.

ஞாயிறு, ஜூலை 12, 2015

தமிழினப்படுகொலைக்கு நீதி கிடைப்பது இப்பொழுது நம் கையில்! - தமிழர்களே! கைவிட்டு விடாதீர்கள்!




நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!

உங்கள் அனைவருக்கும் நேச வணக்கம்!

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை; இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து நம் யாருக்கும் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உலகத்தின் அத்தனை கோடி கண்களுக்கும் முன்னதாகத்தான் அந்தச் சகிக்க முடியாத கொடுமை அரங்கேறியது. ஆனால், அதை இனப்படுகொலையாக இல்லாவிட்டாலும், குறைந்தது போர்க் குற்றமாக ஏற்கக் கூட இன்று வரை எந்த நாடும் முன்வரவில்லை. சரி, என்னதான் நடந்தது என விசாரிக்கவாவது செய்யுங்கள் என்றால் அதற்கும் இது வரை எந்த ஒரு முயற்சியும் முன்னெடுக்கப்படாமலே இதோ ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டன.

நடந்தது இனப்படுகொலையோ, போர்க் குற்றமோ, போரோ, எவ்வளவுதான் குறைத்துச் சொல்வதாக இருந்தாலும் அங்கே ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதற்கொரு நீதி விசாரணை வேண்டும்! சிங்கம், புலி, குரங்கு, கோட்டான், மயில், மந்தி என அஃறிணை உயிரினங்கள் கொல்லப்பட்டால் கூட அது குறித்து முறையாக விசாரித்துக் குற்றவாளியைத் தண்டிக்கும் இந்த நாகரிக சமூகத்தில் ஒன்றரை இலட்சம் மனித உயிர்கள் கொல்லப்பட்டிருப்பது பற்றி விசாரிக்காமல் இருப்பதை விட அட்டூழியம் வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, நடந்த கொடுமைக்குப் பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாகவே தமிழர்களாகிய நாம் பல வகைகளிலும் போராடி வருகிறோம்.

இந்நிலையில்தான், இது பற்றிப் ‘பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை’ கோரி நாடு கடந்த தமிழீழ அரசு உலகளாவிய கையொப்ப இயக்கம் (signature campaign) ஒன்றைத் தொடங்கியுள்ளது. குறைந்தது பத்து இலட்சம் பேரிடம் கையொப்பம் வாங்கும் இந்த முயற்சி தொடங்கி வாரக்கணக்கில் ஆகியும் இது வரை ஏழு இலட்சம் கையொப்பங்கள் மட்டும்தான் பதிவாகியுள்ளன!

செந்தமிழ்ச் சொந்தங்களே! சிந்தித்துப் பாருங்கள்! உலகெங்கும் பத்துக் கோடிப் பேரைக் கொண்ட இனம் என மார் தட்டும் நாம், இணையத்தில் இரண்டு கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள் எனக் கூறப்படும் நிலையில், வெறும் பத்து இலட்சம் கையொப்பங்களைத் திரட்ட முடியாவிட்டால் - அதுவும் இனத்தின் வரலாறு காணாத பேரழிப்புக்கு நீதி கோரும் இந்த இன்றியமையாத கோரிக்கைக்காகவே திரட்ட முடியாவிட்டால் - அதை விட மானக்கேடு நமக்கு வேறு என்ன இருக்க முடியும்? இதற்காகக் கூட ஒன்று சேராவிட்டால் நாம் வேறு எதற்காக ஒன்றுபடப் போகிறோம்?

நண்பர்களே! இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில் (வரும் சூலை 15 கையொப்பமிடக் கடைசி நாள்) இந்தக் குறுகிய காலக்கட்டத்துக்குள் நமக்குத் தேவைப்படுவதோ மேலும் மூன்று இலட்சம் கையொப்பங்கள்! ஆனால், காலம் இன்னும் கடந்து விடவில்லை. நாம் நினைத்தால் இன்றைக்கு இருக்கும் சமூக வலைத்தள வசதிக்கு இந்தச் செய்தியை இரண்டே நாளில் உலகம் முழுக்கப் பரப்ப முடியும்! 

தோழர்களே! கை கொடுங்கள்! நீங்கள் செய்ய வேண்டியவையெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று – கீழ்க்காணும் சுட்டியைச் (link) சொடுக்கி நீங்களும் உங்கள் கையொப்பத்தை உடனடியாகப் பதிவு செய்ய முன் வாருங்கள்!

சொடுக்குக: http://www.tgte-icc.org/

இரண்டாவது, இந்தச் செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி அவர்களையும் கையொப்பமிடச் செய்யுங்கள்!

தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும், இந்த முயற்சி இன்னும் பெரிதாக வெற்றியடையாததைப் பார்த்தால், இது பற்றி நம் மக்களுக்கு ஏதேனும் ஐயம் இருக்குமோ எனத் தோன்றுகிறது. எனவே, இது பற்றிச் சில விளக்கங்களை இங்கே அளிக்க விரும்புகிறேன்!

இப்படிப்பட்ட முயற்சிகள் பலனளிக்குமா?

ஏற்கெனவே இது போன்ற சில கையொப்ப இயக்கங்கள் நடத்தப்பட்டதும், பின்னர் அவை என்ன ஆயின என்றே தெரியாமல் போனதும் உண்மைதான். ஆனால், இந்த முறை, இந்தக் கையொப்ப இயக்கத்தை நடத்துவது நாடு கடந்த தமிழீழ அரசு! ஈழத் தமிழர்களுக்காக வெளிநாடு வாழ் தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு அமைச்சரவை, பிரதமர் முதலியோருடன் ஓர் அரசு போலவே கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் ஓர் இயக்கம். இதற்கான உறுப்பினர்கள் கூடப் பன்னாட்டு அளவில் தேர்தல்கள் நடத்தி முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களே ஈழத் தமிழர்கள்தாம் என்பதால் ஐ.நா-விடம் நேரிடையாகக் கோரிக்கை விடுப்பது முதலான முயற்சிகளை முன்னெடுக்க இவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அமைப்பினரே நேரடியாக இந்தக் கையொப்பங்களை ஐ.நா-வில் தாக்கல் செய்ய இருக்கின்றனர். எனவே, “அட, எப்போ பார்த்தாலும் இவங்களுக்கு இதே வேலையாப் போச்சுப்பா” எனச் சலித்துக் கொள்ளாமல், இந்த முறை இந்தக் கையொப்ப இயக்கத்தில் நீங்கள் தாராளமாக நம்பிக்கையுடன் கையொப்பமிடலாம் தோழர்களே!

இதில் கையொப்பமிடுவதால் ஏதேனும் சட்டச் சிக்கலோ ஆபத்தோ வருமா?

இப்படி ஓர் ஐயமும் நம் மக்களுக்கு இருக்கலாம். ஈழப் பிரச்சினை மிகவும் நுட்பமான சட்டச் சிக்கல்கள் நிறைந்தது என்பதால், ஈழத் தமிழர்கள் மீதும் அவர்களின் கோரிக்கைகள் மீதும் எவ்வளவுதான் பரிவும் ஆதரவும் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் பொதுவெளியில் அவற்றைக் காட்டிக் கொள்ளப் பெரும்பாலோர் தயங்குகின்றனர். ஆனால், இந்தக் கையொப்ப இயக்கத்தைப் பொறுத்த வரை, இது வெளிப்படையாக, உலகளாவிய அளவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, பிரான்சு, ஆத்திரேலியா, கனடா, மலேசியா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலிருந்தும் இது வரை இலட்சக்கணக்கானோர் கையொப்பமிட்டு விட்டார்கள். ஆனால், எந்த நாட்டு அரசிடமிருந்தும் இது வரை இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இதை நடத்தும் இயக்கம் எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட இயக்கமும் கிடையாது. எனவே, இதில் கையொப்பமிடுவதில் எந்த விதமான ஆபத்தும் இல்லை!

கையொப்பம் இடுவது எப்படி?

மிகவும் எளிது!

1. முதலில், மேற்கண்ட சுட்டியைச் (http://www.tgte-icc.org) சொடுக்குங்கள். இணையத்தளப் பக்கம் ஒன்று வரும்.

2. அந்தப் பக்கத்தில் ஒரு படிவம் இருக்கும். அதில் முதல் கட்டத்தில் உங்கள் பெயரை நிரப்புங்கள்.

3. அடுத்த கட்டத்தில், உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருந்தால் கொடுங்கள்; இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள்.

4. அடுத்த கட்டத்தை அழுத்தினால் ஒரு பட்டியல் திறக்கும். அதில் உங்கள் நாட்டைத் தேர்வு செய்யுங்கள்.

5. அதற்கு அடுத்து ஓர் எண் இருக்கும். அதை அடுத்து உள்ள கட்டத்தில் அந்த எண்ணை நிரப்புங்கள்.

6. இப்பொழுது Submit பொத்தானை அழுத்துங்கள்.

அவ்வளவுதான், தமிழ் இனத்துக்கான வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய பத்து இலட்சம் பேரில் நீங்களும் ஒருவராக ஆகி விட்டீர்கள்!

கையொப்ப இயக்கம் பற்றி நாடு கடந்த தமிழீழ அரசு அமைச்சரின் நேர்காணல்

தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காகத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட நம் அண்ணன் – தம்பிகள் சிந்திய குருதிக்கு...

தமிழச்சியாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக நட்ட நடுத்தெருவில் கூட்டம் கூட்டமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நம் அக்கா – தங்கைகள் வடித்த கண்ணீருக்கு...

தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறக்க இருந்த ஒரே காரணத்துக்காக வயிற்றிலேயே அழிக்கப்பட்ட நம் கருக் குழந்தைகளின் உலகறியாக் கதறலுக்கு...

நீதி வேண்டும்!...

நியாயம் வேண்டும்!...

நீங்கள் மனம் வைத்தால் அது கிடைக்கும்!

மனம் வைப்பீர்களா?... 

(நான் அகரமுதல தனித்தமிழ் இதழில் எழுதியது சில மாற்றங்களுடன்.)

❀ ❀ ❀ ❀ ❀ 

படம், விழியம்: நன்றி நாடு கடந்த தமிழீழ அரசு

அருள் கூர்ந்து இந்தப் பதிவைப் பரப்பி இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி வெற்றியடைய உதவுங்கள்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

18 கருத்துகள்:

  1. மனிதன் என்பவன் அதுவும் தமிழன் என்பவன் மிருகமாயிவிட்டான் என்பதையே காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ஐயா? இதில் விரைந்து கையொப்பங்கள் இடப்படவில்லை என்பதாலா? அதற்கு மக்களைக் குறை சொல்லிப் பயன் இல்லை ஐயா. இந்தக் கையொப்பப் போராட்டத்தைத் தொடங்கிய நாடு கடந்த தமிழீழ அரசினரும் ஒரு தவற்றைச் செய்து விட்டார்கள். என்னதான், இணையம் என்பது வெகு விரைவாகப் பரவக்கூடிய ஊடகம் என்றாலும், அதற்கும் கொஞ்சம் நேரம் (அவகாசம்) என்பது வேண்டும். பத்து இலட்சம் கையொப்பங்கள் என்றால் குறைந்தது மூன்று மாதமாவது நேரம் தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி இறுதிக்கட்டத்தில் தீயாய்ப் பற்றும் (viral). ஆனால், சூன் மாதத்தில்தான் அவர்கள் இந்த முயற்சியையே தொடங்கியதாய்த் தெரிகிறது. அதற்குள் சூலை மாதப் பாதியிலேயே பத்து இலட்சம் கையொப்பங்கள் வேண்டுமென்றால் எப்படி? மேலும், முதன்மை ஊடகங்களும் (mainstream medias) இப்படிப்பட்ட செய்திகளைப் பெரும்பாலும் வெளியிடுவதே இல்லை. அப்படியிருக்க மக்களிடையே இஃது எப்படிப் போய்ச் சேரும்?

      இருப்பினும், கருத்துரைத்தமைக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  2. ஐயா வணக்கம்.

    இது பற்றி நீங்கள் குறிப்பிடும் வரை எனக்குத் தெரியாது.

    உங்கள் கட்டுரையைப் படித்தபின் இதோ வாக்களித்துவிட்டேன்.



    இதைச் செய்யாவிட்டால், தமிழன் என்றல்ல மனிதனாய்க் கூட என்னை நான் கருத முடியாமற் போகும்.


    தங்களின் பணி அவசரமும் அவசியமும் உடையது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது பற்றி நீங்கள் குறிப்பிடும் வரை எனக்குத் தெரியாது// - இதைப் பற்றித்தான் மேலே திரு.வலிபோக்கன் ஐயா அவர்களிடமும் குறிப்பிட்டிருக்கிறேன்.

      பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. தற்போது 954205 கையொப்பங்கள் பெறப்பட்டதாக வருகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நான் முன்னரே கையொப்பம் இட்டுவிட்டேன்.

    அமெரிக்காவும் மேற்கத்திநாடுகளும் இந்தியாவும் சேர்ந்து நடத்திய இனப்படுகொலைக்கு ஐநா தீர்வு தரும் என்பது நம்பிக்கை அளிக்கவில்லை.
    http://kalaiy.blogspot.in/2015/07/imf.html?m=1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அமெரிக்காவும் மேற்கத்திநாடுகளும் இந்தியாவும் சேர்ந்து நடத்திய இனப்படுகொலைக்கு ஐநா தீர்வு தரும் என்பது நம்பிக்கை அளிக்கவில்லை// - அப்படியில்லை நண்பரே! இந்தியாவைப் பற்றிய உங்கள் கருத்து சரிதான்; ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆத்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவை நடந்த இனப்படுகொலைக்கு உதவியிருந்தாலும், அதே நேரம், தொடக்கத்திலிருந்தே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது போன்ற அவர்களுடைய இந்த இரட்டை நிலைப்பாட்டுக்குக் காரணம், அவர்களுக்கு ஆயுதமும் விற்க வேண்டும்; அதே நேரம், உலகின் அமைதிக் காவலர்கள், மனிதநேயர்கள் என்கிற அவர்களின் போலி முகமூடியும் கிழிந்து விடக்கூடாது என்பதுதான். இன்றைய நிலைமையைப் பொறுத்த வரை, அங்கே விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான நேரடிப் போர் முற்றிலும் ஓய்ந்து விட்டது. பொதுமக்கள் மீதான இனப்படுகொலை மட்டும்தான் ஓசையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு இலங்கைக்கு ஆயுதம் ஏதும் தேவைப்படாது. ஆகவே, இனி அங்கு இந்த நாடுகள் ஆயுதக் கடை விரிக்க முடியாது. எனவே, இப்பொழுதைய நிலைமையில் அவர்களின் உலக அமைதிக் காவலர்கள் எனும் முகமூடியைக் காப்பாற்றிக் கொள்வதி ஒன்றுதான் இந்தப் பிரச்சினையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே விருப்பமாக இருக்க முடியும். எனவே, அந்த முகமூடிக்குப் பாதிப்பு ஏற்படுத்த இப்படிப்பட்ட முயற்சிகளில் நாம் ஈடுபட்டால் கண்டிப்பாக அதற்குப் பலன் இருக்கும்.

      நீக்கு
  5. கையொப்ப விளக்கம் அறியாதவர்களுக்கும் உதவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  6. கருத்துரைத்த பெரியோர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றி! இந்தக் கிழமை கணினியின் மையச் செயலகத்தை (CPU) மாற்றினேன். அது தொடர்பான துரித வேலைகளும், அதில் ஏற்பட்ட சில கோளாறுகளும் காரணமாக உங்கள் கருத்துக்களுக்கு என்னால் உடனுக்குடன் பதிலளிக்க இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. அய்யா...

    கையொப்பம் இட்ட பின்னரே பின்னூட்டமிடுகிறேன்... 1215438வது ஓட்டு !

    உங்களின் இந்த பதிவு இல்லையென்றால் எனக்கும் தெரியாது !

    பாண்டியராஜ் அவர்களின் பின்னூட்டத்துக்கான பதிலில் அமெரிக்க ஐரோப்பிய அரசாங்கங்கள் பற்றிய உங்களின் விளக்கம் மிக சரியானது ! அவர்களின் இரண்டே முன்னுரிமை அவர்கள் நாட்டு மக்களின் நலம் மற்றும் அவர்களின் வியாபாரம் !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது ஐயா! பத்து இலட்சம் வாக்குகளை நாம் திரட்டி விட்டாலும் அதன் பிறகும் வாக்களிப்பது மேலும் அதை வலுப்படுத்துவதாகவே அமையும். அதுவும், இலக்கைத்தான் எட்டிவிட்டார்களே, இனி நாம் வாக்களித்தால் என்ன, அளிக்காவிட்டால் என்ன என நினைக்காமல், இதில் வாக்களிப்பது என் கடமை என்கிற தன்னுணர்வோடு நீங்கள் செயல்பட்டிருப்பது உங்கள் அக்கறையைக் காட்டுகிறது. மகிழ்ச்சி ஐயா! உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
    2. தங்கள் கருத்தை வெளியிடத் தாமதமானதற்காக வருந்துகிறேன் ஐயா! :-(

      நீக்கு
  8. வணக்கம்

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்

    இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

    நன்றி

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்