.

செவ்வாய், டிசம்பர் 15, 2015

இயற்கைப் பேரழிவும் வரலாற்றுப் பேரிழிவும்



Humanity blossomed by floods

ருப்பதிலேயே மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய இயற்கைச் சீற்றம் மழை! காரணம் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போலத் திடீரெனத் தாக்கக்கூடியது இல்லை அது. எப்பொழுது பெய்யும், எப்படிப் பெய்யும் என எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு வெகு பொறுமையாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தப்பலாம். ஆனால், அதைக் கூட ஒழுங்காகக் கையாளத் தெரியாத அரசால் இலட்சக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்தனர் கடந்த வார வெள்ளத்தின்பொழுது!

போனது போகட்டும், அல்லல்பட்டு நிற்கும் மக்களைக் காப்பாற்றவாவது செய்தார்களா
என்றால், அதுவும் இல்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் கொண்டு செல்லும் நிவாரணப் பொருட்களையும் பிடுங்கி அதில் முதலமைச்சரின் படத்தை ஒட்டியது, ஆளுங்கட்சிப் புள்ளிகள் வந்த பின் அவர்கள் கைகளால்தாம் நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என்று அடாவடி செய்தது என ஆளுங்கட்சியினர் நிகழ்த்திய அட்டூழியங்கள், இதுவரை அரசியல் வரலாற்றிலேயே இல்லாத பேரிழிவு!

நிவாரண நிதி என்னும் பெயரில் பணத்தாலடித்து இவற்றையெல்லாம் மறக்கச் செய்து விடலாம் என ஜெயலலிதா நினைத்தால், இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் மக்கள் மனதைப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள். மக்கள் ஒன்றும் சோற்றாலடித்த பிண்டங்களல்லர்! ஒவ்வொரு வீட்டுக்கும் இலட்சக்கணக்கான ரூபாயை அள்ளிக் கொடுத்தாலும் சரி, ஆளுங்கட்சியினரின் இப்பேர்ப்பட்ட அருவெறுப்பான ஓர் அரசியல் வெறியை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்!

அ.தி.மு.க மட்டுமில்லை, தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் கூடத் தங்கள் தலைவர்களின் படம் பொறித்த பைகளிலேயே நிவாரணப் பொருட்களை வழங்கத் துளியும் கூசவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்ற எங்கள் பகுதி ஊர்தி ஒன்றில் பா.ஜ.க கொடிகள் இருந்ததை நானே பார்த்தேன். உயிர் போகும் தறுவாயில் துடித்துக் கொண்டிருப்பவனுக்குக் கை கொடுக்கும்பொழுதும் அதில் விளம்பரம் தேடும் இவர்களின் ஈனத்தனம் இன்னும் ஒரு தலைமுறைக் காலத்துக்காவது தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்!

சரி, மாநில அரசுதான் வந்த வெள்ளத்திலேயே தமிழ்நாட்டு மக்களைக் கைகழுவி விட்டது; நடுவணரசாவது காப்பாற்றுமா என்று மக்கள் வானம் பார்த்து நிற்க, நடுவணரசிலிருந்து கப்பல் கப்பலாக உணவுப் பொருட்களும் இன்ன பிற நிவாரணப் பொருட்களும் வந்ததாக எல்லா ஊடகங்களும் புகழ் பாடின. ஆனால், அவையெல்லாம் முறையாக மக்களுக்குச் சென்று சேர்ந்தனவா எனத் தெரியவில்லை. கப்பல்கள் வந்து இறங்கிய நாள் தொட்டு இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் இன்று வரை (டிசம்பர் 10) நாள்தோறும் மக்கள் உணவு இல்லை, குடிநீர் இல்லை, மாற்று உடை இல்லை எனக் கதறியபடியே இருக்கிறார்கள். இவையெல்லாம் கிடைக்கப் பெற்றவர்களோ, தங்களுக்குக் கிடைத்த உதவிகள் தன்னார்வலர்களால் கொடுக்கப்பட்டதாகவே கூறுகிறார்கள். சிலரோ, பலரோ இல்லை, நிவாரணப் பொருட்கள் கிடைக்கப்பெற்ற எல்லோருமே அப்படித்தான் கூறுகிறார்கள். அப்படியானால், வந்து சேர்ந்த அத்தனை கப்பல் கப்பலான பொருட்கள் எங்கே? அதைக் கேள்வி கேட்கும் நிலையில் மக்கள் இல்லை. கேள்வி கேட்கும் பெரும்புள்ளிகளும் மறுநாளே “அப்படி நான் கேட்கவேயில்லை. என் நண்பனிடம் புலம்பினேன், அவ்வளவுதான்” எனப் பின்வாங்குகிறார்கள்! என்னதான் நடக்கிறது நாட்டில்? தெரியவில்லை.

இப்படி மாநில அரசு, நடுவணரசு என இரண்டுமே கடமை தவறியும் இப்பேர்ப்பட்ட பெருந்துயருக்குப் பின் மக்கள் பெரும்பாலும் உயிரோடு இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நம்மைச் சுற்றியிருக்கும் நல்லுள்ளங்கள்! 

Fishermen - The Saviours 

பேரிடர் மீட்புக் குழுவினர் மழை அங்கி மாட்டும் முன்பே கொட்டும் மழையில் படகில் விரைந்து மிகப் பெரும்பாலோரைக் காப்பாற்றியவர்கள் நம் மீனவத் தோழர்கள். எத்தனை கடற்கோள்கள் (tsunamis) வந்தாலும் ஈவிரக்கமின்றி நாம் கடலோரத்திலேயே ஒதுக்கி வைத்திருக்கும் அந்த சமூகத்தினர் மட்டும் இல்லாவிட்டால் பலி எண்ணிக்கை இன்னும் வெகுவாகக் கூடியிருக்கும்.

‘ஆரியர்கள்’, ‘தமிழினப் பகைவர்கள்’ என ஆண்டாண்டுக் காலமாகத் தூற்றப்பட்டு வந்த பார்ப்பனர்களும் அடுக்குமாடிக் குடியிருப்பினரும்தாம் தெருக்களில் முதலில் அடுப்பு மூட்டி மக்களுக்குச் சமைத்துத் தரத் தொடங்கியதாகக் கூறுகிறார் நடந்த கொடுமைகள் பலவற்றையும் கண்ணால் பார்த்த இதழாளர் சமஸ் அவர்கள்.

அதே போல், குல்லா அணிந்த இசுலாமியர்கள் அன்போடு வழங்கும் உணவைப் பூணூல் அணிந்த பார்ப்பனர்கள் புன்முறுவலோடு வாங்கி உண்ணும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியையும் கீச்சு (tweet) ஒன்றில் தரிசிக்க முடிந்தது. தங்களுக்கு வாடகைக்கு ஒரு வீடு தரக் கூடத் தயங்கும் இந்த சமூகத்தில், சமய - சாதி வேறுபாடு பாராமல் அனைவருக்காகவும் இந்தப் பெருமழையில் தங்கள் பள்ளிவாசல்களைத் திறந்து விட்ட இசுலாமிய உடன்பிறப்புக்களின் பெருந்தன்மை வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று!
The Real face of Netizens

‘வேலை வெட்டி இல்லாதவர்கள்’, ‘வாய்ச்சொல் வீரர்கள்’ எனப் பலவாறும் இகழப்பட்ட இணையக் குடிமக்கள் (netizens) இந்த நேரத்தில் செய்த சேவை பலரையும் வாயடைக்கச் செய்துள்ளது. எந்தெந்தப் பகுதிகளில் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, அந்தப் பகுதிகளின் உடனடித் தேவை என்ன எனப் பலவற்றையும் சமூக வலைத்தளங்கள் வழியாகவே இவர்கள் திட்டமிட்டு ஒருங்கிணைத்தது உணவுப் பொட்டலம் முதல் உயிர் காக்கும் உதவி வரை பலவற்றையும் ஏராளமானோருக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. இதை நான் சொல்லவில்லை, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாகத் தமிழ்ச் சேவை புரிந்து வரும் நடுநிலை இதழான ஆனந்த விகடன் (16.12.2015) தன் தலையங்கத்திலேயே குறிப்பிட்டிருக்கும் உண்மை இது.

வெறும் நிழல் நாயகர்கள் எனக் கருதப்படும் நடிக-நடிகையரும் இந்தச் சீரழிவின்பொழுது உண்மை நாயகர்களாய் மக்களுக்காகத் தெருவில் இறங்கிச் சேவை புரிந்ததையும் காண முடிந்தது. 

இப்படி, உயிருள்ள மனிதர்கள் மட்டுமில்லை, உயிரற்ற நம் பழங்கால நண்பர் ஒருவரும் இந்தப் பேரிடர் நேரத்தில் பேருதவியாக இருந்தார்! நாளிதழ், தொலைக்காட்சி, இணையம் என எல்லா ஊடகத் தொடர்புகளும் அறுபட்டு, சக மனிதரைக் கூடத் தொடர்பு கொள்ள இயலாமல் தொலைபேசி, கைப்பேசி எனத் தொலைத்தொடர்புகளும் செயலிழந்து, வெளியுலகில் என்னதான் நடக்கிறது என்று தெரியாமல் கோடிக்கணக்கான மக்கள் திணறித் திக்குமுக்காடிய வேளையில் கைகொடுத்த ஒரே ஊடகம் வானொலி! எப்பேர்ப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் வெறும் காற்றலையில் பரவும் எளிய தொழில்நுட்பத்தைக் கொண்ட தன்னை விஞ்ச முடியாது என மிடுக்காகத் தன் இன்றியமையாமையை உணர்த்திய வானொலிதான் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து தம் ஆருயிர் உறவுகளின் நிலை பற்றிப் பதறிய பலரின் கண்ணீரைத் துடைத்தது.

“நான் இருபதாயிரம் சப்பாத்திகள் செய்து வைத்திருக்கிறேன். யாராவது தன்னார்வலர்கள் வந்து வாங்கிக் கொண்டு சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் கொடுங்கள்”, “நான் டன் கணக்கில் இட்டிலி மாவு வைத்திருக்கிறேன். யாராவது வந்து வாங்கிக் கொள்ளுங்கள்”, “நான் இன்ன இடத்தில் என் கார் நிறைய பிஸ்கட், ரொட்டி, பால் முதலான உணவுப் பொருட்களோடு வந்திருக்கிறேன். தேவைப்படுபவர்கள் எல்லாரும் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அந்த நேரத்தில் வானொலி மூலமும் இன்ன பிற ஊடகங்கள் மூலமும் போட்டி போட்டு வந்து தன்னாலானதை உதவிய உள்ளங்கள்தாம் எத்தனை எத்தனை!

ஆம்! கூவம் நதியின் கசடுகளை மட்டுமல்ல, சாதி-சமய-இன-வர்க்க வேறுபாடுகள் பலவற்றையும் கூட அடித்துக் கழுவித் துடைத்து, மனித மனங்களின் ஈரத்தைத் தடயமாக்கிச் சென்றிருக்கிறது இந்தப் பெருவெள்ளம்!

ஆனால், அதற்காக நாம் மகிழ முடியவில்லை. முதல் முறை இது போல் பெருமழை பெய்தபொழுது நிவாரணப் பொருட்களை மக்கள் வரிசையில் வந்து வாங்கினார்கள். சில இடங்களில் முண்டியடித்து வாங்கினார்கள். இந்த முறை, அரக்கப் பரக்க வந்து பறித்துச் செல்வதைக் காண முடிந்தது.

கடலூருக்குச் செல்லும் வழியில் உள்ள ஓர் ஊரில், சாலைகளில் மக்கள் நின்று கொண்டு யாராவது ஏதாவது தர மாட்டார்களா என்று வருகிற போகிற வண்டிகளையெல்லாம் பார்த்தபடி நின்ற காட்சி மனதைப் பிசைந்தது.

சுருக்கமாகச் சொன்னால், வந்தோரையெல்லாம் வாழ வைத்த தமிழ்நாடு இன்று வருவோர் போவோரிடமெல்லாம் கையேந்தி நிற்கிறது!

நடுவணரசு, மாநில அரசு இரண்டுமே இவ்வளவு பெரிய அழிவுக்குப் பிறகும் நத்தை வேகத்தில் மெத்தனமாகவே செயல்பட்டு வருகின்றன. எனவே நண்பர்களே! நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! நம் சொந்த உடன்பிறப்புக்களை நாம்தான் கைதூக்கி விட வேண்டும்! தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத இந்தப் பேரழிவின்பொழுது கூட நாம் இந்த சமூகத்துக்காக உதவ முன்வராவிட்டால் அதை விடப் பெரிய குற்றத்தை நாம் வாழ்நாளில் செய்து விட முடியாது.

இயற்கைப் பேரிடர் இடியாக இறங்கிய அந்த நொடியிலிருந்து இதோ, இதை நான் பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை நம்மைச் சுற்றியிருக்கும் நல்ல மனிதர்கள் ஏதோ ஒரு விதத்தில் தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஊர்திகளில் உதவிப் பொருட்கள் சாரி சாரியாகச் சென்று கொண்டே இருக்கின்றன. லர் பணமாக, பலர் பொருளாக, பலர் உழைப்பாக ஏதோ ஒரு வகையில் தங்கள் கடமையைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தன்னார்வலர்களில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களிடம் நீங்கள் பணமாகவோ, பொருளாகவோ உங்களால் முடிந்த சிறு பங்கை வழங்கலாம். அப்படி உதவ முடியாத நிலையில் இருப்போர் அந்தத் தன்னார்வலர்களோடு தாங்களும் கிளம்பி வந்து களத்தில் தங்கள் உழைப்பை நல்கலாம். அதற்காக, பணமோ பொருளோ கொடுத்து விட்டவர்கள் களப்பணிக்கு வர வேண்டியதில்லை எனப் பொருள் கொள்ள வேண்டா! பணத்தையும் பொருளையும் விடக் களப்பணிக்குத்தான் கூடுதல் ஆட்கள் தேவை!

தன்னார்வலர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு நான் பரிந்துரைக்கக் கூடியது ‘மே பதினேழு இயக்கம்’! 
 
ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது இன-மான-மனிதநேய உணர்வெழுச்சியால் வெடித்துக் கிளம்பிய பல உண்மைத் தமிழ் இயக்கங்களில் இதுவும் ஒன்று. ஆனால், பத்தோடு பதினொன்றாகச் சொல்லி விட முடியாதபடி, தமிழர் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களமாடி வருகிற அமைப்பு. ஒவ்வொரு பிரச்சினையின்பொழுதும் அந்தந்தக் கால அரசியல் - சமூகச் சூழ்நிலைகளுக்கேற்பவும், அதே நேரம் தொலைநோக்கோடும் சிந்தித்து மிகச் சரியான முடிவுகளை எடுக்கும் இயக்கம். வெறும் போராட்டங்களோடு நில்லாமல் ஐ.நா மன்றம் வரை சென்று தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வந்த சிறப்பும் இவர்களுக்கு உண்டு. 
 
இப்பேர்ப்பட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் தற்பொழுது மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். நீண்ட கால அடிப்படையில் உதவும் நோக்கோடு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பெங்களூரு முதலான வேறு சில இடங்களிலும் கூட மையங்கள் அமைத்துச் சீரிய திட்டமிடலுடன் இவர்கள் மீட்புப் பணியை மேற்கொண்டுள்ள விதம் அருமை! இவர்களோடு நாமும் கைகோத்து வரலாறு காணாத இந்தப் பேரழிவிலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழக் கரம் கொடுப்போம்! விவரங்கள் கீழே உள்ள படத்தில். 

May 17 in Tamilnadu flood relief

அனைவரும் இணைவோம்!

மீண்டெழுந்து உயர்வோம்! 

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி திண்ணை, மனிதன், கோமளவிலாஸ் மசால்தோச, மே பதினேழு இயக்கம்.

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்குவதன் மூலம் உதவும் உள்ளங்களின் எண்ணிக்கை உயரக் கை கொடுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.

    இந்தப் பதிவின் “வந்தோரையெல்லாம் வாழ வைத்த தமிழ்நாடு இன்று வருவோர் போவோரிடமெல்லாம் கையேந்தி நிற்கிறது' என்பது எத்துணை துயரம் மிகுந்த உண்மையான வரிகள்.

    இதற்குக் காரணமான தனிமனிதச் சுயநலம், அருவறுப்பான அரசியல் இதிலிருந்தெல்லாம் நம்நாடும் இனமும் என்று விடுபடும்?

    வெள்ளம் அடித்துக் கொண்டு போனவை ஒருபுறம் இருக்க ,எல்லை தகர்த்து அது அடையாளம் காட்டிய எழுச்சியும், ஒற்றுமையும், மனித நேயமும், அநீதிக்கெதிரான கண்டனங்களும் நம் நாட்டில் அப்படியே என்றும் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆதங்கப்படவே தோன்றுகிறது.
    நுட்பமாக அவதானித்து எழுதப்பட்ட கட்டுரை.

    “நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல்
    நரர்க ளென்று கருதார்
    ஆட்டு மந்தை யாமென் -றுலகை ,
    அரச ரெண்ணி விட்டார்,
    காட்டு முண்மை நூல்கள் - பலதாங்
    காட்டி னார்க ளேனும்
    நாட்டு ராஜ நீதி - மனிதர்
    நன்கு செய்ய வில்லை!

    ஓரஞ் செய்தி டாமே தருமத்
    துறுதி கொன்றி டாமே.
    சோரஞ் செய்தி டாமே - பிறறைத்
    துயரில் வீழ்த் திடாமே,
    ஊரை யாளு முறைமை- உலகில்
    ஓர் புறத்து மில்லை “

    ---------------------------------------------------பாரதி.

    ஆனாலும் இங்கிருப்பதுபோல் வேறெங்கும் இல்லை என்று உறுதியாகக் கூறிவிட முடியும்.
    த ம

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! முதல் ஆளாக வந்து கருத்துரைத்தமைக்கு நன்றி! தங்கள் பாராட்டுக்கும் ஆதங்கம் நிறைந்த கருத்துக்கும் மிக்க நன்றி! இந்நேரத்துக்கேற்ற அந்தப் பாடல் பகிர்வு பலருக்கும் உணர்வு தரும்!

      நீக்கு
  2. இந்த மழை வெள்ளம் கற்பித்த பாடங்கள் பல. சாதி, மதம், இனம், மொழி எதுவும் தேவை இல்லை மனிதத்தின் முன் என்ற மிகப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையல்ல. தமிழ்நாடு வந்தாரை வாழவைக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்டது. துன்பத்திலும் கைகொடுத்தோம் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும். இன்று இராணுவம் பாராட்டிப் பேசுகின்றது இது போன்று எந்தப் பேரிடரின் போதும் எந்த மாநிலத்திலும் நாங்கள் கண்டதில்லை. பாதிக்கப்பட்டவர்களை விட உதவும் கரங்கள் அதிகமாக இருந்தன. என்று.

    மலையாள பண்பலை கூட கன்னியாகுமரியிலிருந்து, தலைநகரம் வரை தமிழ்நாடே திரண்டுள்ளது உதவிக்கரம் நீட்டி என்பதைச் சொல்லி வியந்திருக்கின்றது. இப்படி உலகத்திற்கே தமிழகத்தின் மனிதநேயம் பளிச்சிட்டிருக்கின்றது ஆட்சியாளர்களை விடுங்கள் அவர்களை நாம் திருத்தவும் முடியாது அவர்கள் திருந்தப் போவதுமில்லை. ஆனால் மக்கள்?!!! மனிதத்தை உயர்த்தித் தமிழகத்தையே தலைநிமிர்ந்து பீடு நடை போட வைத்து விட்டார்கள். பல காட்சிகள் மனதை நெகிழ்த்திவிட்டன..நம் வலையுலகினரும் களத்தில் இறங்கியது இன்னும் பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது. அவர்களது பணி இன்னும் தொடர்கின்றது...அனைத்துப் பெருமைகளும் இந்த மழைக்கே!! மனிதம் இன்னும் உயிரோடு இருப்பது மட்டுமல்ல இன்னும் வளரும் எனும் நம்பிக்கை இருக்கின்றது.

    நல்ல பதிவு சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உணர்வார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி துளசி ஐயா, கீதா அம்மணி!

      படையினரும் மலையாளப் பண்பலையும் நம் மக்களைப் பாராட்டியது எனக்குத் தெரியாது. மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது! தெரிவித்தமைக்கு நன்றி உங்களுக்கு!

      ஆம்! ஆட்சியாளர்களைத் திருத்த முடியாதுதான். ஆனால், மாற்ற முடியும் இல்லையா? செய்து காட்டுவோம்!

      நீக்கு
  3. கொடுமையான நிகழ்வுகளை தோலுரிக்கும் பதிவு....இன்னும் எழுதுங்கள்..உங்கள் எழுத்தின் வீச்சு அபாரமானது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் தோழரே! உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  4. வணக்கம் நண்பரே...
    வந்தோரையெல்லாம் வாழ வைத்த தமிழ்நாடு இன்று வருவோர் போவோரிடமெல்லாம் கையேந்தி நிற்கிறது!
    என்னை மிகவும் வேதனைப்பட வைத்த வரிகள் என்ன செய்வது இனியெனும் மக்கள் அரசியல்வாதிகளை மோடி உள்பட புரிந்து வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  5. நன்றாகச் சொன்னீர்கள் நண்பரே! உங்கள் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்