கள் அன்பு நெஞ்சத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே!

      விஜயகாந்தின் தகுதியின்மை பற்றி நானே விரிவாக, இதே தொடரின் முதல் கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்; நீங்களும் கருத்திட்டிருக்கிறீர்கள். அப்படியிருந்தும் நான் இப்பொழுது இப்படி ஒரு பரிந்துரையை முன்வைக்கக் காரணம், காலத்தின் கட்டாயம்.

      100% மக்களும் வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்காத கதை. அப்படிச் செய்தால் குண்டர்கள் மூலம் வாக்குச்சாவடியைக் கைப்பற்றிக், கள்ள வாக்குகள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது இன்னும் எளிதாகும். மேலும், தமிழ்நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமே நடுவணரசுதான் எனும்பொழுது நடுவணரசின் கைப்பாவையாகச் செயல்படும் குடியரசுத்தலைவர் ஆட்சி எப்படித் தீமை பயக்காததாக இருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை. அப்படியே குடியரசுத்தலைவர் ஆட்சி வந்தாலும் சிறிது காலத்துக்குப் பின் எப்படியும் தேர்தல் வைத்துத்தான் ஆக வேண்டும். எனவே, அது வரைக்கும் பெரிய கட்சிகள் காத்திருக்கத்தான் செய்யுமே தவிர ஏழேழு தலைமுறைக்கும் சொத்துச் சேர்த்து வைத்துள்ள அவர்கள் வேறு தொழில் தேடிப் போகவெல்லாம் வாய்ப்பேயில்லை.

      எப்பேர்ப்பட்ட சாபத்துக்கும் விமோசனம் என ஒன்று உண்டு. அதுவரை வலிகளைத் தாங்கும் வலிமையும் எங்களுக்கு உண்டு. இவற்றையெல்லாம் மாற்றும் ஆற்றலும் உண்டு. பொறுத்திருங்கள்! காலம் கனியும்!

      மீண்டும் மிக்க நன்றி!

      நீக்கு
  6. பா.மா.க. ஆட்சிக்கு வந்தால் சாதி வெறி தலைவிரித்து ஆடும் என்கின்ற உங்களது பார்வை தேவையற்ற பயம். ஆதாரம் இல்லாதது. தமிழ் மக்கள் என்றைக்கும் அதனை அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் அப்படி நடந்தால் ஒருபோதும் பா.மா.க. வினால் தலைதூக்க முடியாதபடி ஆகிவிடும். இது அவர்களுக்கும் தெரியும். எனவே அந்த பயம் உங்களுக்கு வேண்டியது இல்லை. நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல “சாதி உணர்வு என்பது காலம்காலமாக நமது சமுதாயத்தில் இருந்துகொண்டுதான் வருகிறது. அவனவன் தன் சாதி உயர்ந்தது என்று நினைப்பதில் தவறில்லை. ஆனாலும் அடுத்தவன் சாதி தாழ்ந்தது என்கின்ற உணர்வுதான் தவறு. காலப்போக்கில் சமுதாய வளர்ச்சியில் இது சரியாகப் போகும்.” எனவே ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சி என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அன்புமணி ஏற்கனவே மத்திய சுகாதார அமைச்சராக திறம்பட சாதனைகள் பல புரிந்துள்ளார். உலக அளவில் பாராட்டுதல்கள் பெற்றவர். ஒரு நல்ல தலைவராக உருவாக அனைத்து தகுதியும் அவருக்கு உள்ளது. அவர் தந்தையை மீறிக் கட்சியினரைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க அவரால் முடியாது என்பதெல்லாம் ஆதாரமில்லாத பயம். மக்களின் ஆதரவு பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபின் பழைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் அவர்கள் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். கே.வி.கூ. அணி என்பது ஒரு பொருத்தமற்ற கொள்கையற்ற ஒரு கூட்டணி. அதில் உள்ள தலைவர்கள் இக்காலத்திற்குப் பொருத்தமான திட்டங்களை வகுத்து எடுத்துச்செல்லுமளவுக்கு தொலை நோக்குப் பார்வை கொண்டவர்கள் அல்ல என்பது என்னுடைய கணிப்பு. திரு வைகோ மீது எனக்கு மிகுந்த நன்மதிப்பு இருந்தது. அவர் விஜயகாந்த் விஷயத்திலும் அவரது கோவில்பட்டி தொகுதி விஷயத்திலும் நடந்துகொண்ட விதம் அவர்மீது இருந்த நன்மதிப்பைக் குறைத்து விட்டது. நீங்கள் குறிப்பிட்ட எல்லாத் தகுதிகளும் பண்புகளும் பொருந்திய தேவதூதர் ஒருவராக ஏன் அன்புமணி இருக்கக் கூடாது? ஒருவர் ஊழல் செய்வாரா மாட்டாரா என்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் மட்டுமே தெரியும். நீங்கள் சொன்ன யாரும் இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தது இல்லை. அன்புமணி மீது சி.பி.ஐ. வழக்கு இருக்கிறது என்று சொல்லாதீர்கள். அது ஒரு அரசியல் பொய் வழக்கு என்று அவர் சொல்கிறார். இருக்கலாம். ஜனநாயகத்தில் மாற்றம் என்பது எளிதில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. இருப்பதில் நல்லதைத் தேர்வு செய்வதே நடைமுறை சாத்தியம். ஓட்டளிப்பதில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஓரிரு அணியினரே ஆட்சிக்கு வராமல் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களில் ஓரளவிற்கு நல்லவராகவும் தெளிவான பார்வை கொண்டவராகவும் இருப்பவரை தேர்வு செய்து அவருக்கு ஒரு வாய்ப்பளித்து ஊக்குவிக்கவேண்டும் என்பதே என்னிடைய நிலைப்பாடு. அப்போது தான் நடுநிலையாளர்களும் நல்லவர்களும் அரசியலுக்கு வருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதாரமற்ற அச்சம் என்ற சொல்லாடலை நீங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறீர்கள். பா.ம.க ஆட்சிக்கு வந்தால் சாதிவெறி தலைவிரித்தாடும் எனச் சொல்வது நானில்லை, பா.ம.க-வினரேதான். சித்திரை முழுநிலவுப் பெருவிழாவில் பேசிய பி.டி.அரசகுமார்,

      "நான் கண் அசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு பயல் வெளியே நடமாடமுடியாது, வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது. அய்யா (ராமதாசு) என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். காலம் கனியட்டும் அதுவரை காத்திரு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்" என்று வெளிப்படையாக அறிவித்தார். அந்தக் 'காலக் கனிவு' என்பது என்ன என எல்லாருக்கும் புரியும். அந்தக் கனிவை ஏற்படுத்தித் தரச் சொல்லித்தான் நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள். (பார்க்க: http://www.vinavu.com/2013/04/29/ramadoss-mamallapuram-circus/).

      ஆக, நான் ஒன்றும் ஆதாரமில்லாமல் பேசவும் இல்லை; குற்றம்சாட்டவும் இல்லை. பா.ம.க-வினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று கூறினார்களோ, அதை மக்களுக்கு நினைவூட்டுகிறேன், அவ்வளவுதான். மேலும், பா.ம.க-வோ, தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ அல்லது இதன் தலைவர்களோ எவனுக்கும் நான் அஞ்சுபவனும் இல்லை. இவர்களை விடப் பெரிய பிஸ்தாக்களையெல்லாம் நான் பார்த்து விட்டேன்.

      மேலும், இவ்வளவு சொன்ன நீங்கள், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருபெரும் கட்சிகளுக்கெதிராகத் தனியொரு கட்சியாய்ப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதென்பது இங்கு யாராலும் ஆகக் கூடியதில்லை என்று நான் கூறியதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. சொல்லப் போனால், இந்த ஒரு காரணத்துக்காகத்ததான் நான் சீமானுக்கும் வாக்களிக்க வேண்டா என்கிறேன். சீமானின் தொலைநோக்குத் திட்டங்களும், இயற்கை சார் பொருளாதாரத் திட்டங்களும், சாதி-சமயச் சார்பற்ற பார்வையும், தமிழ்ப் பற்றும், பேச்சும் அன்புமணியின் இத்திறமைகளைக் காட்டிலும் பன்மடங்கு உயர்வானவை. அவருடைய தேர்தல் அறிக்கையிலேயே இது பளிச்சிடுகிறது. ஆனாலும், தனியாக நிற்கிறார் எனும் ஒரே காரணத்துக்காகத்தான் நான் அவரையே புறக்கணிக்கிறேன் எனும்பொழுது அவரையும் விட்டுவிட்டு அன்புமணிக்கு வாக்களிக்கும்படி நினைத்துப் பார்க்கக் கூட இடமில்லை.

      ஆட்சியில் இருந்தால்தான் ஊழல் செய்ய முடியும் என்பதில்லை. இல்லாமலே அதைச் செய்ய முடியும் என உலகுக்குக் காட்டியவர்களே நீங்கள் பரிந்துரைக்கும் பா.ம.க-வினர்தான். நடுவண் புலனாய்வுத்துறை வழக்குப் பற்றி நான் சொல்லவில்லை. எதைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். காரணம் நான் ஏற்கெனவே சொன்னதுதான்.

      "அரசியலுக்கு வந்த புதிதில், இதே சென்னை, தேனாம்பேட்டை நாட்டுமுத்துத் தெருவில் அலுவலகம் - வீடு இரண்டையும் ஒரே கட்டடத்தில் நடத்திக் கொண்டிருந்த அன்றைய இராமதாசு எங்கே? இன்று தைலாபுரத்தில் பெரிய பண்ணை வீட்டில் அரச வாழ்வு வாழும் இராமதாசு எங்கே? எத்தனை இடங்களில் திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், எப்பேர்ப்பட்ட படாடோப வாழ்க்கை!... இவற்றுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது? சிந்திக்க வேண்டாவா?" என்று முந்தைய பதிவு ஒன்றில் கேட்டிருந்தேன். அதில் கருத்திட்டிருந்த நீங்கள் அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கவில்லை.

      மேலும், பா.ம.க-வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஈழம், அணு உலை, அண்டை மாநிலங்களுடனான நீர்ப் பிரச்சினைகள், தமிழ் மீனவர் படுகொலை குறித்தெல்லாம் பேசப்படுவதே இல்லை.

      தமிழ் மக்களுக்காகக் காலமெல்லாம் பாடுபட்ட வைகோ, நேற்று அரசியலுக்கு வந்து இதற்குள் பல்லாயிரம் இளைஞர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் சீமான், தமிழர் போராட்டங்கள் அனைத்திலும் முன்நிற்கும் இடதுசாரிகள் என இவர்களெல்லாரும் இருக்க இத்தனை பேரையும் விட்டுவிட்டுப் படிப்பு என்கிற ஒரே ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டி அன்புமணியைத் தேர்ந்தெடுக்கச் சொல்வது எந்த விதத்திலும் முறையில்லை.

      நீக்கு
  7. ம் அனைத்தும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக தான் உள்ளது என் கருத்து என்னவென்றால் மத்தியில் ஆளும் கட்சி க்கு மாநிலத்திலும் வாய்ப்பளிக்கலாமே என்பதுதான், ,,,தமிழகம் இன்னொரு குஜராத் ஆகாதா என்ற ஏக்கம் தான், ,,,
    அன்புடன் திருப்பூர் சிவா,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா நீங்களா! உங்களை இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! பாராட்டுக்கு நன்றி! ஆனால், தமிழகம் இன்னொரு குசராத் ஆகிவிடாதா என நீங்கள் ஏங்குகிறீர்கள்; ஆகி விடுமோ என நான் இப்படி ஒரு பரிந்துரையை முனவைக்கிறேன். :-D நான் எந்தப் பொருளில் சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

      நீக்கு
  8. சகோ அழகான விரிவான அலசல். முதலில் பாராட்டுகள்! உங்கள் இந்த அலசலை எல்லாம் புறம் தள்ளும் வகையில் முடிவு! வேதனைதான்.

    எனது முதல் விருப்பத்தைச் சொல்லிவிடுகின்றேன். நாம் பேசும் போது சொல்லுவதுதான். தமிழகத்தை ஆளும் வகையில் ஒரு நல்ல தலைவர் இல்லை இப்போது. எனக்கு வாக்களிக்கவே விருப்பம் இல்லைதான். அதனால் நோட்டாதான் முதலில் எனது விருப்பமாக இருந்தது. ஒரு வேளை நோட்டா ஓட்டு சதவிகிதத்தைவிட அதிகாமாகிவிட்டால் தேர்தல் புறக்கணிக்கப்பட்டு கொஞ்ச நாளேனும் ஆளுனரின் ஆட்சியில் தமிழ்நாடு இயங்குமோ என்று. ஆனால் நோட்டா வலுவற்றது என்று தெரிந்ததும், எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

    பார்த்தீர்களா 5 இலட்சத்திற்கும் மேல் நோட்டா வாக்குகள் பதிவாகியிருப்பதை? அப்படி என்றால் பெரும்பான்மை மக்களுக்கு எந்தக் கட்சியையும்/தலைவரையும் (இங்கு தலைவர்கள் இருந்தாலும் கூட்டணிகள் ஏமாற்றம் தந்ததால்) பிடிக்கவில்லை என்று தெரிகின்றது அல்லவா.
    மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது.

    அடுத்த தேர்தலிலாவது ஒன்று ஒரு நல்ல தலைவரைக் கொண்ட கட்சி வர வேண்டும் மாற்றம் ஏற்பட இல்லை என்றால் நோட்டா வலுவாக்கப்பட வேண்டும். நோட்டா பற்றிய எனது எண்ணங்களைப் பதிவில் எழுதுகின்றேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. //தமிழகத்தை ஆளும் வகையில் ஒரு நல்ல தலைவர் இல்லை இப்போது// - இந்தக் கருத்தை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன் சகோ! உங்களைப் போன்ற முன்னணிப் பதிவர்கள், முன்னணிக் கீச்சர்கள், முன்னணி முகநூலாளர்கள் எல்லோருமே இப்படி எழுதப் போய்த்தான் இந்தத் தேர்தலில் மாற்று அரசியல் முயற்சி இப்படி ஒரு தோல்வியை அடைந்திருக்கிறது.

    என்னைப் பொறுத்த வரை இன்றைய தமிழ்நாட்டுக்குத் தேவை துடிப்புள்ள உணர்வுமிக்க தொலைநோக்குப் பார்வையுடைய அறிவுக்கூர்மையுள்ள ஒரு தலைவர்தான். சீமான் அப்படி எல்லா வகையிலும் சரியானவர் என நான் பார்க்கிறேன். ஆறு முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் அவர் எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டதால், வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்கிற ஒரே காரணத்தால் அவரைத் தவிர்த்து, அவரைப் போலவே தமிழ் மக்களுக்காகவும் இனத்துக்காகவும் போராடும் அனைவரும் ஒருங்கிணைந்த கூட்டணியாக விளங்கிய மக்கள் நலக் கூட்டணிக்கு நான் வாக்களிக்கச் சொன்னேன். ஆனால், உங்களைப் போன்றவர்கள் யாருமே சரியில்லை, எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம் எனத் திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லிச் சொல்லியே நடுநிலையாளர்களின் வாக்குகள் அனைத்தும் பதிவாகாமல் போகும்படியும், நோட்டாவுக்கு விழும்படியும், பல முனைகளுக்குச் சிதறும்படியும் செய்து மாற்று அரசியலைத் தோற்ற அரசியலாக ஆக்கி விட்டார்கள். மக்களுக்காகப் போராடுபவர்கள், மக்களுக்காக அடி உதை வாங்குபவர்கள், இனத்துக்காகச் சொத்துபத்துக்களை இழந்தவர்கள், காலமெல்லாம் வறுமையில் வாடியவர்கள் ஆகியோரெல்லாம் உங்கள் கண்களுக்கு நல்லவர்களாகவோ வல்லவர்களாகவோ தெரியவில்லை என்றால் இதற்கென வானத்திலிருந்து ஒருவன் தனியாக இறங்கி வருவானா? எனில், அந்த அதிசயம் நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டே இருங்கள்! ஆனால், குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அப்படி ஓர் அதிசயம் கடைசி வரை நிகழப் போவதில்லை. அரை நூற்றாண்டுக்கு மேலாக அரசியலில் இருந்தும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பவர்களை அடிப்படை முகாந்திரம் கூட இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்துத் தூக்கியெறிந்து விட்ட இந்தச் சமூகம் இனி உருப்படும் எனும் நம்பிக்கையும் எனக்கில்லை.

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்