.

வியாழன், மார்ச் 05, 2015

போராளியைத் தெருவில் நிறுத்திய போராளி! தலைவர்கள் அமைதி! ஏன்? - சில கேள்விகள், சில கோரிக்கைகள்

Poet Thamarai with her son in agitation!
கவிஞர்.தாமரை மகனுடன் போராட்டத்தில்

ண்ணாநிலைப் போராட்டங்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், புகழ் பெற்ற போராளி ஒருவரை நோக்கியே அப்படி ஒரு போராட்டம் எழுந்திருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதன் முறையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தோழர் தியாகு! – தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்! பெருந்தலைவர் காமராசர் காலத்திலிருந்து அரசியலில் இருப்பவர். தீவிரப் பொதுவுடைமையாளர்! நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியதற்காகப் பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்தவர். அதே நேரம், ஈழ ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியை விட்டே வெளியேற்றப்படவர்! ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ எனும் பெயரில் பல தமிழ்வழிப் பள்ளிகளை நடத்தி, தமிழருக்காகப் போராடுவதோடு மட்டுமின்றித் தமிழைக் காக்கவும் பெருமுயற்சியெடுத்து வரும் பெருந்தகையாளர்! மாவீரர்.திலீபன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி உயிர் ஈந்தபொழுது ஈழத்துக்காகக் குரல் கொடுத்தது முதல் முல்லைப் பெரியாறு போன்ற அண்மைக்காலத் தமிழர் பிரச்சினைகளுக்காகக் களமாடுவது வரை இவர் ஈடுபடாத போராட்டங்களே இல்லை! எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இலங்கையில் பொதுநலவாய (commonwealth) மாநாடு’ நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தி ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற பெயரில் இவர் நடத்திய ‘சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்’ பன்னாட்டளவில் அறியப்பெற்ற ஒன்று!

இப்பேர்ப்பட்ட போராளியை நோக்கியே ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார் பெண்மணி ஒருவர். அதுவும், யாரோ தெருவில் போகிற பெண்மணியில்லை; இவர்தம் சொந்த மனைவி! அதுவும், பெற்ற பிள்ளையுடன் இவர் இருக்குமிடமெல்லாம் தேடித் தேடித் தொடர்ந்து சென்று ஏழு நாட்களாகத் தன் போராட்டத்தைக் கடைப்பிடித்து வருகிறார் அந்தப் பெண்மணி. அவர் வேறு யாருமில்லை; உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கறிந்த திரைப் பாடலாசிரியரும், தமிழ்ப் போராளியுமான கவிஞர்.தாமரை அவர்கள்தாம்!

ஈழ இனப்படுகொலையின்பொழுதும் அதன் பின்புமான போராட்டங்களில் கவிஞர்.தாமரை அவர்களின் பங்கு நாம் அறியாததில்லை. தமிழனென்று மீசை முறுக்கிய ஆண் கவிஞர்கள் பலர் வீட்டிலிருந்தபடி ஈழத் தமிழர்களுக்காகத் தங்கள் கண்ணீரால் கவிதை வடித்துக் கொண்டிருந்த அந்த வேளையில், பெண்ணென்று தயங்காமல் போராட்ட மண்ணில் நேரடியாகக் கால் பதித்த வீராங்கனை! “இலங்கைத் திரைப்பட விழாவுக்குப் போக வேண்டா” என்று கமல்காசனையே வலியுறுத்திய துணிச்சல்காரர்! அசைக்க முடியாத மக்கள் செல்வாக்குப் பெற்ற நடிகர்களும் தலைவர்களுமே ஈழத்துக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் மட்டுமே குரல் கொடுப்பதோடு வாயைப் பூட்டிக் கொண்ட அந்த நாளிலே, தமிழினத்தை அழிக்கத் துணை நின்ற இந்திய அரசை நேரடியாகவே சாடிய மறத் தமிழச்சி! ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய அந்தக் கவிதை இந்த உலகப் பந்து உருளும் வரை தமிழினப் பேரழிப்புக்கான சான்றாவணமாய் நிலைத்து நிற்கும்!

அப்பேர்ப்பட்ட பெண்மணி பெற்ற பிள்ளையுடன் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்! ஆனால்,
இன்று வரை இவர் சார்ந்த திரைத்துறையிலிருந்தோ, எழுத்துலகிலிருந்தோ யாரும் வந்து எட்டிக் கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. அட, அவர்கள் இருக்கட்டும்! தமிழ்க் கவிஞரும் தமிழினப் போராளியுமான இவருக்கு ஆறுதல் கூறத் தமிழினப் போராளிகளோ தலைவர்களோ கூட இதுவரை முன்வந்ததாகத் தெரியவில்லை. இப்பேர்ப்பட்ட ஓர் அவலம் ஒரு போராளிக்கு வேறு எந்த இனத்திலோ நாட்டிலோ நடக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். தமிழினத்தில்தான் போராளிகள் இந்த அளவுக்கு மோசமானதோர் அலட்சியத்தை எதிர்கொள்ள முடியும்; அதுவும் போராளிகளிடமிருந்தே!

மற்றவர்கள் கிடக்கட்டும்! கட்டிய கணவர் கூட இன்று வரை இவர் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் பெருங்கொடுமை!

தான், தன் குடும்பம், தன் சுற்றம் எனத் தன்னலமாக வாழும் சராசரி மக்கள் இனம், மொழி, நாடு, உலகம் என அனைவருக்காகவும் சிந்திக்கிற, கவலைப்படுகிற பரந்த மனம் கொண்டவர்களாக மாற விரும்பும் அளவுக்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான ஒரு போராளிக்கு, சமூக அக்கறையாளருக்கு உண்டான அடிப்படைத் தகுதி. ஆனால், தோழர். தியாகு அவர்களோ, நேற்று வரை ஈழ விடுதலை, மரண தண்டனை ஒழிப்பு, அரசியல் புரட்சி என்று வாழ்ந்து வந்த பெண்மணி ஒருவரை இன்று தன் மகனுக்காகவும் தனக்காகவும் போராடும் சராசரித் தமிழ்ப் பெண் போல மாற வைத்திருக்கிறார். இதுதான் ஒரு போராளி நடந்து கொள்ளும் முறையா?

கட்டிய மனைவி பெற்ற பிள்ளையுடன் தான் போகும் இடமெல்லாம் தொடர்ந்து வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்; ஆனால், அவருக்குப் பதில் சொல்லாத இவர் தொலைக்காட்சி தொலைக்காட்சியாக நேர்காணல் அளித்துக் கொண்டிருக்கிறார்!

“இனி நான் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. அவர் விரும்பினால் நான் மணவிலக்களிக்க ஆயத்தமாக இருக்கிறேன்” என்கிற ஒரே பதிலை ஒலிவாங்கியைத் (mic) தூக்கிக் கொண்டு வருகிற மூன்றாம் மனிதர்கள் அனைவரிடமும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பவர் அந்தப் பதிலைத் தன் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கும் தன் மனைவியிடம் கூற எவ்வளவு நேரம் ஆகிவிடும்?

தீவிரவாதியாக ஆயுதமேந்திப் போராடிய வீரர் ஒருவருக்கு எந்தவித ஆயுதமும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் பெண்மணி ஒருவரைச் சந்திக்க அப்படி என்ன அச்சம்?

தன் மனைவி தன்னை நோக்கி நடத்தும் போராட்டத்தையே மதிக்காத இவர் தன்னுடைய போராட்டத்தை உலகின் ஏதோ ஒரு மூலையிலிருக்கும் அதிகார மட்டத்தினர் மதித்துப் பதிலளிப்பார்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என எந்த அடிப்படையில், எப்படி எதிர்பார்க்கிறார்?

‘இதையெல்லாம் கேட்க இவன் யார்’ எனும் கேள்வி இதைப் படிக்கும் உங்களுக்கு எழலாம்.

ஐயா தியாகு அவர்கள் தன் மனைவியுடன் சேர்ந்து வாழட்டும் அல்லது பிரிந்து போகட்டும்; அஃது அவருடைய தனிப்பட்ட விருப்பம்! அதில் நாம் தலையிடவும் முடியாது; கேள்வி எழுப்பவும் முடியாது! ஆனால், தன்னை நோக்கிப் போராட்டம் நடத்தும் ஒருவரை அவர் எப்படி இந்த அளவுக்கு அலட்சியப்படுத்தலாம் எனக் கேள்வி கேட்க மனச்சான்றுள்ள மனிதர் யாருக்கும் முழு உரிமை உண்டு! அந்த உரிமையின் பெயரால் தியாகு அவர்களைப் பற்றி மேற்கண்ட கேள்விகளை எழுப்பியிருக்கும் நான், அதே உரிமையின் பெயரால் நான் பெரிதும் மதிக்கும் வை.கோ, சீமான், பழ.நெடுமாறன், விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன் ஆகிய தமிழினத் தலைவர்களை நோக்கியும் மே பதினேழு, சேவ் தமிழ்சு, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆகியவற்றை நோக்கியும் கூடச் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்!

Poet Thamarai's question to True Tamils!
தமிழ் உணர்வாளர்களை நோக்கிக் கவிஞர்.தாமரையின் கேள்வி!

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தலைவர்களே!

இது கணவன்-மனைவிக்கிடையிலான பிரச்சினை எனத் தாங்கள் வாளாவிருப்பது கூடாது! காரணம், பிரச்சினையில் தொடர்புடைய இருவருமே தமிழினப் போராளிகள். நேற்று வரை தமிழருக்காகப் போராடிய ஒரு பெண்மணி, இன்று சொந்த வாழ்வில் பாதிக்கப்பட்டு நீதி கேட்டு நிற்கையில் அவருக்குத் துணை நிற்க வேண்டியதும், தங்களோடு மிகுந்த நெருக்கமுடைய அவர் கணவரை இது குறித்துப் பதிலளிக்கச் செய்ய வேண்டியதும் தங்கள் கடமை என்பதைத் தாங்கள் மறந்துவிடலாகாது!

போராட்டங்களை அலட்சியப்படுத்துவது என்பது அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் செயலாகத்தான் இது நாள் வரை இருந்து வந்தது. ஆனால், போராளியான தோழர்.தியாகு அவர்களே இப்பொழுது அப்படி நடந்து கொள்வது மற்ற போராளித் தலைவர்களைப் பற்றியும் மக்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதைத் தாங்கள் உணர வேண்டும்!

அது மட்டுமில்லை, ஏற்கெனவே அறப் போராட்டங்களுக்கு மக்களிடையே மதிப்புக் குறைந்து வரும் நிலையில், சொந்த மனைவியும், மகனும் நடத்தும் பட்டினிப் போராட்டமே தனியொரு மனிதனை அசைக்க முடியாதபொழுது, யார் எவரென்றே தெரியாத முகமறியாப் பொதுமக்களின் போராட்டம் எந்த வகையில் அரசு இயந்திரங்களையும் அதிகார மட்டங்களையும் பாதித்து விடுமென்கிற கேள்வியும், அமைதிப் போராட்ட வழிமுறைகள் மீதான நம்பிக்கையின்மையும் மக்களுக்கு இதனால் ஏற்படும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு போராளியே அறவழிப் போராட்டத்தை இந்த அளவுக்கு அலட்சியப்படுத்தும்பொழுது அதை நாம் பார்த்துக் கொண்டிருந்தால், அதிகார அமைப்பின் உச்சத்தில் வீற்றிருக்கும் நாட்டின் அதிபர்களும் பிரதமர்களும் தமிழர் பிரச்சினைகளுக்காக நாம் நடத்தும் போராட்டங்களை மதிக்கவில்லை என இனி நாம் குறை கூறவோ கொந்தளிக்கவோ இயலாத, அதற்குண்டான அறம் சார்ந்த (தார்மிக) உரிமையை இழந்தவர்களாக ஆகி விடுவோம் என்பது கோட்பாட்டியல் சார்ந்து (சித்தாந்தரீதியாக) இதில் மறைந்திருக்கும் மாபெரும் அபாயம் என்பதைத் தங்கள் அனைவருக்கும் பணிவன்புடன் நினைவூட்ட விரும்புகிறேன்!

இந்த விவகாரத்தில், கவிஞர்.தாமரை அவர்களைப் பற்றி இல்லாவிட்டாலும் இவர்கள் மகன் சமரனின் நிலை குறித்தாவது தலைவர்கள் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்!

இத்தனை இளம் வயதில், தந்தையுடன் வாழும் ஓர் அடிப்படை உரிமைக்காகவே தெருவில் இறங்கிப் போராட வேண்டிய நிலையிலுள்ள அந்தப் பிஞ்சு மனதின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? தன் தாயின் இனப் போராட்டங்கள் பற்றியும், அதே தாயின் சொந்தப் போராட்டங்கள் பற்றியும் நாளை முழுமையாகப் புரியக்கூடிய பருவம் வரும்பொழுது தன் பெற்றோரின் சமகாலப் போராளிகள் பற்றியும், தலைவர்கள் பற்றியும் அவன் மதிப்பு என்னவாக இருக்கும்? போராட்ட வாழ்க்கைக்குக் குடும்பம் தடையாக இருப்பதாகக் கூறித் தன் அப்பா தன்னை விட்டுப் பிரிந்திருப்பதை அறிந்திருக்கும் அந்தச் சிறுவன் நாளைக்குப் போராட்டம், புரட்சி, உரிமை ஆகியவற்றைப் பற்றி எப்படிப்பட்ட மதிப்பீட்டைக் கொண்டவனாக வளர்வான்? தமிழர் போராட்டங்கள் பற்றி அவன் என்ன நினைப்பான்? இதற்கான பதில்களைத் தலைவர்களாகிய நீங்கள் ஒரு நிமிடமாவது சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்! தமிழ்ப் போராளிப் பெற்றோர்க்குப் பிறந்த ஒரு மைந்தனே தமிழர் போராட்டங்கள் பற்றித் தவறான கருத்துக் கொண்டவனாக மாறினால் அதைவிடத் தமிழினத்துக்கு வேறு பெரிய இழப்பொன்று இருக்க முடியுமா என்பதைத் தமிழினத் தலைவர்களான உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்!

தமிழுக்காகவும் தமிழருக்காகவும் எத்தனையோ போராட்டங்களை நடத்தும் நாம் நம்மில் ஒருவரால் பாதிக்கப்பட்டுப் பெண்ணொருவர் போராடும்பொழுது, அந்தப் பெண்ணும் நம்மில் ஒருவராகவே இருக்கும் நிலையில், இதைக் கொண்டு கொள்ளாமல் இருந்தால் தமிழினப் போராட்ட வரலாற்றுக்கு அதை விடத் துடைக்க முடியாத களங்கம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை கூறி கனத்த மனத்துடன் இத்தோடு நிறைவு செய்து கொள்கிறேன்!

நன்றி! வணக்கம்!

❀ ❀ ❀ ❀ ❀

இற்றை (update): தாமரை அவர்களின் கோரிக்கையை ஏற்றுத் தோழர்.தியாகு அவர்கள் எழுத்துவடிவ மன்னிப்புக் கேட்டதாலும், மேற்கொண்டு அவர் கோரிக்கைப்படி தன் மீது விசாரணை ஆணையம் அமைக்கவும் ஒப்புக் கொண்டதாலும் கவிஞர்.தாமரை அவர்கள் தன் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு: தியாகு நேரில் மன்னிப்பு: போராட்டத்தை தற்காலிகமாக முடித்தார் தாமரை!

படங்கள்: நன்றி கவிஞர்.தாமரை.

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்குவதன் மூலம் இந்த நீதிப் போராட்டத்துக்கு நீங்களும் கைகொடுக்கலாமே! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

18 கருத்துகள்:

  1. /// தன் மனைவி தன்னை நோக்கி நடத்தும் போராட்டத்தையே மதிக்காத இவர் தன்னுடைய போராட்டத்தை உலகின் ஏதோ ஒரு மூலையிலிருக்கும் அதிகார மட்டத்தினர் மதித்துப் பதிலளிப்பார்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என எந்த அடிப்படையில், எப்படி எதிர்பார்க்கிறார்? ///

    'நச்' சென்று சொல்லி இருக்கிறீர்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைந்து சிக்கல் தீர உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  2. இருவருமே அறிவாளிகள். நியாய தர்மம் இருவருக்கும் தெரியும்.
    மேலும் இருவருக்கும் மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் இருக்கும்.
    இருவருக்கும் தெரியாத புதிய நியாய தர்மத்தை யாரும் அவர்களுக்கு கூற இயலாது.
    இதனாலே பலரும் அவர்களிடம் இருந்து ஒதுங்கி உள்ளார்கள். சொல்லப்போனால் அவமானமே மிஞ்சும்.
    ஓரளவிற்கு கல்லாதவர்களாக, இருந்தால் நம்பிக்கைக்கு உரிய இருவரும் ஏற்று கொள்ள கூடிய ஒருவரிடம் செல்லலாம். இருப்பினும் இருவரும் தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ளுதல் மட்டுமே நல்லது.(மூன்றாம் மனிதரிடம் செல்லாமல்)

    அறிவை கொண்டு நியாய தர்மங்களை ஆராய முற்பட்டால் நிச்சயம் மனதில் பிளவே மட்டுமே வரும்.
    வடுக்கள் தீராமல் நிற்கும். அன்பு இருந்தால் ஓரளவிற்கு ஒருவர் விருப்பங்களை இன்னொருவர் அனுசரித்து செல்ல முடியும். ஒருவருக்கு சிறிது இழப்பு இருக்கலாம், ஆனால் இந்த மூவருக்கு நன்மை. இது பெரியோர் வாக்கு.

    ஆக இங்கு இருவருமே மகா அறிவாளிகளாக இருப்பது இடைஞ்சலே. அதிலும் பொருளாதார தேவை இல்லாமல் இருப்பதும் அடுத்த இடைஞ்சலே. வயிற்று தேவை இருந்திருந்தால் ஓரளவு பிரச்சினை குறையும்.
    பேச்சுக்கு பேச்சு அதிகமாகி மன முறிவு அதிகமாக போனால் நீதி மன்றம் தவிர வேறு வழியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பெயருடன் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைந்து சிக்கல் தீர உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  3. உங்களின் ஆதங்கம் மட்டுமல்ல ,தமிழ்ப் பற்றாளர்களின் அனைவரின் ஆதங்கமும்தான் ,இருவருமே இணைந்து பேசி நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. பதிவின் தன்மைப்படி பார்த்தால், நீங்கள் தியாகு அவர்களையும் மற்றுமுள்ள தலைவர்களையும் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. எனில், அது மிகவும் தவறு! இந்த ஒரு விதயத்தில் நடந்து கொள்ளும் முறையை வைத்து, ஒட்டுமொத்தமாகப் போராளிகளான அவர்கள் அனைவரையுமே போலிகள் என நீங்கள் சாடுவது சரியில்லை. இந்தப் போராளிகள் மட்டும் இல்லாவிட்டால், தமிழர்களுக்கு இன்றிருக்கும் உரிமைகள் கூட இருந்திருக்க மாட்டா என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்! எல்லோராலும் எப்பொழுதும் எல்லா விதயங்களிலும் சரியாகவே நடந்து கொள்வது என்பது இயலாது. போராளிகளாகவும் நான்கும் அறிந்த தலைவர்களாகவும் இருப்பினும் அவர்களும் மனிதர்கள்தாம். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்வது இயல்பே. அதற்காக அவர்களுடைய இத்தனை ஆண்டு காலப் போராட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது.

      நீக்கு
  5. இந்த முறை விரைவாய் வந்துவிட்டேன் போல!!

    ஆனால் மகிழ்ச்சி கொள்ள கூடிய பதிவு அல்லவே:(((

    நான் மிகவும் மதிக்கும் இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலான ஈகோயுத்தம், மனக்கசப்பு வருத்தத்தை தருகிறது. தாமரை தமிழினமே சம்மதமா என கேட்கிறார். சரி அவரது வேண்டுகோள் தான் என்ன?? சேரனின் மகள் பிரச்சனைக்குளான போது பலரும் உதவினார்கள். ஏனென்றால் அவள் உலகம் அறியா இளம்பெண். ஆனால் இவர்கள் இருவரும் அப்படியான அறிவுரை தேவைப்படாத முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூகப்போராளிகள். அதுவுமன்றி எத்தனை மனகசப்புக்கு பின்னும் தியாகு அவர்களோடு சேர்ந்து வாழ போராட்டம் என்றால், கனியை அடித்துப் பழுக்க வைக்கமுடியுமா?? இருவரும் ஒரு திரையிட்டுகொண்டு , நம்மை நோக்கி கேள்விகேட்டால் நாம் என்ன செய்ய முடியும். சமூகம் மதிக்கும் தம்பதியரின் பிரச்சனையில் எப்படித் தலையிடுவது என என்னைபோல தமிழறிஞர்களும் குழம்பி இருக்கலாம்.( ஆனால் சகா ! நீங்கள் குழம்ப கூடாது. அது என்னைபோல தமிழறிஞர்கள் என பொருள் கொள்ளாமல், என்னை போல குழம்பி இருக்கலாம் என புரிந்து கொள்ளவேண்டும் சரியா?) எனக்கென்னவோ அந்த முதல் அனானியின் கருத்து பல இடத்தில் ஒத்துபோகிறது. இருவர்க்கும் விரைவில் அமைதி கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பார்ந்த சகா!

      கவிஞர் தாமரை அவர்களின் வேண்டுகோள்தான் என்ன என்று கேட்டிருக்கிறீர்கள். அவருடைய வேண்டுகோள்கள் அனைத்தும் அவர் கணவர் தியாகு அவர்களை நோக்கியே. ஆனால், தமிழ் உணர்வாளர்களிடமும் தலைவர்களிடமும் அவர் வைக்கும் வேண்டுகோள் தியாகு அவர்கள் தனக்கிழைத்த இந்தக் கொடுமைக்கு அவர்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என்கிற ஒன்றே ஒன்றுதான். ஆனால், தலைவர்கள் யாருமே இதுவரை இது குறித்து வாய் திறவாமல் இருப்பது சரியா என்பதே என் கேள்வி. அதுவே இந்தப் பதிவை எழுத என்னைத் தூண்டியது.

      இது கணவன் - மனைவி பிரச்சினை, அடுத்தவர்கள் தலையிட முடியாது என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால், பாதிக்கப்பட்டிருப்பவர் தமிழ்ப் பற்றாளர் என்பதால் அது குறித்து ஒரு வார்த்தையாவது பேச வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு இல்லையா? இணையர் இருவருக்கும் இடையில் என்ன சிக்கல் என்பது உங்களைப் போலவே எனக்கும் தெரியாதுதான். ஒருவேளை தாமரை அவர்கள் பக்கமே கூடத் தவறு இருக்கலாம்; நான் மறுக்கவில்லை. ஆனால், பெண் ஒருவர், அதுவும் தமிழ்ப் போராளி, பாதிக்கப்பட்டுத் தெருவில் நிற்கும்பொழுது அவருக்குப் பரிந்து பேசவோ, அல்லது அவரைக் கடிந்து அறிவுறுத்தவோ, ஏதோ ஒரு வகையில் தமிழ்ப் பற்றாளர்கள் தலையிட வேண்டும். தாமரைக்காக இல்லாவிட்டாலும் அந்தச் சிறுவனுக்காக, அவனுக்காக இல்லாவிட்டாலும் இந்தப் போராட்டத்தால் தமிழர் போராட்டங்களும் போராளித் தலைவர்களும் பற்றிய மதிப்புப் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காகக் கண்டிப்பாகத் தலைவர்கள் இதில் தலையிட்டிருக்க வேண்டும்! அப்படிச் செய்யாததால்தான் நான் இப்படியொரு பதிவை எழுதினேன்.

      மற்றபடி, இப்படி ஒரு பதிவு எழுதிவிட்டதாலேயே கவிஞர் தாமரை அவர்களை இது விதயத்தில் நான் முழுக்க முழுக்க ஆதரிக்கிறேன் எனப் பொருள் இல்லை. குறிப்பாக, "தமிழை நேசித்தேன் தெருவுக்கு வந்து விட்டேன்" என்கிற அவருடைய கருத்து முற்றிலும் தவறென்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். அவர் தமிழை நேசித்ததால் தெருவுக்கு வரவில்லை, தியாகு அவர்களை நேசித்ததால்தான்! அப்புறம் ஏன் அந்தப் படத்தை மேலே வெளியிட்டிருக்கிறேன் என்றால், தமிழ்ப் பற்றாளர்கள் இருவருக்கிடையிலான இந்தப் பிரச்சினை தமிழையே தாக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உரியவர்களுக்கு உணர்த்தவே! இது குறித்து அவர்கள் உடனே ஆவன செய்ய வேண்டியதன் கட்டாயத்தைப் புரிய வைக்கவே!

      நீங்கள் குழம்பலாம்; நான் குழம்பலாம்; தமிழறிஞர்கள் குழம்பலாமா?

      நீக்கு
    2. சகா!

      "எத்தனை மனகசப்புக்கு பின்னும் தியாகு அவர்களோடு சேர்ந்து வாழ போராட்டம் என்றால், கனியை அடித்துப் பழுக்க வைக்கமுடியுமா??" என்ற உங்கள் கேள்விக்கு மேஃகண்ட பதில் கருத்தில் விடையளிகத் தவறிவிட்டேன். பிறகுதான் நினைவு வந்தது.

      இந்தக் கேள்விக்கு நான் தனியாக ஒரு பதில் எழுதுவதை விட, இந்தப் போராட்டம் பற்றிக் கவிஞர்.தாமரை அவர்களின் முகநூலில் பார்த்தவுடன் நான் அவருக்குத் தெரிவித்த கருத்தையே இங்கு பதிவிடுவது பொருத்தமாக இருக்கும். இதோ கீழே!

      "சிறந்த தமிழ்க் கவிஞரும் போராளியுமான தங்களுக்குத் தொடர்ந்து துன்பங்களே நேர்ந்து கொண்டிருப்பது கண்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது! இதற்கான விடை எனக்குத் தெரியவில்லை. தங்களுக்கு யோசனை கூறும் அளவு நான் பெரிய ஆளும் இல்லை. ஆனால், பெண்ணியன் என்கிற முறையில் பணிவன்புடன் நான் தங்கள் முன் வைக்க விரும்புவது என்னவெனில், தன்னை விரும்பாத ஆணைப் பெண்ணும் மதிக்க வேண்டியதில்லை என்பதே. தங்களோடு வாழ விரும்பாத அவருக்காகத் தாங்கள் பட்டினிப் போராட்டம் நடத்துவதால், காலங்காலமாக இந்தியப் பெண்கள் நடந்து கொள்ளும் அதே வழியில் தாங்களும் செல்வது போன்ற தோற்றம்தான் ஏற்படுகிறது. 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்று கூறியவரும் தஙளைப் போன்ற பெண் கவிஞர் ஒருவரே! அந்தப் பழமொழி கணவனுக்கும் பொருந்தும் என்பதே சிறியேனின் சிற்றறிவுக்கு எட்டிய புரிதல். இதுவே, பெண்ணொருத்தி கணவனை விட்டுப் பிரிந்து தனியே வாழ்ந்தால் அவள் கணவன் அவள் வீட்டு வாசலில் தன் பிள்ளையுடன் இப்படி தவம் கிடக்கும் காட்சியை நாம் கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா அம்மா? அப்படியிருக்க, பெண்கள் மட்டும் தன்னை மதிக்காத கணவனுக்காக ஏன் இப்படி இறங்கிப் போக வேண்டும்?

      மீண்டும் கூறுகிறேன்! தங்களுக்கு யோசனையோ அல்லது அது போன்ற வேறு எதுவுமோ எடுத்துக் கூற எனக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. நான் தங்கள் அளவுக்குப் படித்தவனோ, தமிழறிந்தவனோ, தமிழுக்குச் சேவை புரிந்தவனோ அல்லேன். இருந்தாலும், மனம் நொந்து தாங்கள் எழுதியிருக்கும் மேற்படி வரிகளைப் படித்தவுடன், தங்களுக்கு ஏதாவது கூற வேண்டும், இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று தோன்றிய உந்துதல், மனிதநேயம் காரணமாகவே மேலே என் மனதில் இருந்ததை முன்வைத்தேன். மற்றபடி, வேறொன்றும் இல்லை."

      நீக்கு
    3. அதே! அதே! இதை தான் நானும் சொல்லவந்தேன் சகா:)
      சரியான ஆலோசனை தான்:)

      நீக்கு
    4. நீங்கள் இவ்வளவு பற்றோடு எழுதி இருக்க , அங்கோ இரண்டு கோடி கேட்டு பேரம்.

      நீக்கு
    5. அந்தச் செய்தியை நானும் பார்த்தேன். ஆனால், படிக்க முடியவில்லை! அது தவறான தகவல் என உணர்ந்து விகடன் போன்ற பொறுப்புள்ள நிறுவனங்கள் அந்தச் செய்தியையே அழித்துவிட்டிருக்கின்றன! இப்பொழுதும் "தியாகு நேரில் மன்னிப்பு: போராட்டத்தை தற்காலிகமாக முடித்தார் தாமரை!" என்கிற விடனின் கட்டுரைப் பக்கத்துக்குச் சென்றீர்களானால் (இணைப்பு மேலே, பதிவின் இறுதியில்), பக்கப் பட்டியில் "தியாகுவிடம் ரூ.2 கோடி கேட்கிறார் கவிஞர் தாமரை!" என்கிற செய்தியின் இணைப்பைக் காணலாம். ஆனால், அதை அழுத்தினால் அதற்கான கட்டுரை வராது; அழிக்கப்பட்டிருக்கும்! கவிஞர் அப்படி ஏதும் கேட்கவில்லை என்பதும், பிறகு எப்படி இப்படி ஒரு செய்தி பரவியது என்பதற்கான விவரமும் தாமரை அவர்களின் வார்த்தைகளிலேயே இதோ:

      "எட்டு நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு வீடு வந்துள்ளேன். இன்னும் ஓய்வு கூட சரியாக எடுக்கவில்லை. உடல் கெஞ்சுகிறது. இந்த எட்டு நாட்களில் சேர்ந்து போன வேலைகளை முடிக்க எனக்கு எட்டு வாரங்கள் வேண்டும். அதற்குள் கற்பனைச் செய்திகள் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தாயிற்று. 'அடப் போங்கப்பா என்று சொல்லிவிட்டு அரிசியை உலையில் வைக்கலாம்' என்று போவதற்குள் 60 தொலைபேசி அழைப்புகள்.
      ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நாளை தொடங்கி பதில் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.
      ஆனால் இந்த இரண்டு சகிக்க முடியாத கேள்விகளுக்கு மட்டும் இப்போதே பதில் எழுதி விட்டுப் பிறகு மதியச் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்கிறேன்.
      மிகச்சுருக்கமான பதில்தான் எழுத முடியும்.

      2 கோடி கேட்டேனா ????
      ---------------------------
      எட்டு நாட்களாக தினம் 50 நிருபர்களையாவது எதிர்கொண்டேன். 500 கேள்விகள். அதில் குறைந்தது 400 கேள்வி , ' அவர்தான் விவாகரத்து கொடுக்கிறேன் , விவாகரத்து கொடுக்கிறேன் என்கிறாரே வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே' என்பதுதான்.
      விவாகரத்து என்பது என்னவோ திருப்பதி லட்டு போலவும் அதை நான் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டால் அப்படியே பெருமாளின் பாதத்தை இசகுபிசகு இல்லாமல் நேராய்ப் போய் அடைந்து விடலாம் என்பது போலவும்........
      சட்டத்தீர்வை நான் கோர மாட்டேன் என்று 100, 1000 முறை கூறிய பிறகும் அதையே தியாகு வலியுறுத்தக் காரணம் என்ன என்று யாரேனும் யோசியுங்கள்.
      சட்டம் ரெண்டே தெரிவுகளைத் தான் தருகிறது. பிடித்தால் சேர்ந்திரு, பிடிக்காவிட்டால் பிரிந்து போ.... அவ்வளவுதான். அன்று ஏன் பிடித்தது, இன்று ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்விகளெல்லாம் கேட்காது. இடையில் என்ன நடந்தது என்று துருவாது. நான்கு சுவர்களுக்குள் , அதிகபட்சம் 400 வார்த்தைகளுக்குள் ஓர் உறவை முறித்து விடும். எனவே இதுதான் இருப்பதிலேயே சாதகமான நகர்வு தியாகுவுக்கு. ஆனால் எனக்கு.... ? பிரிவைத் தாண்டியும் சில செய்திகளை சமூகத்திற்குச் சொல்ல விரும்பினேன். அதற்கு சமூகத் தீர்வுதான் சரியாக இருக்கும்.
      ஏன் பிரிவு, என்னதான் பிரச்சனை என்று இதுவரை தியாகு சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. இரண்டுக்கும் வெவ்வேறு காரணங்கள். நேரம் வரும்போது சொல்லலாம் என்றிருந்தேன் ....
      எனவே விவாகரத்துத் தருகிறேன் என்கிறாரே வாங்கிக்கொள்ள வேண்டியதுதான் என்று யாரோ 51 வது நிருபர் கேட்டபோது, ' ஏன், இரண்டு கோடி கொடுக்கச் சொல்லுங்களேன் பார்க்கலாம், எனக்கும் உதவியாக இருக்கும், நான் இவருக்காக முதலீடு செய்த 20 ஆண்டுகளுக்கு ஓர் அடையாளமாகவும் இருக்குமே !!! ' என்று நகைச்சுவையாகச் சொன்னதைத் தான் யாரோ கொலைவெறி நிருபர் ( நல்லாயிருப்பா) இப்படி எழுதி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

      தியாகுவிடமிருந்து இரண்டு கோடி அல்ல இரண்டு பைசா கூட வராது என்று தெரிந்ததால்தான் அதைச் சொன்னேன்.
      சரி, வராத பணம் 5 பைசாவாக இருந்தால் என்ன, 50 கோடியாக இருந்தால் என்ன, என் மதிப்பாவது உயர்வாக இருக்கட்டுமே, யாரப்பா அங்கே ... I want 50 crores.
      மறந்து விட்டேனே... TDS பிடித்தது போக ..... என்று எழுதி வையுங்கள்.

      இன்னும் இரண்டு செய்தி சொல்லாவிட்டால் சாமி கண்ணைக் குத்தும், அதையும் சொல்லி விடுகிறேன்.

      1. இந்த இருபதாண்டுகளில் ஒரே ஒரு செப்பாலடித்த காசு கூட தியாகு வீட்டுக்கோ,எனக்கோ கொடுத்ததில்லை.
      2. அப்படியே ரெண்டு கோடி நான் கேட்டிருந்தாலும் என்ன தவறு ??!
      ஐயா, வீட்டுக்கு சம்பாதித்துப் போடும் ஆண்பிள்ளைகளே பதில் சொல்லுங்கள்...

      ( இன்னும் இது தொடர்பான செய்திகள் நிறைய இருக்கின்றன , பின்னம் சொல்கிறேன் )."

      https://www.facebook.com/thamarai.kavignar/posts/10203709205599403

      நீக்கு
  6. தியாகு பொதுஇடத்தில் தாமரைதிடம் கடிதம் வாசித்து மன்னிப்புகேட்டதாக செய்தி வந்திருக்கிறதே! பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகா! பார்த்து, அதற்கேற்பப் பதிவையும் இற்றைப்படுத்தியிருக்கிறேன்!

      நீக்கு
  7. நாங்கள் தாமதம்! என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்து வந்த்தோமோ கிட்டத் தட்ட அதை பெயரில்லா ஒருவரும், சகோதரி மைதிலியும் சேர்ந்து சொல்லி விட்டார்கள். அதற்கான தங்கள் பதிலும் பார்த்துவிட்டோம்.

    கவிஞர் தாமரையை ஒரு கவிஞராகத், தமிழையும், தமிழ் இனத்தையும் நேசிக்கும் மனித நேயம் மிக்க ஒரு பெண்ணாகப் பார்ப்பதால் அவரது துன்பம் மனதைக் கொஞ்சம் வருத்தியதென்னவோ உண்மைதான். பெண்கள் தினமாகிய மார்ச் 8 ஆம் தேதி அன்றாவது அவரது போராட்டத்திற்கு பதில் கிடைக்குமா என்றும் தோன்றியது.

    இப்போது இற்றையும் பார்த்தோம்! எப்படியோ அவர்கள் கலந்து பேசி தங்கள் மனவருத்தங்களைப் பகிர்ந்து ஆலோசித்து, சேந்துவாழ்வதா, இல்லை பிரிவதா என்று முடிவெடுப்பது அவர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று! எப்படி இருந்தால் அவர்களுக்கு மகிழ்வாக இருக்குமோ அப்படி அவர்கள் முடிவெடுக்கட்டும்! சிறியவர்கள் அல்லவே! மனப்பக்குவம் மிக்கவர்களே! எனவே அவர்களது மகிழ்வு எதுவோ அதை முடிவு செய்யட்டும்! நல்லது நடக்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி ஐயா, அம்மணி! எது எப்படி இருப்பினும் ஒருவர் போராட்டம் என நடத்தும்பொழுது அதை மதிக்காமல் இருப்பது நல்ல சமூகத்துக்கு அழகில்லை. அதுவும் போராளிகளும் அறப் போராட்டங்களுக்குப் பெயர் பெற்ற நம் தமிழ்த் தலைவர்களுமே அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதே என் ஆதங்கம். ஆனால், கடைசியில் நான் எதிர்பார்த்தது போலவே ஓவியர்.வீரசந்தானம் ஐயா போன்ற போராளிகள் இதில் தலையிட்டு முடித்து வைத்தது எனக்கு மிகுந்த ஆறுதல்! நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்