.

திங்கள், நவம்பர் 03, 2014

மீண்டும் அகச் சிவப்புத் தமிழ்! | Aga Sivappu Thamizh is back!



Welcome!

ன்பார்ந்த நண்பர்களே! தமிழார்ந்த நெஞ்சங்களே! ‘அகச் சிவப்புத் தமிழ்’த் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம்!

நான் கற்பனை கூடச் செய்யவில்லை, மீண்டும் இந்த வலைப்பூவின் வழியே உங்களையெல்லாம் சந்திப்பேன் என்று. முதலில் எல்லோரும் என்னை மன்னியுங்கள், அறியாமல் இந்த வலைப்பூவை அழித்ததற்காக! தவறான ஒரு புரிதல் காரணமாக அப்படிச் செய்து விட்டேன்.

நடந்தது என்ன?

சொல்லி விடுகிறேன் அந்த மர்மத்தை.

அண்மையில், என் கூகுள் கணக்கு கொந்தப்பட்டது (hacked)!!

என் மேல் விழுந்த விருதுத் துளியே!’ பதிவின் கருத்துரைப் பகுதியில், இரண்டு நாட்களாக ‘அகச் சிவப்புத் தமி’ழை அணுக முடியவில்லை என்று பெருமதிப்பிற்குரிய நண்பர் ஊமைக்கனவுகள் ஜோசப் விஜு அவர்கள் கூறியதை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் (பார்க்காவிட்டால் பார்க்க: இங்கே). அதற்குக் காரணம் அந்தக் கொந்தத் தாக்குதல்தான். ஆம்! உள்ளே நுழைந்த முகம் தெரியாத அந்த ‘நலம் விரும்பி’ என் கூகுள் கணக்கு மொத்தத்தையும் முடக்கி விட்டுச் சென்று விட்டார். அல்லது, வழக்கத்துக்கு மாறான இடத்திலிருந்து (ஸ்பெயின்) கணக்கு கையாளப்பட்டதால் கூகுளே ஐயப்பட்டுக் கணக்கை முடக்கி விட்டதோ என்னவோ, நானறியேன்!

ஆனால், சிக்கல் அஃது இல்லை. ஒரு சொடுக்கில் நான் என் கூகுள் கணக்கை மீட்டுவிட்டேன். கணக்கை மீட்டவுடன் வலைப்பூவும் தானாகவே சரியாகி விட்டது. அதனால், நானும் இதைப் பெரிதாக நினைக்கவில்லை. போகட்டும் என்று கடவுச்சொல்லை மாற்றிவிட்டு வாளாவிருந்து (சும்மா) விட்டேன். ஆனால் மறுநாள், இன்னோர் அதிர்ச்சி! வார்ப்புரு மாற்றங்களைச் செய்து பார்ப்பதற்கெனவே நான் சோதனை வலைப்பூ ஒன்று வைத்துள்ளேன். மறுநாள், அந்த வலைப்பூவில் நான் வெளியிட்டிருந்த சோதனை இடுகைகள் அனைத்தும் ஒரே நாளில் மறுவெளியீடு ஆகியிருந்தன. ஆக, யாரோ அந்த வலைப்பூவிலும் கை வைத்திருப்பது தெரிந்தது! கடவுச்சொல்லை மாற்றிய பிறகும் நடந்த இந்தத் தாக்குதல் என்னைத் திகைக்க வைத்தது.

தொழில்நுட்பம், சட்டம் எல்லாம் அறிந்த நண்பர் ஒருவரை அணுகி இதற்குத் தீர்வு கேட்டேன். ஆனால், அவர் இந்தச் சிக்கலை வேறு கோணத்தில் பார்த்தார். ஏற்கெனவே நான் வலைப்பூவில் மிகவும் தீவிரமான பதிவுகளை எழுதி வருகிறேன். இப்பொழுது தளத்தின் பாதுகாப்பும் இப்படிக் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், இனி நான் கடவுச்சொற்களை மாற்றி எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும், ஒருவேளை யாராவது மீண்டும் அதில் நுழைந்து சட்டத்துக்குப் புறம்பாகவோ, சமூகத்துக்குக் கேடு விளைக்கக்கூடிய வகையிலோ எதையேனும் வலைப்பூவில் வெளியிட்டு விட்டால் என்னாகும் என்று அவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். மாற்றுக் கருத்துக்காக அவரை விடத் தொழில்நுட்பத்தில் சிறந்த நண்பரான இன்னொருவரைக் கலந்தாலோசித்தேன். அவரும் இதையே ஆமோதிக்கவே நான் கொஞ்சம் மிரண்டுதான் போனேன்.

இது மட்டுமில்லாமல், கணினியில் நல்ல நச்சுநிரல் தடுப்பான் (Anti-Virus) இல்லாதது, மேலும் பல தனிப்பட்ட சிக்கல்கள், காக்காய் உட்காரப் பனம்பழம் விழுவது போல் நடந்த சில நிகழ்வுகள் என்று எல்லாமாகச் சேர்ந்து தளத்தை அழிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதாக என்னை நம்ப வைத்து விட்டன. அதனால்தான், தாள முடியாத வேதனையோடு நான் அப்படியொரு முடிவெடுத்தேன்.

ஆனால், முடிவைச் செயல்படுத்திய பிறகுதான் தெரிந்தது, சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சில நிகழ்வுகளுக்கும் கூகுள் கணக்குத் தாக்கப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று. தொழில்நுட்பத்தை முழுமையாக அறியாமல், நுனிப்புல் மேய்ந்ததன் விளைவாக நான்தான் சில நிகழ்வுகளைத் தவறாக முடிச்சுப் போட்டுப் புரிந்து கொண்டேன் என்பதும், அந்தத் தவறான புரிதலின் அடிப்படையில் நான் சிக்கலை விளக்கியதால்தான் நண்பர்களும் தளத்தை அழிக்குமாறு பரிந்துரைக்க நேர்ந்திருக்கிறது என்றும் பிற்பாடுதான் புரிய வந்தது.

அவற்றுள் சில காரணங்கள் என் தலைக்கு மேல் கத்தியாக இன்றும் தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும், ஓரளவுக்கு முதன்மையான சில தடைகள் நீங்கிவிட்டதால் மீண்டும் வலைப்பூவை மறுமலர்த்தியே தீருவதெனத் துணிந்து, இதோ மறுபடியும் உங்கள் முன் தோன்றி விட்டேன். இனி, வழக்கம் போல் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ தொடர்ந்து வெளிவரும்! இப்படியொரு தவறான முடிவை எடுத்து உங்களையெல்லாம் விட்டுப் பிரிந்ததற்குத் தண்டனையாய் முன்பை விடக் கூடுதல் பொலிவுடனும், சுவையுடனும், வீரியத்துடனும் பதிவிடுவதாக உறுதியளிக்கிறேன்!

இதனால் பெற்ற பட்டறிவு! (experience)

கொந்தத் தாக்குதலுக்கு ஆளான தளத்தை மீண்டும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் நுட்பம் பற்றி இணையத்தில் தேடினேன். சில கட்டுரைகள் சில புதிய வழிகளைக் காட்டின. அவற்றுள் முதன்மையானது கணினி, இணையம் ஆகியவற்றைச் சார்ந்திராமல் நம் கைப்பேசியின் துணைகொண்டே நம் கூகுள் கணக்கைப் பாதுகாக்கும் இரட்டைப் பாதுகாப்பு முறை (Two step verification). இது பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இருந்தாலும், தெரியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம். 

இரட்டைப் பாதுகாப்பு முறை என்பது ஒவ்வொரு தடவை நாம் கூகுள் கணக்குக்குள் நுழையும்பொழுதும் இரண்டு முறை சோதிக்கும் வசதி. இதை நீங்கள் செயல்படுத்தி விட்டால், அதன் பின் வழக்கத்துக்கு மாறான கணினியிலிருந்து நீங்கள் கூகுள் கணக்குக்குள் நுழைய முனைந்தால், உடனே உங்கள் கைப்பேசிக்கு ஒரு கமுக்க எண் (secret number) அனுப்பப்படும். கடவுச்சொல்லுக்கு அடுத்தபடியாக அந்தக் கடவு எண்ணையும் (pass code number) கொடுத்த பின்னரே நீங்கள் அந்தப் புதுக் கணினியின் மூலம் கணக்குக்குள் நுழைய இயலும். ஆக, உங்கள் கணினி தவிர உலகில் வேறு எங்கிருந்தும், எவராலும் – ஏன், உங்களாலுமே கூட – உங்கள் கூகுள் கணக்கை உங்கள் கைப்பேசியின் துணையின்றித் திறக்க இயலாது! உங்கள் கணக்கை இனி எவனா(ளா)வது கொந்த (hack) வேண்டுமானால் உங்கள் கடவுச்சொல் மட்டும் தெரிந்தால் போதாது, உங்கள் கைப்பேசியையோ, கணினியையோவே தூக்கிக்கொண்டு ஓடினால்தான் முடியும். (LOL!) இஃது ஏறத்தாழ இயலாத ஒன்று என்பதால் இது மிகவும் சிறந்த வழிமுறையாகவே தென்படுகிறது. இதைச் செயல்படுத்தும்படி தொழில்நுட்பர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள். எனவே, அனைவரும் – குறிப்பாக வலைப்பதிவர்கள் – இந்த இரட்டைப் பாதுகாப்பு முறையைச் செயல்படுத்தி விடுமாறு பரிந்துரைக்கிறேன். இதைச் செயல்படுத்துவது எப்படி என்பது முதலான விரிவான தகவல்களுக்கு நம் பேரன்புக்குரிய நண்பர் ‘கற்போம்’ பிரபு கிருஷ்ணா அவர்களின் இணைய இதழில் வெளிவந்திருக்கும் Google/Gmail Account Hack செய்யப்படாமல் இருக்க 2-Step Verification எனும் கட்டுரையைப் படிக்கலாம். இரட்டைப் பாதுகாப்பு முறை பற்றி மட்டுமில்லை, மேலும் சில பாதுகாப்பு வழிமுறைகளும் அதில் விளக்கப்பட்டுள்ளன.

அந்தக் கட்டுரையில் இல்லாத மேலும் சில தலையாய தகவல்கள் இந்த ஆங்கிலக் கட்டுரையில்! இதைப் படிக்கத் தவறாதீர்கள் எனச் சொல்ல மாட்டேன், தவறியும் படிக்காமல் விடாதீர்கள் என்பேன்!

ஆனால், இந்தக் கட்டுரைகள் மூலம் நான் அறிந்தவையெல்லாம் இணையத்தில் நானாகத் தேடிக் கற்றறிவு (கற்ற + அறிவு). இந்த நிகழ்விலிருந்து நான் பெற்ற பட்டறிவு என்பது வலைப்பூ நடத்துவதற்கு அதற்குண்டான தொழில்நுட்பங்கள் மட்டும் தெரிந்திருந்தால் போதாது என்பதுதான்! நுனிப்புல் மேய்வது எப்பொழுதுமே ஆபத்து என எத்தனையோ முறை பல நூல்களில் படிக்கிறோம்; பெரியவர்களின் பட்டறிவுக் கதைகளில் கேட்கிறோம். ஆனாலும், நாம் பலரும் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! வார்ப்புருவைத் திருத்துவது, வலைப்பூவை விதவிதமாக அழகுபடுத்துவது, பட்டியலிடுதளங்கள் (directories) பலவற்றிலும் தேடித் தேடி இணைப்பது, பின்னிணைப்புகள் (back links) உருவாக்குவது போன்ற தேடுபொறி உகப்பாக்க (SEO) வேலைகள் மட்டும் தெரிந்திருந்தால் போதாது! துறையில் இறங்கி விட்டோம்; இனி முழுமையாகவே தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள முயல்வதே நல்லது! அதிலும், அவ்வப்பொழுது நம்மை இற்றைப்படுத்திக் கொண்டே (update) இருக்கவும் வேண்டும்! தவிர, இது சார்ந்த சட்ட நுணுக்கங்களையும் அறிந்திருத்தல் இன்றியமையாதது.

நம் தளத்தை நாம் மட்டும்தான் பயன்படுத்துகிறோமா அல்லது நாம் அறியாமல் வேறு யாராவதும் அதைப் பயன்படுத்துகிறார்களா? நம் தளம் திடீரெனக் காணாமல் போய்விட்டால், அஃது என்ன ஆனது? அதற்கு உண்மையில் நேர்ந்தது என்ன? அழிந்து போனதா, அல்லது முடக்கப்பட்டதா, அல்லது சிதைக்கப்பட்டதா? இப்படிப்பட்ட அடிப்படை விதயங்கள் நமக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருத்தல் வேண்டும்! எனவே, வெறும் பதிவர் உதவிக்குறிப்புகள் (blogger tips) படிப்பதோடு நில்லாமல் இப்படிப்பட்ட நுணுக்கமான தொழில்நுட்பங்களையும் அனைவரும் தேடிப் படியுங்கள் எனக் கேட்டுக் கொள்வதோடு, இணையப் பாதுகாப்பு (Cyber safety), இணையச் சட்டம் (Cyber law) தொடர்பான பதிவுகளையும் நிறைய எழுதுமாறும், குறிப்பாக, இவை பற்றிய ஆங்கிலப் பதிவுகளைத் தமிழ்படுத்தித் தருமாறும் தொழில்நுட்ப, சட்டப் பதிவர்களை அன்புடன் கோருகிறேன்!


Thanks for your Love!

நான் வலைப்பூவை அழிப்பதாகச் சொன்னதும் நண்பர்கள் சிலர் உடனே வந்து தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து, அன்பையும் கொட்டினர். குறிப்பாக, நண்பர்கள் ஜோசப் விஜு ஐயா, ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரி ரங்கன் ஆகியோரை நெஞ்சம் நெகிழ்வில் வழிய இப்பொழுது நினைவு கூர்கிறேன்.

மைதிலி அவர்களே! நான் மீண்டும் வர வேண்டும் என்று நீங்கள் கேட்டபொழுது கண்டிப்பாக வருவேன் என்று நான் பதிலளித்தது வேறொரு வலைப்பூ மூலம் வருவேன் என்ற பொருளில்தான்; ‘அகச் சிவப்புத் தமி’ழை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று நான் ஆணையாக நினைக்கவில்லை! ஆனால், ஜோசப் விஜு அவர்களின் நம்பிக்கை பலித்து விட்டது.

ஆம் ஐயா! நீங்கள் கூறினீர்கள், அவ்வளவு எளிதில் என்னை விட்டுவிடப் போவதில்லை என்றும், அந்த நம்பிக்கை உங்களுக்கு இருப்பதாகவும், உங்கள் நம்பிக்கை எதுவும் இதுவரை பொய்த்ததில்லை என்றும். அப்பொழுதும் நான், இன்னொரு வலைப்பூ மூலம் நான் மீண்டும் பதிவுலகுக்கு வருவதன் மூலம்தான் உங்கள் நம்பிக்கை நனவாக முடியும் என்றுதான் நினைத்தேனே தவிர, இப்படி நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், உள்ளத்து வலிமை (Power of Mind) பற்றி அறிவியலார்ந்து நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், நேரடியாகவும் பார்த்திருக்கிறேன். அதனால், அதன் மீது கொஞ்சம் நம்பிக்கை உண்டு. இப்பொழுது அது சரிதான் என மீண்டும் ஒருமுறை உங்கள் மூலம் உறுதியாகி இருக்கிறது!

இவர்கள் மட்டுமின்றி, “பதிவுக் குழந்தையை அழிக்க வேண்டாம்” என்று உருக்கத்தோடு வலியுறுத்திய நண்பர் உலகளந்த நம்பி அவர்கள், வருத்தம் தெரிவித்த ‘தளிர்’ சுரேஷ் அவர்கள் என அனைவரின் நேசத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி! அனைவரும் தொடர்ந்து வருகை புரிந்து வழக்கம் போல் உங்கள் செம்மையான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்!

முதன்மைக் குறிப்பு: 'அகச் சிவப்புத் தமி'ழை மின்னஞ்சல், ஊட்டம் (feeds) ஆகியவற்றின் வழியாகப் பின்பற்றுபவர்கள் மட்டும் கனிவு கூர்ந்து மீண்டும் புதிதாகப் பின்தொடரப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்! சிரமத்திற்கு வருந்துகிறேன்!


கைதுறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இணையக் கணக்குப் பாதுகாப்பு வழிமுறைகள் சமூகப் பகைவர்களிடமிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் நோக்கிலானவை மட்டுமே! அரசு நினைத்தால் நீங்கள் இரட்டைப் பாதுகாப்பு முறையென்ன அதைவிட எப்பேர்ப்பட்ட பூட்டுப் போட்டாலும், எந்த விதத் தடயமும் இல்லாமல் உள்புகுந்து பார்த்து வெளியேற இயலும். தேவைப்பட்டால் உங்கள் கணக்குகளை முடக்கவும் அவர்களால் இயலும். இவற்றுக்கான சட்டப்பூர்வ அதிகாரமும் அவர்களுக்கு உண்டு என்பதை மறக்க வேண்டா! எனவே, முழுமையான பாதுகாப்பில் இருக்கிறோம் எனும் துணிவில் சட்டப்புறம்பான எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டா எனக் கேட்டுக் கொள்வதோடு அப்படிப்பட்ட செய்கை எதையும் தூண்டும் நோக்கில் இஃது எழுதப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்!

❀ ❀ ❀ ❀ ❀ 
படங்கள்: நன்றி ௧.Catscanman.net, ௨.சுடர் எப்.எம், ௩.மாணவன்
உசாத்துணை: கற்போம், nakedsecurity.sophos.com


 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

26 கருத்துகள்:

  1. ஐயா !

    முதலில் தாங்கள் மீண்டும் அதே வலைத்தளப் பெயரில் வந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. மிக மிக! என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    நீங்கள் கண்ணீருடன் விடை மல்குகின்றேன் என்ற பதிவைப் பார்த்து வரும் னாங்கள் வந்து தங்களுக்கு என்ன நேர்ந்தது, வேண்டாம் வாருங்கள் என்று சொல்ல நினைத்து பின்னூட்டம் இட்டால் போகவில்லை மாறாக தங்கள் வலைப்பூ மூடப்பட்டதாக வந்தது. எங்களுக்கு ஆச்சரியம் ஒரு புறம்! ஏன் மூடப்பட்டது என்ற கேள்வி மறுபுறம். சரி தங்களது சுய விருப்பம். ஏதோ தங்களது சொந்த விருப்பு வெறுப்பில் நாம் என்ன சொல்வது என்ற எண்ணத்தில் அப்படியே சென்று விட்டோம். இப்போதுதான் தெரிகின்றது தங்களது தளத்தின் மின் அஞ்சலும் கடவுச் சொல்லும் திருடப்பட்டது என்பது. இது போல ஆரூர்முனா என்பவரது தளம் திருடப்பட்டதாக வலை உலகில்பேசப்பட்டு பதிவர் மதுரைத் தமிழன் அவர்கள் ஒரு பதிவு எழுதினார். அதில் ஒரு கூகுளின் வலைத்தள முகவரி கொடுத்து அதில் நமது வலதைதளத்தின் முகவரி திருடப்பட்டுள்ளதா என்றும் அந்த பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளதா என்றும் சரிபார்க்கச் சொல்லி. நாங்களும் அதில் சென்று சரி பார்த்துத் திருடப்படவில்லை என்பதை அறிந்தோம். தங்களது முகவரி எங்களுக்குத் தெரியாமல் போனதால் அறிவிக்க முடியாமல் போனது. மன்னிக்கவும் ஐயா! தயவு செய்து! இப்போது எந்தத் தளத்தைத் திறந்தாலும் முதலில் "எரர்" அல்லது புரியாத எழுத்துக்கள் முதலி வருகின்றன. பின்னர் சிறிது நேரம் கழித்துத்தான் தளமே வருகின்றது. எங்கள் தளமே கூட சில சமயம் எரர் என்று வருகின்றது.

    தாங்கள் சொல்லியிருக்கும் தொழில் நுட்பத்தை செயல் படுத்தி உள்ளோம். பார்ப்போம் இனியாவது கூகுள் ப்ளாகர் எந்தப் பிரச்சினையும் செய்யாமல் இருக்க வேண்டும்.

    மிக்க நன்றி, மகிழ்ச்சி மீண்டும் வந்ததற்கு! வருக வருக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனடியாக வந்து பதிலளிக்கும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஐயா!

      //வேண்டாம் வாருங்கள் என்று சொல்ல நினைத்து பின்னூட்டம் இட்டால் போகவில்லை// - உண்மையில் கடைசி நொடி வரை நான் உங்களையும் நண்பர் சக்திவேல் காந்தியையும் எதிர்பார்த்தேன். தளத்தையே அழிப்பதாகச் சொல்லியும் உங்களைக் காணோமே என்று நினைத்தேன். ஆனால், உங்கள் வருகைக்காகக் காத்திருக்க முடியாத சூழல்.

      //இப்போதுதான் தெரிகின்றது தங்களது தளத்தின் மின் அஞ்சலும் கடவுச் சொல்லும் திருடப்பட்டது என்பது// - அப்படி இல்லை ஐயா! தளத்தை அழித்தது நான்தான். ஆனால், அதற்குக் காரணம் அதற்கு முன்பு ஒருமுறை தளம் வேறொருவரால் என் கூகுள் கணக்கு முடக்கப்பட்டது; ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் தெரிந்தது. அந்தப் பாதுகாப்பற்ற சூழலாலும் அதைத் தொடர்ந்து நடந்த சில நிகழ்வுகளை இதனோடு நான் தொடர்புபடுத்தித் தவறாகப் புரிந்து கொண்டதாலும்தான் வேறு வழியில்லாமல் நான் தளத்தை அழிக்க நேர்ந்தது. அவற்றுள் பல காரணங்கள் என்னை இன்னும் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தியபடிதான் இருக்கின்றன என்றாலும், சில முதன்மைக் காரணங்கள் தகர்ந்து விட்டதால் மீண்டும் தளத்தைத் தொடங்கி விட்டேன். ஆரூர் மூனா என்பவர் எழுதியுள்ளதாக நீங்கள் கூறும் தகவல் மிகவும் புதுமையாக உள்ளது. எனக்கும் அது பயன்படும் என நினைக்கிறேன். தகவலுக்கு நன்றி! இதைத் தெரிவித்தற்காக நான்தான் தங்களுக்கு நன்றி உரைக்க வேண்டும்; நீங்கள் போய் என்னிடம் மன்னிப்புக் கேட்கிறீர்களே ஐயா!

      நீக்கு
  2. அகச்சிவப்புத் தமிழ் மீண்டும் ஒளிவிட ஆரம்பித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா! தாங்கள் சொன்ன தொழில் நுட்ப தகவல்கள் மிகுந்த பயனளிக்கும்! தொடர்ந்து பயணிப்போம் ஐயா! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி ஐயா! கண்டிப்பாகத் தொடர்ந்து பயணிப்போம்! நன்றி!

      நீக்கு
  3. நண்பரே என்ன நடந்தது எனக்கு தெரியாது காரணம் நான் இந்தியா வந்திருந்தேன் இன்றுதான் கணினியைத் திறந்தேன் சரி நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனி தொடந்தது எழுதுங்கள் நட்பில் இணைந்திருப்போம் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அதனால்தான் உங்களைக் காணவில்லையா? தளத்தை அழித்ததால் உங்களுக்கு என் மீது மிகுந்த சினம் போல என்று நினைத்து விட்டேன். உங்கள் உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! கண்டிப்பாகத் தொடர்ந்து இணைந்திருப்போம்!

      நீக்கு
  4. அய்யா,
    வணக்கம். இந்தப் பதிவு வந்ததுமே முதல் ஆளாய்ப் பின்னூட்டமாக வெண்பா வொன்றை இட்டேன்.
    பின்பு வெளியிட முயன்ற போது பிழை என்று காட்டியது.
    மீண்டும் முயன்ற போது பின்னூட்டமிடும் பெட்டியைக் காணவில்லை.
    தற்பொழுதுதான் வர நேர்ந்தது.
    தங்களின் மறுவருகைக்கு நன்றி.
    மீண்டும் கருத்திட வருவேன்.
    தங்களைப் போன்ற தொழில்நுட்ப அறிவு இல்லாமல் இன்று நான் வெளியிட்ட பதிவு என்னை மிகப் படுத்தி விட்டது.
    உங்கள் தளத்தையே ஊடுருவுகிறார்கள் என்றால் நாங்களெல்லாம் என்னாவது..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரன்புக்குரிய ஐயா, தங்களுக்கு நேர்ந்த சிரமங்களுக்கு வருந்துகிறேன்! அப்படியும், மீண்டும் மீண்டும் முயன்று வந்து கருத்திடும் தங்கள் அன்பை நான் என்ன சொல்லிப் பாராட்ட!!

      ஆனால், நான் ஒன்றும் பெரிதாகத் தொழில்நுட்பம் அறிந்தவன் இல்லை ஐயா! இணையத்தில் தேடித் தேடிப் படித்துப் பெற்ற தகவலறிவுதான். உண்மையான தொழில்நுட்பர்களுடன் ஒப்பிட்டால் அது துரும்புக்கும் காணாது. www.bloggernanban.com, http://karpom.com, http://ponmalars.blogspot.com, http://thangampalani.blogspot.com, www.vandhemadharam.com, http://tech.neechalkaran.com ஆகியவற்றிலுள்ள பழைய முதன்மைப் பதிவுகளைப் படித்து விட்டாலே ஓரளவுக்கு எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்ளலாம்.

      அந்த வெண்பா இனி கிடைக்குமா?

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. //தளை பிழை அய்யா, வருந்துகிறேன்// - ஓ, அப்படியா! சரி, ஐயா! அது கூட எனக்குத் தெரியாது.

      நீக்கு
    4. சேர்க்கும் என்பதைச் “சேர்த்திடும்“ எனத்திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
      எல்லாப் பிழைகளும் ஒருங்கு சேர்ந்துவிட்டன இன்று.
      ( இன்னும் ஏதாவது திருத்தம் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா?
      பின்னூட்டப் பெட்டியில் அவசர அவசரமாக மீள்பார்வையற்றுப் பதிவிடும் பழக்கத்திலிருந்து விடுபட்டால்தான் திருந்த முடியும் போலும்)
      வருந்துகிறேன்.

      நீக்கு
    5. //எல்லாப் பிழைகளும் ஒருங்கு சேர்ந்துவிட்டன இன்று// - இருக்கட்டும் ஐயா! இந்தப் பிழைகளெல்லாம் எங்கள் யாருக்கும் தெரியாது. நீங்கள் பிழை செய்து அதைத் திருத்துவதால் நாங்கள் தமிழறிவு பெறுகிறோம். நன்றி!

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ! ஐயோ! ஐயோ! இவற்றுக்கெல்லாம் நான் உண்மையில் தகுதியுடையவன்தானா? தங்கள் அன்பின் பெயரால், அது எனக்கு ஏற்படுத்தும் தகுதியொன்றையே பாத்திரமாய்க் கொண்டு இதைச் சிரம் தாழ்ந்து ஏற்றுக் கொள்கிறேன் ஐயா!

      நீக்கு
  6. அகம்சிவந்து மீண்டும் தணிந்ததே உங்கள்
    முகம்காட்டக் கண்டு மகிழந்தே - மிகயினிக்கு
    மெந்தமிழ் மூச்சென்றே ஏத்திடுவோர் சேர்த்திடும்
    அந்தமனம் போற்றும் அடி!
    நேரடியாகப் பின்னூட்டப் பெட்டியில் தட்டச்சுச் செய்ததால் அவ்வெண்பா மீட்டெடுக்க இயலாதாயிற்று.
    உங்கள் பணி தொடர இது போன்ற எத்தனை அடிகள் எழுதவுந் தகும்.
    நன்றி அய்யா!

    ( தளை பிழை அய்யா, வருந்துகிறேன்)

    பதிலளிநீக்கு
  7. அய்யா,
    வணக்கம்.
    பொதுவாகவே நானும் பிழைகளைக் கண்டால் மனம்பதைத்துப் போகின்றவன்.
    அதற்காகத் தனிப்பயிற்சி எதுவும் செய்ததில்லை.
    வாசிப்புப் பழக்கத்தில் அமைந்ததது.
    நேற்று வெண்பா எழுதுதல் பற்றிய பதிவை இட்டுவிட்டு வெண்பாவொன்றைத் தவறாக எழுதிப்பதிந்து போனேன்.
    நேற்று முழுவதுமே பல்வேறு மனஉளைச்சல் தொழில்நுட்பச்சிக்கல் என இருந்தாலும் இவ்வளவு தவறுகள் இதுவரை எனக்கு நேர்ந்ததில்லை.
    அதுவும் தங்களின் தளத்தில் மீண்டும் மீண்டும் பிழைபடப் பின்னூட்டமிட்டுத் திருத்தித் திருத்தித் தங்களின் பொறுமையை மிகச் சோதித்துவிட்டேன்.
    வருந்துகிறேன்.
    மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பெரிய வார்த்தைகள் வேண்டா! நீங்கள் வருந்த வேண்டியதேயில்லை.

      நீக்கு
  8. இப்படி திடீர்னு மறைஞ்சுடிங்காளே சகா. அடர் சிவப்புத்தமிழ் நீங்கிய அந்த நாளில் அடர் துயர் பூசி நின்றதென் நட்பு வட்டம் காட்டும் google கணக்கு. நான் கொஞ்சம் படிக்க(புத்தங்கங்கள் மட்டும் அல்ல என்னையும்) நேரம் ஒதுக்கி வலைப்பூவிற்கு சிறிது காலம் விடுப்பு தந்து மீளும் இந்த நாளில் ஒரு நண்பர் மீண்டும் வந்தது மிக்க மகிழ்ச்சி(இது வார்த்தை அல்ல சகா உணர்வு:)))))))). உங்கள் வரவு நல்வரவாகுக:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள்! வாருங்கள்! உங்களைத்தான் வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்துக் கிடந்தேன். நீங்கள் மட்டும் வந்திராவிட்டால், நானே உங்களைத் தொடர்புகொண்டு, "நான் திரும்பவும் வந்து விட்டேன்" என்று தெரிவிக்க எண்ணியிருந்தேன். நான் விடைபெறும்பொழுது, "அப்படியெல்லாம் போக விட முடியாது" என்று உரிமையோடு நீங்கள் கூறியது, வலைப்பூவின் கூகுள்+ பக்கத்துக்கு வந்து "இது நியாயமா" என்று கேட்டது, இவற்றையெல்லாம் என்னால் என்றென்றும் மறக்க முடியாது. இதோ, உங்கள் விருப்பம் ஒரு விந்தையை நிகழ்த்தி விட்டது! நன்றி! மிக்க நன்றி!

      நீக்கு
    2. ***உங்கள் விருப்பம் ஒரு விந்தையை நிகழ்த்தி விட்டது!***
      கண்கள் பனித்தது. நெஞ்சம் இனித்தது :))
      (என்ன அழகான வரிகள்!! ஆனா இதை கலைஞர் பயன்படுத்திய தருணத்தை மட்டும் நினைவு கூறாமல் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிரீர்கள்:)) உண்மையாவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு:)

      நீக்கு
    3. //இதை கலைஞர் பயன்படுத்திய தருணத்தை மட்டும் நினைவு கூறாமல் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிரீர்கள்// - ஹாஹ்ஹா! கண்டிப்பாக! நமக்குப் பிடித்தவர்களின் சொற்கள் நமக்குப் பிடிக்காதவர்களின் வார்த்தைகளை நினைவூட்டக் கூடுமா என்ன? இல்லவே இல்லை!

      நீக்கு
  9. இணையத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குமா?
    வியப்பாகவும் அச்சமாகவும்தான் இருக்கிறது.
    நீங்கள் சொன்னபடி நான் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டேன்.
    கொந்துதல் போன்ற தமிழ்ச் சொற்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள் அய்யா?
    அல்லது நீங்களாகவே உருவாக்கும் சொற்களா?
    நம்முடைய வலைத்தளத்தை கொந்த வேண்டிய அவசியம் அவர்களுக்கென்ன?
    பொழுதுபோக்கா?
    அல்லது திட்டமிட்டுச் செய்கிறார்களா?
    இதனால் அவர்கள் அடையும் பயன் என்ன?
    ஒன்றும் தெரியாமல்தான் இருக்கிறேன்.
    மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதுமட்டும் தெரிகிறது.
    உங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சியும், அறிவூட்டத்திற்கு நன்றியும்.
    தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வேலைசெய்ய வில்லையே அய்யா!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவேற்புக்கு நன்றி ஐயா! 'கொந்துதல்' எனும் சொல் ஏற்கெனவே விக்சனரியில் இருப்பதுதான். அயல் மொழிச் சொற்கள், குறிப்பாக ஆங்கிலச் சொற்கள் கலவாமல் எழுத வேண்டும் என்பது என் அவா. அதுவும் அறிவியல், தொழில்நுட்பச் சொற்கள் என்றால் விட மாட்டேன். அப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்த நேரும்பொழுது இணையத்தில் -குறிப்பாக விக்சனரியில்- ஏற்கெனவே அதற்கான மொழிபெயர்ப்புகள் இருக்கின்றனவா எனத் தேடுவது வழக்கம். பெரும்பாலும் இருக்கும்; சரியாக இருந்தால் பயன்படுத்திக் கொள்வேன். அப்படி இல்லாவிட்டால், புதிதாக உருவாக்க முயல்வேன். கலைச்சொல் உருவாக்கம், வேர்ச்சொல் ஆராய்ச்சி எனப் பொதுவாகவே சொல்லாராய்ச்சியில் எனக்கு ஆர்வமுண்டு. நான் உருவாக்கும் சொற்கள் கச்சிதமான கலைச்சொற்களா என எனக்குத் தெரியாது. ஆனால், அவை ஓரளவுக்காவது பொருத்தமாகவே இருக்கும் என நான் உறுதியளிக்க முடியும். மேலும், என்ன துணிச்சலில் இதைச் செய்கிறேன் என்றால், எல்லோரும் அந்தக் குறிப்பிட்ட இடங்களில் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தி வரும் நிலையில் நான் தவறாகவே ஒரு சொல்லைப் பரிந்துரைத்தாலும் அது நாளை பரவும்பொழுது யாரேனும் பார்த்து அதைத் திருத்த வாய்ப்புண்டு. நான் அந்தத் தவறான சொல்லையும் ஆளாவிட்டால் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அவ்விடங்களில் ஆங்கிலம் ஆளுமோ தெரியாது இல்லையா, அதற்காகத்தான். அது மட்டுமின்றி, தமிழறிஞர் (பெயர் மறந்துவிட்டது) ஒருவர் எழுதிய நூலொன்றில், கலைச்சொற்கள் எவ்வாறு உருவாயின என்கிற வரலாற்றுக் கட்டுரை ஒன்றைப் படித்தேன். தவறும் பிழையுமாக, நீளமான மொழிபெயர்ப்பு விளக்கங்களாக உருவாக்கப்பட்டவைதாம் காலப்போக்கில் செதுக்கப்பட்டு, சுருக்கப்பட்டு இன்று அழகிய கலைச்சொற்களாக உருமாறியிருக்கின்றன என்று அவர் அதில் உரைத்திருந்தார். ஆகவே, ஆர்வலன் நான் உருவாக்கும் சொற்கள் தவறாக இருந்தாலும், நாளடைவில் தங்களைப் போன்ற அறிஞர்களால் அவை ஒழுங்கு பெறும் என்கிற நம்பிக்கையில்தான் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

      நீக்கு
    2. அன்பிற்குரிய ஐயா!

      வலைத்தளத்தைக் கொந்துவதைப் பல காரணங்களுக்காகச் செய்கிறார்கள். முதல் காரணம், வெறுப்பு! சமூக இன்னல்கள், அரசியல், தமிழர் உரிமைகள், மூட நம்பிக்கை, சமயம் பற்றியெல்லாம் எழுதுவது பலருக்கும் பிடிப்பதில்லை. அதனால் இப்படிச் செய்கிறார்கள் பலர். மேலும் பலர், கொந்தக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் அல்லது அதைக் கற்றுக்கொண்டு விட்ட துறுதுறுப்பில் செய்வதும் உண்டு. ஏன் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தாங்கள் கேட்கலாம். எல்லாம் பணத்துக்காகத்தான் ஐயா. பலர், வலைப்பூக்கள் மூலமாக நிறைய வருவாய் ஈட்டுகிறார்கள். அத்தகைய தளங்களைக் கொந்தி, தளத்தின் உண்மையான உரிமையாளரிடமிருந்து தளத்தைக் கொத்திக் கொண்டு போக இணைய வானில் பல கழுகுகள் அலைகின்றன. அப்படிப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், கொந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காகவே இதைச் செய்யக் கொள்பவர்களும் உண்டு. இவர்களெல்லாரும் போக, தாங்கள் கூறுவது போல், பொழுதுபோக்குக்காகச் சிலர் இதைச் செய்வதும் உண்டு.

      இந்த வலைப்பூவைப் பொறுத்த வரையில், இதைச் செய்திருப்பவர் மேற்படி தீங்கு எதுவும் நினைத்துச் செய்தததாகத் தெரியவில்லை. காரணம், அவர் நினைத்திருந்தால் வலைப்பூவைச் சிதைத்திருக்க இயலும். கணக்கின் கடவுச்சொல்லை மாற்றித் தளத்தையும் மொத்த கூகுள் கணக்கையும் அவர் தனக்கே சொந்தமாக்கிக் கொண்டிருக்கவும் முடியும். ஆனால், இவற்றுள் எதையும் அவர் செய்யவில்லை. எனவே விளையாட்டாகவோ, கற்றுக் கொள்ளும் நோக்கிலோ, அந்தத் துறுதுறுப்பிலோதான் செய்திருப்பார் என நினைக்கிறேன். மற்றபடி, எனக்கும் இது பற்றியெல்லாம் ஏதும் தெரியாது. இணையத்தில் ஆங்காங்கே அவ்வப்பொழுது படித்ததோடு சரி.

      'தமிழ்மணம்' வாக்குப்பட்டை பற்றித் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா! சரி செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன்.

      நீக்கு
    3. 'தமிழ்மணம்' வாக்குப்பட்டையைச் சரி செய்துவிட்டேன் ஐயா! தாங்கள் இதைத் தெரிவித்ததால், இந்த ஒரு செயலி மட்டுமல்லாமல் மேலும் பல செயலிகளும் முடங்கியிருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நான் தவறுதலாகச் செய்த ஒரு சிறு மாற்றம் இவ்வளவு சிக்கலுக்கும் காரணமாகி இருந்தது. தாங்கள் இதைக் கூறாமல் விட்டிருந்தால் இவையெல்லாம் தெரியாமலே போயிருந்திருக்கும். தகவலளித்தமைக்கு மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்